முகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

January 19, 2010
-  
அச்சிட அச்சிட

“யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ அருணாச்சல புராணம் கூறுகிறது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மஹா சிவராத்திரி நாட்களுக்கு இடையே நடந்த அந்த வாதமே அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை உருவானதற்குக் காரணமாக அப்புராணம் கூறுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த அந்நிகழ்ச்சி, வேறு பல விஷயங்களையும் உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். அதை விளக்கும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. (ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்).

lingodbhavaபலருக்கும் அந்நிகழ்ச்சி தெரிந்திருக்கலாம். எனினும் அதை இங்கே சுருக்கமாகக் காணலாம். தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத விஷ்ணு சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.

ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலை உருவாகத் திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.

இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருப்பார்கள் என்று நம்பக்கூடும். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரக்கூடும். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணரவும், அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது? இந்நிகழ்ச்சியை அலசினால் இது தவிர மேலும் பல உண்மைகளையும் உணரலாம்.

பிரம்மன் முடியைப் பார்க்க மேலும், விஷ்ணு அடியைப் பார்க்க கீழும் சென்றதற்குப் பதிலாக, பிரம்மன் கீழும் விஷ்ணு மேலும் சென்றிருக்க முடியுமோ? அப்படி கேள்வி கேட்கலாம் என்றாலும், அது இயற்கையானதாக இருக்கமுடியாது.  ஒன்றே பிரம்மம் என்ற நிலையை விட்டு பல கடவுளர்கள் என்னும்போது, மனிதர்களைப் போலவே கடவுளர்களுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு எனலாம். அதனாலாயே, விஷ்ணுவுக்குக் காக்கும் தன்மையும் பிரம்மனுக்கு ஆக்கும் தன்மையும்  உள்ளது.
காப்பதற்கு செல்வமும் ஒரு துணை அல்லவா? அதனால்தானோ செல்வத்தின் திருவுருவாம் லக்ஷ்மி விஷ்ணுவின் துணைவியாக உள்ளார்? அதே போன்று, ஆக்குதல், எண்ணங்களை தோற்றுவித்தல், கலைகளை வளர்த்தல் போன்ற எல்லா ஆக்கச் சக்திகளுக்கும் கடவுளான பிரம்மனின் துணையாக சரஸ்வதி உள்ளார். இப்படி அவர்களின் துணைவிகளையும் சேர்த்து நாம் நடந்ததைப் பார்க்கும்போது மேலும் பல தத்துவங்கள் புனலாகின்றன.

siva_as_guru_to_manikkavasagarகாத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு, வடிவம் என்று கண்ணால் காணக்கூடியது போல் மற்ற புலன்களாலும் உணரக்கூடிய தன்மை உண்டு. அத்தகைய உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்களை விட தொழில் முனைவோருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதை அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையே செய்கின்றனர்; மனிதாபிமானமின்றி செயல் படுத்தும்போது தான் விளைவுகள் மோசமாகின்றன. செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?

அதே போன்று ஆக்குதல் என்பது உலகு சம்பந்தப்பட்ட பிறப்பு, மற்றும் மனது சம்பந்தப்பட்ட எல்லாவிதமான எண்ணங்கள், திட்டங்கள் போன்ற புலன்களுக்குத்  தெரியாத நுண்ணியமானவைகளையும்  உற்பத்தி செய்யப்பட்டவைகள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவைகள் அனைத்துமே ஒருவர் தம் வாழ்க்கையில் கற்பதற்கு ஏதுவாக அமைந்து அவரை உயர்த்திச் செல்லும். அது தவிர அவைகள் அனைத்துமே உணர்வால் மட்டுமே அறிந்துகொள்ளப்படும் தன்மை வாய்ந்த நுண்ணிய திறன்கள் அல்லது பலன்கள் ஆனதால் உள்ளத்திலிருந்து அவைகள் வெளிப்படும்போதுதான் பேச்சாகவோ, செயலாகவோ மாறக   கூடும். அப்படி வரும்வரை அதற்கு ஒரு வடிவமோ, அளவோ இன்றி புகை மூட்டம் அல்லது மேகக் கூட்டம் போல் தளர்ந்து படர்ந்து இருக்கும். அதனாலேயே ஒரு செயல்வீரனோடு ஒப்பிடும் போது வெறும் எண்ணங்கள் மட்டுமே கொண்டவனை ஒரு பனிப் படலத்திலோ மேகக் கூட்டத்திலோ மிதப்பாதகச் சொல்கிறோம். “எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?”  என்பதும் இதை உணர்த்துகிறது. இப்படியாக அறிவு சார்ந்த, கற்றல் சம்பந்தப்பட்ட திறன்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் துணையான பிரம்மா புகை மண்டலம் அல்லது மேகக் கூட்டம்  போல் மேலே போகாது கீழே போவார் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்?  மேற்சொன்ன நிகழ்ச்சியில் அந்த இரு கடவுளர்களும் பின்னர் என்ன செய்தார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும், அதில் நமக்கு மேலும் என்ன படிப்பினைகள் இருக்கின்றன என்றும் இப்போது நாம் காணலாம்.

வராக வடிவில் கீழே சென்று கொண்டிருந்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. தன்னை விட ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதை அவர் உணர ஆரம்பித்தார். அதன் விளைவாக மேற்கொண்டு செல்லாமல் திரும்பிய அவர், தன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்கிய அந்தச் சோதியினை உணர்ந்தார். ஒருவன் தனது வலிமையின் எல்லையை உணர்ந்ததும், அதற்கும் அப்பால் உள்ள சக்தியைத் தெரிந்து கொள்வது என்பது தானே முறையான வழி? ஒருவன் கை நிறைய சம்பாதித்து செல்வம் கொழித்து இருக்கையில், அவனுக்கு சொல்லொணாத் துயர் வந்தால் என்ன செய்வான்? “செல்வம் இல்லாதபோது, செல்வம் வேண்டினோம்; இதனால் பயனில்லை” என்று அனுபவப்பட்டு, அச்செல்வம் போனாலும் பரவாயில்லை என்று உணர்ந்து அதை இழக்கவும் தயாராக இருப்பான். அந்த நிலையில்தான் அவனுக்கு உலகின் நிலையாமை தெரிய வருகிறது. அவன் துறவுக்குத் தயார் ஆகிறான். இது போன்ற நிலையில்தான் விஷ்ணு இருந்தார்.

கிட்டத்தட்ட இதற்கு நேர் மாறான நிலையில் பிரம்மன் இருந்தார். கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்மனுக்கோ அவரது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து, மேலிருந்து பூ வந்தால் அது மேலேயுள்ள முடியிலிருந்துதான் வருகிறது என்றும், அதனால் அப்பூவையே தான் முடியைப் பார்த்ததிற்கு சாட்சியாக வரச் சொல்லலாம் என்ற எண்ணமும் தோன்றி அப்படியே செய்கின்றார். இப்படிச் செய்தால் தான் வென்றுவிடுவோம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதியின் பதிக்கு ஏன் இப்படித் தோன்றியது?.

அறிவு என்பது சரியான முறையில் சரியான மன நிலையில் வளரவில்லை என்றாலும், வெறும் உலக சம்பந்தப்பட்டதாக மட்டுமே  இருந்தாலும், அது இரு-முனைக் கத்தி போன்று ஒரு விரும்பத்தகாத ஆயுதமாக வளரக்கூடும். அப்போது புத்தியானது குறுக்குப் பாதையில் சென்று, அனைவருக்கும் உதவும் யுக்திகளுக்குப் பதிலாக தீய குயுக்திகளை வளர்க்கும். அது ஒருவனை தாழ் நிலைக்கும்  கொண்டுசெல்லும். அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகிவிடும். உலக வாழ்க்கையிலிருந்தே தன் செயல்கள் மூலம் ஒருவனுக்கு அறிவு வளர்ந்தாலும், அது படிப் படியாக அவனை நல் வழிப்படுத்தி இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான தன்னை உணரச் செய்வதாக அமைய வேண்டும். அப்படியாகவில்லை என்றால் அது பாழ் அறிவே. அது பொல்லா விளைவுகளையே கொடுக்கும். அதனால் ஒருவன் அனாவசியமாக வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டோ, அனர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டோ, தவறான வழிகளில் மற்றவர்களை நடத்திக்கொண்டோ வாழ்நாளை வீணாக்குவான். அதுதான் பிரம்மன் விஷயத்திலும் நடந்ததோ?

வாழ்வு நன்கு அமைய ஒருவன் செயல்களில் ஈடுபட வேண்டும். முதலில் அது அடிப்படை தேவைகளுக்கும், பின்பு சில கூடுதல் தேவைகளுக்குமாகத் தொடரும். ஆரம்பத்தில் இருந்த ஆசை பின்பு பேராசையாக மாறினாலும், ஒருவனுக்கு தலையில் இடி போன்று ஒரு துயர நிகழ்ச்சி நேரும்போது இவ்வுலகின் உண்மையை அவன் உணரக்கூடும். ஓடி ஓடித் தேடிய செல்வத்தின் இயலாமையை உணர்வான். ஆனால், அப்படி செயல்களில் ஈடுபடும்போதே அவன் அப்பொருட்களின் நிலையாத் தன்மையையும் உணர்ந்து, செயலை ஒரு கர்ம யோக வழிப்படி செய்து பலன்களில் நாட்டம் கொள்ளாது இருந்திருந்தால் மன முதுர்ச்சியை அடைந்திருப்பான். இவ்வழியில் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்றாலும், பலருக்கும் இது தான் எளிதான, சிறந்த வழி. அவ்வழி செல்லும் போது செயலில் நேர்மை, திறமை கூடுவது அன்றி மனதளவிலும், முடியவில்லை என்னும்போது அதை ஒத்துக்கொள்ளவும், சரண் அடையும் மனப் பக்குவமும் வளரக்கூடும். விஷ்ணு அதைத்தான் செய்தார்.

அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் ramana maharishiஅடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்.  இதனையே “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்பார் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி. பக்குவத்துடன் அறிவு வளரவில்லை என்றால் அந்த அறிவு, தன்னைத் தோண்டி ஞானம் பெற வழி வகுக்காது. பிரம்மனுக்கு நடந்தது போல் குறுக்கு வழியில் செலுத்தி மேலும் பல துன்பங்களைத்தான் கொடுக்கும். அறிவு சார்ந்த ஞான மார்க்கம் நேரான மார்க்கமாக இருந்தாலும், அது சரியான விளைவுகளைக் கொடுப்பதற்கு ஒருவன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வழியில் தான் யார் என்ற அறிவு சார்ந்த கேள்விதான் கேட்கமுடியும். அதற்குண்டான  பதில் இயல்பாக உணர்வில் உதிக்கும் வரை பொறுமையும் முயற்சியும் வேண்டும். அப்போது ஞானிகள் கூற்றுப்படி பிரம்மன், விஷ்ணு என்ற இரு கடவுளரின் உண்மைத் தன்மையும் தெரிய வரும்.

