மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » சினிமா

ஆயிரத்தில் ஒருவன் - ஜடங்களுக்கான சினிமா

aayirathil-oruvan-2துள்ளுவதோ இளமை, 7 g ரெயின்போ காலனி என செல்வராகவனது படங்கள் அனைத்தும் பாலியல் சார்ந்தவையாகவே இருந்துள்ளன.இருந்தும், சரித்திரப் படம், யுகம் கடந்த படம் என்றெல்லாம் பலர் ‘ஏற்றிவிட்டதை’  நம்பி  ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு போய்த் தொலைத்துவிட்டேன்.

படம் சோழர்காலத்தில் துவங்குகிறது. சோழ வம்சத்தின் கடைசி மன்னன் தமிழகத்தைவிட்டு கடல்வழியாக தப்பி ஓடுகிறானாம். அவன் அடைக்கலமானது வியட்நாம் அருகிலுள்ள சிறு தீவு. அங்கு சென்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் காணாமல் போவதுடன் படம் துவங்குகிறது. இந்த இடத்தில், ‘இத்திரைப்படம் சோழர், பாண்டியர்களை குறிப்பிடவில்லை’ என்று சமத்காரமாக ஸ்லைடு போட்டு விடுகிறார்கள்.

காணாமல் போன ஆராய்ச்சியாலரைத் தேடி, அரசு, அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஒரு குழு வியட்நாம் செல்கிறது. அதன் தலைவி, கட்டிளம் குமாரியான ரீமா சென். காணாமல் போனவரின் புதல்வி (ஆண்ட்ரியா)வும் கையில் ஒரு ஓலைச் சுவடியுடன் செல்கிறாள். எடுபிடி உதவிக்கு, கதாநாயகன் கார்த்தி செல்கிறார். தமிழ் கதாநாயக இயல்புப் படி, இரு நாயகிகளையும் கலைக்கிறார், கார்த்தி. (பாக்கெட்டிலேயே  காண்டம் வைத்திருப்பதாக ஒரு வசனம் வேறு).

ஏழு தடைகளைத் தாண்டித் தான் சோழன் வசிக்கும் ரகசிய இடத்தை அடைய முடியுமாம். எல்லாம் அந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது! கடல் பயங்கரம், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள், விஷப் பாம்புகள், பயங்கர வீரர்கள், புதைமணல், பசி தாகம் அனைத்தையும் தாண்டினால் தான் அந்த இடத்துக்கு போக முடியுமாம்! போகும் வழியில், உடன் வந்தவர்களை கொசுக்கள் போல சாகக் கொடுத்துவிட்டு மூவர் மட்டும் சோழ ராஜாவின் மயான பூமிக்கு சென்று விடுகிறார்கள். அதற்குள் இரண்டு ஆபாச டூயட் வேறு. (காய்ச்சலுக்கு இதில் புது வைத்தியம் சொல்கிறார் டாக்டர் செல்வராகவன்).
இவர்கள் மூவரும் கஷ்டப்பட்டு செல்வதைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் நேரத்தில்,   படத்தின் இறுதியில், ஹெலிகாப்டரில்  பாராசூட்களில் இந்திய ராணுவ வீரர்கள் அதே இடத்தில் சாகசமாக இறங்குகிறார்கள்! அவர்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் வெடிகுண்டுகளுடன், சோழ வம்சாவளி மக்களை வேட்டையாடுகிறார்கள். அப்போது தான் தெரிகிறது, சோழர்களின் பரமவைரியான பாண்டியரின் குலச்செல்வி தான் ரீமா என்பது. அவர் அங்கு போகவே அமைச்சர் பாண்டியன்  உள்ளிட்ட பாண்டிய வம்சாவளியினரின் திட்டம் தானாம்! அதுவும் பாண்டியரின் குலதெய்வ சிலையை மீட்கத் தானாம். (தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்க்காக இந்த கற்பனைக்  காவியத்தைப் படைததிருப்பதாகவும், இதில் லாஜிக் பார்க்கலாமா என்றும் செல்வராகவன் கேட்டிருக்கிறாருங்கோ! )

கிறுக்கல்கள் பார்த்திபனுக்கு, இதில் சோழர்களின் கடைசி மன்னன் வேடம்; ‘நிறைவாகவே’ செய்திருக்கிறார். மக்களை அடிமைகளாக நடத்துகிறார்; அந்தப்புரத்தில் ஆட்டம் போடுகிறார் (ரீமாவும் அவரை மயக்கி அங்கு சல்லாபிக்கிறார்). . அவ்வப்போது தாயகம் திரும்பும் கனவுடன் வசனம் பேசுகிறார். தாயக கனவுப் பாடலும் உண்டு. சோழ மக்கள் பஞ்சைப் பராரிகளாக, முகம் முழுவதும் கரியைப் பூசிக்கொண்டு,  இறைச்சிக்காக அடித்துக்கொண்டு செத்து சுண்ணாம்பு ஆகிறார்கள்.  அவரது லிங்க தரிசன வசனம் போதும், செல்வராகவனை இனம் காட்ட.  ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் பார்த்திருந்தால், தூக்கு மாட்டி செத்திருப்பார்கள்.

இதில் கதாநாயகன் பல்லிளித்தபடி இரு நாயகிகளிடமும் வழிகிறான்; அடிக்கடி சென்சார் செய்யப்பட ‘மௌன’ சொற்களை உதிர்க்கிறான். கடைசியில் சோழ இளவரசனோடு மாயமாகிறான். படம் அடுத்த பாகம் வந்தாலும் வரலாம். இந்த அரைவேக்காடுகள் பழைய தமிழர் வரலாற்றை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப்படத்தை   பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

aayirathil-oruvan-1சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு  வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது? அதுவும், யாருக்கும் தெரியாத ரகசிய  ஆபரேசன் என்று வேறு கதைக்கிறார் ரீமா. பக்கத்தில், பத்தடி தூரத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியத்தை தட்டிக் கேட்காத இந்திய அரசு, ஒரு ஆராயச்சியாளருக்காக படையை அனுப்புமா? அவர்கள் கண்ட மேனிக்கு சுட்டுத் தள்ளுவார்களாம்- இந்த இனைய உலகத்தில். லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, எதை வேண்டுமானாலும் அளக்கலாமா? இதை எப்படி சென்சார் போர்டு அனுமதித்தது?

அண்டை நாடான சீனாவிலும் இதே போன்ற சரித்திர கற்பனை தழுவிய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் எங்கேனும் இப்படி பிதற்றல்கள் வந்ததுண்டா? பாரம்பரியத்தின் சிறப்புகளை போற்றும் வகையில் தான் சீன திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நான் பார்த்த அளவில், சீன சினிமாக்களில் அவர்களது மன்னர்களின் சரிதங்கள் கேவலமாக சித்தரிக்கப்பட்டதில்லை. பாரம்பரியத்திற்கு விரோதமான கம்யூனிஸ்ட் அரசு இருந்தும், அங்கு புத்த கலாசாரம் குறித்த படங்கள் வெளிவருகின்றன. ஆனால், தமிழ்ப்பற்று குறித்து வாய் கிழியப் பேசும் அரசியல் வியாபாரிகள் மிகுந்த தமிழகத்தில், நமது மூதாதையர் என்ற சிந்தனை கூட இன்றி ‘ஆயிரத்தில் ஒருவன்’ எடுக்கப் பட்டிருக்கிறது. இது நமது தரம் மிக வக்கிரமாக தாழ்ந்து விட்டதன் அறிகுறி. ஹாலிவுட் (அபோகலிப்டா) போன்ற படங்களைப் பார்த்து நகல் எடுக்கும்போது, நம்மூருக்கு பொருந்துவது போலவேனும் செய்ய வேண்டாமா? தமிழ் பண்பாடு பற்றி மேடையில் முழங்கும் ‘மானமிகு’க்கள் யாரும் இந்த படத்தின் பைத்தியகாரத் தனமான சித்தரிப்புகளைக் கண்டுகொள்ளாதது ஏன்? சோழனும் பாண்டியனும் எந்த ஜாதி என்று தெரியாமல் போனது தான், கண்டுகொள்ளாததன்  ரகசியமா?

ஆயிரக் கணக்கான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கலைஞர்களின் ஆற்றல் விழலுக்கு இறைத்த நீராகி இருக்கிறது. அதிலும் வேதனை, வருங்காலத் தலைமுறையை  ஏற்கனவே நமது சரித்திரப் புத்தகங்கள் தவறாக வழிநடத்தி வருகையில், இத்தகைய படங்கள் மேலும் தடம் மாற்றுகின்றன. மக்கள் ஜடங்கள் ஆகி வருகிறார்கள் என்பதற்கு, செல்வ  ராகவனின் ‘ஜடங்களில் ஒருவன்’ அற்புதமான சாட்சி.

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , ,

20 மறுமொழிகள் »

  1. Indiatv பாருங்கள்.

    ஒரு புரோகிதர், கிறிஸ்துவ பாஸ்டர் ஐ தனது மாந்த்ரிக சக்தியினால் கொல்ல முடியும் என்று சவால் விடுகிறார். கடைசியில், பாஸ்டர் மாந்தரிகம் எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு ஏளனம் செய்கிறார்.

    இது போன்ற ப்ரோக்ராம்களை தடை செய்ய வேண்டும்.

    இதே டிவி காரர்கள், நோய்களை குனமாகுவதாக கூறும் பாதிரியார்களை சவால் விட மாட்டார்கள். அரைகுறை பண்டிதர்களுக்கு பணம் கொடுத்து இந்துக்களை கேவல படுத்துகிறார்கள்.

  2. தமிழ்இந்துவிற்கும் சினிமா விமர்சனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

  3. Can u please write a thrai vemarsam for avathar.

    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.

  4. உங்களுக்கு எதுக்கு பாஸ் தேவையில்லாம விமர்சனம் எல்லாம்!

    விமர்சனம் என்றால் நடுநிலையா இருக்கணும்.. இது உங்களோட வெறுப்பை மட்டுமே காட்டுது

    //மக்கள் ஜடங்கள் ஆகி வருகிறார்கள் என்பதற்கு, செல்வ ராகவனின் ‘ஜடங்களில் ஒருவன்’ அற்புதமான சாட்சி//

    அப்படின்னு நீங்க நினைத்துக்கொண்டால் அது உங்கள் முட்டாள் தனம்! ஊர்ல நான் மட்டுமே புத்திசாலின்னு நினைப்பது … வெளிய வாங்க பாஸ் இன்னும் எவ்வளவோ இருக்கு!

    ஹிந்துக்கள் பெருமையை பற்றி கூற ஆயிரம் விஷயம் இருக்கும் போது இதைப்போல மட்டமா விமர்சனம் எழுதி உங்கள் தகுதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்.

    விமர்சனம் என்பது அனைத்து தரப்பு பார்வையையும் கூறுவது நம் ஒருவர் கருத்தை திணிப்பது அல்ல.

    அன்புடன்
    கிரி

  5. நீங்கள் எல்லாம் எழுதுவதைப் பார்த்தால், சுப்ரீம் ஸ்டார், உலக நாயகன் படங்களின் பிதற்றல்களை விட உச்ச கட்ட பிதற்ற்லாக இருக்கும் போல இருக்கிறது. இந்த பிதற்றலகளை மெனக்கெட்டு பார்த்து அவற்றைப் ப்ற்றி விலாவாரியாக எழுதுவதில் என்ன பயன்? எப்போதாவது, குறைந்தது நம் பொது அறிவையாவது ஹிம்சைப் படுத்தாத படம் வந்தால் அது பற்றி அந்த புரட்சிகர முதல் அத்தியாயத் தொடக்கத்தைப் பற்றி எழுதினால் போதும். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் காத்திருந்தாயிற்று. இன்னும் எவ்வளவு காலமோ தெரியாது.

    மற்றபடி நமீதாவையும், அண்ட்ரியாவையும் பார்க்கத்தான் போகிறோம், மற்றதெல்லாம் ச்கித்துக் கொள்ள வேண்டிய உபரிகள் என்றால், இப்படியாவது தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்களாக.

  6. //
    ஆயிரக் கணக்கான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கலைஞர்களின் ஆற்றல் விழலுக்கு இறைத்த நீராகி இருக்கிறது.
    //
    நான் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
    சோழர் காலத்து தமிழை பேசவைத்த டைரக்டர் ஏன் சோழர்களை கேவலமானவர்களாகக் காட்டவேண்டும் ?

    வடக்கிலே கங்கை வரை தமிழர் பெருமையை கொண்டு சென்ற சோழர்கள், கப்பல் வழி வாணிபம் செய்தவர்கள் சோழர்கள் என்று பீத்தும் திராவிட சிங்கத்தின் ஆட்சியில் வெளிவரத்தக்க படமா இது ? ஒரு வேளை சோழர்கள் திராவிடர்கள் இல்லையோ ?

  7. தமிழ்இந்துவிற்கும் சினிமா விமர்சனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

  8. “ஆயிரத்தில் ஒருவனை ” ரசிக்க தெரியாதவர்கள் இனிமேல் தயவுசெய்து விமர்சனம் செய்யாதீர்கள்.

    (edited and published)

  9. வீணான படங்களுக்கு வீணாக விமர்சனம் வேண்டாம்

  10. //கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது?//

    முதலில் மக்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? ராணுவம் என்றாலே கொலைகாரர்கள் தான் என்று காட்டுவதாக இருக்கிறது. சிலுவைக்காரர்கள் உலகின் புதிய மனிதர்களை எங்கெல்லாம் கண்டார்களோ அவர்களையெல்லாம் கொன்றொழித்தே தனது குடியேற்றத்தைத் துவங்கினார்கள் என்பது வரலாறு. அதைத்தான் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. புத்தகப் புழுக்கள் கதாசிரியர்களானால் புதிதாக என்ன சிந்திக்க முடியும்?

  11. விமர்சனம் என்பது ஒரு செயற்பாட்டுக்கு ஊக்கியாக இருக்கவேண்டுமே தவிர உறுத்தலாக இருக்கக்கூடாது. இது ஒரு த‌ர‌ம் தாழ்ந்த‌ விம‌ர்ச‌ன‌மாக‌வே தோன்றுகிற‌து.

    த‌மிழ் தொலைக்காட்சி நாட‌க‌ங்க‌ளும், நிக‌ழ்ச்சிக‌ளும் செய்யாத‌ க‌லாச்சார‌ சீர‌ழிவையா இந்த‌ ப‌ட‌ம் செய்துவிட்ட‌து. நிறைக‌ளை எல்லாம் விட்டுவிட்டு குறைக‌ளை ம‌ட்டுமே குத்துவ‌து உம‌து தாழ்ந்த‌ நோக்க‌த்தையே காட்டுகிற‌து. தெரியாத‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டாம‌ல் இருப்ப‌தே மேல்.

    காத‌லையும், தாதாயிச‌த்தையும் ம‌ட்டுமே மைய‌ப்ப‌டுத்தி காட்டும் ப‌ட‌ங்க‌ளையும் தாண்டி வித்தியாச‌மான‌ முயற்சி செய்த‌த‌ற்க்காக‌ பார‌ட்ட‌லாம்.

  12. திரை விமர்சனங்கள் தமிழ் ஹிந்துவில் ஏன் வருகிறது?
    ஹிந்துக்களை பற்றி எழுதுங்கள்…
    திரை விமர்சனம் செய்ய ஆயிரம் இனைய தளம் உள்ளது. அதில் சென்று எழுதவும்.

    ஆசிரியர் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து திரை விமர்சனத்தை இந்த தளத்தை விட்டு அகற்றுங்கள்..

  13. // தமிழ்இந்துவிற்கும் சினிமா விமர்சனங்களுக்கும் என்ன சம்பந்தம்? //

    சினிமா என்பது பெருவாரியான மக்களைச் சென்று சேரும், பாதிக்கும் ஒரு ஊடகம். அதுவும் தமிழ்ச் சூழலில் அதன் தாக்கம் மிக அதிகம். எனவே சினிமாவைப் பற்றிய இந்துப் பார்வை மிக அவசியம். இந்து அரசியல், சமூக இயக்கங்கள் இத்தகைய வெகுஜன ஊடகங்களை உதாசீனம் செய்வது பெரும் தவறு. அப்படிச் செய்ததன் பலனையும் நாம் இன்று அனுபவித்து வருகிறோம்.

    எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதினால் தாங்காது. ஆனால் தமிழ்ஹிந்துவுக்கு சினிமா விமர்சனம் கண்டிப்பாகத் தேவை என்பதே என் எண்ணம். விஸ்வாமித்ரா எழுதியுள்ள ம்யூனிக், பைத்ருகம், நான் கடவுள் விமர்சனங்கள் எல்லாம் இந்தத் தளத்தில் வந்துள்ளன, அவற்றைப் படித்துப் பாருங்கள். இத்தகைய பார்வை எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

    இந்தப் படம் த,ஹியில் விமர்சிக்கத் தகுதியானதா என்று எனக்கு ஐயம் உள்ளது…That apart, சீனத் திரைப்படங்களை ஒப்பிட்டு எழுதியுள்ளது மிகவும் சிந்தனைக்குரியது. மிகச் சிறந்த வரலாற்று, கலாசாரப் பாரம்பரிய்ம் கொண்ட தமிழர்களால் ஏன் அதை சிறப்பாக, அழகாக காட்சிப் படுத்த முடியவில்லை? தெரியவில்லை? அதற்கு எண்ணமில்லை? பக்கத்தில் உள்ள கேரளத்தில் சமீபத்தில் கூட “பழசி ராஜா” வந்தது. அது போன்று பண்டைத் தமிழர் வரலாற்றை ஆதாரபூர்வமாக, அதே சமயம் அதன்மீது மதிப்பு உண்டாக்கும் வகையில் நமது திரைத் துறையினர் எப்போது எடுப்பார்கள்? இதைச் சுட்டிக் காட்டிய விமர்சகருக்குப் பாராட்டுக்கள்.

    // விமர்சனம் என்பது அனைத்து தரப்பு பார்வையையும் கூறுவது நம் ஒருவர் கருத்தை திணிப்பது அல்ல.//

    தவறு, அப்படி பொதுப் பார்வையைத் தருவது விமர்சனம் அல்ல, செய்தி! விமர்சனம் என்பது விமர்சகரின் தனிப்பட்ட பார்வையே - ஆனால் அந்தப் பார்வை எந்த அளவுக்கு கூரியதாகவும், தர்க்கபூர்வமாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது என்பதைப் பொறுத்து அது நல்ல விமர்சனமா இல்லையா என்று மதிப்பிடலாம்.

  14. விமர்சனம் தேவை தான் ஏன் என்றால் நமது ஜனம் சினிமாவில் வருவது தன நிஜம் என எண்ணும் கூட்டம்.எப்படி அநாதை இல்லம் என்றால் கிறிஸ்துவ ஆலயம் தான் என்று மக்கள் மனதை நம்ப செய்தவர்களும் இந்த சினிமாகாரர்கள் தான்.ஏதாவது ஒரு படத்தில் ஹிந்து நல்ல செயல்கள் செய்வதாக காண்பிக்க மாட்டார்கள்.உன்னை போல் ஒருவனில் கூட முஸ்லிம்கள் பாதிக்க படுவதாக காட்டுகிறார்கள் அனால் அந்த கலவரம் உருவாகிய கோத்ர ரயில் எரிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை.எனவே மக்கள் மத்தியில் உண்மையயை எடுத்து கூற சினிமா விமர்சனம் தேவை தான்.

  15. // விமர்சனம் என்பது அனைத்து தரப்பு பார்வையையும் கூறுவது நம் ஒருவர் கருத்தை திணிப்பது அல்ல.//
    விமர்சனம் ஒருவரின் கருத்து,அதில் உள்ள உண்மை புரியாத பலருக்கு புரிந்து அதை பற்றி ஒரு அறிமுகம் கிடைத்தால் அது அவர்களுக்கு செய்யும் உதவி.. அதில் பலரது நன்மை இருக்குமானால் விமர்சனத்தை பிடிக்காதவர்கள் கூட அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும்…..
    உண்மையிலேயே அது ஒரு குப்பை படம் …என்னால் ஒரு trailer கூட பார்க்க முடியவில்லை ,திரை விமர்சனத்தை 5 நிமிடத்தில் மாற்றி விட்டேன் ..என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை ,,,வேணுமானால் ரீமா சென் டூ பீசில் கையில் துப்பாக்கி யோடு முன்னும் பின்னும் ஆடுவதையும் ,தன்னை தானே ஒரு கட்டை என்று சொல்வதையும்,அன்றியா தானே பனியனை தூக்குவதையும் ரசிக்கலாம் ……அந்த ஆள் செல்வராகவன் சரியான பைத்தியம் , சைகோ …காதல் கொண்டேன் படத்தை பாருங்கள் ..ஒரு பத்து நிமிடம் கூட பார்க்கமுடியவில்லை….எல்லா விதமான பயிதியகாரனத்தையும் நியாய படுத்தும் முட்டாள் …அந்த ஆளை போய் பெரிய டைரெக்டர் என்று ரசிக்காதீர்கள் …பக்கத்தில் கேரளாவில் பாருங்கள் ,மோகன்லால்,மமூட்டி ,ஜெயராம் இவரது படங்களை பாருங்கள் ..சமுகத்தில் ,நடப்பதை யதார்தமாகவும் ,அழுத்தமாகவும் எப்பிடி பதிவு செயிது வைத்து இருக்கார்கள் என்று ..
    //சினிமா என்பது பெருவாரியான மக்களைச் சென்று சேரும், பாதிக்கும் ஒரு ஊடகம். அதுவும் தமிழ்ச் சூழலில் அதன் தாக்கம் மிக அதிகம். எனவே சினிமாவைப் பற்றிய இந்துப் பார்வை மிக அவசியம். இந்து அரசியல், சமூக இயக்கங்கள் இத்தகைய வெகுஜன ஊடகங்களை உதாசீனம் செய்வது பெரும் தவறு.//
    ஐயா ஹிந்து பார்வையை விடுங்கள் ,சாதாரண பார்வையில் கூட இந்த ஆளின் படங்கள் எதுக்கும் லாயக்கற்றவை…ஆண்களை அழுதுகொண்டும் ,பெண்களின் பின்னால் சுட்டுருவதையே படம் முழுவதும் காட்டும் “trend setter”….This damn idiotic fellow has so much fan following among youths,i know many of them very well ,,they are my classmates,,,they are around me….” யாரடி நீ மோகினி ” கதையை பாருங்கள் ஒரு ஆண் அழுதே தன நண்பனின் நிச்சயிக்க பட்ட மணப்பெண்ணை கவருகிறான் ..என்னே ஒரு நெஞ்சு உரம் …விவேகனந்தர் ,பகத் சிங்க் ,நாட்டுக்காக உயிர் விட்ட விக்ரம் பத்ரா ,உன்னி கிருஷ்ணனை ..போன்றோரை முன்னிலை படுத்தி படம் எடுக்க சொல்லுங்கள் அந்த சைக்கோவை ..முடியாது …கலை ,ரசனை என்ற பெயரில் ..வரலாறையும் குழப்பி ..அவனும் குழம்பி …முட்டாள் ரசிகர்களையும் குழப்புவதை பாவம் இந்த அக்கரையுள்ள திரு.சேக்கிழான் அவர்களால் பொறுக்க முடியவில்லை …என்ன செய்வது ..அவர் அப்பிடித்தான் நீங்கள் போய் …செல்வாரகவனின் “கலை தன்மை உடைய “படங்களை ரசியுங்கள் ….அவனுடைய சொந்த வாழ்கையை அவன் படங்கள் பிரதிபலிகின்றன ….

