பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

periyar_and_maniammai_2ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்டannadurai_and_periyar ஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டுபோய்விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்.
(திராவிட நாடு – 21-08-1949)

வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை!

அதுமட்டுமல்ல 1940-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.

“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார் :-

”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.

அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.

ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!

பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.

ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.

ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.

கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.

பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.

அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!

மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.

இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.

கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.

இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.

கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.

இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.

பாராட்டுகிறோம்.

பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!

ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.

துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.

இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.

பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.

இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.

சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)

இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.

இது மட்டுமல்ல; இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
(நூல்:- நினைவுகள்)

திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?

கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.

கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.
(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.

அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!

கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!
(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.

துரோகிகள்! ஜூடாசுகள்!

தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!

வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்

இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!

விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!

மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!

தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள்

என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.

இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
(திராவிட நாடு 09-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

போர்ஜரி செய்பவர்கள்!

பணமோசடி செய்பவர்கள்!!

இந்த இரண்டு பலமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவிட்டீர்கள் அன்பர்களே! பல ஆண்டு உழைத்த நமக்குப் பெரியார் தரும் இந்தக்கீழ்மைப் பரிசுகள் கள்ளக் கையொப்பமிடுபவர்கள்! மோசக்காரர்கள் தீரர், வீரர், திராவிடர் என்று அழைத்தார் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றுபவர் இருந்த வரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு – அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம். உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள்-மோசக்காரர்கள் என்று ஏசுகிறார். ஏசலுரையால், மனம் புண்படும் தோழர்களுக்கு, எத்தகைய சமாதானம் கூறமுடியும் – நானும் அதனால் தாக்கப்பட்டுத் தாங்கிக் கொண்டு வருகின்றேன் என்பதை எடுத்துக்காட்டுவது தவிர.
(திராவிட நாடு 16-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.

யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!

பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் – அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.
(திராவிட நாடு 10-07-1949)

ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர். இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.

இதோ அந்தக் கட்டுரை..

periyar_and_maniammai_1சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.

இந்தத் திருமதிக்கு வயது 26.

அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72.

மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

-தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..

…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.

இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

…திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.

வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!

வேதனைப்படுகிறோம் தனிமையிலே!

ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

– எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!

கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.

அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.

புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!

இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
—————————
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை

(திராவிட நாடு 3-7-49)

சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.

இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.

தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.

இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.

சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-

அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் –

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?

சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?

ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!

தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
(விடுதலை 20-04-1962)

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை?

29 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!”

  1. அண்ணாத்துரையும் கோழையே என்பது நன்றாகத் தெரிகிறது.

    யாரோ ஒரு கல்கத்தா பார்ப்பனக் கிழவன் என்ன செய்துவிட முடியும் என்று தூற்றிய அண்ணாத்துரைக்கு பெரியாரைப் பற்றி பக்கம் பக்கமாய்ப் புலம்பவே முடிந்திருக்கிறது. ஆண்மையிருந்தால் அண்ணாத்துரை, கல்கத்தாவில் நடந்ததுபோல் திருமணத்தை தடுக்க வேண்டியதுதானே?

    ஜின்னா தன் வயதில் பாதி கூட ஆகாத பெண்ணை வசியம் செய்து மதம் மாற்றி மணம் முடித்த போது, அண்ணாத்துரைக்கு(ஈவேராவுக்கும்தான்) ஒரு வார்த்தை பேச ஆண்மை இருக்கவில்லை. பிற திராவிட இயக்கத்தினர் போல அண்ணாத்துரையும் அருவருக்கத்தக்கனே.

  2. ”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது”

    ITS OBVIOUS THAT E.V.R HAD SHATTERED THE GOOD MARRIED LIFE OF A YOUNG GIRL.
    WE KNOW ABOUT EVR, HOW SELFISH HE IS.

    SEE THE REACTION FROM OUR GREAT ” BIG PHILOSOPHER” ,” கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது”!

    BUT THIS ” கண்ணீர் “, DID THIS ” கண்ணீர் ” SOLELY DUE TO THE LOSS FOR PRINCIPLES? ALL KNOW THAT BOTH THE GURU AND SISHYAN WERE HARDLY BOTHERED ABOUT THE PRINCIPLES BUT ONLY TRIED TO PROMOTE THEMSELVES.

    THE IMPORTANT REASON FOR “கண்ணீர்”, IS AS FOLLOWS,

    மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.

    அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!

    கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!”

    THIS IS THE REASON FOR “கண்ணீர்”! THERE WERE LOT OF WEALTH AND CONSIDERABLE FOLLW UP (FOLLOWERS) FOR THE “கழகம்”, THE “GREAT PHILOSOPHER” SISHYA WANTED TO TAKE MANTLE OF ‘கழகத் தலைமை’ AS WELL AS THE BIG WEALTH. BUT ONCE THE GURU MARRY SOMEONE, THE ” WEALTH” PART HAS GONE. THE THING STILL LEFT WAS THE FOLLOWERS, THE PEOPLE WHO WERE CHEATED AND BRAIN WASHED BY THESE
    “REFORMISTS”.

    IN HIS DESPARATION TO GRAB ATLEAST THE POPULARITY AND FOLLOWERS THIS “GREAT PHILOSOPHER” HAD SHED LOT OF “கண்ணீர்”, ALL CROCODILE DEARS!

    WHAT A GURU, WHAT A SHISHIYAN!

  3. ஒரு ச‌ந்தேக‌ம், பேர‌றிங்க‌ர்,பேர‌றிங்க‌ர் என்று கூறுகிறார்க‌ளே, அந்த‌ பேர‌றிங்க‌ர் அப்படி என்ன‌ க‌ண்டு பிடித்தார்?

    1) மின்சார‌ ப‌ல்பு, டெலிபோன், ரேடியோ இது போல‌ எதையாவ‌து க‌ண்டு பிடித்தாரா?
    அல்ல‌து

    2) பொருளாதார‌த்திலே பொதுவுட‌மை , சோஷ‌லிச‌ம் இப்ப‌டி ஏதாவ‌து க‌ண்டு பிடித்தாரா?

    3) அல்ல‌து புவயீர்ப்பு விசை, ஒளியின் ப‌ண்புக‌ள் இப்ப‌டி ஏதாவ‌து க‌ண்டு பிடித்தாரா?

    4) அல்ல‌து புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர் போல‌ துன்ப‌டத்திலிருந்து விடுப‌ட‌ வ‌ழி இப்ப‌டி ஏதாவ‌து க‌ண்டு பிடித்தாரா?

    5) அம்மை நோய்க்கொ, ம‌லேரியாவுக்கு ம‌ருந்து இப்ப‌டி ஏதாவ‌து க‌ண்டு பிடித்தாரா?

    பாவாடை, நாடா என்று அசிங்க‌மாக‌ப் பேசுவ‌தற்க்கு எல்லாம் பேர‌றிங்க‌ர் ப‌ட்ட‌ம் கொடுக்க‌ வேண்டிய‌ அளவுக்கு, த‌மிழ‌னும் தாழ்ந்து, த‌மிழையும் தாழ்த்த‌லாமா?

  4. சபாஷ்! சரியாகச் சொன்னீர்கள் ஜே! (:-))

    Edited and Published. – TamilHindu Editorial.

  5. //மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு//

    மணியம்மையை திருமணம் செய்து கொள்ளாமல் சொத்தை எழுதி வைத்தால் தலைவருக்கு பிறகு மணியம்மை வேறு யாரையாவது திருமணம் செய்து சொத்தை அந்த ஆள் அமுக்கி விட்டால் என்னாவது என்று பகுத்தறிவு பகலவன் நினைத்திருக்கலாம்.

  6. சபாஷ் திருச்சிக் காரான்… ஏமாற்றுவதில் அறிஞர் என்பதால் இருக்கக்கூடும்… யேல் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியதாகவும் எங்கும் ஆவணம் இல்லை..

    அஞ்சனாசுதன், பாலாஜி, : நன்றாகச் சொன்னீர்கள்..

    அண்ணாத்துரையின் புலம்பல்களின் நோக்கம், திராவிட சாக்கடையின் மீது ஜவ்வாது தெளிக்கத்தானே தவிர பெரியாரை எதிர்த்து அன்று. “நாங்க நல்லவங்கதான்.. மீசைல கூட மண் ஒட்டல.. கொஞ்சம் தாடிலதான்..” என்று சொல்வதற்க்குத்தான் செய்திருக்கிறார்.

    (Edited and Published – TamilHindu Editorial.)

  7. பெரியார் செய்தவற்றுள் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அடிப்படை என்னவாக இருக்கும் என்றால், (என்னுடைய பார்வையில்) பெரியார் நடைமுறைக் கோட்பாடுகளை மாற்றியமைக்க முயன்றார். ஆனால் அது மக்களின் பேரில் உள்ள அக்கறையினால் இல்லை. ஒரு விதமான superioriy complex. தான் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். தன்னை ஒரு தலைவனாக அனைவரும் ஏற்க வேண்டும். அவ்வளவுதான். உண்மையான அக்கறை இருப்பின் முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை, அவை தொடர்பன கருத்துகளை ஏற்கும் பக்குவம் இருக்கும். (ஹிந்து மதம் வளர்ந்தது, நிலைத்திருப்பது இவற்றால்தான்). பெரியாரிடம் அவை இல்லை. அதனால் முரண்பாடுகள் இருப்பது மிக சகஜம்.

    அதை வளர்ந்து வரும்/எதிர்கால தலைமுறைகளுக்கு வெளிச்சம் போட்டுக் வேண்டியது மிக அவசியம். இந்த முயற்சியில் இருக்கும் tamil hindhu விற்கு வாழ்த்துக்கள்.

    அதே நேரம், இதை படிக்கும் வாசர்களாகிய நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நமது கருத்துகளை feedback-ல் பதிவு செய்யும் போது கண்ணியத்தை கடை பிடிக்க வேண்டியது மிக முக்கியம். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசத்தை காட்டுவது நம் எதிர்கால தலைமுறைக்கு நம்மீது ஒரு நம்பிக்கையை வளர்க்கும்.

    TamilHindu website-ஐ பராமரிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். feedback-ஐ அப்படியே பிரசுரிக்காமல் மதிப்பீடு செய்து பிரசுரிக்க ஆவன செய்யுங்கள்.

  8. நன்றி கார்கிலார் அவர்களே,

    பழைய எம். ஜி. ஆர் படங்களில் அசோகனும், நம்பியாரும் அட்டகாசமான வார்த்தைகள் இடிச் சிரிப்புகளுடன் , கட்டிக் கொண்டும் , தழுவிக் கொண்டும் பெரிய கூட்டத்தையும் கூட்டிக் கொண்டு,கொள்ளையடிக்க பிளான் போடுவார்கள்!

    கொள்ளை முடிந்தவுடன் ஒருவரே எல்லா பணத்தையும் , தங்கத்தையும் எடுத்துக் கொள்ள ஒருவர் மற்றவனுடன் அடித்துக் கொண்டு சண்டை போடுவார்கள் அல்லவா?

    நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்!

  9. நண்பர் கார்கிலார் அவர்களே,

    ஒரு முக்கிய விடயத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

    இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இந்து மதத்தை இகழவும், பகுத்தறிவு என்ற பெயரிலே தங்களை வளர்த்துக் கொண்டதோடு, பல பேரை தவறான வழிக்கு கொண்டு சென்ற படியான நிலை ஏற்படக் காரணம் என்ன?

    இந்து மதத்தின் சிறந்த கருத்துக்கள் எல்லா இந்துக்களையும் சென்று அடையாததும், எல்லா இந்துக்களையும் ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் அடைய வைக்காமல் போனதுவும் ஒரு முக்கியமான காரணம் அல்லவா?

    இத்தனைக்கும் இந்து மதம் மிகச் சிறந்த பகுத்தறிவு மதம் அல்லவா? மிகச் சிறந்த பகுத்தறிவாளர்களான நசிகேதஸ், புத்தர் , விவேகானந்தர், ஆதி சங்கரர், பட்டினத்தார், அப்பர் உள்ளிட்ட பலரைத் தந்ததும் இந்து மதம் தானே?

    இனிமேல் இந்து மதத்தை எந்தப் பாதையில் கொண்டு செல்லப் போகிறோம்?

    ஈ. வே. ராவை எக்ஸ்போஸ் செய்தால் மட்டும் போறுமா?

    சரியான இந்து மதத்தை , தூய்மையான, உண்மையான இந்து மதத்தை தூசி தட்டி வெளியே எடுக்க வேண்டாமா? அது சரியாகப் பின்பற்றி பிறருக்கு உணர்த்தவும், பரப்பவும் வேண்டாமா?

    போகப் போகத் தெரியும் – 28, பெரியாரின் மறுபக்கம் பாகம் 10, பாகம் 11, பாகம் 12 ஆகியவற்றில் நான் நண்பர்கள் பலரிடம் கிட்டத் தட்ட ஒரு கருத்துப் போரே நடத்தி விட்டேன்!

    இதில் பல பேர் மன வருத்தம் அடைந்தது எனக்கும் வருத்தம் என்றாலும், இந்து மதம் தவறான பாதைக்கு திருப்பப்பட்டு, மீண்டும் யார் வேண்டுமானாலும் வந்து கோல் போடும் இடமாக ஆகி விடக் கூடாது என்பதற்க்காக நம் கடமையை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நீங்கள் போகப் போகத் தெரியும் – 28, பெரியாரின் மறுபக்கம் பாகம் 10, பாகம் 11, பாகம் 12 ஆகியவற்றில் என் பின்னூட்டங்களை படித்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏன் எனில் உங்களிடம் இருந்து எந்த விதமான பின்னூட்டமும் அதற்க்கு வரவில்லை.

    எனவே அவற்றில் கூறப் பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். Your comments on them will be valuable!

  10. அய்யா,

    ஈ.வே.ராமசாமி நாயக்கர் மற்றும் அன்னாரது ஆபாச அடிவருடிகள் பற்றி எழுதிவரும் இத்தொடர் மிகச் சிறப்பாக உள்ளது. நாயக்கர் ஒரு போலி மனிதர் என்பதும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவர், பேசுபவர் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. அந்தக் காலத்தில் நாயக்கரை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எதிர்ப்புக் குரல் எழுப்பினால் தான், யாரையாவது திட்டி விமர்சித்தால்தான் தான் ’லைம் லைட்டில்’ இருக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அதற்காக எடுத்துக் கொண்டது தான் இந்து மத எதிர்ப்பு வேஷமும், பார்ப்பன வெறிப் பிரசாரமும்.பெரியாருக்கு அதிக அனுபவ அறிவோ விஷய ஞானமோ இல்லை என்பது அவரது வாழ்க்கையிலிருந்தே நன்கு தெரிய வருகிறது.

    நாயக்கர்-மணியம்மை திருமணம் நடந்தபோது அதனை ஏற்காமல், “சொத்தைப் பாதுகாக்கவோ, வாரிசுக்காகவோ தான் ஒரு ஏற்பாடு தேவை” என்றால் எதற்காக சின்னப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்? இயக்கத்திலே இருந்து வரும் என்னைப் போன்ற கிழவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே? என்று செருப்பால் அடித்தது போன்ற கேள்வியைக் கேட்டவர், அதே கழகத்தில் இருந்த திருமதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அப்போது அவருக்கு வயது 67. ராமசாமி நாயக்கருக்கு 72. 1949-ல் திரா ‘விட’ முன்னேற்றக் கழகம் உருவான போது பெரியாரை விட்டுப் பிரிந்து அண்ணாவுடன் வந்த மூத்த தலைவர்களில் ராமாமிர்தமும் ஒருவர்.

    தி.மு.க அரசு தனது ஆட்சிக்காலத்தில் அரசின் பெண்களுக்கான திருமண உறவுத் திட்டத்திற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரைச் சூட்டி கௌரவப்படுத்தி, நாயக்கரை தைரியமாக எதிர்த்த ஒரெ பெண்மணிக்கு தனது நன்றிக்கடனை செலுத்தியிருக்கிறது.

    வாழக சுயமரியாதை!

    வளர்க கழகம்!

  11. dear sir
    today only i could stumble upon this blogspot

    excellent

    i will revert back after reading all the articles

    balasubramanyan vellore

  12. Sri. Balasubramaniyan,
    This is not a blog. This is a magazine. Welcome you to Tamil hindu. Though this is magazine, your opinions are welcome.

    Sri. Ganesh,
    Sorry for having written slipping from noble level.

    Sri. Thiruchchiyaar,
    kadal-kollaiyar example was superb!!

    Sri. Kuppusami,
    Thanks and welcome to smash Ramasami.

  13. அனைவரும் பெரியார் மணியம்ைமயாரை திருமணம் செய்து கொண்டதை வைத்து கேவலப்படுத்துகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் திருமணம் தானே செய்து கொண்டார்…! கள்ள உறவு வைத்துக்ெகாள்ளவில்லையே! இதை தவறு என்றால் நீங்கள் வணங்கும் கடவுள்களில் பலர் பல திருமணங்களை செய்து கொண்டார்களே! அவர்களை யார் கேவலப்படுத்துவது. அக்கடவுள்களில் கிருஷ்ணனின் பற்றி கூறினால் என்னவாகும். அதை இப்பகுதியில் கூறவும் இயலாது. குளிக்கும் பெண்களின் ஆடைகளை ஒழித்துக்கொண்டு அப்பெண்களை ரசிப்பதே வாடிக்கை. இது போன்ற இன்னும் படும் கேவலமான விஷயங்கள் உண்டு. கண்மூடித்தனமாக மூதாதையர்கள் சொன்ன எல்லாவற்றையும் நம்பாமல் அறிவுகொண்டு சிந்தித்து செயல்படுங்கள்.

  14. YES, Marriage is purely a personal matter between two individuals, a man and woman. In some European nations, it has also come to the level of man and man and woman and woman. But in case of EVR marrying Maniyammai, there is a DIFFERENCE. EVR was already having all comforts from Manmiyammai and therefore, there was no need of any marrriage between the two. And EVR used to severely criticise old men marrying young women. If at all an old man wanted to marry a woman, let him marry a widow and according to his age, he used to say. But when it came to his marriage, he did not follow his advice. Also, he justified his marrriage saying the he wanted a legal heir, as if the assets of the party were his personal belongings and the party his fiefdom. This warrants review of his marriage with Maniyammai. EVR himself made his marriage a matter for public debate.

    MALARMANNAN

  15. RAMGOBAL,

    நுனிப்புல் மேய்ந்து பதில் சொல்லியிருக்கிறார். முதலில் இருந்து படியுங்கள்.

    BTW, I can find new members are viewing this site day to day, recently.

  16. The spelling of the name RamgoBal itself reveals it is a bogus name, a non-Hindu trying to pose as a Hindu with fond hopes of embarassing.

    YES, the mythological part of Hinduism presents Gods with more than one consort. And Sri Krishna Leela with accent on several Raasa. We can undrstand the meaning and reason for all these. You have to sharpen your brains to understand this. You need to have a clear and open mind as the first step to understand.
    MALARMANNAN

  17. RAMGOBAL – numerology???

    A typical DK view point. As Mr.Malarmannan explaing, EVR is criticized because he preached something and followed something else.
    And all DK gang talk about Kirshna leela….stupids they are…Krishna was hardly 4 years old when he did all these leela…he went to Mathura to kill Kamsa by his age 8 and all the raasa leela happened before his age 7, which is a child with no perverted thought process. Even people criticizing Radha Krishna relationship as illicit forgets that Krishna was hardly 8 years old when Radha was in love with him. Loving a child and loving a man is different and people who cant even realize this basic fact calls themselves ‘pagutharivalar’. enna koduma sir ithu…

    Regards,
    Satish

  18. ராம்கோபால் அவர்களுக்கு,

    ஆமாம், பெரியார், மணியம்மையை திருமணம் செய்துகொண்டார்தான். ஆனால் அவர் மேடைகளில் பேசியவற்றுக்கும், தன் வாழ்வில் நடந்து கொண்டதற்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இந்த கட்டுரைத் தொடரை ஆரம்பத்திலிருந்து படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    ஹிந்து மதத்தில் உள்ள கருத்துகளை புரிந்து கொள்வது மிக பெரிய விஷயம். வாழ்நாள் பேதாது. நீங்கள் எவ்வளவு மகான்களின் நூல்களை படித்து விட்டு/சொற்பொழிவைக் கேட்டு பகவான் கிருஷ்ணரைப் பற்றி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    மேலும், மணியம்மை அவர்கள் உங்கள் சகோதரியாகவோ, மகளாகவோ இருப்பின், பெரியார் திருமணம் பற்றி உங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன்.

  19. Ram Gobal,
    தவறில்லை என்றால் ஏன் ஈ.வெ.ரா நாயக்கர் அதை திட்டி எழுதினார்?

  20. //தவறில்லை என்றால் ஏன் ஈ.வெ.ரா நாயக்கர் அதை திட்டி எழுதினார்?//
    அவர் தவறு என்றது மற்றவர்கள் செய்தால் தவறு, ஈவெராவையும் மற்றவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கலாமா.. கழகத்தின் கொள்கையே “ஊருக்குத்தான் உபதேசம்” என்பதுதானே

    வெங்கடேசன் அவர்களே, ஈவெராவா?ஈவேராவா ? உங்களது புத்தகத்தில் நீங்கள் ஈவேரா என்று எழுதியுள்ளதை வைத்து மொத்தக் கருத்துக்களையுமே தள்ளுபடி செய்து எழுதியுள்ளாரே தமிழோவியா தன் தளத்தில்.. தயவு செய்து விளக்கவும்..

  21. இதைப் படித்தபின் என்ன விளங்குகிறதென்றால் பெரியார் ஒரு சந்தர்ப்பவாதி, பணப் பித்து கொண்டவர்,யாரையும் நம்பாதவர்,ஊருக்கு ஒன்று தனக்கு ஒன்று என்றுவாழ்ந்தவர்.

    அண்ணா – உண்மையான ஆத்மார்த்தமான கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்,சாது போல் வேடம் போட்டு நழுவுபவர், கட்சியின் தலைமைப் பதவி மீது கண் வைத்திருந்தவர் , பணப் பெட்டி பெரியாரின் மனைவி பொறுப்பில் சென்றது பொறுக்காதவர் என்று தெரிகிறது.

    இரா.ஸ்ரீதரன்

  22. பகவான் கிருஷ்ணனுக்கு உடல் ரீதியான உணர்வுகள் கிடையாது
    அவன் என்ன மனிதனா
    ஆண் பென் என்ற பாகுபாட்டைஎல்லாம் கடந்தவன்
    மேலும் குழந்தை கிருஷ்ணனின் பால லீலைகள் தான் அது
    எனவே புரிந்து கொண்டு பேசவும் ராம்கோபால் அவர்களே

    படித்தவர்களே இது போல் பேசினால் எப்படி

    இரா.ஸ்ரீதரன்

  23. ராம் கோபால் அவர்களே
    நீங்க தமிழ்பண்பாட்டைப்பற்றி பேசுகிறீர்களா? இல்லை பெரியார் பண்பாட்டைப் பற்றி பேசுகிறீர்களா?ஒரு இளம்வயது பெண்ணை ஒரு முதுபெரும் கிழவர் மணந்தால் அதில் என்ன கேவலம் என்கிறீர்களா!
    உங்களுக்கும் குஷ்புவிற்கும் மன்னிக்கவும் பெரியாருக்கும் குஷ்புவிற்கும்
    எந்த வேற்றுமையுமில்லை.இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழர் அல்லாதவர்கள் எல்லாம் பெரியார் உட்பட தமிழர்களுக்கு அறிவுரை கூறுவது தான்!
    ஆறுமுகம் பூபதி

  24. அருமையான உதாரணங்கள்! விளக்கங்கள்! இதுமாதிரி ஒரு தளம் இல்லையே என்று வருந்தினேன்.
    சில சிறுவர்கள்(?) பெரியார் வழி என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்த கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் இந்து மதத்தை பற்றி அறியாதவர்கள்.
    மேன்மேலும் விளக்கங்கள் தொடர வாழ்த்துகிறேன்! வரவேற்கிறேன்!

  25. கல்வியிற் சிறந்த தமிழ் நாடு- புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு, பாரத பண்பாட்டின் ஒரு மிளிரும் அங்கமாக விளங்கிய தமிழ் கலாச்சாரம், இன்று பகுத்தறிவாளிகள் என்று தமக்குத்தாமே பீற்றிக்கொள்ளும் ஒரு பண்பாடற்ற கூட்டத்தால் சிதையுண்டு நிற்கிறது! இந்த சுயநலக் கூட்டத்தின் முகத்திரையை கிழித்து எரியும் தமிழ்ஹிந்து இணையதளம் தம் ஈடு இணையற்ற சேவையை சீரும் சிறப்போடும் தொடர, எல்லாம் வல்ல பரம்பொருளை மனமாற பிரார்த்திக்கிறேன்! இன்றுதான் இந்த இணைய தளத்தை முதன் முதலாக பார்த்தேன். கூடிய விரைவில் இருக்கும் அனைத்து விவரங்களையும் படித்து மனதில் கொள்ளுவேன். மீண்டும் சந்திப்பேன்.
    வாழ்க ஹிந்து மதம்! வளர்க தமிழ்ஹிந்து இணைய தளம்!

  26. EVR was a bundle of contradictions throughout his lfe.

    He conducted self respect marriages but advocated live-in relationships through his writings.

    Poor maniyammai could not bear the torture not only from EVR but even from veeramani. She died in 1978 when she was only 56 yeas old.

  27. திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்

    மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

    பிராமணன் – சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் – பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

    இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் “கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

    தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ என்று இருக்கிறதே. “மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே’ என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

    பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்’ என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

    வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

    முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

    நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

    பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

    “நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, “Proposed Husband and Wife” என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். “நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.” என்றார்கள். “எவ்வளவு காலமாக’ என்று கேட்டேன். “எட்டு மாதமாக’ என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? “பதிவிரதம்’ பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

    ‘விடுதலை’ 28.6.1973

  28. 1. “திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்”
    – யார் வேண்டுமானாலும் யார்கூட வேண்டுமானாலும் போலாம். யாருக்கு யார் பிறந்தார்னே தெரியத் தேவையில்ல.

    2. “பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம்.”
    – உண்மைய சொல்லுங்க! பார்ப்பனனா நாட்டை ஆண்டான்? பார்ப்பனன் தர்மம் பிச்சை எடுத்து தின்கிறது தானே ஐயா? அப்ப யாரு அடிமைப் படுத்தினானோ அவன் பார்ப்பனனே கிடையாது. பார்ப்பனனுக்குத் தாண்டி மெஜாரிட்டி ஆண்ட பரம்பரை இருந்தான் பாரு! அவனும் இதுல உடந்தை. அவனை விட்டுட்டு பார்ப்பான மட்டும் ஏன்யா குறி பார்க்கிறீங்க? இப்பவும் ராஜராஜ சோழன் சதயத் திருவிழாவுக்கு பல ஜாதித் தலைவர்கள் போஸ்டர் அடிக்கிறாங்க! இந்த போஸ்டர் மெஜாரிட்டி ஆளுங்க பண்ணாததையா பார்ப்பான் பண்ணிட்டான்? சரி, அவன தான் அடிக்கிறீங்க, திருப்பி அடிக்க மாட்டான்! தெரியும்! அவனை சாட வேண்டிய இடத்தில் ஒரு ஆன்மீக அறிவுப்பெட்டகத்தையும், விஞ்ஞானத்தால் கண்டறியப்படாத இறையையும் நிராகரிக்கிறீர்களே!

    //வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

    நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

    பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?//

    – 70 வயதில் 30 வயதுப் பெண்ணை இரண்டாந்தாரமாக மணமுடித்த முதியவரின் பேச்சாம் இது! ஒரு கண்மணி பதிவிட்டுள்ளார். பேசுறது எல்லாம் முட்டாளுங்களுக்காக தான்னு அப்பவே சொல்லியிருக்காருல! தனக்கு ஒரு நியாயம்! மத்தவனுக்கு ஒரு நியாயம்!

    “நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, “Proposed Husband and Wife” என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். “நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.” என்றார்கள். “எவ்வளவு காலமாக’ என்று கேட்டேன். “எட்டு மாதமாக’ என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? “பதிவிரதம்’ பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?”

    சொம்மா சூப்பரா முன்னேரிகிதுபா நாடு!

    முன்னேற்றம் என்ற போர்வையில் கட்டுப்பாடற்றுப் போவது தான் வெள்ளைக்காரன் ஸ்டைல். அது நமக்கு எப்பவோ வந்தாச்சு. எத்தனை கள்ளக்காதல் தான் தினம் தினம்? கல்யாணத்த நிறுத்து! அத்து தான் பிரச்சனையே! யாரு வேணாலும் யாருகூட வேணாலும் போலாம். அதான் முன்னேற்றம். 4அவது மாசமே இன்னொருத்தனக் கட்டிக்கலாம். அது தான் இந்தியாவ வல்லரசாக்கும்.

    நாட்டில எல்லாருமே பிச்சை எடுக்கிற மாதிரியும் வெள்ளைக்காரன் தான் வந்து வெள்ளை அடிச்சுக் குடுத்த மாதிரியும் பேசுகிறீர்களே!

    அன்னைக்கு இருந்த தேர்ச்சி இன்னைக்கு இருக்குதா? கல்லுல அன்னைக்கு கோவில் கட்டினான்! 1200 வருஷமா நிக்குது! அது அன்னைக்கு நம்ம மூதாதையரோட தொலைநோக்கு! இன்னைக்கு வீடு கட்டறான்! யமுனை நதியில வெள்ளம் வந்த வீடெல்லாம் சீட்டுக்கட்டுமாதிரி சரியுது! நல்லதை நிராகரிச்சா, கெட்டதை வீட்டுக்குள்ள கொண்டு வந்து வெச்சா யாருக்கு நஷ்டம்? நமக்குத் தானே! அது தான நடக்குது இப்போ? டாலர் மதிப்பு 60 ரூவாயாம்! யாரு நிர்ணயிக்கிறது? அவன் தான். அன்னைக்கு வேலையில தரம் இருந்தது! கட்டடமெல்லாம் இன்னைக்கும் அந்தத் தரத்த சொல்லிகிட்டே நிக்குது. இன்னைக்கு தரம் குறைஞ்சு போச்சு. சாப்பாடு பீட்சாவா மாறிடுச்சு. எல்லாம் கிட்னிய விக்கிறான். விவசாயிஎல்லாம் நிவாரண நிதி வாங்கறான். விளைச்சல் நிலமெல்லாம் கட்டடமாகுது. கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல வாத்தியார பசங்க கெட்ட வார்த்தைல திட்ரானுங்க. பஞ்சாப்லர்ந்து வர்ற லாரி டிரைவரு கலீஜ் கலீஜ்னு சொல்லிக்கிட்டே டாஸ்மாக்ல க்வாட்டர கப்புன்னு அடிக்கிறாரு. ஐயரு மந்திரத்த விட்டான். சாமிய விட்டான். ஐயரு பையன் வைசியனாயிட்டான். ஐ.டி. கம்பெனில வேலைக்குப் போய்ட்டான். சத்திரியனெல்லாம் சினிமாக்கு போய்ட்டான். தலைவரு படத்துக்கு முதல் நாள் போய் விசிலடிச்சிட்டு உக்காந்த்ருக்கான். ஐயர்ருங்க வைசியனாகரதால, வைசியனெல்லாம் அரசியல்ல சேர்ந்துட்டான். இப்புடி ஒரே தாறுமாறா போய்ட்ருக்குது! ஆனா அதே சூத்திரன் மட்டும் இன்னமும் விவசாயத்த விட முடியாம புடிச்சிக்கிட்டு நிக்கறான் பாரு! அவனுக்காக நம்ம முன்னோகள் சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயத்த செஞ்சு, கிறிஸ்த்தவர்கள் பரப்புன இங்கிலீஷ் மருந்தெல்லாத்தையும் தவிர்த்து, மண்ண வாழ வெக்கணும் ஐயா! வேதத்திலருந்து, விவசாயத்தில போடற இயற்கை உரம் வரைக்கும் எதையும் நம்மாளுங்க, பேப்பர்ல பதியல! மனசுல தான் பதிஞ்சுருந்தாங்க! அதை மாத்தி நாட்டை நாசமாக்கி, நல்ல பேர் வாங்கீட்டீங்கய்யா!

    வெற்றி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் திருப்தியில் உள்ளது. அது இன்று யாருக்கும் இல்லை. சூத்திரனை பார்ப்பனனாக மாற்ற வேண்டும் என்றால் சூத்திரனை வேதம் கற்க செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கலேல்லாம் பைபிள் படிப்பது போல், நாம் அனைவரும் கீதை படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால், சூத்திரன் கீதையையும், வேதத்தையும் படித்து பார்ப்பனனாகியிருப்பான். அவன் பார்ப்பானாயிட்டா அப்புறம் நம்ம கதி? சூத்திரனை வளர விடாத! பார்ப்பான வாழவே விடாத! உண்மையான விடுதலை! மொத்தமா சமாதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *