ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை
B.R.ஹரன்
6 Sep 2009 |
அச்சிட
ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இந்த மாதிரியான கோர விபத்தில், அதுவும் அரசியல் வாழ்வின் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, மரணம் எய்வதென்பது மிகவும் துக்ககரமான விஷயம். அன்னாருடைய குடும்பத்தாருக்கும், நண்பர் உறவினர்க்கும் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்கட்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் வாழ்வு
முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலையே தொழிலாகக் கொண்டிருந்த ராஜசேகர ரெட்டி, கடப்பா தொகுதியிலிருந்து நான்கு முறை லோக்சபாவிற்கும், புலிவெந்துலா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்த ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் திணறிக் கொண்டிருந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் ரெட்டி. 1983லிருந்து 1985 வரையும், பின்னர் 1998லிருந்து 2000 வரையும் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பேற்ற ரெட்டி, 1980லிருந்து 1983 வரை மாநில அமைச்சராகவும் பணி புரிந்தார். தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக முதலமைச்சராக (1999-2004) இருந்தபோது சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் ரெட்டி.
2004-ல் நடக்கவிருந்த பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னால், 2003-ன் இறுதியில் மகா பாதயாத்திரை மேற்கொண்ட ராஜசேகர ரெட்டி, 1500 கிலோமீட்டருக்கும் மேல் மாநிலம் முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்து, காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார். தெலுகு தேசம் கட்சி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையே எதிர்பாராத அளவில் அமைந்தது அந்த வெற்றி. சட்டசபையில் 185 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை அடைந்து முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ராஜசேகர ரெட்டி.
சமீபத்தில் நடந்து முடிந்த 2009 தேர்தல்களில் “முன்னேற்றம் மற்றும் நம்பகத்தன்மை” என்கிற கோட்பாட்டில் தேர்தல் களத்தைச் சந்தித்து, பாராளுமன்றத்தில் 33 இடங்களையும், சட்டசபையில் 156 இடங்களையும் பெற வழிசெய்து, மீண்டும் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரெட்டி. ஐந்து தினங்களுக்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும்போது, பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், பலத்த மழை காரணமாகவும், தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும், மலையின் உச்சியில் மோதி நல்லமலா காட்டுப் பகுதியில் எரிந்து வீழ்ந்ததனால், மரணம் அடைந்தார்.
மக்கள் நலத் திட்டங்கள்
2004லிருந்து 2009 வரை ஆட்சி செய்யும்போது, தற்போது அனைத்து மாநிலங்களிலும் பழக்கத்திற்கு வந்துவிட்ட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, போன்ற இலவசத் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு பல நற்திட்டங்களும் செயல் படுத்தினார். “ஜலயக்ஞம்” என்ற பெயரில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய, மத்திய, சிறிய நீர்பாசனத் திட்டங்கள், “ஆரோக்ய ஸ்ரீ” என்ற பெயரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், “பவல வட்டி” என்ற பெயரில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், மற்ற ஏழை மக்களுக்கும் சுய வேலை (சுய வியாபார) ஏற்பாட்டிற்காக குறைந்த வட்டியில் (ஆண்டுக்கு 3 சதவிகிதம்) கடன் வசதி, ”இந்திரம்மா இல்லு” என்ற பெயரில் கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித் தருதல், போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல் படுத்தினார்.
மேற்சொன்ன திட்டங்கள் பெரும் வெற்றியடைந்தன என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட வகையில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தான் நடந்த ஊழல்கள் வெளி வரும் என்று எதிர்பார்ர்க்கப் படுகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் ஆட்சியில் இருப்போருக்கு “நல்ல வருவாய்” தருவனவாக இருந்தால், அடுத்து வருகின்ற அரசாங்கத்தினாலும் அதே திட்டங்கள் வேறு பெயர்களில் செயல் படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆயினும், நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் பெருமளவிற்கு குறைந்து போனது. எனவே, ஏழைகளின் பாதுகாவலனாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள்
அவருடைய ஆட்சி காலத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். எதிர் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ரெட்டியின் குடும்பம் “சந்தூர் பவர் நிறுவனம்”, ”ஜகதி பப்ளிகேஷன்ஸ்”, ”பாரதி சிமெண்ட் கார்பரேஷன்” ஆகிய நிறுவனங்களின் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சட்டசபையில் பெரும் விவாதத்திற்குள்ளானதால், ராஜசேகர ரெட்டி வேம்பள்ளி மண்டல் என்ற பகுதியில் இருக்கும் தன்னுடைய இடுபுலபயா எஸ்டேட்டிலிருந்து, அரசாங்க மற்றும் வனத்துறைகளுக்குச் சொந்தாமான 614 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தார். இருந்தாலும் பல ஆண்டுகலாக அந்நிலத்தைச் சொந்தம் கொண்டாடியமைக்காக, ஆந்திரப் பிரதேச விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1973, ஆந்திரப் பிரதேச நில மாற்றம் தடுப்புச் சட்டம் 1977, ஆந்திரப் பிரதேச வனங்கள் சட்டம் 1967, ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம், என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் மாநில முதல் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?
நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “சத்யம்” நிறுவன ஊழலில் ராஜசேகர ரெட்டிக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஊடகங்களும், அனைத்து எதிர்கட்ச்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சத்யம் குழுமத்தைச் சார்ந்த “மைதாஸ்” நிறுவனத்திற்கும் ரெட்டி அரசு பல பணியொப்பந்தங்களை அளித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவை, அவர் சந்திரபாபு நாயுடுவின் நண்பர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரைக் குறி வைத்து பல வகைகளில் அவருக்கு பெரும் சங்கடங்கள் ஏற்படுத்தியதற்காகவும், அவரை பல விதங்களில் செயல் படமுடியாமல் செய்ததற்காகவும், சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானார் ராஜசேகர ரெட்டி. (மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்).
ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், அனைத்து விதமான தவறான காரணங்களுக்காகவும், ஊடகங்களில் அடிபட்டது. தேவஸ்தானத் தலைவர் பதவிக்கு ஆள் தேர்ந்தெடுப்பது தொடங்கி, கணக்கு வழக்குகள் சரியில்லாமை, நகைகள் மற்றும் தங்கக் காசுகள் குறைவது, நிர்வாகத்தில் ஊழல்கள், நேர்மையில்லாமை, திருமலையில் கிறிஸ்துவ மதமாற்றப் பிரச்சாரங்கள், சமூக விரோத செயல்கள் வரை எல்லா வகையிலும் திருமலைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் அவரது ஆட்சி அமைந்தது. தேவஸ்தான நிர்வாகத்தை முழுமையாகக் கலைத்து விட்டு புதிய நேர்மையான நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று ஆகஸ்டு மாத இறுதியில் தான் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
ராஜசேகர ரெட்டியின் ஊழலை விவரிக்கும் விதத்தில், , “தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதில் தலை சிறந்தவராக விளங்கும் அளவிற்கு, அவருடைய ஆட்சியில் ஊழல் பெருகிற்று” என்று செப்டம்பர் 4-ஆம் தேதி இதழில், “தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்” கூறியுள்ளது. அன்பிற்குரிய “சாமுவேல்” இல்லாதது சோனியாவிற்கு பேரிழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமோ! (ரெட்டியை சாமுவேல் என்று அன்புடன் அழைப்பது காங்கிரஸ் தலைவி சோனியாவின் வழக்கம் என்று பத்திரிகை வட்டாரங்களில் பேச்சு உண்டு).
மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலைமை
மாநிலத்தின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் சாமுவேல் ரெட்டியின் ஆட்சி பல தவறுகளைச் செய்தது என்று சொல்லலாம். 2004 தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக இருந்த சூழ்நிலையோடு கூட, ரெட்டியார் நக்சலைட்டுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட சமரசமும், காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த சமரசத்தின் படி, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி அவர்களைப் ”அமைதிப் பேச்சு வார்த்தை”க்கு அழைத்தார் ரெட்டி. இந்த அமைதிப் பேச்சு என்பது தீவிரவாத, மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தான் சாதகமாக இருக்குமேயன்றி, மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. இந்த உண்மையை சென்ற கால அனுபவங்கள் நமக்குப் பலமுறை உணர்த்தியுள்ளன.
அதேபோல், நக்சலைட்டுகள் ரெட்டியின் அமைதிப் பேச்சு எனும் சடங்கைத் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்தி, பேச்சை பல மாதங்கள் இழுத்தடித்து, இடைப் பட்ட காலத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுத் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். தங்கள் ஆள்பலத்தையும், ஆயுத பலத்தையும், கூட்டிக் கொண்டனர். அதன் விளைவாக, நேபாளத்திலிருந்து ஆந்திரம், ஏன் தமிழகம் வரை, பதினைந்து மாநிலங்களுக்கும் மேலாக தங்கள் இருப்பை விரிவு படுத்தி ”சிவப்பு அரண்” ஏற்படுத்திக் கொண்டனர். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் ஒரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த நக்சல்-மாவோயிஸ்டு பிரச்சனை ராஜசேகர ரெட்டியின் புண்ணியத்தில் மீண்டும் பெரிதும் வளர்ந்தது.
நக்சல்-மாவோயிஸ்டு கூட்டணியானது விடுதலைப் புலிகள் மற்றும் ஜிகாதிகள் ஆகியோருடனும் தங்கள் தொடர்பை விரிவு படுத்திக் கொண்டது. ஆந்திரா தமிழகத்திற்கு இடையிலே நடந்த ஆயுதக் கடத்தல்கள், தமிழகப் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்கள், கைது செய்த தீவிரவாதிகள், விடுதலைப் புலிகள், ஆகிய விவரங்கள் இந்தக் கூட்டணியை உறுதி செய்கின்றன. ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான், ஹைதராபாத்தில் மெக்கா மசூதி, லும்பினி பார்க் ஆகிய இடங்களில் பெரும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து, கொடிக்கணக்கான ரூபாய் அளவில் பொருள் சேதமும் விளைந்தது. அந்தக் குண்டு வெடிப்புகளின் விச்சாரணைகளில் இது வரை எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலமும் நக்சல் பீதியிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் கொலைகளாலும், மற்ற சமூக விரோத நிகழ்வுகளாலும் ஆந்திர மாநிலத்தில் பொதுவாக சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கிறிஸ்துவ மயமாக்கப் படும் ஆந்திரம்
2004-ல் ராஜசேகர ரெட்டி அரசு அமைந்ததிலிருந்து, கிறிஸ்துவ எவாங்கலிக்க குழுக்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக கிராமப் புறங்களில் கூட்டுகூட்டாக மக்கள் மதமாற்றம் செய்யப் படுகின்றனர். சர்ச்சுகளிடமும் கிறிஸ்துவ மிஷனரிகளிடமும் ரெட்டி பகிரங்கமாக மிகவும் நெருக்கமாகப் பழகுவதால், அவைகள் துணிச்சலுடன் செயல் படுகின்றன. இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி, போன்ற பல இடங்களில் எவாங்கலிக்கக் குழுக்கள் மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டன. அவர்கள் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை! ரெட்டி அவர்களும் அதற்குப் பல விதங்களிலும் மறைமுகமாக உதவி வந்திருக்கிறார்.
ஆகஸ்டு 22, 2006-ல் போட்ட அரசாணை எண் 21-ன் படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சர்ச்சுக்கும் செப்பனிடும் வேலைகளுக்காக 80,000 ரூபாயும், புதிதாகக் கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது. (”CM Reddy okays public money for Churches” – Deccan Chronicle dated 23rd August 2006). மாநிலத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும்போதும், அக்கோவில்களில் வேலை செய்யும் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அர்ச்சகர்கள் மாதம் வெறும் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ருபாய் வரை மட்டுமே சம்பளம் பெற்று வந்த போதும், கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வெறும் பதினைந்து சதவிகிதமே, கோவில்களின் பராமரிப்புக்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும், திருப்பிக் கொடுக்கப் படும் போதும், இம்மாதிரி கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டும் அரசாங்க சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. கோவில்களிலிருந்து வரும் மிச்சமுள்ள எண்பத்தைந்து சதவிகித வருவாயும், அரசின் மற்ற திட்டங்களுக்கும், சிறுபான்மையின சமுதாய நலத் திட்டங்களுக்கும் செலவழிக்கப் படுகின்றன. மேலும் சிம்மாசலத்தில் உள்ள நரசிம்ஹஸ்வாமியின் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் பசு மற்றும் கன்றுக்குட்டி தானங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கசாப்பு ஆலைகள் வைத்துள்ளவருக்கு பசுக்கள் ஏலம் விடப் படுகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலிலிருந்து வரும் நல்ல வருவாயைக் கொண்டு ஒரு கோ-சாலை (பசு மடம்) அமைக்கக் கூட மனமில்லை ரெட்டியின் அரசுக்கு. (மேலும் விவரங்கள் இங்கே).
ராஜசேகர ரெட்டியின் அரசாங்கம் கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்களை விற்று இருபதாயிரம் கோடி ருபாய் நிதி திரட்ட முடிவு செய்தது. பல இடங்களில் அந்நிலங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் சர்ச்சுகளுக்கும் மிஷனரிகளுக்கும் கொடுக்கப் பட்டதாகவும், சில இடங்களில் சர்ச்சுகளும், மசூதிகளும் கட்டப்ட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் க்றுஸ்துவர்களின் ஜனத்தொகைகுச் சற்றும் சம்பந்தமில்லாமல் ஆயிரக் கணக்கான சர்ச்சுகள் மாநிலம் முழுவதும் தோன்றின. ஆங்காங்கே பாதிரிமார்களும், எவாங்கலிக்கர்களும், தங்களுடைய “அறுவடை”யைச் செய்ய ஆரம்பித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப் புரங்களில், கும்பல் கும்பலாக அப்பாவி மக்கள் மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் ஜனத்தொகை 1.5 சதவிகிதமே என்று அரசின் ஆவணங்கள் (2001 ஜனத்தொகை எடுப்பு) சொன்னாலும், பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் இருக்கலாம் என்று சர்ச்சுகளே நம்புகின்றன. பெருமளவில் செய்யப்படும் மதமாற்றங்களை எண்ணிப்பார்க்கும்போது, 12% சாத்தியமே! மதம் மாறிய பலர் அதை வெளியில் அறிவிப்பதில்லை. இந்து ஷெட்யூல்டு பிரிவினருக்கு மட்டுமே அரசு சலுகைகள் உண்டு என்பதால், மதம் மாறியவர்கள் அச்சலுகைகளை வெளியில் அனுபவித்துக் கொண்டே உள்ளுக்கு கிறீஸ்துவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் ரெட்டியின் அரசு சட்டமன்றத்தில் கிறிஸ்தவராக மற்றும் முஸ்லிமாக மதம் மாறிய ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில், ஏழு கிறிஸ்துவருக்கு ஒரு சர்ச்சும், 40 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதியும், 350 இந்துக்களுக்கு ஒரு கோவிலுமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர, பெரிய வழிபாட்டுத் தலங்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாநிலத்தில் தற்போது 148,000 சர்ச்சுகளும், 176,000 மசூதிகளும், 190,000 கோவில்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).
சட்டத்திற்குப் புறம்பான தங்களுடைய செயல்களைக் கண்டுகொள்ளாமல் மறைமுக ஆதரவுடன் அரசு இருப்பதனால் துணிச்சல் அதிகம் பெற்ற சர்ச்சுகளும், மிஷனரிகளும், திருமலை திருப்பதியை மதமாற்றத் தாக்குதலுக்கு உள்ளாக்க தீர்மானித்தன. அதை ஊக்கப் படுத்தும் விதமாக, ரெட்டி, ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொண்டு அவற்றை தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார். வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கட்டப் படும், மலை மேல் போக கேபிள் கார் வசதி செய்யப்படும் என்றும் சொன்னார். இந்துக்கள் அதிர்ந்து போயினர். நல்ல உள்ளம் கொண்ட, ஏழுமலையானின் பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம், ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. ரெட்டியும், பொங்கியெழுந்த இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து தன் எண்ணத்தைக் கைவிட்டார். {Judgment of a Division Bench of the Andhra Pradesh High Court1997 (2) ALD Page 59 (DB) – Tallapakam Koppu Raghavan Vs State of A.P}.
ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவதாக இல்லை. ஐதராபாத் சாரதா பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வருபானந்தேந்திர ஸ்வாமிகள் புது தில்லியில் இந்து குருமார்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்களுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பொதுவாக ஆந்திர மாநிலத்திலும், குறிப்பாக திருமலை திருப்பதியிலும் நடக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் சட்ட விரோத செயல்களுக்கும், மதமாற்றத்திற்கும், கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ஜி.பிக்ஷாபதி தலைமையில் “உண்மை கண்டறியும் குழு” ஒன்றை அமைத்தார். அக்குழுவில், மற்றொரு முன்னாள் நீதிபதி கே.பி.சித்தப்பா, முன்னாள் காவல்துறை இயக்குனர் ஜெனரல் திரு டி.எஸ். ராவ், ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயாவின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்.பி.கீர்வாணி, குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஆர்.ஸ்ரீஹரி ஆகியோரும் அங்கத்தினர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் 17-06-2006 அன்று ஐதராபாதில் கூடி ஆலோசனை செய்து, பின்னர் அதேமாதம் 21 மற்றும் 22 தேதிகளில் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து ரெட்டியின் அரசும் திருமலையில் எவாங்கலிக்க நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தது (தொடர்புடைய செய்திகள் இங்கே).
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலையத்திற்குத் தேவையான பொருட்களின் கொள்முதல் ஒப்பந்தமும் ”ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட்” என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. (”தி ஹிந்து பிஸினஸ்லைன் செய்தி”)
இந்து புனிதத் தலங்கள் அருகே மதமாற்ற நடவடிக்கைகளை ரெட்டி அரசாங்கம் நிறுத்தினாலும், மற்றபடி மாநிலம் முழுவதும் மதமாற்றம் நடத்த மிஷனரிகளுக்கு மறைமுக அனுமதி அளித்தது. ராஜசேகர ரெட்டியின் மருமகன் அனில் குமார் ஒரு தேர்ந்த எவாங்கலிக்கர். இந்துவாகப் பிறந்து வளர்ந்த இவர், பிறகு மதம் மாறி கிறிஸ்துவ மதபோதகராக வசதியான வாழ்க்கை வாழ்கிறார். ரெட்டியின் மகளைத் திருமணம் செய்த பிறகு ஆந்திர அரசு இவருக்குப் பல வகைகளில் உதவி செய்து வருகிறது. சகோதரர் அனில் குமார் சொந்தமான “ஊழிய” அமைப்பு நடத்தி வருகிறார். தான் பரிசுத்த ஆவிகளால் தீண்டப் பட்ட மதபோதகர் என்றும், சக்தியும், ஆளுமையும் பெற்ற ஆசிரியர் என்றும், கிறிஸ்து ராஜ்ஜியத்தின் கொள்கைகளை வெளிக்கொணர்பவர் என்றும், மதப்பற்றுள்ள, மதத்தைக் காப்பாற்றும் வீரர் என்றும், அற்புதங்களின் மூலம் நோய்களைத் தீர்த்து சுகம் அளிப்பவர் என்றும், இயேசுபிரான் பெயரில் அதிசியங்கள் நிகழ்த்துபவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்.
பெங்களூருவில் சில வருடங்கள் முன்னால் (காங்கிரஸ் முதல்வர் தரம்சிங்கின் ஆட்சியின்போது) அமெரிக்க எவாங்கலிக்கர் பென்னி ஹின் நிகழ்த்திய பிரம்மாண்ட ஏமாற்றுக் கூட்டத்தைப் போல அனில் குமாரும் சென்ற ஆண்டு ஐதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்தார். அதற்கு ரெட்டியின் அரசு இயந்திரங்கள் பல விதங்களில் உபயோகப் படுத்தப் பட்டன. நகரமெங்கும் நூற்றுக் கணக்கான விளம்பர பானர்கள் வைக்கப் பட்டன. ராஜசேகர ரெட்டியும், அவர் மனைவியும், மகளும் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். எதிர்கட்சியினர் அரசு இயந்திரங்கள் பயன்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தன. அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ”அதில் என்ன தவறு?” என்று அலட்சியமாக கேட்டிருக்கிறார் முதல்வர். ஆந்திராவைச் சேர்ந்த, சுனாமியின் போது தமிழகக் கடலோர மீனவ குடும்பங்களை மதமாற்றம் செய்வதற்காக தனி விமானத்தில் வந்திறங்கிய, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் எவாங்கலிக்கர் கெ.எ.பால் என்பவரை கவிழ்த்து அனில்குமாரை வளரச் செய்யவே ரெட்டி அரசு முயல்வதாக அரசியல் வட்டாரங்களும் ஊடகங்களும் தெரிவித்தன.
இதில் முரணான விஷயம் என்னவென்றால், படித்தவர்களில் கூட பெரும்பாலானவர்களுக்கு ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதோ, அவர் மருமகன் ஒரு எவாங்கலிக்கர் என்பதோ சுத்தமாகத் தெரியாது. 2004-லும் சரி, 2009-லும் சரி, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், குடும்பத்துடன் கிறீஸ்துவப் புனிதத் தலமான பெத்லெஹம் பயணம் மேற்கொண்டார் ரெட்டி. அங்கும் மற்ற புனித இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனைகள் செய்து திரும்பினார். எனவே, முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரை போல, அவர் க்றுஸ்துவர்களுக்காக ஜெருசலேம் யாத்திரைக்கு 2008-09 –ஆம் ஆண்டுக்கு 2 கோடி ருபாயும், சர்ச்சுகளும், மசூதிகளும் செப்பனிடப்படுவதற்காக 5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்ததில், ஆச்சரியமில்லையே!
2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் ”ராயலசீமா கிறீஸ்தவ சதஸ்” என்ற அமைப்பின் கீழ் கூடி, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ராயலசீமா திருச்சபையின் பேராயர் யேசு வரப்ரசாத், முன்னாள் பேராயர் சி.வி.எம்.ஃப்ரெட்ரிக் பாபு, பாதிரி சாம்சன், சி.எஸ்.ஐ சர்ச்சு பாஸ்டர் பென்ஹர் பாபு, சி.எஸ்.ஐ.சர்ச்சு செயலாளர் சாமுவேல் பாபு, ழையான் கல்லூரியைச் சேர்ந்த கே.ராஜரத்தினம் ஐசக் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ரெட்டியின் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பாராட்டி, மீண்டும் அவரின் ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் முன்னேறும் என்று கூறி க்றுஸ்துவ சமுதாயத்தினரை காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்குமாறு பணித்தனர். (பார்க்க: “தி இந்து” செய்தி )
.
இந்திய எவாங்கலிக்க கூட்டமைப்பு (Evangelical Fellowship of India - EFI) ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் சென்ற மாதம் ஆகஸ்டு 19-ஆம் தேதி அவர்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்துள்ளது. ”கல்வி, சுகாதார, சமூக துறைகளில் கிறிஸ்துவ சர்ச்சுகளின் பனிகள் போற்றுதலுக்குறியன. அப்பணிகள் அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் அமைதி நிலைக்கவும் உதவி புரிகின்றன” என்று முதல்வர் தங்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்து, அவருடைய குடும்பத்திற்காகவும், மற்றும் அவருடன் மரணம் எய்திய மற்ற நான்கு பேரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
“இந்திய மாநிலத் தலைவர், கிறிஸ்தவர், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்” (“Head of Indian state, a Christian, killed in chopper crash”) என்கிற கட்டுரையை லண்டனைச் சேர்ந்த “Religious Intelligence” என்ற தளம் பிரசுரம் செய்தது. அக்கட்டுரையை எழுதிய புது தில்லியைச் சேர்ந்த விஷால் அரோரா என்கிற பத்திரிகையாளர், “ராஜசேகர ரெட்டியின் தகப்பனார் ராஜா ரெட்டி பர்மா ராணுவத்தில் பணி புரியும்போதே கிறிஸ்துவராக மதம் மாறினார்” என்றும் ”ராஜ சேகர ரெட்டியின் ஆட்சி மீது ”இந்து தேசியவாதிகள்” வீண்பழி சுமத்தி, “ஏராளமான” கிறிஸ்துவ பாதிரிகளையும், பணியாளர்களையும் “தாக்கிக் கொன்றுள்ளனர்” என்று கொஞ்சம் கூட ஆதாரம் காட்டாமல் எழுதியுள்ளார்.
ராஜசேகர ரெட்டியின் இறுதிச் சடங்கினை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி சானல்கள், ரெட்டி குடும்பத்தின் வன்முறை மிக்க பாரம்பரியத்தை உறுதி செய்யும் விதமாக, “முதல்வரின் தந்தை ராஜா ரெட்டி 75 வயதில் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று கூறின. அவர்களின் பாரம்பரியம் வன்முறை நிறைந்தது என்பதற்கு மற்றொரு சான்று ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த “பூமண்ண சகோதரர்கள்” (பூமண்ண கருணாகர ரெட்டி, பூமண்ண சுப்ரமணிய ரெட்டி). அவர்கள் எழுபதுகளில் சமூக விரோத செயல்களுக்காக சிறை தண்டனை பெற்றவர்கள். (மேலும் விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).
மேலும் “ராயலசீமா பகுதிக்கென்றே உரிய வன்முறைக் கலாசாரம், ராஜசேகர ரெட்டி முதல்வரான பிறகு மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த “போராளிகள்” மாநிலத் தலைநகரில் ஆட்சி செலுத்தினர்” என்று ”தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்” நாளிதழ் விவரிக்கின்றது.
கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பை பூரணமாகக் கலைக்க வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேவஸ்தானத்திற்கு முப்பதாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், நகைகளின் மதிப்பு (கிருஷ்ண தேவ ராயர் காலத்திற்கு முன்னிருந்து இருப்பதால்) கணக்கிட முடியாது என்றும் கூறிய நாயுடு, “திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார். வாதிகனுக்கு ஈடாக திருமலையை நிர்மாணிக்க வேண்டும் என்ற என்.டி.ராமராவின் ஆசையையும் நினைவு கூர்ந்தார்!
என்ன சொன்னாலும் என்ன செய்தாலும், ராஜசேகர ரெட்டி மக்களைக் கவர்ந்த, ஏழைப் பங்காளன் என்ற பெயர் பெற்ற தலைவர் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரின் மரணச் செய்தி கேட்டு பலர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதிலிருந்தே இவ்வுண்மை புலப்படுகின்றது. தலைவருக்கு ஏதொ ஒன்று என்றால் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது திராவிட கட்சிகளுக்கே உரிய பாரம்பரியம்! ஆட்சியில் இருந்த போதும் சரி, இறந்த பின்பும் சரி, ராஜசேகர ரெட்டி அனைத்து விஷயங்களிலும் திராவிடக் கட்சித் தலைவர்களை ஒளிமங்கச் செய்துவிட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்னாருக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் அரசு விடுமுறை அறிவித்ததில் ஆச்சரியம் இல்லையே!
6 September 2009 at 11:25 am
i do not see any problem in converting someone from one religion to other. people are changing due to their wish,who are we to stop that? if Hinduism has done enough to attract people then why would they convert? Hinduism has been hijacked by few people and they wanted to control every one and i guess thats not going to happen. Unless people in hinduism change nothing is going to stop the conversion.