ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
6 Oct 2009 |
அச்சிட
மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் - “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.
போப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் - “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.
போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.
போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் - “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.
ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.
“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.
திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. போப் எழுதியுள்ளார். ஜி.யூ. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு. ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
ஜி.யூ. போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஞானாசிரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் திருவாதவூரரை ஆட்கொள்ளுகிறான். இதன் பின்னர் அடிகளுக்கு மதுரையினொடு தொடர்பு முற்றிலும் நீங்குகிறது. பூவுலகிற்குத் தான் எழுந்தருளிய பணி நிறைவுற்றதும் இறைவன் உடனிருந்த அடியவர்கள அங்குக் குருந்த மரத்தடியில் ஓர் பீடம் அமைத்துத் தன்னை வழிபட்டு வருக என்றும் சிலநாட்களில் அங்குள்ள பொய்கையின் ந்டுவில் ஒரு பேரொளி தோன்றும் என்றும் அதில் அனைவரும் புகுந்து திருக்கயிலை வருக என்றும் கூறியருளினான். திருவாதவூரரை மட்டும் அவர்களுடன் பேரொளியில் புகாமல் யாத்திரையாகத் தில்லைக்கு வருக என்றும் வழியில் அவர் வழிபடும் தலங்களில் குருவடிவாய் காட்சி அளிப்பதாகவும் கூறியருளித் திருக்கயிலைக்கு எழுந்தருளினான்.
இறைவனின் பிரிவாற்றாமையால் வருந்திய திருவாதவூரர் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு இறைவனின் காட்சியைப் பெறாமையால் வருந்தி நீத்தல்விண்ணப்பம் என்னும் இந்தப் பதிகத்தை அருளினார். இறைவன் காட்சி நல்கினான். இது மாணிக்கவாசகரது வரலாற்றைப் பாடிய கடவுண்மாமுனிவர் அறிவிக்கும் செய்திகள்.
‘உன்னை பிரிந்த யான் என் உடலைத் தீவாய் மடுக்கிலேன், மலைமேல் உருண்டு உயிரை மாய்ப்பேனல்லேன், நாதனே! இந்த உடலும் உயிரும் உன்னுடைய உடைமையென்றே இவ்வுடலைவிட்டு உயிரைப் பிரிக்க அஞ்சினேன், என் செய்வேன்’ என நிலத்தில் வீழ்ந்து புரண்டு அழுது புலம்பினார். கற்றைவார் சடையார் கோலங்காட்டி ஆட்கொண்ட அன்றே, வாதவூரர், சுற்றமும் தொடர்பும் முற்றிலும் நீத்தார்; இன்பமும் துன்பமும் அற்றார்; உடல்மேல் அபிமானம் துறந்தார்; வெறுக்கை (செல்வம்)மேல் வெறுக்கை வைத்தார்; செற்றமும் செருக்கும் காய்ந்தார்; நல்வினை தீவினை இரண்டும் தீர்ந்தார். இறைவன் திருவாதவூரரை ஆட்கொண்ட பின் அவரது நிலையாகப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தில் அறிவிப்பது இந்நிலை
இனி, போப் இந்த கட்டத்தில் மணிவாசகரை எப்படி அறிமுகம் செய்கின்றார் எனக் காண்போம்.
நீத்தல் விண்ணப்பம் முழுவதும் ஆன்ம முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஐம்புல மயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தெய்வத்தின் துணை வேண்டி மானுடம் எழுப்பும் உணர்ச்சி மிக்க பாடல்கள் என்ற முன்னுரையுடன் ஜி.யூ. போப், மாணிக்க வாசகர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றைக் கூறுகின்றார் -
”சிவன் குருவாக வந்து ஆட்கொண்டு பிரிந்த பின், திருவாதவூரர் பாண்டி நட்டில் உள்ள சிவத்தலங்களைக் கண்டு வழிபடலை மேற்கொண்டார். முதலில் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கினார். திருப்பெருந்துறையிலும் மதுரையிலும் பெற்றிருந்த இறையனுபவத்திற்கு எதிர்விளைவான சோதனைகள் உத்தரகோச மங்கையில் திருவாதவூரருக்கு ஏற்பட்டன.
இளமையும் பாண்டியமன்னனின் தனிப்பட்ட பேரன்பும் பெற்றிருந்த அடிகள் இதுவரை செல்வச்செழிப்புடன் இல்லற இன்பத்தில் வளமாக வாழ்ந்திருந்தார். இப்பொழுது அனைத்தையும் துறந்த துறவியாக மாற்றம் பெற்றார். மதுரையில் அமைச்சராக இருந்தபோது பெற்றிருந்த சுகபோக வாழ்க்கை அனுபவ நினைவும், உத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் இருந்த சூழலும் அடிகளுடைய புதிய தவவாழ்க்கைக்குப் பெருஞ்சோதனையாக இருந்தன. புலனிச்சை செய்யும் மயக்கத்தில் சிக்கிய அவர் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோளை அங்கு அவர் எட்ட முடியவில்லை.
உத்தரகோசமங்கைக் கோயிலின் சூழல் அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்தது. நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள பாடல்களைப் பார்த்தால் அவர் இருநிலைகளில் வருந்தி வந்தார் என அறிகிறோம். ஒன்று, அந்தக் கோவிலில் கூட்டம் கூட்டமாக இருந்த தேவரடியார்களின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட மனமயக்கம்; இரண்டாவது, புதிதாக அவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கைக்கு உரிய விரதங்களைக் மனம் ஒன்றிக்கடைப் பிடிக்க இயலாமை.
இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.” - From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.
ஜி.யூ. போப் கூறும் இந்த வரலாறு மணிவாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன் மானம் உள்ள தமிழர்கள் போப்புக்குப் புகழ்மாலை சூட்டித் திருவாதவூரடிகளை ஒழுக்கக் கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?
போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்.
திருவாசகத்தில், குறிப்பாக நீத்தல் விண்ணப்பத்தில், திருவாதவூரடிகள் தாம் பெண்மயக்கத்தில் வருந்துவதாகக் கூறுவது போன்ற செய்திகள் அவர் தம்மைப் பற்றிக் கூறிய ஒப்புதல் வாக்கு மூலமல்ல. இது வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக் கொள்ளும் இயல்பைத் திருவாதவூரடிகள் தம்மேல் ஏற்றிக் கொண்டு கூறியதாகும். இதற்கு இவ்வாறன்றி, நம் அடிகளே மகளிர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் மனத்தளவில் மகளிரை நினைந்திருந்தார் என்றும் அவ்வாறு இருப்பினும் விழுத்தொழும்பில் நின்றதால் தம்மைக் கைவிடலாகாது என இறைவனிடம் மன்றாடினார் என்றும் அறியாது கூறிய போப்பை எம்பெருமான் மன்னிப்பாராக.
உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி உலகவருக்காக இறைவனிடம் வேண்டுதல் இந்து பக்தி இலக்கிய மரபு. இதற்குத் தமிழிலேயே ஒரு சான்று காணலாம்.
காரைக்காலம்மையார் பெண்ணடியார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. அவர் அருளிய ‘திருவிரட்டைமணிமாலை’ என்னும் திருப்பதிகத்தில்,
“நினையாது ஒழிதிகண் டாய்நெஞ்சமே
இங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நம்
தாதைநொந் தாத செந்தீ
அனையான் அமரர் பிரான் அண்ட
வானன் அடித்தலமே” (13)
என்னும் பாடலில் தமக்கு மனைவியும் மக்களும் உள்ளதாகவும், நெஞ்சம் அவர்களை நினயாதொழிய வேண்டும் எனவும் பாடுகிறார். காரைக்கால் அம்மையாருக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என இந்தப் பாடலின் அடிப்படையில் கூறினால், அவ்வாறு சொல்பவனை அறிவுடையவன் எனலாமா?
போப்பின் கருத்து அவருடைய கிறித்துவ மரபையொட்டி எழுந்ததுவாகும். கிறித்துவ Saint களில் பலர் Sinner களாக இருந்து Saint ஆனவர்களே. இந்த மரபில் எழுந்ததுதானே “Every saint had a past; and ever Sinner has a future” (Imitation of Christ) எனும் கொள்கை.
இந்தக் கோட்பாடு நம் ஆசாரிய மூர்த்திகளுக்கும் இந்து மரபுக்கும் ஒவ்வாத ஒன்று.
முத்தி நிலையில் பரமுத்தி அபரமுத்தி என்று இருநிலைகள் உண்டு. பரமுத்தியாவது சிவவியாபகத்தில் இரண்டறக் கலந்துவிடும் நிலை. இத்தகையோருக்கு மறுபிறப்பில்லை.
அபரமுத்தி என்பது பதமுத்தி என்றும் சொல்லப்படும். பதமுத்தியில் உள்ளவர்கள் இறைவன் ஆணையின்படி மீண்டும் உலகநன்மையின் பொருட்டுப் பிறந்து உரிய காலத்தில் பரமுத்தி அடைவர்.
இத்தகைய உயர்ந்த ஆன்மாக்களாக சிவனடியை மறவாப் பான்மையராக இருந்து, இறைவன் ஆணையால் ஒருபயன் கருதி உலகிற்கு அனுப்பப்பட்டவரே நம் ஆசாரிய மூர்த்திகள். அவர்களுடைய அருளிச்செயல்களிலேயே இதற்கு அகச்சான்றுகள் உள்ளன.
“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.
கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.
மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.
திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,
“நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
…………………………………………………………………
ஆக்கி ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே” (அதிசயப்பத்து
எனக் கூறினார்.
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! திருவாசகத்தை மொழிபெயர்த்ததனல் அதன் பெருமையை உலகெங்கினும் போப் பரப்பினார் என்றால் இப்புகழோடு, மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார் என்றும் ஆம்..
இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே.
போப் சைவ சித்தாந்தத்தைப் நூல்கள் வாயிலாகப் படித்திருந்தாலும் சித்தாந்த மரபினை அறியார். திருமுறைகளில் ஐயம் வந்தால், அதனை சித்தாந்த நெறி நிற்கும் சான்றோரிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். வெறும் தமிழ்ப்புலமை மட்டும் போதாது.(இதற்குச் சான்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய ‘தியாகராய செட்டியார்’ வரலாறு பார்க்கவும்). இந்த அறியாமையால் அவர் தவறான குறிப்புக்களும் எழுதியுள்ளார். இதனால் போப் சைவ நெறியைப் பாராட்டுகின்றாரா அல்லது பிற கிறித்துவர்களைப் போலக் கேலி செய்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுமாறு சில இடங்களில் கருத்துத் தெரிவிக்கின்றார்.
எப்படி ‘சங்கீதம்’ என்ற பைபிள் பகுதி கிறித்தவர்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றதோ அப்படியே திருவாசகமும் காலங்காலமாகத் தமிழ்மொழி பேசும் மக்களின் பெரும்பான்மையோரின் மனத்தைத் தொட்டுள்ளது எனத் திருவாசகத்தைப் புகழ்ந்த போப் அவர்கள், இதில், மேன்மையான ஆன்மிகத் தத்துவச் சிந்தனைகளோடு மடமையானது என்று சொல்லத்தக்க உருவவழிபாடு பேணலும் கலந்துள்ளது; இன்றைய சைவநெறியில் ஒன்றையொன்று மறுதலித்துக்கின்ற, அதேசமயத்தில் பரஸ்பரம் வலுவூட்டுகின்ற இரு இயல்புகள் செழித்துள்ளன. சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எத்துணைக் கெத்துணை முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அத்துணைக்கு அத்துணை ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார் (There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen on another. The more philosophical and refined the caivite becomes , the more enthusiastic does he often apper to be in the performance of the incongruous rites of the popular worship. )
சைவம் உருவவழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஆன்ம ஞானியும் புறவழிபாட்டைக் கைவிடலாகாது. சிவச்சொரூபம் அருவமாய் எங்கும் வியாபித்துள்ளது. உருவுடைய சீவர்களாகிய நாம் அந்த வியாபகத்தின் உள் உள்ளோம். நமக்குப் புறத்தேயுள்ள பொருள்களையே காண வல்ல கருவிகளைக் கொண்டுள்ள நாம் நமக்கு உள்ளும் புறம்பும் உள்ள அருவமாக உள்ள நம்மை நடத்திச் செல்லும் இறையின் அந்த வியாபக வடிவம் வழிபடுவதற்கு முன்னிலை(சன்னிதானம்) ஆகாது. அதனால்தான் உருவ வழிபாட்டை இந்து சமயம் வற்புறுத்துகின்றது. இறைவன் அடியவர் உளங்கொள்ளும் எந்த வடிவத்திலும் வந்து அருள்புரிவான், அந்த வடிவங்களெல்லாம் அருள்வடிவமே அன்றிக் கல் மண் பொன் போன்ற மாயாகாரிய வடிவங்கள் அல்ல என்பது இந்து மதக் கோட்பாடு. இறைவன் எந்த வடிவில் தங்களுக்கு அருள் செய்தானோ அந்த உருவினைத் திருமுறையாசிரியர்கள் போற்றியுள்ளனர். மணிவாசகப் பெருமானுக்குச் சிவன் குருவடிவில் வந்தருளினான். ஆதலால் திருவாசகம் முழுவதும் குருஸ்துதியே ஆகும்.
தங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்று கூறிக் கொள்ளுகின்ற கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அக்கிறித்து, முகம்மது என்பாரையே தம்முடைய மூர்த்திகளாகக் கொள்ளுவதால் அந்த இருவரும் அடைந்த கதியை அக்கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அடைவர் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. இவர்களும் உருவ வழிபாடு உடையவர்களே.
போப் மணிவாசகப் பெருமானைப் பிழைபடக் காட்டிய மற்றொரு முக்கியமான இடத்தை அறிய வேண்டும்.
இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டுத் தான் மணிவாசகரை ஆட்கொண்டதை உலகுக்கு அறிவித்தபின் , மணிவாசகர் தில்லைக்குச் செல்லுமுன் நடந்த நிகழ்ச்சிகளைத் திருவிளையடற் புராணமும் திருவாதவூரர்ப் புராணமும் விரித்துக் கூறுகின்றன. இறைவன் தன்பொருட்டு மண்சுமந்து கோவால் மொத்துண்ட கருணைத் திறத்தை நினைந்து மணிவாசகர் நினைந்து பலவாறு அழுது புலம்பினார். பாண்டியன் வாதவூரடிகளை அடைந்து வணங்கித் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ‘யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங்களே ஏற்று நடத்தல் வேண்டும்’ என மன்னன் மணிவாசகரிடம் வேண்டி நின்றான். அரசனது அன்பினை உணர்ந்த வாதவூரடிகள், ‘என்னைத் திருபெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்றார். அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் ‘பெரியீர் நும் திருவுளப்படி செய்க’ எனக் கூறி விடை அளித்தான். திருவாதவூரர் நற்றவக் கோலம் பூண்டு திருப்பெருந்துறை நோக்கிச் சென்றார்.
தமிழ்ச் சான்றோர்கள் கூறும் வாதவூரடிகள் வரலாறு இவ்வாறு இருக்க போப் இதனை வேறு விதமாகக் கூறுகின்றார். பாண்டிய நாட்டில் உள்ள மதுரைப் பெருங்கோவிலுக்கும் சோழமண்டலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லைப் பெருங் கோவிலுக்கும் ஏதோ ஒரு பெரிய போட்டி இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தில்லைக் கோவில் மதுரைக் கோவிலை பலநிலைகளில் முதன்மை பெற்றது எனலாம். மாணிக்க வாசகர் மதுரையை விடு நீங்கிய பின் மீண்டும் மதுரைக்கு வரவேயில்லை. இவர் குதிரைவாங்க அளித்த தன் பொருளைக் கவர்ந்து கொண்டதனைப் பாண்டிய மன்னன் மனதார மன்னிக்கவே இல்லை என ஊகிக்கலாம். போப்பின் ஊகத்தின்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் தன்னை மனதார மன்னிக்காததால்தான் அவர் மீள மதுரைக்கு வரவில்லை என்பதாகும்.(It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses)
திருவாசகம் மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரையில் போப் மாணிக்கவாசகர் வரலாறு எழுதியுள்ளார். அதில் பாண்டிய மன்னன் தன்னுடைய பிழைக்கு மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரைத் தன்னுடைய அமைச்சராகப் பணிகொள்ளுவதற்குத் தனக்குத் தகுதியில்லையாதலால் நாட்டை ஆளும் உரிமையை அவருக்கு அளித்துவிட முன் வந்ததாகவும் கூறியதற்குக் கண்டபத்து என்னும் பதிகத்தின் அறிமுகத்தில் கூறியுள்ள இந்தச் செய்தி முரண்படுகின்றது.(The King now pays the saint a visit, acknowledges all his mistakes, declares his unworthiness to have such a , and offers to resign to him the kingdom)
இந்த முரண்பாடுகளால் ஒன்று நன்கு தெரிய வருகின்றது. புராணங்களும், சைவ உலகமும் மாணிக்க வாசகருக்கு அளித்துள்ள உயர்வையும் அவருடைய மேன்மையையும் போப் அறிந்திருந்தாலும் , அவருடைய கிறித்துவ மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
தமிழனுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் தாமஸ் எனக் கூறுவோருக்கும் போப்புக்கும் என்ன வேறுபாடு? ஒரே குட்டையில் ஊறியவர்கள் தானே!
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: inculturation, saint thomas movie, கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவம், கிறிஸ்துவ சூழ்ச்சி, செயிண்ட் தாமஸ், ஜி.யூ.போப், தமிழர், தமிழ், தமிழ் இலக்கியம், தாமஸ், திருமுறைகள், திருவாசகம், தோமா, தோமையர், மதப்பிரசாரம், மதமாற்றம், மதவெறி, மாணிக்கவாசகர், மொழியாக்கம், மோசடி
6 October 2009 at 9:07 am
திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.
டேனியல் தங்கப்பா
(Comment edited & published)