சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
8 Dec 2009 |
அச்சிட
சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள் சந்த மறையும் தமிழும் தேர்ந்த தன்னேறில்லாத் தவமுதல்வர். அவர் இயற்றிய வேதத்தைக் குறித்த வியாசம் என்னும் நூலில், “சூத்திரரும் பெண்களுஞ் சமமாவார்கள். அவர்கள் வேதம் ஓதவும் கேட்கவும் அருகர் அல்லர் எனச் சின்னூல்கள் கூறுமாறென்கொல்லோ” எனும் வினாவுக்கு அளித்த மறுமொழி இங்கு தரப்படுகின்றது. சுவாமிகளின் உரைநடை இக்காலத்தவருக்குக் கடுமையாக இருக்கும். ஆதலால் மொழி நடை எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
சூத்திரர்களில் பெரும்பாலார் மாமிச உணவு உண்ணுதலினாலும் இழிதொழில் செய்தலினாலும் பெண்களுக்கு மாதவிலக்கு முதலிய சூதகங்களாலும் அசுத்தம் உண்டு என்ற காரணத்தால் அந்த நூல்கள் அவ்வாறு கூறும். பார்ப்பார் குலத்திற் பிறந்து கள்ளும் ஊனும் உண்டு அந்தண ஒழுக்கம் கெட்டவனும் இழிதொழில்கள் செய்பவனும் வேதம் ஓதவோ கேட்கவோ தகுதியில்லாதவனாவான். அவ்வாறே ஆசாரமில்லாத மற்றை எவரும் வேதம் ஓதத் தகுதி இல்லாதவர் என்பது நீதியே ஆகும்.
வேதத்தின் கரும காண்டம் விசேடக் கிரியைகள் அடங்கியது. அது எல்லாருக்கும் பொதுவாகாது.
ஞானகாண்டம் வருணாச்சிரமங்கள் கடந்த ஞானத்தை இனிது கூறுதலினால், அது எல்லாருக்கும் பொதுவாகும்.
இதனையும், ”சமஸ்கிருதத்தில் ஓதவும் கேட்கவும் முதன் மூன்று வருணத்துப் பெண்களுக்கும் சூத்திரகுலத்து இருபாலாருக்கும் அதிகாரமில்லை; தமிழ் முதலிய வேறு மொழிகளில் மட்டுமே அதிகாரம் உண்டு” என்பதே சில பார்ப்பார் தீர்மானம்.
இது நியாயமாகமாட்டாது. ஏனெனில், ஆசாரமுடைய நான்கு வருணத்தாரும் ஓதவும் கேட்கவுமாகவுள்ள சிவாகமங்கள் அச்சமஸ்கிருத மொழியிலேயே இருக்கின்றன.
இதுவேயும் அன்றி, இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஐதரேயப் பிராமணம் இரண்டாவது பஞ்சகத்தில், அடிமைத் தொழில் செய்பவர் ஒருவரது மகனாகிய கவச ஐலுசன் (Kobhadha Alusha) என்னும் பெயர் உடைய சூத்திரன் இருக்குவேத சங்கிதையை ஆக்கிய நூலாசிரியன் எனப்படுவதினாலும், அங்கதேசத்து அரசனுடைய அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது.
வடநாட்டில் நால்வருணத்தாரும் வேதம் ஓதுதலை இக்காலத்தும் காணலாம்.
யஜுர்வேத சதபதப் பிராமணத்தில், ‘யாககர்த்தா விப்பிரனாயின் (வேதம் கற்ற பிராமணன்) ”ஏஹி” =வருக; சத்திரியனாயின் வைசியனாயின் ”ஆதி” (இவ்விடம் வருக) யாக கர்த்தா சூத்திரனாயின் ”அதாவாதூ” (இவ்விடம் ஓடி வருக) என்று அழைக்கின்றது. இதில் விதித்துள்ளபடி சூத்திரன் வேத கர்ம யாக கர்த்தாவுமாக இருக்கலாம் என அறியலாம். அதனால்தான் மேலே கூறிய கவச ஐலுசன் யாக காரியத்தில் சேர்க்கப்பட்டான் என மேலே குறித்த ஐதரேயப் பிராமணம் இரண்டாவது பஞ்சமுகம் கூறிற்று.
முதல் மூவருணத்தார்க்கும் உள்ளவாறு சூத்திரருக்கு உபநயனம் எனப்படும் இருபிறப்பு (துவிஜத்துவம்) இல்லை எனஸ்மிருதிகள் மட்டுமே கூறும். அப்படி வேதம் கூறுவதில்லை.
மநு ஸ்மிருதி 3ஆவது அத்தியாயம் 197வது சுலோகத்தின்படி பார்ப்பார் பிருகு வமிசத்தினரும், சத்திரியர் ஆங்கிரசு வமிசத்தினரும் வைசியர் புலஸ்தியர் வமிசத்தினரும் ஆனதுபோல் சூத்திரர் வசிஷ்டர் வமிசத்தினராதலினால், அந்தச் சூத்திரரும் இருடி கோத்திரத்தாரேயாவர். இங்கு அனைவரும் தோன்ற முதல் மூல பரனாக எழுந்தருளிய சிவபரஞ்சோதியைக் கூறுவது சிறப்புடைமையின் யாவரும் சிவ கோத்திரத்தவர் ஆவர்.
விவேகஞானம் இல்லாதானைச் சூத்திரன் என்பதே வேதத்தின் கருத்தாகும். ஞானகுருவுக்குப் பணிவிடை புரிந்து ஞானம் பெறவேண்டும் எனும் விவேகம் இன்றி அன்னதானத்தையே மிகவும் செய்து வந்த பெளத்திராயண ஜானசுருதி என்னும் பெயருடைய ஒரு அரசன் ரைக்வர் என்னும் பெயருடைய ஒரு பிரமஞானியைக் கண்டு அவர் முன்பு அறுநூறு பசுக்களையும் அரிய குதிரைகள் பூட்டிய தேரினையும் காணிக்கையாக நிறுத்தி வந்தித்து பிரம்ம ஞானோபதேசத்தை விரும்பினான். அப்பொழுது அந்த ஞானியார், சத்திரியனாகிய அந்த அரசனை “ஏடா சூத்திரா!” என விளித்தார். (சாந்தோக்கிய உபநிஷத். 4ஆவது பிரபாடகம் 3ஆவது அனுவாகம்).
“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக” என்று பொருளாகும்படி,
“அபிவா யச் சண்டாள: சிவ இதிவாசம் வதேத் தேந ஸஹ ஸம்வஸேத்தேந ஸஹபுஞ்சீத” என முண்டகோபநிடதம் மொழிகின்றது. இது நீலகண்ட பாஷியத்து 4ஆம் அத்தியாயத்து 1ஆம் பாதத்து 15ஆம் சூத்திர பாஷியத்து உள்ளது. இதனைத் திராவிட மாபாடிய ஆசிரியரான மாதவச் சிவஞான முனிவர்கள் மொழிபெயர்த்துத் தம் குருவணக்கமாக மொழிகிறார்கள் -
“சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனோடு கலந்து பேசுக அவனோடு
அருகிருந்து உண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோடு உடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவேறு
எனக்கிலை கலைசையாண் டகையே”
வேதம் ஓதவும் கேட்கவும் அதிகாரம் இல்லாதவர் வேதத்தின் மூலமான பிரணவத்தையும் உச்சரிக்கக் கூடாது என்பதுவும் சில வேதியர் தீர்மானம். இதுவும் மேலே கூறியபடி அறியாமை உடையார் பற்றியே அன்றி ஞானம் உடையார் பக்கம் ஆகாது. இந்த முடிவை ஞானகாண்டத்தை அனுட்டித்தற்கு உரிய பிரணவத்தால் விருத்தி அடையத் தக்க யோக ஞான ஆசாரமுள்ள பல வருணத்தாரும் அடைந்து அந்தமில் இன்பம் பெற்றனர் எனக் கூறும் பல நூல்களும் உறுதிப்படுத்தும். “உயர்ந்தோர்க் குரிய ஓத்தினான” என்று தொல்காப்பியனார் கூறியதும் அக்கருத்து பற்றியதே.
எவ் வருணத்துப் பிறந்திருப்பினும் பூர்வ புண்ணிய பலம் உடையவர்களுக்கே பெரியோர்களால் பிரணவம் திருவைந்தெழுத்து முதலியன உபதேசிக்கப்படும், நூலும் கிடைக்கும்.
ஒழுக்கம் நிரம்ப ஏற்படுத்திய ஜாதி வேறுபாடு அவ்வொழுக்கத்திலிருந்து நித்திரை செய்வோன் கைப்பொருள் போலத் தானே நீங்கப் பெறுதல் தகுதி உடையவர்கள் இடத்தே ஆகும்.
பிராமணத் தன்மைக்குரியது ஜீவன் அன்று; உடம்பன்று; ஜாதி அன்று; கல்வி அன்று; கருமம் அன்று; தருமம் அன்று என எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கிப் பிரம ஞான அனுபவம் உடையவனே பிராமணன் என்று வஜ்ரசூசி உபநிடதம் முடிவு கூறுகின்றது. இது உபநிடதங்கள் பலவற்றிற்கும் சம்மதம். இதுவே அநுபவத்திற்கும் ஒத்தது.
இவ்வாறு உண்மையை அறியாமல் வேதம் ஒரு சாதியாருக்கே உரியது எனக் கூறுவார் உரை எல்லாம் நடுவு நிலைமை பிறழ்ந்து கூறும் அநீதி என்க.


தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
8 December 2009 at 5:30 pm
It is a nice article. All religous leaders should try to bring this in practice.
If you look at our Gods, most of them (in fact, none) are not Brahmins. Name, Shiva, Vishnu, Brahma, Rama, Krishna, Subrahmanya etc., Everybody has got Poonal as Poonal is common & is supposed to be worn by everybody (Many communities were not wearing as it is inconvinient for them while performing their work).
Hindus should unite by leaving aside the caste bias.