நகரம் நானூறு - 8
ஹரி கிருஷ்ணன்
19 Mar 2009 |
அச்சிட
இந்த முறை நகரத்தில் திரியும் யானைகளின் உலா. சென்னைக்கு யானை; பெங்களூருக்கு ஒட்டகம். பெங்களூர் ஒட்டையை பின்னொரு நாள்பார்ப்போம். இப்போதைக்கு சென்னை நகரத்து யானைகள் இடம்பெறுகின்றன. (படங்களில் காணப்படுபவை தஞ்சை பெரியகோவில் முன்னால் நிற்கும் யானை. நாமம் போட்டது, ஸ்ரீரங்கம் ஆலயத்தைச் சேர்ந்தது.)

முன்னே மணியொலித்து மோதி அறிவிக்கச்
சின்னதாய் ஆனை தெருவந்தால் - சன்னலெல்லாம்
பிஞ்சு முகம்முளைக்கும் பேட்டை கலகலக்கும்
குஞ்சிரிப்புக் கென்ன குறை.
கடைத்தெருவில் வாழை கரந்தொடக் காசு
உடைக்கின்ற தேங்காய்தென் னோலை - சடக்கென்று
தானே குவிகின்ற சாத்தியங்கள் உண்(டு)அதனால்
ஆனையொன்று வாங்கிடலா மா.
யானைகள் அவ்வப்போது கோவில்களுக்கும், கட்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுவதுண்டு. அப்படி வாடகைக்குப் போகும் யானைகளின் கோலம் அன்றாடம் மாறிகொண்டே இருக்கும். நேற்று நாமம்; இன்று திருநீறு; நாளை ‘கடவுள் இல்லை’ கோஷம் என்று ஒவ்வொரு நாளும் யானை சுமக்கும் வேடம் அனேகம்.
நேற்றிட்ட நாமம் நெடுமால் கோயிலுக்கு
தீற்றிட்ட சாம்பல் சிவத்துக்கு - மாற்றியெதும்
போடா திருந்தால் புரட்சிகரக் கட்சிக்கு
வாடகைக்கு ஆனையுறும் வாழ்வு.
சேன்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தால் பாதிப்புக்கு ஆளாவது தெருக்களில் இட்டுச் செல்லப்படும் யானையும்தான். இப்படி ஒரு காட்சியைக் கண்டபோது புகைப்படம் எடுக்கத் தவறிவிட்டேன். இனி என்றாவது ஒருநாள் கிடைக்கலாம்.
சொட்டும் குழாயைத் துதிக்கைக்குள் மூழ்கடித்து
ஒட்டஒட்ட என்ன உறிஞ்சிடினும் - கிட்டியதும்
என்னை? வெறுங்காற்றே! ஏமாந்த யானையுடன்
சென்னை நகரத் தெரு.
துதிக்கையை ஆசி வழங்க உயர்த்திய அடுத்தகணமே அதே துதிக்கையைக் காசுவேண்டி தாழ்த்தவும் பழகியிருக்கிறதல்லவா? ஓட்டுக்குக் கையேந்தி அடுத்த கணமே மக்களுடைய முகத்தை மறந்துவிடும் போக்குக்கு இது எவ்வளவோ மேல், இல்லையா! அங்கே உயரும் கை, தாழ்கிறது. இங்கோ, தாழும் கை உதைக்கிறது.
ஆசிக்(கு) உயர்ந்தகை அப்படியே முன்தாழ்ந்து
காசுக்காய் ஏந்தும் காட்சியிதை - யோசித்தால்
வாக்குக்குக் கையேந்தி மக்கள் முகம்மறக்கும்
போக்குக்(கு) இதுமேல்தான் போம்.

தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
19 March 2009 at 7:46 pm
யானைக் கவிதைகள் அருமை. இந்தக் கவிதைகளின் இலக்கணம் பற்றி தெரியாவிட்டாலும் தெருவில் யானை வந்தததும் தெருவில் நடக்கும் ரசமாற்றங்களைச் சொல்லும் முதல் கவிதையும், யானைக்கு வேடமிட்டு அதை காசு வசூலிக்கவும், காசு கிடைக்குமென்பதால் அதற்கு எந்த வேடமும் போடும் யானைப் பாகனும் வரும் மூன்றாம் கவிதையும், தண்ணீர்ப் பஞ்சத்தை நம்முடன் சேர்ந்து அனுபவிக்கும் நான்காம் கவிதையும் அருமை.