திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்
நமது நிருபர்
31 Jan 2010 |
அச்சிட
பொங்கல் முடிந்து சில தினங்கள். சோம்பலான மதிய வேளை. ஒரு தொலை பேசி வந்தது.
“தமிழ்ஹிந்து.காம்?”
“ம்…ஆமாங்க. நீங்க யாரு?”
“நான் யாருங்கிறது முக்கியமில்லை. திண்டுக்கல்லுல பெருமாள் கோவில்பட்டின்னு ஒரு கிராமம் இருக்கு. அங்கே இந்துக்கள் சொந்த ஊர்ல அகதிகளாக இருக்காங்க…வெளியில செய்திகளோ ஒழுங்கா வர்றதில்லை. தமிழ்ஹிந்து.காம் டீம் அங்கே போய் பார்த்தா நல்லது.”
அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது
திண்டுக்கல்லில் ஏதோ நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது. நிலத்தகராறு என்கிற பெயருக்கு பின்னால் ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று நினைக்கத்தோன்றியது அந்த முகமறியா குரலில் இருந்த வருத்தம். பொதுவாக தமிழ்நாட்டில் சொந்த ஊரில் ஹிந்துக்கள் அகதிகளாக வாழுவதென்பது கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பார்க்க முடியும். அந்த விஷம் இப்போது மற்ற மாவட்டங்களிலும் படருகிறதா என்ன?
திண்டுக்கல்லுக்கு போவதென தமிழ்ஹிந்து ஆசிரியர்குழு நிருபரை அனுப்பியது. கையில் மின்னணுக்காமிராவும், திண்டுக்கல்லில் உள்ள ஒரு சமுதாய சேவகரான பாஸ்கரன் என்பவரின் முகவரியுமாக திண்டுக்கல்லில் இறங்கினார் தமிழ்ஹிந்து நிருபர். புழுதி அலையடித்த மதியவேளையில் தரப்பட்ட எண்ணுக்கு தொலைபேச ஒரு இளைஞர் வந்து பைக்கில் நிருபரை அழைத்துச் சென்றார்.
திரு.பாஸ்கரன் ஒரு சேவை அமைப்பின் அலுவலகத்தின் வெளியே அமர்ந்திருந்தார். இயல்பாகவும் அன்பாகவும் பேச ஆரம்பித்தார். ஹிந்துக்கள் திண்டுக்கல்லில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சாதி கட்சி வேறுபாடுகளை மீறி இந்துக்களை ஒன்று திரட்ட பணியாற்றும் சமுதாய சேவகர்கள் தொடர்ந்து அன்னிய ஏகாதிபத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். திரு. பாஸ்கரனும் இந்த தாக்குதலுக்கு விதி விலக்கல்ல. கடந்த ஆண்டு இஸ்லாமிய பாசிச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கால் துண்டாக்கப்பட்ட இந்த சமூக சேவகர் இன்று செயற்கைக் கால் பொருத்தியபடி தேசப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
திண்டுக்கல் பொது மருத்துவமனையில் தாக்கப்பட்ட இந்துக்கள் சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். பாரதிய ஜனதாக்கட்சியைச் சேர்ந்த திரு.போஸ் உடன் வந்தார். (இந்துக்கள் அடிபட்டால் உடனே மனித உரிமை அமைப்புக்களும் ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சிகளும் மறைந்துவிடும் இந்திய அரசியலின் தொன்று தொட்டு விளங்கி வரும் மரபு திண்டுக்கல்லிலும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.)
அங்கே கண்ட காட்சியின் கொடுமையை என்னவென்பது! சொந்த மகள் தன் கண் முன் விதவையான கோரத்தை, தன் பேரன்-பேத்திகளின் கண்களின் முன் தன் மருமகன் கொல்லப்பட்டு அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியான அவலத்தைக் கண்ட முதியவர் அழுத கண்ணீர் நெஞ்சை உலுக்கியது. தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்தாலும் ஹிந்துவாக வாழ்ந்த ஒரே காரணத்தால் வாழ்க்கையே கொடுமையாகிவிட்ட அந்த ஹிந்து சகோதரியின் முன்னால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நாட்டின் அரசியலை வைத்திருப்பதற்காக, படிப்பறிவு கொண்ட ஹிந்து மேல்தட்டு மக்களே தலைகுனிந்து நிற்க வேண்டும்.
பெருமாள்கோவில்பட்டி கிராமத்துக்கு சென்றால் கிராம வாசலிலேயே காவல்துறை உள்ளே செல்லும் வாகனங்களை கவனித்து பதிவு செய்துதான் விடுகிறது. உள்ளே சென்றதும் ஹிந்துக்கள் அச்ச உணர்வுடன் ஆங்காங்கே ஒதுங்கி நிற்பதையும் தெருவுக்குத் தெரு போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. இருந்தும் சில ஹிந்துக்கள் தைரியமாக பேச முன்வந்தனர். சரி, பிரச்சினைதான் என்ன?
பெருமாள்கோவில்பட்டியில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது இன்று நேற்றல்ல, 1925 இலேயே தொடங்கிய கதை. கோவிலுக்கு எதிரில் சிலுவை திண்ணை என உருவாக்க முயன்று, 1927 இல் மதுரை மாவட்ட வருவாய் துறை அலுவலரால் சிலுவை அகற்றப் பட்டுள்ளது. 1945 இல் மீண்டும் சிலுவைதிண்ணையை ஏற்படுத்த, 1947 இல் சென்னை வருவாய் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு சிலுவையை அகற்றியுள்ளது. மீண்டும் கோவிலுக்கு வடக்கே கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்த நிலையில், 1977 இல் மதுரை ஜில்லா நீதிமன்றம் அதை நீக்க உத்தரவிட்டு அகற்றியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்கள் காத்திருந்தனர். அந்த ஊரில் கிறிஸ்தவர்களை பெரும்பான்மை ஆக்கினர். 1996லிருந்து தாங்கள் ஒரு திருவிழாவையும் நிம்மதியாக அந்த கோவிலில் கொண்டாட கிறிஸ்தவர்கள் அனுமதித்ததில்லை என்கின்றனர் அந்த ஊரில் சிறுபான்மையாக்கப்பட்ட இந்துக்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் பாரதத்தின் பண்பாட்டுக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான அன்னிய ஏகாதிபத்திய மதத்துக்கு ஆதரவான குடும்ப ஆட்சிகளும் பினாமி ஆட்சிகளும் ஏற்பட்டதும் முழு வன்முறையுடன் கிறிஸ்தவர்கள் களமிறங்கியுள்ளனர். 2008 இல் அம்மன் கோவில் வேப்ப மரம் வெட்டப்பட்டது. கோவில் திருவிழாவின் போது கிறிஸ்தவர்களின் வன்முறை அளவுக்கதிகமாக இருந்ததால் பாதுகாப்பு நாடி இந்த ஊர் ஹிந்துக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் சென்று தங்கியுள்ளனர். இந்த பொங்கல் திருவிழாவின் போது மீண்டும் கிறிஸ்தவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் அழைத்துள்ளார். இந்நிலையில்தான் திரு. ஆண்டி (45) என்கிற ஏழை இந்து விவசாயி ஐந்து கிறிஸ்தவ வெறியர்களால் பட்டபகலில் தன் மனைவி குழந்தைகள் மற்றும் சகோதரியின் கண் முன்னால் ஓட ஓட விரட்டி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினரும் இதற்கு மௌன சாட்சியாக நின்றதாக கொலையைக் கண்ணெதிரே கண்ட அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று பார்க்கும் போதுதான் வேதனை ஏற்படுகிறது. ஆத்தூர் வட்டம் துணை வட்டாட்சியர் அலுவலக சர்வே வரைப்படத்தில் தெள்ளத்தெளிவாக கோவிலுக்கான இடம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல கிறிஸ்தவர்களோ இந்த வரையறையில் எவ்வித மதில்சுவரும் ஹிந்துக்கள் கட்டக் கூடாதென்று சொல்கிறார்கள். சட்டப்படி பாத்யதைப் பட்ட இடத்தில் கோவிலுக்கு சுவர் கட்டவேண்டும் என்று கேட்டதற்காகத்தான் திரு. ஆண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு முன்னதாகவே ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகள் திமுக அரசியல் தலையீட்டால் வெளியே விடப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த கொலை நடந்ததாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
கோவில் பிரச்சினை ஒரு வெளிப்பாடுதான். ஆனால் இதற்கான காரணங்கள் ஆழமானவை. ஹிந்துக்கள் மதம் மாற வேண்டும் இல்லாவிட்டால் அங்கு வாழக்கூடாது என்பதே கிறிஸ்தவர்களின் வைராக்கியம் என தோன்றுகிறது. சுற்றியிருக்கும் கிறிஸ்தவ பெரும்பான்மை கிராமங்களிலிருந்து மக்களை திரட்டிக் கொண்டு வந்து இங்குள்ள ஹிந்து வீடுகளை தாக்குவது ஒரு மாதாந்திர நிகழ்வாகவே உள்ளது. பெரிய இரண்டு கிறிஸ்தவ சர்ச்கள் கட்டப்பட்டு அதிலுள்ள கூட்டமணிகள் அடிக்கப்பட்டு இந்த அக்கம் பக்க கிராம கிறிஸ்தவ மக்கள் திரட்டப்படுகின்றனர். கிறிஸ்தவ சர்ச்சின் ஒலிப்பெருக்கி கூம்புகள் ஹிந்து வீடுகளை நோக்கி கட்டப்பட்டு காலையிலும் இரவிலும் குழந்தைகள் படிக்க முடியாதபடி ஒலிமாசு ஏற்படுத்தப் படுகிறது.
மாட்டுப்பொங்கலை ஒட்டி ஊருக்கு வெளியே இருக்கும் பெருமாள் கொவிலுக்கு மாட்டை ஓட்டிச் சென்றவர் தாக்கப்பட்டுள்ளார். பெருமாள் கோவில் முன்னால் இருக்கும் மரமும் கூட மதவெறிக்கு தப்பவில்லை. அதிலும் சிலுவை ஆக்கிரமிப்பின் சின்னமாக வரையப்பட்டுள்ளது. சிலுவை இந்த கிராமத்தில் ஒரு வெறுப்பின் சின்னமாக ஹிந்துக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து கிறிஸ்தவ வீடுகளிலும் பிரதானமாக சிலுவை அமைக்கப்பட்டு கூட்டுத்தாக்குதல்களின் போது ஹிந்து வீடுகளை அடையாளம் காட்டப் பயன்படுகிறது. ஹிந்து கோவில் சுவர்களில் சிலுவைகள் மீண்டும் மீண்டும் வரையப்பட்டுள்ளன. காளியம்மன் கோவில் முன் கார்த்திகை தீபம் ஏற்றும் கல் தூண் உடைக்கப்பட்டுள்ளது. கோவில் மீதிருக்கும் சுதை சிற்பங்கள் கல்லெறிந்து உடைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் கிறிஸ்தவர்கள் செய்வதாக மிரட்டித்தான் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ஊர் பெயர் கிறிஸ்தவர்களால் மட்டும் ”அந்தோனியார் பட்டி” என கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த அக்கறையின்மை மட்டும் மனிதத்தன்மையின்மையின் முழுவடிவமாக இந்த பிரச்சனையில் விளங்குகிறார்கள். சாதி ரீதியாகவும் அரசியல் கட்சி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் திண்டுக்கல் ஹிந்து சமுதாயம் இந்த கொடுமையைத் தட்டிக் கேட்கும் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறது. மாவட்ட ஆட்சியரோ பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு அடங்கி அந்த நிலத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று மிரட்டியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பெருமாள் கோவில்பட்டி எனும் ஒரு கிராமத்தின் நிலை அல்ல. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல சிறு ஊர்களில் இந்துக்கள் சிறுபான்மையாகிவிட்டால் இந்த நிலைதான். ஊரை விட்டு ஓடிவிட வேண்டும் இல்லையென்றால் மதம் மாறவேண்டும்.
இன்றைக்கு திண்டுக்கல்லில் அரங்கேறியிருப்பது அதே சோகத்தின் மற்றொரு அத்தியாயம். தமிழ்நாட்டு இந்துக்கள் சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபடவேண்டியது அவசியம். தமிழகத்தில்தான் ஹிந்து தருமம் அன்னிய ஆதிக்கங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு வளர்ந்து அதன் ஆன்மிகப் பண்பாடு ஒவ்வொரு மண்துகளிலும் வேரூன்றி உள்ளது. அதனை இங்கு அழித்துவிட முயற்சி செய்வதோ மதம் என்கிற பெயரில் களமிறங்கியுள்ள அன்னிய ஏகாதிபத்திய வெறி. அதனை எதிர்த்தே தமிழ் நாட்டு கிராமங்களில் அப்பாவி ஹிந்துக்கள் போரிடுகிறார்கள்.
வளரும் நாடான பாரதத்தின் சொந்த தருமமான ஹிந்து ஆன்மிகத்துக்கும் காலனிய ஆதிக்கத்தால் பிற நாடுகளை கருவறுத்து வளம் உறிஞ்சி வளர்ந்த அன்னிய ஏகாதிபத்திய பாசிச வெறிக்கும் இடையே நடந்து கொண்டிருக்கிறது இந்தப் போராட்டம். இந்த போராட்டத்தில் ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் களமிறங்க வேண்டும். அன்பையும் அறத்தையும் துணையாகக் கொண்டு ஜனநாயகரீதியில் அன்னிய ஏகாதிபத்திய மதவெறியை பூண்டோடு இல்லாமலாக்க வேண்டும். இன்று தந்தையை காளி கோவிலுக்காக இழந்து நிற்கும் அந்த ஹிந்து பெண்ணின் மனத்துயரை துடைக்கவும், இறந்து விட்ட ஆண்டி அவர்களுக்கு நாம் செய்யும் உளப்பூர்வமான அஞ்சலியாக அமையப்போவதும் அதுதான்.
தமிழக அளவிலும், இந்திய அளவிலும் இயங்கும் இந்து சேவை அமைப்புகள் பல உள்ளன. இவை தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள கிராமப் புறங்களில், குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழை இந்துக்களுக்கு கல்வி, மருத்துவம், சுயதொழில் உதவி ஆகிய சேவைகளைக் குறிப்பிடத் தக்க வகையில் எடுத்துச் செல்ல வேண்டும். கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு பரவுவதைத் தடுக்க அதுவும் ஒரு முக்கியமான வழிமுறையாகும். இத்தகைய அமைப்புகளில் அங்கம் வகிக்கும், பங்குபெறும் இந்து உணர்வாளர்கள் நிலமையின் தீவிரத்தை எடுத்துரைத்து தங்கள் அமைப்புகள் மூலம் இந்த முயற்சியினை செய்ய வேண்டும் என்றும் தமிழ்ஹிந்து கேட்டுக் கொள்கிறது.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
31 January 2010 at 4:15 pm
Dear Editors,
I felt very emotional and sad and angry at the same time since I am unable to contribute anything. I would like to bring up an idea. Please consider this.. Could you please translate this article into english? And at the same time add english subtitles to the videos? There are many pro Hindu websites such as
1) malayalee’s http://www.haindavakeralam.com and
2)Maharashtra’s - http://www.hindujagruti.com and
3) http://vijayvaani.com/
WE NEED HINDUS FROM OTHER STATES TO KNOW WHAT IS HAPPENING HERE!
** This shouldn’t be restricted to ONLY Tamil speaking people visiting this site .
Thank you
Kreshna