நகரம் நானூறு - 1
நகரம் நானூறு
ஹரி கிருஷ்ணன்
நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.
பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் - நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.

காதலுக்குப் பஞ்சமுண்டோ கான்க்ரீட் வனங்களிலும்?
ஆதரவா அன்பா அடைக்கலமா - போதெல்லாம்
கொஞ்சும் புறவினம்தான் கூறுவது கேட்கலையோ,
எஞ்சுவது அன்பொன்றே என்று.



Leave a Reply