  16. கிரி-க்கள் மற்றும் கண்ண - களுக்கு,

    “ஆயிரத்தில் ஒருவன்”-ல் எதை ரசிக்க வேண்டும் என்கிறீர்கள்? சோழர்களை இழிவு படுத்துவதையா? எதிரிகளையும் மன்னித்து, பெண்களை மதித்தவர்களை, கண்ட பெண்களை துகிலுரிக்க விழைபவர்களாக காண்பித்ததற்க்காகவா?

    படம் டெக்னிகலாக நன்றாக தான் இருக்கிறது. கற்பனை கதை என்றால் புலிகேசியையும், முகலாயர்களையும், பிரிட்டிஷ்காரர்களையும் கதாபாத்திரமாக கொள்ளவேண்டியது தானே? எதற்கு சோழர்கள்? அதுவும் நாகரீகமற்ற நரமாமிசம் சாப்பிடுபவர்களாக?

    வெள்ளைக்காரர்கள் குகையில் மிருகங்களை வேட்டையாடி, விலங்குகள் போல அலைந்தபொழுது, இங்கே நம் மக்கள் நாகரீகம் கற்று நாகரீகமாக வாழ்ந்தவர்கள்.

    சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியது இங்கு தான்.

    ஆனால், இந்த நாகரீகமிக்க சோழர்களை எப்படி காட்டியிருக்கிறார் செல்வா? நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாக. என்னதான் 800 வருடம் மறந்து வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்கள் நாகரீகம் இப்படி தான் இருக்குமா? இதைத்தான் ரசிக்க வேண்டும் என்கிறீர்களா?

    காட்டுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது, எதற்கு இந்த கேவலமான காட்சிகள்? சைக்கோத்தனமாக இல்லை? உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

    என்னுடன் பணிபுரியும் ஒருவர், படம் பார்த்து வெறுத்துவிட்டார். காரணம், பொ.செ.வும், சான்டில்யன் கதைகளும் சோழர்களை பற்றின பிம்பத்தை இவர் உடைப்பது தான். பொ.செ.வில் என்னதான் சோழர்களை ஹீரோவாக காட்டினாலும், பாண்டியர்களை ஒன்றும் கேவலப்படுத்தவில்லை. ஆனால், உங்கள் “அறிவு ஜீவி” செல்வா எடுத்த படம் சைக்கோத்தனமாக படவில்லையா?

    உங்களுக்கு தோன்றாது.

  17. எப்படி விமர்சனம் எழுதக்கூடாதோ அப்படி எழுதப்பட்டுள்ளது. ‘விமர்சகர்’ எளிய விஷயங்களை கோட்டை விட்டு விடுகிறார். எண்ணூறு ஆண்டுகள் ஒரு குகையில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவ்வாறு தான் இருப்பார்கள். மற்றும் சோழர்கள் நர மாமிசம் சாப்பிடுவதாக காட்டப்படவே இல்லை.மற்றும் சோழர்கள் என்றால் என்ன கொம்பா முளைத்திருக்கிறது யாரும் எதுவும் சொல்லக் கூடாதென ?? ஏழு கடக்க கடினமான தடைகளை ஏற்படுத்தும் அளவுக்கு சோழர்களை உயர்வாகவே காட்டியிருக்கிறார்கள்.நடராஜர் நிழலில் புதை மணல் தாண்டுவதும், மீஒளியில் (ultrasonic) பைத்தியமாக அடித்து மீண்டும் நுட்பமாக குணப்படுத்துவதும் ,போர் காட்சிகளும் சோழர்களின் திறமையை நன்றாகவே மேம்படுத்தி காட்டியிருப்பார்கள்…

    மீண்டும் படத்தைப் பாருங்கள்.. எந்த விதமான குறுகிய பார்வையும் இல்லாமல்…… பார்க்க தெரியாவிட்டால் நீங்கள் தான் ஒரு நல்ல படத்தை இழப்பீர்கள்…

  18. தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு,
    வணக்கம்.
    எனது திரை விமர்சனம் இந்த அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் என நான் நினைக்கவில்லை. முதலில், நான் திரை விமர்சனம் எழுதுவது என்ற நோக்கத்துடன் இதை எழுதவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்தவுடன் என் மனதில் ஏற்பட்ட சங்கடமான, கோபமான உணர்வே, என்னை எழுதத் தூண்டியது.

    இப்படத்தில் என்னை பாதித்த முக்கியமான காட்சி ஒன்றை எழுதக் கூடாது என்று தவிர்த்தேன். அது, சோழ ராணி, இந்திய ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் காட்சி. இந்தக் காட்சி எப்படி சென்சார் கண்களில் தப்பியது? இதை எந்தக் கண்ணோட்டத்துடன் செல்வராகவன் எடுத்திருப்பார்?

    மொத்தமே பத்து ரீல் கொண்ட சிறிய படமான இதில் படத்தை நீட்டிக்க கிளாடியேட்டர் காட்சி உதவி இருக்கலாம் (இது தான் லாஜிக் ஆக இருக்க முடியும்!) ஆயினும் குருவி சுடுவது போல ராணுவம் ஒரு அதிகாரிக்காக வேறு நாட்டில் இயங்குமா? (பிரமாண்டத்துக்கு இது தேவை என்பது லாஜிக் ஆக இருக்கலாம்!) சோழனை காட்டுமிராண்டியாக- முதிய ஒருவரின் கழுதை நெரித்துக் கொள்ளும் ஆசாமியாக- காட்டுவது ஏன்? ( பின் நவீனத்துவ படம் என்று கூறிக்கொள்ள, என்றால் லாஜிக் ஒ.கே).

    படம் முழுவதும் பொத்தல்கள் கொண்ட இதை விமர்சித்து ‘தமிழ் ஹிந்து’வை வீணாக்க வேண்டாம் என்ற ஆவேசம் நியாயமே. எனினும், நாம் கண்ணை மூடிக்கொள்வதால் திரையுலகம் இல்லாமல் போய்விடாது. இப்படி விட்டுவிட்டுத் தான், கேள்வி கேட்க இந்துக்களுக்கு ஆளில்லாமல் போய்விட்டது. திரு. ஜடாயு சரியாகவே இதைக் குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல, விமர்சனத்தில் நடுநிலை இல்லை என்று சில சகோதரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம், காமிக்ஸ் படமா, கலைப்படமா, நவீன சினிமாவா? ஒரு காட்சியில் வல்லூறு பறப்பதன் நிழல் நடராஜராக விழுகிறது. இதற்கு ராம.நாராயணனே பரவாயில்லையே! இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விளைவு நன்றாக இல்லாதபோது, இதன் சிறப்பம்சங்களை எழுதிப் புண்ணியமில்லை. ‘விழலுக்கு இறைத்த நீர்’ என்பதில் எல்லாமே அடங்கியிருக்கிறது.

    (இப்படம், இலங்கை சம்பவங்களை (முள்ளி வாய்க்கால், வன்னி முகாம்கள், பிரபாகரன்) பகடி செய்வதாக உள்ளது என்று சிலர் கூறி இருக்கின்றனர். அது உண்மையாக இருந்தால், செல்வராகவனை பாராட்டலாம்)
    -சேக்கிழான்.

  19. Please note this film’s 2nd part mainly reflects the last days if LTTE’s war.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>