ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன்

தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள்தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால்தான் கிடைக்கவிருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் காலத்திற்குப் பிறகு, எழுத ஆரம்பிக்கும்போதே ஏதோ பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசானது போலத்தான் எழுத்துத்திறன் தானாகவே சித்தித்து விடுகிறது. இருந்தாலும், ஒரு புதிய திறனைப் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத்துத்திறன் மாத்திரம் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், வாழ்க்கையையும் சொல்லிவிட முடிகிறது சரி. அதிலும் எழுதுபவனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் எழுத்தாகவும் இருந்து விட்டால் இன்னமும் சிறப்புத்தான். சாதாரணமாகச் சொல்லிவிடலாம். எழுதுகிறவனின் தனித்துவம் இல்லாத எழுத்து என்ன எழுத்து என்று. வாஸ்தவம்தான்.

ஆனால், இன்று அப்படி எல்லோராலும் இருந்துவிட முடிகிறதில்லை. ஸ்தாபனம் சார்ந்து, கட்சி சார்ந்து, வரித்துக் கொண்ட சித்தாந்தம் சார்ந்து, எல்லைக்கோடுகள் வரையப்பட்டுவிடுகின்றன. அததற்கான சித்தரிப்புகள், மனித குணாம்சங்கள், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீறுவது இயலாத ஒன்றாகிவிடுகிறது. முதலில் மீறும் எண்ணம் இருப்பதில்லை. ஒரு முற்போக்கு எழுத்தாளன் அவனே ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரனின் அடாவடித்தனத்திர்கு இரையாகியிருந்தாலும், அப்படி ஒரு சித்தரிப்பைக் கொடுத்து விடமுடியாது. ரிக்ஷாக்காரன் ஒரு பாட்டாளி. அவன் சுரண்டலுக்கு இரையாகிறவன் என்று ஒரு வாய்ப்பாடு தரப்பட்டிருக்கிறது. பணம் படைத்தவன் இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். அதெப்படியோ அந்தப் பணக்காரனின் பெண்ணைத்தான் ஒரு ஏழைத் தொழிலாளி காதலித்துத் தொலைப்பான். (ரகுநாதனின் பஞ்சும் பசியும்.) இப்படி ஒவ்வொரு வகைக்குமான குணச்சித்தரிப்பு வாய்பாடு இருக்கிறது.

இதையெல்லாம் இப்போது நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசங்களைப் பற்றி இப்போது எந்த முற்போக்கும் கவிதையும் எழுதுவது கிடையாது. அவர்களில் பலரை இப்போது கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில், அல்லது கலைஞரைப் பாராட்டும் விழா மேடைகளில் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொள்கை, சித்தாந்தம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு அததற்கான வரையரைகள், பார்வைக் கோணங்கள் உண்டு. ஒரு காலகட்டம் வரை இந்த வரையறைகள் பொதுவாக நமக்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. கழகத்தாரின் எழுத்துக்களும் முற்போக்குகளின் எழுத்துக்களும் அனேகமாக வரும் வழியிலேயே பின்தங்கி விட்டன. வானம்பாடிகளை, பாரதிதாசனை, சிதம்பர ரகுநாதனை, கழக எழுத்துச் சிற்பிகளை ஓவியர்களைப் பற்றி யாருக்கு இப்போது கவலை? தலித் எழுத்தாளர்கள் தான் எந்த எல்லை விதிப்புக்கும் கட்டுப் படாமல் தம் அனுபவம் சார்ந்து எழுதுகின்றனர். அந்த அனுபவங்களும் எழுத்துக்களும் சித்தாந்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிரமம் தருகின்றன.

ஆனால் இதையெல்லாம் பார்க்க, இப்போது அதிகம் கெடுபிடிகளுக்கு உள்ளாவது முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எழும் எழுத்தாளர்கள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் நிலவும் கெடுபிடி. இந்த விதிமுறைகளும், மீறுவோர்க்கான கண்டனங்களும், எழுத்துலகத்திலிருந்து வருவதில்லை. மதத்தலைவர்களிடமிருந்து வருகின்றன. மதத்தலைவர்களின் தாக்கீதுகளுக்கு பயந்து வாழும் முஸ்லிம் எழுத்துலக பிரகிருதிகளிடமிருந்து வருகின்றன. இந்தக் கெடுபிடிகள், முற்போக்குகளும் தலித் எழுத்தாளர்களும் எதிர்கொள்வதைவிட மிகக் கடுமையானவை. சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு அவை கடுமையானவை. இதற்கு மேலும் கடுமை கொள்வது தமிழ்நாட்டில் இதுவரை நிகழவில்லை என்பதில் நாம் ஆசுவாசம் கொள்ளலாம்.

சமீப காலங்களில் முஸ்லிம் சமுதாயக் கவிஞர், கதைக்காரர்கள் தம் சமுதாயத்தைப் பற்றிய சித்தரிப்பில் தம் அனுபவ உண்மையையே எழுதி வருகிறார்கள். அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக எழுத வேண்டும், ஏதும் புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை தான். எந்த சமுதாயத்திலும் காணும் காட்சிகளைத் தான் அவர்கள் தம் அனுபவத்திலும் கண்டு எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாதலால், அவர்கள் வாழும் உலகைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தனிமனிதர்களின் குணக்கேடு தனி மனிதக் குணக்கேடேயல்லாது, மதம் சார்ந்ததல்ல என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாதகமான ஒரு செயலோ நிகழ்வோ ஒரு முஸ்லிமோடு சம்பந்தப்பட்டிருந்தால் அது இஸ்லாமையே குறித்ததாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வைக் குறுகலையே வெளிப்படுத்துகிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

கீரனூர் ஜாகிர் ராஜா
கீரனூர் ஜாகிர் ராஜா

‘செம்பருத்தி பூத்த வீடு’ என்று ஒரு சிறுகதைத் தொகுதி, கீரனூர் ஜாகிர் ராஜா எழுதியது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் என் பார்வையில் பட்டது. காலதாமதமானாலும் இப்போதாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷப்படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகிர் ராஜாவினது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் எழுத உட்காரும்போதே மிகுந்த தயக்கத்தோடேயேதான், தான் ஒரு முஸ்லிம், தனக்குத் தெரிந்த உலகைப் பற்றிய அனுபவங்களைத்தான் எழுதினாலும் யார் என்ன சொல்வார்களோ, என்னென்ன பாதக விளைவுகளைச் சந்திக்க வேண்டுமோ என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும்தான் எழுதுவார்களோ என்று எண்ணத் தோன்றுவது, மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயல்புதான். ஹெச்.ஜி. ரசூல் படும்பாடு நமக்குத் தெரியும். இன்னம் இங்கு யாரும் எந்த மதத் தலைவரும் அயதொல்லா கொமீனியாகவில்லை.

ஆனால் இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகிர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. எச்சரிக்கையோடு எழுதுகிறார் என்று அர்த்தமில்லை. யாரும் எந்த சமூகத்திலிருந்தாலும், தன் அனுபவங்களை எழுதுவது போலத்தான் இவரும் தன் உலகின் மனிதர்களையும் நடந்த சம்பவங்களையும் எழுதுகிறார். இவர் ஒரு ஜாகிர் ராஜாவாக இல்லாது ஒரு சிவராமனாக, பழனிச்சாமியாக இருந்திருந்தால் மேலே எழுதியது எதுவும் எழுதவேண்டியிராது.

தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாமே. படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த ஒரு கிறக்கம். அப்பா இறந்ததும் பெரியப்பாவோடு வியாபாரத்தில் இறங்கி கேரளம் போய் பத்துப் பதினைந்து வருடங்களாயிற்று. பின் வியாபாரம் படுத்துவிடவே ஊர் திரும்பும்போது சின்ன வயசுக் காதலி பற்றிய நினைப்பு வருகிறது. பழைய செம்பருத்தி பூத்த வீடு இருக்கிறது. ஆனால் அந்த கவுண்டப் பொண்ணு மயிலாத்தா எப்பவோ இறந்துவிட்டதாக செய்தி சொல்வது சின்ன வயசிலிருந்து மிக நெருக்காமாகப் பழகிய கூடலிங்கம்தான். “மாப்ள, அந்தப் புள்ளே செத்துப் போயி ஏழெட்டு வருஷமாச்சேடா…” என்கிறான் கூடலிங்கம். அந்த ஊர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர் என்று தெரிகிறது. அப்படியிருந்தும், மைதீனுக்குப் பிடித்த ஒரே நண்பன் கூடலிங்கம்தான். இந்த கூடலிங்கம் இன்னும் அனேகக் கதைகளில் நண்பனாக வருகிறான். வேறு எந்த பெயரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசப்படவில்லை.

மயிலாத்தா இருக்கும் கவுண்டரோட வீடு … “எப்பண்ணாலும், யாருண்ணாலும் போகலாம்….எங்க வீடு மாதிரி ஜென்னலுக்கு மறைப்பு, கதவுக்கு மறைப்பு, கதவுக்கு அங்கிட்டு ஒரு மறைப்புன்னல்லாம் இருக்காது. தொறந்த வீடு. வாசல்பூராவும் பூச்செடிங்க ….” இது ஒருவாறாக ஜாகிரின் மனநிலையைச் சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

அனீஃபா ராவுத்தர் தன் பெண் பரீதாவை தன் சொத்தெல்லாம் வித்து கட்டிக்கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை மஜீத் தை நாலு நாள் மீனும் கறியுமாக உபசாரம் செய்ய வழி தெரியாது, பள்ளிவாசல் குளத்தில் இருக்கும் ராஜ மீனைத் திருடிவிடுகிறார். “இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கபர்ஸ்தான் வந்து குழிவெட்டி படுத்துக்கலாம்” என்று சொல்கிறார் இபுராஹீம் லெப்பை.

எங்கும் காணும் ஏழ்மையின் கொடுமைதான். அதை உணர மறுக்கும் பணத்தின் மூர்க்கம்தான். ஆனால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆயிஷா என்னும் சிறுபெண் இருப்பது அதிசயம் தான். ஆயிஷாவின் உயிருக்குயிரான நூரின்னிசா இறந்து விடுகிறாள். பின்னால் ஆயிஷா பாசம் கொள்ளும் ஆட்டுக்குட்டியே நூரின்னிசாவாகத் தோன்றுகிறது ஆயிஷாவுக்கு. நூரின்னிசாவின் பாத்திஹாவின்போது ஐம்பது பேருக்கு சாப்பாடு போட பணம் சேர்க்கிறாள் ஆயிஷா. சித்தப்பா வீட்டுக்குக் கொஞ்ச நாள் போய்விட்டுத் திரும்பியபோது ஆட்டுக்குட்டியைக் காணோம். பக்ரீது செலவுக்குப் பணம் வேண்டுமே விற்றாயிற்று. இது தெரிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு நூரின்னிசாவை வாங்க ஓடுகிறாள் ஆயிஷா. ஆயிஷா ஒரு தனிப் பிறவிதான். “இந்த துனியாவில் மாமிசம் மறுத்த முதல் முஸ்லிம் பெண்ணல்லவா அவள். அவளை ஏர்வாடிக்குக் கூட்டிட்டுப்போயி ஓதிப்பார்த்து ஒரு தாயத்து கட்டி இழுத்துட்டு வரவேண்டிய கேஸ்,” என்றுதான் அம்மாவுக்கு அத்தாவுக்கும் அபிப்ராயம். இப்படி ஒரு சிறு பெண் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காண்பது ஆச்சரியம்தான். ஆனால், அப்துல் கலாம் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆச்சரியம்தான். ஆயிஷாவின் ஆத்தா நோயாளி. இருந்தாலும் நோன்பிருக்கிறாள். ‘நோன்பு திறக்க’ பள்ளி வாசலிலிருந்து அறிவுப்புக்காகக் காத்திருக்கிறாள், ஆத்தா. அவள் முன்பு கஞ்சியும் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழங்களும். கஞ்சி சரி. பேரீச்சம்பழங்கள்? வேறு பழங்கள் உதவாது போலும்.

பக்ரீது ஆடுகள் என்று ஒரு கதை. பல கதைகளில் பேசப்படும் சுலைமான் ராவுத்தர்தான் ஆடுகளை பல ஊர்களிலிருந்து வாங்கி வந்து உள்ளூரில், பல கதைகளில் பேசப்படும், ஏ.எம்.எஸ் முதலாளிக்கும் இன்னும் மற்ற வேண்டுபவர்களுக்கும் பக்ரீத் குர்பானிக்காக சப்ளை செய்பவர். இப்படித்தான் அவர் பிழைப்பு நடந்து வருகிறது. சுலைமான் ராவுத்தரும் அவர் உதவியாள் ஜின்னாவும் இந்த வருஷமும் வெளியூர்களிலிருந்து ஆடு பத்திக்கொண்டு வந்து முதல் நாள் இரவே ஊரில் எல்லோருக்கும் செய்தி சொல்லியும் ஆயிற்று. ஆனாலும் ஆடு கேட்டு யாரும் கதவைத் தட்டவில்லை. என்னவென்று விசாரிக்கப் போன இடத்தில் ஒரே கூட்டம். யாரும் ராவுத்தரைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏ.எம்.எஸ் முதலாளி ப்ளஷர் காரில் வந்து இறங்குகிறார். அவர் பின்னால் ஒரு லாரியில் வந்து இறங்குவது ஒட்டகம். “வக்காலி, சுத்து வட்டாரத்திலே நம்ம சனத்திலே எவனாச்சி ஒட்டகம் அறுத்து குர்பானி குடுத்ததா கதையாச்சிம் உண்டா?” என்று பெருமிதத்துடன் தன் செயலை சொல்லிக் கொள்கிறார். மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மதிப்புகள்! இனி சுலைமான் ராவுத்தருக்கு அடுத்த ஊர் சந்தைக்குப் போனால் பத்தாது. ராஜஸ்தானுக்குப் போகவேண்டும். இல்லை, ஹஜ் போய்த் திரும்பும்போது ஆளுக்கொரு ஒட்டகத்தையும் ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.

அமானுஷியில் ஒரு அமானுஷ்ய நிகழ்வையும் அமானுஷ்யப் பெண்ணையும் சந்திக்கிறோம். ரஜியா நிக்காஹ்-க்காகக் காத்திருக்கும் பெண். அவளுக்கு “கனவில் நாகூர் ஆண்டவரும் இன்னும் நானூத்தி நாலு பேரும் வந்து அவளுக்கு ஏதோ ரகசியமாகச் சொல்லி” விட்டுப் போகிறார்கள். ரஜியா அந்த ரகசியம் என்னவென்று சொல்வதில்லை. ஆத்தா, பெத்தம்மா, அம்மா, முஜி, யாருக்குமே. ஒவ்வொரு சமயம் பூடகமாக ஏதோ சொல்வாள். “வாய் தவிக்கும், நாக்கு வறளும், கிணறு…” என்று போய்ப்பார்த்தல், கிணற்றில் ஒரு ஆண் பிணம். இப்படிப் பல. நாகூர் தர்காவுக்கே போகாத ரஜியா நாகூரைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறாள். ஆக, அவள் ஏதும் புது ரகசியம் இருப்பதாகச் சொல்லும்போதெல்லாம், எல்லோருக்கும் என்ன நடக்குமோ என்று பயம். அவள் ஏர்வாடி கேஸ் இல்லை, அது போலத் தோன்றினாலும். ஒரு முறை பேஷ் இமாமை அழைத்து வந்து என்ன ரகசியம் என்று அவளைக் கேட்கச் சொல்கிறார்கள். ரஜியா ஒரு அறையில் அடுத்த அறையில் பேஷ் இமாம். அறைகளுக்கு வெளியே ஊரே திரண்டு ஒரே கூட்டம். பேஷ் இமாம் நடுச்சுவரில் காதை வைத்து என்ன ரகசியம் சொல் என்கிறார். ரஜியா சொல்கிறாள், “பேஷ் இமாம் அவர்களே, குரானின் முப்பது ஜூஸ்களையும் நீங்கள் மனப்பாடமாக ஓதிக் காட்டினால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்” என்கிறாள். இமாம் திடுக்கிட்டு வெலவெலத்துப் போகிறார். அந்த சமயத்தில் பள்ளிவாசல் பாங்கு கேட்கிறது. தொழுகைக்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டே பள்ளிவாசலுக்கு ஓடி விடுகிறார், இமாம்.

“சொடலை வந்திருக்கேன், சாமி” என்று நாணாவின் வீட்டு முன் வந்து கத்துவான் சக்கிலியன் சொடலை. மிஞ்சிப் போன சோறு, கறி ஆணம் என்று கொண்டு போடுவாள் ஆமினா. சக்கிலியன் சொடலையிடம் இந்தக் கருணை காட்டுவது நாணா மாத்திரமே அந்த ஊரில். மற்ற எல்லா இடத்திலும் கிடைப்பது அவமானம்தான். சொடலையின் பெண்டாட்டிக்கும் நாணாவுக்கும் ஒரு ஒட்டுதல். சக்கிலிப் பெண் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. “இஸ்லாத்தில் சேந்து விடு. ஒத்தரும் ஒதுக்கமாட்டான். எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு!” என்று ஆசை காட்டுகிறார். அவனுக்கும் ஆசைதான். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.

இரண்டு நாள் கழித்து நாணா வீட்டுத் திண்ணையில் ஒரு பையில் கைலி, சட்டையெல்லாம் திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சுடலை பழைய காக்கி உடையில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு நிற்கிறான், வாசலில்.

மார்க்க விஷயத்தில் ‘கெடுபிடியான’ ஆளான காசிம் ராவுத்தரின் ஏழ்மையில் அவர் மகன் அப்துல்லா ராமசாமி கடையில் வேலைக்குச் சேர்கிறான். ஒரு ஸ்டூல் மேல் ஏறி, கடையில் இருக்கும் சாமி படங்களுக்கெல்லாம் பூ சார்த்துவான் அப்துல்லா. இந்த சமாசாரம் காசிம் ராவுத்தருக்கு ஒருநாள் தெரிந்ததும், “ஒரு காஃபிரை எனக்குப் புள்ளையா தந்துட்டியேடா, யா அல்லாஹ்” என்று புலம்புகிறார். “அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்” என்று அப்துல்லாவின் மனதில் கேள்விகள். அத்தா அவனை மன்னிக்க மறுத்துவிடுகிறார். அப்துல்லாவின் கனவில் கதீஜா ஒரு பொட்டலம் பூவைக்கொடுத்து அனுப்புகிறாள் கடைக்கு. அத்தா அவனை ஆதுரத்துடன் பார்க்கிறார். ஆனால் அது அவன் கனவுதான். வீடு என்னவோ வெறிச்சிட்டிருக்கிறது. இந்தக் கதை ‘காஃபிர்.’

குஜராத் போன்ற இடங்களுக்கு ஆட்கள் அனுப்ப கறுப்புக்கோட்டுக்கு புரோக்கராக தொழில் செய்து கமிஷனில் வாழ்பவர் முத்தலீப். இப்போது நிலைமை மாறிவிட்டது. பூகம்பம், குஜராத் கலவரம் எல்லாம் சேர்ந்து ஆள் கிடைப்பது துர்லபமாகிக்கொண்டு வருகிறது. நம்ம கமிஷன்லேதானே இவன் நாலு குமருகளுக்கு நிக்காஹ் செஞ்சு வச்சான், இப்போ இப்படி காலை வாறுகிறானே என்று கருப்புக் கோட்டுக்குக் குமுறல். இன்னம் ஒரு பொண்ணைக் கரையேத்தணுமே என்று முத்தலீபுக்கு கவலை. வெளியூர்லே ஒருத்தருக்கும் காட்டாமே படிக்க வச்சிட்டிருக்கியே உன் மவன். அவனை சேர்த்து மூணு பேரை நாளைக்கு அனுப்பிடு என்று கட்டளை பிறக்கிறது கறுப்புக்கோட்டிடமிருந்து. எவன் எக்கேடு கெட்டால் என்ன, தன் வியாபாரம் தொடரணும் கறுப்புக் கோட்டுக்கு.

சஃபியா தன் கணவன் இக்பாலால் கைவிடப்பட்டவள். மூன்று வயதுக் குழந்தை வேறு. மதரசாவில் கற்ற இஸ்லாம் மார்க்க கல்வி அவளுக்கு உதவுகிறது. மேலும் மௌல்வியின் பெண் என்ற காரணத்தாலும் மதரஸாவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. இக்பால் தலாக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறாள் சஃபியா. ஆனால் அவன் கொடுப்பதாக இல்லை. “அல்லாஹ் மிகவும் மனம் வெறுத்துத் தான் இதற்கான அனுமைதியைத் தந்திருக்கிறான். தலாக்கின் மூன்று நிலைகள், அந்த அவகாசங்கள் மிக முக்கியமானவை. அதை எவரும் லட்சியப்படுத்துவதில்லை” என்றும் ஜாகிர் ராஜா கதையில் சொல்கிறார். பள்ளி வாசலில் சஃபியாவின் மனதைச் சஞ்சலப்படுத்துவது பிலால். “அவன் கவிதை ‘ஆதம் ஹவ்வா’ காலம், ஷாபானு, சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் வரை பேசி, ஒரு வழக்கமான முஸ்லிம் குரலாய் பாபரி மஸ்ஜித், பொதுச் சிவில் சட்டம் வரை அலசி ஒய்ந்து..” என்று இக்பாலைப் பற்றிச் சொல்கிறது கதை.

‘செம்பருத்தி பூத்த வீடு’ தொகுப்பில் 19 கதைகள். இக்கதைகளினூடே, இன்றைய தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம், அதன் பல வண்ணங்கள் மாத்திரமல்ல, ஜாகிர் ராஜாவையும் கூட சந்திக்கலாம். இனி ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

செம்பருத்தி பூத்த வீடு – ஜாகிர் ராஜாவின் சிறுகதைகள்.

வெளியீடு:

அனன்யா பதிப்பகம்
8/37, பி.ஏ.ஒய். நகர் (குழந்தை இயேசு கோயில் அருகில்)
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613005

6 Replies to “ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’”

  1. ஜாகிர் ராஜாவின் தைரியம் அவரது சுயவிமர்சன பார்வையின் நேர்மை மற்றும் மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது, அவரது நுல் எங்கு கிடைக்கும்? இந்த அருமையான விமர்சனத்தை தந்த வெங்கட்.சாமிநாதனுக்கும் வணக்கங்கள்.

  2. The book is published by Ananya, 8/37, P.A.Y Nagar, near Infant Jesus Church, Pudukkottai Road, Thanjavur-613005 and is priced Rs 55. Two more books by Jagir Raja have come out, all are, it seems, slim books.

    I wish the letters were a little larger in size. It is a great strain reading such small letters. At least I feel so.

  3. இன்ஃபாண்ட் ஜீஸஸ் சர்ச்சுக்க்ப் பக்கத்தில் பதிக்கப்பட்ட புத்தகத்தின் ஆசிரியரான ஜாகிர் ராஜாவை, சிலாகிக்கிறார் வெங்கட் சாமிநாதன்.

    தமிழ் ஹிந்துவில் இது நடக்கும்.

    தமிழர்கள் ஹிந்துக்களாகத் தொடரும்வரை இதுவும் தொடரும்.

  4. Dear sir, I was drawn to this article by a friend of mine.. Though the tamil language in this article is difficult to read at places, I can fully grasp the essence of the stories brother Jakir has narrated. They are stirring and emotional.

    Thanks a bunch for introducing such writers and their writings.

    In the name of humanity,
    love,
    shama, chennai.

  5. Thank you, Shama Ahmed, thnank you. ‘In the name of humanity’, yes. In the fraternity of humans, religious denominations should not place us in opposite camps. It would be nice if you keep looking for Jagir Raja’s books. -swaminathan

  6. JAGIR RAJA TAMIL SULALIL IYANGI VARUM AALUMAI MIKA PADAIPALIGALUL ORUVAR. AVARI PATRIYA VENKATA SWAMINATHAN KARUTHUKAL MIGA THELIVAGA AVARAI VIMARSIKIARTHU.JAGIR RAJAVIN ANAITHU NAVALGALAYUM VASITHATHIL ISLAMIYA SAMUGATHIL ULA SATHYA PADI NILAYGALAI THELIVAGA THERINTHU KOLLA MUDINTHATHU.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *