மஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்

அருணகிரி சென்றமுறை தொகுத்தளித்திருந்த ஐயங்கள், அனுமானங்களின் பேரில் கர்ணனைக் குறித்த விவாதம் தொடர்கிறது. அவர் எழுப்பியிருந்த ஒவ்வொரு வினாவும் வரிசைக் கிரமமாக, கீழே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

2008/9/10 arunagiri a

ஹரிகி அவர்களே,

முடிவுக்கெல்லாம் வரவில்லை. அதனால்தான் “கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்பதே பரவலாக யாருக்கும் தெரியாதென்றால் இந்த வாதமும் அடிபட்டுப்போகும்தான்” என்றும் tentative-ஆக எழுதினேன்.

கர்ணன் சூரியனுடைய பிள்ளை என்ற உண்மையை அவன் அறியவருவதே குந்தி அவனைத் தேடிவரும் சமயத்தில்தான். ஆகவே, இந்த கவச-குண்டல விவகாரம், the mystery behind his birth, –ஆட்ட அரங்கத்துககுள் கர்ணன் நுழையும் அந்தக் கட்டம் வரையிலும்–எதுவுமே மக்களால் அறியப்பட்டிருந்தன என்பதற்கான குறிப்புகள் எதுவும் சிக்கவில்லை. சிக்கினால் இதைப் பற்றிய தீர்மானமான முடிவுக்கு வரலாம். இதற்கு மீண்டும் ஒருநாள் திரும்ப வருவோம். அதுவரை this is to stay in abeyance. உங்களுடைய மற்ற கேள்விகளை இப்போது எடுத்துக் கொள்வோம்.

எனது அனுமானங்களை இங்கு ஸம்மரைஸ் செய்கிறேன்:

அ) மானாவாரியாக யாரை வேண்டுமானாலும் இளவரசுகளுடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கப்பட்டிருக்காது. அவர்கள் ஒரே அரச குடும்பத்தவர்களாக, நட்பு நாட்டு இளவரசுகளாக இருக்க வேண்டும். தேரோட்டுதல் என்பதை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் தேரோட்டி மகனாக அறியப்பட்ட கர்ணன் அரச குடும்பத்துடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கப்பட்டதாலும் அவன் பெயர் மட்டும் தனித்து குறிப்பிடப்படுவதாலும் (நீங்கள் மேற்கோள் தந்த ஆங்கில உரை) இது ஒரு விதி விலக்காக இருக்க வேண்டும் என்பது என் யூகம் .

You are true. I do not say you are right; I am only saying you are true. ஏனெனில், கர்ணன் துரோணரிடம் பயி்ன்றான் என்றுதான் குறிப்பிருக்கிறதே ஒழிய அவனை துரோணர் எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கர்ணன் குந்தியின் மகன் என்பது பீஷ்மருக்கு மட்டுமே (அந்தக் காலகட்டத்தில்) தெரிந்திருந்த ஒன்று. ஆனால் அவருக்கு இது தெரிந்திருந்தது என்பதே சாந்தி பர்வத்தில்தான் நமக்குத் தெரியவருகிறது. ஆகவே, அவர் துரோணரிடத்திலோ, கிருபரிடத்திலோ பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பரிந்துரைத்தால், ‘என்ன காரணத்துக்காக இப்படிச் செய்கிறார்’ என்ற கேள்வி சுற்றிலும் இருப்பவர்கள் உள்ளத்தில் எழ வாய்ப்புள்ளது.

கர்ணன் குந்தியின் மகன் என்பது (பீஷ்மர், பிற்காலத்தில் கண்ணன் and possibly விதுரன்) ஓரிருவரைத் தவிர மற்ற யாருக்குமே தெரியாது. இவர்களைத் தவிர மற்ற எவருக்காவது தெரிந்திருந்தால், பாண்டவர்களில் யாராவது ஒருவரை அந்தச் செய்தி எட்டியிருக்க முடியுமல்லவா! இது தர்மபுத்திரனுக்கே தெரியாத ஒன்றல்லவா! கடைசியாக எள்ளும் தண்ணீரும் இறைக்கும்போது அல்லவா மனம் பொறுக்க முடியாமல் குந்தி, ‘கர்ணனுக்கும் கடன் கழி அப்பா’ என்று சொல்லப்போக, தர்மபுத்திரன் கோபப்பட்டு, அவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம், இவ்வளவு அவமானங்களுக்கும் இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமான அவனுக்குப் பிண்டம்போடச் சொல்லி என்னை ஏன் பணிக்கிறாய்’ என்று கோபப்படும்போதுதான் விஷயம் வெளிவருகிறது. (‘திருட்டு‘ கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியும் என்பது வேறு விஷயம். அவனும் இவர்கள் யாரிடமும் மூச்சுவிடக்கூட இல்லை.)

எனவே, அது பீஷ்மராகட்டும், அல்லது விதுரனாகட்டும், பரிந்துரைத்திருந்தால், why this undue interest on this boy என்றுதான் எல்லோருக்குமே தோன்றியிருந்திருக்கும். பலவிதமான ஊகங்கள் பிறந்திருக்கும். பாண்டவர்களுக்கே லேசுபாசான ஐயங்கள் தோன்ற வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்–குந்தியின் மகன் அல்லன் என்றாலும் ஏதோ ஒரு அரசன் அல்லது அரசியின் மகன் என்று.

Therefore நேதி. இவை எதுவும் இல்லை. என்ன காரணத்தால் துரோணர் கர்ணனைச் சேர்த்துக் கொண்டார் என்பதற்கான தெளிவான, நேரடியான குறிப்பு இதுவரையில் தென்படவில்லை. ஆனால் கர்ணன் துரோணருடைய மாணவனாக இருந்திருக்கிறான் என்பது அசைக்க முடியாத உண்மை.

நீங்கள் சொல்லும் மற்ற எல்லாவிதமான எச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது என்னவோ உண்மைதான். இதுதான் ஏகலவ்யனுக்குக் கற்பிக்க துரோணர் மறுப்பதற்குக் காரணமாக அமைகிறது.

“Vaisampayana continued, ‘Thereafter Drona began to teach Arjuna the art of fighting on horse-back, on the back of elephants, on car, and on the ground. And the mighty Drona also instructed Arjuna in fighting with the mace, the sword, the lance, the spear, and the dart. And he also instructed him in using many weapons and fighting with many men at the same time. And hearing reports of his skill, kings and princes, desirous of learning the science of arms, flocked to Drona by thousands. Amongst those that came there, O monarch, was a prince named Ekalavya, who was the son of Hiranyadhanus, king of the Nishadas (the lowest of the mixed orders). Drona, however, cognisant of all rules of morality, accepted not the prince as his pupil in archery, seeing that he was a Nishada who might (in time) excel all his high-born pupils.” (ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 134)

இந்த high-born pupils என்ற தொடரை, துரோணருடைய நோக்கத்தின் அடிப்படையாகக் கொள்ள முடியாது. அப்படியானால் அது கர்ணனுக்கும் பொருந்தும். High-born, and not likely to excel–or go against–the Kuru race என்பதுதான் இதன் உட்பொருளாக இருக்க முடியும். கர்ணன் ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவன். அவனை வளர்ப்பவன் ஹஸ்தினாபுரத்து அரண்மனை ஊழியன். அங்கே வந்து சேர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மற்ற இளவரசர்களும் ஹஸ்தினாபுரத்துக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள். ஏகலவ்யனோ ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத ராஜனின் மகன். பிற்காலத்தில் அவன் அரசனான்; தர்மன் நடத்திய யாகத்துக்கு வந்திருந்தான் என்பதையெல்லாம் இந்த இழையைத் தொடங்கிய அந்த நாளிலேயே பேசியிருக்கிறோம். இந்தச் சிற்றரசன், chieftain வளர்ச்சி பெற்றால், வில்வித்தையில் திறமை பெற்றால், அதுவே குருவம்சத்துக்கு ஒரு போட்டி அரசு உருவாகக் காரணமாக இருக்கும் என்பது இந்த முன்னெச்சரிக்கைக்குக் காரணம். இதுவன்றி, இவன் வேடன் என்ற காரணத்தால் பயிற்சி அவனுக்கு மறுக்ப்படவில்லை. அவனும் இளவரசன்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆகவே, கர்ணனுடைய பெயரைக் குறிப்பாகச் சொல்லியிருப்பதற்கு, ‘இவனும் இங்கே பயின்றவன்’ என்பதைத் தெரிவிக்கும் நோக்கமாக இருக்கலாம். கர்ணனும் துரியோதனனும் மிகமிக ஆரம்பகட்டத்திலேயே நண்பர்களானார்கள் என்று, சாந்தி பர்வத்தில் நாரதர் தர்மபுத்திரனுக்குப் பழைய நிகழ்வுகளைச் சொல்லி வரும்போது தெரிவிக்கிறார். (மேற்கோளை இன்னொரு சமயத்தில் தருகிறேன்.) துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நிலவிவந்த நெருக்கமான நட்புகூட இப்படி கர்ணனைத் தனித்துக் குறிப்பிடக் காரணமாக இருந்திருக்கலாம்.

அதுபோக, பற்பல நிலைகளில் பதவி வகித்தவர்களின் பிள்ளைகளும் துரோணரிடம்தானே கற்பார்கள்! துரோணர் என்றால் அவரால் நியமிக்கப்பட்ட பிற ஆசிரியர்களும் அதில் அடக்கமல்லவா! அஸ்வத்தாமன்தானே துரோணருக்கும் முன்னால் பாண்டவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான்! இந்த இடத்தைப் பாருங்கள்:

“Vaisampayana said, ‘Arrived at Hastinapura, that best of Brahmanas, the son of Bharadwaja, continued to live privately in the house of Gautama (Kripa). His mighty son (Aswatthaman) at intervals of Kripa’s teaching, used to give the sons of Kunti lessons in the use of arms[HK1] . But as yet none knew of Aswatthaman’s prowess

[HK1]Two things: (1) Aswatthama started teaching even before Drona did (2) ‘sons of Kunti’ by upalakshana may include sons of Madri too, but certainly not sons of Gandhari.

இது கிருபரால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த, துரோணர் இன்னமும் ஹஸ்தினாபுரத்துக்கு வராத காலகட்டத்தில் சொல்லப்படுவது. (ஆதி பர்வம், ஸம்பவ பர்வம் 133ம் சர்க்கம்) துரியோதனாதியருக்குப் பயிற்றுவித்தாக ஊகிக்க இடமில்லை. அதை என் குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே, துரோணரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பயின்றார்கள். அவர்களில் உயர்குடி க்ஷத்திரியர்களும் உண்டு; அவ்வளவாக உயர்குடியில் பிறக்காத க்ஷத்திரியர்களும் உண்டு. கர்ணனுடைய பெயர் குறிப்பிடப்படுகிறது மற்ற சூத, இன்னபிற வகுப்பினர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதனாலேயே இது கர்ணனுக்கு அளிக்கப்பட்ட ப்ரிவிலெஜ் என்பது நிரூபிக்கப்படவில்லை.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

எதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. கர்ணனைப் போலவே இயற்கையான கவசத்துடன் பிறந்தவன் திருஷ்டத்யும்னன் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. (கர்ணனுடைய கவசம் ‘அவனுக்கே அவனுக்கானது’ மட்டுமன்று; அப்படிப் பிறருக்கும் இருந்திருக்கிறது என்பதன் எடுத்துக் காட்டாக நினைவில் கொள்ளப்படவேண்டியது என்றேன்.) துரோணருடைய மாணவர்களின் பட்டியலில் பாஞ்சாலன் பிள்ளை என்றோ, திருஷ்டத்யும்னன் என்றோ காணப்படாவிட்டாலும், துரோணரைப் பல இடங்களில் ‘குரு, குருநாதர்’ என்றே யுத்தத்தின் பல கட்டங்களில் திருஷ்டத்யும்னன் குறிப்பிடுகிறான் என்பது இந்த முடிபுக்கு அடிப்படை.

பாண்டவர்கள் காட்டில் பிறந்தவர்கள். அவர்களுக்குப் பயிற்சி அளித்த முதல் குரு (பாண்டு அப்போது வசித்துக் கொண்டிருந்த) சதசிருங்க மலையில் வாழ்ந்தவனான சுகன் என்பவனிடம். இவன் மிகச் சிறந்த வில்லாளி என்று மட்டும்தான் குறிப்பு அகப்படுகிறது. இவனைக் குறித்த மற்ற விவரங்கள் தெரியவில்லை. ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். சுகன் காட்டில் வாழ்ந்தவன். சதசிருங்க மலையகத்தில் இருந்த காடுகளில் வாழ்ந்தவன். தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். (திருமணமாகதவன் என்ற பொருளில் சொல்லவில்லை; அவன் மனைவியைப் பற்றிய குறிப்புகளும் இல்லை. மற்ற யாரைப் பற்றிய குறிப்புகளும் சொல்லப்படவில்லை.) அங்கே காய்கனிகளை உண்டு தவவாழ்க்கை வாழ்ந்தவன் என்பது மட்டும் தெரிகிறது.

ஆகவே, பயில்பவனுக்கும் சரி, பயிற்றுவிப்பவனுக்கும் சரி, அடிப்படைத் தகுதிகளைப் பிறப்பைப் பார்த்து பிரித்துவைத்து அளித்தனர் என்று ஊகிக்க இடமே இல்லை. எல்லோரும் ஒரே களத்தில் நின்றுதான் பயிற்சி பெற்றிருக்கின்றனர். சிலருக்குச் சில கூடுதல் அபிமான சலுகைகள் கிடைத்திருக்கின்றன. சிலர் இல்லை, ஒரே ஒருவனுக்கு என்றுகூடச் சொல்லலாம். அர்ஜுனனைச் சொல்கிறேன். அஸ்வத்தாமனுக்கே முழுமையாகப் பயிற்சி அளித்திராத பிரம்மசிரஸ் அஸ்திரத்தில் (பிரம்சிரஸாஸ்திரம்) அர்ஜுனனுக்கு மட்டும்தான் துரோணர் பயிற்சி அளித்திருந்தார். ஆகவே, பயிற்சி தகுதி அடிப்படையிலானது என்பதற்கு இது ஒன்றே போதும்.

ஆ) சூதபுத்ரனான கர்ணனுக்கு பாண்டவ-கௌரவர்களோடு சேர்த்து பாடம் சொல்லித் தந்தது அவனது பிறப்பின் உண்மை ராஜகுல பெரியோர்களுக்குத் தெரிந்ததனால்தான். இல்லாவிட்டால் அவனுக்கு அரசவம்சத்தவரோடு சேர்த்து வித்தை கற்பிக்கப்பட்டிருக்காது.

அப்படித் தெரிந்திருந்தது பீஷ்மருக்கு மட்டும்தான் என்பது சாந்தி பர்வத்தில் சொல்லப்படுகிறது. விதுரருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் கருதினாலும் அதற்கான குறிப்பேதும் இதுவரை கிட்டியதில்லை. துரோணருக்கோ, மற்றவர்களுக்கோ இந்த உண்மை தெரிந்ததாக எங்கேயும் சொல்லப்படவில்லை. ஆகவே இப்படிப்பட்ட முடிவுக்கு வர ஆதாரங்கள் இல்லை. இதை ஒரு ஊகமாக வைத்துக் கொள்ளலாம். அடிப்படை இல்லை.

இ). கர்ணன் பிறப்பு உண்மை தெரியாத பலருக்கும் தம்முடன் சேர்த்து வித்தை கற்பிக்கப்பட்ட அவன் மேல் அசூயை பிறந்திருக்கலாம். அதனால் டெமான்ஸ்ட்ரேஷனின்போது அவனைப் பொதுவில் அவமானப்படுத்த அவனது பிறப்பைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.

இல்லை. அப்படி அசூயை பாண்டவர்களுக்கு ஏற்படவே இல்லை. அது தெள்ளத் தெளிவு. கௌரவர்கள் பக்கத்திலோ, துரியோதனன், சகுனி எல்லோரும் கர்ணனுக்கு மிக நெருங்கியவர்கள். பீமனுக்கு விஷம் கொடுக்கும் திட்டத்தை உருவாக்கியவனே கர்ணன்தான். கடைசி்ப் போரில், தன்னுடைய தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்து கொள்ளும்போது, ‘இதை நான் மீட்கும் வரையில் என்னோடு போர்தொடுக்கமல் இருப்பது யுத்த தர்மம்’ என்று அர்ஜுனனைப் பார்த்து கர்ணன் சொல்லும்போது, எப்போதெல்லாம் கர்ணன் தர்மததைத் தவறவிட்டான் என்று கிருஷ்ணன் ஒரு நீணட பட்டியல் போடுகிறான். அதன் தொடக்கமே, ‘பீமனுக்கு நஞ்சூட்டிக் கொல்ல முயன்றாயே அப்போது எங்கே போனது உன் தர்மம்’ என்றுதான் வருகிறது. (இந்த மேற்கோளை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்.) கர்ணனுக்கும் கௌரவர்களுக்கும் மிகமிக ஆரம்ப காலத்திலிருந்தே நிலவிவந்த நெருக்கம் இதனால் தெளிவாகக் காட்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது வேறு யாருக்கு சூதபுத்திரனாகிய கர்ணன் தங்களுடன் சேர்ந்து பயில்கிறான் என்ற அசூயை பிறந்திருக்க முடியும். கற்பனை செய்யக்கூட இடமில்லை.

அவனுடைய பிறப்பைப் பற்றிய கேள்வி கேட்கப்படுவதைச் சுட்டுகிறீர்கள். கான்டெக்ஸ்டை சரியாக யாரும் உங்களுக்குச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

ஒருகட்டத்தில் துரோணரிடம் பயிற்சி பெறுவதிலிருந்து விலகி, பரசுராமரிடம் பயிற்சிபெறப் போகிறான் கர்ணன். திரும்பி வரும்போது, பசுவைக் கொன்ற காரணத்தால் ஒரு பிராமணனின் சாபமும், பொய் சொல்லி வித்தையைப் பெற முயன்றதால் குருவின் சாபமும் பெற்றவனாகத் திரும்புகிறான். (இந்த ‘பொய்சொல்லி’ வித்தை கற்றுக்கொள்வது என்பது, எல்லோராலும் ஒன்றுபோல ‘லைட்டாக’ கையாளப்பட்டுள்ளது. வித்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தால் ஏதோ ஒருபொய் சொல்லிவிட்டான் என்பதுபோலச் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், கர்ணன் சொன்ன பொய், அவனை அன்றாடம் என்னென்ன செய்ய, சொல்ல வைத்திருக்கும் என்பதனைத் தனியாகக் காணலாம். அவன் நிலையில் நம்மை வைத்துப் பார்த்துக் கொள்வோம். இதயசுத்தியுடன், ‘இப்படி நான் செய்வேனா’ என்று கேட்டுக்கொள்வோம். அது பிறகு.)

திரும்ப வந்த கர்ணன், துரியோதனனைத்தான் முதலில் சந்திக்கிறான். தான் வித்தை கற்ற கதையைச் சொல்கிறான். சாபம் பெற்றதை அந்தத் தருணத்தில் சொன்னதாகத் தெரியவில்லை. இந்த லிங்க், சாந்தி பர்வத்தில் வருகிறது. (இந்த இடத்தை அடுத்த முறை பார்ப்போம்.)

ஆகவே, ஆட்டக் களத்தில் கர்ணனுடைய நுழைவு துரியோதனன் எதிர்பார்த்திருந்த ஒன்று என்று ஊகிக்க இடமிருக்கிறது. இது ஊகம்தான்.

இனி ஆட்டக் களத்து நிகழ்வுக்கு வருவோம்.

(விவாதங்கள் அடுத்த தவணையில் தொடர்கின்றன.)

One Reply to “மஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்”

  1. तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान् |
    आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा || श्रीमद्भगवद्गीता १- २६||
    आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः |
    मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा || श्रीमद्भगवद्गीता १- ३४||
    गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके |
    हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् || श्रीमद्भगवद्गीता २- ५||
    நான் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன் – பிதாமஹன் என்று குறித்த பிறகு, பீஷ்மரை, ஆசார்யான் என்று பன்மையில் யாரையெல்லாம் குறிப்பிடுகிறார் அர்ஜுனன் என்று. கிருபர் ஆயிற்று. துரோணர் ஆயிற்று. ஸம்ஸ்க்ருதத்தில் பன்மையில் குறிக்க மூவர்-ஆவது வேண்டுமே. அந்த இன்னொருவர், குறைந்த பக்ஷம் யார் என்று. மரியாதைப் பன்மையோ என்று. இந்தக் கட்டுரையைப் படித்ததும் தெரிகிறது, அஶ்வத்தாமனையும் கணக்கில்கொண்டு பன்மை பலர் பன்மையாகவும் கொள்ளலாம், மரியாதைப் பன்மையாகவும் கொள்ளலாமென்பது.
    பொதுவாகவே மூலத்தின் அருகில், எந்தப் பிஶிறும் (frills) இல்லாமல், அழைத்துச் செல்வதாக உள்ளதால் படிப்பதில் ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது. உண்மை தரும் உற்சாகம். கோடானுகோடி நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *