ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்
தமிழ்செல்வன்
6 Nov 2009 |
அச்சிட
மங்கை-மாங்கல்யம்-மங்கலம்-மகிமை
”மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது திருமணத்தில் இன்றியமையாத முக்கியமான சடங்கு. மணமகன், மணமகளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உண்டு. மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படுவதால்தான். பாரத தேசத்தில் வாழும் அனைத்து ஹிந்து சமுதாயத்தினரின் திருமண வைபவத்திலும், தாலி ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.
“மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையாலல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள் வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது…..
ஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்…. திருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்? அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்….
பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ’காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும். இந்தக் காப்புகளுக்காகவே கையில் ’காப்பு’ அணியப்படுகிறது. ‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் ’காப்பு’க் கட்டப்படுகிறது…. பெண்ணைத் தெய்வமாக்கி, கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.
– கவிஞர் கண்ணதாசன் - “அர்த்தமுள்ள இந்து மதம்” முதல் பகுதி.
தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவிப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திருமண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின்னம்; பார் புகழும் பாரதப் பண்பாட்டின் பழம்பெருமை பகரும் சின்னம்.
பல நூற்றாண்டுகளாக, ஏறக்குறைய ஆயிரம் வருடங்கள் அந்நியரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட நம் கலாசாரத்திற்கு ஆபத்து வரவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு ஆவதற்குள், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், எப்பேர்பட்ட மாற்றங்கள்! மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமும், இந்து விரோத சக்திகளின் தாக்குதலும், பாதகம் மிகுந்த கல்வித் திட்டங்களும், சுயநலம் மிகுந்த ஆட்சியாளர்களும், அந்நிய சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கிடக்கும் பொறுப்பற்ற ஊடகங்களும், சேர்ந்து நம் கலாசாரத்தை அழிவு நோக்கிக் கொண்டு செல்கின்றன.
இந்துக்களை அவமதிக்கும் “மேற்கத்திய ஊடக” நிறுவனம்
அந்த அழிவுப்பாதையில் ஒரு மைல்கல்லாக ஒரு நிகழ்ச்சியை
கடந்த மாதம் ஞாயிற்றுக் கிழமை (11-10-09 அன்று) “ஸ்டார் விஜய்” தொலைக்காட்சி அரங்கேற்றியது. ”ஸ்டார் விஜய்” ராபர்ட் முர்டாக் என்பவரின் “ஸ்டார் நெட்வொர்க்” குழுமத்தைச் சேர்ந்த, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் “நீயா நானா” என்றொரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம்.
இந்நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் ”மெர்குரி கிரியேஷன்ஸ்” என்று சொல்லக்கூடிய ஒரு நிறுவனம். இதன் நிர்வாகத் தலைவராக (CEO) ‘திரு.ஆண்டனி’ இருக்கிறார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ‘கோபிநாத்’ என்பவரும் ஒரு ஹிந்து விரோதி என்றே அறியப்படுகிறார். ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு அதை இரண்டு குழுக்கள் விவாதிப்பதே இந்நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவனத்தின் நோக்கம் என்னவோ அதையே தீர்ப்பாக கோபிநாத் அறிவிப்பார்.
நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
”குலதெய்வ வழிபாடு தேவையா?”, என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னர் விவாதம் நடத்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவாதத்தில் பங்கேற்றவர்கள், பெற்றோர்கள் ஒரு குழுவாகவும் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். பெற்றோர்கள் குலதெய்வ வழிபாடு தேவை என்றும் இளைஞர்கள் குலதெய்வ வழிபாடு தேவையில்லை என்பது போலவும் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, பார்ப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதே போல், “கோவில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டுமா”, “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா” போன்ற தலைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்விவாதங்களில் வைதீக, ஆகம முறைகளைத் தவறாக விமரிசித்தும், பிராம்மண சமுதாயத்தினரை தாக்கியும் கருத்துகள் சொல்லப்பட்டன. பூசாரிகள், குருக்கள் இடையே பகை ஏற்படுத்துவதும், கிராமத் தெய்வங்களை வழிபடுபவர்களை ஹிந்து கலாசாரத்திலிருந்து பிரிப்பதுமே நோக்கம் கொண்டதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. பிராம்மண கலாசாரமே ஹிந்து கலாசாரம் என்பது போலவும், அதற்கும் தமிழ்க் கலாசாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கும் விதமாக நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சி.
இந்த மாதிரியான விவாதங்களில் கலந்து கொள்பவர்கள், குறிப்பாக நிறுவனத்தின் நோக்கத்திற்குச் சாதகமாகப் பேசக்கூடிய அணியில் பங்கு பெறுபவர்கள் அந்நிறுவனத்தால் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இதே கோபிநாத் நடத்திய இதே ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நேரிடையாகப் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு.
சில சமயங்களில், எதிரணியில் பங்கு பெறுபவர்கள் தொலைக்காட்சியில் தங்கள் முகம் தெரியவேண்டும் என்று அலைபவர்களாக இருப்பர். அந்த இந்துக்கள், நம் கலாசாரத்தை நாமே குறை சொல்கிறோமே, கிண்டல் செய்கிறோமே என்கிற நினைப்பே இல்லாமல், கேனத்தனமாக சிரித்துக் கொண்டும், மடத்தனமாக உளறிக் கொண்டும், தொலைக் காட்சியில் தங்கள் முகம் சில நிமிடங்கள் தெரியவேண்டும் என்பதற்காக தன்மானம், சுயமரியாதை என அனைத்தையும் இழந்து நிற்பதுதான் மிகவும் வேதனை.
இதே போல் தான், கடந்த 11-ஆம் தேதியன்றும் “பெண்கள் தாலி அணிவது அவசியமா” என்ற பொருள் விவாதிக்கப் பட்டது. தாலி தேவையில்லை என்கிற விஷவித்தை மக்கள் மனத்தில் விதைப்பது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம். வழக்கம்போல் அந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை நடத்திச் செல்வது கோபிநாத்தின் நோக்கம்.
எனவே ’தாலி தேவையில்லை’ என்கிற அணியில் பேசியவர்கள்
முன்னரே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இவர்களில் சிலர் ஹிந்து விரோதி என்பதும் ‘பகுத்தறிவு’ப் பாசறையில் இருந்து வந்தவர்கள் என்பதும் நிதர்சனம். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிரபலம் ‘நிர்மலா பெரியசாமி’ என்கிற ‘முற்போக்கு’ச் சிந்தனையாளர். ஒரு காலத்தில் தொலைக் காட்சிகளில் செய்தி வாசிக்கும்போதே இவரின் லட்சணத்தைப் பலர் பார்த்திருக்கலாம். மற்றபடி இவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
விவாதங்களில் சொல்லப்பட்ட “முத்தான” கருத்துகள்
- தாலி அணிவது வெறும் மூடநம்பிக்கையே. அதில் தெய்வீகமோ, புனிதத்துவமோ ஒன்றும் இல்லை. அது ஒரு சாதாரண பொருள் தான்.
- பெரும்பான்மையான பெண்கள் இப்போது தாலி அணிவதில்லை.
- வேலைக்குச் செல்லும் பெண்கள் மணமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. எனவே, தாலியை தங்கள் ரவிக்கைக்குள் மறைத்துச் செல்கிறார்கள்.
- பல பெண்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.
- பெரும்பான்மையான பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியைக் கழற்றி வைத்து விடுகிறார்கள்.
- தாலி என்பது நாய்களின் உரிமம் போன்றது தான். நாயின் உரிமத்தை அதன் கழுத்தில் தொங்க விடுவதைப்போல் பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குகிறது. அவ்வளவு தான். (இதைச் சொல்லியது ஒரு கிறுத்துவப் பெண்மணி).
நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை சமயங்களில் மருத்துவர் தாலியைக் கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?” என்று கேட்க “கழற்றிவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்” என்று கூறிய பெண்மணியிடம், “மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?” என்று கேவலமாக ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணியை அவமானம் செய்துள்ளார் கோபிநாத்.


நிகழ்ச்சியில், ”தாலி தேவையில்லை” என்ற அணியில் பல பெண்கள் தாலியைக் கழற்ற தயாராக இருந்தார்கள். ஒரு 65 வயதான ஒரு முற்போக்கான பெண், ‘இங்கேயே இப்போதே தாலியை கழற்றுவீர்களா?’ என்று கோபிநாத் கேட்டவுடன் தாலியைக் கழற்றி அவர் கையில் கொடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், ’தலைமை’ தாங்கியவர்களில் ஒருவரான “ஓவியா” அந்தப் பெண்ணின் ஆணித்தரமான முடிவுக்குப் பாராட்டி, “சிறந்த பங்கேற்பாளர்” என்ற பரிசு வழங்கி கௌரவித்தார். அப்போது அந்தப் பெண்ணின் ’தைரியத்தையும்’ ‘பகுத்தறிவையும்’ பாராட்டி கையொலி எழுப்புமாறு அனைவரையும் வற்புறுத்தியுள்ளார் கோபிநாத்.
தாலி அணிவது அவசியம்; அது நமது கலாசாரம் என்று அதன்
முக்கியத்துவத்தைப் பேசிய எதிரணியினரின் கருத்துக்கள் பல நிகழ்ச்சித் தொகுப்பில் மறைக்கப் பட்டுள்ளன என்பது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது. நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத் வேண்டுமென்றே தாலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் கேலி செய்துள்ளார். திருமணம் ஆகாத இளம்பெண்கள் மனதிலும் மற்றும் கிராமப்புற பெண்கள் மனதிலும் இந்த நிகழ்ச்சி எந்த மாதிரியான எண்ணங்களை விதைத்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
தாலியில்லையேல் ”பகுத்தறிவு”ம் இல்லை, ”சுயமரியாதை”யும் இல்லை.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழர் இந்துக்கள் அல்ல’ என்கிற பிரசாரத்தை, தொடர்ந்து செய்து வருகின்றன. ஹிந்து கலாசாரம் வேறு, தமிழ் கலாசாரம் வேறு என்று எப்படியெல்லாமோ தமிழ் ஹிந்துக்களை ஏமாற்ற முயற்சி செய்தும் வருகின்றன. இம்மாதிரியான முயற்சிகள் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஹிந்து கலாசாரத்தைக் கொச்சை படுத்தும் நோக்கத்துடன் இவர்கள் ஆரம்பித்த வழக்கம்தான் “சுயமரியாதைத் திருமணம்” என்பது. சுயமரியாதைத் திருமண இயக்கம் படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். நடக்கும் ஒரு சில சுயமரியாதைத் திருமணங்களில் கூட, திருமண மந்திரங்களையும், திருமணத்தை நடத்தும் பிராம்மண புரோகிதரையும், தெய்வ வழிபாடுகளையும்தான் இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர “மாங்கல்ய தாரணம்” என்னும் தாலி கட்டும் புனிதச் சடங்கை நிறுத்த முடியவில்லை. திராவிடத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் நடத்தப் படும் சுயமரியாதைத் திருமணங்களில் கூட, பெரியார் பள்ளி, அண்ணா கல்லூரி என்கிற பகுத்தறிவுப் பாசறைகளில் பயின்று வந்த அத்தலைவர்கள் தங்கள் கையாலேயே தாலிகளை எடுத்துக் கொடுத்து திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.
தமிழ்’க் கட்சிகளும், இந்து இயக்கங்களும்
இந்த அளவிற்கு, தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட இந்தப் புனிதச் சடங்கை மக்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. திருமண வாழ்வின், தாம்பத்தியத்தின் புனிதச் சின்னத்தை, பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தை, தெய்வீகப் பாரம்பரியத்தை அவமரியாதை செய்த இந்நிகழ்ச்சிக்கு சிறிதளவு கூட எதிர்ப்பு வராதது வேதனை அளிப்பதாக இருக்கின்றது.
நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைப் பேட்டியில் திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் தவறில்லை என்று சொன்னதற்குக் கொதித்துக் கிளம்பிய ’தமிழ்’ அரசியல் கட்சிகள் தற்போது மௌனம் காப்பதன் மூலம் கிறுத்துவ நிறுவனங்களை எதிர்ப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதாவது குஷ்பு என்கிற தனி மனிதரிடம் காட்டிய தங்கள் வீரத்தையும் சூரத்தனத்தையும், சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த ஒரு கிறுத்துவ ஊடக நிறுவனத்திடம் காட்டத் துணியவில்லை அவர்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தாங்களும் பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்துவதாலும், ”இந்து எதிர்ப்பு” என்கிற நோக்கத்தில் ஒன்று படுவதாலும், ”தமிழ்” அரசியல் கட்சிகள் சக தொலைக்காட்சி நிறுவனத்தை எதிர்க்க விரும்பவில்லை என்கிற உண்மை தான்.
சரி, இவர்கள் யோக்கியதை தான் தெரிந்திருக்கிறது. ஆனால் ஹிந்து இயக்கங்கள் ஏன்
தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவைகள் தங்களின் மற்ற
சேவைகளில் ஈடுபட்டிருந்தாலும் இப்பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு
போராட்டம் நடத்தியிருக்கலாம். பல்வேறு காரணங்களால் போராட்டம் நடத்த முடியாத
நிலையில் ஒரு பத்திரிகை அறிக்கை மூலமாவது தங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும்.
“விஜயபாரதம்” இதழ் இந்நிகழ்ச்சியைக் குறித்து கண்டனம் செய்து ஒரு கட்டுரை
எழுதியுள்ளது பாராட்டத் தக்கது.
இந்து முன்னணி தலைவர் திரு ராமகோபாலன் அவர்களும் மற்றும் அவ்வியக்கத்தைச்
சேர்ந்த பரமேஸ்வரன் முதலான சில தொண்டர்களும் நேரிடையாக தங்கள் எதிர்ப்பைத்
தெரிவித்ததும் பாராட்டத் தகுந்தது. அவர்களின் செயல்பாடு இக்கட்டுரையில்
பின்னால் வருகிறது.
ஆனால் பா.ஜ.கவைப் பொறுத்தவரை பெண்களின் “கடற்கரை கைப்பந்து”
விளையாட்டிற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க மகளிர்
அணி இவ்விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது மிகவும் வருந்தத்தக்கது. அதே போல்
நடிகைகளின் உடைகள் விஷயத்திற்கெல்லாம் போராட்டம் நடத்தும் ஹிந்து மக்கள் கட்சி
இவ்விஷயத்தில் ஏதும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்து சமூகம் இந்து இயக்கங்களிடம் பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளது. இந்து
இயக்கங்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டும். இந்து ஆன்மீக பத்திரிகைகளும்,
தொலைக்காட்சி சானல்களும் சில இருந்தாலும், இந்து அரசியல் மற்றும் கலாசாரக்
கொள்கைகளை ஆணித்தரமாக மக்களிடையே எடுத்துச் செல்ல இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு
ஊடக நிறுவனம் இல்லாத நிலையில், இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு இந்து இயக்கங்கள்
கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டியது அவசியமாகிறது. அந்த இயக்கங்களிடம்
விஷயம் தெரிவிக்கப் பட்டதையடுத்து அவை வரும் நாட்களில் தங்கள் எதிர்ப்பை,
போராட்டங்கள் மூலம் காட்டும் என்று இந்து சமூகம் எதிர்பார்க்கிறது.
தனிமனிதர்கள் தெரிவித்த எதிர்ப்பு
கட்சிகளும் இயக்கங்களும் பேசாமல் இருந்தாலும் சில தனிமனிதர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை. அவர்கள் விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் (CEO) திரு ஸ்ரீராம் அவர்களையும், மெர்குரி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அவர்கள் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆரம்பத்தில் ஒரிரண்டு அழைப்புகளை ஏற்றுப் பேசிய திரு ஸ்ரீராம் அவர்கள் பின்னர் தன் காரியதரிசி மூலம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்தார். இந்து முன்னணியைச் சேர்ந்த திரு. பரமேஸ்வரன் என்பவரும் ஸ்ரீராம், ஆண்டனி இருவரையும் தொடர்பு கொண்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கௌதம் என்பவர் ஆண்டனியிடம் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, இதே போல் மற்ற மதத்தவரின் கலாசாரத்தையும், பழக்கவழக்கங்களையும் அவமதிப்புச் செய்து நிகழ்ச்சி தயாரிப்பீர்களா என்று கேட்டபோது, “நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நேயர்களின் கருத்தைத்தான் பதிவு செய்தோம். மேலும் நான் அய்யாவழி வைகுந்தரின் பக்தன். எனவே இந்துக் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி தயாரிக்க மாட்டேன்” என்று சொல்லியுள்ளார்.
இதனிடையே தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்தவுடன் சற்று கலங்கிப்போன ஆண்டனி, இந்து முன்னணியைச் சேர்ந்த மற்றொரு தொண்டர் மூலம் இந்து முன்னணி தலைவர் திரு ராமகோபாலன்ஜி அவர்களைச் சந்தித்து, இந்த விஷயத்தைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசாமல், “சித்தர்கள்” என்ற மற்றொரு நிகழ்ச்சிக்கு அவரைத் தலைமை தாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். திரு ராமகோபாலன் அவர்களின் அலுவலகத்திலிருந்து அவர் கிளம்பும்போது அங்கு இருந்த திரு. பரமேஸ்வரன் நேராகவும் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதன் பிறகே திரு. ராமகோபாலன் அவர்களுக்கு விஷயம் தெரிந்துள்ளது.
ஆண்டனி-ராமகோபாலன் சந்திப்பைப் பற்றி அறிந்துகொண்ட கட்டுரையாளர் ஹரன் அவர்கள் ராமகோபாலன் அவர்களைத் தொடர்புகொண்டு விஜய் டிவி நிறுவனம் பொது மன்னிப்பு கேட்குமாறு அவர்களை வற்புறுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டு, மேலும் ஹிந்து முன்னணி சார்பில் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். போராட்டத்தைப் பற்றி பரமேஸ்வரன் அவர்களிடமும் பேசிய ஹரன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச துணைத் தலைவர் திரு வேதாந்தம் அவர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு நல்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.
திரு. ஹரன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, ராமகோபாலன் அவர்கள் விஜய் டிவி ஸ்ரீராம் அவர்களைத் தொடர்பு கொண்டு, ”தொலைக்காட்சியின் மூலம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும், அது தான் நியாயம்” என்று கூறியதற்கு, “எங்கள் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் இருக்கிறது. அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்கலாம் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சால்ஜாப்பு கூறியுள்ளார் ஸ்ரீராம்.
இதனிடையே, சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுப்ரமணியம் என்கிற வழக்குரைஞர், விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் திரு ஸ்ரீராம், மெர்குரி கிரியேஷன் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி, விஜய் டிவி நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத், மாநில காவல் துறைத் தலைவர், நகர காவல்துறை ஆணையர், ஆகியோருக்கு சட்ட அறிவிப்புப் புகார் (Legal Notice) அனுப்பியுள்ளார். அதில், மாங்கல்யம், இந்துத் திருமணங்கள் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை ஆகியவற்றின் புனிதத்தை எடுத்துக் கூறி, ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஸ்ரீராம், ஆண்டனி, கோபிநாத் ஆகியோருக்குக் கடுமையாகத் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ள அவர், அவர்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும் என்று கோரியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் காவல்துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அந்தப் புகாரை மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அவர்களுக்கும், மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
விஜய் டிவி நிறுவனமும், மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனமும் புரிந்துள்ள குற்றங்கள் இ.பி.கோ. 153(a), 153(b) மற்றும் 295(a) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தக்கவை என்பது குறிப்பிடத் தக்கது.
மற்ற ஊடகங்களின் ‘ஹிந்து’ எதிர்ப்பு
ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதும், ஹிந்து கலாசாரத்தைக் கிண்டல் செய்வதும், ஹிந்து நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதும், அவற்றை மூட நம்பிக்கைகள் என்று எகத்தாளம் செய்வதும், ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நம் நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிரான நோக்கம் கொண்டவையே. ஹிந்துக்களுக்கு எதிராக செய்திகளும், கட்டுரைகளும், நிகழ்ச்சிகளும் வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு இயங்குகின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அந்நிய சக்திகளின் கைப்பாவையாக இயங்குகின்றன. அந்நிய நிறுவனங்களின் நிதியுதவியால் இயங்குவதால் அந்நிறுவனங்களின் சொல்படி நடக்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்களில் வேலை பார்ப்பவர்கள் கிறுத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும், மார்க்ஸிய (இடதுசாரி) சிந்தனை உள்ளவர்களாகவும், (தமிழகத்தைப் பொருத்தவரை) திராவிட இன வெறியாளர்களாகவும் இருப்பதால், அந்நிய சக்திகளின் ஆதரவாளர்களாகச் செயல்படுகின்றனர். இருக்கின்ற ஒருசில ஹிந்துக்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது.
இதே விஜய் டிவி தொலைக்காட்சியில், “நடந்தது என்ன” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் பெரும்பான்மையாக ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளையே காணலாம். அதே போல், “சன் நியூஸ்” சானலில் “நிஜம்” என்கிற நிகழ்ச்சியும், “Zee தமிழ்” டிவியில் “நம்பினால் நம்புங்கள்” என்கிற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகின்றன. ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் இந்த மூன்று நிறுவனங்களும் மேற்கண்ட நிகழ்ச்சிகள் மூலம் போட்டி போடுகின்றன. குறிப்பாக மேற்கண்ட நிகழ்ச்சிகளில், கிராமப்புறங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடக்கும் திருவிழாக்கள், ஏழை மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதையே தொழிலாகக் கொண்டிருகின்றன இந்த சானல்கள்.
தமிழக முதல்வர் பெயரில் இயங்கும் “கலைஞர் டிவி”, “விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று கூடச் சொல்லாமல் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று சொன்னாலும், அதைப்பற்றிக் கவலையே படாமல் அதன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் தன்மானமற்ற ’ஜந்துக்கள்’ போன்றல்லவோ இருக்கிறார்கள் ‘ஹிந்துக்கள்’!
தன்னை ஏதோ தமிழ் மொழியின் காவலனாகக் காண்பித்துக் கொள்ளும் பா.ம.கவின் ”மக்கள் டிவி”, ‘தமிழ்’ என்கிற பெயரில் ஹிந்து கலாசாரத்தின் முக்கியமான அம்சங்களை தமிழ் கலாசாரம் என்று திரித்துக் கூறி, தமிழ் கலாசாரம் வேறு, ஹிந்து கலாசாரம் வேறு என்பது போன்று பொய்பிரசாரம் செய்து வருகிறது. இந்தச் சானலின் நிகழ்ச்சிகளில், ஹிந்து வெறுப்பு மண்டிக்கிடக்கும். தமிழ் கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று, நன்னன் என்கிற ”பகுத்தறிவுப் பேராசிரியர்” ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார். ஹிந்து பண்பாட்டை தமிழ் பண்பாடு என சொல்வது தவறல்ல அதுவே உண்மையும் கூட. ஆனால் தமிழ் பண்பாடு என்கிற பெயரில் தமிழரின் ஆன்மிக அடிப்படையை அழிப்பதுதான் தவறு. அந்த ஆன்மிக அடிப்படை ஹிந்து தர்மம்தான்.
ஒரு நிறுவனம் பாக்கியில்லாமல் அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துக்களைப் பழித்து, ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதையே செய்து வருகின்றன. அனைத்து சானல்களில் காட்டப்படும் மெகா தொடர்களைப் பார்த்தால் ஹிந்து எதிர்ப்பு நிதர்சனமாகத் தெரியும். கோவில்களில்தான் சதியாலோசனைகளும், குடும்பச் சண்டைகளும், புறங்கூறுதலும் நடக்கும்; கோவில்கள் காதலர் பூங்காக்களாகவும் காண்பிக்கப்படும்; ஆனால் சர்ச்சுகள் அன்பு ஊறும் இடங்களாகவும், மசூதிகள் அமைதியான இடங்களாகவும் காண்பிக்கப்படும். காவியுடை அணிந்த இந்துச் சாமியார் தீயவராகவும், வெள்ளையுடை அணிந்த கிறுத்துவப் பாதிரியார் அன்பே உருவானவராகவும், தாடியும் தொப்பியும் அணிந்த மௌலவி அமைதியே உருவானவராகவும் சித்தரிக்கப்படுவர். புரோகிதர்கள் கோமாளிகளாகச் சித்தரிக்கப்படுவர். ஹிந்துக் குடும்பங்களில் தான் சண்டைகளும், சச்சரவுகளும், அசிங்கங்களும் காண்பிக்கப்படும். அவற்றைப் பல மணிநேரங்கள், தங்கள் வீட்டு வேலைகளையும் கூட மறந்து, நம் அப்பாவி ஹிந்துப்பெண்மணிகள் பார்த்துக்கொண்டு அந்நிகழ்ச்சிகளில் ஒன்றிவிடுவர். நம் கலாசாரத்தையும், பழக்க வழக்கங்களையும், இந்த மெகா தொடர்கள் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் அவமதிக்கின்றனவே என்கிற உறுத்தலே இல்லாமல் இந்துக்கள், குறிப்பாகப் பெண்மணிகள் அத்தொடர்களுக்கு அடிமைகளாக இருப்பது மற்றுமொரு வேதனையான விஷயம்.
ஹிந்து துவேஷமும், ஹிந்து எதிர்ப்பும் போதாது என்று, கிறுத்துவ ஆதரவும், இஸ்லாமிய ஆதரவும் அப்பட்டமாகத் தெரிகின்ற அளவிற்கு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. கிறுத்துவ மதப்பிரசாரம் இல்லாத சானல்களே இல்லை எனலாம். அதே போல் தான் இஸ்லாமிய மதப் பிரசரமும். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போதாதென்று, ”மதச்சார்பின்மை” என்கிற பெயரில், அரசு நிறுவனமான தூர்தர்ஷனின் ‘பொதிகை’ சானலிலும் அந்நிய மதப் பிரசாரம் அரங்கேற்றப் படுகிறது.
புனித தினங்களில் நடக்கும் திருவிழாக்களைக் காட்டுவதற்கும், மதப் பிரசாரத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆனால் அனைத்து சானல்களிலும் அந்நிய மதப் பிரசாரம் காண்பிக்கப் படுவது நம் நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது.
ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் பிராந்திய நிறுவனங்களுக்குச் சற்றும் சளைத்தவையல்ல. ஏழு நாட்களும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் இவை, செய்திகளிலும், விவாதங்களிலும், கடுமையான ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவை. அமர்நாத் கோவிலின் பனிலிங்கம், சபரிமலையின் மகர ஜோதி, சபரி மலையில் 10-வயது முதல் 50-வயது வரையிலான பெண்களை அனுமதிக்காமல் இருப்பது, புரி ஜகன்னாதர் கோவிலின் ‘மஹா பிரசாதம்’ , குருவாயூர் கோவிலின் உடைக் கட்டுப்பாடு, போன்ற பல விஷயங்களை வேண்டுமென்றே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, ஹிந்து எதிர்ப்பார்களர் மூலம் அந்தப் பாரம்பரிய வழக்கங்களை முறைகேடாக விமரிசனம் செய்து, நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் மனதில் சந்தேக வித்துக்களை விதைத்து ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். நகர்ப்புற இளைஞர்களை மிகவும் தவறான வழியில் நடத்திச் செல்கின்றன இந்த சானல்கள்.
இந்துக்கள் தரும் ஆலோசனைகள்
11-ஆம் தேதி ’விஜய் டிவி’ நடத்திய ’நீயா நானா’ நிகழ்ச்சியை அடுத்து 12-ஆம் தேதியும், 13-ஆம் தேதியும், இக்கட்டுரையாளருக்கு பலர் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் வேதனையைப் பகிர்ந்துகொண்டனர். மற்ற சில இந்து இயக்கவாதிகளிடமும் பலர் தங்கள் எண்ணத்தைத் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த உதாரணத்தின்படி விஜய் டிவிக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் பின்வரும் பொருள்களில் நிகழ்ச்சிகளோ, விவாதங்களோ நடத்துமாறு இந்துக்கள் ஆலோசனைகள் வைக்கின்றனர். இந்த ஆலோசனைகளைச் சவால்களாக எடுத்துக் கொண்டு இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும், அதிகாரிகளும் நிகழ்ச்சிகள் தயாரித்து ஆவன செய்வார்களா? இதோ சில தலைப்புகள்:
- முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?
- இஸ்லாமியச் சடங்கான ‘சுன்னத்’ தேவையா?
- மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?
- ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?
- கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?
- மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?
- தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?
- மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?
உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்? - இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?
- மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?
இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.
சமீபத்திய நிகழ்வு
கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று மாலை, கௌதம், வழக்குரைஞர் சுப்ரமணியம் பாலாஜி, புகைப்படக் கலைஞர் ஸ்ரீனிவாசன், ஹரன் ஆகியோர் திரு ஆண்டனி அவர்களை அவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசியுள்ளனர். அப்போது ஆண்டனி, “எங்கள் நிகழ்ச்சியில் விவாதிக்கப் படும் தலைப்புகள்/கருக்கள் ஆகியவற்றை முடிவு செய்வது தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ”அறிஞர்” குழு தான். நாங்கள் எங்களுக்குத் தோன்றும் விஷயங்களைப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
இது நாம் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தொலைக்காட்சி நிறுவனம், தான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் விவாதிக்கப் படவேண்டிய கருப்பொருளை, தான் ’ஏற்பாடு’ செய்துள்ள ஒரு ”அறிஞர்” குழுவின் மூலம் முடிவு செய்கிறது. அந்த “அறிஞர்” குழு ஹிந்துக்களின் ஆன்மிக, கலாசார, விஷயங்களையும், பாரம்பரிய வழக்கங்களையும் மட்டுமே பெரும்பாலும் விவாதப் பொருளாகத் தேர்வு செய்கிறது. பின்னர் விவாத மேடையில் பலவிதத் திரித்தல்களுக்கும், நகையாடல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப் பட்டு அக்கருப்பொருள் ஒரு வேண்டாத சடங்காக, தேவையற்ற வழக்கமாக பார்வையாளர்களின் மனத்தில் குழப்பத்தை விளைவித்து அவர்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குமாறு முன்வைக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிறுவனம், தயாரிப்பு நிறுவனம், மற்றும் நிகழ்ச்சி நடத்துபவர் ஆகியோரின் யோக்கியதையைப் பார்த்தோம். அதே போல் கருப்பொருளையும், தலைப்புகளையும் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள “அறிஞர்கள்” எப்பேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். ஒரு நிறுவனத்தில் பின்பற்றப்படும் இதே வழிமுறையைத் தான் இதே போல நிகழ்ச்சிகள் நடத்தும் மற்ற நிறுவனங்களும் பின்பற்றும் என்பதும் நாம் ஊகிக்கக் கூடியதே. ஏனென்றால், கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் ”ஹிந்து எதிர்ப்பு” என்கிற ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளன அல்லவா?!
விஜய் டிவியைப் பொருத்த வரையில் அந்த “அறிஞர்” குழுவில் உள்ள அங்கத்தினர்கள் யார் யார் என்று தெரிவிக்க மறுத்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார் ஆண்டனி. அதே சமயத்தில் அவர் அலுவலகத்தில் தயாராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தலைப்புகளின் பட்டியல் கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று கௌதம் முதலிய நால்வர் குழு தெரிவித்துள்ளது. அவற்றில் சில:
- பிறந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி ஆகியோர்களின் பெயர்களை வைப்பது அவசியமா?
- அழகு மிகுந்தவர்கள் தென்னிந்தியப் பெண்களா, வட இந்தியப் பெண்களா?
- மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் — கணவர்கள் vs மனைவிகள்.
மேலும், கடந்த 18-10-09 அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, “அண்ணிகளுக்குப் பிரச்சினை வருவது நாத்தனாராலா அல்லது கொழுந்தனாராலா?” என்பதாகும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் மூலம் திருமணம்/தாம்பத்தியம் என்கிற உறவையும், குடும்பம், கூட்டுக் குடும்பம் ஆகியவற்றின் மதிப்பையும், நிலைகுலையச் செய்வதே இவர்களின் நோக்கம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கும். அதாவது நம் பாரத தேசத்திற்கே உரியதான ஆன்மிக, கலாசாரப் பாரம்பரியத்தை அழித்து தங்களின் கலாசாரத்தை நிலைநிறுத்துவதே இந்த அந்நிய சக்திகளின் “மிகப் பெரிய சதி” என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தச் சதி நிறைவேறுவதற்கு, போலி மதச்சார்பின்மை பேசும் அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும், மார்க்ஸீய கம்யூனிச வாதிகளும், நாத்திகம் பேசும் திராவிட இனவெறியாளர்களும் துணை போகின்றனர் என்பதில் ஐயமில்லை. இந்த மாபெரும் சதியைப் புரிந்து கொள்ளாமல் இந்துக்களும் அசட்டுத் தனமாக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டும், அவற்றைக் கண்டுகளித்துக் கொண்டும், ஏமாந்துபோவது மிகவும் வேதனையும் துரதிர்ஷ்டவசமும் ஆனதாகும்.
கௌதம் முதலிய நால்வர் குழுவிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பேசிய திரு ஆண்டனி, வியாபார உத்திகள், டி.ஆர்.பி கணக்குகள், போன்ற காரணங்களைச் சொல்லி சமாளிக்க முயன்றிருக்கிறார். ஆனால் பொது மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்கிற தங்கள் கோரிக்கையில் நால்வரும் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் ஹிந்துக்களைப் புண்படுத்தும் விதமாக எதிர்காலத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், சமூகப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். இவர்களின் மனநிலையையும், புண்பட்ட உணர்வையும் கடைசியில் புரிந்துகொண்ட ஆண்டனி இரண்டு வாரம் கழித்து மூன்றாவது வார நிகழ்சியில் பொது மன்னிப்பு கேட்பதாக வாக்களித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பு
இந்த மாதிரியான நிலைப்பாடு ஊடகங்களில் தொடர்வது நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகும். முளையிலேயே கிள்ளப்பட்டிருக்க வேண்டிய இத்தீங்கு, தற்போது பெருமளவிற்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு மேலும் காவல்துறையும் அரசாங்கமும் வாளாவிருப்பது சரியன்று. மதச்சார்பற்ற தேசத்தில் ஒரு மதத்தவர்களை மட்டும் தாழ்த்தி, பழி சொல்லி, விமரிசனம் செய்து ஊடகங்கள் நடந்துகொள்வது அனுமதிக்கப் படக்கூடாது. ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்ளும் பட்சத்தில் காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, நீதிமன்றம் தண்டனை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாங்கமும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனையில் கூட, விஜய் டிவியும், மெர்குரி கிரியேஷன்ஸும், பொது மன்னிப்பு கேட்காத பட்சத்தில், காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரவேண்டும். அம்மாதிரி எடுக்கப்படும் நடவடிக்கை மற்ற ஊடகங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அவைகள் தங்கள் சமூகப் பொறுப்புகளை உணருமாறு அமையவேண்டும்.
முடிவுரை
ஹிந்துக்களும், தங்கள் முகங்கள் தொலைக்காட்சியில் தெரிவதைவிட, தங்கள் கலாசாரமும், பாரம்பரியமும் காப்பாற்றப் படுவதே முக்கியம் என்று நினைத்துச் செயல்படவேண்டும். தங்களுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களையும், ஊடகங்களையும் ஆதரவு அளிக்காமல் ஒதுக்க வேண்டும். அப்போது தான் ஊடகங்கள் திருந்தும்.
மெர்குரி கிரியேஷன்ஸ் (திரு ஆண்டனி) அலுவலகத்தை
0-9840712192 என்கிற எண்ணிலும்,
விஜய் டிவி (திரு ஸ்ரீராம்) அலுவலகத்தை
044-28224696 மற்றும் 044-28214201 ஆகிய எண்களிலும்
தொடர்பு கொண்டு, வாசகர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் விஜய் டிவி நிறுவனத்திற்கு,
“15.ஜகன்னாதன் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600034”
என்கிற முகவரிக்குக் கடிதங்கள் எழுதியும்,
http://vijay.indya.com/ என்கிற தளத்திற்குச் சென்று
http://app.indya.com/feedback/starfeedback.asp?channel=star என்கிற இடத்தில் மின் அஞ்சல்கள் அனுப்பியும் வாசகர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
csmail@startv.com என்ற முகவரிக்கும், ceo@starnews.co.in என்ற முகவரிக்கும் கூட மின் அஞ்சல்கள் அனுப்பலாம்.
மேலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க “தகவல் மற்றும் ஒளிபரப்பு” அமைச்சகத்திற்கு osd.inb@nic.in மற்றும் mib.inb@sb.nic.in ஆகிய முகவரிகளுக்கும் அஞ்சல்கள் அனுப்பலாம்.
நிகழ்சியின் மூலமாக பொது மன்னிப்பு கேட்பதை ஆண்டனி மட்டும் முடிவு செய்ய முடியாது. விஜய் டிவி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீராம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவரோ வெளிநாட்டில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு அவர்கள் சம்மதித்தால் தான் மன்னிப்புக் கேட்போம் என்று கூறியுள்ளார். அந்நிறுவனமோ உலகம் முழுவதும் பரவியுள்ள சக்தி வாய்ந்த மேற்கத்திய ஊடக நிறுவனம்.
இந்நிலையில் இந்துக்கள் வேறு விதமாகவும் தங்கள் எதிர்ப்பைக் காட்டலாம். முதலாவதாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும், அவற்றில் கலந்து கொள்வதையும் தவிர்க்கவேண்டும். இரண்டாவதாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். மூன்றாவதாக அந்நிகழ்ச்சிகளை விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கும் வியாபார நிறுவனங்களைக் கண்டித்து அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அந்நிறுவனங்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்தும். தொலைக்காட்சி நிறுவனங்களும் அம்மாதிரியான நிகழ்ச்சித் தயாரிப்புகளை நிறுத்தும்.
ஆகவே, விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சித் தயாரிப்புக்கு ஆதரவு தரும் ”லையன் டேட்ஸ்” நிறுவனத்தைக் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு வாசகர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடிதம், தொலைபேசி, மற்றும் மின் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கலாம். தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் பட்சத்தில் லையன் டேட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்றும் அவர்களிடம் வலியுறுத்தலாம்.
Mr.Ponnudurai,
Managing Director
M/S Lion Dates Impex Pvt Ltd.,
4A/3. Kaveri Road, Trichy – 620002.
Tel: 0431-2730047 / 2730191.
E-Mail: md@liondates.com
மக்கள் சக்தி என்பது மகத்தானது. தமிழ் ஹிந்துக்கள் அதை உணர்ந்து செயல்பட்டால் அந்நிய சக்திகளின் பிடியில் உள்ள ஊடகங்கள் மரியாதையாக மக்கள் வழிக்கு வரும்.
படங்கள் நன்றி: www.techsatish.net/
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: இந்து, இந்து மதம், இந்துத்துவம், ஊடகங்கள், கலாசாரம், கிறிஸ்தவ மிஷனரிகள், தமிழர், தாலி, நீயா நானா, பண்பாடு, விஜய் டிவி
“மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையாலல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள் வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது…..
6 November 2009 at 2:08 pm
அருமையான, காலத்திற்குத் தேவையான கட்டுரை. எழுதிய தமிழ்ச் செல்வனுக்கு வாழ்த்துக்களும், இந்துச் சமூகத்திற்கு எழுமின், விழிமின் என வேண்டுகோள்களும்..
வெற்றிச்செல்வன்