ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?
அரவிந்தன் நீலகண்டன்
10 Mar 2009 |
அச்சிட
அவர் ஓர் அரசாங்க அதிகாரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொத்தையடி என்கிற சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள உழவர்களின் சுய உதவிக் குழு விழா ஒன்றில் பங்கேற்க அவரைக் காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார் நண்பர். ஒரு சிறு குன்றைச் சுற்றிச் செல்லும் தார் ரோடு. அந்தக் குன்று மட்டும் அங்கே கல்பாறை உடைப்பவர்களால் பாழ்படுத்தப்படாமல் நின்று கொண்டிருப்பது பார்க்கும் எவருக்கும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். மற்ற குன்றுகளெல்லாம் பாறை உடைக்க பட்டா போட்டு கொடுக்கப்பட்டுவிட்டன. பல குன்றுகள் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தக் குன்று மட்டும் பசுமையாக. அந்த அரசாங்க அதிகாரியிடம் உடன் சென்றவர் சொன்னார், “இந்த மலைக்குன்றுக்கு மருத்துவாழ் மலை என்று பெயர். அனுமார் சிரஞ்சீவி மலையைக் கொண்டு வந்தபோது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும் அதுதான் இந்த குன்று எனவும் ஐதீகம்.” அரசு அதிகாரியின் புருவங்கள் நெரிந்தன, “நம்மாளுங்க என்ன கதை விட்டாலும் நம்பிடுவாங்க பாருங்க, முட்டாப்பசங்க.”

இந்தச் சின்னக் குன்றில் மட்டும் 113 மருத்துவப் பயன்பாடுள்ள தாவர இனங்கள் (species) இருப்பதாக தாவரவியலாளர்கள் கணக்கிடுகின்றனர், இதில் எட்டுத் தாவரங்கள் மிக அதிக அளவில் அக்கம்பக்கத்து கிராமங்களில் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வட்டார மருத்துவம் நிறுவனப்படுத்தப்பட்ட இந்தியப் பாரம்பரிய மருத்துவ அமைப்புகளில் கூட இன்னும் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்த ‘முட்டாப் பசங்க நம்பக்கூடிய கதை’யால் இந்தச் சிறுகுன்று மூலிகைத் தாவரங்களின் கருவூலமாகவே திகழ்கிறது. இத்தகைய ‘முட்டாள்தனமான கதைகள்’ இந்த பழமையான நாடெங்கும் நிரம்பி வழிகின்றன. இந்தக் கதைகளால் பல விலங்கினங்களும் தாவர இனங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த முட்டாள்தனமான கதைகளால் இந்த தேசத்தின் மருத்துவ செலவு கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில். ஆனால் இன்றைய கல்வி முறையில் நவீன நகர்ப்புற குடும்பச் சூழல்களில் நடப்பது என்ன? பெப்ஸி முதல் அடிடாஸ் வரை நூற்றுக்கணக்கான வர்த்தக போகப் பொருட்களைத் தெரிந்து வைத்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்களது சுற்றுவட்டாரத்தில் வளரும் தாவரங்கள் ஐந்தின் பெயரை கேட்டால் தெரியாது. நாம் கதைகளை இழக்கும் போது கூடவே பலவற்றையும் இழந்து வருகிறோம்.
உலகப் பண்பாடுகளில் இந்த தேசத்தின் பண்பாட்டில்தான் புராணக்கதைகளுக்கு நேரடியான பொருள் கூறி அறிவியலுக்கு எதிரானதோர் இயக்கமாக அதனை மாற்றும் போக்கு இல்லை. இங்கு ஒரு அடிப்படைவாதத் தன்மை கொண்ட படைப்புவாதிகள் இல்லை. ஏனெனில் இங்கு புராணம் அல்லது தொன்மம் தனக்கென்று ஓர் உட்பொருள் கொண்டதாக இருக்கிறது. அதன் புறத்தன்மை என்பது ஏதாவது ஒரு இயற்கைக்குப் புனித அரணாக மட்டுமே ஏற்படுகிறது. புறவயமான நேரடி யதார்த்தமாக அது பொருள்படுவதே இல்லை. ஒரு இயற்கையான அமைப்பு (மலைக்குன்றோ மணல்மேடோ), ஒரு செடி (துளசியோ வில்வமோ), ஒரு விலங்கு (பசுவோ சர்ப்பமோ) என்று இவையெல்லாம் புனிதத்தன்மை பெறுகின்றன. இந்தப் புனிதத்தன்மை மனித வாழ்வோடு அதனை இசையச் செய்கிறது. பசுவுடன் இந்தப் பண்பாட்டுக்கு ஏற்பட்ட உறவு இன்று சுற்றுச்சூழலுடன் இணைந்த விவசாயத்துக்கும், வளங்குன்றா மாற்று எரிசக்திக்கும் வழி வகுத்துள்ளது ஓர் உதாரணம் மட்டுமே. மஞ்சளும் வேம்பும் துளசியும் என இதனை தேசமெங்கும் விரித்துக்கொண்டே போகலாம். மானுடத்தை இயற்கைக்கு மேலான ஒரு ஆக்கிரமிப்புச் சக்தியாக நம் பண்பாடு பிரகடனப்படுத்தவில்லை. மாறாக உயிர்வலை பின்னும் இப்பூகோளத்தின் பரிணாம நெசவுத்தறியில் ஓர் இழையே மானுடம்.
இந்தக் கதைகளை கேட்டு முகஞ்சுளிக்க அல்லது மேதாவித்தனத்துடன் தோள் குலுக்க நாம் எப்போது பழகிக் கொண்டோம்? காலனியமும் ஆபிரகாமியமும் இணைந்து ஒரு போலிப் பகுத்தறிவை நம்முள் கொண்டு வந்த காலகட்டத்திலிருந்து என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. இது பகுத்தறிவல்ல. சுந்தர ராமசாமி சொல்லுவது போல மாமல்லபுர யானையைப் பார்த்தால் எத்தனை அம்மிக்கல் தேறும் என்று பார்க்கிற குணம். வெள்ளைக்காரன் புராணம் இல்லாததால்தான் முன்னேறினான். அவனது மதம் முன்னேற்றத்துக்கு உதவியது, நமது மதம்தான் நம்மைக் கீழான நிலைக்குத் தள்ளியது என நினைக்கும் வரலாற்றறிவற்ற மலினப் பார்வை. இதனோடு கூடவே “நாமும் வெள்ளைக்காரன் போலப் பகுத்தறிவாளனாக இருந்தோம் ஆரியர்கள் வந்து நம்மை ஏமாற்றிவிட்டார்கள் இந்த மதநம்பிக்கைகள் எல்லாம் அவர்கள் நுழைத்ததுதான் என்கிற சதிக் கோட்பாடு. காலனிய ஆட்சியாளர்களும், மதப்பிரச்சாரகர்களும் சந்தோஷமாக இந்த மலினப் பார்வையைப் பரப்பினார்கள். எப்படியோ இந்தியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தால் போதும் அவர்களுக்கு.
இது எத்தனை தவறானது என ஐரோப்பிய வரலாற்றை, குறிப்பாக அவர்களது புத்தெழுச்சிக் கால வரலாற்றை, பார்த்தால் அறிந்து கொள்ளலாம். ஐரோப்பியப் புத்தெழுச்சி என்பது ஆபிரகாமிய மதத்தையும் மத நிறுவனத்தையும் புறக்கணித்து கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனியத் தத்துவங்களையும் உலகப்பார்வைகளையும் மீள்கொணர்ந்த போதுதான் உருவாயிற்று. லியனர்டோ டாவின்ஸி முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஆபிரகாமியத்தின் ஆளுமைகொண்ட தேவன் (Personal God) எனும் நம்பிக்கையை மறுத்திருப்பதைக் காணலாம். ஸ்பினோஸா, வோர்ட்ஸ்வோர்த் தொடங்கி ஹைஸன்பர்க் வரையாக இயற்கை அனைத்திலும் உறையும் இறையினை (pantheist God) - அதன் அடிப்படையில் உலகையே புனிதமாக காணும் ஒரு புனிதப்பார்வையை தங்கள் தத்துவத்திலும், கவிதையிலும் அறிவியலிலும் தேடினர். நீங்கள் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய மதபோதகர்கள் இந்தியாவைக் குறை சொல்லி எழுதிய பிரச்சாரங்களை படித்தால் இந்து தருமம் pantheism எனும் “பேய்க் கோட்பாட்டை” பாதுகாத்து வருவதாகவும் அதுவே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும் கூறுவதை காணலாம். இதையே நம் போலிப் பகுத்தறிவாளர்களும் பகுத்தறிவின்றி ஏற்றுக்கொண்டனர்.
பாரதமெங்கும் விரிந்து பரந்து கிடந்த இத்தகைய தொன்மக் கதைகள் சூழலியலைப் புனிதப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல இவை ஒரு இறையியல் திட்டத்துடன் முன்வைக்கப்படுவதில்லை. இயற்கையின் மீது ஏற்படும் வழிபாட்டுணர்வை ஒரு சாஸ்வதமான கதையாகக் கட்டமைக்கும் அழகியல் வெளிப்பாடே இந்தக் கதைகள்
அரசு அதிகாரியை மூடநம்பிக்கை என முகம் சுளிக்க வைத்த அந்தக் கதையை - அனுமான் கொண்டு சென்ற சஞ்சீவி பர்வதத்திலிருந்து விழுந்த சிறுகல் மருத்துவாழ் மலையானதை - நான் என் பாட்டியிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக என் பேரனுக்கோ பேத்திக்கோ அந்தக் கதையை நான் சொல்லுவேன். குன்றுகளை உருவாக்கும் நிலவேதிப் பரிணாம இயக்கங்களை அவர்கள் மிகநன்றாக அறிந்திருக்கக் கூடும். ஆனால் இந்த கதைகளால் அந்த குன்றுக்கு கிடைக்கும் புனிதத்துவ அரண், என்றென்றைக்கும் மருத்துவத் தாவர இனங்களை அக்குன்றில் காக்கும். நாளைக்கு ஏதோ ஒரு ஊழல் அரசியல்வாதியின் பினாமி கம்பெனிக்கு இலாபம் கிடைக்கும் என்பதற்காக இந்தக் குன்றும் பாறை உடைப்புக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்படும் தருணம் வந்தால் இந்தக் கதை அந்தக் குன்றையும், அதிலிருக்கும் 113 மருத்துவச் செடியினங்களையும் காப்பாற்றும். மருத்துவாழ்மலை மருந்துகள் வாழும் மலையாகவே இருக்கும்.
மனிதர்களாகிய நாம் கதைசொல்லி ஜீவன்கள். அவ்வாறு நாம் இருப்பதற்கு வலுவான பரிணாம காரணங்கள் இருக்கும். அதனைக் கவித்துவமாகச் சொல்லும் ஒரு யூதப் பழமொழி: ’கடவுள் ஏன் மனிதர்களை படைத்தார் என்றால் அவருக்கு கதைகள் ரொம்ப பிடிக்கும்.’
(மருத்துவாழ்மலை குறித்து அதிகத் தாவரவியல்- உயிரிபன்மை அடிப்படையில் தெரிய விரும்புவோர் நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் Dr.B.பார்த்திபன் எழுதிய Biodiversity of medicinal plants of the Marunduvalmalai Hills, Kanyakumari District என்னும் கட்டுரையை [(p.305) in Biodiversity in Indian Scenarios (Ed. N. Ramakrishnan) Daya books 2006] படிக்கவும்.)
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
10 March 2009 at 1:17 pm
அருமையான கட்டுரை. இத்தகைய கதைகள் நம் இயற்கைச் சூழலை பாதுகாட்டதோடு மட்டுமல்ல, மக்களின் சமயத்தை, கலாசாரத்தை, அவர்களது உலகப் பார்வையை தங்கள் மண்ணுடன் பிணைத்தன.
அதனால் தான் உலகெங்கும் நிறைந்த பரம்பொருளை “திருவொற்றியூரா, திருவாலவாயா, திருவாரூரா” என்று தங்கள் ஊர்க்காரனாக நம் சமயக் குரவர்களால் அழைக்க முடிந்தது. இந்த மலைகள், மரங்கள், நதிகள் அவை நிற்கும் நிலை இவை அனைத்தும் இணைந்தே “பாரத் தாய்” என்கிற சமூக, கலாசார படிமம் உருவாகிறது. “ஸுஜலாம், ஸுபலாம், மலஜய சீதலாம் .. வந்தே மாதரம்” என்று தேசியத்தின் இதய நாதமாக வெளிப்படுகிறது.