“திருவண்ணாமலையே எல்லாம்” என்று அதனை அடைந்து, இக வாழ்வின் இறுதி வரை அங்கிருந்து எங்குமே செல்லாத பகவான் ரமணர், மற்றும் பல ஞானிகளின் கூற்றுப்படி ஞான மார்க்கமே கர்ம மார்கத்தை விட உன்னதமாகும்.  மற்ற யோக வழிகள் எல்லாவற்றையும் இவை இரண்டுக்கும் இடையே வரிசைப்படுத்தி விட்டு, அவை எல்லாமே கர்ம மார்கத்தின் வெவ்வேறு முறைகள்தான் என்றும்  ரமணர் “உபதேச உந்தியார்” நூலில் குறிப்பாகச் சொல்வார்.  அதனை இப்படியும் புரிந்து கொள்ளலாமோ? முதலில் நமக்கு உகந்த வழியை எடுத்துக் கொள்வது, அதிலே பழகப் பழக அதுவே நம்மை நுணுக்க முறைகளுக்குக் கொண்டு சென்று அதி உன்னத நிலையான “தன்னை”யும் உணர வைக்கும்.

அப்படியென்றால், பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும்  இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். அதாவது, எப்படிப் பட்ட கரடு முரடான பாதையாக கர்மா வழி தோன்றினாலும், அது ஒருவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் அவன் உள்ளத்தைப் பண்படுத்தி உயர் நிலைக்குச் செல்லவைக்கும் ஆற்றல் உடையது என்பதை உணர வைக்கிறதோ? மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் – மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே “தான் யார்” என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?

இப்படியாக, நமது புராண, இதிகாச நிகழ்ச்சிகளும் நமக்கு வழி வழியாக வந்திருக்கும் வேத-உபநிஷத உண்மைகளையும், முறைகளையும்  தான் உருவகங்களாக உபதேசிக்கின்றன. அவைகள் அனைத்திலும் உள்ளதை உள்ளவையாக உண்மை உணர்வுடன் தேடினால், நமக்குக் கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

 

91 மறுமொழிகள் அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

  1. snkm on January 19, 2010 at 7:09 pm

    நல்ல கட்டுரை! எளிமையான விதத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது!

  2. Vidya Nithi on January 19, 2010 at 9:59 pm

    இக்கதை எந்த புராணத்தில் இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப்பதிலாக சைவ வைணவ மதத்தவர்களுக்கிடையே பகைமையை உருவாகுமே தவிர. ஹிந்து ஒற்றுமைக்கு உதவாது. வைணவர்களும் சைவர்களும் தங்கள் மத சிறப்புகளை எடுத்துரைக்கட்டும். இம்மாதிரி கதைகளைக் கூறி வைணவத்தையும், வைணவர்களையும் சிறுமைப்படுத்திட வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

    வித்யா நிதி

  3. ஜடாயு on January 20, 2010 at 7:35 am

    // இக்கதை எந்த புராணத்தில் இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப்பதிலாக சைவ வைணவ மதத்தவர்களுக்கிடையே பகைமையை உருவாகுமே தவிர. ஹிந்து ஒற்றுமைக்கு உதவாது. வைணவர்களும் சைவர்களும் தங்கள் மத சிறப்புகளை எடுத்துரைக்கட்டும். இம்மாதிரி கதைகளைக் கூறி வைணவத்தையும், வைணவர்களையும் சிறுமைப்படுத்திட வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

    வித்யா நிதி //

    அன்புள்ள வித்யா நிதி,

    இந்தக் கதை லிங்க புராணம் உள்ளிட்ட பல சிவபுராணங்களில் வருகிறது. தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலும் மிகுதியும் பேசப் படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான புராதன சிவாலயஙக்ளிலும் லிங்கோத்ப மூர்த்தி வடிவில் சிற்பமாகவே இருக்கிறது. எனவே, “கூறாமல் இருப்பது” என்பது சாத்தியமே இல்லை. நம் சமய, புராண மரபின் ஒரு பகுதி இது.

    மேலோட்டமாக, literal ஆக இந்தக் கதையை அணுகி, இது வைணவர்களைச் சிறுமைப் படுத்துகிறது என்ற முடிவுக்கு எல்லாம் வந்து விடவேண்டாம். இத்தகைய கதைகள் வேறுபல புராணங்களிலும் தான் உள்ளன (உதாரணமாக, பஸ்மாசுரனுக்கு சிவன் வரமளிக்க, மோகினி வடிவில் விஷ்ணு வந்து அசுரனை மயக்குவது).

    இந்தப் புராணக் கதைகளை குறியீடுகளாகக் கண்டு, அவற்றின் படிமங்கள், தத்துவங்கள் ஆகியவற்றையும் மனதில் கொண்டே அவற்றை அணுக வேண்டும். அப்போது சமயப் பூசல் என்ற தளத்திற்கு அப்பால், அவற்றின் உள்ளுறை பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதைத் தான் இந்தக் கட்டுரையும் செய்ய முயன்றிருக்கிறது என்று நினைக்கிறேன். ரமண மஹரிஷியின் கருத்தையும் இறுதியில் கூறி முடித்திருப்பது சிறப்பு.

  4. vijay on January 20, 2010 at 1:04 pm
  5. Sarang on January 20, 2010 at 4:13 pm

    திரு ராமன் அவர்களே

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

    மேலோட்டமாக பார்கிறோமோ ஆழமாக பார்கிறோமோ இது போன்ற கட்டுரைகள் மற்ற மதத்தினர் நம்மை எள்ளி நகையாடவே வைக்கும் – விஷ்ணுவும் பிரம்மாவும் அகந்தை உற்றனர் – இது தான் ஹிந்து கடவுள்களின் அழகு என்றல்லவா எண்ணுவார்கள்.

    விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் அகந்தை என்று சொல்ல நமக்கு எவ்வளவு அகந்தை இருக்க வேண்டும் :-)

    அனைவரும் தங்கள் இழ்ட தேவதாவை அபிமாநிப்பது சகஜமே அனால் அதையே பிரகடனபடுத்த முயன்றால் தகுந்த மேற்கோள் காட்ட வேண்டும். நீங்கள் சொல்லும் கதை நம் முன்னோர்கலளால் கையாண்ட எந்த சத்வ புராணத்திலும் இல்லை – லிங்க புராணம் பதினெட்டு புராணத்தில் ஒன்று என்றாலும் அது ரஜசிக புராணமாக வேதா வியாசரால் சொல்லப் பட்டது. இதில் இருந்து அப்படியே மேற்கோள் காட்டி அப்படியே உண்மைகள் என்று சொல்வது தகுந்தது அல்ல

    மற்றொன்று
    //காத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
    //

    இப்படி முடிவு காட்டலாகாது – ஏன் வாழ்வதற்கு கல்வி அவசியம் இல்லையா – மிருகங்கள் கூடத்தான் வாழிகின்றன – அவைகளுக்கு எங்கே செல்வம்

    //
    செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?
    //
    விஷ்ணுவிற்கு நீல என்று இன்னொரு இல்லாளும் உண்டு. அது போகட்டும் – விஷ்ணுவின் வாகனமோ கருடன் – கருடன் பறக்க தானே செய்கிறது

    நாம் இழ்டம்போல் முடிவு கட்டினால் எக்கு தப்பாகிவிடும்

    //
    பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.
    //

    ஆக இங்கே சிவன் தான் அந்த பரம் பொருள் என்று நீங்கள் முடிவு கட்டுகிறீர்கள் – அதில் தவறொன்றும் இல்லை – அனால் இதில் சில ஓட்டைகள் உண்டு,
    பரமாத்மா என்றுமே சர்வஞன் (பல உபநிஷத் வாக்கியங்கள் இதற்கு மேற்கோள்) – இப்படி இருக்க இன்னொரு புராணத்தின் படி சிவன் முருகனிடம் உபதேசம் பெறுகிறார் – அது எங்கனே பொருந்தும்

    நான் ஒன்றும் உங்களை இப்படி நினைக்காதிர்கள் – சிவனை போர்ரதீர்கள் என்று கூற வில்லை, நீங்கள் இந்த விழயத்தை பல பேர் படிக்க பிரகடன படுத்தும் பொது தகுந்த பிரமானதுடன் கையால வேண்டுகிறேன் அதுவே எழுத்துக்கு அழகு

    நீங்கள் சொல்ல வந்த கருத்திருக்கு சாதாரண கதைகளையே கையாண்டிருக்கலாம் – வீணாக ஏன் விஷ்ணுவையும், பிரம்மாவையும் இழுக்க வேண்டும்

    மேலும் சில தகவல்கள் – பிரம்மாவிற்கு கோவிலே இல்லை என்பது தவறு

    கேரளத்தில் பரசுராமர் கோவிலில் பிரம்மாவிற்கு சந்நிதி உண்டு.
    திருச்சி உத்தமர் கோவிலில் பிரம்மாவிற்கு சன்னதி உண்டு

    இன்னும் பல கோவில்கள் உள்ளன – ஏன் நீங்கள் கூட ஒரு கோவில் கட்டலாம் – அதை சிவனோ விஷ்ணுவோ தடுக்க மாட்டார்கள்

  6. Sarathy on January 20, 2010 at 7:44 pm

    Puranas are divided into 3 categories – sattvam (goodness), rajas (passion) and tamas (ignorance). It is only common sense that puranas which fall under the category of sattvam are the ultimate authority (which is why the author says in the beggining that there is no doubt about Mahavisnu’s supremacy) since anything said in the mode of ignorance will lead to darkness (like this story which is part of linga puranam – which is tamasic puranam). These stories mislead people from the real goal of life and that is why they are generally not quoted by the great scholars (let it be adi sankara, madhva or ramanuja) as authoritative.
    One thing to understand – the difference between sattva puranas and others is the approach to the message.
    In Vishnu Purana, Bhagavatha purana, etc which are sattva, they begin with a general question – who is the supreme? and the answer will be specific “it is Sriman Narayana and no one else”.
    In Rajasa and tamasa puranas, the question will be specific – what are the glories of linga? and the answer will be relating the glories of siva in his linga form.
    There are so many stories like this – some of them may exist in puranas, but majority of them were written/popularised by people who had a special agenda to reduce the supremacy of Sriman Narayana which is established clearly in Vedas/and all sastras.
    We should be careful to analyse, understand and identify what is true.

  7. Srikanth on January 20, 2010 at 8:24 pm

    இந்த அடிமுடி தேடிய கதை சைவர்களால் பரப்பப் பட்டு வருகிறது. இந்த கதை வேதத்திலோ, நாரத – யம – பராசர – யஞவல்க்ய – மனு ஆகிய எந்த ச்ம்ருதிகளிலோ இல்லை. சிவ பக்தனும் மகாகவியுமான காளிதாசன் போன்ற வடமொழி கவிஞர்களோ தமது படைப்புகளில் எடுத்து கூறியதில்லை. இராமாயண – மகாபாரத இதிகாசங்களிலும் இல்லை. எத்தனையோ உபநிஷத்துக்கள், வேத வாக்கியங்கள், இதிகாச – புராணங்களை ஆதாரமாக காட்டி, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் முதலான ஆசாரியர்கள் படைத்த பிரம்ம சூத்திர – கீதா பாஷ்யங்களில் இந்த கதை குறிப்பிடப் படவில்லை. பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இல்லை. இந்த கதை, நாயன்மார்கள் காலத்துக்கு சற்றுமுன் புனையப் பட்டுள்ளன. [நன்றி - புத்தூர் சுதர்சனர்]

    ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. இதை பொருத்துவதற்காக வலிந்து படிமம், தத்துவம் என்றெல்லாம் படுத்துவது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். தெளிவு பிறக்காது. இந்த காலத்தில் தெய்வபக்தியே குறைந்து விட்டது – இதில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நம்பிக்கையிலும் சந்தேகத்தை கிளறி குழப்புவது பாவ காரியம்.

  8. ஜடாயு on January 20, 2010 at 10:42 pm

    அன்புள்ள ஸ்ரீகாந்த்,

    கண்ணன் வெண்ணை திருடியது, குன்றைக் குடையாய்ப் பிடித்தது, உரலில் கட்டுண்டது, கோபியருடன் ராசலீலை புரிந்தது -இந்தக் கதைகளெல்லாம் எந்த வேதத்தில், எந்த ஸ்மிருதியில் இருக்கின்றன? காலத்தால் லிங்க புராணத்தை விட பிற்பட்டதாகக் கருதப் படும் பாகவத மகாபுராணத்தில் தான் இவை வருகின்றன.. ஆனால், ஆழ்வார்கள் இவற்றின் மூலம் எப்பேர்ப் பட்ட தெய்வீக அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள்! அவர்கள் அருளிச் செயல்களில் எத்தனை இடங்களில் இந்தக் கதைகளை உள்ளம் குளிர, நெஞ்சம் உருக அனுபவித்திருக்கிறார்கள்! இதையெல்லாம் இடைச் செருகல் என்று நாம் தள்ளிவிட முடியுமா?

    // ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. இதை பொருத்துவதற்காக வலிந்து படிமம், தத்துவம் என்றெல்லாம் படுத்துவது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.//

    பொதுவாக வைஷ்ணவ புராணங்களில் நிகழ்வுகள் மானுடச் செயல் போன்று அமைந்த தெய்வ லீலைகள் என்று கருதப் படுகின்றன. அவதார தத்துவம் என்ற சரடில் அவை அழகுறக் கோர்க்கப் படுகின்றன. உணர்ச்சிமயமான வெளிமுக பக்திக்கு அவை பெரிதும் தூண்டுதல் அளிக்கின்றன.

    ஆனால் சைவ (மற்றும் சாக்த) புராணங்கள் அனைத்துமே குறியீட்டுத் தன்மை கொண்டவை. முப்புரம் எரித்தல், தட்ச யக்ஞத்தை அழித்தல், நஞ்சு உண்ணுதல், திருநடம் புரிதல், அடிமுடி தேடல் இவை அனைத்துமே தத்துவ நோக்கிலேயே சைவ சித்தாந்தத்தில் விளக்கப் படுகின்றன. திருமந்திரத்தில் ஒவ்வொரு புராணக் கதைகளின் பின் உள்ள ஆழ்ந்த தத்துத்திற்கும் ஒவ்வொரு அத்தியாயமே உள்ளது. உதாரணமாக, கீழ்க்கண்ட பாடலில் முப்புரம் எரித்த புராணத்தை அப்படியே நடந்ததாக நம்புபவன் மூடன் என்றே திருமூலர் கூறுகிறார் –

    அப்ப‌ணி செஞ்ச‌டை ஆதி புராத‌ன‌ன்
    முப்புர‌ம் செற்ற‌ன‌ன் என்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்
    முப்புர‌மாவ‌து மும்ம‌ல‌ காரிய‌ம்
    அப்புர‌ம் எய்த‌மை ஆர‌றிவாரே….

    இந்த அடிமுடி தேடல் புராணத்தைக் கூறும் அத்தியாயத்திலேயே திருமூலர், பிரமனும், திருமாலும் பரம்பொருளின் வேறானவர்கள் அல்லர் என்றும் கூறூகிறார் –

    தானக் கமலத்திருந்த சதுர்முகன்
    தானக் கருங்கடல் ஊழித் தலைவனும்
    ஊனத்தினுள்ளே உயிர்போல் உணர்கின்ற
    தானப் பெரும்பொருள் தன்மையதாமே.

    எனவே இதைப் படிமமாகவும், தத்துவமாகவும் காண்பதாகச் சொல்வது ஏதோ “புதிய பார்வை” அல்ல, மரபிலேயே உள்ளது தான். எனவே “சைவர்களால் பரப்பப் பட்டு வரும் கதை” என்று ஒற்றைவரியில் நிராகரிப்பது சரியான அணுகுமுறை ஆகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    இங்கு சாரதி என்பவர் கூறீயிருக்கும் தாமஸ, ராஜஸ புராணம் என்கிற கருத்தும் சமயக் காழ்ப்பில் விளைந்ததே. சிவ வழிபாடு என்பதே தாமச குணம் என்ற கருத்தாக்கத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது அது.

    ஆனால் சைவசமயவாதிகளிலேயே இந்தப் புராணத்தை வைத்து கடவுளரில் யார் பெரியவர் என்று வெற்றுவாதம் புரியும் போக்கு இருக்கிறது. அது கண்டிக்கத் தக்கது.

    இது பற்றீ வேதாந்தியான சுவாமி சித்பவானந்தர் கூறுவதை அடுத்த மறுமொழியில் இடுகிறேன்.. புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்..

  9. ஜடாயு on January 20, 2010 at 11:00 pm

    சுவாமி சித்பவானந்தர் கூறுகிறார் –

    ”.. பரதத்துவம் ஒன்றை விளக்குவதற்கு அமைந்தது இக்கதை. அதாவது அலையாக வடிவெடுத்திருக்கிற நீர்ப்பகுதி கடல் முழுதையும் காணமாட்டாது. எல்லைக்கு உட்பட்ட பொருள் ஒன்று எல்லை கடந்ததை அளக்க மாட்டாது. கண்டம் அல்லது துண்டிக்கப் பட்ட வஸ்துவுக்கு அகண்ட வஸ்துவை அளக்க முடியாது. மும்மூர்த்திகள் தங்கள் கிருத்தியங்களுக்காக ஜீவபோதம் எடுத்துக் கொண்டவர்கள். அப்படி ஜீவபோதத்தில் இருப்பவர்கள் மும்மூர்த்திகளே ஆனாலும் அவர்கள் பரவஸ்துவை முழுதும் அறியவல்லார் அல்லர். இது தத்துவம்,

    அகண்டாகாரமாகிய சிவம், மூவர்க்கும் (பிரம்மா, விஷ்ணு, ருத்திரன்) முழுமுதலாயிருக்கிறான் என்றும், மூவரால் அறியப் படாதவன் என்றும் ஏழு தடவை திருவாசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது, இக்கூற்று தத்துவத்துக்கு ஒத்தது.

    இனி, முக்கோணம் ஒன்றுக்கு மூன்று கோணங்களும் இன்றியமையாதவைகள். அங்ஙனம் இயற்கையின் நடைமுறை ஒவ்வொன்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. ஆதலால் மும்மூர்த்திகளும் சம அந்தஸ்துப் பெறுகின்றனர். அது இயற்கையின் நியதி. ஆனால் மாணிக்கவாசகர் அயனையும், அரியையும் செருக்குற்ற சிறு தெய்வங்களாகவும் திருவாசகத்தில் வகைப்படுத்துகிறார். கரிக்குருவிக்குக் கடவுள் கிருபை செய்தார்; அரக்கி மண்டோதரிக்கு அனுக்கிரகம் செய்தார். ஆனால் தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.”

    - திருவாசகம் (பக் 92-93), இராமகிருஷ்ண தபோவனம் வெளியீடு, திருப்பராய்த்துறை – திருச்சி மாவட்டம்.

  10. Vidya Nithi on January 20, 2010 at 11:31 pm

    வாதம் என்று வந்துவிட்டாலே அதற்கு முடிவு கிடையாது. நமது அகங்காரம் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தடுத்துவிடும். தொடர்ந்து வீண் விதண்டாவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்காக எதை எதையோவெல்லாம் தேடிப்பிடித்து வாதத்திற்கு வலிமை சேர்ப்போம். இம்மாதிரி கட்டுரைகளால் என்ன பயன்? வைணவர் சைவராகிடமாடார். சைவரும் வைணவராகிடப் போவதில்லை. தமிழ் ஹிந்து என்பது ஒருதலைப் பட்சமானது என்று கருதி இந்த வலைப் பக்கம் வராமல் ஒதுங்கிப் போவதற்கு மட்டும்தான் உதவிடும். சைவமும் வைணவமும் ஹிந்து சனாதன தர்மத்தின் இரு கண்கள். சைவர்கள் நல்ல சைவர்களாக இருக்கட்டும். வைணவர்களும் தங்கள் சம்பிரதாயத்தை கடைபிடிக்கட்டும். இரு சமயங்களிலும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பொதுவான நல்ல விஷயங்களைச் சொல்வதற்கே நமது ஆயுள் போதாது. ஒரு சமயத்தை சிறுமைப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதைகளை சொல்லி வாதம் செய்வதால் ஹிந்து ஒற்றுமைக்கு உதவுமா? ஹிந்து ஒற்றுமை ஏற்படவேண்டும் என்று உண்மையிலேயே தாங்கள் கருதுவீர்களானால் எதிர் காலத்தில் இது போன்ற படைப்புகள் வெளியிடுவதை தவிர்க்கவும்.

    வித்யா நிதி

  11. திருச்சிக் காரன் on January 20, 2010 at 11:55 pm

    பார்வ‌தி தேவியார் விஷ்ணுவின் ச‌கோத‌ரி என்றும், விஷ்ணுவான‌வ‌ர் பார்வ‌திக்கும் சிவ‌னுக்கும் திரும‌ண‌ம் செய்து வைத்த‌தாக‌வும் கேள்விப் ப‌டுகிறோம். அவ‌ர்க‌ள் சேர்ந்துதான் இருக்கிரார்க‌ள்.

    சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இருந்த பிணக்கு முதிர்ச்சி இல்லாத சிந்தனையால் உருவானதே, அது தேவை இல்லாதது என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்து, இப்போது சிவா விஷ்ணு கோவில், ரஜினி ராஜா கோவில் என ஒரே கோவிலாக உள்ள கோவில்களே இப்போது அதிகமாக உருவாக்கப் படுகின்றன.

    இந்து ம‌த‌த்திலே எண்ண‌ற்ற‌ பிரிவுக‌ள் உண்டு. அவைக‌ளின் த‌னித்துவ‌ம் அப்ப‌டியே இருக்க‌ட்டும். ஆனால் எல்லா இந்துக்க‌ளுக்கும் அடிப்ப‌டைக‌ள் ஒன்றுதான். ம‌ன‌ முதிர்ச்சியோடு சிந்திக்க‌ வேண்டும்.

  12. திருச்சிக் காரன் on January 21, 2010 at 10:07 am

    இந்து ம‌த‌ம் ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலான‌து. ப‌குத்த‌றிவும், ந‌ம்பிக்கையும் இந்து ம‌த‌த்திலே க‌ல‌ந்து உள்ள‌ன.

    ந‌ம்பிக்கையை வீட்டிலே பெற்றோர்க‌ள், தாத்தா, பாட்டி, உற‌வின‌ர், ச‌மூக‌ குரு ஆகியோர் சொல்லித் த‌ருகின்ற‌ன‌ர். அப்ப‌டி சொல்லித் த‌ரும்போது அதிலே ப‌ழைய‌ பஞ்சாங்க‌ வெறுப்புக் க‌ருத்துக்க‌ளும் க‌லந்து விடுகின்ற‌ன‌.

    ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலான‌ இந்து ம‌‌த‌த்தை நாம் உப‌ நிட‌த‌ங்க‌ள், கீதை ஆகிய‌வ‌ற்றை ப‌டிப்ப‌த‌ன் மூல‌மும் சுவாமி விவேகான‌ந்த‌ர், தியாக‌ராச‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர்,புத்த‌ர், அப்ப‌ர்… இப்ப‌டி ப‌ல‌ர் மூல‌ம் அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ நிலையிலேயே இருக்கிரோம்.

    சிர‌ம‌ப் ப‌ட்டாலும் ப‌குத்த‌றிவு முறையை க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். சுவாமி விவேகான‌ந்த‌ர் போல‌ க‌ட‌வுள் இருக்கிறாரா என்று பார்க்க‌ முய‌லுங்க‌ள்.

    அப்ப‌டி பார்த்த‌ பின், க‌ட‌வுள் இருக்கிறாரா, உருவ‌ம் இருக்கிறதா, அவ‌ர் க‌றுப்பா‌, சிவப்பா, காளி யாக‌ இருக்கிறாரா, விஷ்ணுவாக‌ இருக்கிறாரா, சிவ‌னாக‌ இருக்கிறாரா, எல்லாமுமாக‌ இருக்கிறாரா, அடியா, முடியா என்ப‌து எல்லாம் அப்போது தெரியும்.

    உல‌கிலே யே ச‌கிப்புத் த‌ன்மை அதிக‌ம் உள்ள‌ ம‌த‌மாக‌ இந்து ம‌த‌ம் கருத‌ப் ப‌டுகிற‌து. ச‌கிப்புத் த‌ன்மை, எல்லா க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்கும் த‌ன்மை, ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ஏற்றுக் கொள்வ‌து இவை இந்து ம‌த‌த்தின் முக்கிய‌க் க‌ருத்துக்க‌ள்.

    சைவ‌ர்க‌ள் விஷ்ணுவை வ‌ணங்குவ‌து அவ‌ர்க‌ளின் பெருந்த‌ன்மையைக் காட்டும். வைண‌வர்க‌ள் சிவ‌னை வ‌ணங்குவ‌து அவ‌ர்க‌ளின் பெருந்த‌ன்மையைக் காட்டும். யாரையும் நான் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை.

    இல்லை ஒரு க‌ட‌வுள் … சிவ‌னைத் த‌விர‌…..

    அல்ல‌து

    இல்லை ஒரு க‌ட‌வுள்… விஷ்ணுவைத் த‌விர‌ ….

    என்று யாராவ‌து சொன்னால்

    அது கிட்ட‌த் த‌ட்ட‌ இல்லை ஒரு க‌ட‌வுள் அல்லாவினைத் த‌விர‌ என்கிற‌ ரேஞ்சிலே கொண்டு போய் விடாதா என்று தாழ்மையுட‌ன் தெரிவிக்கிரேன்.

    எந்த‌ அளவுக்கு வெறுப்பில்லாம‌ல் – ‍ அத்வேஷ்டா – வாக‌ இருக்கிரானோ அந்த‌ அளவுக்கு அவ‌ன் சிற‌ந்த‌ இந்து.

    இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?
    தியாக‌ராச‌ர் “மாற‌ வைரி ர‌ம‌ணீ ம‌ஞ்சுபாஷிணி” என்று பாடவில்லையா?

    ஆயிர‌ம் பிர‌ச்சினை இருக்கும் போது, கிட‌ப்ப‌து கிட‌க்க‌ட்டும், கிழ‌வியை தூக்கி ம‌னையில் வை, என்ப‌து போல‌ வெட்டி ச‌ண்டை தேவையா?

  13. ram on January 21, 2010 at 11:03 am

    நண்பர்களே, அடிமுடி தேடிய கதை இந்த ப்ரபஞ்சம் எல்லையற்றது என்பதை புரியவைக்க, ‘infinitive’ என்பதை எளிதாக மனதில் பதிய வைக்க சொன்ன கதை. அதை ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்து மத கதைகளை அது சொல்லவரும் கருத்தை கொண்டு ஆராய்வதே நல்லது.

  14. RAMA on January 21, 2010 at 11:08 am

    Vidhya Nithi, I agree with you. Tamil Hindu should avoid similar articles in future. What we do not need at this time is division among ourselves..

  15. ஜடாயு on January 21, 2010 at 1:11 pm

    // Tamil Hindu should avoid similar articles in future. What we do not need at this time is division among ourselves.. //

    நண்பர்களே, இது ஒரு வித எஸ்கேபிஸ பார்வை என்பது என் தாழ்மையான எண்ணம்.

    எந்த இந்து சமயப் பிரிவையும் அவதூறு செய்தல் கூடாது, அது மிக முக்கியம்.
    ஆனால் இத்தகைய புராணக் கதைகள் எப்படி அணுகப்பட வேண்டும், அவற்றுக்குப் பின் உள்ள தத்துவ சிந்தனைகள் என்ன என்பதையெல்லாம் தமிழ்ஹிந்து போன்ற தளங்களில் எழுதாமல் வேறெங்கு எழுத முடியும்?

    இந்து விரோதிகள் இவற்றை தவறான நோக்கில் விமர்சித்து, இந்துமதத்துக்குள் சண்டைகள் உண்டு என்பார்கள். அதீத சைவ/வைணவப் பற்றாளர்கள் தங்கள் சமயப் பிரிவின் பார்வையையே மையமாகக் கொண்டு விமர்சிப்பார்கள். எனவே இந்து ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு கொண்டு நடுநிலைமையுடன் சிந்திக்கும் அறிஞர்களே இதைப் பற்றிய சரியான விளக்கங்களைக் கொடுக்க முடியும். அத்தகைய விளக்கங்கள் நமக்குக் கட்டாயம் தேவை. அவை யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

    ஒரு உதாரணமாக சுவாமி சித்பவானந்தரின் கருத்தை இதற்கு முந்தையை மறுமொழிகளில் தந்திருக்கிறேன்.

    சாதியைப் பற்றிப் பேசுவது வேற்றுமைகளை வளர்க்கும் என்பதால் அதைப் பற்றி நாம் பேசாமல் இருந்து விடுகிறோமா? அதைப் பற்றிய ஒரு நடுநிலைமை கொண்ட இந்துப் பார்வையை உருவாக்கிக் கொண்டுவரவே முயல்கிறோம், இல்லையா?

  16. Sarang on January 21, 2010 at 5:19 pm

    //இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?

    யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? சிவனா விஷ்ணுவா இல்லை ஏசுவா என்ற எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இதை சொல்கிறேன்

    நாம் எப்பொழுதுமே தகுந்த முன்னோர்கலளால் எடுக்கப்பட்ட மேற்கோள்களை மட்டுமே எடுக்க வேண்டும்

    ராமர் சமுத்ரா அரசனிடம் சரணாகதி பண்ணுகிறார், சுக்ரிவனுக்கு பனி செய்கிறேன் என்கிறார் – இதெல்லாம் ராமாயணத்தில் உண்மையில் இடம் பெறுகின்றன

    இந்த லிங்க பிரதிச்டைக்கு ஆதாரம் கிடையாது – இது மூலமான வால்மீகி ராமாயனத்திலும் இல்லை, அதற்கு அடுத்து கூறப்படும் கம்ப ராமாயனத்திலும் இல்லை

    லிங்க பிரதிஷ்டை முதலில் கையாண்டவர் துளசி தாசரே – அவர் அத்வாததின் சிறப்பை சொல்வதற்காக இந்த கதையை அனுபவ பூர்வமாகவே சேர்த்திருக்க வேண்டும் . துளசி ராமாயணம் வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை எற்படுதியடாலேயே தொலைகாட்சியில் வரும் ராமாயணத்தில் இந்த லிங்க பிரதிஷ்டை இடம் பெறுகிறது.

    பரதனோ சிறை வாசம் முடிந்து ராமன் வர ஒரு நாள் தாமதமானாலும் உயிர் துறப்பேன் என்கிறான் – அப்படி இருக்க ராமர் குபேரனின் விமானத்திலே அவசரமாக அயோத்தி புரபடுகிறார் – இந்த சமயத்தில் அவருக்கு ராமசெஸ்வரத்தில் இறங்கி லிங்க பிரதிஷ்டை செய்ய ஏது நேரம்

    அதுவும் இல்லாமல் ராவண வாதம் முடிந்த பின் – வானவர், பிரம்ம, சிவன் எல்லோரும் காட்சி தந்து மலர் தூவுகிறார்கள் – ராமர் சிவனுக்கு அங்கேயே தனது வணக்கத்தை தெருவித்து இருக்கலாமே – காலம் தாழ்த்தி ஏன் அதை எங்கோ ராமேஸ்வரம் சென்று செய்ய வேண்டும் – சிவனே நேராக வந்த பின் லிங்க பிரதிஷ்டை செய்வானேன். அது போர்க்களம் சீத தேவியுடன் செய்யவேண்டும் என்பதாலே லிங்க பிரதிஷ்டை என்று நீங்கள் கூறலாம் – அது அப்படி கூற முடியாது – ஏன் என்றால் அன்னாருக்கு எல்லாமே ராமன் தான் – ராமனை தவிர மர்ரவர யாரையும் அவள் தலை வணங்காது – கற்புக்கு அரசியான அவள் அந்த சக்தியாலேயே ராவணனை பஸ்பம் செய்திருக்க முடியும் – ஆனால் அவள் தன்னை ராமன் அன்றி வேறு யாரு காப்பாற்ற கூடாது என்பதில் உறுதியாக இருந்தால், சத்த சர்வ காலமும் ராம ராம என்றே இருந்தாலே தவிர, விஷ்ணுவே, சக்தியே, சிவனே என்னை காப்பாற்றுங்கள் என்று அவள் ஒரு போதும் வேண்டியதில்லை

    இதை எழுதுவது முற்றிலும் உண்மை என்று கருதபடாத ஒரு மேற்கோளை நாம் தவிர்க்க வேண்டும் மற்றும் ஒரு விஷயத்தை நன்கு ஆராய்ந்து கற்ற பின்னரே மேற்கோள்களாக பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே

  17. RAMA on January 22, 2010 at 6:36 am

    My humble opinion, without trying to offend anyone
    For Shaivites, it is all Shivamayam. For Vaishvanavites, it is all Vishnumayam.When one tries to potray Shiva as the supreme Brahman,as in this story, the Vaishnavites naturally will get upset and vice versa when Vishnu is shown as the Supreme Brahman.In Gita, Bhagavan Krishna in His Vishva Rupam, shows Shiva, Vishnu and Brahma all existing in HIM. Krishna,is an Avatar of Vishnu, hence this scenario will not please simple “hardcore ? ” shivite!! He will counter it with other stories to supprt Lord Shiva’s supremacy.
    Of course we all know that Shiva and Vishnu are all one and the same, but do we need this controversy now?

  18. RAMA on January 22, 2010 at 6:53 am

    Sorry for carrying on. With due respect,the caste and divisions in our religion is really another topic and cannot be compared to this Shiva/ Vishnu supremacy.
    I am sure both groups will totally be in agreement reg evils of this caste system and there is no place for any controversy here.Let us all talk and discuss about this caste stigma in Hinduisim more and more and hopefully such discussions will be fruitful for everyone..

  19. Satish on January 22, 2010 at 10:50 am

    Its really painful and shameful to see the comments in this section.’harium sivanum onnu,ariyathavar vayil mannu’- I think people here are forgetting this. Instead of understanding the crux of the story, if we harp on such silly issues, then its no surprise, the vested interest are waiting to pounce on us. We hindus need no one from outside to destroy us, we ourselves are capable of doing this pretty soon. This is evident from the comments in this section.

    Let us unite as ‘Hindus’ and learn together, instead of fighting amoungst ourself.

  20. பாலாஜி on January 22, 2010 at 1:07 pm

    இந்த கட்டுரை நல்ல முறையிலயே எழுத பட்டிருந்தாலும், இதனால் ஏன் இவ்வளவு சர்ச்சை?? நீங்கள் முதலில் கட்டுரையை முழுவதுமாக படித்தீர்களா?? கட்டுரையின் தொடக்கத்திலயே, ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளரே:-

    //ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்.//
    (தொடக்கத்திலிருந்து ஆறாவது வரி பார்க்கவும்).

    இங்கு மறுமொழிகளை பிரசுரித்தவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க நேற்று நான் இரண்டு மணிநேரம் செலவழித்து ஒரு பெரிய கட்டுரையை எழுதினேன். ஆனால் அதை சேமிப்பதர்க்குள் ஏன் துரதிர்ஷ்டம், வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. என் வாழ்நாளில் நான் எழுதிய முதல் கட்டுரை பலனில்லாமல் போனது! சரி, இப்பொழுது இன்னொரு கட்டுரையை என்னால் எழுத முடியவில்லை. அதனால், அதிலிருந்த முக்கியமான விஷயங்களை மட்டும் இங்கு மறுமொழியாக பிரசுரிக்கிறேன். பிரம்ம படைக்கிறார், விஷ்ணு காக்கிறார், சிவன் அழிக்கிறார். இதில் எந்த தொழிலும் மற்றொன்றிற்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை! படைத்தல், காத்தல் இரண்டுமே ஒருசேர நடக்கும். ஆனால், இவை இரண்டும் சற்று நின்றால்தான் அழிவு (பிரளயம்) வரமுடியும். அதனால்தானோ என்னவோ, இங்கு சிவன் பிரம்மா, விஷ்ணு இருவரையும் சிவன் வென்றதாக காட்டப்பட்டுள்ளது. அதாவது, படைத்தல், காத்தல் இரண்டும் சற்றுநேரம் நின்றுபோக பிரளயம் வந்திருக்கவேண்டும். இதனால், பிரம்மாவும் விஷ்ணுவும் தாழ்ந்தவர்கள், சிவன் உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளக்கூடாது! அதேபோலத்தான், சிவன் சரபேஸ்வரராக நரசிம்மரை வென்றதாக சொல்லப்படும் கதையும். நரசிம்ம அவதாரம் நடந்தது கிருத யுகத்தின் முடிவில், எனவே அப்பொழுது ஒரு பிரளயம் வந்திருக்க வேண்டும். எனவே, இங்கு படைத்தல் நின்று அழித்தல் நடந்தது என்பதை குறிப்பதே, சரபேஸ்வரர் நரசிம்மரை சாந்தப்படுத்தியதாக சொல்லப்படும் வரலாறும். (இக்கதை வெறும் ‘தாமச’ புராணங்களில் மட்டுமில்லை, மாறாக அதர்வவேதத்தில் வரும் சரப உபநிஷத்திலும் உள்ளது). இதனால், சரபேஸ்வரர் நரசிம்மரை விட பெரியவர் என்று சொன்னால் அது மதியீனம். ஏனெனில், இன்று நரசிம்மருக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான ஆலயங்களை பார்க்கும்போது, சரபேஸ்வரருக்கு மூன்று ஆலயங்களே உள்ளன. அதனால், இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்றும் பொருளில்லை, இக்கதை நடக்கவே இல்லை என்றும் பொருளில்லை. நாம் புரிந்து கொண்டது தவறு என்பதே சரி!

    சரி, இதே போல ஸ்ரீமத் பாகவதத்தில் (8.12) விஷ்ணுவின் மோகினி உருவத்தைப்பார்த்து சிவன் மயங்கினார் என்றால், சிவன் புலனை அடக்காதவர், எனவே காமவயப்பட்டார் என்று பொருள் கொள்ளுதல் தவறானது! எல்லாம் ஒரு காரண காரியத்துடன் தான் நடக்கிறது. தேவயில்லாமலா விஷ்ணு மோகினி உருவெடுத்தார்? தேவயில்லாமலா, சிவன் அவருடன் சேர்ந்தார்? அப்படி ஆனால்தான் அவர்கள் மூலம் பிறக்கும் ஹரிஹரபுத்திரன் (ஐயப்பன்) மூலம் அரக்கியான மகிஷி சம்மாரம் செய்யப்பட முடியும். இக்கதை பாகவதத்தில் இல்லை, ஆனால் இது இந்து மரபு, நம்பிக்கை!

    பிருகு முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார்! அதனால், பிருகு விஷ்ணுவை விடப்பெரியவர் என்று சொன்னால் எப்படி? பிரிகுவிடம் விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் சாபம் பெற்றுள்ளனர். காந்தாரி கிருஷ்ணனை சபித்தால், அதனால் காந்தாரி பரமாத்மாவை விட உயர்ந்தவளா? காரணமில்லாமல், பகவான் எதையும் செய்யமாட்டான்!

    சாரங் அவர்களே, இராமபிரான் சிவனை இராவனவதத்திர்க்குப்பிறகு லிங்க பிரதிஷ்டை செய்யவில்லை, இலங்கைக்கு செல்வதற்கு முன்னாலே செய்துவிட்டார். மேலும், துளசிதாசர் வேறோருவரில்லை. அவர் வால்மீகி முனிவரின் மறுபிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே பிரம்மம் தான். படைக்கும்போது அவன் பிரம்மா, காக்கும் போது விஷ்ணு, அழிக்கும் போது சிவன். எனவே புராணங்களையும், இதிகாசங்களையும் சரியாக புரிந்துகொள்ளுதல் அவசியம்.

    முடிவாக, சிருங்கேரி பீடத்தை 1892 முதல் 1954 வரை அலங்கரித்த ஸ்ரீ சந்திரசேகரேந்திரா பாரதி சுவாமிகள் கூறி சில வரிகளை இங்கு சொல்கிறேன்:- “உங்களால், இறைவனின் பாதத்தையே பார்க்க முடியவில்லை, அவன் முகம் எப்படியிருக்கிறது என்பதை எண்ணி ஏன் சண்டைபோடவேண்டும்? ஞானம் பெறுவோம், பக்தி செய்வோம், இறைவனிடம் செல்வோம், அவன் கையில் சங்கு, சக்கரம் கதை வைத்திருந்தால் அவனை விஷ்ணு என்று வணங்குவோம், இல்லை டமரு, திரிசூலம் வைத்து ஜடாமுடியுடன் இருந்தால் அவனை சிவனாகத் தொழுவோம்..”.

    I think this is what required today, unless Hindus give up their CASTEISM AND SECTARIANISM, the Vedic/Vedantic religion will struggle!

  21. Jayasree on January 22, 2010 at 1:36 pm

    Hinduism is an ocean of hidden insights . Unless we carefully relate the stories with the respective insight, we will only end up doing what anti- Hindus are doing.

    The basic insight is that the many gods of Hinduism are not competitors to one another, but are only doing a complementary role to make the Wholesome Brahman who also exists in them as adhyaatman. If a story is handed down to us by Puaranas or Ithihasas showing a kind of rivalry or a clash of Godhood, we have to realize that there lies a deeper insight which can not be deciphered by ordinary reckoning. This story presents itself as a candidate for such decipherment

    In the story discussed above, the search should have started with what Shivarathri stands for and what really happens at the point of Time and Space on Maha shivarathri day. The pramanas for any such search or decipherment are clearly delineated by all acharyas as the ‘Prasthana thrayam’ – the three gems called Brahma sutras, Upanishads and Bhagawad Gita. When researched in that way, we will find a fantastic insight of a cosmic scene behind this story which neither throws poor light on other Gods nor show it as a kind of Superiority of one deity. It just puts in perspective how the different gods have their portfolios at their disposal.

    I wish to write that insight in this dot com if the editors permit me.

  22. திருச்சிக் காரன் on January 22, 2010 at 2:21 pm

    வால்மீகி இராமாய‌ண‌த்தில் இராம‌ர் சிவ‌னை வ‌ழிப‌ட்ட்து உண்டா இலையா என்ப‌தை வால்மீகி இராமாய‌ண‌த்தை முழுதும் க‌ற்ற‌ ந‌டு நிலையான‌ சான்றோர் சில‌ர் உறுதி செய்தாலே ஒப்ப‌ இய‌லும்.

    தொலைக் காட்சி இந்தியாவிற்க்கு வ‌ரும் முன் வெளியான‌ நூல்க‌ளிலேயே இராம‌ர் சீதை இருவ‌ரும் ம‌ண‌ல் வைத்து லிங்க‌ம் செய்து பூச‌னை செய்வ‌து வெளியாகி உள்ள‌து.

    நான் இராம‌ய‌ண‌ கால‌ க‌ட்ட‌த்திலே வாழ‌வில்லை. என‌வே இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்தார் என்ப‌து உண்மையா என‌ அடித்து சொல்ல‌ என்னால் இய‌லாது. என்னவோ தான் இராம‌ருட‌ன் சேர்ந்து இல‌ங்கையில் அயோத்திக்கு வ‌ந்த‌து போல‌வும், ஒரு நிமிட‌ம் கூட‌ விடாம‌ல் கூட‌ ‌ இருந்து பார்த்த‌து போல‌வும், இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்ய‌வில்லை என‌ சொல்வ‌து ச‌ரியா? சீதாம்மாவை இதில் இழுப்ப‌து தேவை இல்லாத‌து. தெய்வ‌ம் தொழாள் கொழுன‌ன் தொழுவாள் பெய்யென‌ப் பெய்யும் ம‌ழை என‌ப‌து வ‌ள்ளுவ‌ர் வாக்கு.

    சாதி வெறி, ம‌த‌ வெறியில் இருந்து ச‌மூக‌த்தைக் காப்ப‌து க‌டின‌மான‌ செய‌ல் தான். முள்ளிலே விழுந்த‌ சேலையை எடுப்ப‌து போன்ற‌து.

  23. திருச்சிக் காரன் on January 22, 2010 at 2:29 pm

    இராமர் ந‌ல்ல‌வ‌ர், ம‌ற்றவ‌ர் ம‌கிழ்ச்சிக்காக‌ தான் துன்ப‌ம் அனுப‌வித்த‌வ‌ர், ம‌த‌வெறி இல்லாத‌வ‌ர், வெறுப்புக் க‌ருத்து இல்ல‌த‌வ‌ர், தியாகி – இதைக் காட்ட‌வே இராம‌ர் சிவ‌னை வ‌ண‌ங்கினார் என்று எழுதினோம்.

    ம‌னித‌ரிலும் இராம‌னுக்கு ச‌மான‌ம் இல்லை, இறைவ‌னிலும் இராம‌னுக்கு ச‌மான‌ம் இல்லை‍ என்றே புல‌வ‌ர்க‌ள் பாடி உள்ள‌ன‌ர்.

  24. வித்யா நிதி on January 22, 2010 at 5:29 pm

    ஹிந்து ஒற்றுமைக்காக துவங்கப்பட்ட இந்த தளத்தில் தற்போது சைவ, வைணவ மதத்தினரிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பதிலுக்கு விளக்கம் அந்த விளக்கத்திற்கு ஒரு விளக்கம் அதற்கு ஒரு மறு விளக்கம் என்று இக்கட்டுரையில் எழுதியுள்ள அடிமுடி தேடிய கதையாக முடிவில்லாமல் சென்று கொண்டுதான் இருக்கும். இம்மாதிரி கட்டுரைகளால் மேலும் மேலும் வீண் வெட்டி விவாதங்களும், இறுதியில் மனக்கசப்பு உருவாகி ஹிந்து சிந்தனையை பின்னுக்குத் தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது.

    இன்றுகூட நமது நாட்டில் ஹிந்து என்கிற உணர்வை விட ஜாதி மற்றும் மத உணர்வு(சைவ , வைணவ ) அதிகம். ஹிந்து உணர்வைவிட இவைகள் அதிக சக்தி வாய்ந்தவை. எனவே அந்த விஷயத்தினை நாம் மிகுந்த கவனத்துடன்தான் அணுகிட வேண்டும். ஹிந்து என்பதை விட தாங்கள் கடைபிடிக்கின்ற மத சம்பிரதாயங்கள் முக்கியம் என்று மக்கள் கருதுவரே தவிர ஹிந்து உணர்வு என்பது அப்போது வராது. அவர்களது உணர்வு அல்லது நம்பிக்கை தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதற்காக வாதாடதான் தோன்றுமே தவிர நீங்கள் சொல்கின்ற ஹிந்து சிந்தனையுடன் ஒத்துப்போக இயலாது.

    எனவே ஹிந்து ஒற்றுமைப் பணியில் ஈடுபடுபவர்கள் சிலவற்றை பற்றி பேசிடவே கூடாது. கடும் பத்தியங்களைக் கடைபிடித்திட வேண்டும். உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளை சற்று தள்ளி வைத்து விட்டு வேலை செய்தால் தான் ஹிந்து ஒற்றுமை என்பது சாத்தியமாகும். அப்போது மட்டுமே நமது முயற்சிகளும் பலனளிக்கும்.

    வித்யா நிதி

    (edited and published)

  25. Sarang on January 22, 2010 at 5:34 pm

    அனைவருக்கும்

    நான் யார் பெரியவர் என்ற விவாதத்திற்கே வரவில்லை அது வீணான ஒரு செயல் என்று நன்கு உபதேசம் பெற்றவன் – எனக்கு அன்னுடைய ஆச்சார்யர் சொன்ன உபதேசம் “Woship yours Respect others”

    நாம் நமது இஷ்டம் போல மேற்கோள்கள் காட்ட வேண்டாம் – நன்கு ஆராய்ந்த பின்னரே காட்ட வேண்டும் என்ற எனது தாழ்மையான கருத்தை தானே சொன்னேன்

    //வால்மீகி இராமாய‌ண‌த்தில் இராம‌ர் சிவ‌னை வ‌ழிப‌ட்ட்து உண்டா இலையா என்ப‌தை வால்மீகி இராமாய‌ண‌த்தை முழுதும் க‌ற்ற‌ ந‌டு நிலையான‌ சான்றோர் சில‌ர் உறுதி செய்தாலே ஒப்ப‌ இய‌லும்.
    //

    அப்போது நீங்கள் முழுவதுமாக கற்று நடுநிலையில் இருந்து தான் ராமர் சிவனை வழிபட்டார் என்று சொன்னீர்களா

    நான் ஒன்னும் சும்மா என் இழ்டம் போல சொல்லவில்லை – நீங்கள் சொல்வது போல் ராமாயணத்தில் மிக தேர்ச்சி பெற்றவரிடம் கேட்டுதான் சொல்கிறேன்

    //
    நான் இராம‌ய‌ண‌ கால‌ க‌ட்ட‌த்திலே வாழ‌வில்லை. என‌வே இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்தார் என்ப‌து உண்மையா என‌ அடித்து சொல்ல‌ என்னால் இய‌லாது. என்னவோ தான் இராம‌ருட‌ன் சேர்ந்து இல‌ங்கையில் அயோத்திக்கு வ‌ந்த‌து போல‌வும், ஒரு நிமிட‌ம் கூட‌ விடாம‌ல் கூட‌ ‌ இருந்து பார்த்த‌து போல‌வும், இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்ய‌வில்லை என‌ சொல்வ‌து ச‌ரியா?
    //

    நீங்கள் இங்ஙனம் சொல்வது விந்தையாக உள்ளது – அப்போ ராமாயணத்தில் நடந்ததை எல்லாம் நேரில் கண்டாலே ஒழிய நான் மட்டும் ஏதும் சொல்ல கூடாதா – ஆனால் நீங்கள் மட்டும் நேரில் கண்டது போல அவர் பூஜை செய்தார் என்று அருதியிடாமல் கூறலாம் :-)

    அப்போ ராமர் இருந்தார் என்றே என்னால் மட்டும் கூற இயலாதோ? நான் ஒன்னும் கூட இருந்து பார்த்தது போல் எழுதவில்லை – வால்மீகி ராமாயணத்தில் உள்ளதை தான் எழுதினேன் – நான் நேரில் பார்த்த சாட்சி என்று எழுதவில்லை – வால்மீகியின் மனசாட்சி சொன்னதை தான் எழுதினேன் – கொஞ்சம் ராமாயண பக்கங்களை புரட்டி பாருங்கள் அப்புறம் என்னை சாடலாம் :-)

    சீதா பிராட்டியை நான் ஒன்னும் வம்புக்கு இழுக்க வில்லை – பலர் லிங்க பிரதிஷ்டை நடந்ததாக கூறுவதற்கு இதை காரணமாக கூறி உள்ளனர் அதை மறுக்கவே அந்த கருத்து சொல்லப்பட்டது

    //
    இராமர் ந‌ல்ல‌வ‌ர், ம‌ற்றவ‌ர் ம‌கிழ்ச்சிக்காக‌ தான் துன்ப‌ம் அனுப‌வித்த‌வ‌ர், ம‌த‌வெறி இல்லாத‌வ‌ர், வெறுப்புக் க‌ருத்து இல்ல‌த‌வ‌ர், தியாகி – இதைக் காட்ட‌வே இராம‌ர் சிவ‌னை வ‌ண‌ங்கினார் என்று எழுதினோம்.
    //

    இதை காட்ட ஏன் இல்லாத ஒன்றை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. என்னுடைய பதிலிலேயே ராமர் சமுத்ரராஜனிடம் சரணடைந்தான் என்றும் தானே எழுதி இருந்தேன். – இது நடந்த விழயம் (அதாவது வால்மீகி ராமாயணத்தில் உள்ள விஷயம்) – இதை படிக்காமல் விட்டுவிட்டு நான் வெறுப்பு கருது சொல்வதுபோல் கூறுவது சரி இல்லையே?

    சமுத்ர ராஜனிடம் சரண் புக காரணம் இருக்கிறது அதனால் சரண் புகுந்தான். ஆனால் லிங்க பிரதிஷ்டைக்கு சரியான காரணம் இல்லை

    அப்படி இதை நீங்களே எழுதி இருந்தால் ராமன் ஏன் பிரம்மாவையும் சிவனையும் சேர்த்து வணங்கினான் என்று எழுதவில்லை – இது இன்னும் ராமனின் பெருமையை பறைசாற்றும் அல்லவே

    //சாரங் அவர்களே, இராமபிரான் சிவனை இராவனவதத்திர்க்குப்பிறகு லிங்க பிரதிஷ்டை செய்யவில்லை, இலங்கைக்கு செல்வதற்கு முன்னாலே செய்துவிட்டார். மேலும், துளசிதாசர் வேறோருவரில்லை. அவர் வால்மீகி முனிவரின் மறுபிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது.

    இல்லை – அவர் இலங்கை செல்லும் முன் சமுத்ரா ராஜனிடம் மட்டும் தான் சரணாகதி அடைந்தார்

    ராமர் சிவலிங்க பிரதிஷ்டை செய்ததாக சொல்வதற்கு பிணயபடும் இன்னொரு காரணம் அவர் பிராமணனாகிய ராவணனை கொன்றார் அதனால் அவருக்கு பிரம்மஹதி தோஷம் ஏற்பட்டது அதனால் அவர் சிவா லிங்க பிரதிஷ்டை செய்தார் என்று – இங்ஙனம் இருக்க ராவணனை கொல்வதற்கு முன்னமே அவருக்கு எவ்வாறு தோஷம் ஏற்படும்

    துளசிதாசர் வால்மீக்யின் மருபிரப்பகவே இருப்பினும் – ராமாயணத்தை பொருத்தமட்டில் வால்மீகி ராமாயணமே மூலம் அதில் சொன்னதே முடிவு அதில் மற்றம் இருக்க முடியாது

    சபரி தான் உண்ட பழத்தை ராமனுக்கு தந்ததாக உள்ளது துளசி ராமனத்தில் மட்டும் தான் – வால்மீகி ராமாயணத்தில் இல்லை

    ராவணன் சீதா பிராட்டியை தூக்கி சென்றான் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் பிரசித்தம் ஆனால் கம்பரோ கர்புஅடைய என் அன்னையை அவ்வாறு சித்தரித்தலாகத்து என்று ராவணன் சீத பிரட்டி இருந்த கூரையுடன் தூக்கி சென்றான் என்றே சொன்னார்

    இப்படி பல வித்யாசங்கள் உண்டு – எது எப்படி இருப்பினும் வால்மீகி ராமாயணமே மூலம்

    //
    பிருகு முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார்! அதனால், பிருகு விஷ்ணுவை விடப்பெரியவர் என்று சொன்னால் எப்படி? பிரிகுவிடம் விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் சாபம் பெற்றுள்ளனர். காந்தாரி கிருஷ்ணனை சபித்தால், அதனால் காந்தாரி பரமாத்மாவை விட உயர்ந்தவளா? காரணமில்லாமல், பகவான் எதையும் செய்யமாட்டான்
    //

    இன்னும் எத்தனையோ உள்ளன – பகவானை இருந்த போதிலும் சாந்திபிணி மகாரிஷ்யிடம் பாடம் கற்றான் – அவருக்கு பணிவிடை செய்தான் – சுதாமாவை அண்ணா என்று அழைத்து சிரம பரிஹாரம் செய்தான் – அவர் உறங்கும் பொது கால் அமுக்கி விட்டான்

    அய்யா இதெற்கெல்லாம் சரியான மூலம் (பிரமாணம்) இருக்கிறது அதனால் இதை நம்பலாம் – ஆனால் லிங்கப்ரதிஷ்டைக்கு இல்லை – விஷயம் அவ்வளவே

    நீங்கலாக ஏன் நான் விஷ்ணு மட்டுமே உயர்ந்தவர் என்று என்னுவடாக கொள்ள வேண்டும் – நான் அப்படி எங்குமே கூற வில்லையே – மறுபடியும் எனது பதிலை படித்து பாருங்கள்

  26. Sarang on January 22, 2010 at 5:46 pm

    //
    Its really painful and shameful to see the comments in this section.’harium sivanum onnu,ariyathavar vayil mannu’- I think people here are forgetting this. Instead of understanding the crux of the story, if we harp on such silly issues, then its no surprise, the vested interest are waiting to pounce on us
    //

    Dear satish – none here in their replies have claimed that only Siva is supreme or VIshnu is supreme. the discussion is over the purport of the story and authenticity of the references and the way it has been rendered

    //
    பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர்.
    //
    read these lines – this is the inference of the author – i was only surprised why we are brining in Bramha and Vishnu to deliver the crux. All of us understand the crux. I am only writing to curb giving examples that can be misleading, Please read my first post on this subject

    //திரு ராமன் அவர்களே

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

    மேலோட்டமாக பார்கிறோமோ ஆழமாக பார்கிறோமோ இது போன்ற கட்டுரைகள் மற்ற மதத்தினர் நம்மை எள்ளி நகையாடவே வைக்கும் – விஷ்ணுவும் பிரம்மாவும் அகந்தை உற்றனர் – இது தான் ஹிந்து கடவுள்களின் அழகு என்றல்லவா எண்ணுவார்கள்
    //

    My only intent is – never ever show our devathaas – be it Indra, Rudra or Vishnu in poor light , for all of them verily being devathaas are more supreme than us

    When we put a disclaimer at the begninning of the article that the intent is not to create confusions – then why write the story in the first place – is it not known already that this story will create confusion? If so the disclaimer is of very little use.

  27. ந. உமாசங்கர் on January 22, 2010 at 9:45 pm

    ஸ்ரிகாந்த் அவர்கள் கூறுவது:
    “இந்த கதை, நாயன்மார்கள் காலத்துக்கு சற்றுமுன் புனையப் பட்டுள்ளன. [நன்றி – புத்தூர் சுதர்சனர்
    ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. ”

    இது தவறான தகவலாகும். த‌வ‌றான‌ அணுகுமுறையும் கூட‌.

    இன்றைய‌ த‌மிழ‌க‌ ஆட்சியாள‌ர்க‌ள் ஏழாம் நூற்றாண்டுக்குமுன்ன‌ர் த‌மிழ‌க‌த்தில் வினாய‌க‌ர் வ‌ழிபாடு இல்லை என்று கூறுவ‌தைப் போன்ற‌தே இதுவும்.

    இந்திய‌த்தொல்பொருள்துறையின் ஆராய்ச்சியாள‌ர்க‌ளால், 2200 ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டும் குடிம‌ல்ல‌ம் சிவ‌லிங‌க‌க் கோவில் ப‌ர‌சுராமேஷ்வ‌ர் ஆல‌ய‌ம் என்று வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இந்தக் கோவிலில் பரசுராமர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. என‌வே எல்லாவற்றையும் இடைச்செருக‌ல் என்று நாமே கூறிவிட‌முடியாது.

    கணாபத்யம், சைவ‌ம், சாக்த‌ம், வைண‌வ‌ம், கௌமார‌ம், சௌர‌ம் என்ற‌ ஆறு பிரிவின‌ரையும் உள்ளட‌க்கி ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தை ஸ்தாப‌க‌ம் செய்த‌ ஆதிச‌‌ங்க‌ரரின் குருவ‌ரிசையில் முழுமுத‌ல்குரு விஷ்ணுவே ஆவார்.

    புராணங்க‌ளில் உள்ள உட்க‌ருத்தை எடுத்துக்கொள்ள‌ வேண்டும் என்றுதான் க‌ட்டுரை ஆசிரிய‌ர் கூறுகிறார். அதைக் க‌வ‌னிக்காது பிரிவை ஏற்ப‌டுத்தும் பொருளில் ஏன் க‌வ‌ன‌ம் கொள்ள‌வேண்டும்?

    திருவ‌ண்ணாம‌லையின் த‌த்துவ‌ம் உய‌ரிய‌து. அக‌ந்தையை அழிக்க‌வேண்டும் என்ப‌தே அது. மும்மூர்த்திக‌ளில் இருவ‌ரான‌ விஷ்ணுவே ஆனாலும், பிர‌ம்ம‌னே ஆனாலும், அக‌ந்தை கூடாதென‌வே இந்நிக‌ழ்வு. அப்ப‌டியானால் த‌ன்னைப் பெரிய‌தாக‌ச் சிவ‌ன் ம‌ட்டும் காட்ட‌லாமா? அது அக‌ந்தை அல்ல‌வா என்ற‌ கேள்வி வ‌ரும‌ல்ல‌வா? அத‌னால்தான் வேறொரு புராண‌த்தால் சிவ‌பெருமான் த‌ன்னில் பாதியைச் சக்திக்குத் த‌ந்து, த‌ன்னைப் பாதியாக்கிக்கொள்கிறார்.

    (திருவண்ணாமலை தீபத்தின்போது, அர்த்தநாரிஸ்வரர் திருக்காட்சி தரும் வேளையில்தான் மலைதீபமும், மஹாதீபமும் எற்றப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். திருக்கார்த்திகைப் பெருவிழா நாயன்மார்களின் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அருணாசலப் புராணத்தின் காலம் நாயன்மார்களின் காலத்துக்கும் மிகவும் முற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.)

    அத்தோடு நில்லாது மாணிக்க‌வாச‌க‌ருக்கு அருவ‌மாய்த் தோன்றி, தாம் ஒன்றுமில்லானாக‌, சூன்ய‌னாக‌ நிற்கிறார். மூன்று, ஒன்றாகி, ஒன்றும், பாதியாகி, அந்த‌ப் பாதியும் சூன்ய‌மாகும் த‌த்துவ‌த்தின் மூல‌ம் அக‌ந்தையை இல்லாது ஆக்க‌ ந‌ம‌க்கு வ‌ழி சொல்கிறார்.

    அதும‌ட்டும‌ல்லாது, இறைத்த‌ன்மையை விஷ்ணு, பிர‌ம்மா, சிவ‌ன், பார்வ‌தி என்றெல்லாம் உருவ‌க‌ப் ப‌டுத்தாம‌ல், உருவில்லாம‌ல் காண‌வும் முடியும் என‌ மாணிக்க‌வாச‌க‌ருக்கு உணர்த்துகிறார. என‌வேதான், மாணிக்க‌வாச‌க‌ரும் தாம் க‌ட்டிய‌ திருப்பெருந்துறைக் கோவிலில், அருவ‌மாக‌வே இறைவ‌னை வ‌ழிப‌டுகிறார்.

    அத்வைத‌த்தின் அவ‌தார‌மாக‌வே திக‌ழ்ந்த ப‌க‌வான் ர‌மண‌ரும், எல்லா உயிரிலும் இறைவ‌னைக் க‌ண்டார். அக‌ந்தையை அழித்துக் க‌ந்தையை இடையில் த‌ரித்தே வாழ்ந்தார். திருட‌வந்த‌வ‌ர்க‌ளிட‌மும் அன்பு செய்தார். இன்றும் அவ‌ருக்கு ம‌ட்டும‌ன்றி, அவ‌ர‌து அன்னைக்கு ம‌ட்டும‌ன்றி, அவ‌ருட‌ன் இருந்த‌ மான், ப‌சு, நாய், காக்கை முத‌லான‌வ‌ற்றுக்கும் ச‌மாதி அமைத்து நித்ய‌ ஆராத‌னையும் செய்துவ‌ருவ‌தைக் க‌வ‌னிக்க‌வேண்டும். எல்லா உயிரிலும் இறைத்த‌ன்மையைக் காணும் இந்த‌க் கோட்பாட்டைக் க‌வ‌னித்தால், பிரிவினை க‌ண்ணில் ப‌டாது. இதைத்தான் க‌ட்டுரை ஆசிரிய‌ர் சொல்கிறார்.

    சுவாமி சித்பவான‌ந‌்த‌ரும், த‌ம்மிட‌ம் “இறைவ‌னை நீங்க‌ள் க‌ண்டிருக்கிறீர்க‌ளா?” என்று வின‌விய‌ நாத்திக‌ரிட‌ம், “இப்போது என்முன்னாலேயே இருக்கும் த‌ங்க‌ளிட‌மும் க‌ண்கிறேன்” என்று உரைத்து அக‌ந்தையை அழித்தால் அத்வைத‌ம் வெளிப்ப‌டும் என்று நிரூபித்தார்.

  28. மன்னாரு on January 22, 2010 at 11:15 pm

    //I wish to write that insight in this dot com if the editors permit me.//

    இன்னா வார்த்த ஸொல்லிக்கினீங்கம்மா? பேஜார் பண்டீங்களே…

    நீங்க எயுத ஸொல்ல ஆர்னாச்சும் வாணான்னுவாங்களா? ஸொம்மா ஸோக்கா எய்துங்க…..எய்திகினே இருங்க, அஆங்!

    வர்டா…

    மன்னாரு

  29. ந. உமாசங்கர் on January 23, 2010 at 8:36 am

    இதையும் படியுங்கள். இன்றைய காலகட்டத்தில் அத்வைதத்தின் குருவும், த்வைதத்தின் குருவும் சந்திப்பதையும், அஹங்காரத்தை அழிக்க வலியுறுத்துவதையும் கவனத்தில் கோள்ளவேண்டும்.

    http://mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=164191

  30. கந்தர்வன் on January 23, 2010 at 12:07 pm

    இங்கு அத்வைதிகளும், சைவர்களும், வைணவர்களும் அறிந்துகொண்டு உபயோகப்படவேண்டியது ஒன்று உள்ளது. “ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்தார்” என்ற கருத்து முற்றிலும் நவீனமானது, அது அவர் பண்ணிய பிரச்தான திரைய பாஷ்யங்களுக்கு விரோதமானது. “நாராயணனே, வாசுதேவனே, விஷ்ணுவே முழுமுதற் கடவுள். அவனே உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருகிறான். பிரமனுக்குள்ளும் சிவனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து படைத்தல் அழித்தலைச் செய்கிறான். பிரமன் முதல் புல் ஈறாக அனைவரும் மோக்ஷத்துக்காக காத்துக்கொண்டு கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்கள். வாசுதேவனாகிய நாராயணனோ சர்வேஸ்வரன்; அவனுக்கு கர்மத்தால் உண்டாகும் தோஷங்கள் கிடையா. மோக்ஷத்தைப் பெற விரும்பும் மனிதன் நிர்குண பிரம்ம உபாசனம் செய்யலாம்; அல்லது சகுண பிரம்மமான நாராயணனை உபாசிக்கலாம். மற்ற தெய்வங்கள் அளிக்கக்கூடிய பலன்கள் அழிவுள்ளவையே. விஷ்ணுவினுடைய பரமபதம் மட்டுமே அவன் கருணையாலே அடையப்படும் அழியாத மோக்ஷப்ராப்தி பூர்த்திபெறும் இடமாகும்.” – இக்கருத்து அவர் பண்ணிய பிரம்மசூத்ர, உபநிஷத், கீதா பாஷ்யங்களிளிருந்து விளங்கும். “பிரச்தான திரைய பாஷ்யங்கள்” என்று சொல்லப்படும் இந்நூல்களும், உபதேச சஹாச்ரி, விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம், ஆகிய நூல்கள் மட்டுமே அவர் இயற்றியவை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் இந்நூல்களுக்குத் தான் பண்டைய அத்வைதிகள் (அதாவது 13-ஆம் நூற்றாண்டு வரையிலான அத்வைத ஆசார்யர்கள்) வார்த்திகைகளும், டீகைகளும் எழுதியுள்ளனர். அத்வைதக் கொள்கையைக் கண்டித்த தவித்த, விசிஷ்டாத்வைத ஆசாரியார்களாலும் இவை மேற்கோள் எடுக்கப்பட்டவை. மேலும் இந்நூல்களில் தான் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் காணப்படா. விசிஷ்டாத்வைத மதத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகரோ, “தாத்பர்ய சந்த்ரிகையில்”, 18.66 கீதை சாரம ஸ்லோகத்தின் வ்யாக்யானத்தில், “சித்தாந்தத்தில் பல விஷயங்களைத் தவறாகக் கற்பித்த சங்கரர் முதலானோர் கூட நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர், ‘வேறு தெய்வம் நமக்குச் சரணாகதி ஆகா’ என்று அவர் கூறிய சாரார்தம் அனைவராலும் ஆதரிக்கத்தக்கது” என்று எழுதியுள்ளார்! பிற்காலத்தில், அதாவது 14, 15 – ஆம் நூற்றாண்டுகளில் வந்த சாயணர், மாதவாசாரியார் (த்வைத மத மத்வாசாரியாருடன் குழப்பவேண்டாம். Spelling-இல் உள்ள வித்தியாசத்தை கவனிக்கவும்), சங்கரானந்தர், அப்பைய தீட்சிதர், ஆகியோர் ஆதி சங்கரருடைய நூல்களுக்கு முரணாகச் சைவ மதத்தையும் அத்வைதத்தையும் ஒன்று சேர்க்க ஆரம்பித்தனர். இவர்கள் காலத்தில் இருந்தவர்களும், இவர்களுக்கும் பின் வந்தவர்கலுமே அரசியல் நோக்கத்துடன் ஆதி சங்கரர் பெயரில் விஷ்ணுவை த்வேஷிக்கும் நூல்களான சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி போன்ற பல சைவ, சாக்த, துதிநூல்களை இயற்றி, நான்கு (அல்லது ஐந்து?) மடங்களை ஸ்தாபித்து, அவைகளில் சந்திரமௌளீஸ்வர, காமாட்சி, லலிதா சஹஸ்ரநாம பூஜையையே பிரதானமாகச் செய்து வந்தனர். “சூரியனாலும் ஒளிவிடமுடியா விஷ்ணுவின் பரம பதம்” என்று கீதாபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “சூரியனைப் பரதேய்வமாக வழிபடும் சௌர மதத்தையும் ஸ்தாபித்தார்” என்றும், “உருத்திரர்க்கு வரம் அளித்து முருகனாக உருவெடுத்தார் சனத்குமார ரிஷி” என்று சூத்ரபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “கௌமார மதம் ஸ்தாபித்தார்” என்றும் கூறி வந்தனர்.

    மேற்கூறியதற்குப் பல சான்றுகள் உள்ளன. அபிநிவேஷமில்லாமல், நடுநிலை காணத் தயாராக உள்ள சைவர்களும், அத்வைத ச்மார்தர்களும் இவ்விஷயங்களை ஸ்ரீ சுதர்ஷன ஐயங்கார் என்னும் பெருந்தகையாளர் இயற்றிய “சங்கரரும் வைணவமும்” என்னும் நூலில் காணலாம். இந்நூலை http://www.maransdog.org/2009_books/Bangalore_Vishnu/Sankararum_Vainavamum_Optimized.zip என்னும் சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்துத் தெளிந்துக்கொள்ளலாம்.

    சைவர்களால் பண்ணப்பட்ட “அடி முடி தேடிய கதை”, “சிவன் சரபாமாக வந்து சிவன் நரசிம்மனை அழித்த கதை”, முதலானவை சங்க இலக்கியங்கள் எவற்றிலும் காணப்படா. மாறாக (யஜுர் வேதத்திலும் காணப்படும்) சிவன் திரிபுரம் எரித்த கதை முதலிய தொன்று தொட்டு வழங்கப்படும் கதைகளே காணப்படுகின்றன. கண்ணபிரான், இராமபிரான், வராக, நரசிம்ம, வாமன அவதாரங்கள், பலதேவர், முதலானோர் பற்றிய இராமாயண, மகாபாரதக் கதைகள் பல சங்க நூல்களிலும் உள்ளன. பரிபாடல் முதலிய நூல்களில் திருமாலே வேதத்தில் முழுமுதர்கடவுளாக ஒதப்படுபவனாகப் படிக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், பரிபாடல், பதிற்றுப்பத்து, முதலிய நூல்களிலோ ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமாலிருஞ்சோலை, திருவெஃகா (காஞ்சிபுரம்), திருவனந்தபுரம் ஆனந்தபத்மனாபச்வாமி ஆகிய கோயில்களில் விஷ்ணு (திருமால்) வழிபாடு அமோகமாக வழிபாட்டு வந்தமையைக் காணலாம். ஆக, “முல்லைநிலத் தெய்வம்” என்று தொல்காப்பியத்தில் படித்த போதிலும், முழுமுதற் கடவுளாகத் திருமாலையே ஐவகை நிலங்களில் வாழ் சங்க காலத் தமிழர்கள் வணங்கி வந்தனர் என்பது விளங்குகிறது. சங்க இலக்கியங்களில் திருமாலைத் தவிர எந்த ஒரு தெய்வமும் “அந்தணர் ஓதும் அருமறைப்போருளும் நீ” என்று பாடப்படவில்லை. எந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆசாரியார்களும் அடிமுடி தேடிய புராணக்கதைகளை ஆதரிக்கவில்லை. ஆதி சங்கரரும் புராணங்களில் பெரும்பாலும் விஷ்ணு புராணத்தை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றார்.

    இன்று “108 உபநிஷதுக்கள்” என்று வழங்கப்படும் நூல்களில் பலவற்றை 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பான எந்த ஆசாரியாராலும் கையாளப்படவில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷதுக்கள் நவீனக் கற்பனையே என்பது விளங்கும். உதாரணமாக, “108 Upanishads (http://www.celextel.org/108upanishads/)” என்று வழங்கப்பட்டு வரும் வரிசையில் உள்ள மைத்ராயணி உபநிஷத்தில், அப்பெயரைக் கொண்ட பழைய உபநிஷத்திளிருந்து வேதாந்த தேசிகரால் கையாளப்பட்ட பல வாக்கியங்கள் அப்பதிப்பில் காணப்படா. ஆனால் “ராமதீர்த்தர்” என்னும் பண்டைய அத்வைதி ஒருவரால் பாஷ்யமிடப்பட்ட நூலில் அவ்வாக்கியங்கள் உள்ளன. இவ்வுபநிஷத்தை “Edward B. Colwell” என்னும் ஆங்கிலேயர் சம்ஸ்க்ருத மூலத்துடனும், ராம தீர்த்தர் உரையுடனும், மூல ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேற்கூறிய “புதிய பதிப்புகளில் காணப்படாத” வாக்கியங்களுள் பல மும்மூர்த்திகளுள் விஷ்ணுபரத்துவத்தை உணர்த்த வந்தன. இவ்விஷயங்களிளிருந்து தெளிய வேண்டிய உண்மை என்னவென்றால், எந்த ப்ராசீன ஆசாரியாராலும் கையாலப்படாத “சரபோபநிஷத்து” என்னும் நூல் உண்மையில் உபநிஷத்தே இல்லை; நவீனக்கற்பனை என்பதே. 108-இல் எந்தெந்த உபநிஷதுக்கள் உண்மையான உபநிஷத்துக்களே என்பதை நிர்ணயிக்கும் முறை – 13 ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆச்சாரியார்கள் எடுத்துள்ளவையே உபநிஷதுக்கள்.

    மேல் எழுதப்பட்டது எந்த ஒரு சைவ, அத்வைத ச்மார்த்தரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல. மாறாக, சைவ, வைணவ, ஸ்மார்த்த, பாகுபாடில்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் மேற்கூறிய விஷயங்களை அறியவேண்டியவர்களே. உண்மைகளை மறைப்பதனால் ஹிந்து சனாதன தர்மத்திற்கு ஒரு பயனும் இல்லை. மாறாக, உண்மைகள் அனைவற்றையும் அறிந்து, அவரவர் மனப்பக்குவத்தின் படி அவரவர் தொழ விழையும் தெய்வங்களைத் தொழுது, சைவ, வைணவ, சாக்த, அத்வைத, த்வைத மதங்களில் உள்ள கொள்கை வேறுபாடுகளை நன்கறிந்து, பொதுவான நல்ல தர்மசிந்தனமான விஷயங்களை அனைவரும் பகிர்ந்துக் கொள்வதே சனாதன தர்மத்துக்கு நன்மையைத் தரவல்லது. இதற்கு மாறாக அனைத்தையும் “ஹிந்துத்துவம்” என்று ஒரே குட்டையில் போட்டு கிளரிக்குழப்புவதால், பூசல்களும் சண்டைகளும் அதிகமாகி, எதிர்கால ஹிந்துத் தலைமுறையினர் நாத்திக வழியில் சென்று விடுவார்கள். கட்டுரையாசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: எதிர்காலத்தில் இம்மாதிரிக் கட்டுரைகளை எழுதும்போது, “இக்கதை முற்றிலும் சைவ அத்வைதிகலாலேயே ஆதரிக்கப்பட்டவை; மற்ற வைணவ ஹிந்துக்கள் இம்மாதிரிக் கதைகள் அவர் மதக்கொள்கைக்கு முற்றிலும் முரணானவை. இதை இங்கு வழங்குவதற்குக் காரணம், இதற்குப் பின்னுள்ள உட்கருத்து (moral of the story) அனைவர்க்கும் ஏற்கத்தக்கது என்பதற்காகவே” என்பது போன்ற disclaimers-ஐ எழுதினால் உசிதம்.

    References:

    (1) “ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்” ஆசிரியர் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் (அட்வகேட்) அவர்கள் இயற்றிய “சங்கரரும் வைணவமும்”, “விஷ்ணுசித்த விஜயம்”, “சங்ககாலத் தமிழர் சமையமே கம்பனின் சமையமும்” எனும் நூல்கள்.

    (2) Bhagavad Gita, with the commentary of Shankaracharya, A. Mahadeva Sastri: “http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up” என்ற சுட்டியில் இதை இலவசமாகப் படிக்கலாம். முக்கியமாகக் கானவேண்டியவை: அவதரிகை அத்தியாயம் முழுவதும், மற்றும் ஆதி சங்கரர் பண்ணியுள்ள பின்வரும் ச்லோகங்களுக்கான உரை: அத்தியாயம் 13 ஸ்லோகம் 10, அத்தியாயம் 6 ஸ்லோகம் 47; 9.23, 9.24, 9.25; 8.16; 7.17-7.23; 18.56; 2.51; 11.43; 10.2, 10.8 (10.2-இல் சங்கரர் “தேவதைகள்- அதாவது பிரமன் முதலானோராலும் அறியப்படாதவன்” என்று எழுதியுள்ளார். இதை “Gita Supersite 2.0″ என்னும் வலைதளத்தில் காணலாம். ஏனோ இது A. Mahadeva Sastri அவர்களின் புத்தகத்தில் விடப்பட்டுள்ளது).

    (3) மைத்ராயனீய உபநிஷத்து ராமதீர்த்தர் உரையுடன், E. Colwell மொழிபெயர்ப்புடன் – Bibliotheca Indica, Issue 951 – http://www.archive.org/stream/maitriormaitrya00cowegoog#page/n13/mode/1up . அத்தியாயம் 6-இல் உள்ள 38-ஆவது ஸ்லோக வாக்கியங்கள், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், ராம தீர்த்தர் உரையையும் காண்க. நன்றி: “விஷ்ணுசித்த விஜயம்” (“சுதர்சனம்” கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இயற்றியது).

    (4) பரிபாடல் – இதை http://tamilvu.org/library/libindex.htm எனும் சுட்டியில் உரையுடன் காணலாம். (Font Installation தேவை).

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.