இந்திய மரபணுக்கள் (ஜீன்கள்) பற்றிய அறிவியல் ஆய்வுகள்
டாக்டர் ஆர்.பிரகாஷ்
25 Jun 2008 |
அச்சிட
இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையில் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கிறது.
பெரிய அளவில் இந்தியா முழுவதும் உள்ள மரபணுக்கள் (ஜீன்களை) பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களைத் தொகுத்து, வகைப்படுத்தி (mapping), முதன்முறையாக ஒரு விரிவான அறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட அனைவரும் இந்திய விஞ்ஞானிகள் (பெரும்பாலும் இளவயதினர்) இந்தக் கடினமான, பலவருட ஆராய்ச்சியை தொடர்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளனர். பொதுவாக, உலகளவில் இது போன்ற மெகா ஆராய்ச்சிகளில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் அறிவியல் அமைப்புகளும், விஞ்ஞானிகளும் தான் பரவலாக ஈடுபடுவார்கள்.
இந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் திட்டம் (The Indian Genome Variation Project or IGV Project) என்கிற இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், இந்திய மக்களின் மரபணுக்கூறுகளில் உள்ள தொடர்பு குறித்துக் கண்டறிய அகில இந்திய அளவில் ஜாதி, இன, மதங்களால் வேறுபட்ட 55 சமூகக் குழுக்களைச் சேர்ந்த 1871 மக்களிடமிருந்து 75 மரபணுக்களை ஆராய்ந்து பார்த்தனர்.
இந்த ஆராய்ச்சியின் மூலமாக, மரபணுக்கள் எவ்வாறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன, எவ்வாறு நோய்த் தொற்றுக்கு மக்களை இலக்காக்குகின்றன, மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பது பற்றிய பல முக்கியமான விவரங்கள் தெரியவந்திருப்பாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் தகவல்கள் (IGVdb) வலைத்தளம்
உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் பல்வேறு இனங்களுக்கும், CCR5 என்னும் ஒரு மரபணுவின் திடீர் மாற்றத்தின் காரணமாக எய்ட்ஸ் நோய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பற்றி அறிய இந்த ஆய்வுகள் உதவும். அல்லது, மலேரியா என்ற நோய்க்கு வெவ்வேறு இனத்தவர் ஏன் வேறு வேறு வகையான எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நோய்த்தடுப்பு முறைகளை உருவாக்க முடியும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட (CSIR) 6 ஆராய்ச்சிக் கூடங்களும், கொல்கத்தாவின் இந்திய புள்ளியியல் நிறுவனமும் (Indian Statistical Institute) இணைந்து மேற்கொண்ட இந்தப் பெரும் ஆய்வின் மூலமாக இந்தியாவின் சமூக, மானுடவியல் வரலாறு பற்றியும் பல புதிய புரிதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாராய்ச்சிகள் மூலம், பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வாழும் பல்வேறு இன இந்திய மக்களிடையே பெருமளவில் இனக்கலப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. திராவிடர்கள் என்ற பெயரில் அறியப் படும் இனக்குழு மக்கள் ஆரியர் என்ற பெயரில் அறியப் படும் இந்தோ-ஐரோப்பியருட இனக்குழுவுடனும், ஆஸ்திரோ- ஆசியர்கள் (ஆஸ்திரேலிய பழங்குடி இனம்) திராவிடர்களுடனும் கலந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இன்று இந்தியாவின் மத்தியப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் இனம், திராவிட, இந்தோ-ஐரோப்பிய (ஆரிய) மற்றும் ஹிமாலயப் பழங்குடி வகைகள் அனைத்தும் இணைந்த கலப்பு இனம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து, கொல்கத்தா இந்திய புள்ளியியல் நிறுவனத்தைச் சேர்ந்தஹ் பார்த்தா மஜூம்தார் கூறுகையில், “மக்கள் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்கையில், மரபணுக்களும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் மக்களின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக மாறி, ஒரு தனித்தன்மை கொண்ட இனத்தை உருவாக்குகின்றன” என்று குறிப்பிட்டார். மரபுரீதியாக மிகவும் ஒத்த வெவ்வேறு இன மக்கள் குழுக்கள் எவை? எந்தெந்த இன மக்கள் எந்தெந்த நோய்களுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்பது போன்ற சர்ச்சைக்குரிய தகவல்களை இப்போதைக்குப் பொதுவில் வெளியிட வேண்டாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதனால் இந்த அறிக்கையில் வெளியிடப்படாத ஆராய்ச்சி முடிவுகளும் உள்ளன என்பது புலனாகிறது.
ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணப்பாளர் முகர்ஜி மித்தல் கூறுகையில், “இது போன்ற தகவல்கள் ஏற்படுத்தும் சமூகத் தாக்கம், பிரசினைகள் பற்றிய விஷயங்கள் எல்லாம் ஆராய்ச்சியாளர்களின் துறைக்கு அப்பாற்பட்டவை, அதனால் தான் இந்த முடிவுளைப் பொதுவில் வெளியிடவில்லை. ஆனால், மருத்துவர்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும், மரபணுக்களுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தேவையான போது கண்டிப்பாகத் தெரிவிக்கப்படும்” என்றார்.
மரபணு ஆராய்ச்சிகள் பற்றிய ஜர்னல் ஆஃப் ஜெனிட்டிக்ஸ் (Journal of Genetics) என்னும் அறிவியல் சஞ்சிகையில் வந்துள்ள இந்த் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய கட்டுரைகளில் சில சுவாரசியாமான விஷயங்கள் உள்ளன -
- ஒரே பிரதேசத்தில் வசிக்கும் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே (வேறு தொலை தூரத்தில் வசிக்கும் அதே இன மக்களை விட) மரபணு ரீதியாக அதிகமான ஒற்றுமை அமைப்பு காணப்படுகிறது.
- இந்திய சமுதாயத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகள் மரபணுக்களில் காணப்படவே இல்லை.
- பண்டிட்கள் என்ற காஷ்மீர் இந்து சமூகத்தினருக்கும், காஷ்மீர் முஸ்லீம்களுக்கும்
மரபணுரீதியாக நிறைய ஒற்றுமை காணப்படுவது மட்டுமல்ல, இவர்கள் திராவிட இனத்தவரின் பல மரபுக் கூறுகளையும் ஒத்திருக்கின்றனர்! - தென்னிந்தியாவின் திராவிட மொழிக் குடும்பத்தினரும், வட இந்திய மொழிகள் பேசும் இந்தோ-ஐரோப்பிய (ஆரிய) மொழிக் குடும்பத்தினரும் மரபணு அளவில் மிகவும் நெருங்கியவர்கள்.
இந்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரியப் படையெடுப்பு, திராவிடர்களின் பூர்வீகம், இந்தியாவின் பண்டைக்கால புலம் பெயர்தல்கள் ஆகியவை பற்றி பொதுவாக நிலவும் வரலாற்று ஊகங்கள் பற்றிய பல துணுக்குறும் கேள்விகளை எழுப்புகின்றன.
ஐரோப்பிய காலனிய அரசாங்கங்களால் இனவாதம் பற்றிய கருத்துக்கள் உலகெங்கும் பரப்பப்பட்ட 19,20ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், பாரதத்திலும் பிரிட்டிஷ் அரசு தன் கல்விமுறை மூலம் ஆரிய-திராவிட இனவாதம் பற்றிய வரலாற்று ஊகங்களை விதைத்தது. இவை பாரதி, அம்பேத்கர், விவேகானந்தர் போன்ற தேசியத் தலைவர்களால் கடுமையாக மறுக்கப் பட்டன ஆரியப் படையெடுப்பு பெரிய பொய் என்று ஆணித்தரமாகக் கூறிய சுவாமி விவேகானந்தர் தம் தாய் நாடான பாரதத்தை இனக்குழுக்களின் அருங்காட்சியகம் (ethnological museum) என்ற அழகிய சொல்லால் குறித்தார். சமீபத்திய அறிவியல் முடிவுகளும், காலனிய வரலாற்று கற்பிதங்களை உடைத்து, இந்திய தேசிய அறிஞர்கள் கூறியவையே உண்மை என்று நிரூபிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
நோய்த்தடுப்பு, மருத்துவம், வரலாறு, மானுடவியல், சமூகவியல் என்று பல துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகளும், அமைப்புகளும் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி: தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
25 June 2008 at 10:13 pm
Fantastic article.. Good work Doctor Prakash. Keep writing more in this direction. I am really become an addict of this Tamilhindu.com. Good web to read without any undigestable matters like other webs.