உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு
நமது நிருபர்
28 Jan 2009 |
அச்சிட
கண்ணீர் அஞ்சலி:
இந்தப் பதிவினை வலையேற்றுவதற்கு முன்னம், ஒரு துயரச் செய்தி வந்தது. திருநெல்வேலியில் இருந்து வந்து இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்குகொண்டு பின்னர் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்பர்கள் 15 பேர் திருநெல்வேலிக்கு அருகில் லாரி மோதி கொடூரமான சாலை விபத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்கள் - வேன் டிரைவர் வேலுமணி, கிளீனர் இசக்கி, சங்கரலிங்கம், லோகம்மாள், நெல்லை வடிவு, சண்முகம், கனகசபாபதி, பர்வதம்மாள், லட்சுமி, அய்யம் பெருமாள், பாலசுப்பிரமணியன், சண்முகம் பிள்ளை, மகாராஜன், மீனாட்சி, ஆவுடையம்மாள் ஆகியோர். இவர்களை இழந்து வாடும் உற்றார், உறவினர்களுக்கு தமிழ்ஹிந்து.காம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களது ஆன்மா சாந்தியடைய பரம்பொருளிடம் பிரார்த்திக்கிறோம். - ஆசிரியர் குழு.
![]()
கும்பகோணம் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை காலை தேவார இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மூவர் முதலிகள் முற்றம் அமைப்பின் இணைப்பாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கப் பேச்சாளர்களையும் அறிமுகம் செய்தார். தமிழின் தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஜெயமோகன் “தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித் தந்த புனித தாமஸ்” என்ற பெயரில் எழுதிய கட்டுரை தான் இந்தப் பிரசினை பற்றிய விழிப்புணர்வைப் பலரிடம் ஏற்படுத்தி, இத்தகைய கருத்தரங்கு ஒன்றைத் தாங்கள் நடத்துவதற்கு உந்துதலும் அளித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய பேராசிரியர் சாமி. தியாகராசன் (”சொன்னால் விரோதம், ஆயினும் சொல்லுகிறேன்” நூலின் ஆசிரியர்) “தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்” என்றார். தமிழகத்தின் செல்வாக்குள்ள பல கிறிஸ்தவ சர்ச் அமைப்புகளின் தலைவர்கள் “இந்தியா தோமா வழி திராவிட கிறிஸ்தவ நாடே” என்ற தலைப்பில் முனைவர் தெய்வநாயகம் மற்றும் தேவகலா எழுதிய அப்பட்டமான திரிபு நூலை வாழ்த்திருக்கிறார்கள்; அதில் உள்ள கருத்துக்களுடன் உடன்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள்; இதிலிருந்து இவை ஒரு தனிமனிதரின் உளறல்கள் அல்ல, அமைப்பு ரீதியாக முன்வைக்கப் படும் ஒரு கருத்துத் தீவிரவாதம் என்பது புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார், இந்த நூலின் சில இடங்களை பார்வையாளர்களுக்காக அவர் வாசித்தும் காண்பித்தார்.
“கருத்தரங்குக்குத் தலைமை ஏற்று அருளுரை” என்று அழைப்பிதழில் குறிக்கப் பட்டிருந்த மதுரை ஆதீனத் தலைவர் அடுத்துப் பேச ஆரம்பித்தார். அவருக்கே உரித்தான பலவித அபிநயங்களுடன் அவர் பேசிய அவியல் பேச்சில் ஒரு அறிவார்ந்த கருத்தரங்கத்தின் சூழல் மறைந்து நையாண்டி நெடி அடிக்கத் தொடங்கியது. ஜி.யு. போப் பற்றிய தவறான தகவல்கள், பைபிள், குரான் இவற்றிலிருந்து சம்பந்தமில்லாத “ஓதல்கள்” என்று பேச்சு எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தது. பல பார்வையாளர்கள் முகம் சுளிக்கவும் தொடங்கினர். சுமார் ஒருமணி நேரம் அடித்து ஓய்ந்த பின் அரங்கை மையம் கொண்டிருந்த அந்த உரைப் புயல் அடங்கியது, கைகளைத் தூக்கி ஆப்பரித்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறியும் விட்டது.
பின்னர் “எஜமான் சுவாமிகள்” என்று அன்புடன் அழைக்கப் பட்ட திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் திருவளர்திரு. முத்துக் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் பேசினார்கள். சிவஞான ஒளியில் சுடரும் தீபமாக தெய்வீகத் தோற்றம் கொண்டிருந்த முதிய பிராயத்தரான சுவாமிகள், சாந்தமும், கருணையும் தவழும் இனிய குரலில், அழகிய தமிழில் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார். ஜி.யு. போப், கால்டுவெல் உள்ளிட்ட கிறிஸ்தவ மிஷநரிகள் தமிழின் மீதுகொண்ட அன்பினால் அல்ல, மதமாற்றக் காரணங்களுக்காகவே தமிழைப் பயிலத் தொடங்கினர் என்று ஆதாரபூர்வமாக சுவாமிகள் விளக்கினார்.
மதியம் மணி பன்னிரண்டு ஆகி விட்டிருந்தது. சுமார் 400 பார்வையாளர்களுடன் அரங்கம் நிறைந்திருந்ததது. கணிசமான அளவில் பெண்களும் வந்திருந்தனர்.
ஜெயமோகன் எழுந்தார். கேளிக்கையையே மையமாகக் கொண்ட வெடிப் பேச்சுக்களும், கரகோஷங்களும் ஒரு கலாசாரமாகவே கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் ஆகிவிட்டன. சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைக் கேட்கக் கூட இயலாதவர்களாக மக்களை ஆக்கி விட்டன. அதனால், தன் பேச்சின் இடையே தயவு செய்து யாரும் கைதட்ட வேண்டாம், அப்படிக் கேட்க விருப்பமில்லாதவர்கள் அரங்கத்தை விட்டுச் சென்று விடலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் தொடங்கினார். மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போன்று பார்வையாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். ஒருவர் கூட அரங்கை விட்டுச் செல்லவில்லை, சிறு சலசலப்பு கூட இல்லை.
“இந்து தத்துவ மரபின் பொதுக் கூறுகள்” என்ற தலைப்பில் ஜெயமோகன் அன்று ஆற்றிய உரையைப் பற்றி என்ன சொல்வது! அவரது ஆழ்ந்தகன்ற அறிவும், வாசிப்பும், சிந்தனைத் திறனும், பேச்சின் ஒவ்வொரு கட்டத்திலும் சுடர்விட்டன. வரலாறு, இலக்கியம், கலாசாரம், சமயம், மானுடவியல், தத்துவம் என்று பல தளங்களையும் தொட்டுச் சென்றது உரை. தீவிர அறிவுப் பின்புலம் கொண்ட இத்தகைய கருத்துக்களையும் எளிமையாக, லாகவத்துடன் அதே சமயம் அவற்றின் தீட்சண்யம் குறையாமல், ஒரு சாதாரண மக்கள் திரள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க முடியும் என்பதற்குச் சான்றாக அந்த உரை அமைந்தது. இந்த முழு உரையும் மூன்று கட்டுரைகளாக ஜெயமோகனின் இணையதளத்தில் உள்ளது –
மதிய உணவிற்குப் பின், முதல் நிகழ்வாக வந்தது “இறையியல் பின்னணியில் இனவாதக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டனின் கருத்துரை. விவிலிய தொன்மக் கதை ஒன்றில் தொடங்கி, எப்படி உலகம் முழுவதும் இனவாதக் கொள்கைகளும், அதன் தொடர்ச்சியாக வெறுப்புணர்வும், வன்முறையும் பரவின என்பது பற்றி அசைக்க முடியாத வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அவர் விளக்கினார். காலனியம் இந்தியாவில் உருவாக்கிய ஆரிய திராவிட பகுப்புகள், மற்ற நாடுகளிலும் இத்தகைய திரிபுகள், சிந்துவெளி மற்றும் வேத நாகரீகம் பற்றிய உலகளவிலான சமீபத்திய ஆய்வுகள் இவற்றை “பவர்பாயிண்ட்” பிரசண்டேஷன் உதவியுடன் அவர் எடுத்துரைத்தார். காத்திரமான, விரிவான ஆய்வு முடிவுகளை பொது அரங்கில் எளிமையாக விளக்கும் முகமாக, சிறப்பாக அமைந்தது இந்த உரை.

பின்னர் “வேதத் தொன்மையும், தொடர்ச்சியும், பண்டைத் தமிழ் மரபும்” என்பது பற்றி ஆர்.என்.சங்கரநாராயணன் பேசினார். முதலில் வேத கலாசாரம் மற்றும் பண்டைத் தமிழ் மரபு உருவாகி வளர்ந்த வரலாற்றுக் காலகட்டங்கள் பற்றிய சுருக்கமான சட்டகத்தை அளித்தார். வேதம், வேள்விகள், பெருந்தெய்வம், இயற்கைத் தெய்வங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள், இதிகாச புராணக் குறிப்புகள், வடமொழி ஆகியவை குறித்த பல சங்க இலக்கிய மேற்கோள்களை அள்ளித் தெளித்ததாக இருந்தது அவர் பேச்சு. “பண்டைய வரலாற்றை ஆய்வது சிக்கலானது, சங்க நூல்களுக்கான பழைய உரைகள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் முடிபுகள் திரிபுகளே அன்றி உண்மையான ஆய்வுகள் அல்ல” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
(இந்த இரு உரைகளும் முழு வடிவில் கட்டுரைகளாக தமிழ்இந்து.காம் தளத்தில் விரைவில் வெளியாகும்.)
பின்னர் டி.என்.ஆர். என்று தமிழ் ஆய்வாளர்களுக்கு நன்கு அறிமுகமான அறிஞர் தி.ந.இராமச்சந்திரன் (இயக்குனர், சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்) “சைவ சித்தாந்தம் கிறிஸ்தவத்தோடு இயையுமா” என்ற தலைப்பில் பேசினார். சைவசித்தாந்தத்தின் ஆணிவேராக ஆழ்ந்த தத்துவமும், விவிலியத்தின் வேராக சில தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளுமே இருப்பதை பல்வேறு சான்றுகளுடன் அவர் சுவைபட எடுத்துரைத்தார்.
கருத்தரங்கின் நிறைவாக, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்கமுக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளுரை வழங்கினார்கள். சைவசித்தாந்தப் பேராசானாக விளங்கும் ஞானமுனிவர் குருமகாசன்னிதானம் அவர்கள் இந்த வரலாற்றுத் திரிபுகளைத் தோற்கடிக்கும் முகமாக உரைகள் மட்டுமின்றி, நூல்களும் இயற்றப் படவேண்டும் என்று அருளாணை அளித்தார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் உலகை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறியுடன் இயங்குவதையும், அதற்கு மாற்றாக வேதநெறியாகிய சைவம் உலகெலாம் வாழவேண்டும் என்ற உன்னத நெறியைத் தனதாகக் கொண்டு திகழ்வதையும் சான்றாதாரங்கள் மூலம் எடுத்துரைத்தார்கள். காந்தியடிகளின் அகிம்சை வழியே சைவ சமயத்தின் வழியுமாகும் என்றும் குறிப்பிட்டார்கள். இலங்கை பற்றிக் கருத்துக் கூறவேண்டும் என்று கேட்கப் பட்டபோது, அங்கு தமிழர்களும், சிங்களவர்களும், அனைத்து மக்களும் இடர் நீங்கி இணக்கத்துடன் வாழவேண்டும் என்ற விழைவைத் தெரிவித்தார்கள். இந்து ஆன்மிக ஞானப் பரம்பரையின் வழிவந்த சன்னிதானம் அவர்கள் அதற்கே உரித்தான சமநிலையுடனும், அருள்நெறியுடனும் பேசியது குறிப்பிடத் தக்கது.
இறுதியாக, புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டன. அவற்றைப் பின் இணைப்பில் காணலாம். மூவர் முதலிகள் முற்றத்தின் தலைவர் ந. பன்னீர்செல்வம் அவர்கள் நன்றியுரை கூறக் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய சைவ சமயத்தின் முதல் மூன்று சமயாசாரியார்களின் பெயரைக் கொண்டு கும்பகோணத்தில் இயங்கும் இந்த அமைப்பு, அருமையாக இத்தகைய கருத்தரங்கத்தினை நடத்தியது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் சைவ, வைணவ அமைப்புகளும் தத்தம் பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வையும், தமிழ்ச்சமயம் மற்றும் தமிழ்ப் பண்பாடு பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
பின் இணைப்பு:
24.01.09 சனிக்கிழமையன்று கும்பகோணத்தில் மூவர் முதலிகள் முற்றத்தின் சார்பில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1:
முன்மொழிபவர்: பேராசிரியர் சாமி. தியாகராசன்
வழிமொழிபவர்: முனைவர். மு. செல்வசேகரன்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பிறந்தார் எனக் கணக்கிட்டு நமது தமிழ்நாடரசு அதனைக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவராண்டை ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டிற்கும், தமிழர்கள் எண்ணத்திற்கு எதிராகவும் முனைவர் மு. தெய்வநாயகம் என்பார் இயேசு கிறிஸ்துவின் சீடராகிய புனித தாமஸின் சீடரே திருவள்ளுவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூலே என்றும் நிலைநாட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டன என மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் சொல்லி வருகின்றார்.
முனைவர். மு. தெய்வநாயகத்தின் இந்தக் கருத்து சரியா? தவறா? என்பது பற்றி உலகத் தமிழர்கள் தமிழ்நாடு அரசின் வழித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆதலால், குறள் ஓவியம் தீட்டி அதன் பின்னர் திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ள நமது முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மாண்புமிக கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில், இதுநாள்வரை தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள திருக்குறள் அறிஞர்கள் ஒன்று கூடி முனைவர். மு. தெய்வநாயகம் அவர்கள் கருத்தினை ஆய்வு செய்து, திருக்குறளின் உண்மை நிலையினை அரசு அறிவிப்பின் வழி உலகுத்குத் தெரிவித்து, வரம்பு கட்ட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.
தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் இதற்கான முன் முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என அடிகளாரின் பாதம் பணிந்து மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம்: 2.
முன்மொழிபவர்: சாமி. தியாகராசன்
வழிமொழிபவர்: ந. பன்னீர்செல்வம
இந்தியா எந்த ஒரு சமயத்தையும் சார்ந்த நாடன்று என நமது அரசியல் அமைப்புச் சட்டம் எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் முனைவர். மு. தெய்வநாயகத்தின் மகளார் முனைவர். தெ. தேவகலா அவர்கள் இந்தியா கிறிஸ்தவ நாடே என தேற்றேகாரம் இட்டு மிகத் தெளிவாக வெளிப்படையாக அச்சிட்டு நூல் வெளியிட்டுள்ளார். சென்னை மயிலை ஊழியருக்கான சுருக்கக் கையேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேராயர் டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்கள், இந்தியா கிறிஸ்தவ நாடே என்பதை டாக்டர். தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளார் எனப் பாராட்டுத் தெரிவிக்கின்றார்.
இவர்கள் செயல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகாதா? மத நல்லிணக்தத்தைப் பாதிக்காதா? நாட்டின் அமைதியைக் கெடுக்காதா? என்பன பற்றி அறிந்து கொள்ள மூவர் முதலிகள் முற்றம் விரும்புகின்றது.
ஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.
தீர்மானம்: 3.
முன்மொழிபவர்: பேராசிரியர். முனைவர். பொன். முத்தையன்.
வழிமொழிபவர்: சு. நாராயணசாமி
முனைவர். மு. தெய்வநாயகம் மற்றும் அவர் மகள் முனைவர். தெ. தேவகலா ஆகியோரின் முனைவர் பட்டத்திற்கான நெறியாளர்கள் யார் யார்? அவர்கள் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்த உள்நாட்டு, வெளிநாட்டுத் தேர்வாளர்கள் யார் என்பதனை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைகழகத்தில் கேட்பது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 4.
முன்மொழிபவர் : வி. கோவிந்தசாமி
வழிமொழிபவர் : தா. கிருட்டிணன்.
06.12.86 மற்றும் 07.12.86 ஆகிய நாட்களில் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சைவசித்தாந்தம், புனித தாமஸ் சொல்லிய கிறிஸ்தவத்தின் கொள்கைகளையே கொண்டுள்ளது. அதனால் அது கிறிச்தவ நூலே என வாதிட்டு வெற்றிக்கொடி நாட்டியதாக முனைவர் மு. தெய்வநாயகம் கூறிவருகின்றார். இவரின் இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பதைச் சைவ உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.
ஆதலால் அந்த நாட்களில் தருமைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்களில் தற்காலம் வாழுபவர்களை நேரிலோ கடித வாயிலோ அணுகி முனைவர். மு. தெய்வநாயகம், வாதத்தில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாரா இல்லையா என்பதனை எழுத்து மூலமாகப் பெற வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் கருதுகின்றது.
இந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தருமபுர ஆதின அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பியல் இயக்குநர் திரு. தி. ந. இராமச்சந்திரன் அவர்களை கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 5
முன்மொழிபவர்: முனைவர். சா. சிற்றரசு
வழிமொழிபவர்: முனைவர் தி. அரங்கநாதன்
தன்னுடைய மகன் வழக்கறிஞர் தெ. தேவஇரக்கம் சாமுவேல் அவர்கள் காஞ்சி சங்கரமடத்தின் சதியால் 28.06.1998 அன்று கொலை செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் குற்றம் சாட்டும் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் இக்கொலை குறித்துக் காவல் துறையை அனுகினாரா? நீதிமன்றங்களை நாடினாரா? வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டாரா? என்பது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் காஞ்சிமடத்தைக் கொடும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கின்றார். குற்றம் சுமத்துகிறார். ஆதலால் இது குறித்து அவர் விளக்க வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்து அவரைக் கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம்: 6
முன்மொழிபவர் : க. இராமையா
வழிமொழிபவர் : தி. தாயுமானவன்
புனித தாமஸ் பற்றி நூறு கோடி ரூபாய்செலவில் திரைப்படம் எடுக்க கிறிஸ்தவ சபைகள் தீர்மானித்து, நமது முதலமைச்சர் அவர்களைக் கொண்டு படத்தொடக்கவிழா நடத்துவது என முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.
- தருமபுர ஆதீனக் குருமகா சந்நிதானம்
- திருவாவடுதுறை ஆதீனக் குருமகா சந்நிதானம்
- மதுரை ஆதினக் குருமகா சந்நிதானம்
- திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர்
- குடந்தைப் பெரிய மடத்துத் தலைவர்
ஆகியோர் முன்னிலையில் இந்த ஆறு தீர்மானங்களும் ஒரே மனதாக நிரைவேற்றப்பட்டன.
பி. பன்னீர்செல்வம்
தலைவர்
மூவர் முதலிகள் முற்றம்
கும்பகோணம்
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
29 January 2009 at 7:24 am
உலக தமிழ்ச் சமயக் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ள மூவர் முதலிகள் முற்றம் அமைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக. கருத்தரங்க நடப்புகளைச் சுவைபட வழங்கியுள்ள தமிழ் இந்துவிற்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.
மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் அருமை. கும்பகோணத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்து பின்னர் கடைசி நேரத்தில் பிரயாணத்தை ரத்து செய்ய நேர்ந்தது எனது துரதிர்ஷ்டமே. வணக்கத்திற்குரிய ஆதீனங்கள், எழுத்தாளர்கள் ஜெயமோகன், அரவிந்தன் மற்றும் பேச்சாளர் டி.என். ராமச்சந்திரன் ஆகியோரின் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விட்டதே என்று ஏக்கமாக இருக்கிறது. அவற்றை பிரசுரம் செய்வதாக உறுதி செய்துள்ள தமிழ் இந்துவிற்கு நன்றி.
சென்ற ஞாயிறு காலையே விவரங்களைத்த் தொலைபேசி மூலம் நண்பர் ஒருவர் தெரிவித்ததனால் இந்தக் கட்டுரை எப்போது வருமோ என்று ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது படித்து மனம் மகிழ்ந்தேன். நல்ல முறையில் ஆரம்பித்த இந்த அற்புதப் பணி தமிழ் இந்துக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானும், அவன் தமையன் தடங்கல் தீர்க்கும் ஆனைமுகத்தோனும், அவர்களைப் பெற்ற அம்மையப்பர்களும் அருள் புரிவார்கள்.
நன்றி, அன்புடன்
ப.இரா.ஹரன்.