போகப் போகத் தெரியும் – 34

வைகோ-விடம் உள்ள ஏற்பாடு

vaiko-lganesan2006 சட்டமன்றத் தேர்தலில் நான்காவது இடத்திலிருந்து மதிமுக மூன்றாவது இடத்திற்கோ ஒருவேளை இரண்டாவது இடத்திற்கோ முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தபோது ஏழாவது இடத்திற்கோ எட்டாவது இடத்திற்கோ பின்தள்ளப்பட்டு விட்டது என்பதை கழகத் தோழர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை…

அதைத் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நம் அனைவருடைய நம்பிக்கையையும் உடைத்து நொறுக்கிவிட்டது. அதிமுக அணி தோல்வி அடைந்தது. மதிமுக படுதோல்வி அடைந்தது…

இந்த நிலையில் ஆருயிர் இளவல் காளிமுத்து அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

நான் முதல்நாள் இரவே புறப்பட்டு விருதுநகருக்குச் செல்கிறேன். அங்கு அருமைச் சகோதரர்கள் ஆர்.எம்.எஸ்., சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோர் காத்திருந்து என்னை அரசுப் பயணியர் விடுதியில் தங்கச் செய்தார்கள். நான், கம்பம் இராமகிருஷ்ணன் வீர இளவரசு ஆகிய மூவர் மட்டும் ஒரு காரில் காளிமுத்து ஊருக்குச் செல்கிறோம்.

செல்கிறபோது அவ்விருவரும் மறைந்த காளிமுத்து பற்றி பேசாமல் மதிமுக-வின் நிலை குறித்து விவாதித்தது எனக்கு வியப்பைத் தந்தது. அவர்கள் கூறியதெல்லாம், நான் எப்படியும் இந்த சோதனையிலிருந்து மதிமுக-வைக் காப்பாற்றவேண்டும் என்பதே. நான் கூறியதெல்லாம் எனக்கு எந்த வழியும் புலப்படவில்லை என்பதே. அவர்கள் ஆக்கபூர்வமான வழிமுறைகளைக் கூறுவார்களானால் அதன்படி நானும் செயல்படத் தயாராக இருக்கிறேன் என்பதே. பேசிக்கொண்டு செல்லும்போதே கம்பம் இராமகிருஷ்ணன், “அண்ணே நீங்கள் நாத்திகர்; ஆனால் நானோ ஆத்திகன். நான் கூறுவதை நீங்கள் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இனிமேல் நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஆண்டவன் விட்டவழிதான்.”

நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது திருமங்கலத்தில் இராமகிருஷ்ணன் இறங்கிக் கொண்டுவிட்டார்.

– எல். கணேசன் எம்.பி. / யார் துரோகி / மங்கை புக் டிஸ்டிரிபுயூட்டர்ஸ்.

 

vaiko1மக்களவை உறுப்பினரான எல். கணேசன் ஒப்புதல் வாக்குமூலம் இது.

மதிமுக-வை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு அதனுடைய முன்னணி வீரர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அவர் குறிப்பிடுகிறார். பகுத்தறிவு பயன்படவில்லை; பலவகையில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மதிமுக நிறுவனரான வைகோ-வின் கைவசம் ஏதோ ஒரு ஏற்பாடு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

சுயமரியாதை இயக்கம் என்று சூரத்தனமாகப் புறப்பட்டு நீதிக்கட்சி என்று ஆட்சியையும் அதிகாரத்தையும் வெகுஜன விரோத அரசியலையும் ருசிபார்த்து, திராவிடர்க் கழகம் என்று அறுபது ஆண்டுகாலம் இனவெறியை உற்பத்தி செய்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஊழல் முறையை உருவேற்றி, அதிமுக, மக்கள் திமுக, எம்.ஜி.ஆர் கழகம், மதிமுக, லட்சிய திமுக என்று பலவகையாகச் சிதறுண்டுவிட்ட கலாசார மாற்றத்தின் எச்சம் மிச்சம் இதுதான்.

பெரும்பாலான சுயமரியாதைக்காரர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாத்திகமாகத் தொடங்கிய பயணம் நம்பிக்கையைப் பார்த்துவிட்டது. ஆனால் வீட்டுக் கதவைத் தட்டாமல் வீதியில் நிற்கிறது.

எல். கணேசனின் வார்த்தைகளுக்கு இவ்வளவு விளக்கமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி.

இந்தச் செய்தி முரசொலி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி வந்திருக்கிறது.

பொங்களூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஏ.எஸ். மணி ஏற்பாடு செய்திருந்த 86 இலவசத் திருமணவிழா பற்றிய செய்தி இது. இந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி,” திருமணம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு பிரசாரப் பகுதி. திருமணம் என்பது வாழ்க்கையிலே ஒரு கட்டம் என்றாலும் கூட, திமு கழகத்தைப் பொருத்தவரை இந்த இயக்கத்தினுடைய வேர் சுயமரியாதை இயக்கம். அந்த வேரை பலப்படுத்தி நம்மிடத்திலே ஒப்படைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்,” என்று பேசியிருக்கிறார்.

அந்த விழாவில் மணமக்களுக்கு வழங்கப்பட்ட சீர்வரிசைகள் விழா நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும் முரசொலி இதழில் உள்ளன.

seerthiruththa-thirumanam

ஆயூர் ஆரோக்கிய, ஐஸ்வர்யத்தோடு வாழ்க’ என்று அந்த மணமக்களை வாழ்த்திவிட்டு நம்முடைய சந்தேகங்களைக் கேட்கிறோம்.

சீர்வரிசையில் குத்துவிளக்கு எதற்கு?
சீர்திருத்தத் திருமணத்தில் மங்கல நாண் எதற்கு?

 

மங்கல நாண் என்று நான் சொல்லவில்லை. முரசொலியில் உள்ள வண்ணப் புகைப்படத்தின் கீழ் ‘86 இணைகளுக்கான மங்கல நாண்களைத் தொட்டு வாழ்த்தி வழங்குகிறார் முதல்வர் கலைஞர்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சி நிலை பற்றித் தெரிந்து கொள்ள புறச்சான்றுகளே தேவையில்லை முரசொலி, எல். கணேசனின் புத்தகம் போன்ற அகச்சான்றுகளே போதும்.

தமிழர்களுக்குத் தாலி தேவையில்லை; தமிழர் மரபில், தமிழ் இலக்கியத்தில் தாலி இல்லை என்று வாதம் செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ‘தாலி உண்டு’ என்று கூறியபோதும் அதை மறுத்து டாக்டர் ம. இராசமாணிக்கனார், ‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்ற புத்தகம் எழுதினார் (1954)

மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட, கண்ணகியின் கையைப் பற்றி கோவலன் தீவலம் வந்தான்; மகளிர் பாலிகை ஏந்தி நின்றனர் என்று கூறிய சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் ‘மங்கல அணி’ பற்றியும் எழுதியுள்ளார். இது ‘மாங்கலிய சூத்திரம்’ என்று பொருள்கொள்ளப்பட்டது.

’மங்கல அணி’ என்பது ’மாங்கல்ய சூத்திரம்’ அல்ல என்று வாதம் செய்தார் இராசமாணிக்கனார்.

ஆனால் கழகத்தவரும் அவர்களுடைய காவலனாக இருந்த சில தமிழறிஞர்களும் எத்தனை முயற்சி செய்தாலும், தமிழர் வாழ்விலிருந்து தாலியை அகற்ற முடியவில்லை என்பதையே அறிவாலய விழா நமக்கு உறுதிப்படுத்துகிறது.

தாலியைக் கழற்ற முடியாமல் கதாநாயகி தவிக்கிற கிளைமாக்ஸ் காட்சி கே. பாக்கியராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் வரும். ‘காதல் முக்கியமல்ல; கழுத்தில் இருக்கும் தாலிதான் முக்கியம்’ என்று சொல்லி முடித்துவிடுவார்கள். தமிழகத்தின் மூலைமுடுக்கில் எல்லாம் இந்தத் திரைப்படம் வசூலைக் குவித்தது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆண்டவனையே கேள்வி கேட்க ஆரம்பித்தவர்கள் மங்கல நாணை மகிழ்ச்சியோடு தொடுகிறார்கள் என்றால் அவர்களுடைய பயணம் வெகுதூரம் வந்துவிட்டது. வெகுவேகமாக வந்துவிட்டார்கள்; ஆனால் பயணம் முடியும்போதுதான் அது எதிர்த்திசையில் வந்துவிட்டதைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

அவர்களுடைய பயணக் களைப்பை போக்குவதற்காக ஒரு கதை சொல்லட்டுமா?

ஒரு பையன்; ஒரு பெண்; இந்தப் பெண்ணுக்கு தன்மீது ஆசை உண்டு என்பது பையனுடைய நம்பிக்கை. அவளும் அவ்வப்போது அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறாள்.

அவளை மகிழ்விப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் அவன். பரிசுப் பொருள் வாங்கித் தரலாம் என்றால் அதற்கேற்ற பணவசதி இல்லை. வீரமாக ஏதாவது விளையாடலாம் என்றால் அவனுடைய உடல்வாகும் உள்ளமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. கவிதையாகக் கடிதம் எழுதலாமென்றால் அதற்கு இலக்கிய பயற்சியும் இலக்கணப் பரிச்சயமும் தேவை.

சிந்தித்துப் பார்த்தான்; மீண்டும் சிந்தித்துப் பார்த்தான். கடைசியில் செலவில்லாத வழி ஒன்று சிக்கியது.

மீசை இல்லாது இருந்தது அவன் முகம்; அதில் சிறிய மீசை ஒன்றை வளர்த்துக்கொண்டான். மீசையைப் பார்த்த காதலி, ‘ஆகா, அற்புதம்!’ என்றாள்.

அவனுக்குக் கால் தரையில் ஒட்டவில்லை. கொஞ்சம் முயற்சி செய்து மீசையைப் பெரிதாக்கிக் கொண்டான். இந்தமுறை அவள் அருகேயே வந்துவிட்டாள்.

“இப்போதுதான் உங்களுடைய கவர்ச்சி வெளிப்படுகிறது,” என்றாள்.

சுதாரித்துக் கொள்வதற்கு அவனுக்குக் கொஞ்சநேரம் ஆனது. இவளைத் தொட்டுவிடலாம் போலிருக்கிறதே என்கிற எண்ணத்தில் சில இரவுகளில் தூக்கத்தை இழந்தான்.

மீசைபோதாது என்று சிறிய தாடி வைத்துக்கொண்டான். கணக்கு தப்பவில்லை; அவள் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

ஒரு பத்துநாள் காதலியை பார்க்ககூடாது என்று முடிவுசெய்தவன், தாடியையும் பெரிதாக்கிக் கொண்டான்.

அதற்குமேல் நடந்ததைப் பற்றி எழுதமுடியாது; தமிழ் இந்துக்காரர்கள் தடையுத்தரவு வாங்கிவிட்டார்கள்.

இருந்தாலும் அவனுக்கு இந்த மர்மம் பிடிபடவில்லை. தாடியும் மீசையும் எப்படி ஒருவனை அழகாக ஆக்கமுடியும் என்ற கேள்வி அவனைக் குடைந்தது.

ஆசை என்று வரும்போது காதலியையும் அறிவு என்று வரும்போது நட்பினையும் தேடவேண்டும் அல்லவா?

அவன் நண்பனைத் தேடினான். நடந்ததை எல்லாம் நண்பனிடம் சொல்லி இதற்கு என்ன விடை? என்று கேட்டான்.

நண்பன் கொஞ்சம் அழுத்தமான ஆள்; அடுத்தவன் விஷயத்தில் எல்லோரும் அழுத்தமாகத்தான் இருப்பார்கள்.

‘எனக்குப் புரிந்துவிட்டது; ஆனால் உனக்கு எப்படிச் சொல்வது என்று யோசிக்கிறேன்’ என்றான் நண்பன்.

‘சொல்லு சொல்லு’ என்று நண்பனை உலுக்கி எடுத்தான் இவன்.

‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன்.

திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதைத்தான் எல். கணேசன் சொல்கிறார். இதைத்தான் மங்கல நாணும் சொல்கிறது.

இந்தத் தொடரின் அடுத்தப் பகுதிக்குப் போவதற்குமுன் ஒரு விளக்கம். சென்ற பகுதியில் தராசு என்ற நண்பர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

‘திராவிடக் கழகச் சார்புடைய முஸ்லீம்கள் தங்கள் மதத்தவர்களால் செருப்பால் அடிக்கப்பட்டனர் என்பது உண்மையா?’ என்று கேட்டிருந்தார்.

ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுதுவதில்லை. ஆனால் ஆதாரம், அடிக்குறிப்பு, பக்க எண் என்று போட்டுக்கொண்டே போனால் படிப்பவர்களுக்கு ஆயாசம் ஏற்படும் என்பதால் சில இடங்களில் அதைத் தவிர்த்து விடுகிறேன். இருந்தாலும் தராசுவுக்காக இதோ அந்த ஆதாரம்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போன்ற இடங்களில் திக ஆதரவு முஸ்லீம்கள் வன்முறைக்கு ஆளாயினர், மதார்ஷா, ஹாஜா மொஹிதீன் ஆகிய இருவரும் அபராதம் விதிக்கப்பட்டு பத்துமுறை செருப்பால் அடிக்கப்பட்டனர்.
– விடுதலை, 3.10.1952

மேற்கோள் மேடை:

தமிழகச் சூழலில் பெரியாரியம் மேலுக்கு வந்த நிலையில் மதம் என்பது முற்றாக மூடத்தனம். பார்ப்பனியப் படைப்பு என்று மட்டுமே பரப்புரை செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழரின் பக்தி இலக்கியம் முதலியவற்றை நாம் மதிக்கத் தவறினோம். மெய்யியல் என்பதேகூட மதம் என்று சாடப்பட்டதன் மூலம் வாழ்வியல் குறித்த ஆழ்ந்த பார்வை நமக்கு இல்லாமல் போயிற்று. மதம் என்பதே மூடத்தனம் என்ற பகுத்தறிவின் மூலம் நாம் இழந்தவை பல.
(கோவை ஞானி / பக். 71 வரலாற்றில் தமிழர், தமிழ் இலக்கியம் / காவ்யா.)

(தொடரும்…)

10 Replies to “போகப் போகத் தெரியும் – 34”

  1. There is one version in Tamil. i.e., Nayar Piditha Pulival Kathai. Paavam thiravida iyakka Jeevnkal. Thiravid iyakkam periyar, (anna pavam), karunanithi and MGR koottam nalla sampathithathu sapittathu, innamum sapidukirathu.

    thiravida iyakkam. athai tamilhindu innamum kapathidumonnu bayama irukkirathungo.

    IRUNGOVEL

  2. Pingback: tamil10.com
  3. அருமையாகச் செல்கிறது போகப்போகத்தெரியும் தொடர்.. மாண்புமிகு கருனாநிதியும், மானமிகு வீரமணியும் வீட்டுக்குள் செய்த பூஜை, புனஸ்காரமெல்லாம் அவர்கள் காலத்திற்குப் பிறகே வெளியாகும். கருனாநிதியின் மனைவியே மங்கலகரமாகக் காட்சியளிப்பவர், கோவிலுக்கும் செல்பவர்…ஆனால் தவறாமல் இந்துக்களை கேலிசெய்யத் தயங்கமாட்டார்.. இதர மத மக்களெல்லாம் என்ன செய்தாலும் அவர்களெல்லாம் நல்லவர்கள்..

    கடவுள் இவர்களை நல்லபடியாய் புத்தி அளிக்கட்டும்…

  4. கருத்துக்கள் நிறைந்து ஆனால் சரளமான நடையோடும், இழைந்தோடும் நகைச்சுவையோடும் அருமையாக எழுதி வருகிறீர்கள். புத்தகத்தைக் காண ஆர்வமாக உள்ளோம்.

    தமிழகத்தின் பகுத்தறிவு, சுயமரியாதை மாய்மாலங்கள் மஞ்சள் துண்டு போர்த்திக்கொண்டு பிரைவேட் கம்பனிகளாக ஆகி பல வருடங்கள் ஆகிறது. கொஞ்சம் அதில் நீங்கள் முதல் போட்டால் நிறைய்ய அள்ளலாம். சுயமரியாதை, களவானித்தனம் ஆகியவற்றை முதல் போடவேண்டும்.

  5. இவர்களின் முகமூடி மக்கள் முன் கிழியும் நாள் விரைவிலேயே வரட்டும்!

  6. இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை.

    முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த அவலங்களிலிருந்து மீள வகையின்றித் தவிக்கும் 300,000 தமிழர்கள் இன்று வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள். வந்தோரை வாழவைத்து, மார் தட்டி நின்ற வன்னி மண்ணின் மக்கள் இன்று ஒரு வேளை சோற்றுக்கு எதிரிகளிடமே தட்டேந்தி நிற்கும் பரிதாபக் காட்சி உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி வருகின்றது.
    ஈழத் தமிழினம் நடந்து முடிந்த அவலங்களை மட்டுமல்ல, நடந்தேறிய துரோகங்களையும் மறந்துவிடத்தான் முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் எதையுமே மறக்க முடியாதபடி மீண்டும் மீண்டு நோகடிக்கப்படுகிறார்கள். நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கி நாட்களைக் கழிக்கின்றார்கள்.

    புலம்பெயர் தமிழர்கள், வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, தினமும் அழிக்கப்படும் தம் உறவுகளை எண்ணி வேதனையுடன் கண்ணீர்ப் போராட்டம் நிகழ்த்துகிறார்கள். மனிதாபிமானம் மிக்க மேற்குலக நாடுகளிடம் தென்படும் மாற்றங்கள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

    ஈழத் தமிழர்களின் இன்னொரு சோகம் அவ்வப்போது கலைஞர் கருணாநிதி எழுதும் கடிதங்கள். இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றி தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் இரத்தம் சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார்.
    ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் கதிரையில் கருணாநிதியைத் தவிர யார் இருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மீதித் தமிழர்கள் சிறையில் வதைபட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் ஈழத் தமிழர்களின் ஆதங்கம்.

    போனது போகட்டும், சிங்கள தேசத்திற்கு நேசமான ஒரு சக்தி தமிழகத்தை ஆட்சி செய்கின்றது என்று எம்மை நாமே நொந்து கொண்டு, வர இருக்கும் காலத்தை நம்பிக்கையோடு திசை மாற்றம் செய்திருப்போம். அதையும் மீறி, அடிக்கடி கலைஞர் எழுதும் கடிதங்கள் எம்மைக் கோபம் கொள்ள வைக்கின்றது.

    ‘நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இரு’ என்ற வசனம் நாங்கள் படித்ததுதான். ஆனால், கலைஞருக்கு இது தெரியுமோ அறியோம். வரலாற்றில் யூதாஸ் காசுக்காக யேசுவைக் காட்டிக் கொடுத்தான். எட்டப்பன் பொறாமையால் கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்தான். காக்கை வன்னியன் வெள்ளையர்களிடம் விலை போனதால் பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தான். எம் தலைவனை யார் காட்டிக் கொடுத்தான்? விடுதலைப் புலிகளை யார் விலை பேசி விற்றார்கள்? தமிழீழ மக்களின் அழிவுக்கு யார் துணை நின்றார்கள்?

    குடும்பத்து உறவுகளின் சொகுசு வாழ்க்கைக்கு மந்திரிப் பதவி யாசித்து டெல்லி சென்ற கலைஞர், அதற்காக சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தது. பாவிகள்… ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கோபம் காட்டவில்லையே. தமிழகத்தில் முத்துக்குமாரன் மூட்டிய தீ, தன் சொந்தங்களுக்கும் சொத்துக்கும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற ஆதங்கத்தில் மரினா கடற்கரையில் சினிமா காட்டியதற்கு மேலாக எதையுமே செய்யவில்லையே…

    வான் குண்டு மழையில் ஈழத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலையுண்டு போகையிலே, காதல் கதை எழுதி ‘உழியின் ஓசை’ படைத்தாய்… தப்பிப்பிழைத்த தமிழீழ மக்கள் வதை முகாம்களில் சிக்கிச் சிதைக்கப்படுகையிலே ‘பெண் சிங்கம்’ என்றொரு காதல் திரைப்படம்… இவ்வளது பெருந்துயர் ஈழத்தில் நடந்த வேளையிலும், எங்கள் தயரங்களை எழுத் உங்களுக்கு மனம் வரவில்லையே…

    கலைஞர்கள் இதயம் மென்மையானது… சுற்றி நிகழும் துன்பங்கள் எல்லாம் அவனைச் சுட்டெரிக்கும் என்கிறார்களே… எங்கள் துயரம், கலைஞரே உங்களைத் தொட்டும் பார்க்கவில்லையே…! பாவிகள் நாங்கள் உங்கள் காலத்தில் வாழ்கிறோமே…! புலிகளின் வீரத்தால் பெருமையுடன் மார்தட்டி நின்ற தமிழர்கள், உங்கள் சுயநல வாழ்க்கையால் மனம் குன்றி நிற்கிறோம்.

    நீங்கள் மனைவியார், துணைவியார் சகிதம் உங்கள் குடும்ப உறவுகளோடு இன்னமும் பல்லாண்டு வாழ மஞ்சள் விறத்துக்குச் செந்தமான கடவுளிடம் வேண்டுகின்றோம். பதவி சுகத்துடனும் பலகோடி சொத்துக்களுடனும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கடிதங்கள் எழுதி உங்கள் பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள். நீங்கள் எழுதும் கடிதங்களால் எங்கள் வேதனைகள் பெருகுகின்றது. கலைஞர் அவர்களே, நாங்கள் உங்களை மறந்துவிடவே விரும்புகின்றோம். மீண்டும் மீண்டும் உங்களை நினைக்க வைத்து எங்கள் வயிற்றெரிச்சலைப் பெற்றுக்கொள்ளாதீர்கள்.

    சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும். அது போதும் அவர்களது தியாகத்திற்கு.

  7. y tamil hindu .com not bothering abt tamils in lanka majority are hindus oly know but u never shown your anger r grievence for our people

  8. I am reading Mr. Subbu’s articles with keen interest. Await the arrival of the book. Advise me of the procedure to buy the book. One more request, 3rd October is the death anniversary of Ma Po Sivagnanam. He is a nationalist who played a leading part in opposing EVR. Kindly publish an article about him on that day.

  9. அய்யா
    வைகோ அவர்கள் கிறித்துவராக மாறி விட்டார் என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா ? கண்ணப்பன் கூறுவது போல் அவருடைய கையில் உள்ள ஏற்பாடு ‘ புதிய ஏற்பாடு’ (பைபிள்) தானோ ?

    வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *