இசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறு

குறியீடு (Notation) என்பது இசையின் எழுத்து வடிவம் போன்றது. இசைத் தொகுப்பின் குறியீட்டைக் கொண்டு எந்த தேசத்துக் கலைஞனும் வாசிக்க முடியும். ஐரோப்பா இசையில் குறியீடு பிரதானமானது. பல்லிசை (Polyphony) முறையில் பல வாத்தியங்களும் ஒரே நேரத்தில் இசைக்குமாதலால், குறியீட்டு இலக்கணங்களைக் கொண்டு அவர்களாகவே இசை ஒருங்கிணைப்பு (Conduction) செய்ய முடியும். அதனாலேயே ஐரோப்பா குறியீடான ஸ்டாஃப் நொட்டேஷன் (Staff Notation) மிக நுணுக்கமான இசைத் தேவைகளையும், இசைக் கூறுகளின் அளவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

sibelius_demoஸிபேலியஸ் (Silbelius), ட்ரெப்லிஸ் (Treblis) போன்ற மென்பொருட்களைக் கொண்டு ஐரோப்பா இசை வடிவங்களைக் குறிக்கலாம். அப்படித் தொகுக்கப்பட்ட இசையை எந்த வாத்தியமுமில்லாமல் கணிணியில் இசைத்துப் பார்க்கலாம். இந்த வகை சிமுலேஷன் (Simulation) இசையமைப்பாளர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது.

ஸ்டாஃப் நொட்டேஷனில் தாளம், வேகம், ஸ்தாயிக்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாளம் உள்ளது. இதை நீளமான ஐந்து வரிகளில் (Staff) குறிப்பிடுவர். பதினைந்தாம் நூற்றாண்டின் தேவாலய இசையில் தொடங்கி, இன்றைய செவ்வியல் இசை வடிவங்கள் வரை குறியீட்டு முறையில் உள்ளன. அதனாலேயே பல சிக்கல்களும் காலப்போக்கில் களையப்பட்டு இன்று ஸ்டாஃப் நொட்டேஷன் ஒரு பண்பட்ட மொழி அடையாளமாகத் தனித்து நிற்கிறது. இசை மேதைகளான மோசார்ட், பாக், ஆரன் கோப்லாண்ட் (Aaron Copland), லியனார்ட் பெர்ன்ஸ்டீன் (Leonard Bernstein) போன்றோர் இதில் பல புதுமைகளை நுழைத்துள்ளனர். இதனால் ஜெர்மன் மொழி தெரியாத ஒரு ஜப்பானிய இசையமைப்பாளரான ஓஸாவால் (Ozwa, Seiji) சுலபமாக ஐரோப்பா இசைக்கு ஒருங்கிணைப்பு செய்ய முடிகிறது.

lead_sheet

சரி, இந்திய இசையில் குறியீட்டு முறைக்கான வரலாறு உள்ளதா? ஸ்டாஃப் நொட்டேஷன் முறையைப் பயன்படுத்தியுள்ளனரா?

இந்திய இசை வடிவம் ஐரோப்பா இசையைக் காட்டிலும் பழமையானது. நாட்டிய/இசை சாஸ்திர இலக்கணங்கள் பண்பட்டு இருந்த ஐந்தாம் நூற்றாண்டில், ஐரோப்பா இசை ஆரம்ப அடிகளைக் கூட எடுத்து வைக்கவில்லை. இதைப் பாரம்பரிய நோக்கில் பெருமையாகக் கருதினாலும், நாம் தொகுக்க வேண்டிய இசை வடிவங்களும், முறைகளும் எண்ணிலடங்காமல் இருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், குருகுல அமைப்பு ஒரு முக்கிய காரணமாகிறது.

நம் நாட்டின் வழக்கப்படி கற்பதற்கு குருகுலவாசம் மட்டுமேgurukulam2 இருந்தது. சாஸ்திரம், இசை, அறம் போன்ற அறிவுசார் துறை மட்டுமல்லாது, வீரம் சார்ந்த கல்விகளான வில் வித்தை, போர்த் தந்திரங்கள் என அனைத்தும் குருகுலத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த குரு-சிஷ்யன் முறைகளிலும் பல ரகசியக் காப்புகளும், எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யும் முறைகள் இல்லாததும் மிகப் பெரிய குறைகளாகும். அதனாலேயே பல கல்விமுறைகள் கோப்புகளாகத் தொகுக்கப்படாமல் அழிந்து போயின.

gurukulam1இசை முறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பண்டைய இசை முறைகளை சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள் வழியாகவே நாம் கண்டறிய வேண்டியிருக்கிறது. அடிப்படை இசை முறைகளும், குறியீட்டு மொழிகளும் அந்தக் காலத்தில் இருந்தாலும் நம் தமிழிசையின் அனைத்துச் சாளரங்களையும் திறக்க இவை போதுமானதாக இல்லை. பல நுணுக்கமான இசை வடிவங்கள் வாய்வழியாகவே வந்தன. குறிப்பாக `கமகம்` என்னும் அலங்காரத்தில் நுண்ணிய சுரவேறுபாடுகள் சஞ்சாரிக்கும் நேர அளவுகளின் முறை பற்றிய குறியீடு தொகுக்கப்படவில்லை. இதைப் போல பல கர்நாடக சங்கீத அலங்காரங்கள் கோப்புகளில் இல்லாமல், வாத்திய இசை முறையில் குரு வழியே சங்கிலித் தொடராய் வந்துள்ளன.

இதனாலேயே கர்நாடக சங்கீதத்தை ஐரோப்பா இசை போல, ஒரு ஆவணப்படமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ கற்றுக்கொள்ள முடியாது. மேலும் கர்நாடக இசையின் சிறப்புகள், இந்திய இசை வரலாறு பலருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன. ஆனால், பெர்ஷிய இசை வடிவங்களுடன் இணைந்ததின் மூலம் உலக அரங்கில் ஹிந்துஸ்தானி இசை பிரபலமான வடிவமாக உள்ளது.

இந்தக் குறைபாடுளைக் களைய பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் ராஜாக்களும், இசைக் கலைஞர்களும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் பற்றி அபிரகாம் பண்டிதர் தன் `கர்ணாமிர்த சாகரம்` என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்.

1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் – “இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்” – என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ஆனாலும் 1874ஆம் ஆண்டு பூனாவில் தொடங்கப்பட்ட ஞான சமாஜ் என்ற அமைப்பில் இருந்த சில இசைக் கலைஞர்கள் இதற்கு ஒரு முடிவமைக்கத் திட்டமிட்டனர். இந்திய இசையைத் தொகுக்காமல் விட்டுவிட்டால் அது அழிந்து போக வாய்ப்புள்ளதாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஞான சமாஜில் இருந்த சில ஆங்கிலேயேக் கலைஞர்கள் இந்திய இசையில் ஐரோப்பியக் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் முனைப்போடு இருந்தனர்.

ஆனால், ஞான சமாஜின் பொது அறிக்கை, இந்தக் கலைஞர்களின் எண்ணத்திற்குத் தடையாக இருந்தது. பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு, தங்களின் மாதாந்திர சுற்றறிக்கையில் – “Lastly, the Samaj will be instrumental in preserving our nationality in the sense of our possessing an indigenous art of singing, which, unlike English music, has challenged all its attempts at being reduced to writing,” என இந்திய இசைப் பாரம்பரியத்தை இசைக் கோப்புகள் வடிவில் கொண்டுவருவதற்குத் தடை விதித்தனர். குறியீட்டு முறையில் எழுதமுடியாததை ஒரு பெருமையாகக் கருதினர் என்று Lord Mark Kerr எனும் ஞான சபை உறுப்பினர் மற்றும் ஆங்கிலேயே அரசியல்வாதி தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்கள் பல நாட்டின் பொக்கிஷங்களையும், கலைகளையும் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வது போல், இந்திய இசை வடிவத்தின் இசைக் குறியீடுகளையும் உபயோகிக்கத் திட்டமிட்டுளனர் என ஞான சமாஜ் நினைத்தது. ஆனாலும், ஆங்கிலேயர்களின் துணை வேண்டுமென்பதால் திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இதைப் பற்றிக் கேட்கலாமென்றிருந்தனர்.

1882 ஆம் ஆண்டு பூனாவிற்கு வந்த திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இந்திய இசையை ஐரோப்பா ஸ்டாஃப் நொட்டேஷனில் எழுதுவதைப் பற்றி ஞான சமாஜ் விவாதித்தது. நுணுக்கமான இந்திய இசை வடிவத்தை குறியீடுகளில் விவரிக்க முடியாதென உடனடியாக பதில் வந்தது. கமகங்கள் மற்றும் ராக முறைகளை எப்படிக் குறிப்பிடுவது என பலதரப்பட்ட விவாதங்கள் தொடர்ந்தன.

 

ஏ.எம்.சின்னசுவாமி முதலியார்

தாகூர் போன்றவர்கள் தேசியத்தை அடிப்படையாகக்கொண்டு குறியீட்டு மொழியை நிராகரித்திருந்தாலும், உலகளாவிய குறியீட்டு முறைக்குள் இந்திய இசை வரவேண்டுமென்ற ஆசை பலரிடம் இருந்தது.

சென்னையில் வேலைபார்த்துவந்த சின்னசுவாமி முதலியாரிடம் இதை நிகழ்த்திக் காட்டும் ஆர்வம் பல மடங்கிருந்தது. இவருக்கு லத்தீன், ஆங்கில மொழியறிவும், இந்திய மற்றும் ஐரோப்பா இசையில் ஆர்வம் அதிகமாக இருந்ததும் முக்கிய காரணங்கள்.  அவர் ஐரோப்பா குறியீடு கர்நாடக இசைக்குப் பொருத்தமான ஒன்று எனத் திட்டவட்டமாக நம்பினார்.

1892 ஆம் ஆண்டு விஸ்தாரமாக Oriental Music in European Notation என்ற புத்தகத்திற்கான வேலையைத் தொடங்கினார். A2 அளவிலான புத்தகம் இது. இந்திய மொழியிலிருக்கும் மிக முக்கியமான ராகங்களையும், பாடல்களையும் ஐரோப்பா குறியீட்டில் நிரப்பினார்.

indiannotation

“bringing forth into the open air that which lay concealed and neglected like the ruins of an ancient city buried in subterranean vaults; it is hoped that the debris will soon be cleared and beautiful structures underneath exposed to the public gaze” – என்ற கவித்துவமான வார்த்தைகளுடன் இந்தப் புத்தகத்தைத் தொடங்கியுள்ளார்.

~ போன்ற குறியீடுகளில் சில நுண்ணிய கமகங்கள்.
S – என்ற குறியீட்டால் சுர அலங்கார அமைப்புகள்

இவற்றைப் போன்ற சில புதிய குறியீடுகளை உருவாக்கி, கர்நாடக இசையை ஐரோப்பா குறியீட்டில் கொண்டு வந்தார். அடிப்படையான கர்நாடக சங்கீதக் கூறுகளான தாளம், ராகம், பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவற்றிற்கு குறியீடு அமைத்தால் போதும். மற்றவை தானாவே வந்து சேர்ந்துவிடும் என்றெண்ணினார். இதன்படியே 120 பக்கங்களுக்கான குறியீட்டு மொழியில் பல பாடல்களை அந்தப் புத்தகங்களில் தொகுத்திருக்கிறார். இந்த பாடல்களின் கோப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்தார். அதன்படி ஒவ்வொரு பாடலிலும்:

1. ஆங்கிலத்தில் பாடலின் முதல் சில வார்த்தைகள்.
2. அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதே வார்த்தைகள்.
3. அதற்குக் கீழே, பாடலின் மூல மொழி.
4. இடது மூலையில் ராகம், அவற்றின் மேளகர்த்தா பெயர்.
5. வலது மூலையில் – பாடல் இயற்றியவர் பெயர், தாளம் மற்றும் சில அலங்காரக் குறிப்புகள்.
6. அதற்குக் கீழே: ஐரோப்பா இசை வடிவம் போல, பாடலின் வேகத்தை இத்தாலிய மொழியில் – staccato, allegro, dolce, con spirito எனக் குறிப்பிடுவர்.
7. பாடலின் முதல் வரியில் – ஆரோகனம், அவரோகனம் பற்றிய குறிப்பு
8. இந்தக் குறிப்புகளுடன், ஐரோப்பிய note மற்றும் அதற்கிணையான இந்திய சுரம் பற்றியும் குறிப்பிருக்கும்.

இந்த வரிகளுக்குக் கீழே, பாடல், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

சின்னசுவாமி முதலியாரின் குறியீடுகளின் மூலம் பல பாடல்களை சுலபமாகத் தொகுக்க முடிந்தது. ஆங்கிலம் மற்றும் இந்திய இசை பற்றித் தெரிந்த ஒருவரால் சுலபமாகப் பாடவும் இசைக்கவும் முடிந்தது. இது இந்திய இசைக் குறியீட்டு மொழிக்கான முதல் வெற்றியாகும்.

கர்நாடக சங்கீதத்தை குறியீட்டு மொழியில் அடக்கியபிறகு, ஹிந்துஸ்தானி இசைக்கும் இதைப்போல் செய்யவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. ஆனாலும் பணம் மற்றும் நேரப் பிரச்சினையால் சின்னசுவாமியால் இதை முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை.

ஆனாலும், இந்த முறையைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் H.P.Krishna Rao தன் Steps in Hindu Music in English Notation என்ற புத்தகத்தின் மூலம் சின்னசுவாமியின் மொழியைப் பிரபலப்படுத்தினார். இந்தப் புத்தகத்தில் இந்திய சுரங்களை ஐரோப்பிய நோட் வடிவத்தில் எப்படி எழுதுவது என்பதை விவரித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் மூலம் இந்திய இசை வடிவத்தை முழுவதாய் ஐரோப்பாவின் வடிவத்திற்கு மாற்ற ஒருவர் கற்றுக்கொள்ள முடியும்.

அடுத்தப் பகுதியில், இந்தக் குறியீட்டு முறையை ஒரு கச்சிதமான வடிவில் கொண்டு வந்த `சங்கீத சம்பிரதாயா பிரதர்ஷினி` என்ற புத்தகத்தைப் பற்றிப் பார்க்கலாம். இதை எழுதியவர் முத்துஸ்வாமி தீ‌க்ஷிதர் வழிப் பேரனான சுப்புராம தீ‌க்ஷிதர். வெளியான ஆண்டு: 1904

 

இந்த கட்டுரை எழுத உதவிய புத்தகங்கள்:

1. Bakhale,Janaki – Two men and Music: Nationalism in the making of an Indian Classical Tradition.
2. A.M.Chinnaswamy – Oriental Music in European Notation
3. Sibelius Software – https://www.sibelius.com
4. Amanda.J.Weidman – Singing the Classical, Voicing the Modern – The postcolonial politics of Music in South India.

(தொடரும்…)

One Reply to “இசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *