நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்
ஜடாயு
25 Mar 2009 |
அச்சிட
போன வருடத் தொடக்கம். நண்பனது நான்கு மாதக் குழந்தையை முதன்முறையாகப் பார்க்கப் போகும்போது அதற்கேற்றவாறு ஏதாவது பரிசு வாங்கிச் செல்ல வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தோம். குழந்தையின் தொட்டிலில், தலைமாட்டில் கட்டுவதற்கேற்றவாறு சிறு மணிகள் அசையும், சின்னச் சின்ன பொம்மைகள் சுற்றிவரும் அந்த விளையாட்டுப் பொருளை வாங்கலாம் என்று மனைவி சொன்னாள். சரியென்று தேடி சில மாடல்களைப் பார்த்தோம். கடைசியில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கப் போகும் சமயம் லேபிளைப் பார்த்தேன், சீனத் தயாரிப்பு என்று போட்டிருந்தது. கூடுமானவரை சுதேசிப் பொருட்களை வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பது எங்கள் குடும்பம். அதனால், இது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானப் பொருள் இல்லையே இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை. மூன்று நான்கு கடைகள் ஏறி இறங்கியும் இதே அனுபவம் தான். இந்த விளையாட்டுப் பொருள் என்று இல்லை. எல்லாக் கடைகளிலும் அநேகமாக 80 சதவீதம் விளையாட்டுப் பொருட்கள் சீனச் சரக்குகள் தாம். இந்த விளையாட்டு உற்சாகம் தருவதாயில்லை, வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.
உலக நாகரீகத்தில் முதன்முதலாக குழந்தைகள் விளையாடச் சொப்புகள் செய்து, வரலாற்றின் புதைகுழிகளில் எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து நாம் காண்பதற்காக விட்டுச் சென்ற எனது சிந்துச் சமவெளி மூதாதைகள் நினைவில் வந்தார்கள். “மிருச்ச கடிகம்” என்ற பழைய காவிய நாடகத்திற்குப் பெயர் தந்த அந்த மண் இயல் சிறு தேர் மனதில் ஓடியது.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சுஜாதா 80களில் எழுதிய ஒரு நாடகம். அதில் ஒரு பொம்மை கம்பனிக்காக, அது ஆரம்பித்த காலம் தொட்டு, பாட்டுப் பாடிக் கொண்டே ஒவ்வொரு கிருஷ்ணர் பொம்மையையும் ஆத்மார்த்தமாக ஒரு குழந்தையை உருவாக்குவது போல் செய்துவருவார் ஒரு கைவினைஞர். தலைமுறை மாறுகிறது, முதலாளியின் மகன் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின், உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாக உணர்கிறான். கைவினைஞர் விசுவாசி, அவரை வெளியில் தள்ளவும் முடியாது, உற்பத்தியும் உயரவேண்டும். ஜப்பானில் இருந்து ஒரு இயந்திரத்தை வரவழைக்க, அது அவர் செய்த ஒரு கிருஷ்ணர் பொம்மையை அச்சில் வார்த்து விடுகிறது, அதற்குப் பிறகு, அவரது வேலை ரொம்பவும் சுளுவாகி விடுகிறது. ஆத்மார்த்தமாக ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பொத்தானை அமுக்குகிறார். கிருஷ்ணர்கள் நிமிடத்திற்கு டஜன் கணக்கில் தயாராகிறார்கள்! தொழில்மயமாதலின் போது மதிப்பீடுகள் மாறுவதை உணர்ச்சிபூர்வமாகச் சித்தரிக்கும் ஒரு நல்ல நாடகம் இது.

இப்போது இது போன்று ஒரு நாடகம் எழுதினால், கண்டிப்பாக அதன் களமாக எந்த இந்திய நகரமும் இருக்காது, அது நிகழுமிடம் தென்சீன மாகாணத்தில் ஏதாவது ஒரு நகரமாகத் தான் இருக்கும்! ஏனென்றால் 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய விளையாட்டுப் பொருள்கள் சந்தையில், இப்போது 70லிருந்து 80 சதவீதம் சீனச் சரக்குகள் தான் என்று புலம்புகிறார்கள் இந்திய விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள். இந்தியப் பொம்மைகள் விற்கும் விலையில் பாதிக்கும் கம்மியாக்கி சீனத் தயாரிப்புப் பொம்மைகளை குப்பையைக் குவிப்பது போல இந்தியக் கடைகள் எங்கும் கொண்டு வந்து கொட்டுவதால், இந்தப் போட்டியை எப்படிச் சமாளிப்பது என்று திணறுகிறார்கள் அவர்கள்.
