உன்னைப் போல் ஒருவன் - வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்
மது
24 Sep 2009 |
அச்சிட
இப்படி ஒரு படத்தை தமிழுக்குக் கொண்டுவந்ததன் மூலம் கமல் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படம் ஒன்றும் கலைப்படம் அல்ல, யதார்த்தப் படமும் அல்ல. வெட்ட வெளிச்சமாக தீவிரவாத எதிர்ப்பை ஒரு அதீத கற்பனையின் வாயிலாக எடுத்து வைக்கிற படம் இது. இதனால் மருந்துக்கு சில பாராட்டுக்களையும், ஏராளமாக எதிர்ப்புகளையும் தேடித்தரும் என்று தெரிந்தே கமல் இதில் இறங்கி இருக்கிறார். மத நல்லிணக்கம் என்ற பெயரில் இசுலாமிய தீவிரவாதத்தைக் கண்டும் காணாமல் இருப்பதும், மதச்சார்பற்ற தன்மைக்காக நாத்திக ஜல்லி அடிப்பதும் என்று இருந்தவரிடம் இப்படி ஒரு படம் - இந்த படத்திலும் ஜல்லிகள் உண்டு என்ற போதிலும் - எதிர்பாராதது
பாசிடிவாக சொல்வதானால், படத்தில் நடிப்பைப் பொருத்த வரை, வழக்கமான தன் ஹீரோயிசத்தை சற்று ஒதுக்கி விட்டு, மற்ற கதாபாத்திரங்களையும் பேசவிட்டு ஒரு வரவேற்கத்தக்க மாறுதலைக் காட்டியுள்ளார். படத்தில் போலீஸ் கமிஷனர் பாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு மோகன்லால் மிளிர்கிறார். கதையைத் தொய்வின்றி எடுத்த விதத்தில் இயக்குநர் சக்ரி பாராட்டுக்குரியவர். சலங்கை ஒலி படத்தில், பரத நாட்டிய போசை போட்டோ எடுக்கிறேன் என்று கமலை ‘பெண்டு’ நிமிர்த்துகிற சிறுவன் இவர்தான் என்பது ஒரு சுவாரசிய தகவல்.
இந்தியில் ‘A Wednesday’ படத்தைப் பார்த்த பலரும் இந்த படத்துக்குப் பாடல்கள் எதற்கு என்றுதான் கேட்டார்கள். நல்ல வேளையாக படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. முதல் படமாக இருந்தாலும் ஸ்ருதிஹாசன் பின்னணி இசையில் நன்றாகச் செய்திருக்கிறார். சில இடங்களில் பின்னணியில் மௌனத்தையும் கலந்தது சிறப்பு. மற்றபடி படத்தில் கமிஷனர் அலுவலகம், War Room அமைப்பு போன்ற செட்களில் நுணுக்கமாகத் திறமையை வெளிப்படுத்திய கலை இயக்குநரையும் பாராட்ட வேண்டும்.
சொல்லப் போனால் இந்தப் படத்துக்கு வசனமே ஹீரோ. நகைச்சுவை இழையோட, சுஜாதாவை நினைவுபடுத்தும் பாணியில் இரா.முருகன் மிளிர்ந்திருக்கிறார். ஆனாலும், அந்தக் கடைசிக் காட்சியில், கதையின் தங்க முடிச்சவிழும் சந்தர்ப்பத்தில் வரும் நீண்ட வசனங்கள் போதுமானவையாகப் படவில்லை. அதற்கேற்றவாறு பார்வையாளர்களை தயார்ப்படுத்தும் முயற்சி எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டதாகவே படுகிறது.
நான் இந்த படத்தின் இந்தி மூலத்தை ‘A Wednesday’ படத்தை பார்க்கவில்லை. முதல்முறையாக தமிழில்தான் பார்க்கிறேன். பயங்கரவாதத்தைப் பொருத்தவரை தமிழகத்தின் பார்வை வேறு. இங்கே இசுலாமிய தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வும், அண்மைக்கால அனுபவங்களும் குறைவு. விடுதலைப் புலிகளால் பல படுகொலைகள் நிகழ்ந்த போதும், அதை கடந்து வந்து விட்டோம். நம்மைச் சுற்றி, ஹைதராபாத்தில், பெங்களூரில், மும்பையில் என்று எவ்வளவோ குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறிய போதும், தமிழகத்தில் அது குறித்த சர்ச்சைகள் - விமர்சனங்கள் ஏதும் எழவில்லை. ஊடகங்கள், இசுலாமிய தீவிரவாதம் குறித்து பேசினாலே அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்று இங்கே கட்டமைக்கின்றன.
தொடர்ந்த அரசியல் மற்றும் ஊடக மூளைச் சலவைகளால், தமிழனைப் பொருத்தவரை, தீவிரவாதம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்வினை மட்டும்தான். தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களை சற்றும் நினைத்துப் பார்ப்பது இல்லை. விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் ஆகட்டும், அதனைத் தொடர்ந்த இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் சிங்கள பயங்கரவாதம் ஆகட்டும், நக்சலைட்டுகள், சந்தன வீரப்பன், அண்டைய மாநிலங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகள் என்று எந்த தீவிரவாத அமைப்புகள் ஆகட்டும் - எவற்றிற்கு எதிராகவும் தமிழன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. ஒரு காலத்தில் பிஜி தீவு மக்களுக்காக இரங்கிய பாரதியாரை நினைத்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற எடுத்துக்காட்டான மனிதர்கள் உருவாகாமல் போனது துரதிருஷ்டம். பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் - இவ்வளவு ஏன்? - அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.
கமலின் கதாபாத்திரம், சாவதானமாக போலிஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைத்துவிட்டு, வரும் வழியில் காய்கறி வாங்கிக் கொண்டு, ஒரு கட்டிமுடிக்கப் படாத கட்டிடத்துக்கு வந்து அதன் உச்சியில் லாப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சங்கதிகளுடன் அமர்ந்து கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அவர் மதியம் லஞ்ச் சாப்பிடுகிறார். சாயந்திரம் காபி குடிக்கிறார். இவ்வளவு காசுவலாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் போலீசை விரட்டுகிறார். தீவிரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி மிரட்டுகிறார். ஆரம்பக் காட்சிகளில் நகைச்சுவை இழையோடும் வசனங்களில் கருணாநிதியையும் சற்றே வாரி இருக்கிறார்கள். கருணாநிதியும் ஒரு கதாபாத்திரமாக, போனில் குரல் மட்டும் ஒலிக்கிறது, அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ‘எதிர்கட்சிக்காரன் அறிக்கை விடப் போகிறான்.. தேர்தலில் பாதிப்பு வரக்கூடாது’ என்று கருணாநிதி பேசுவதாக அமைந்த வசனங்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன.
இசுலாமிய தீவிரவாதத்தை அடிப்படையில் இந்தப் படம் எடுத்து வைத்தாலும், தனது செக்யூலர் பிம்பத்தை விடக்கூடாது என்ற ஆசையில் புகுத்தப்பட்ட சில வசனங்கள் அரைகுறையாக நிற்கின்றன. அதுவே படத்தின் பலவீனமும் கூட. அதுவும் அந்த கடைசி நிமிடத்தில் வரும் நீண்ட வசனத்தில், தான் இசுலாமியர்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் நிறுவ வேண்டுமே என்ற தவிப்பு நன்றாக தெரிகிறது. இன்றைய பொதுவாழ்க்கையில் ஏற்படும் நிர்பந்தங்களில் அதுவும் ஒன்று என்று விடவேண்டியதுதான்.
தீவிரவாதத்துக்கு என்ன எதிர்வினை? அரசின் பதில் என்ன? ஒவ்வொரு தீவிரவாத செயலின் போதும், பிரதமரும் முதல்வர்களும், ‘நிச்சயம் சட்டம் தன் கடமையை செய்யும்… இந்தியா இதனால் விழுந்துவிடாது. தீவிரவாதிகாளால் பொதுவாழ்க்கை பாதிக்கப் படவில்லை’ என்று அறிக்கை விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். டெல்லி பாராளுமன்றத்தில் தன் உயிரைத் தந்து, அரசியல்வாதிகளை காப்பாற்றிய அதிகாரிகளின் உயிருக்கு மரியாதை இல்லை. தீவிரவாதிகள் என்று தீர்மானமாக தெரிந்தும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு, ஏசி ரூமில் ஆயுர்வேத மசாஜ் பெற்றுக் கொண்டு சுகமாக இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்கு வந்த ஆட்டு மந்தைகளாக மக்கள் செத்துப் போவதுதான் மிச்சம்.
அப்படியே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தீவிரவாதிகளை பிடித்தாலும் மிரட்டல்களுக்கு பணிந்து அவர்களை விடுவித்துவிடுவதும், தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதும், கொடிய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் முன்னாள் முதல்வரின் பிறந்தநாளுக்காக விடுவிக்கப் படுவதும் நடைமுறைதான். இதையே படத்திலும் போலிஸ் கமிஷனராக மோகன்லால் கதாபாத்திரம் பேசுகிறது. சாதாரண மனிதர்கள் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தொடர்ந்த தீவிரவாத செயல்களால், அரசாங்கம் எதுவும் தீர்மானமாக செய்யாது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி இருக்கிறது.
அப்படி முடிவுக்கு வந்த ஒருவர், தீவிரவாதத்தையே பயன்படுத்தி தீவிரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி, தன் பாணியில் தண்டனை வழங்குவதே இப்படத்தின் சாராம்சம். தீவிரவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அவர்களுக்குள் உள்ள நுண்ணரசியல் என்று நகைச்சுவை கலந்து சொல்லிக் கொண்டுபோனாலும், அடிப்படையில் ஒரு சாதாரண மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தால், செயலில் இறங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கற்பனையை படம் முன்வைக்கிறது. இது சாதாரண மனிதர்களால் நிஜத்தில் நிச்சயம் நடக்கக் கூடியது இல்லை என்றாலும் கற்பனை தானே நமக்கு ஒரு வடிகால்.
நாமிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற படம் வருவது பெரிதாக சிந்தனை ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்றாலும் படம் பார்க்கிற ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு உறுத்தலை ஏற்படுத்தும் என்றே எண்ணுகிறேன்.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: இரா. முருகன், இஸ்லாமிய பயங்கரவாதம், உன்னைப் போல் ஒருவன், கமல், சினிமா, திரைப்படம், திரைப்பார்வை, மத அடிப்படைவாதம்
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
24 September 2009 at 9:52 am
தமிழ்ஹிந்துவில் உன்னைப் போல் ஒருவன் - வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம் விமர்சனம்…
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்…