புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்
பேரா. ஆர். வைத்தியநாதன்
30 Sep 2009 |
அச்சிட
மூலம் : பேராசிரியர் ஆர். வைத்தியநாதன்
தமிழில்: மது
செப்டம்பர் 4 (2009) அன்று சில தினசரிகளில், காஞ்சி சங்கராச்சாரியாரின் மீது போடப்பட்ட வழக்குகளில் சாட்சிகள் அரசுத்தரப்புக்கு எதிர்மறையாக பேசுவதாகவும், கடைசியில் வழக்கே பொய் என்று நிரூபிக்கப் படக்கூடும் என்றும் சிறிய செய்தியாக வெளிவந்தது. பழமையும் பாரம்பரியமும் உள்ள ஒரு அமைப்பின் மீது அரசு நடத்திய தாக்குதலும், இத்தனை நாள் அந்த அமைப்பு பட்ட அவமானங்களும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவை.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று. என் நண்பருக்கு அன்று அது புரியவில்லை. நம்மில் பலருக்கு இந்தியாவைப் போன்றதொரு நாட்டில் ‘மதச்சார்பற்ற’ அரசு எப்படி இயங்கும் என்றே புரிவதில்லை. இதை சற்று விரிவாக கீழே தொடர்வோம்.
சங்கராச்சாரியாரின் கைது பற்றி, NDTV-யில் திருமதி பர்கா தத் அவர்களால் நடத்தப்படும் “We the people” என்கிற நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், சட்டம் எல்லோருக்கும் சமமானது அதனால் ஜெயேந்திரரை, குறைந்த பட்சம் ஒரு பப்பு யாதவ் போலவோ ஒரு தஸ்லிமுதீன் போலவோவாவது நடத்தப் படவேண்டும் என்று கேட்டது பரிதாபமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட “பகுத்தறிவுவாதி” ஒருவர் சொன்னார் - ”ஜெயேந்திரர் நிரந்தரமாக வேலூர் சிறையிலேயே இருக்கட்டும் ஏனெனில் அவர் சிறையில் இருப்பது சிறையை புனிதப்படுத்தும் என்று ஒரு பக்தர் சொல்கிறாரே”.
இப்புனித பீடத்தின் மீது தொடுக்கப் பட்ட இந்த தாக்குதல், ஒரு பரந்து விரிந்த பார்வையில் இந்து மத பாரம்பரியத்திற்கு, பெயரளவிலேயே மதச்சார்பற்ற நடுநிலைமையுடன் செயல்படும் இந்த அரசியலமைப்பிடமிருந்து வரும் மிரட்டலாகவே புரிந்து கொள்ளப் படவேண்டும்.
இது ஏதோ அனாமத்தாக எங்கோ எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கக் கூடிய வழக்கா? நிகழ்வுகளைப் பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. உடுப்பியிலுள்ள பெஜாவர் மடத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும், அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தரான கனகதாசர் என்கிற குருபர் இனத்தைச் சேர்ந்த பக்தகவி மடத்தால் அவமதிக்கப் பட்ட சம்பவம் திடீரென்று நினைவுக்கு வந்துவிட்டதே இந்த கோரிக்கைக்கு காரணம். இங்கேயும் பெஜாவர் மடத்து சுவாமிகள் தலித்துகளுடன் கலந்து பழகியதும், சமூக அமைதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார் என்ற விஷயமும் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது. அவர் கல்வித் துறையில் மிகுந்த முயற்சியுடனும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக எழுந்த இயக்கத்தின் முன்னிலையிலும் இருந்து வந்தார்.
மூலவர்கள் புரட்சியில் இறங்குவதால் அரசுக்கு நடுக்கம்
நமது பாரம்பரியத்தில் இரண்டு விதமான மடங்கள் இருக்கின்றன. கோவில்களில் கருவறைக்குள் இருக்கும் தெய்வத்தைப் போல ஒரு வகையும், திருவிழா நாட்களில் கோவிலைச் சுற்றி வீதியெங்கும் ஊர்வலமாக பவனி வரும் உற்சவ மூர்த்தியாக இன்னொரு வகையையும் என்று சற்று எளிமையாக சொல்லலாம். இந்த உற்சவ மூர்த்திகள், நன்கு உடுத்திக் கொண்டு கண்டவர் ரசிக்கும் அளவில் இருக்கும் இந்து மதத்தின் முகங்கள். உற்சவ மூர்த்திகளாக வலம் வரும் இந்த துறவிகளுக்கு ஆங்கிலம் தெரியும், பத்திரிக்கையாளர்களை கையாளுவார்கள், தொலைகாட்சி ஊடகங்களுக்கு திறமையாக பேட்டி கொடுப்பார்கள், இவர்களில் சிலர் உலகம் முழுவதும் சுற்றி வருவார்கள்.
இவர்கள் சனாதன தருமத்தின் ‘முத்திரை அடையாளம்’ (Brand Image) என்று சொல்லலாம். ஒரு விதத்தில் இவர்கள் மதச் சார்பற்றவர்கள்; விளைவுகள் எதுவும் புரியாமல் அடிக்கடி சர்வ சமய சமரசத்தைப் பற்றி பேசுவார்கள்; சிலர் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இவர்களது மதசம்பந்தமில்லாத மற்ற விஷயங்களில் (secular) செயல்பாடுகள் காரணமாகவே கூட அரசுடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள் - ரஜனீஷின் வாழ்க்கையில் நடந்தது போல. அமிர்தானந்தமயி அம்மா, ஸ்ரீ ஸ்ரீ, ரஜனீஷ், மகேஷ் யோகி போன்றவர்களை இந்த பிரிவில் சேர்க்கலாம்.
இதற்கு முன் சொன்ன மூலவர் வகையில், அண்மைக் காலம் வரை உலகச் சூழலைப் பற்றி எந்த கவலையும் இன்றி, தமது தருமத்தின் மீதே கவனம் செலுத்தி வந்த சங்கர, மத்வ மடங்களை சொல்லலாம். சிருங்கேரி, காஞ்சி, உடுப்பி போன்ற மடங்கள், தங்கள் பாரம்பரியத்திலும், தங்கள் ஸ்தாபகர்களான ஆதி சங்கரர், மத்வாச்சாரியார் போன்ற குருக்களிடமிருந்தே தம் சக்தியை பெறுகின்றன.
உலக வழக்குகளில் தலையிடாமல் ஒதுங்கி இருந்த வரை, இந்த புனித பீடங்களிடம் மதச் சார்பற்ற அரசு பொறுமை காட்டி வந்தது. ஏனெனில் இந்த மடங்கள் தம் இருப்பின் நியாயத்தைத் தமது இந்த நிலைப்பாட்டினாலேயே பெற்றனவே தவிர, அவற்றுக்கு மத சம்பந்தமில்லாத ஆதரவு எதுவும் தேவைப்படவில்லை. எப்போது இந்த மடங்கள் சமூக புரட்சியிலும், கல்வி - சுகாதாரம் போன்ற துறைகளிலும் பங்கு கொள்ள ஆரம்பித்தனவோ அப்போதே மதச்சார்பற்ற அரசு அதிர்ந்து போனது. ஏனெனில் அதன் பிறகு சாதி பிரச்னைகளிலும், ஏழ்மையிலும் போராட அரசியல் வாதிகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் ஒரு நியாயம் இல்லாமல் போய்விடுகிறது. இதே உற்சவ மூர்த்திகளாக வலம் வரும், மதச்சார்பற்ற துறவிகளிடம் அவர்கள் எப்படி செயல் பட்டாலும் அரசுக்கு கவலை இல்லை, ஏனெனில் இந்த வகை துறவிகளுக்கு பெரிதாக பாரம்பரியமோ, ஆயிரம் வருட தார்மீக நியாயங்களோ இல்லை - அவர்களிடம் பெரும்பாலும் இருப்பது வசீகரமான ஆளுமை மட்டும்தான்.
மதமாற்றமா அல்லது சாதீயமற்ற நிலையா?
இந்தப் பின்னணியில்தான் காஞ்சி பெரியவர் நேரடியாக மதசம்பந்தமில்லாத சமூக சிக்கல்களை தமது பீடத்தைக் கொண்டே தீர்த்துவைக்க முயன்றார். தலித்துக்களை நெருங்கி, அவர்களது வாழ்வில் முன்னேற்றத்துக்கும், மதிப்பான ஒரு நிலையை அவர்கள் அடையவும் ஒரு தீர்வை அவர் முயன்றபோது அரசு வர்க்கம் நிலைகுலைந்தது. தலித் மக்களின் ‘விடுதலைக்கு’ பொதுவாக ஏற்கப்பட்ட தீர்வாக அரசியல் பிரசங்கங்களில் கூறப்படும், வேறு மதங்களுக்கு மாறி விடுதல் அல்லது தத்தமது சாதியை தூக்கி எறிந்து விடக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றிலிருந்து இவரது முயற்சி மாறுபட்டதால், மதச்சார்பற்ற அரசு கவலை கொள்ள ஆரம்பித்தது.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திட்டமோ, அவர்கள் இன்றைய சமூக அமைப்பினுள் இருந்தவாறே, கண்ணியமும் மரியாதையும் கொண்டு வாழும் சாத்தியத்தை முன்னெடுத்து வைக்கிறது. மதமாற்றம் அல்லது சாதி ஒழிப்பு பற்றிய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகள் - இவை இரண்டை மட்டுமெ தமது தீர்வாகக் கொண்ட தலித் அரசியல் வாதிகளுக்கும், மதச்சார்பின்மை வாதிகளுக்கும், இவரது நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ள கடினமாக இருந்தன.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், கருவறையில் மூல தெய்வத்தைப் போல இருப்பதுதான் நியாயம் என்று நினைத்து மடத்தைச் சேர்ந்த சில பழமைவாதிகளுமே அவரை எதிர்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை எந்தவகையில் இறங்கி வந்து மக்களின் நடைமுறை வாழ்வின் தீர்வுக்கு பாடுபட்டாலும் அது ஒரு வகையில் இழிவான துரோக செயல். இந்த ஒரு இடத்தில் மட்டும், வியக்கத்தக்க வகையில், பழமை வாதிகள் மதச்சார்பின்மை வாதிகளுடன் சேர்ந்து மடத்தை எதிர்த்தார்கள். இதை அரசியல் வழக்கில் சொல்வதானால், வலது கோடியும் இடது கோடியும் நடுநிலைமையை தீர்த்துக்கட்ட சேர்ந்துகொண்ட கூட்டு என்று சொல்லலாம்.
ஒருவேளை இந்த அரசு மதச்சார்ப்பற்ற அல்லது நடுநிலைமை அரசாக இல்லாமல், இந்து தருமத்தை காக்கக் கூடிய அரசாக இருந்திருந்தால், இந்த பிரச்சனை வேறு விதத்தில் அணுகப் பட்டிருக்கும். அரசிடமிருந்து கடும் எதிர்ப்பும், தடங்கலாக இருப்பதற்காக பழமை வாதிகளும் தண்டிக்கப் பட்டிருப்பார். ஆனால் அரசோ கருத்தளவில் மதச்சார்பற்றதாகவும் , நடைமுறையில் ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமுள்ள தர்ம ஸ்தாபனங்களுக்கு விரோதமாகவும் இருக்கிறது.
சீனாவின் அழைப்பு
சீனாவிலிருந்து வந்த அழைப்பு நமது சமூகத்திற்கும், மடத்திற்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அங்கிருந்து அழைப்பு விடுத்த அரசு சார்பற்ற அமைப்பு, சீன அரசின் உயர்மட்டத்தில் அனுமதி பெறாமலும், இது போன்ற விஷயங்களில் சீனா எப்படி செயல் படும் என்று தெரியாமலும் நிச்சயம் அழைப்பு விடுத்திருக்காது என்பது நிச்சயம். பைபிளை உள்ளே எடுத்துச் செல்வதற்கும், போப்பாண்டவர் விஜயம் செய்வதற்கும் தடைகள் விதிக்கும் சீன அதிகாரம், இந்து மதத் தலைமை ஒன்றை அழைக்க அனுமதி அளித்தது வியப்புக்குரியது.
இந்த கட்டுரை ஆசிரியர் இந்திய சீன அதிகாரிகளிடம் பழகியதிலிருந்து, சீனா ஊடூருவல் போக்கு இல்லாத, எல்லா கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லுகிற, ஹிந்து மதம் போன்ற மதங்கள் இருப்பதை வரவேற்கிறது என்று தெரியவந்தது. இந்தியா ஒரு தர்ம பூமியாக இருப்பதால் மறுபிறப்பில் இங்கே வந்து பிறப்பதே சிறந்தது என்று ஒரு பழைமையான சீன ஐதீகம் இருக்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் தூண்டப்பட்டது என்று சொல்லப்படும், சீன அரசின் பலுன் கோங் (Falun Gong) அனுபவமும், தாலாய் லாமா உடனான பிரச்சனைகளாலும், சீன மக்களின் மதத் தேவைகளுக்கு வேறு உபாயங்களை பீஜிங் தேடுமாறு செய்துவிட்டது.
எந்த ஒரு அரசும், இதை ஒரு பிராந்திய ராஜ தந்திரமாக கருதி, முனிவரின் விஜயத்தை ஏற்பாட்டு செய்வதில் முனைப்புடன் குதித்திருக்கும். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ள காஞ்சி மடம் போன்ற அமைப்புகளால் வரலாற்றில் மிக முக்கியமான சமூகத் தொடர்பு ஏற்படுவதை இந்திய அரசு ஊக்கப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, இவ்வாறு கடல் கடந்து பயணிப்பதால் “மாசு” படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பழமை வாதிகளுக்கு துணை போனதன் மூலம் இந்த முயற்சியை தடுத்துவிட்டது.
உள்ளபடியே அரசின் நடுநிலை தர்ம அமைப்புக்களுக்கு ஒரு அபாயமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த நடுநிலை இந்து அமைப்புகளிடம் மட்டும்தான் கடைபிடிக்கப் படுகிறதே தவிர, ஆபிரகாமிய அமைப்புகளிடம் பலிப்பதில்லை - அவை அரசை மிரட்டியே தம் முடிவுகளை சாதித்துக் கொள்ளுகின்றன. சுதந்திரம் பெற்ற போதே, அரசு காலனியாதிக்கத்தால் சர்ச்சுக்கு வழங்கப் பட்ட நிலம் மற்றும் இதர சொத்துக்களை இனாமாகவோ, குறைந்த விலையிலோ பெற்றிருக்க வேண்டும்; ஆனால் அப்படி செய்ய வில்லை.
இந்த பாலைவன பாரம்பரியங்கள் அரசை எப்படியும் மிரட்டலாம் ஏனெனில் அவர்களுக்கு உலக பின்புலமும் ஆதரவும் இருக்கிறது. ஆபிரகாமின் இரண்டாவது குழந்தை தனது உள்ளூர் பிரச்சனைகளையும் உலக பிரச்சினைகளாக தன உலகளாவிய நெட்வொர்க்கின் மூலம் பெரிது படுத்துகிறது, அதே நேரத்தில் மூன்றாவது குழந்தை தனது உலக பிரச்சனைகளை எல்லாம் உள்ளூருக்கு கொண்டுவந்து விடுகிறது. எங்கோ அமெரிக்காவில் ஜெரேமி பால்வெல் என்கிற தொலைக் காட்சி மதப்பிரசாரகர் முகமது நபியை ஒரு தீவிரவாதி என்று சொன்னதற்கு மும்பையில் ஐந்து பேர் சாக நேர்ந்தது. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம் ஜபுவாவில் கன்னியாஸ்தீரிகள் மீது நடந்த “ஹிந்து வெறியர்களின்” தாக்குதலுக்கு உலக அளவில் கோபமும் கண்டனமும் எழுகிறது, உண்மையில் அந்த தாக்குதல் அதே மதத்தைச் சேர்ந்த சில ரௌடிகளால் நிகழ்த்தப்பட்டது எனும்போதும்.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர (International Religious Freedom) ஆய்வுக் குழுவின் விமர்சனங்களை உள்ளூர் ஆங்கில ஊடகங்கள் பிடித்துக் கொண்டு, ஹிந்து பெரும்பான்மையை கடுமையாக விமர்சிக்கின்றன. ISI தொடர்புள்ள குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட சில கைது நடவடிக்கைகளை எதிர்த்து எழுந்த வன்முறையை பார்த்தால், புனித ரமலான் மாதத்தில் ஏன் அந்த கைதுகள் நடைபெற்றன என்று ஒரு முதல்வரே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் தாராளமாக ஒரு தீபாவளி அன்றைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் படலாம். உத்தர பிரதேச போலீஸ ஒரு மதப் பள்ளிக் கூடத்தில் சோதனை மேற்கொண்ட போது எழுந்த கூச்சல் கதறலையும், அதனைத் தொடர்ந்து பிரதம மந்திரியே தலையிட்டு வருத்தம் தெரிவித்ததையும் நினைத்துப் பாருங்கள்.
பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. காஞ்சி முனிவர் கைது செய்யப் பட்டபோது பெரிதாக வன்முறை நிகழ வில்லை - அதனால் பொதுமக்களுக்கே அவர் கைதில் கவலையோ பாதிப்போ இல்லை என்பன போன்ற அபத்தமான கருத்துக்கள் உருவாகின்றன.
அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். சனாதன தருமத்தின் மென்மையான இந்த போக்கே, அரசால் அல்லது வேறு வகையில் சொல்லப் போனால் க்ஷத்ரிய அரசனால் அதற்கு பாதுகாப்பு தேவை என்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அத்தகைய அரசால் மட்டுமே சொல்லாலும் செயலாலும் எல்லா வகையான இந்திய மரபுகளையும் காப்பாற்றி அவற்றின் புனிதத்தன்மையைத் தொடரச்செய்ய முடியும்.
கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM - Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர்.
இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள், நிறுவனத்தினுடையவை அல்ல.
30 September 2009 at 10:09 am
பேராசிரியர் வைத்தியனாதன் அவர்களின் இந்த ஆங்கிலக் கட்டுரையைப் படித்த போதே, இது தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே; தமிழ் இந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே என்று நினைத்தேன். மது நல்ல முறையில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு என் பாரட்டுகளும் நன்றியும்.