எனது கடுப்புக்குக் காரணம், இந்தச் சரக்குகளின் குவிப்பு மட்டுமல்ல, அவற்றின் சாதாரணத்தனம், மிக மலிவான தரம், அன்னியத் தனம் எல்லாம் கூடத் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன், ஏறக்குறைய ஒரே அச்சில் வார்த்த்து போன்ற புசுபுசு டெடி கரடிகள் – எல்லாக் குழந்தைகளும் இந்த ஒன்றைத் தான் கொஞ்சி விளையாட வேண்டும் என்பது அராஜகம் இல்லையா? இந்தியத் தன்மையும், கலை உணர்வும், அழகியலும் கிஞ்சித்தும் இல்லாத மிருக பொம்மைகள்.. யானையைக் கூட ஒல்லியான உடலுடன், சிறு குழாய் அளவில் தும்பிக்கை, சொங்கிக் கை கால்களுடன் டெடி கரடி உட்கார்ந்திருக்கும் அதே போஸில் புசுபுசு பொம்மையாக செய்கிறார்கள். பார்க்க யானை போன்றே இல்லை. பிளாஸ்டரில், மரத்தில் வரும் பல கடவுளர் சிலைகள் கூட இப்போது டிராகன் தேசத்தில் தான் ஜனிக்கின்றன. நம் மண்ணின் திருவிழாவான விநாயக சதுர்த்தியில் கூட, சீனக்களிமண் பிள்ளையார்கள் தொகை வருடாவருடம் சீனமக்கள் தொகை போன்றே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் முயற்சி செய்து அவர்கள் இந்தத் திருவுருவங்களைக் காப்பியடித்தாலும், பலவற்றில் (குறிப்பாக பிளாஸ்டர் பொம்மைகள்) மூக்கும், முழியுமே காட்டிக் கொடுத்து விடுகிறது.
அது தவிர, முக்கியமாக இந்த விளையாட்டுப் பொருள்களால் உருவாகும் உடல்நலம் மற்றும் சுற்றுப் புறச்சூழல் கேடுகள் அபாயகரமானவை. எந்த விதத் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப் படாமல் தயாராகும் குழந்தைகளுக்கான இந்தப் பொருட்களை நம் சந்தைகளில் ஊடுருவ விட்டது அரசு செய்த பெரும் தவறு.
இதனை சரிசெய்யும் வண்ணமாக இந்திய அரசு 2009 ஜனவரி மாதம் சீன விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியை ஆறு மாதங்களுக்கு முற்றிலுமாகத் தடை செய்த்து மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து உலக வர்த்தக மையத்தில் (WTO) முறையீடு செய்யப் போவதாக சீனா மிரட்டியதை அடுத்து மார்ச் மாதமே இந்தத் தடை உத்தரவை இந்தியா மாற்றவேண்டியதாயிற்று - உலக அளவிலான தரக் கட்டுப்பாடு நிறுவனங்களின் சான்றிதழ்கள் பெற்ற விளையாட்டுப் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படும் என்று இந்தியா கூறியது. முன்பு வந்ததில் 10 சதவீத பொருட்களே இதில் தேறும் என்பதால் தரமான பொருட்கள் மிதமான அளவிலேயே இனிமேல் உள்ளே வரும் என்று சொல்லப் படுகிறது. சட்டம் மற்றும் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நமது அரசின் மெத்தனம் நாடறிந்தது. பார்க்கலாம்.
விளையாட்டுப் பொருட்கள் தெளிவாகத் தெரியும் ஒரு உதாரணம். பாலியஸ்டர் லினன் இழைகள், பாட்டரி, பல்புகள், டயர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுத் தளம் போடும் டைல்ஸ் என நம் அன்றாட உபயோகப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் அதில் சீனப் பொருட்களின் பங்கு சமீப காலங்களில் அசுரத் தனமாக வளர்ந்து வருகிறது.
- 2008 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்ட்த்தில் சீனப் பொருட்களின் இறக்குமதி 38 சதவீதம் உயர்ந்துள்ளது, குறிப்பாக கெமிக்கல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள், பட்டு.
- சீன இரும்பு எஃகு இறக்குமதி இதே காலகட்ட்த்தில் 44 சதவீதம் உயர்ந்துள்ளதாக டாடா, ஜிண்டால் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூறுகின்றன.
தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.
- சமீபத்தில் டாங்க் ஃபாங்க் என்ற சீனக் கம்பெனியிடமிருந்து வாங்கிய பழுதுபட்ட இயந்திரங்கள் துர்காபூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்சார பவர் பிளாண்டையே செயலிழக்கச் செய்தன. (இந்த உயர்தர பவர் பிளாண்ட் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கியது).
- புகழ்பெற்ற வோக்ஹார்ட் மருத்துவ நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் ஆசிட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சமீபத்தில் இழுத்து மூடியது. சீன இறக்குமதி வெள்ளம் பாய்ந்து அதை மூழ்கடித்து விட்டது.
உலக ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக நெறிமுறைகளின் படி, இதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதியை முழுமையாகத் தடைசெய்ய முடியாது தான். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறைகள் பலவற்றை ஒரேயடியாக அழித்தொழிக்கும் வகையில் இந்த இறக்குமதி இருந்தால்? அது தான் இப்போது கவலை தரும் விஷயம் என்று இந்திய வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, உலகப் பொருளாதாரம் மநத நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் சீனப் பொருள்களின் வரத்து எதிர்பார்ப்பை விட மிக்க் குறைவாக இருக்கிறது. சீனா ஏராளமான அளவில் பொருட்களை உற்பத்தி செய்து தனது கிட்டங்கிகளில் வைத்திருக்கிறது. இவை ஏற்றுமதியாகாமல் தேங்கினால், அது சீனப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இப்போது பெரிய அளவில் இந்திய வர்த்தகத்தை சீனா குறிவைக்கிறது.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது.
2008ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் மாதங்களூக்கு இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 42 பில்லியன் டாலர்கள் (இதற்கு முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் அதிகம்). ஆனால் இதில் இந்தியா கணக்கிலான வர்த்தக மீதத்தில் (balance of trade) 16 பில்லியன் டாலர் பற்றாக்குறை (defecit) உள்ளது! அதாவது இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
சீன அரசு தனது ஏற்றுமதியாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கியும், மற்றும் பல வசதிகள் செய்தும் ஏற்றுமதி வெள்ளம் அடங்காமல் பொங்கிக் கொண்டிருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறது. இதனால் உலக சந்தையில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் தரம் உயர்ந்த தங்கள் பொருட்களை 10-15 சதவீதம் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் சந்தையை விட்டே வெளியே போகவேண்டியது தான் என்ற நிலை!
விளையாட்டுப் பொருட்கள் விஷயத்தில் கொஞ்சம் வளைந்து கொடுத்திருக்கும் இந்திய அரசு இனி வரும் காலங்களில், சீனக் கூளங்கள் இந்தியாவில் குவிவதை சட்டரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முனைந்து தடுக்கும் வழிமுறைகளை மேற்கொண்டேயாக வேண்டும். 2008ல் காலாவதியான சீனப் பட்டு மீதான சுங்க வரியை அரசு மீண்டும் விதித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.
இன்றைக்கு இந்திய தொழில்துறை நிறுவனங்கள், உழைப்பாளிகள், பாட்டாளிகள், நுகர்வோர் என்று அனைவரையும் கடுமையாக பாதிக்கும் இந்த பிரசினை பற்றி அரசியல் கட்சிகள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக தங்களை இந்திய உழைக்கும் வர்க்கத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளூம் இடதுசாரிகள் இந்த விஷயத்தில் முற்றிலுமாக இந்திய சமூக நலன்களுக்கு எதிராகவும், சீன அடிவருடிகளாகவுமே நடந்து கொள்கிறார்கள் என்பது கண்கூடு.
வர்த்தகம் மட்டுமல்ல, அருணாசலப் பிரதேசத்தை தங்கள் பகுதி என்று பூடகமாக சொந்தம் கொண்டாடுதல், திபெத் போன்ற அரசியல் பிரசினைகளிலும் அதிகார விரிவாக்க விழைவை அப்பட்டமாக செயல்படுத்தும் சீனா என்கிற சர்வாதிகார நாடு இந்தியாவை துச்சமாக மதித்தே செயல்பட்டு வருகிறது.
அரசியல், ஊடகங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கடையிலும் சீன ஆக்கிரப்பின் கரங்களைப் பார்க்க நேரும் ஒரு சராசரி இந்தியன் மனதில் சீனாவைப் பற்றிய எத்தகைய அச்சமூட்டும் பிம்பம் உருவாகி வரும் என்பதை எண்ணிப் பாருங்கள். அது இன்றைய சீனாவுக்கு முற்றிலும் பொருந்துவதே.
நண்பர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு கணம் நெருப்புமிழும் டிராகன் கொடுங்கண்களுடன் வாலைச் சுழற்றிப் பாய்வது போல் தோன்றுகிறது. எதிரே கைகளை உயர்த்திக் கொண்டு சீன வாஸ்து பொம்மை ஒரு அர்த்த புஷ்டியுடனான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: இந்தியா, உழைக்கும் மக்கள், சட்டம், சீனா, சுற்றுச்சூழல், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், வறுமை
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
25 March 2009 at 9:07 pm
இவை மட்டுமல்ல பாகிஸ்தான் மூலம் நமக்கு ஏதாவது பிரச்சனை உண்டாக்கிகொண்டே இருப்பது, அனுசக்தி ஒப்பந்தத்திற்கு நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இல் நமக்கு எதிராக செயல்பட்டது, உறவாடி கொண்டே முதுகில் குத்தியது என சீனாவின் கைங்கரியங்களை அடுக்கி கொண்டே போகலாம். பாகிஸ்தானையாவது நம்பலாம், ஆனால் நன்பன் போல் இருந்து நயவஞ்சகம் புரியும் சீனாவை நம்பவே கூடாது.