ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?

அவர் ஓர் அரசாங்க அதிகாரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொத்தையடி என்கிற சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள உழவர்களின் சுய உதவிக் குழு விழா ஒன்றில் பங்கேற்க அவரைக் காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார் நண்பர். ஒரு சிறு குன்றைச் சுற்றிச் செல்லும் தார் ரோடு. அந்தக் குன்று மட்டும் அங்கே கல்பாறை உடைப்பவர்களால் பாழ்படுத்தப்படாமல் நின்று கொண்டிருப்பது பார்க்கும் எவருக்கும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். மற்ற குன்றுகளெல்லாம் பாறை உடைக்க பட்டா போட்டு கொடுக்கப்பட்டுவிட்டன. பல குன்றுகள் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தக் குன்று மட்டும் பசுமையாக. அந்த அரசாங்க அதிகாரியிடம் உடன் சென்றவர் சொன்னார், “இந்த மலைக்குன்றுக்கு மருத்துவாழ் மலை என்று பெயர். அனுமார் சிரஞ்சீவி மலையைக் கொண்டு வந்தபோது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும் அதுதான் இந்த குன்று எனவும் ஐதீகம்.” அரசு அதிகாரியின் புருவங்கள் நெரிந்தன, “நம்மாளுங்க என்ன கதை விட்டாலும் நம்பிடுவாங்க பாருங்க, முட்டாப்பசங்க.”

mm

இந்தச் சின்னக் குன்றில் மட்டும் 113 மருத்துவப் பயன்பாடுள்ள தாவர இனங்கள் (species) இருப்பதாக தாவரவியலாளர்கள் கணக்கிடுகின்றனர், இதில் எட்டுத் தாவரங்கள் மிக அதிக அளவில் அக்கம்பக்கத்து கிராமங்களில் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வட்டார மருத்துவம் நிறுவனப்படுத்தப்பட்ட இந்தியப் பாரம்பரிய மருத்துவ அமைப்புகளில் கூட இன்னும் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்த ‘முட்டாப் பசங்க நம்பக்கூடிய கதை’யால் இந்தச் சிறுகுன்று மூலிகைத் தாவரங்களின் கருவூலமாகவே திகழ்கிறது. இத்தகைய ‘முட்டாள்தனமான கதைகள்’ இந்த பழமையான நாடெங்கும் நிரம்பி வழிகின்றன. இந்தக் கதைகளால் பல விலங்கினங்களும் தாவர இனங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த முட்டாள்தனமான கதைகளால் இந்த தேசத்தின் மருத்துவ செலவு கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில். ஆனால் இன்றைய கல்வி முறையில் நவீன நகர்ப்புற குடும்பச் சூழல்களில் நடப்பது என்ன? பெப்ஸி முதல் அடிடாஸ் வரை நூற்றுக்கணக்கான வர்த்தக போகப் பொருட்களைத் தெரிந்து வைத்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்களது சுற்றுவட்டாரத்தில் வளரும் தாவரங்கள் ஐந்தின் பெயரை கேட்டால் தெரியாது. நாம் கதைகளை இழக்கும் போது கூடவே பலவற்றையும் இழந்து வருகிறோம்.

உலகப் பண்பாடுகளில் இந்த தேசத்தின் பண்பாட்டில்தான் புராணக்கதைகளுக்கு நேரடியான பொருள் கூறி அறிவியலுக்கு எதிரானதோர் இயக்கமாக அதனை மாற்றும் போக்கு இல்லை. இங்கு ஒரு அடிப்படைவாதத் தன்மை கொண்ட படைப்புவாதிகள் இல்லை. ஏனெனில் இங்கு புராணம் அல்லது தொன்மம் தனக்கென்று ஓர் உட்பொருள் கொண்டதாக இருக்கிறது. அதன் புறத்தன்மை என்பது ஏதாவது ஒரு இயற்கைக்குப் புனித அரணாக மட்டுமே ஏற்படுகிறது. புறவயமான நேரடி யதார்த்தமாக அது பொருள்படுவதே இல்லை. ஒரு இயற்கையான அமைப்பு (மலைக்குன்றோ மணல்மேடோ), ஒரு செடி (துளசியோ வில்வமோ), ஒரு விலங்கு (பசுவோ சர்ப்பமோ) என்று இவையெல்லாம் புனிதத்தன்மை பெறுகின்றன. இந்தப் புனிதத்தன்மை மனித வாழ்வோடு அதனை இசையச் செய்கிறது. பசுவுடன் இந்தப் பண்பாட்டுக்கு ஏற்பட்ட உறவு இன்று சுற்றுச்சூழலுடன் இணைந்த விவசாயத்துக்கும், வளங்குன்றா மாற்று எரிசக்திக்கும் வழி வகுத்துள்ளது ஓர் உதாரணம் மட்டுமே. மஞ்சளும் வேம்பும் துளசியும் என இதனை தேசமெங்கும் விரித்துக்கொண்டே போகலாம். மானுடத்தை இயற்கைக்கு மேலான ஒரு ஆக்கிரமிப்புச் சக்தியாக நம் பண்பாடு பிரகடனப்படுத்தவில்லை. மாறாக உயிர்வலை பின்னும் இப்பூகோளத்தின் பரிணாம நெசவுத்தறியில் ஓர் இழையே மானுடம்.

இந்தக் கதைகளை கேட்டு முகஞ்சுளிக்க அல்லது மேதாவித்தனத்துடன் தோள் குலுக்க நாம் எப்போது பழகிக் கொண்டோம்? காலனியமும் ஆபிரகாமியமும் இணைந்து ஒரு போலிப் பகுத்தறிவை நம்முள் கொண்டு வந்த காலகட்டத்திலிருந்து என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. இது பகுத்தறிவல்ல. சுந்தர ராமசாமி சொல்லுவது போல மாமல்லபுர யானையைப் பார்த்தால் எத்தனை அம்மிக்கல் தேறும் என்று பார்க்கிற குணம். வெள்ளைக்காரன் புராணம் இல்லாததால்தான் முன்னேறினான். அவனது மதம் முன்னேற்றத்துக்கு உதவியது, நமது மதம்தான் நம்மைக் கீழான நிலைக்குத் தள்ளியது என நினைக்கும் வரலாற்றறிவற்ற மலினப் பார்வை. இதனோடு கூடவே “நாமும் வெள்ளைக்காரன் போலப் பகுத்தறிவாளனாக இருந்தோம் ஆரியர்கள் வந்து நம்மை ஏமாற்றிவிட்டார்கள் இந்த மதநம்பிக்கைகள் எல்லாம் அவர்கள் நுழைத்ததுதான் என்கிற சதிக் கோட்பாடு. காலனிய ஆட்சியாளர்களும், மதப்பிரச்சாரகர்களும் சந்தோஷமாக இந்த மலினப் பார்வையைப் பரப்பினார்கள். எப்படியோ இந்தியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தால் போதும் அவர்களுக்கு.

இது எத்தனை தவறானது என ஐரோப்பிய வரலாற்றை, குறிப்பாக அவர்களது புத்தெழுச்சிக் கால வரலாற்றை, பார்த்தால் அறிந்து கொள்ளலாம். ஐரோப்பியப் புத்தெழுச்சி என்பது ஆபிரகாமிய மதத்தையும் மத நிறுவனத்தையும் புறக்கணித்து கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனியத் தத்துவங்களையும் உலகப்பார்வைகளையும் மீள்கொணர்ந்த போதுதான் உருவாயிற்று. லியனர்டோ டாவின்ஸி முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஆபிரகாமியத்தின் ஆளுமைகொண்ட தேவன் (Personal God) எனும் நம்பிக்கையை மறுத்திருப்பதைக் காணலாம். ஸ்பினோஸா, வோர்ட்ஸ்வோர்த் தொடங்கி ஹைஸன்பர்க் வரையாக இயற்கை அனைத்திலும் உறையும் இறையினை (pantheist God) – அதன் அடிப்படையில் உலகையே புனிதமாக காணும் ஒரு புனிதப்பார்வையை தங்கள் தத்துவத்திலும், கவிதையிலும் அறிவியலிலும் தேடினர். நீங்கள் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய மதபோதகர்கள் இந்தியாவைக் குறை சொல்லி எழுதிய பிரச்சாரங்களை படித்தால் இந்து தருமம் pantheism எனும் “பேய்க் கோட்பாட்டை” பாதுகாத்து வருவதாகவும் அதுவே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும் கூறுவதை காணலாம். இதையே நம் போலிப் பகுத்தறிவாளர்களும் பகுத்தறிவின்றி ஏற்றுக்கொண்டனர்.

பாரதமெங்கும் விரிந்து பரந்து கிடந்த இத்தகைய தொன்மக் கதைகள் சூழலியலைப் புனிதப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல இவை ஒரு இறையியல் திட்டத்துடன் முன்வைக்கப்படுவதில்லை. இயற்கையின் மீது ஏற்படும் வழிபாட்டுணர்வை ஒரு சாஸ்வதமான கதையாகக் கட்டமைக்கும் அழகியல் வெளிப்பாடே இந்தக் கதைகள்

அரசு அதிகாரியை மூடநம்பிக்கை என முகம் சுளிக்க வைத்த அந்தக் கதையை – அனுமான் கொண்டு சென்ற சஞ்சீவி பர்வதத்திலிருந்து விழுந்த சிறுகல் மருத்துவாழ் மலையானதை – நான் என் பாட்டியிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக என் பேரனுக்கோ பேத்திக்கோ அந்தக் கதையை நான் சொல்லுவேன். குன்றுகளை உருவாக்கும் நிலவேதிப் பரிணாம இயக்கங்களை அவர்கள் மிகநன்றாக அறிந்திருக்கக் கூடும். ஆனால் இந்த கதைகளால் அந்த குன்றுக்கு கிடைக்கும் புனிதத்துவ அரண், என்றென்றைக்கும் மருத்துவத் தாவர இனங்களை அக்குன்றில் காக்கும். நாளைக்கு ஏதோ ஒரு ஊழல் அரசியல்வாதியின் பினாமி கம்பெனிக்கு இலாபம் கிடைக்கும் என்பதற்காக இந்தக் குன்றும் பாறை உடைப்புக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்படும் தருணம் வந்தால் இந்தக் கதை அந்தக் குன்றையும், அதிலிருக்கும் 113 மருத்துவச் செடியினங்களையும் காப்பாற்றும். மருத்துவாழ்மலை மருந்துகள் வாழும் மலையாகவே இருக்கும்.

மனிதர்களாகிய நாம் கதைசொல்லி ஜீவன்கள். அவ்வாறு நாம் இருப்பதற்கு வலுவான பரிணாம காரணங்கள் இருக்கும். அதனைக் கவித்துவமாகச் சொல்லும் ஒரு யூதப் பழமொழி: ’கடவுள் ஏன் மனிதர்களை படைத்தார் என்றால் அவருக்கு கதைகள் ரொம்ப பிடிக்கும்.’

(மருத்துவாழ்மலை குறித்து அதிகத் தாவரவியல்- உயிரிபன்மை அடிப்படையில் தெரிய விரும்புவோர் நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் Dr.B.பார்த்திபன் எழுதிய Biodiversity of medicinal plants of the Marunduvalmalai Hills, Kanyakumari District என்னும் கட்டுரையை [(p.305) in Biodiversity in Indian Scenarios (Ed. N. Ramakrishnan) Daya books 2006] படிக்கவும்.)

21 Replies to “ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?”

  1. அருமையான கட்டுரை. இத்தகைய கதைகள் நம் இயற்கைச் சூழலை பாதுகாட்டதோடு மட்டுமல்ல, மக்களின் சமயத்தை, கலாசாரத்தை, அவர்களது உலகப் பார்வையை தங்கள் மண்ணுடன் பிணைத்தன.

    அதனால் தான் உலகெங்கும் நிறைந்த பரம்பொருளை “திருவொற்றியூரா, திருவாலவாயா, திருவாரூரா” என்று தங்கள் ஊர்க்காரனாக நம் சமயக் குரவர்களால் அழைக்க முடிந்தது. இந்த மலைகள், மரங்கள், நதிகள் அவை நிற்கும் நிலை இவை அனைத்தும் இணைந்தே “பாரத் தாய்” என்கிற சமூக, கலாசார படிமம் உருவாகிறது. “ஸுஜலாம், ஸுபலாம், மலஜய சீதலாம் ‍.. வந்தே மாதரம்” என்று தேசியத்தின் இதய நாதமாக வெளிப்படுகிறது.

  2. மிக அருமையான தெளிவான கருத்துக்கள்.

    ‘எனக்குப் புரியாததெல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டால், நான் பேர‌றிஞர் ஆகிவிடலாம்’ என்ற ‘உயரிய’ கோட்பாடே இந்த தேசத்தில் ‘பகுத்தறிவு’ எனப் புகழப்படுகிறது.

    நம் முன்னோர் சொன்னதை ‘முட்டாள் தனமாகப்’ பின்பற்றுபவனே உண்மையில் அறிஞன் என்பதைக் காலம் உணர்த்தும்.

  3. துரதிர்ஷ்ட வசமாக அரசு நிறுவனங்களில் பனிபுரியும் பலருக்கு தங்களது துறைகுறித்த அறிவுகூட கிடையாது என்பது அவர்களை சந்தித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். இவர்களை நம்பி இதுபோன்ற குன்றுகளும், மலைகளும், இருக்கின்றன.

    குறைந்தபட்சம் நமது அடுத்த தலைமுறையினருக்கு நமக்குத் தெரிந்ததையாவது சொல்லிச் செல்ல வேண்டும்.. இல்லையெனில் இயற்கை மருத்துவம் என்ற ஒன்று வெளிநாட்டுக்காரர்களால் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு, நமக்கு மீண்டும் புதுப்பொலிவுடன் உயர்தர கவரில் இட்டு நமக்கே பத்து மடங்கு அதிக விலையில் விற்கப்படும்.

    நல்ல அருமையான கட்டுரை.

  4. Thank you AN ji for this great article. You have covered quite a few things in a subtle way. This needs to be told to create awareness. Otherwise, some day we will lose this மருத்துவாழ் மலை as it could be renamed as ‘Peter Hills’ or ‘Basha Mountain’ to appease the ‘so called’ minorities, just like St. Thomas mount and Hindus might not have access to it.

    Mr. Jayakumar has rightly pointed out. That’s exactly happened with our தோப்புக்கரணம். Now this is known as Superbrain Yoga®. When we do thoppukkaranam, it’s supersitition, when they repackage it, it’s Super Brain Yoga! See the video below.Like Yoga, Ayurveda, Pranayama, Bharatanatyam, now thoppukkaranam also theirs! As children, we used to do தோப்புக்கரணம் as sort of punishment, now we need their permission to do it in front of Ganesha?

    https://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
    Superbrain Yoga®.

  5. அரவிந்தன்,
    தொடர்ந்து நல்ல கருத்துகளை வெளிப்படுத்தி மிக உபயோகமான அறிவு ஜீவியாக இருப்பது எப்படி என்று காட்டுகிறீர்கள். இந்தக் கட்டுரை எனக்கு மிகப் பிடித்த தலைப்பை எடுத்து ஆள்வதால் இன்னமும் கூடுதலாகவே என்னால் உங்கள் செயலை மெச்ச முடிகிறது. இந்த வகைக் கட்டுரை பத்து லட்சம் பேர் படிக்கும் ஊடகங்களில் வெளிவ்ந்து மக்களிடம் பெரும் உத்வேகத்தையும் செயலூக்கத்தையும், தம் பர்ரதப் பாரம்பரியத்தை அணுகும் வித்த்தில் ஆர்வம் கலந்த ஆழத்தையும் கொணரும் நாளை நான் மிக எதிர்பார்க்கிறேன்.
    தொடர்ந்து உங்கள் இயக்கம் மக்களைச் செழுமைப் படுத்தட்டும்.
    நன்றி.

  6. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு

    நம் பகுத்தறிவுப் பாசாங்குகள் நம் பாரம்பரியத்த அழிக்காமல் ஓயப் போவதில்லை. இருந்தாலும் உங்கள் கட்டுரை இன்னமும் அறியாமையில் மூழ்கி திராவிட மாயையில் அழுந்திக் கிடக்கும் ஒரு சிலரின் கண்களையாவது திறக்குமானால் அதுவே வெற்றிதான். ராஜபாளையத்தில் இருக்கும் சிறிய மலைக்கும் சஞ்சீவி மலை என்றுதான் பெயர். இது போல பல இடங்களிலும் இருக்கும் குன்றுகளுக்கு அனுமன் எடுத்துச் செல்லும் போது விழுந்த துண்டுகள் என்ற கதை வழங்கப் படுகிறது. அவை போன்ற நம்பிக்கைகள் மக்களிடம் பக்தியுணர்வைத் தூண்டும், அந்த பக்தியுணர்வு அதே மக்களுக்குத் தேவையான இயற்கைச் செல்வங்களை அழிவில்லாமல் வழங்க உறுதுணையாக இருக்கும் என்ற நற்சிந்தனையில் தோன்றியவைகளே. தமிழ் நாட்டில் பல குன்றுகளும் பேராசை பிடித்த மார்பிள் மாஃபியா கும்பல்களால் தொடர்ந்து 24 மணி நேரமும் அழிக்கப் பட்டு வருகின்றன. நம் அடுத்த தலைமுறைக்கு நாம் பாழைடந்த பாலைவனம் ஒன்றை மட்டுமே விட்டுச் செல்லப் போகிறோம். எப்படியும் பாலைவனம் ஆகப் போகிறது அங்கு நம் மதம் வளரட்டும் என்று ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் வேறு காத்துக் கொண்டிருக்கிறது. நம் பிள்ளைகளின், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கடும் அச்சமே சூழுகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருங்கள். எச்சரிக்காமல் இருந்து விட்டார்களே என்ற அவப் பெயராவது இல்லாமல் போகும்

    மலையின் மீது பறக்கும் அனுமன் உருவம் அற்புதமான இணைப்பு. இந்த மலையை நான் நாகர்கோவில் செல்லும் பொழுது கவனித்திருக்கிறேன், அதன் பெருமையை இன்று அறிந்து கொண்டேன் நன்றி

    நன்றியுடன்
    விஸ்வாமித்ரா

  7. //நம் அடுத்த தலைமுறைக்கு நாம் பாழைடந்த பாலைவனம் ஒன்றை மட்டுமே விட்டுச் செல்லப் போகிறோம். எப்படியும் பாலைவனம் ஆகப் போகிறது அங்கு நம் மதம் வளரட்டும் என்று ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் வேறு காத்துக் கொண்டிருக்கிறது. நம் பிள்ளைகளின், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கடும் அச்சமே சூழுகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருங்கள். எச்சரிக்காமல் இருந்து விட்டார்களே என்ற அவப் பெயராவது இல்லாமல் போகும்//
    கொடுமையான வார்த்தைகள் விஸ்வாமித்ரா…ஆனால் யதார்த்தமான வார்த்தைகள் என்பதனால்தான் முதுகுதண்டு சில்லிடுகிறது. ஒரு சுதந்திர நாட்டை கஷ்டப்பட்டு பெற்று மதவெறியாளர்களிடம் தாரைவார்த்து கொடுக்கப் போகிறோம். அதற்கு தரகு வேலை பார்ப்பவர்கள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என சொல்லி பகுத்தறிவையே களங்கப்படுத்துகிறார்கள்.

  8. பார்த்தசாரதி இந்த சூப்பர்பிரெய்ன் யோகாவை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். அடக்கடவுளே….இதனை இவர்கள் பாட்டெண்ட் செய்கிறார்களா என பார்க்கவேணும் பார்த்து இதனை நாம் மீட்க வேண்டும். நாம் என்றால் நாம்…நாம் இணைந்து இந்து இயக்கங்களுடன். இது குறித்து நீங்கள் மற்றும் அமெரிக்காவாழ் தமிழ் இந்துக்கள் அதிகம் தரவுகளை திரட்டி தந்தால் நிச்சயமாக தமிழ் இந்து.காம் களமிறங்கும் தமிழ் இந்துக்களின் வழிபாட்டு மரபுரிமை காக்க.

  9. அ.நீ. அவர்களுக்கு மிக்க நன்றி. மிக நல்ல கட்டுரை. ராம‌ர் பால‌த்தை இடிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் இதுதான்; ‘என‌க்கு ந‌ம்பிக்கை இல்லாத, முட்டாப் பசங்க க‌தை’ என்ப‌தே.

    ஏன் இந்த‌ ச‌ஞ்சீவி ம‌லை, ம‌ஞ்ச‌ள், துள‌சி இதையெல்லாம் ம‌ட்ட‌ம் த‌ட்ட‌றாங்க‌ன்னா, நாம‌ ம‌ற‌ந்த்துட்டொம்னா இவ‌ங்க‌ க‌ண்டு பிடிப்பா பேட‌ன்ட் ப‌ண்ணி பார்ம‌ஸில‌ விக்க‌லாம் இல்ல அதுக்குத்தான். ந‌ம்ம‌ள‌ உர‌ம், பூச்சிக்கொல்லி உபயோக‌ப‌டுத்த‌ சொல்லிட்டு இவ‌ங்க‌ ஆர்கானிக் ஃபுட் ‍க்கு மாறின‌ மாதிரி.

  10. நமது கதைகளுக்குப் பின்னால் நமது கதை இருக்கிறது.

    நாம் பிறந்து, வளர்ந்து, மறைந்து போவதற்கு இடையில் நடத்தும் வாழ்க்கையின் பலன், சத்து, கதையாக நீடித்து மற்ற உயிரினங்களுக்கு உரமாகிறது.

    கதை வெறுக்கும் சமூகம் உரமற்று உளுத்துப் போகிறது.

    நன்றி அரவிந்தன்.

  11. அநீ ஐயா,

    நன்றாகச்சொல்லுங்கள். அப்போதாவது நமக்கு உரைக்கிறதா என்று பார்க்கலாம்!

    நான் தாத்தாவோடு கை பிடித்து வயக்காட்டுக்கு நடக்கும்போது எல்லாமே புனிதம்தான். வயக்காட்டில் செருப்பு போட்டு போகக்கூடாது. பச்ச மரத்தை கிளையை ஓடிக்கக் கூடாது, ஆத்துல எச்சி துப்ப கூட கூடாது என்பாருங்க. இப்போ பாருங்க, அதே வயக்காட்டுல ராவுல எல்லா கண்றாவியும் நடக்குது. ஆத்துக்கரையோரம் எல்லாம் மூக்கைப் பிடிச்சு ஓட வேண்டியதாய் இருக்கிறது. நம் சுற்றுச்சூழலைக் காப்பாத்தி வந்த அந்த “பேய்தத்துவம்” தாங்க. இதில சந்தேகமே இல்லைங்க.

  12. அய்யா,
    மருந்துவாழ் மலை, குமரிமாவட்டத்தின் ஆன்மீகத்தின் அடையாம். மாதம் ஒருமுறை தவறாமல் சென்று மலை உச்சியிலிருக்கும் கருவறையின்றி, தள்ளினில்லுய்யா என்ற குரல்களின் தொல்லையின்றி கிருஷ்ணனை கண்குளிர தரிசிக்கலாம். குமரியின் அழகே தனி அதைக்காண தலையின் நாற்ப்புறமும் கண்கள் வேண்டும். அங்கிருந்து வடகிழக்கே பார்த்தால் தேவேந்திர பொற்றை தெரியும். இந்திரன் தவம் செய்த மலை. அங்கே அவனுக்கு ஒரு கோயிலும் உண்டு. அபாயகரமான படிகளினூடெ தவழ்ந்து செல்லவேண்டும்.

    நன்று, முறையான பூசைகளோ, பூசாரிகளோ, பாரம்பரியக்கதைகளை எடுத்துச்சொல்ல இயக்கங்களோ இல்லை.

    மேலும் கிரிவலம் ஒன்றை ஆரம்பித்தோம், பவுர்ணமி தோறும் நடக்கிறது. ஆனால்…. இரு சாதிக்காரர்கள்???? அல்ல இரு குளுக்களாக இப்போது வலம் வருகிறார்கள். அந்த இரு இனத்தை சேராததால் என்னால் தனிக்குளு அமைக்க முடியவில்லை.

    கிரிவலம் மாதந்தோறும் தவறாமல் நடக்கிறது.

    அன்புடன் பாலாஜி……

  13. எல்லோரின் கருத்துக்களையும் படித்து அதில் சூபர் ப்ரெய்ன் யோகா வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சீனர்களும், அமெரிக்கர்களும் விஷத்தைக் கூட விற்பதில் வல்லவர்கள். தங்கத்துக்காகவே (gold rush ) அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கிருந்த செவ்விந்தியர்களை படுகொலை செய்தவர்கள். எதையும் திருடக் கூடியவர்கள். அதே சமயத்தில் நாம்தான் இதற்கெல்லாம் காரணம் . ஒரு ABCD டாக்டர் யோகா பைத்தியக்காரத்தனம் என்று அமெரிக்கச் சேனலில் கூறினார் . இப்படி நாமே தப்பெண்ணத்துடன் இருந்தால் வேறென்ன நடக்கும்.

  14. அன்புள்ள அ.நீ.

    வணக்கம். அருமையான கட்டுரை. 1979ல், போக்குவரத்து வசதி சரியில்லாத காலத்தில், பொத்தையடியிலிருந்து வயல் வெளிகளின் ஊடே நெடுக நடந்து சென்றிருக்கிறேன். மருத்துவ மலை இன்றும் நிலைத்திருப்பது, அந்தப் புராண “மூட நம்பிக்கை”யால்தான்! இன்னொரு தகவல். சீன அரசு, திருக்கயிலையை மலையேற்றத்திற்காகத் திறந்துவிடத் தயாரானது! “மூட நம்பிக்கை” கொண்ட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மலையேற்ற நிபுணர்களின் பேரில்தான் அது கைவிடப்பட்டது. ‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்,’ என்றான் பாரதி. இருக்கட்டும், சனாதன தர்மம் என்னும் அருள் மலை இந்த எலிகளால் புரண்டுவிடாது!

    ரமணன்

  15. height of superstition is to believe Hinduism is based on superstition!
    sathianarayanan

  16. அருமை! நமது பெருமைகளை நாமே உணராமல் இருந்தால் குழந்தைகளுக்கு எப்படி சொல்லித் தர முடியும்! தமிழ் ஹிந்து வழியாக பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்! எத்தனை நன்றி சொல்ல! எல்லா நண்பர்களையும் தமிழ் ஹிந்துவை படிக்க வைத்தாலே பல பேரைச் சென்று அடையும் பல விஷயங்கள்! நன்றி!

  17. ‘We did not inherit this environment from our forefathers, but rather we borrowed it from our children’

  18. இங்கே பல்லாவரம் அருகில் கிட்டத்தட்ட அனேக மலைகள் உடைக்கப்பட்டு கல்லாக பின் ஜல்லியாக மாறி விட்ட நிலையில் திருநீர் மலையும் திரிசூல மலையும் தப்பித்துள்ளது. சிவன் மலையாய் இருந்து தாமசாகி விட்ட தாமஸ் மலையும் தான். திருநீர் மலைக்கு அருகில் வெடி வைத்து உடைக்கும் முயற்சியில் கோவிலில் விரிசல் விழுவதாகக் கூறி புகார்கள் கூட எழுந்தன.
    நான் நம் மூட நம்பிக்கைகளை தொடர்ந்து காப்போம். அதை எல்லா மட்டத்திலும் பரப்புவோம்.
    அண்ணாமலையும், பர்வதமலையும், வெள்ளை யன்கிரியும் , சதுரகிரியும் குற்றால மலையும் இன்னும் அனைத்து மலையும் மரங்களும் ஆறுகளும் குறித்த அனைத்துக் கதைகளையும் வெளியிடுங்கள்.

    இன்றைக்கு வேம்பும் வில்வமும் ஆழமும் அரசும் கொஞ்சமேனும் தப்பிதிருக்கின்றன. வழக்கமாக பேய் மரமாக அறியப்படும் ஒரு புளிய மரத்தின் கதையில் புளிய மரத்தை அம்மன் ஆக்கி கொஞ்ச காலம் காத்த நிகழ்வு வரும். பேயோ தெய்வமோ மரம் பிழைத்தால் சரி.
    முன்னே எல்லாம் வேம்புக்கு பாவாடை கட்டியிருந்தால் சிரிப்பேன். வேம்பின் மகத்தான மருத்துவக் குணம் புரிந்த பின் அதை வரவேற்கிறேன்.

  19. There is NO question that we should know about the medicinal values of plants present in that particular mountain…I too agree that we should make use of those herbs and a scientific research has to be done so that we can cure many diseases which dont have cure now if it is possible. But here the discussion is it true that “The mountain was created because of a small rock fell from the big mountain hanuman was carrying ???” ….What sense this makes ??? Its absolute nonsense ….. Let us use the herbs for medicine but also come out of supersitious belief that Hanuman droped this mountain…Which is an absolute nonsense statement…

  20. Jenil

    thank you so much for your reponse and idea. Your deep understanding of what A.Nee has written really impressed me.

    i will immediately go to post office and send telegarms to all asking them to drop this story about a rock falling from Shri Hanuman’s hand or i will start an indefinite fast from August 19th (சனிக்கிழமை -சனிப் பொணம் தனியா போகாதுன்னு சொல்வாங்க) demanding one and all to forget this story (erase from the mind). if they still can’t forget, i will ask that they should operate their brain and remove the memory cells.

    I hope you will be pleased with my action.

    உங்களது படிப்பறிவை நினைத்து நினைத்து உளம் நெகிழ்கிறேன், பூரிப்பு அடைகிறேன், மயிர் கூசுகிறது போங்கள்.

    அடுத்த ஐடியா செல் போன் விளம்பரம் நீங்கள் சொன்ன இந்த கருவை வைத்துதான் எடுக்க பட வேண்டும் என்று அபிசேக் பச்சனுக்கும் சொல்லிவிடுகிறேன்.

  21. Jenil
    What you say is correct indeed. Albeit, our ancestors are intelligent enough. They don’t say stories for the sake of it. Even if we go by the disbelief that Hanuman dropped a part of the Sanjeevani mountain (I personally do not buy that story because I have heard and read at least about 10 such mountains that Hanuman dropped. What else did He take back then?) The puranas are not to be taken literally. If we look at it, they have carefully carried forward the truth about the medicinal values of such mountains through folklore. Everyone who read Ramayana knows that Sanjeevani is a mountain of herb. How effectively can you link it with the currently existing mountains of herbs? Simply by stories. The experts of memory and brain tuning vouch for this method because any story deepens the idea conveyed. So,
    Hanuman dropping part of Sanjeevani (a mountain of herbs) can be easily equated to the present ones. Any kid will say “so this mountain contains valuable herbs that we must protect”.

    Any better way of carry-forward than stories, anyone?

    Regards,
    Admin
    GnanaBoomi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *