கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
28 Oct 2009 |
அச்சிட
ஜி.யு.போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போலவும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார்.
போப் தாமும் தம்முடன் இருந்து மணிவாசகரும் கண்டு புத்துணர்வு பெற்றதாகக் கூறும் ஓவியங்களுள் கிறித்துவின் பிலாக்கணம் அல்லது ஒப்பாரி என்னும் இந்த ஓவியமும் ஒன்று. இதில் இயேசுகிறிஸ்து பிணமாகக் கிடக்கிறார்
சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசுகிறித்துவின் உடல் தரையில் கிடத்தப்பட்டுள்ளது. அவருடைய மரணத்துக்குத் துக்கப்படுவோர் ஒருவித நம்பமுடியாத குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார். தாயாகிய கன்னி மேரி பிணமாகியுள்ள தன் மகனின் தலையை மடியில் கிடத்தி உயிரின் மிச்சம் ஏதேனும் உள்ளதா என மார்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். மாகதலனா மேரி இயேசுவின் பாதங்களை வருடித் தேய்த்துக் கொண்டுள்ளாள் இந்த ஓவியம் ChapeLல் உள்ள கூக்குரல் மிக்க(most auditory) காட்சிகளில் ஒன்று. துக்கிப்பவர்களின் ஓலம் அந்த நிலப்பரப்பு முழுவதும் பரவுகின்றது. அந்த அவலப் புலம்பல் ஆகாயத்தில் சூழ்ந்துள்ள தேவதைகளின் கூக்குரலையும் ஊடுருவிச் சிதைக்கின்றது.
இந்த ஓவியத்தைப் போல இயேசு கிறித்துவின் மரணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பல உள்ளன.
இந்த ஓவியம் அன்புடையவர் ஒருவரை இழப்பதினால் நேரிடும் அவலத்தின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் அற்புதக் கலைப்படைப்பாக இருக்கலாம். ஓவியத்தில் உள்ள அவல உணர்வு அதனை ஒன்றிக் காணுவோரின் உள்ளத்திலும் தொற்றிப் படருகின்றது என்பதும் உண்மை எனலாம். அந்த ஓவியத்தில் உள்ளோர் போடுகின்ற கூக்குரல் நம்முடைய செவிக்கும் எட்டுகின்றது என்பதும் உண்மையே.
ஆனால் இந்த ஓவியத்தால் ஒருவன் அடையக் கூடிய ஆன்மலாபம் என்ன? இதனை மனத்திலிருத்திக் காண்பவருக்கு அவல உணர்வால் மனச்சோர்வும் திகைப்பும் உண்டாகுமே அன்றி ஆன்மநெறிக்கு வேண்டிய உறுதியும் மன எழுச்சியும் தோன்றாது. மணிவாசகர் மானசீகமாகத் தம்மோடு இருந்து இந்த ஓவியத்தை கண்டு மெய்யுணர்வு பெற்றார் எனப் போப் கருதுவது விந்தையாக உள்ளது. அந்தமில்லா ஆனந்தம் பெற்ற மணிவாசகப் பெருமானை இழிவு செய்வதாகவே தோன்றுகிறது.
நம்முடைய பெரியோர்கள் எத்தகைய மரணம் ஆகாதெனக் கூறினரோ அத்தகைய மரணத்தையே இயேசு கிறிஸ்து சந்தித்துள்ளார்.
தமிழ் இந்துக்கள் பாராயணம் செய்யும் சிறுநூல்களில் ஒன்று அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி. அதில், அருணகிரிப் பெருமான்,
“விண்ணுலகிற்குத் தலைவனாக இருக்கின்ற பெருமானே, என்னுடைய மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தார் ஒன்று சேர்ந்து கூ கா என்று ஓலமிட்டு அழும்படி, (இந்தப் பருவுடலை விட்டு எமனாலே எனது உயிர் பிரிக்கப்பட்டு) நான் சாகாமல் இருக்கும்படி எனக்கு மெய்யறிவை உபதேசித்தவனே! உனக்கு வணக்கம்.” எனப் பாடுகின்றார். அதாவது முருகனோடு அத்துவிதமாகக் கலத்தலினால் உண்டாகின்ற மெய்யறிவு பெற்றவர்கள் நமனுக்கு அஞ்சார், ஆளாகார் என்பது கருத்து.
“கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவி
த்யாகா சுரலோ கசிகா மணியே”
இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்.
‘அறிவு அழியவும் , மயக்கம் பெருகவும், பேச்சு அடங்கவும் தாயும் (ஓவியத்தில் கன்னிமேரி) மனைவியும் (மக்தலேன்மேரி – இயேசுவுடன் இந்த உறவு உண்டு எனக் கூறப்படுகிறது) பக்கத்திலேயே இருந்து அச்சமுற்று அழ, உறவினரும் அழ, நெருப்புக்கு ஒப்பான யமன் என்னை அழையாதபடி— உன் திருவடியில் அணுக எனக்கு வரம் தந்தருளுவாயாக!
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ உறவுமழ
அழலினிகர் மறலியெனை யழையாதே
- பழநித்திருப்புகழ்
சிவஞானியர்களின் அந்திமக் காலத்தில் அவர்களுடைய உயிரை அழைத்துச் செல்ல சிவகணங்களே வருவர், எமதூதர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.
“நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணமே”
எனத் திருமூலநாயனார் திருமந்திரம் 2968ஆவது பாடலில் கூறியருளியுள்ளார்.
மெய்ஞ்ஞானியர் சிவமே ஆனவர்கள். சிவம் எல்லா உயிர்களுடனும் கலந்து எங்கும் நிறைந்து (வியாபகமாக) உள்ளது. அதனால் சிவமேயான மெய்ஞ்ஞானியர்கள் அனைத்துயிருமாகவும் இருப்பார்கள். இந்தநிலை பாவனைக்கு எட்டாதது. இதனை, அருணகிரிநாதர்,
“எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீதம் அருள்வாயே”
எனக் குகப்பெருமானிடம் வேண்டுகிறார். இதனையே நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில், முருகப்பெருமானின் திருவருள் பெறுவதற்குப் பக்குவப்பட்ட தொண்டனை நோக்கி ‘உலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில்” இதனை நீ பெறுவாய் என ஆற்றுப்படுத்தினார்.
‘எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதயபாவ னாதீதத்தை’ப் பற்றி இயேசுவும் அறிந்திருக்கக் கூடும். அதனால் தான், ‘அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்’ ((யோவான் 6:56) எனக் கூறினார் போலும். ஆனால் அந்த நிலையை அவர் எய்தவில்லை.
எல்லா உயிர்களிலும் கலக்கும் நிலையைப் பெற்றிருந்தால் உடலை விட்டு அவருயிர் நீங்கி இறையுடன் கலக்கும்போது, இன்பானுபவம் இன்னதென்றறியா வகையில் எல்லா உயிர்களும் அனுபவித்திருக்கும். இது தமிழ் இந்து உணர்த்தும் உண்மை.
சைவசமயாசாரியர் நால்வரில் திருநாவுக்கரசர் பெருமான் தம் முதுமைக் காலம் வரை வாழ்ந்தவர்;. சிவமாகவே திகழ்ந்தார். தம்முடைய 85ஆம் அகவையில், “புண்ணியா ! உன்னடிக்கே போதுகின்றேன்” எனப் புகன்று உடலை நீத்து,”நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டவரசு அமர்ந்திருந்தார்” இதுதான் சைவம் கூறும் பரமுத்தி. அப்பரடிகள் இவ்வாறு பரமுத்தி இன்பப்பேறு அடையவே, “ விரிஞ்சன் முதல் யோனிகளா யினவெல்லாம் உள்நிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த”ன என்று கூறுகிறார், சேக்கிழார் பெருமான்.
யோனிகள் என்றது எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் என சைவ சாத்திரங்களில் வகுக்கப்பட்ட யோனி பேதங்களை உடைய உயிர்களை. யோனிகள் என்றது வகைகளையும் எல்லாம் என்றது தொகைகளையும் குறித்தன.
மெய்ஞ்ஞானியர் சிவத்தொடு கலக்கும்போது உயிர்களுக்குத் தோன்றும் இன்ன தென்றறிய வரா இன்பநிலையைச் சிவக்கவிமணி பின் வருமாறு விளக்குகின்றார்:
‘நீர் நிறைந்த வாவிக்குள் பல உயிர்களும் வாழ்வனவாக , அந்நீர் நிலையினுள் ஒரு முட்டை வெடிக்குமாயின், அதனால் நீர் அசைவுபெற, அந்த அசைவு கலந்து, அலை உருவமாக நீர்பரப்பு முழுமையும் உழக்க, அதனால் அங்குத் தங்கும் ஏனை உயிர்கள் யாவும் தாக்கப்படுதல் போல, நாயனார் சிவநிறைவுக்குள் எய்த, அதனால் அந்நிறைவினுட் கிடந்த எல்லா யோனிகளும் தாக்கப்பட்டு ஆனந்தம் அடைந்தன என்பதாம்.’
இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
28 October 2009 at 11:30 am
//ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார்.//
ஸ்நானகன் யோவான் ஏசுவுக்கு முன்பே இறந்தது தெரியாதா? ஸ்நானகன் யோவானுக்கும், சீடன் யோவானுக்கும் வித்தியாசம் தெரியாத இவர் கட்டுரையை எதைக்கொண்டு பாராட்டுவது?
(Comment edited & published)