தமிழ் படும் பாடு!
ஜயராமன்
22 Sep 2008 |
அச்சிட
சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் அறைகூவலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்!
அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ - (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல் நேர்னஸ்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்!) என்பது இந்த இயக்கத்தின் பெயர். “மெய்ப்புலன் அறைகூவலர்” என்பது “ஊனமுற்றோர்” என்று நாம் இதுவரை குறிப்பிட்டு வந்தவர்களின் புதுப்பெயர். The PC (politically correct) word for PC (physically challenged)!
சமீப காலங்களில், தமிழ் மொழி தள்ளாடி பிழைத்துக்கொண்டிருக்கிறது - - தண்ணீர் இல்லாத சென்னையில் தப்பித்து பிழைக்கும் சிட்டுக்குருவி போல. இன்று தமிழ்சமுதாயம் பெற்றுள்ள பொருளாதார, சமுதாய வளர்ச்சி ஒரு விகிதத்தில் தமிழை பண்டமாற்றி அழித்தே கிடைத்திருக்கிறது என்பதே அதற்குக் காரணம்.
மிண்ணனு ஊடகங்களும், ஊர் கொள்ளாமல் அச்சடிக்கப்படும் தமிழ்ப்புத்தகங்களும், யூனிகோட் முதலான தொழில்நுட்பங்களும் தமிழில் வார்த்தை மலைகளை எங்கும் எளிதாக பரப்பியிருக்கின்றன. தமிழ் தெரிந்தால் அதை படிக்கவும், எழுதவும், அதை பத்து பேருக்கு உடனே அடையச்செய்வதும் எளிதாய் இருக்கிறது.ஆனால், இந்த வசதிகளால் தமிழ் பெரும்பாலும் வளர்வது ஏற்கனவே தமிழில் பழகிப்போன, தமிழை அனுபவித்த உயிர்களிடம்தாம். இப்படி தமிழை உள்வாங்கிவிட்டவர்களின் குழுமம் தினசரி சுருங்கிக்கொண்டே போகிறது. புதிதாய் பெருகிவரும் வேட்டி, தாவணி பழகாத தலைமுறைக்கு தமிழை ஊறுகாயாய் தொட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. இந்த இளம் தமிழினத்திற்கு தமிழை முக்கிய உபயோக மொழியாக ஆக்குதல் முடியுமா என்று தெரியாமல் பெரிய சவாலாய் இருக்கிறது.
ஒரு மொழியின் வெற்றி அது அந்த சமுதாயத்தினரின் உணர்வோடு ஒன்றியிருப்பது என்றால் அதில் தமிழுக்கு முழு வெற்றியே. ஆனால், இன்று தமிழ் அந்த ஒரு உணர்வுபூர்வ இடத்தை நிரப்பும் ஒரே வேலையைச் செய்வதோடு ஒதுக்கப்படும் அபாயம் இருக்கிறது. கிட்டத்தட்ட சமஸ்கிருதம் ஒரேயொரு விசேஷ உபயோகத்திற்காக மட்டுமே இயங்கும் மொழியாகிப்போனதுபோல! அன்னியமானவர்களோடு பொது மொழியும் (பெரும்பாலும் ஆங்கிலம்), நெருக்கமானவர்களோடு தமிழும் என்றிருக்கும் ஒரு சூழலில் தமிழ், முதியோர் இல்லத்தில் வைக்கப்படும் தாயார் போல ஆகிவிட்டிருக்கிறது.
இந்த சவாலுக்கு விடையாக நாம் தமிழைத் தயார்ப் படுத்த வேண்டும். இந்த சவாலில் வென்று, தமிழ் முழுமையான பண்டமாற்று மொழியாய் ஒருநாள் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும்,தமிழில் விழும் சரிவை நிறுத்துவது தமிழ் சமுதாயத்தை ஒன்றாய் பிணைத்திருக்கும் ஒரு உபாயம் என்பதால் இதில் தமிழ் தெரிந்த எல்லோரும் முனைய வேண்டியிருக்கிறது. இந்த குறிக்கோளை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும், அதை செயல்படுத்தும் சில வழிகள் அபத்தமாய் இருக்கின்றன. “மெய்ப்புலன் ஆர்வலர்” மாதிரி.
