புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்
வெற்றிச்செல்வன்
15 Jun 2009 |
அச்சிட
கருங்கப்பள்ளி, கேரளம்: ஒரு யாக்கோபு கிறிஸ்தவர் மஹாவிஷ்ணு ஆலயத்தின் பூசாரியாய் இருப்பதை மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். தாமசும் அவரது மகனும் இணைந்து ஒரு விஷ்ணு கோவில் கட்டியிருப்பதை உள்ளூர் கிறித்தவ சர்ச்சுகளால் நம்ப முடியவில்லை. தவறாது சர்ச்சுக்கு வரும் தீவிர கிறிஸ்தவக் குடும்பம் தாமஸுடையது.. புதிய வீடு கட்டி சுத்திகரிப்பு வைபவம் கூட கிறித்துவ பாதிரிகளால்தான் நடத்தப்பட்டது. அந்த வீட்டில்தான் தற்போது விஷ்ணுவுக்கு ஓர் ஆலயம் எழுகிறது. இப்படிப்பட்ட ஒருவர் தனது வீட்டில் இந்துக் கடவுளுக்கு ஆலயம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன??
கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1975ல் தாமஸ் ஒரு நிலத்தை வாங்கினார். அது சர்ப்பக் காவு என்றழைக்கப்டும் நாகதேவதைகளின் கோவில். அத்துடன் இணைந்த ஒரு குளமும் இருந்தது. தாம்ஸ் அந்த இடத்தை மேடாக்கி அங்கிருந்த நாகதேவதைகள் சிலைகளையும் அப்புறப்படுத்தினார். அங்கே ஒரு வீடும் கட்டி கிறித்தவ முறைப்படி செய்ய வேண்டிய ”வெச்சரிப்பு” (சுத்திகரிப்பு) சடங்கையும் செய்தார்.
அதிலிருந்துதான் அவருக்குப் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அவரது இரு கால்களும் செயலிழந்தன. அவரது இளைய மகளின் புத்தி பேதலித்தது. இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என ஊர்ப்பெரியவர்களைக் கேட்க, அவர் தமது பாரம்பரியத்துடன் இணைந்திருந்த தெய்வங்களை இழந்து தவித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே அன்றி அவருக்கு வேறு ஒன்றுமல்ல என்பதைச் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமும் சொன்னார்கள்.
தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்த தாமஸ் கோவில் கட்டும் வேலைகளை ஆரம்பித்தார். இந்து ஞான மரபின் தொடர்ச்சியான ஜோதிடமும், வைதீக முறைகளும் அறிய விரும்பிய தாமஸின் மகன் ஜானுக்கு, பிறப்பால் கிறித்துவர் என்பது தெரிந்தும் சாதி சமய வேறுபாடுகளை எண்ணாமல் வைதீக அந்தணர்கள் அவரது ஆர்வத்தைப் பார்த்து இரண்டையுமே சொல்லிக் கொடுத்தனர்.
தாமஸும் அவரது மகனும் மீண்டும் கோவிலை அதே இடத்தில் அமைக்கத் திட்டமிட்டனர். கிறித்துவ சபையின் எதிர்ப்பும், சொந்த பந்தங்களின் எதிர்ப்பும், அடிப்படைவாதிகளின் மிரட்டலும் வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.
தொடக்கத்தில் மளையாள மாதத்தின் முதல் நாள் மட்டும் பூஜைகளும், இதர நாட்களில் விளக்கு மட்டும் ஏற்றியும் வழிபட்டு வந்தனர். பின்னர் அவ்வப்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறப்புப் பூஜையும் நடத்தினர். ஜானுக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. தற்போது கடந்த ஆறுமாதங்களாக தினசரி பூஜையும் நடைபெறுகிறது.
ஜான் பூஜை செய்யும் விதம் சில பிராமண பூசாரிகளின் புஜையை விட சிறப்பாய் இருப்பதாக பக்தர்கள் பாராட்டுகின்றனர். அவருக்குச் சொல்லிக்கொடுத்த குருவும் அவரது பக்தி சிரத்தையை வியக்கிறார். 1977ல் இருந்து தொடரும் எதிர்ப்பையும் மீறி ஜான் இன்று அந்த விஷ்ணு ஆலயத்தின் பூசாரியாய் இருக்கிறார். கோவிலை மேலும் விரிவு படுத்தி துர்க்கை சன்னிதியும், நாக தேவதைகளுக்கும், யோகீஸ்வரருக்கும் பீடங்களும் அமைக்கத் திட்டமிட்டுள்ள அவர், இதையும் இறையருளால் செய்துமுடிப்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
சுட்டி:
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=8771&SKIN=D
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
16 June 2009 at 6:18 pm
hindusim is real in the world all are just nothing