மகான்களின் வாழ்வில்-11: ஸ்ரீ சக்கரத்தம்மாள்

எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது.

திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது.

அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை. அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.

ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா. அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்து விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார்.

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு)

அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார். தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.

பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அதுதவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.

அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர். பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்படி டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. என்றும் நினைந்து போற்றத்தக்கது.

19 Replies to “மகான்களின் வாழ்வில்-11: ஸ்ரீ சக்கரத்தம்மாள்”

  1. மெய்ஞானம் பெறுவதற்கு பாலினம் தடைஇல்லை என்று நிருபித்தவர்கள் ஏராளம்.
    அன்று கோதை, மீரா,காரைக்காலம்மையார் ,அன்னை சாரதாதேவியார்,என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
    வடிவம் உடலுக்குத்தானே ஒழிய ஆன்மாவுக்கன்று.என்பதை உண்மையை உணர்ந்தோர் அறிவர்.

  2. நல்ல இடுகை திரு ரமணன் அவர்களே. நான் கோமளீஸ்வரன்பேட்டையில் தான் 20 ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறேன், இதுவரை அம்மாவை பற்றி கேட்டதில்லை, தகவலுக்கு நன்றி. தெரிந்தவர்களிடம் அவரை பற்றி கேட்கிறேன். நீங்கள் இரண்டு மூன்று முறை கோமளீஸ்வரன்பேட்டை, கோமளீஸ்வரர் என்று குறிப்பிட்டுள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் அங்கு அதிக அளவு முஸ்லிம்கள் குடியேறி இப்பொழுது புதுப்பேட்டை என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும், தவிர அந்த் இடத்திற்கு என்று திருட்டு வண்டிகள் கிடைக்கும் இடம் என்று ஒரு ந்ல்ல பெயர் வேறு வந்துவிட்டது.

    நன்றி,
    ராம்குமரன்

  3. டாக்டர் எம் சி நஞ்சுண்டராவ் என்பது பலவிதங்களில் முக்கியமான பெயர். பாரதியின் நெருங்கிய நண்பர் என்ற விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறார். 1907 முதல் பாரதி ஆசிரியராகச் செயல்பட்ட ஆங்கில ஏடான ‘பால பாரதா‘வின் (‘பாலபாரதா அல்லது யங் இந்தியா‘ என்ற பெயரில் வெளியானே ஏடு) பதிவுபெற்ற அலுவலகத்தின் விலாசம்: குட்வின் அண்டு கம்பெனி, மயிலாப்பூர், சென்னை தெற்கு‘. இதுதான் நஞ்சுண்டராவின் மருந்துக்கடையின் விலாசம். இதன் மாடியில்தான் பாலபாரதா அலுவலகம் செயல்பட்டு வந்தது. பாரதி கடைசியாகக் குடியிருந்த திருவல்லிக்கேணி வீடும் நஞ்சுண்டராவுடையதுதான். (மைலாப்பூர் குளத்துக்கு எதிரில் உள்ள ‘சிவப்புக் கட்டடம்‍‍ [இப்போது இரு்க்கிறதா என்பது தெரியவில்லை] அந்தப் பக்கமாய் போனவர்கள் அனைவருடைய நினைவிலும் இருக்கும். அதுதான் அவருடைய வீடு.)

  4. நன்றி, பட்டாபிராமன், ராம்குமரன், ஹரிகிருஷ்ணன்

    பட்டாபிராமன்,
    //அன்று கோதை, மீரா,காரைக்காலம்மையார் ,அன்னை சாரதாதேவியார்,என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.//

    ஆம், அதுவன்றோ நம் இந்துமதத்தின் பெருமை. பெண்களை முக்காடு போட்டு மூலையில் அமர்த்தாமல் அவர்களுக்கு கலை, இலக்கியம், ஆன்மீகம் என அனைத்திலும் சம உரிமை தந்த மதம் இந்துமதம் தான்.

    ராம்குமரன்,

    //நீங்கள் இரண்டு மூன்று முறை கோமளீஸ்வரன்பேட்டை, கோமளீஸ்வரர் என்று குறிப்பிட்டுள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் அங்கு அதிக அளவு முஸ்லிம்கள் குடியேறி இப்பொழுது புதுப்பேட்டை என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.//

    ஆம், ஊர்களின் பழைய பெயர்கள் மறைந்து விட்டன. வேளச்சேரியின் பழைய பெயர் வேதசிரேணி. பரங்கிமலையும் அதை ஒட்டி உள்ள பகுதிகளும் அக்காலத்தில் பிருங்கிமலை என்றும் பிருங்கிமாநகரம் என்றும் அழைக்கப்பட்டன. தற்போது யாருக்காவது தெரியுமா… இதுபோன்று காலமாற்றத்தால், விஷமிகளின் திரிபால் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் தி.நகர் என்று கூப்பிடக் கூடாது, கே.கே. நகர் என்று கூப்பிடக் கூடாது. முழுப் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்றெல்லாம் அறைகூவல் விடுக்கின்றனர்.

  5. ஹரிகிருஷ்ணன் அய்யா, தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

    நீங்கள் சொல்வது போல் டாக்டர் நஞ்சுண்டராவ் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன.மைசூரில் பிறந்து வளர்ந்த டாக்டர் நஞ்சுண்டராவ் ஆங்கிலேய அரசாங்கத்தின் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். அவர்களின் சட்ட திட்டங்கள் நியாயத்திற்குப் புறம்பானது என்று கருதி தன் பதவியைத் துறந்தவர். தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர்.மயிலையில் உள்ள வள்ளுவர்-வாசுகி கோயில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அவர்தான். அக்காலத்தின் பிரபலமான பல தமிழிலக்கியவாதிகளோடும் சுதந்திரப் போராட்ட வீரர்களோடும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களை ஆதரித்தார். விபின் சந்திர பால், பாரதியார், வ.வே.சு அய்யர், பி. ஆர். ராஜம் அய்யர், பட்டணம் சுப்ரமண்ய அய்யர் போன்ற சான்றோர்களின் அன்பிற்குப் பாத்திரமானவர். விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்று விட்டு இந்தியா திரும்பி வருகையில் அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பில் மிக முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் நஞ்சுண்டராவ். அவர் தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். அது எங்கு கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

  6. இந்தச் செய்திகளுக்கு நன்றி திரு ரமணன் .
    எனது சமீபத்திய நூல் ‘எஸ்.எம்.எஸ். எம்டன் 22/09/1914’ (பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) இப்படிப்பட்டதைப் போன்ற‌ சம்பவம் வரும். இதைப் பற்றிய தகவல் ஒன்று த்ரு.வி.க வின் உள்ளொளி புத்தகத்தில் உன்டு என்று நரசய்யா அவர்கள் சொன்னதில் இருந்து ‘உள்ளொளி’ புத்தகத்தையும் தெய்வாகி ஆசி கொடுக்கும் அம்மையயும் தெரிந்துகொள்ள ஆவல். உங்கள் பதிவு என் ஆவலைத் தீர்த்திருக்கிறது..மறுபடியும் நன்றி!

    திவாகர்

  7. அருமையான தகவல்கள், இன்று வரையிலும் இந்த அம்மையார் பற்றித் தெரியாது. தெரிவித்தமைக்கு நன்றி. அதோடு கோமளீஸ்வரன் பேட்டை தான் புதுப்பேட்டை என்ற தகவலுக்கும் நன்றி. இம்மாதிரி அழகிய பெயர்கள் இன்று மறைந்தே விட்டன.

  8. ஞானம் அடைந்த பெண்களின் வாழ்க்கை சரிதங்களை இக்கால ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் அவசியம் படிக்கவேண்டும். மாதா அமிர்தானந்தமயி,மற்றும் அன்னை சாரதாதேவி போன்றவர்கள் இந்த உன்னத நிலையை அடைய பெற்றோர்களாலும் ,உறவினர்களாலும் , சமூக விரோதிகளாலும் எவ்வளவு கொடுமைபடுத்தப்பட்டார்கள், என்பதை படிக்கும்போது அனைத்து எதிர்ப்புகளையும் தாங்கி தன் கொள்கையில் உறுதியாக நின்று தங்களையும் உயர்த்திக்கொண்டு இன்று தன்னை நாடிவரும் மக்களுக்கும் அன்பையும், அருளையும் வழங்கி வருவது வாழ்வில் வழிகாட்டியாக கொள்ளுதல் வேண்டும். வாழ்வில் ஒரு சிறு துன்பம் ஏற்பட்டாலே புலம்பிதவித்து தான் துன்புறுவது மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவதும், சிலர் தங்கள் வாழ்க்கையையே அழித்துக்கொள்ளுவதும் இன்று காணுதல் கண்கூடு.
    கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியுள்ளபடி ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ,உனக்கு நீதான் நீதிபதி,மனிதன் எதையோ பேசட்டுமே,உன்மனதை பாத்துக்க நல்லபடி’
    என்றபடி அவர்கள் இன்று அவர்களை தூற்றியவர்களே அவர்கள் காலடியில் வந்து வணங்கும் அளவிற்கு தங்களை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

  9. திவாகர், கீதா சாம்பசிவம், பட்டாபிராமன் அனைவருக்கும் நன்றி!

    பாரதம் ஆன்மீக பூமி. நம் முன் வாழ்ந்து காட்டிய இம்முன்னோர்கள் நமது போற்றுதலுக்கு உரியவர்கள். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து வாழ்ந்த இம்முன்னோர்களின் கருத்துக்கள், தேடுதல் உள்ள‌ ஒருவரின் உண்மையான மெய்ஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. தங்களது கருத்துகளுக்கு மீண்டும் என் நன்றிகள்!

  10. புதுப்பேட்டையாம், பேரே சகிக்கவில்லை. அன்பரீர், பாரத தேசமானது ஆன்மிக அலையிலும் அருளிலும் குறைவற்றது. எனவே புதுப்பேட்டை, வண்டி திருடும் இடம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இருப்போமாக.

    இந்த முத்தான கட்டுரையில் உள்ள பாடம் என்னவென்றால், அம்மையார் மெளனியாக பத்து ஆண்டுகள் இடைவிடாத தவம் மேற்கொண்டு நம் ரிஷிகள் முனிவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி இறைவனை அடைந்திருக்கிறார்கள். இதுவே நமக்குப் குரு காட்டிய வழி.

  11. அன்புள்ள ரமணன்!

    இப்படி அழைப்பது விசித்திரமாக இருக்கிறது! என் பெயரும் ரமணன்!

    அற்புதமான கட்டுரை. எதையும் கொட்டியளக்க நினைக்காமல், மனதிலிருந்து பக்தியுடன் வார்த்தைகள் வந்திருக்கிறபடியால், யோகினியை நேரே பார்த்தது போன்ற பாவனை நேர்ந்தது. என் பணிவான வணக்கங்களை ஏற்றுக் கொள்ளவும்.

    ரமணன்
    விசாகப்பட்டினம்

  12. swami vivekananda used to meditate in a room at the house of dr.nanajundarao. the room is still preserved in the same condition.the house is near mylapore tank.
    yours
    subbu

  13. நன்றி ரமணன்.

    ‘ரமணன்’ என்பது என்னுடைய‌ புனை பெயர் தான். பகவானின் மீது கொண்ட பெரும்பற்றால் விரும்பி வைத்துக் கொண்டது. உங்களைப் பற்றி ‘நங்கை சிவன்’ மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். தேர்ந்த கவிஞர் என்பதையும் அறிவேன். உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    அன்புடன்

    பி.எஸ்.ரமணன்

  14. இக்கட்டுரை படிக்கும் போது எனக்கு புல்லரித்து விட்டது.
    அந்த கடவுள் உஙகள ஆசிர்வதிக்க வேண்டுகிறேண்

  15. அன்புள்ள ஐயா,

    ஸ்ரீ சக்கரதம்மாவின் சரிதம் படித்தேன். மயிர் கூச்சல் எரிந்தது. ௧௯ ஆம் சதத்தில் வாழ்ந்த பல பெரியவர்கள் பகவான் ரமணரை
    பார்த்து உள்ளார்கள். ஜடினி சுந்தரம்பாள் என்று ஒரு சாதகியும் பகவானை பார்த்து உள்ளார். அவர் சுழுமுனையில் நாட்டம் வைத்து
    மனோலயத்தில் எப்போதும் மௌனநிலையில் இருந்தார். பகவன்
    ரமணர அவளை மனோலயம் பயன் தராது என்று ஆத்மா சாதனை
    பண்ண சொன்னார்.

    அன்புடன்,
    சுப்ரமணியன். இரா

  16. சக்கரஅம்மா திருவடி போற்றி ஸ்ரீசக்ர நாயகியே போற்றி

  17. எனது சொந்த ஊர் தேவிகாபுரம், சக்கரை அம்மாள் பிறந்த ஊர்தான். எனக்கு ஒரு சந்தேகம், சக்கரை அம்மாள் 1901 , பிப்ரவரி 28 இறந்து விடுகிறார். ஆனால் நஞ்சுண்டராவ் அந்த அம்மாவுடன் ரமணரை 1946 ல் தரிசித்ததாக தெரிவிக்கிறார். இது எவ்வாறு என புரியவில்லை. விளக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *