முகப்பு » கவிதை

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

அச்சிட அச்சிட

butterflyவாழத் தெரிந்த வல்லவருக்கோ
வாழ்க்கை என்பது வரமாகும்
வழிதெரி யாமல் தவிப்பவருக்கோ
வாழ்க்கை முழுதும் வலியாகும்
தாழ்வும் உயர்வும் மனநிலை என்பது
தரணியில் சிலர்க்கே தெளிவாகும்
தாழ்ந்தால் தரிசன மாகும் குருவின்
தாளில் புதைவதே வாழ்வாகும்!

உடலுக் குள்ளே நம்மைத் தேடி
உளுத்துக் களைத்து நின்றோமே
உடலைத் தனது உயிருள் துகளாய்
உடையவன் சன்னிதி சேர்ந்தோமே!
கடலுக் குள்ளே கனலாய் நின்று
கனவை நனவைக் கடைந்தானே!
கட்டி வெண்ணையாய் மிதக்க விட்டுக்
கைகள் கொட்டிச் சிரித்தானே!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி
துரத்தத் துரத்தப் பறக்கிறது
தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம்
தொல்லை யுகமாய்த் தொடர்கிறது
வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே
வேட்டை யாடப் படுகிறது!
வீழும் கணத்தில் விடிந்த ஞானம்
வாழவா துணை வருகிறது?!

புலனால் தொட்டது மனதில் பட்டால்
புதிய உறவு பிறக்கிறது
காத்த உறவே கடுநஞ் சாகிக்
கனவிலும் நீலம் படர்கிறது!
உலகம் விலைமயம்! உறவும் பிரிவும்
ஒரேநர கத்தின் இருகதவம்!
உணர்ந்து நின்றால் உள்ளே விரியும்
குருவின் முறுவல் பொன்னுதயம்!

விண்ட இலைக்கு விதி கிடையாது
விண்ணில் வீதிகள் ஏது!
வெட்ட வெளியின் அப்பட்டத்தில்
வேட ஜோடனை ஏது?
கண்ணில் தெரியும் வானே போதும்
ககனம் அளத்தல் எதற்கு?
ககனம் முழுவதும் கண்ணில் எழுதியோன்
கண்ணில் பட்டது இதற்கு! 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: ,

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.