தமிழின் முதல் ஆபத்து அரசியல்தமிழர்கள். ஐம்பது, அறுபதுகளில் தமிழுக்குக் கிடைத்த பெரிய செம்மட்டி அடி திராவிட இயக்கம். அது செந்தமிழை அதன் எழில் குறையாமல் மேடைக்கு எடுத்துச்சென்றாலும், தமிழில் ஆயிரம் ஆண்டுகளாய் விளைந்துள்ள பல்லாயிரம் கற்பகக்கனிகளை பிற்போக்கு என்று இகழ்ந்து தமிழிலிருந்து துண்டிக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தமிழின் சரித்திரம்,மாண்பு, கலாசாரம் முதலியவற்றை இழித்து மீதமிருக்கும் தமிழ் எழுத்தை வளர்ப்பதும்,புதுப்புது பொருந்தாத வார்த்தைகளை திணிப்பதும் தமிழை மூச்சுத் திணறச் செய்துகொண்டிருக்கிறது. இதனால் தமிழ் அகராதி வளர்ந்தாலும், தமிழிடம் சமுதாயத்திற்கு இருக்கும் ஒட்டுணர்வு ஒழிந்துபோயிருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு தமிழை தன்வயப்படுத்துதலின் லாபங்களாக இருந்த இந்த சரித்திர, கலாசார இலக்கியங்கள் அகற்றப்பட்டு,கன்னித்தமிழ் மொட்டைத்தமிழாய் நிற்கிறது.
தமிழில் விளைந்த ஆயிரக்கணக்கான “பிற்போக்கு” கருவூலங்களை தீயிட்டுக் கொளுத்தி அதை எப்படி “தூய்மை”ப்படுத்துவது? இவர்கள் தமிழை வளர்க்க முனையாமல், தமிழ் மூலம் காழ்ப்பை வளர்த்து அதன் மூலம் தங்கள் அரசியல் வியாபாரத்தை அல்லவா வளர்க்கிறார்கள்!
தமிழின் இரண்டாவது ஆபத்து, தூய்மைப்படுத்துகிறேன் என்று சோப்பும், துடைப்பமுமாய் அலையும் மொழிவல்லுனர்கள். இன்றைய சூழலில் தூய தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்று முனைபவர்களின் நடவடிக்கைகள் வினோதமாய் இருக்கிறது.வடமொழிச் சொற்கள் என்று பெயரிடப்பட்டு நாம் இதுகாறும் இயல்பாய் பழகிய பெரும் மொழிக்கோர்வை இன்று அரசியலுக்காக விலக்கப்பட்டிருக்கிறது. வடமொழிச்சொற்கள் தமிழோடு கடந்த ஐநூறு ஆண்டுகளாக கலந்திருந்தாலும் அவை ஏன் தமிழருக்கு இன்று மறுக்கப்படுகின்றன என்பது புதிராய் இருக்கிறது.இந்த தேர்வு எல்லா கலப்படத்திற்கும் இல்லாமல், வடமொழிச்சொற்கள் என்று சிலரால் தீர்மானிக்கப்பட்ட சொற்களுக்கு மட்டுமே செயல்ப்படுத்தப்படுவது வினோதம்.
நான் துருக்கி மொழியைக் கற்றபோது அதில் பல “தூய தமிழ்ச்”சொற்களை கண்டு வியந்தேன். உதாரணமாக, காகிதம் என்பதற்கு துருக்கியில் kagit என்றே சொல்கிறார்கள்.இதற்குக் காரணம் காகிதம் என்பது உண்மையான தமிழ் வார்த்தை அல்ல.இது எனக்கு பின்னால் தெரியவந்து ஆச்சரியப்பட்டுப்போனேன். தமிழில் இதுபோல பல வார்த்தைகள் உலகலாவிய பங்களிப்பாய் இருக்கின்றன. ஆனால், இன்று மொழி ஆராய்ச்சி என்பது அரசியல் காழ்ப்பு கண்ணாடிகளால் ஆராயப்பட்டு இந்த பங்கீடு தன் மனம்போன போக்கில் ஒதுக்கப்படுகிறது. “ஜ,ஸ,ஷ” - முதலான எழுத்துக்கள் தேவைப்பட்டாலும் உபயோகப்படுத்தக்கூடாது போன்ற மனப்பாங்குகள் தமிழின் ஏற்றத்திற்கே பெரிய தடைக்கற்கள். காஷ்மீரும், ஸ்டாலினும் இல்லாமல் (இவற்றை இப்படியே எழுதாமல்!) இன்றைய ஊடகங்கள் தமிழில் என்ன செய்தியைத் தர முடியும்?
போன மாதம் நடந்த மக்கள் டி-வியின் மூன்றாம் ஆண்டுவிழாவில் இந்த கேள்வி திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் கேட்கப்பட்டது. தன் பெயரை சுடாலின் என்று எழுத மறுக்கும் உரிமை திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்குமானால் எனக்கு ஏன் கிருட்டினன் என்று எழுதிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது என்று கேட்டார் அவர். முத்துராமலிங்கத்தேவருக்கும், ராமசாமி படையாச்சியாருக்கும் மட்டும் சாதிப்பெயரை வைத்துக்கொள்ளும் உரிமை தமிழ்நாட்டில் கொடுக்கப்படவில்லையா, அதுபோல. ‘ஸ’வும், ‘ஜ’வும் வந்தால் தமிழுக்கு தீட்டு பிடிக்குமா என்று தெரியவில்லை?
இன்று தமிழ்சினிமாவின் முண்ணனி நடிகையின் பெயரே (அசின்) ஆங்கிலமும்,வடமொழியும் கலந்து புனையப்பட்ட ஒரு புதுப்பெயர்தானே! இரண்டு மொழி கலந்தால் அந்த சேர்க்கையும் அவரைப்போல கவர்ச்சியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது!
இந்த தமிழ்வெறியர்களின் இன்னொரு பிடிவாதம் தமிழின் முதுகை ஒடித்துக்கொண்டிருக்கறது. நமக்கு வேண்டிய எல்லா வார்த்தைகளும் தமிழில் இருக்கவேண்டும் என்ற இந்த பிடிவாதம் தமிழை செயற்கையாக்கி அதன் சுமையை வளர்த்து அதை முடக்கிப்போடுகிறது.மொழி என்பது அதன் சமுதாயத்தின் ஒரு அங்கமாய் இருப்பதால் அது அந்த சமுதாயத்தின் தேவைகளை மட்டுமே கருத்தாய் கொண்டு வளர்கிறது. “மெய்ப்புலன் ஆர்வலர்” போன்ற செயற்கை ஊக்கிகள் தமிழ் அறியும் பாதையை இன்னும் செங்குத்தாக்கி பலரால் அதை கடக்க முடியாமல் செய்கின்றன.
எஸ்கிமோ மொழியில் பனிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறதாம்.நமக்கு ஸ்னோ என்பதற்கு கூட தமிழ் கிடையாது. எனக்குத்தெரிந்த ஸ்னோ நடிகைகள் பூசிக்கொள்வதுதான். ஆனால், மாறாக தமிழில் அரிசிக்கு பல பெயர்கள் - நெல், அரிசி, நொய், சாதம், சோறு முதலான தினசரி உபயோகத்தில் இருப்பவை - இருக்கின்றன. அரிசிக்கு சீனமொழியில் நம்மைவிட அதிகமாக வார்த்தைகள் உள்ளன. டாக்ஸி முதலான வார்த்தைகள் இன்று எல்லா மொழிகளிலும் ஒன்றாகவே அடையாளம் காணப்படுகின்றன. இம்மாதிரி புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி நாம் தமிழை முடக்காமல் மேலே ஆகவேண்டிய வேலையைப்பார்க்கலாம்.
மூன்றாவதாக, தமிழ் மாட்டிக்கொண்டிருப்பது மொழிபெயர்ப்பாளர்களிடம். உலத்திலுள்ள எல்லா சாத்திரங்களையும் தமிழில் கொணருவோம் என்று இவர்கள் லாப்டாப்பும் பையுமாய் சுற்றுகிறார்கள். இவர்களின் குறிக்கோள் தமிழ் மட்டுமே தெரிந்த பல அப்பாவி நுகர்வோர்கள். தமிழை டெக்னிகலாக கற்றது மட்டுமே இவர்களின் அடையாளம். இவர்கள் “பெயர்க்கும்” தமிழ், போலீஸ்காரர்கள் கையால் வரைந்த தீவிரவாதியின் முகம்போல ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, இன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தெரியும் விளம்பரம் “டிவியாக இருந்தால் அது பிக் டிவியாக விளங்கட்டும்” என்று இருக்கிறது. இங்கு “விளங்கட்டும்” என்ற வார்த்தை “ஹோ” (हो) என்ற ஹிந்தி வார்த்தையின் தமிழ். ஆனால், இது சரியல்ல. “ஹோ” என்பது விளங்குதல் என்பது சரியானாலும், இங்கே அது உபயோகப்படுத்தும் பொருள் வேறுபடுகிறது. இங்கு ‘விளங்கட்டும்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு செயற்கையாக அரிதாரம் பூசப்பட்ட முகம்போல வெளிறிக்கிடக்கிறது. இருக்கட்டும் என்றே இருந்தால் சரளமாய் இருக்கிறது. “டிவி என்றால் அது பிக் டிவியாக இருக்கட்டும்” என்று தமிழில் சொன்னால் இயல்பாக இருக்கும். “என்றால்”, “இருக்கட்டும்”போன்ற இயல்பான வார்த்தை உபயோகங்கள் தமிழை பழகிய பாதையில் வேகமாக ஓட்டுகின்றன. இந்த வெற்றிகரமான மொழிபெயர்ப்புக்குத்தேவையான உபயோக அறிவும்,சமுதாய அனுபவமும் இந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் இல்லை.
ஏனென்றால், இதற்கு நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது. ஒருமுறை ‘breathtaking’ என்ற வார்த்தையை எப்படி தமிழ்ப்படுத்துவது என்று யோசித்தேன். மூச்சைக்கட்டும்,மூச்சு முட்டும், மூச்சை நிறுத்தும் என்றெல்லாம் ஒன்றும் இயல்பாய் தோன்றவில்லை. மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் ஐயா அவர்கள் “கண்ணைக்கட்டும்” என்று போடலாம் என்றார். இது நேரிடையான மொழிபெயர்ப்பாக இல்லை என்றாலும் இதுதான் உண்மையான தமிழை செழிக்கவைக்கும் மொழிபெய்ர்ப்பு என்று தோன்றுகிறது.
சொல்வழக்குகள் ஒரு மொழியை அதன் சமுதாயத்தோடு கட்டிப்போடுபவை. “மூக்கை நுழைக்காதே” போன்ற உபயோகங்கள் (poke your nose) பல மொழிகளில் ஒருபோல இருந்தாலும், வேறுபல உபயோகங்கள் தம்தம் மண்மனத்தைப் பொறுத்து மாறிவிடுகின்றன. சோளக்கொல்லை பொம்மை என்ற உருவகம் எகிப்தில் பயன்படுகிறது, ஆனால், அதே அரபி பேசும் வளைகுடாவில் காணோம். ஏனென்றால், வளைகுடாவில் சோளக்கொல்லை பொம்மை இல்லை. இன்று இம்மாதிரி “மொழிபெயர்ப்பு” இலக்கியங்கள் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காகவே அமைவதால், இயல்பான மொழிபெயர்ப்பாய் அமைவது முக்கியமாகிறது.இல்லையென்றால், விவேக் போடும் பெண் வேடம் போல சிரிப்பாய் மாறிவிடுகிறது. செயற்கையான ஜூனூன் தமிழை நாம் மறக்க முடியுமா?
இன்று தமிழ் நம் நினைவலைகளிலும், வாழ்க்கை ஓட்டத்திலும் பிற மொழிகளுக்கு இடம் கொடுத்தே நிற்கிறது. தன் வாழ்க்கைச்சூழலின் ஏகபோக ஆளுமை என்னும் உரிமையை, இன்று எந்த சமுதாயமும் எந்த மொழிக்கும் வழங்கும் சூழலில் இல்லை - ஆங்கில தாய்மொழிக்காரர்கள் உட்பட. அதனால்,தமிழ் இன்று நம் வாழ்க்கையில் உரிமைகோர ஏதுவாக, அதனிடம் கலைப்பொக்கிழங்களும், அறிவியல் கருத்துக்களும், பொருளாதார பண்டமாற்று ஆதாயங்களும் கிடைக்கவேண்டும். முன்னேற முனையும் எல்லா சமுதாயமும் இந்த லாபங்கள் இருக்கும் மொழியை போட்டிபோட்டு பேணிவளர்க்கும். தமிழைக் காப்பாற்ற அதற்கு நாம் செலுத்தவேண்டிய ஊக்கி மருந்துகள் இவைதாம். இம்மாதிரி அரசியல் மற்றும் வியாபார ஸ்டண்டுகள் அல்ல!
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
22 September 2008 at 10:38 am
மொழியின் அடிப்படை இலக்கணம். இலக்கண வழுக்களின்றி எழுதுவது நம் கடமை; முதற்கடமை.
முதற்கடமையை முழுமையாய்ச் செய்தலும், முழுமையாய்ச் செய்ய முயலுதலும், முழுமையாய்ச் செய்ய விழைதலும் கடமை எனக் கொள்ளுதல் நன்று.