முகப்பு » இந்து மத விளக்கங்கள், இலக்கியம், கம்பராமாயணம்

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

January 28, 2010
-  
அச்சிட அச்சிட

அன்று மிதிலையின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக ஆகப் போகிறது.

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்.

பொழுது புலரத் தொடங்குகிறது. அதைக் கம்பன் இப்படி விவரிக்கிறான் -

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம்
மயல் உழந்து, தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக யா-
னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான்.
(மிதிலைக் காட்சிப் படலம், 150)

[ததையும் மலர்த் தார் அண்ணல் – மலர்கள் அடர்ந்த மாலையணிந்த இராமன்; மயல் உழந்து – மயங்கி; தளரும் ஏல்வை – தளரும் காலத்தில்; செய்ய வெய்யோன் – இளஞ்சிவப்பாக எழும் சூரியன்; புகர்முக யானை – புள்ளிகளுடைய முகத்தயுடைய யானை; உரிவை – உரித்த தோல்; நுதல் – நெற்றி]

இருளைக் கிழித்துக் கொண்டு உதயகிரி மீது இளஞ்சூரியன் எழுகிறான். அது எப்படியிருக்கிறது? புதையிருள் வடிவம் கொண்ட கரிய யானையின் (கஜாசுரனின்) தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்ட மாமலையாகிய மகாதேவனின் நெற்றிக் கண் திறப்பது போல் இருக்கிறதாம்!

சுடரோன் எழுந்து விட்டான். அவனது கதிர்கள் நாற்புறமும் பரவுகின்றன. அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர, வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(மிதிலைக் காட்சிப் படலம், 153).

[மறை – வேதம்; கின்னரர்கள் - குதிரை முகமும் மனித உடலும் கொண்டு பறந்து கொண்டே இசை பாடும் தேவ வர்க்கத்தினர்; வேலை – கடல்; மண்ணும் மணி முழவு – மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட அழகிய மிருதங்கம்; வாள் இரவி – ஒளி பொருந்திய சூரியன்; கண்ணுதல் வானவன் – நெற்றிக் கண்ணுடைய சிவபிரான்]

ravivarma_rama_breaking_bowதேவரும், முனிவரும், மனிதரும் புகழ்ந்தேத்த, ஆர்ப்பரிக்கும் அலைகடலே மிருதங்கமாக ஒலிக்க, அந்த வான் அரங்கில் சிவ நடனம் நிகழ்கிறது. ஆடும் கூத்தனின் செஞ்சடை விரிவது போன்று கதிர்கள் விரிந்து உலகனைத்தையும் தீண்டுகின்றன.

இப்படி, சீதா கல்யாணம் நடக்கும் அந்த சீரிய நாளின் உதயத்தை சிவனது திருக்காட்சியாகக் கம்பன் வர்ணித்திருக்கிறான். சிவதனுசை முறிக்கப் போகும் மாவீரனின் பெருமைக்கு அந்த நாளின் உதயமே கட்டியம் கூறுகிறது என்பதைக் குறிக்கத் தானோ?

சபை கூடிவிட்டது. அரசகுமாரர்களை விசுவாமித்திர முனிவர் ஜனக மகாராஜனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ”குழந்தாய் ராமா, இந்த வில்லைப் பாரேன்” (”வத்ஸ ராம, தனு: பஷ்ய” – வால்மீகி) என்று குறிப்புணர்த்துகிறார் முனிவர். முனிவரின் நினைப்பைப் புரிந்து கொண்ட இராமன் எழுகிறான். அதைக் கம்பன் பாடும் அழகு தான் என்னே!

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
“அழிந்தது வில்” என வானவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்;
(கார்முகப் படலம், 26)

[கொழுங்கனல் – கொழுந்து விட்டெரியும் தீ; முப்பகை வென்றார் – காமம், கோபம், மயக்கம் முதலாகிய மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள்]

வேள்வியின் முடிவில் பூர்ணாகுதியாக சொரிந்த நெய் முழுதும் வழிய, வேள்வித் தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு விண்ணை நோக்கி எழுவது போல, இராமன் எழுந்தானாம்! கார்மேக வண்ணனைத் தீவண்ணனாக இங்கே கவி சித்தரிக்கிறார். (”செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே” – அப்பர் தேவாரம்)

இந்த உவமை மிகவும் அழகானது. வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி என்ற சொல் அதிலிருந்து வருகிறது. தெய்வீக சங்கல்பமே இச்சையாக மாறி வேள்வியாக உருக்கொள்கிறது. வேள்வியின் விளைவான பலன் நெருங்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் தீ எழுவது போன்று, சீதா ராமர் திருமணம் நடக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பத்தின் உருவாக ராமன் வில்லுடைக்க எழுகிறான்.

சூரிய, சந்திரரை திருமாலின் கண்களாகக் கூறுவது மரபு. ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்பது திருப்பாவை. அதே போன்று சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றையும் சிவனது முக்கண்களாகக் கூறுவார்கள். மூன்றாவதாகிய நெற்றிக் கண் அக்னி வடிவானது. நாளின் உதயத்திலேயே ராமனைத் தீண்டிய செங்கதிரின் உள்ளுறை பொருளான அந்த அக்னி வடிவமாக இங்கே ராமன் வில்லுடைக்க எழுகிறான் என்றும் கொள்ள இடமிருக்கிறது. ”பொறுமையில் பூமிக்கு நிகரானவன், அறத்திற்காகக் கோபமுறும் தருணத்திலோ காலாக்னிக்கு நிகரானவன்” (காலாக்னி ஸத்ருச: க்ரோதே, க்ஷமயா ப்ருத்வீ ஸம:) என்றல்லவோ வால்மீகி முனிவர் ராமனின் குணாதிசயங்களைப் பட்டியலிடுவார்!

’கங்கை வார் சடை’

ravivarma_gangadharaஅயோத்தியா காண்டத்தில் மற்றொரு காட்சி.

நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை. கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது –

வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
(கங்கைப் படலம், 18)

[வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்; சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]

தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவி. வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கிறது.

காசி ராமேஸ்வரம்:

வால்மீகி ராமாயணத்தில் சேதுக் கரையில் ஸ்ரீராமன் சிவபூஜை செய்ததாக வரும் பிரசங்கம் இல்லை. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ளது.

இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பும்போது சீதைக்கு சேதுவைக் காட்டி அதன் மகிமையை விரிவாக இராமன் விளக்குகிறான். சேதுக் கரையில் இறங்கி திருவணையை வாய் கீறி, அந்த அணைக்குத் தெய்வங்களைக் காவலாக நிறுத்துகிறான். அகத்தியர் அப்போது அங்கு வந்து ராமனைச் சந்தித்து, சிவபூஜை செய்யுமாறு கூறுகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் கொண்டுவர அனுமன் போய் வரத் தாமதமாகிறது. அப்போது -

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே
‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

[ஆலம் – ஆலகால விஷம்; ஞாலம் உண்டவர் – பிரளய காலத்தில் உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் மகாவிஷ்ணுவாகிய ராமன்]

’முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண்மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்

[முகுத்தம் – முகூர்த்தம்]

ஒத்தபூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப.

(யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 34-36. கம்பன் கழகப் பதிப்பு, பக்-1678)

கம்பன் வாழ்ந்த காலகட்ட்த்தில் (11-ஆம் நூற்றாண்டு) இராமேஸ்வரம் பற்றிய இந்தப் புராண ஐதிகம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களிலேயே இராமேஸ்வரம் குறிப்பிடப் படுகிறது.

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவிய வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை..

[வவ்விய – கவர்ந்து சென்ற; வாட்டி – அழித்து; வெஞ்சிலை – வெம்மை தரும் வில்]

கம்பனுக்கு முன்பே ஸ்ரீராமனை அண்ணல் என்று அழைத்திருக்கிறார் சம்பந்தர்!

ramalinga_pujaதமிழகம் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் மைசூர்ப் பகுதியில் காவிரி சங்கமத்தில் ராமநாதபுரா என்ற ஊரில் இதே ஐதிகத்துடன் கூடிய பழமையான கோயில் உள்ளது. ஆந்திராவில் வாரங்கலுக்கு வடக்கே “ராமப்பா குடி” என்றே ஒரு ஊரும், அதில் காகதீயர் காலத்திய ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலும் உள்ளது. மிக அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஒரு மாபெரும் சிற்ப அற்புதம் இந்தக் கோயில். எனவே ராமேஸ்வரம் பற்றிய ஐதிகமும் ஒரு தொன்மை மரபு தான் என்பதில் ஐயமில்லை.

வால்மீகியின் ராமன் “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று தன்னை மனிதனாகவே கூறிக் கொள்பவன். அந்த இலக்கணத்தின் படியே பெரியோர்களையும், தேவதைகளையும், முனிவர்களையும் அவன் வணங்கிச் செல்வதாக நெடுகிலும் வால்மீகி முனிவர் சொல்லிச் செல்கிறார். உலக அன்னையாகிய சீதாதேவி படகில் கங்கை நதியைக் கடக்கையில் (இன்றைக்கும் இந்துத் தாய்மார்கள் செய்வது போன்று) தங்கள் குடும்பத்தையும், குலத்தையும் காக்கவேண்டும் என்று கங்கையையும், யமுனையையும் வேண்டிக் கொள்கிறாள், நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் பிரார்த்தனை செய்கிறாள்! கானகத்தில் புனித விருட்சங்களை ராமரும், சீதையும் வணங்குவதாகவும் வருகிறது.

இதனால் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்ற கருத்து ஒரு மட்டுக் குறைகிறது என்று சில சமயவாதிகள் எண்ணினால் அது அறியாமையும், ஸ்ரீராமனின் அவதார ரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுமே ஆகும். போரில் இறந்த வானரர்கள் அனைவரையும் உயிர்ப்பித்த ராமன் ஜடாயு இறந்தபோது கதறி அழுகிறான். அதற்கு எப்படி தர்க்கபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியும்? இவையனைத்தும் அவனது அலகிலா விளையாட்டு, “நடையின் நின்றுயர் நாயகனின்” தெய்வலீலையில் ஒரு அங்கம் என்று தான் கொள்ளவேண்டும். அவனது சிவபூஜையும் அவ்வாறே என்றே கருதிக் கம்பன் தன் காவியத்தில் அதனைச் சேர்த்திருக்க வேண்டும்.

ravivarma_rama_sita_lakshmana_smallஅதோடு, பிரம்மஹத்தி (அல்லது வீரஹத்தி) தோஷம் அகல்வதற்காக ராமன் சிவபூஜை செய்தான் என்றும் சொல்லப் படுகிறது. அதர்மத்தை அழித்தொழித்த ஸ்ரீராமனின் செய்கை எப்படி பாவமாகவும், தோஷமாகவும் ஆகக் கூடும்? ராமாயணத்தின் மையத் தத்துவத்திற்கே முரணாக அல்லவா இருக்கிறது இது! இந்த ஐதிகம் சாதிய, ஜோதிட, பரிகார வெறியர்களால் ஒரு கட்ட்த்தில் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தை மட்டுமல்ல, இதிகாச புராணங்களின் எல்லா நிகழ்வுகளையுமே நாள்கள் கோள்களின் பலன்களாகவும், விதிப் பயன்களாகவுமே சித்தரிக்கும் ஒருவித இயந்திரத் தனத்தின் விளைவு அது. (உதாரணமாக: ஏன் ராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது என்றால் அவன் ஜாதகத்தில் அப்படி இருந்தது, சீதையின் ஜாதகமும் அப்படி இருந்த்து; வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்குக் குறித்த நாள் சரியில்லை.. இப்படியாக அது போய்க் கொண்டிருக்கும்). இத்தகைய ஒரு கண்ணோட்டம் ஜோதிடப் பிரியர்களான ஒரு சிறு கூட்டத்தாருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் இதிகாச, புராண நிகழ்வுகளில் அற்புதமாக இழையோடும் ரசானுபவத்தையும், அவற்றின் இயல்புத் தன்மையையும், பல சமயங்களில் அவற்றின் தெய்வீக, தத்துவ பரிமாணங்களையுமே குலைப்பதாக இருக்கிறது. எனவே இந்த “தோஷ நிவாரண” ஐதிகத்தை நிராகரித்து, தெய்வலீலையின் ஒரு அங்கமாக மட்டுமே ராமனின் சிவபூஜையைக் கருதவேண்டும்.

ராமேஸ்வர: என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சமத்காரமாக மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம். ராமனாகிய ஈஸ்வரன் (ராம: ஈஸ்வரஸ்ச), ராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவன் (ராமஸ்ய ஈஸ்வர: ), ராமனைத் தனக்கு ஈஸ்வரனாகக் கொண்ட சிவன் (ராம: யஸ்ய ஈஸ்வர: ) !

ராமேஸ்வரத்தின் ஐதிகத்திற்கு இணையாக, காசியில் சிவன் எப்போதும் ராம நாம தியானத்தில் இருக்கிறார் என்றும், இறக்கும் உயிர்களின் காதில் தாரக மந்திரமான ராமநாமத்தை உபதேசித்து அவைகளைக் கரையேற்றுகிறார் என்றும் ஒரு தொன்மை மரபு உள்ளது.

அதையும் கம்பன் சொல்லியிருக்கிறான்.

வாலிவதம் நிகழ்ந்தவுடன், ராமன் வாலிக்கு முன்னே தோன்றுகிறான். நீண்ட விவாத்த்திற்குப் பின், வாலி ஸ்ரீராமனது அவதார ரகசியத்தை உணர்கிறான். தன் உயிர் போகும் தறுவாயில் பலவாறு பரம்பொருளான ராமனைத் துதிக்கிறான். இந்தத் துதிப் பாடல்கள் அனைத்துமே மிக அழகானவை.

ஏவுகூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ; முதல்வன் நீ; முற்றும் நீ; மற்றும் நீ;
பாவம் நீ; தருமம் நீ; பகையும் நீ; உறவும் நீ;
(வாலிவதைப் படலம், 129)

[ஏவுகூர் வாளியால் – விரைந்துசெல்லக் கூடிய கூரிய அம்பால், வேலைவாய் - வேளையில்]

மாவலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர்வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப்பொருளை யான்
தேவ நிற்கண்ட எற்கு அரிது எனோ தேரினே!
(வாலி வதைப் படலம், 128-1, கம்பன் கழகப் பதிப்பு பக்-744).

[மாவலச் சூலியார் – பெரிய வலியுமையுடைய சூலத்தை ஏந்தியவரான சிவபிரான்; வாழ்த்துநர்க்கு – தம்மைப் போற்றுபவர்களுக்கு; ஓவலற்று உதவல் – குறைவில்லாமல் அருளுதல்; ஆவலிப்பு உடைமை – பெருமித உணர்வு கொண்டமை; தேவ – தேவனே; தேரினே – எண்ணிப் பார்க்கையில்; நிற்கண்ட எற்கு அரிது எனோ – அப்பேர்ப்பட்ட உன்னையே கண்ட எனக்கு கிடைத்தற்கரியது என்று இனி என்ன உள்ளது?]

சிவபிரான் தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவது ராம நாம மகிமையினாலேயே என்று இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.

வாலி ஒரு சிறந்த சிவபக்தன். இது கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவன் வாலி என்ற குறிப்பு தாரை புலம்பலில் வருகிறது (“அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய் உள் அன்பினால் …. வணங்காது இத்துணை வைக வல்லையோ?”). அத்தகைய வாலி, தன் இறுதிக் காலத்தில் ஸ்ரீராமதரிசனமும் மோட்சமும் கிடைத்த பாக்கியத்தை இப்பாடலில் வியந்து போற்றுகிறான். வாலியின் சிவ வழிபாட்டின் பலனாக, அவனுக்கு இறுதிக் காலத்தில் ராமபக்தி சித்தித்தது என்று இதன்மூலம் குறிப்புணர்த்தப் படுகிறது என்றும் கொள்ளலாம்.

அனுமன் அருள்நடம்:

கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு காட்சி.

பிரம்மசாரி உருவில் சென்று ராமலட்சுமணர்களை சந்தித்துப் பின்னர் அவர்களுக்குத் தனது உண்மையுருக் காட்டியதன் பின், அதனை அறிவிக்க சுக்கிரீவனிடம் ஓடோடி வருகிறான் அனுமன். ”சுக்ரீவா, நமது துன்பக் கடலைக் கடந்து விடுவோம், அளவற்ற வலிமையுடைய வாலியின் உயிரைக் கவர காலன் வந்துவிட்டான்” என்று அறிவிக்கிறான்!

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் – ‘விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்’ எனா
ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம் புரிகுவான்.
(நட்புக் கோட் படலம், 2)

[விரை செய் தார் வாலி – மலர்களால் செய்த மாலை அணிந்த வாலி; வலியினான் – வலிமையுடையவன்; உயிர் தெற – உயிரைக் கவர]

அப்படி அறிவித்த்தோடு, ராமனைச் சந்தித்த மகிழ்ச்சியில் நடனமும் ஆடுகிறானாம் அனுமன்! எத்தகைய நடனம்? “ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம்” என்கிறான் கம்பன்.

அனுமன் ராமலட்சுமணர்களை சந்திக்கும் கட்டத்தில் வரும் அற்புதமான பாடல்களிலேயே கம்பன் இந்த அருள்வடிவத்தை நமக்குக் கோடி காட்டி விடுகிறான். அனுமன் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை, ஆனால் அவனது சுருக்கமான முகமன் மற்றும் கேள்விகள் முடிந்ததுமே, ராமன் லஷ்மணனிடம் கூறுகிறான் –

ravivarma_hanumanஇல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்லார்தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?
(அனுமப் படலம், 18)

[இசைகள் கூர – புகழ்ச்சிகள் விளங்க; காட்சி – அறிவு; விரிஞ்சனோ – பிரமனோ; விடைவலானோ – ரிஷபவாகனன் ஆகிய சிவனோ]

லக்ஷ்மணா! இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? “வில்லார்தோள் இளையவீர” – இவ்வளவு பெரிய வில்லைக் கையில் வைத்திருக்கிறாய் எல்லாம் சரிதான், ஆனால் இது கூடப் புரியலையா உனக்கு?

பிறகு மேலும் விளக்கிச் சொல்லுகிறான் -

மாணி ஆம் படிவம் அன்று மற்றிவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ்வுலகுக்கு எல்லாம் என்னலாம்..

[மாணி – பிரமசாரி; படிவம் – உருவம்]

இது ஏதோ சாதாரணப் பிரமசாரி என்று நினைத்து விடாதே. உலகிற்கெல்லாம் ஆதாரமான பொருளின் வடிவம் தம்பி!

ராமனின் பரம பக்தனான அனுமன் சிவாம்சம், சிவஸ்வரூபம் என்றே ராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது, அவதார நோக்கத்திற்கு உதவ அனைத்து தெய்வங்களும் வெவ்வேறு உருவங்களில் அவதரிக்கின்றனர். (”அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின் என்றான்” – திருஅவதாரப் படலம், 25). அனுமன் வாயு மற்றும் சிவபிரான் ஆகிய இருவரது அம்சங்களும் ஒன்றிணைந்து அவதரிக்கிறார் -

வாயு ’மற்று எனது கூறு மாருதி’ எனலும், மற்றோர்
’காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம்’ என்றார்; புராரி ‘மற்று யானும் காற்றின்
சேய்’ எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ?
(திருஅவதாரப் படலம், 27)

[மற்கடங்கள் – குரங்குகள்; காசினி – உலகம்; புராரி – சிவபெருமான்; திசையுளோர் – தேவர்கள்; அவதி – எல்லை]

ஆஞ்சநேய அஷ்டோத்திரத்தில் “ருத்ர வீர்ய ஸமுத்பவ:” என்ற நாமம் உள்ளது. துளசிதாசர் எழுதிய ஹனுமான் சாலீஸா என்ற அனுமன் துதிப் பாடல் பாரத்த்தின் பல பகுதிகளிலும் பிரபலமானது. இதில் ஒரு பாடலில் “சங்கர ஸுவன பவானீ நந்தன” என்று துளசிதாசர் அனுமனை சிவனின் புதல்வனாகவே போற்றுகிறார். அவரது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண நூலிலும், “சங்கட மோசன்” என்னும் மற்றொரு துதிப் பாடலிலும் பல இடங்களில் அனுமனை சிவஸ்வரூபமாகப் போற்றும் வரிகள் உள்ளன. வடபாரதத்தில் எல்லா அனுமன் கோவிலிலும் சிவலிங்கம் உண்டு. எல்லா சிவன் கோவில்களிலும் அனுமன் சன்னிதியும் உண்டு! தென்னகத்திலும் எல்லா பழமையான சிவன் கோயில்களிலும் தூண்களில் அனுமார் திருவுருவம் இருக்கும்.

பல ராமாயண நூல்களிலும் தெளிவாகவே பேசப் படும் இந்தக் கருத்தை ஒருமுறை சொன்னபோது, ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு இது பெரும் எரிச்சலை உண்டுபண்ணியது. ஸ்ரீராமனின் பரமபக்தன் என்ற ஸ்தானத்தில் கூட இப்படி சிவனை ஏற்றுக் கொள்ளவேண்டி வருகிறதே என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அனுமன் சிவாம்சம் என்பதே இடைச் செருகல் என்று கூறத் தொடங்கினர்! அந்த அளவிற்கு இறுக்கமான சமயவாதம் போலும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பெரும்பாலான தெய்வ பக்தியுள்ள இந்துக்களுக்கு இத்தகைய சமயவாத பிரசினைகள் இல்லை என்பதே உண்மை.

சிவ-விஷ்ணு ஐக்கியம்:

kambar_stampகம்பனுக்கும் இத்தகைய பிரசினைகள் ஏதும் இருக்கவில்லை.

ஒரு மழைக்கால நாள். சோழவள நாட்டிலே, பசுமை அலையடிக்கும் நெல்வயல்கள் சூழ்ந்த ஒரு காவிரி வாய்க்கால் கரையில் உட்கார்ந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி. கடவுள் வாழ்த்து முடித்துத் தன் அமர காவியத்தை எழுத ஆரம்பித்திருக்கிறான். முதலில் பாடவேண்டியது கோசல நாட்டு வளம். காவிரிக் கரையில் அமர்ந்த கவிமனம் சரயு நதியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டது.

“… கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்” என்று நிறுத்தி வானத்தை நிமிர்ந்து பார்க்கிறான்.

காலையில் கண்ட வெண்மேகக் கூட்டங்கள் எல்லாம் கடலுக்குப் போய் மேய்ந்து விட்டுக் கருமேகமாகித் திரண்டு வந்து விட்டன. சில கணங்களில் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. இந்தக் வெண்மேக-கருமேக விளையாட்டைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நல்லவேளை அவனுக்கு ஆரிய-திராவிட இனவாதமோ, அல்லது கருப்புப் பணத்தை மறுபடி வெள்ளைப் பணமாக்குவது பற்றிய பொருளாதார நுட்பங்களோ மனதுக்கு வரவில்லை. கொடுத்து வைத்தவன் தெய்வீகக் கவிஞன். பாடுகிறான் -

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
(ஆற்றுப் படலம், 2)

அந்த வெண்மேகம் நீறு அணிந்த கடவுள். அது தலையில் “ஆறு அணிந்து” சென்று அலைகடலை முகந்து எடுத்து, கார்மேகக் கடவுளாகத் திரும்பி வருகிறது. செல்வத் திருமகளையே மார்பில் அணிந்த அந்தக் கார்மேகம், உலக உயிர்கள் சகல செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டி மழையாகப் பொழிகிறதாம்!

காவியத் தொடக்கத்திலேயே சிவனையும் திருமாலையும் இணைத்து ஹரி-ஹர வந்தனமாக இந்த அருமையான பாடலைச் செதுக்கிய கம்பனின் கவிதா விலாசத்தை என்னவென்று புகழ்வது!

இன்னொரு காட்சி.

சீதா தேவியைத் தேடுவதற்காக நாற்புறமும் சேனைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறான் சுக்ரீவன். தென்திசைக்கு அங்கதனையும், அனுமனையும் தலைவர்களாகக் கொண்ட சேனை புறப்பட்த் தயாராக நின்று கொண்டிருக்கிறது. அப்போது சேனைத் தலைவர்களுக்கு வழிகூறுவது போல அமைந்த பாடல்களில் பாரத பூமியின் பல்வேறு பிரதேசங்களின் சிறப்புக்களையும் பெருமிதத்துடன் எடுத்தோதி வருகிறான் சோழநாட்டுக் கவி.

கோதாவரி நதிக்கப்பால் கொங்கணத்தைக் கடந்தபின் வருவது அருந்ததி மலை. எவ்வளவு பெரிய மலை தெரியுமா?

’அரன் பெரியவன், அரி பெரியவன்’ என்று சண்டை போட்டுக் கொள்ளும் அறிவிலிகள் பரகதியைச் சென்று அடைவதற்கு எப்படிச் சாத்தியம் இல்லவே இல்லையோ, அது போன்றே யாராலும் சென்றடைய முடியாத மலை அது! வானத்தைத் தொடும் முகடுகள் கொண்ட அந்த மலையைத் தொழுது வணங்கி அப்பால் செல்லுங்கள் வானரர்களே!

“அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்”
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய்க் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால் ..
(நாடவிட்ட படலம், 24)

[அதிகன் – பெரியவன்; அடைவு – அடைதல்; பரிசே போல் – தன்மையதாக இருப்பது போல்; புகல் அரிய பண்பிற்று ஆம் – சென்றடைய முடியாத தன்மையை உடையது; சுரநதி – தேவகங்கை; வரன் – வரம்]

tulsidas_stampகம்பனைப் போன்றே, மகாபக்தரும் ஞானியுமான துளசிதாசரும் தமது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண காவியத்தில் சைவ-வைஷ்ணவ சமரசத்தை இன்னும் அழுத்தமாகப் பேசுகிறார்.
ஸ்ரீராமன் கூறுகிறான் –

”சிவத்ரோஹீ மம தாஸ கஹாவா
தே நர ஸபனேஹும் மோஹி ந பாவா”

என்னுடைய தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் எவனோ, அந்த மனிதன் கனவில் கூட என்னை வந்தடைய மாட்டான்.

”சங்கரப்ரிய மம த்ரோஹீ, சிவத்ரோஹீ மம தாஸ
தே நர கரஹி கல்ப பரி, கோர நரக மஹூ வாஸ”

சங்கரனின் அன்பன் என்ற பெயரில் என்னை துவேஷிப்பவன், என் தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் – இவர்கள் இருவருமே கல்பகாலம் முழுவதும் கோர நரகத்தில் வாசம் செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்.

கம்பன் ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடமான திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த தன் இராமவாதார காவியத்தை, சைவத்தின் தலைமைப் பதியான சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் முன்னிலையில் மீண்டும் அரங்கேற்றுகிறான். இரு சாராரும் அவனது அமர காவியத்தைப் புகழ்ந்தேத்திப் பாராட்டினர் என்பது வழக்கு.

துளசிதாசர் பண்டிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துப் பொதுமக்களின் மொழியான “அவதீ” (லக்னோ பகுதி ஹிந்தி மொழி வடிவம்) என்ற பாஷையில் தனது ராமகாவியத்தைப் படைக்கிறார். இதனைப் பண்டிதர்கள் யாரும் அங்கீகரிக்காமல் போக, மனம் நொந்த துளசிதாசர், அன்றிரவு காசி விசுவநாதர் கருவறையில் வேத,புராண ஏடுகளுக்கெல்லாம் கீழே தனது நூலை வைத்து இது உனக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். மறுநாள் காலை வந்து பார்க்கையில், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றெல்லா நூல்களுக்கும் மேலாக வந்தமர்ந்திருந்ததாம்! பண்டிதர்கள் விசுவநாதரின் திருவுள்ளமாக்க் கருதி துளசிதாசரின் நூலை அங்கீகரித்தனர் என்பது வழக்கு.

தென்தமிழ் நாட்டைச் சேர்ந்த குமரகுருபரர் காசி வரை சென்று அங்கு மடம் அமைத்து தர்ம நெறியைப் பரப்பிய வரலாறு அனைவரும் நன்கறிந்தது. குமரகுருபரர் காசியில் வாழ்ந்த காலத்தில் தமது மடத்தில் தினந்தோறும் கம்ப ராமாயணச் சொற்பொழிகள் செய்ததாகவும், அவற்றைத் தவறாமல் கேட்டு வந்த துளசிதாசர், அதனாலேயே தமது காவியத்தில் கம்பராமாயணத்தில் உள்ளது போன்று சில இடங்களை அமைத்தார் என்றும் ஒரு வழக்கு உள்ளதாம். காசி மடத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் கூறிய தகவல் இது.

இவ்வாறாக, தன் காவியம் முழுவதிலும் சிவ-விஷ்ணு ஐக்கியத்தைப் பல்வேறு விதங்களில் எடுத்துரைக்கிறான் கம்பன். தமிழகத்தில் சமயப் பூசல்கள் அவ்வப்போது தலைதூக்கி வந்த காலகட்டத்தில் வாழ்ந்த கம்பன் ஒரு இலக்கியகர்த்தாவாக தன் காவியமெங்கும் சமய சமரசத்தை வலியுறுத்திக் கொண்டே செல்கிறான். இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாகவே கம்பன் திகழ்கிறான் எனலாம். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

 

88 மறுமொழிகள் கம்பன் கண்ட சிவராம தரிசனம்

  1. ramanujam on January 28, 2010 at 6:38 am

    சிவ விஷ்ணு ஐக்கியம் அவசியம் என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தன்னுடைய எழுத்தால் புதிய வேற்றுமைகளை உண்டாக்குகிறார்.போகிற போக்கில் வைணவர்களையும் ஜோதிடர்களையும் போட்டுத் தாக்குகிறார். அவருக்கு நிதானம் அவசியம். ஜோதிடம் குறித்து ராமாயணம் என்ன சொல்கிறது என்பதை நண்பர் அறிவாரா?

  2. Bala on January 28, 2010 at 9:33 am

    ஆகா, இலக்கியச் சுவை ததும்பும் அழகான கட்டுரை. பல தகவல்களை ஒரு மாலையாகக் கோர்த்து அளித்திருக்கிறார். ஜடாயு என்ற பெயருக்கு ஏற்றமாதிரியே, ராமாயணத்தில் முழுகியவர் என்று தெரிகிறது.

    மிக்க நன்றி ஜடாயு அவர்களே.

    // ramanujam
    28 January 2010 at 6:38 am

    சிவ விஷ்ணு ஐக்கியம் அவசியம் என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தன்னுடைய எழுத்தால் புதிய வேற்றுமைகளை உண்டாக்குகிறார்.போகிற போக்கில் வைணவர்களையும் ஜோதிடர்களையும் போட்டுத் தாக்குகிறார்.//

    ராமானுஜம் சார், இரண்டு முறை படித்து விட்டேன். நீங்கள் சொல்வது மாதிரி இல்லை. ராமன் சிவபூசை செய்வது மட்டும் அல்ல, சிவன் ராமநாமம் ஜபிப்பதையும் மறக்காமல் சொல்லித் தான் எழுதியிருக்கிறார் இல்லையா? ”ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு” என்று தெளிவாகவே குறிப்பிட்ட பிறகு, வைணவர்களைப் போட்டுத் தாக்குகிறார் என்று சொல்வது சரியாகுமா?

    நான் புரிந்து கொண்ட வகையில், புராணக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஜோதிட ரீதியில் மட்டுமே பார்ப்பது தவறு என்றும் அதில் உள்ள ரசத்தைக் குறைக்கிறது என்றும் தான் சொல்கிறார். ஜோதிடர்களைத் தாக்குவது என்று இதைக் கருதலாமா என்று தெரியவில்லை.

  3. திருச்சிக் காரன் on January 28, 2010 at 10:06 am

    அன்புக்குரிய ஜடாயுஜி அவர்களுக்கு,

    தக்க நேரத்திலே இந்தக் கட்டுரையை அளித்து இருக்கிறீர்கள்.

    உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    இராமர் தனித்துவ குணாதிசயங்களைக் கொண்டவர்.

    மற்றவர் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் அனுபவிக்கத் தயங்காதவர். தான் எவ்வளவு துன்பம் அனுபவித்த நிலையிலும் அவர் மனதில் கருணை அன்பு வெள்ளமாகப் பிறக்கிறது.

    சாதிய கட்டுகளை உடைத்து அன்பு வெள்ளத்தை பாய விட்டவர்.

    விலங்கு இனத்துடனும் ஒன்றுபட்டு குழு பணி செய்து வெற்றி கண்டவர்.

    காழ்ப்புனர்ச்சிக்கோ , வெறுப்புக்கோ அவர் மனதில் இடமே இல்லை. அவர் சிவனை வழிபாட்டார் என்று சொல்லியதற்கு எத்தனை ஆரவாரம்? இராமரைப் பற்றி படித்த பின்னும் யார் மனதிலாவது மதமாச்சரியங்கள் வருமா? .

  4. jayasree on January 28, 2010 at 12:08 pm

    ராமேஸ்வரம் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கவே கட்டுரை ஆசிரியர் கடுமையாக எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    வேறு எதை வேண்டுமானாலும் ரசானுபாவத்திற்காக எழுதப்பட்டது என்று சொல்லி விடலாம், ஆனால் இதிஹாச ராமாயணமான வால்மீகி ராமாயணம் அப்படிப்பட்டதல்ல. ரசானுபாவங்கள் அதில் காணப்பட்டாலும், அது ‘சத்யம்’ – அதில் காணப்படுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.

    ஏனெனில், ‘பரம புருஷன் தசரதருக்கு மகனாகப் பிறந்த பொழுது, வேத புருஷனும், ப்ராசேதஸ் எனப்படும் வால்மீகியிடம் ராமாயணமாகப் பிறந்தான்’ என்று பொருள் படும்

    ‘வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசராத்மஜே /
    வேத ப்ராசேதசாத் தாசீத் சாக்ஷாத் ரமாயனாத் மனஹ //

    என்னும் ஸ்லோகத்தை ஸ்மார்த்த, வைணவ, மத்வ என்னும் எல்லா வழியினரும் சொல்லித்தான் ராமாயணத்தை வாசிப்பார்.

    காரணம், வேதங்கள் என்றும் அந்த பரமாத்மனைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றன. அந்த பரமாத்மன் மனுஷ்ய அவதாரம் எடுத்தால், வேத புருஷனும் அவனுடன் இப்பூவுலகில் அவதாரம் எடுக்க வேண்டும், அந்த பரமாத்மன் ராமனாகப் பிறந்த போது, வேதமும் ராமாயணமாகப் பிறந்தது. அதில் ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அது சத்யம். அது வேதப் பிரமாணம். ஒரு விஷயம் சொல்லப்படாமல் – ஆனால் அப்படி ஒரு விஷயம், வழக்கில் பல காலம் வழங்கி வந்தால், காரணத்தை வால்மீகி ராமாயணத்திலேயே கண்டு பிடித்து விடலாம்.

    அதன் படி ராமன், ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யவில்லை. ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் வரவில்லை. போருக்கு முன், அகத்தியர் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த போது, இந்திரனிடமிருந்து தான் பெற்ற பிரமாஸ்திரத்தை, அகத்தியர் ராமனுக்குத் தருகிறார். அதைக் கொண்டு தான் ராமன் ராவணனை வதைக்கிறார். அதனால் அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் வரவில்லை. மாறாக, பாரதத்தில், ‘நிமித்த்ரம் மாதரம் பவ’ என்று அர்ஜுனனை ‘தன் கருவியாக மட்டுமே செயல் படு’ என்று கண்ணன் சொன்னாலும், அவனுக்கும், பாண்டவர்களுக்கும் பிரம்மா ஹத்தி தோஷம் ஏற்பட்டு , ருத்ர கங்கையில் பிராயச்சித்தம் செய்தனர். காரணம், அவர்கள் உபயோகித்த அஸ்திரங்கள், பிரமாஸ்திரங்கள் அல்ல.

    இப்பொழுது மூல விஷயத்திற்கு வருவோம். இலங்கையிலிருந்து திரும்பும்போது ஆகாய மார்கமாக, ராமனும், சீதையும் புஷ்பக விமானத்தில் திரும்புகின்றனர்.
    ராமேஸ்வரத்தில் இறங்கவில்லை. ஆனால் சேதுவை சீதைக்கு காட்டும் போது, ஒரு முக்கிய செய்தியை ராமன் கூறுகின்றான்.

    “ஏதத் பவித்ரம் பரமம் மகாபாதக நாசனம் ”

    (இந்த இடம் பவித்திரமானதும், மகா பாபங்களை நீக்குவதும் ஆனது.)

    “அத்ர பூர்வம் மகாதேவா பிரசாதம் அகரோத் பிரபு :”

    (ஆதி காலத்தில் இங்கே மகாதேவப் பிரபு பிரசாதம் (அருள் அல்லது ஆசீர்வாதங்கள்) அருளினார்.)

    இந்த ஸ்லோகத்தைக் கொண்டுதான் ராமன் அங்கே லிங்க பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்னும் கருத்தும் எழுந்தது. இந்த ஸ்லோகம் தான் ராமேஸ்வரத்தின் மகிமை என்ன, அங்கே என்ன நடந்தது என்று காட்டுவது. ராமாயணம் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

    அத்ர பூர்வம், என்று சொன்னதன் மூலம், முன் காலத்திலிருந்தே அங்கே மகாதேவன் குடி கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ராமன் கடலைக் கடக்க அங்கு வந்த போதே, அங்கே மகாதேவன் கோயில் கொண்டிருக்க வேண்டும்.

    ராமனே அங்கு லிங்க பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்றால், அது நடந்திருக்காது. ஏனென்றால், மனைவி பக்கத்தில் இல்லாமல் ராமனால் தெய்வப் பிரதிஷ்டை செய்திருக்க இயலாது.
    ஆனால், ராமன் அங்கு வந்த போது, மகாதேவன் கோயில் கொண்டிருந்தால் நிச்சயம் வழிபட்டிருப்பான். ஆரண்ய காண்டத்திலேயே அவன் செய்த வழிபாடுகள் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மனைவி பக்கத்தில் இல்லாமல், ராமேஸ்வரத்தில் கிராமமான பூஜைகள் செய்திருக்க இயலாது.

    அவர் அங்கு வந்து சேர்ந்தது பௌர்ணமிக்கு முதல் நாள். மறுநாள் பௌர்ணமி திதி. பௌர்ணமியில் கடலில் நீராடி, அங்கு உள்ள மூர்த்தியான சிவனை வெறுமனே வழிபட்டிருப்பார்.

    முன்னாளில் மகாதேவன் அருளிய இடம் என்று சொல்லவே, அங்கே ராமன் வரும் போதே லிங்கம் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது.

    அது எப்படி என்றால், வேத புருஷனான வால்மீகி ராமாயணம் அந்த முன் கதையையும் கோடிக் காட்டுகிறது.

    அந்தக் கதை நம் தமிழ் மக்களுக்கு, ஏன் அனைவருக்குமே புதியதாக இருக்கும். ஆனால், வால்மீகி ராமாயணத்தை அலசினால் கிடைக்கும் முக்கியக் கதை இது. இன்றைய சூழலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை இது.

    இந்தக் கதை கங்கை பிறந்த கதை.
    அஸ்வமேத குதிரையைத் தேடி ராமனின் முன்னோனான சகர மன்னரின் 60,000 மகன்கள், நிலத்தைத் தோண்டிக் கொண்டு வருகின்றனர். கடைசியில் கபில முனிவரின் ஆஷ்ரமத்தில் அதைப் பார்த்து விட்டு, கபிலரை ஏசுகின்றனர். கபிலர் எழுப்பிய ஒரு ஹூங்- காரத்தில் அவர்கள் அனைவரும் சாம்பலாகி விடுகின்றனர். அகால மரணம் சம்பவிக்கவே அந்த உயிர்கள், இறந்த பின் போக வேண்டிய உலகங்களை அடைய முடியாமல் அங்கேயே சிறைப் பட்டாற்போல் இருந்துவிட்டன.

    ஒருவர் அகால் மரணம் அடைந்தோ அல்லது, இறப்புக்குப் பின் அடைய வேண்டிய நிலையை அடையாமலே இருந்தால், அவர்களது சந்ததியினருக்கு ‘பிரேத தோஷம்’ வரும். இது ஜோதிடம் சொல்வது என்று அலட்சியப் படுத்துபவர்கள் அலட்சியப் படுத்தட்டும். ஆனால் இப்படித்த்தான் இயற்கை இயங்குகிறது என்பதை வேத மதத்தினர் உணர்ந்திருந்தனர். அதை உணர்ந்த கபிலர், பின்னாளில் சகரர் மகன்களைத் தேடி வந்த அவர்களது சந்ததியான பாகீரதனிடம் இதைக் கூறி, இதிலிருந்து நிவர்த்தி அடைய கங்கை வர வேண்டும், அவள் தண்ணீரில் இவர்கள் அஸ்தி கரைந்தால்தான் இவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய உலகங்களுக்குச் செல்ல முடியும் என்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் இயற்கை equilibrium – சமன்பாடு அடைய செய்ய வேண்டியவை.

    அதன் படி பாகீரதன் கங்கையை வருவிக்க அவள் அவனைப் பின் தொடர்ந்து, சகரர்கள் தோண்டிக் கொண்டு சென்ற வழியே வருகிறாள். அந்தத் தோண்டல் முடிந்த இடத்தில், மலையெனக் குவிந்து கிடந்த அஸ்தியைக் கரைக்கிறாள். எங்கே கங்கை அஸ்தியைக் கரைத்து மேலுலகத்திற்குச் செல்ல உதவுகிறாளோ, அங்கே சிவனும் குடி இருப்பார். அழித்தலுக்குத் தேவனான அவர் அனுமதியுடன்தான் உயிர்கள் நற் கதியை அடைய முடியும். இது பிரேத தோஷ நிவர்தியின் அம்சமும் கூட. எனவே அங்கே பாகீரதன், முதல் லிங்கமான ஜ்யோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து, தன முன்னோரை விடுவித்து, தானும் பிரேத சாபத்திலிருந்து விடுபடுகிறான்.

    இது நடந்த இடம் ராமேஸ்வரம்.
    சகரரால் தோண்டப்பட்ட இடம், நவ நதிகளும் கலக்கும் வங்காள விரி குடா என்று இன்று சொல்லப் பட்டும் – ‘கங்கா சாகர்’ என்று அந்நாளில் சொல்லப்பட்ட நமக்குக் கிழக்கே இருக்கும் கடல்தான்.

    இந்தக் கடல் சகர மகன்களால் தோண்டப்பட்டது என்று வால்மீகி ராமாயணத்தில் மூன்று இடங்களிலும் (சமுத்திர ராஜன், மைனாக மலை கூறுவதாக சுந்தர காண்டத்திலும், விபீஷணன் சொல்வதாக யுத்த காண்டத்திலும், ) மற்றும் ‘வடாது’ எனத் தொடங்கும் புறநானூறின் ஆறாவது பாடலின் பழைய உரை (டா. உ. வே. சா கண்டெடுத்தது) யிலும், காணப் படுகிறது. தோண்டப் பட்டதால் இந்தக் கடல் ‘தொடு கடல்’ என்று தமிழில் வழங்கப்படுகிறது என்று பிற பழைய உரைகளிலும் காணலாம்.

    இந்த இடம், கங்கை செய்த முதல் பாவ நிவர்த்தி இடம். இந்த இடத்தை நன்கு பந்தப்படுத்தி, ஓடி வரும் நீர் இந்தியக் கடலில் கலக்காமல் தடுப்பது சேது என்னும் அணை. சேதுவில் ஆரம்பித்துத் தான் கங்கையின் புகழ், அவள் பாய்ந்தோடும் வட மாநிலங்கள் என்று அவள் பூமியில் இறங்கும் இமயத்தின் அடிவாரம் வரை பின்னாளில் வரவே, ‘ஆ சேது ஹிமாச்சலா’ என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

    வங்காள விரிகுடாக் கடலின், அடிவாரத்தைக் காட்டும் படங்களில், இந்தியக் கடலோரப் பகுதியை ஒட்டி, channels காணலாம்.

    எனவே ராமேஸ்வரத்தில் உள்ள சிவன், ராமன் சொல்வது போல் முன்னாளில், அவன் முன்னோனான பாகீரதனுக்கு அருளிய இடம். காசி பின்னாளில் வந்தது. ராமேஸ்வரத்திலிருந்து பிடி மண்ணை எடுத்துக்கொண்டு, காசியில் கரைத்தவுடன்தான், தீர்த்த யாத்திரை முடியும். இதன் தாத்பரியம், முதன் முதலில் கங்கை கரைத்த அஸ்தியான சகர மகன்களது அஸ்தியைக் காசியில் ஒவ்வொருவரும் சேர்த்து, கங்கைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    சீதைக்கு சேதுவைக் காட்டும் ராமன் மேலும் சொல்கிறார்.

    “எதத்து திருஷ்யதே தீர்த்தம் சாகரச்ய மகாத்மான :

    சேது பந்த இதி க்யாதம் த்ரைலோகஎநபி பூஜிதம் //”

    (இதோ தெரிகிறதே இந்தத் தீர்த்தம் சகரரது மாகாத்மியத்தால் உண்டானது. சேது பந்தம் என்னும் இது மூன்று உலகங்களிலும் பூஜிக்கப்படுவது. )

    இதன் மூலம் சேதுவின் முக்கியத்துவமும் விளங்கும், பித்ரு அல்லது, பிரேத தோஷ நிவர்த்தியிலும், செய்ய வேண்டிய சிவ பூஜையும் அங்கு செய்யப்படுகிறது என்றும் விளங்கும்.

    இதுதான் வேத புருஷனான வால்மீகி ராமாயணம் கூறும் உண்மை.
    மற்றவையெல்லாம், காலப் போக்கில், உருமாறிய கதைகள்.

    ராமேஸ்வரத்திற்கும், சேது தீர்த்தத்திற்கும், உள்ள முக்கியத்துவத்தை ஜோதிடம் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.
    ‘ஜோதிடம் வேத புருஷனின் கண்’ என்று யார் சொன்னார்கள் என்று தெரியாத காலம் தொட்டு சொல்லப்படுகிறது.
    அதன் படி, பிரேத தோஷம், மற்றும் பித்ரு தோஷம், மற்றும், அகால மரணம் அடைந்தவர்களுக்கு செய்யும் தர்ப்பணம் என்பவை எல்லாம், ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை வழிபாட்டு அங்கே செய்யப்பட வேண்டும்.

    மாத்ரு தோஷம் அல்லது சந்திர தோஷம் உள்ளவர்கள் சேதுவில் நீராடி அங்குள்ள மூர்த்திகளை வழிபட வேண்டும். இது பராசர ரிஷி எழுதியுள்ளது. மாத்ரு தோஷத்தால் பீடிக்கப்பட்ட ராமனே, சேதுவில் (அப்பொழுது தான் கட்டப்பட்டது) நீராடவே, இழந்த மனைவி, நாடு, செல்வம் எல்லாம் பெற்றான் என்று உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

    ராமன் பெற்ற மாத்ரு சாபம், பரசுராமனாக, தந்தை சொல் கேட்டு, பெற்ற தாயை வதைத்தது. ராமன் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், மனித ரூபம் எடுக்கும் போது, மனித வாழ்க்கையின் விதிகளுக்கு உட்பட்டுத் தான் உதாரண புருஷராக வாழ்ந்து காட்டினார். ப்ரமேயமாக அவர் எடுத்துக் கொண்ட மாத்ரு சாபம், கைகேயியின் மூலம் அவரை வந்தடைந்தது.

    இவ்வளவு விஷயங்கள் – இவை கை அளவே – இருக்கும் போது, நாம் அறியாத விஷயங்கள் கடலளவு இருக்கும் போது, இவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும். அப்படிச் செய்யாமல் பல காலம் வந்திருக்கவேதான், இன்று இந்த சர்ச்சைகள்.

  5. Sarang on January 28, 2010 at 12:42 pm

    //அவர் சிவனை வழிபாட்டார் என்று சொல்லியதற்கு எத்தனை ஆரவாரம்?

    நண்பரே – ஆரவாரம் இல்லவே இல்லை – அது உங்களது மனதிருக்கு பட்டது மட்டுமே – சாரங் என்ற வைஷ்ணவ பேரை பார்த்தவுடன் – காழ்புனற்சிகொண்டுதான் எழுதுவான் என்று கொள்வது எங்கனே – நான் எழுதும் போது ராமர் சமுத்ரராஜனை பணித்தார் சுக்ரீவனை பணித்தார் என்றும் எழுதினேனே – அதை ஏன் விட்டு விட்டீர்கள்.

    இப்படி பிரமாணத்தில் இல்லத்தை எல்லாம் பரப்பி என்ன சாதிக்கிறோம் – நாளைக்கு சிலர் இயேசு காவியம் படைத்தது – அதில் நாராயணனும், சிவனும் ஏசுவுக்கு அப்பம் படைத்து வழிபட்டனர் என்று சொல்வார் -அதையும் நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டே நாம் வாழ கடவோம்

    ஆரவாரம் என்ற ஐயம் உங்கள் மனதில் எழுந்ததால் சொல்கிறேன் – அப்படி படும் படி எழுதியமைக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்

    ராமர் மனுஷ்யானாக நடக்க பெரும் முயற்சி கொள்கிறார், நடந்தும் காட்டுகிறார் – அது தவறுவது ஒரு சில இடங்களில் மட்டுமே

    - ஜடாயு இறந்தவுடன் – அழுது புலம்புவது, மற்றும் அவருக்கு நேரே மோக்ஷம் கொடுப்பது
    - லக்ஷ்மணனை நீ என்னை விட்டு பிரிந்து செல் என்று சொல்லமுடியாமல் தவிப்பது அழுவது, சௌமித்ரி என்று கதறுவது, தர்மத்தின் தலையான ராமன் லக்ஷ்மணனை பிரிவதற்க்கு மட்டும் ரிஷிகளிடம் ஆலோசனை கேட்பது
    ….

  6. alax on January 28, 2010 at 1:10 pm

    திரு ஜெயஸ்ரீ அவர்களுக்கு.,
    வந்தனம். பாராட்டுக்கள்

  7. Sarang on January 28, 2010 at 1:38 pm

    //
    அத்ர பூர்வம் மகாதேவா பிரசாதம் அகரோத் பிரபு
    //

    இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாமே – இங்கே தான் அன்று மகாதேவனான வருணன் (சமுத்ர ராஜன் ) எனக்கு அருள் புரிந்தான்

    எப்படி பொருள் கொண்டாலும் லிங்கப்ரதிச்தைக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் – மகாதேவன் சிவன் என்று கொண்டால் கோவில் அங்கு முன்னதாக இருந்ததாக படும் ஆனால் வழக்கில் சேர்த்துகொண்டதோ ராமர் இலங்கையில் இருந்து திரும்புகையில் பிரதிஷ்டை செய்ததாகவே உள்ளன

  8. Dhivakar on January 28, 2010 at 2:14 pm

    திரு ஜடாயு,

    சிவ விஷ்ணு தத்துவங்கள் சிறப்பாக சொல்லப்பட்டிருகின்றன. கம்பன் முதலிலேயே சரயு நதியின் மேலாக சிவனுக்கு உகந்த வெண்மை நிறமாக புறப்பட்ட வெண்மேகங்கள் கடலில் மூழ்கி கடல்வண்ணன் நிறத்தோடு வெளிவந்து மழையாகப் பொழிகின்றன என வர்ணிப்பார். பல இடங்களில் சிவனை பரம்பொருளாகவும், விஷ்ணுவை ப்ரம்பொருளாகவும் வர்ணிப்பார்.

    உண்மையை உணர்த்தும் இம்மாதிரி கட்டுரைகள் காலத்தின் தேவை.

    போஸ்டல் ஸ்டாம்பில் கம்பரின் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனப் போடப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரையில் 11 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். சரித்திர ஆய்வாளர்கள் 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்கிறார்கள். கம்பரின் காவியத்துக்கு எந்த நூற்றாண்டாக இருந்தாலும் சரி என்றாலும் – ஒரு ஆவல், – அவர் எந்த நூற்றாண்டு காலத்தவர்?

    திவாகர்

  9. ram on January 28, 2010 at 2:23 pm

    சாமிமார்களே! சிவனை கும்பிட்டா என்ன விஷ்னுவை கும்பிட்டா என்ன! எல்லாம் இந்துக்களாகிய நம்ம சாமிகளே! விஷ்னு சிவனை சாத்தான் என்று சொல்லவில்லை. சிவன் விஷ்னுவைச் சாத்தான் என்று சொல்லவில்லை. தாசாவதாரத்தின் மூலம் கமலஹாஸன் எதைச் செய்ய ஆசைப்பட்டாரோ அது இங்கே நடக்கிறது போல இருக்கே!

  10. ஜடாயு on January 28, 2010 at 2:30 pm

    அன்புள்ள ஜெயஸ்ரீஜி,

    தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. முழுவதும் உடன்படாவிட்டாலும், இந்து தர்ம நூல்களிலும், மரபுகளிலும் தங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த புலமைக்குத் தலை வணங்குகிறேன். தாங்கள் இவற்றைப் பொறுமையாக விளக்கிய விதமும் மிகச் சிறப்பாக இருந்தது.

    // இவ்வளவு விஷயங்கள் – இவை கை அளவே – இருக்கும் போது, நாம் அறியாத விஷயங்கள் கடலளவு இருக்கும் போது, இவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும். அப்படிச் செய்யாமல் பல காலம் வந்திருக்கவேதான், இன்று இந்த சர்ச்சைகள் //

    ”ராமன் பெற்ற மாத்ரு சாபம், தோஷம்” என்ற போன்ற கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை. ராமபக்தி காரணமாக இருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், இந்த தோஷம்-பரிகாரம் சுழல் மனித மனத்தை சுதந்திரத்தை நோக்கி அல்லாமல், rewards, punishments, guilt, atonement ஆகியவற்றை நோக்கியே மீண்டும் மீண்டும் இட்டுச் செல்வதாக எனக்குப் படுகிறது.. எனது ஆதர்சங்களில், சுவாமி விவேகானந்தர் அதீத ஜோதிட ஈடுபாடு மனித உள்ளத்தை பலவீனப் படுத்துவது என்று வேதாந்த அடிப்படையில் உறுதியாகச் சொல்லியிருக்கிறார் (உதாரணமாக, Man is the maker of his destiny என்ற உரை). மகாகவி பாரதி “சோதிடம் தனை இகழ்” என்றே கூறுகிறார் (அதே ஆத்திச்சூடியில் ”ஞாயிறு போற்று” என்றும் ‘வானநூல் பயிற்சி கொள்’ என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்). அந்தக் கடுமையான வரிகள் ஆழ்மனதில் இருந்த இந்தக் கருத்துக்கள் மூலம் வந்திருக்கலாம்.

    எழுத்துக்களில் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரையைப் பணிந்து ஏற்றுக் கொள்கிறேன். என்னை விட வயதிலும் நீங்கள் பெரியவர்கள் என்றே நினைக்கிறேன் (என் வயது 35).

    அன்புடன்,
    ஜடாயு

  11. ஜடாயு on January 28, 2010 at 3:26 pm

    // Dhivakar

    போஸ்டல் ஸ்டாம்பில் கம்பரின் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனப் போடப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரையில் 11 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். சரித்திர ஆய்வாளர்கள் 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்கிறார்கள். கம்பரின் காவியத்துக்கு எந்த நூற்றாண்டாக இருந்தாலும் சரி என்றாலும் – ஒரு ஆவல், – அவர் எந்த நூற்றாண்டு காலத்தவர்?

    திவாகர் //

    நன்றி திவாகர் ஐயா.

    9-ஆம் நூற்றாண்டு என்று கொண்டது திருவரங்கத்தில் மண்டபத்தில் அரங்கேற்றீயதாக உள்ள குறிப்பை வைத்து என்று படித்திருக்கிறேன் – அஞ்சல்துறைக் காரர்கள் அதை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. சோழ அரசர்களுடனான தொடர்பை (முதலாம் குலோத்துங்கன்???) வைத்து 11-ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. 13-ஆம் நூற்றாண்டு என்பது மிகவும் பிந்தைய காலமாகத் தெரிகிறது.

  12. jayasree on January 28, 2010 at 4:00 pm

    நன்றி திரு ஜடாயு,

    நான் தந்த மறுமொழியில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், கொடுக்கப்பட எல்லா விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கிறது. அவற்றையும் ஆங்காங்கே சுட்டியிருக்கிறேன்.

    மாத்ரு சாபம் என்பது ராமாயணத்தில் சொல்லப் பட வில்லை. ஆனால் ராமாயணத்தை ஆராய்ந்து, அதில் காணப்படும் பல தர்மங்களைப் பெரியோர் கூறி வந்துள்ளனர். கைகேயி உட்பட ஒவ்வொருவரும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று ஆராயப் பட்டுள்ளது. இன்றும், ஆராய்ந்து வருகிறோம். அப்படி வந்தது தான், இந்த மாத்ரு சாபம். ‘கடலில் வானரர்கள் கட்டிய அணை அருகே நீராடுவது இதிலிருந்து விமோசந்த்திற்கு வழி’ என்று (மட்டுமே) பராசரர் கூறியுள்ளார். அது எதற்கு என்று ஆராய்ந்த உரையில்தான் இப்படி அலசப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.

    Commercial ஆக இன்று ஜோதிடம் பயன்படுத்தப்படுவதால், அதன் மீது சிலருக்கு – சிலருக்குதான்- வெறுப்பு உண்டு. வாழ்க்கையில் அடிபட அடிபட, ஜோதிட நம்பிக்கை வருகிறதோ இல்லையோ, ஜோதிடம் காட்டும் பாதையை நிச்சயம் பின்பற்றுவர். அந்தப் பாதை Introspection.

    Introspection இல்லாத பரிகாரம் பயன் அளிக்காது.
    பரிகாரம் என்பதும் எல்லா விஷயங்களிலும், எல்லா மனிதர்களுக்குமே ஒரே மாதிரி கிடையாது. ஏனெனில், ஜோதிடம், தர்மத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒருவன் சரியான விதத்தில் ஜோதிடக் கருத்தை சொல்ல வேண்டும் என்றால், அவன் தர்ம சாத்திரத்தையும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தர்ம தேவன் எப்படி இயங்குகிறான் என்பதும் ஜோதிடம் காட்டும் ஒரு பாடம்.

    ஆனால், ஜோதிடம் என்பது பரிகாரம், predictions பற்றியது மட்டுமல்ல. அது மிக மிக மிக விரிந்த ஒரு science.
    ஆம். அது science.
    அதன அடிப்படைகளையும், வீச்சினையும், வேதாந்தந்தின்படி மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும். அது வேதாங்கங்களில் ஒன்று. வேத புருஷனின் கண்ணென அதை அறிபவர்களுக்கு, அது தான் முதல் science என்பது புரியும். அந்த சயின்ஸ் அடிப்படையில்தான் நான் எழுதிய பிரபஞ்ச தியரியும், இனி அதை ஒட்டி எழுதப் போகும் மற்ற இரு கட்டுரைகளும்.
    இது எப்படி இருக்கு??

    *******
    வயதுக்கு வணங்குவது உங்கள் வளர்ப்பைக் காட்டுகிறது.
    ஆனால், சொல்லப் பட்ட கருத்துக்காக நீங்கள் வணங்கினால், உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆகும்.

    *****
    My interview in hindu-blog might put in perspective the issue on Gods. It can be accessed at
    http://www.hindu-blog.com/2010/01/interview-with-jayasree-saranathan.html

  13. Sarang on January 28, 2010 at 4:10 pm

    //
    9-ஆம் நூற்றாண்டு என்று கொண்டது திருவரங்கத்தில் மண்டபத்தில் அரங்கேற்றீயதாக உள்ள குறிப்பை வைத்து என்று படித்திருக்கிறேன்
    //

    கம்ப ராமாயணத்தில் வைணவ ஆசார்யரான நாதமுனிகள் (824 CE பிறப்பு) மிகவும் லயித்ததாக சான்று உள்ளது – எனவே 9-ஆம் நூற்றாண்டு என்று கொள்வது சரியாக இருக்கும்

    மேலும் பெரியவாச்சான் பிள்ளை (1167 – 1265) ராமாயண தனிஸ்லோகம் என்று ராமாயணத்தில் வரும் சில ஸ்லோகங்களை எடுத்துகொண்டு இயற்றியுள்ளார் – இவரும் கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி உள்ளார் – எனவே 13 அம் நூற்றாண்டு என்றிருக்க வாய்ப்பில்லை

  14. ஜடாயு on January 28, 2010 at 4:33 pm

    திவாகர் ஐயா,

    கம்பர் காலம் பற்றிய இரு கருத்துக்கள்… நன்றி : விக்கிபீடியா

    1) 9-ஆம் நூற்றாண்டு (http://ta.wikipedia.org/wiki/திருவரங்கம்)

    கம்பர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் என்பதற்கு ஆதாரம் பாயிரத்தில் உள்ள இந்தப் பாடல் –

    எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
    நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
    பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
    கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே

    2) 12-ஆம் நூற்றாண்டு (11 என்று நான் கூறியது தவறு) – http://ta.wikipedia.org/wiki/கம்பர்

    ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.
    —–
    மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது.

  15. கந்தர்வன் on January 28, 2010 at 5:48 pm

    இங்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கவில்ல ஒரு செய்தி உள்ளது. http://tamilvu.org/library/libindex.htm என்ற தளத்தில் உள்ள “காப்பியங்கள்” பகுதியின் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில், மீட்சிப் படலத்தில் ஜடாயு அவர்கள் குறிப்பிட்டுள்ள 34 முதலான சுலோகங்கள் முற்றிலும் வேறுபட்டவையாகக் காணப்படுகிறது. நான் சுட்டியுள்ள தளத்தில் இராமேசுவரம் பற்றிய செய்தியே இல்லை.

  16. திருச்சிக் காரன் on January 28, 2010 at 5:56 pm

    Dear Brother Sarang,

    I request your attention to the comment posted by you few days ago, mentioning that Rama worshipping Shiva was not mentioned in Kamba Raamayanam.

    //Sarang
    21 January 2010 at 5:19 pm
    //இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?

    யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? சிவனா விஷ்ணுவா இல்லை ஏசுவா என்ற எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இதை சொல்கிறேன்

    நாம் எப்பொழுதுமே தகுந்த முன்னோர்கலளால் எடுக்கப்பட்ட மேற்கோள்களை மட்டுமே எடுக்க வேண்டும்

    ராமர் சமுத்ரா அரசனிடம் சரணாகதி பண்ணுகிறார், சுக்ரிவனுக்கு பனி செய்கிறேன் என்கிறார் – இதெல்லாம் ராமாயணத்தில் உண்மையில் இடம் பெறுகின்றன

    இந்த லிங்க பிரதிச்டைக்கு ஆதாரம் கிடையாது – இது மூலமான வால்மீகி ராமாயனத்திலும் இல்லை, அதற்கு அடுத்து கூறப்படும் கம்ப ராமாயனத்திலும் இல்லை

    லிங்க பிரதிஷ்டை முதலில் கையாண்டவர் துளசி தாசரே – அவர் அத்வாததின் சிறப்பை சொல்வதற்காக இந்த கதையை அனுபவ பூர்வமாகவே சேர்த்திருக்க வேண்டும் .//

    With Mr. Jataayus article,

    காலம் சென்றது எனக் கருதி, கையால்
    கோலமான மணலினைக் கூட்டியே
    ‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
    ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

    I hope you might have understood that it is mentioned in Kamba Ramaaan. I request you to use your experience and knowledge to create haramony, and to avoid hasty conclusions which may lead to animosity, this is only a request.

  17. கந்தர்வன் on January 28, 2010 at 6:20 pm

    இன்னொரு விஷயம்:

    “உலகம் யாவையும் தாம் உளவாக்களும்” என்ற கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அடுத்த பாடலில் கம்பர் “எண்ணிய மூன்றினுள் முற்குனத்தவரே முதலானவர்” என்று திருமாலே மும்மூர்த்திகளுள் முதலானவர் என்றும், ஆரணிய காண்டம் விராதன் வதைப்படலத்தில் 59-வது வேண்பாவவிலும் “மும்மூர்த்திகளுள் பரம்பொருள் நாரணனே” என்று கூறியுள்ளார். அப்படி இருக்க அவரைச் “சமரச வாதி” என்று கூறுவது தவறு. காப்பியங்களிலும் பல இடைச்செருகல்கள் உள்ளமையை இதிலிருந்து காண்கிறோம் – இதுவும் கலியின் தாண்டவமாகத் தான் இருக்க வேண்டும். ஆக, கம்பன் சுத்த வைணவ நெறியையே கடைபிடித்ததற்குச் சான்றுகள் உண்டு.

    அது சரி, சைவரான அருணாசலக் கவிராயர் கூட கம்பராமாயணத்தை ஒட்டியே “ராம நாடக கீர்த்தனைகள்” பாடியுள்ளாரே, அவர் பாடலில் எங்கேயும் “ராமன் சிவனுக்கு ராமேசுவரத்தில் பூஜை பண்ணினார்” என்று கூறவில்லையே?

  18. கந்தர்வன் on January 28, 2010 at 7:00 pm

    ‘கம்பன் வைணவன்; சமரசவாதி அல்ல’ என்று பறைசாற்றுகிறார்கள் உ. வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் உள்ளிட்ட சிலர். அச்சுவடியை இங்கு பதிவிறக்கம் செய்யலாம் – http://www.tamilheritage.org/old/text/ebook/kamban.pdf

  19. Sarang on January 28, 2010 at 7:45 pm

    நண்பர் திருச்சிகாரரே

    //I hope you might have understood that it is mentioned in Kamba Ramaaan. I request you to use your experience and knowledge to create haramony, and to avoid hasty conclusions which may lead to animosity, this is only a request.
    //

    அவசரப்பட்டு எழுதவில்லை

    நண்பர் கந்தர்வன் கூறிய வலைதளத்தை சென்று பாருங்கள்

    கம்பர் கூறியது மீட்சிப்படலத்தில் வருவது இதுவே

    “பாதகம் அனைத்தும் வந்து நோக்கிய பொழுதே நூருஞ் சேதுவை நீயும் நோக்காய்” இது வால்மீகி கூறியதை அப்படியே தழுவி எழுதப்பட்டது

    அடியேன் ஒன்றும் சாதி அடிப்படையில் இதை எழுதவில்லை – தேவையே இல்லாமல் இல்லாததை சொல்லி நல்லிணக்கத்தை வழக்கின் என்ற பேரில் அதை கெடுக்கவேண்டாம் என்ற காரணமே”

    நான் நீங்கள் அவசரபட்டோ படாமலோ சொன்ன பலவற்றை எடுத்துக்கூறிய பிறகும் என்னை ஒரு முகவவே பேசுவதால் என்ன பயன் – அடியேனுக்கு இது மகிழ்ச்சியே

    நீங்கள் ஒரு முகமாக எழுதியவை உங்கள் பார்வைக்கு :-)

    // நான் அவசரப்பட்டு எழுதுபவன்
    // ஆரவாரம் செய்பவன்
    // ராமர் கூடவே இருந்தது போல் பேசுபவன்
    // சிலர் சொன்னதை வைத்துகொண்டு உண்மைபோல் பேசுபவன்
    // ராமாயணத்தை அடி முதல் கடை வரை கரைத்து குடித்ததுபோல் பேசுபவன்

    இதெல்லாம் “animosity” வளர்க்காதா :-) – பூருவர் செய்த புண்ணியம், ஆச்சர்ய கிருபை எனக்கு உண்மையாகவே வளர்க்கவில்லை

  20. ஜடாயு on January 28, 2010 at 8:00 pm

    // கந்தர்வன்
    28 January 2010 at 5:48 pm
    இங்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கவில்ல ஒரு செய்தி உள்ளது.
    //

    அன்புள்ள கந்தர்வன்,

    என் பள்ளிக் காலம் முதல் நாம் கம்பனைக் கற்று வருகிறேன். கல்லூரிக் காலங்களில் கம்பன் கழக மேடைகளில் பேசியும் இருக்கிறேன்.

    கம்பராமாயணத்தில் பாடபேதங்கள் உண்டு. பதிப்புகள் வேறுபடுதலும் உண்டு. தமிழ் மரபிலக்கிய உலகில் நெடுங்காலமாக இது பற்றிச் சர்ச்சை நடந்து வருகிறது. ஆதாரபூர்வமாக மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு வந்தபின் இது பெருமளவு அடங்கியது எனினும் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. ரசிகமணி டி.கேசி. கம்பனின் முத்திரை உள்ள பாடல்கள் என்று குறிப்பிட்டவற்றை மட்டும் காட்டி, மற்றதெல்லாம் இடைச் செருகல் என்றார் – அதைப் பெரும்பாலர் ஏற்றுக் கொள்ளவில்லை. (கம்பன் கழகப் பதிப்புகளில் இன்று வரை இந்தப் பாடல்களில் * போட்டுக் குறிப்பும் கொடுத்திருப்பார்கள்). அது போக, சுவடிகளில் மாறுபட்டுக் காணப் படும் பாடல்களை ”மிகைப் பாடல்கள்” என்று கம்பன் கழகப் பதிப்பிலேயே குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார்கள் – இதன் பொருள் சுவடிகள் தொடர்பான தெளிவின்மை மட்டுமே தவிர இப்பாடல்கள் ஆதாரத் தன்மை பற்றியது அல்ல, இவை கம்பன் பாடல்களாகவே இருக்க முழு சாத்தியம் உள்ளது என்ற குறிப்பும் கூடவே கொடுக்கப் பட்டிருக்கும்.

    இங்கு நான் சுட்டியிருக்கும் ராமேஸ்வரம் பற்றிய பாடல்கள், சிவன் ராமஜபம் செய்வது பற்றீய “மாவலச் சூலியார்” பாடல் – இவை இரண்டுமே மிகைப் பாடல்களாக கம்பன் கழகப் பதிப்பில் உள்ளன. அவற்றுக்கான பக்கங்களையும் அளித்திருக்கிறேன்.

    அது இருக்கட்டும். உங்கள் நோக்கம் தான் என்ன? கம்பன் பாடல்களை மோசடியாக நான் மேற்கோள் காட்டுகிறேன் என்று நிறுவுவதா? அல்லது உறைந்து போன 15-ஆம் நூற்றாண்டு மனநிலையில் நின்று கொண்டு medieval தனமாக சமயப் பூசல்களை வளர்ப்பதா? தமிழகமும், இந்தியாவும் அந்தப் பூசல்களைவிட்டு வெகுதூரம் வந்து விட்டன. மேலும், கம்பனே கண்டித்திருக்கும் வெற்று சமயவாத சிடுக்குகளில் எனக்கு ஆர்வமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  21. ஜடாயு on January 28, 2010 at 8:06 pm

    // கந்தர்வன்
    28 January 2010 at 6:20 pm
    கம்பர் “எண்ணிய மூன்றினுள் முற்குனத்தவரே முதலானவர்” என்று திருமாலே மும்மூர்த்திகளுள் முதலானவர் என்றும் //

    அன்புள்ள கந்தர்வன், பாடலில் இருந்து ஒரு வரியை உருவி எடுத்து, அதற்குப் பிழையாகப் பொருள் கூறுவது கம்பன் என்னும் மாமேதைக்குச் செய்யும் அவமரியாதை. இந்தப் பாடலை முழுதாகப் படித்தால் அதன் பொருளே வேறு –

    சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
    எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
    முற்குணத்தவரே முதலோர்; அவர்
    நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.

    சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

    As a co incidence, இந்தக் கருத்தையே மையமாக வைத்து இரண்டு வருடம் முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்:

    நற்குணக் கடல்: ராம தரிசனம் – http://jataayu.blogspot.com/2007/03/blog-post_29.html

    கம்பன் கவியில் மேலும் திளைக்க விரும்புபவர்கள் அதைப் படிக்கலாம்.

  22. armchaircritic on January 28, 2010 at 8:12 pm

    What is in a name…A rose is a rose is a rose by whatever name you call it.

  23. Sarang on January 28, 2010 at 8:29 pm

    மதிர்புக்குரிய ஜடாயு அவர்களே

    நான் உங்களை விட வயதிலும், மதியிலும், பக்தியிலும் மிக சிறியவன் – என் நெஞ்சே தோன்றியாதாக இதை கொண்டு பிழை பொருத்தருள வேண்டுகிறேன்

    //
    அல்லது உறைந்து போன 15-ஆம் நூற்றாண்டு மனநிலையில் நின்று கொண்டு medieval தனமாக சமயப் பூசல்களை வளர்ப்பதா? தமிழகமும், இந்தியாவும் அந்தப் பூசல்களைவிட்டு வெகுதூரம் வந்து விட்டன.
    //

    எனக்கு அப்படி தோன்றவில்லை – உண்மையான ஒன்றை மேற்கோள் காட்டினால் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது – நாம் ராமர் சிவனை வழிபட்டார் என்றோ, சிவன் விஷ்ணுவை வழிபட்டார் என்றோ கூறுவதன் மூலமே நல்லிணக்கம் வராது -மாறாக அது பூசலையே பெரிதுபடுத்தும் – இதற்குதான் மூலமான ஒன்றை வைத்து அதில் உள்ளதை மேற்கோள் காட்டினால் பிரச்சனையை இராது

    இங்கு யார்ய்ம் வழிய சென்று ஒருவரை ஒருவர் தவறு கூறவில்லை – உதாரனத்திற்க்கு கந்தர்வன் அவர்கள் தானாகவே சைவ சித்தாந்தத்தில் உள்ள ஒன்றை எடுத்து அது எப்படி அப்படி சொல்லலாம் என்று கூறவில்லையே?

    இங்கு சொள்ளப்படதர்க்கு ஆதாரம் காட்டி பதில் எழுதுவதில் தவறேதும் இல்லை – இங்கு சிலர் கிட்டத்தட்ட கந்தர்வன் சொல்லும் கருத்திருக்கு ஒப்பவே சொல்கின்றனர் கட்டுரை எழுதுகின்றனர் , ஆனால் தீர ஆராய்ந்த பின்னர். அவர்களுக்கு மரியாதையுடன் பதில் எழுதும் நாம் கந்தர்வன் அவர்களுக்கும் ஏன் அப்படியே எழுதக்கூடாது – அவரது கருத்தில் மெய் இல்லையேல் எடுத்துகூரலாமே –

    சிலர் எழுதினால் நான் உங்களது கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்றும் சிலர் எழுதினால் காழ்புனற்சி என்றும் கொள்ளாமல் சொன்ன விஷயத்தை பற்றி பேசினாலே பாதி பிரச்சனையை ஒய்ந்து விடும் என்பது எனது தாழ்மையான கருத்து

  24. ஜடாயு on January 28, 2010 at 10:04 pm

    // சிலர் எழுதினால் நான் உங்களது கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்றும் சிலர் எழுதினால் காழ்புனற்சி என்றும் கொள்ளாமல் சொன்ன விஷயத்தை பற்றி பேசினாலே பாதி பிரச்சனையை ஒய்ந்து விடும் என்பது எனது தாழ்மையான கருத்து //

    அன்புள்ள சாரங்க், உண்மையில் திரு. கந்தர்வன் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. சில சமயங்களில் இப்படி வெட்டிக் கேள்வி கேட்பது ஒரு ஸ்டைலாக ஆகி விட்டது – தமிழ் வலைப்பதிவுகள் தந்த பழக்க தோஷம். அவ்வளவே.

    மேலும், சமரசப் புள்ளியை நோக்கி இட்டுச் செல்லும் கருத்தை மனம் பணிவுடன் ஏற்கிறது. சவடால் விடும் போக்கில் உள்ள கருத்தை அதே வகையில் எதிர்கொள்கிறது – இல்லையா?

  25. பாலாஜி on January 28, 2010 at 10:36 pm

    உங்கள் எல்லோருக்கும் இருக்கும் அளவுக்கு எனக்கு வேத, புராண, இதிகாச, சங்க இலக்கிய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கு எழுதுகிறேன், தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

    இராவணனை கொன்றபிறகு ஸ்ரீ இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கவில்லை! இதை துவைத சமய மகானான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளே விளக்கியுள்ளார். ஆனால் இராமனக்குக்காகவே போரிட்டிருந்தாலும் அனுமான் உள்ளிட்ட அனைத்து வானர வீரர்களுக்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து மீள அவ்வீரர்கள் கண்டகி நதியில் நீராடி சாளக்ராமத்திர்க்கு பூஜை செய்தனர் (ஆதாரம்:- திரு.அம்மன் சத்தியநாதன் எழுதிய “ராகவேந்திர மகிமை”).

    இராமர் லிங்க பிரதிஷ்டை செய்தாரோ இல்லையோ, ஆனால் மதிற்பிற்குரிய ஜெயஸ்ரீ மேடம் கூறியதுபோல, இராமர் சிவனை வணங்கினார் என்று புலப்படுகிறது. நிற்க, இதனால் சிவன் இராமனைவிட உயர்ந்தவர் என்று பொருளில்லை. விஷ்ணுவின் ரேஞ்சுக்கு அவதாரமெடுத்து வந்து இராவணனை வதைக்கவேண்டும் என்றில்லை. வைகுண்டத்திலமர்ந்த படியாகவே முடித்திருக்கலாம்.. ஆனால் மனிதர்களுக்கு ‘முன்னுதாரணமாக’ திகழவேண்டும் என்பதற்காக அப்படி செய்தான். அப்படியிருக்கையில், சிவனின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், இராமேஸ்வரத்தின் மகிமையை தெரியபடுத்தவும் ஏன் இராமர் இராமனாதச்வாமியை வணங்கியிருக்க முடியாது???

    விட்டுக் கொடுப்பது மனித இயல்பு மட்டுமில்லை, தெய்வங்களும் செய்துள்ளனர். மாகாபாரதத்தில் பதிமூன்றாம் பர்வமான அனுசான பர்வத்தில், கிருஷ்ணன் ‘சிவ சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். சிவன் பத்ம புராணத்தில் ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். நம் ஆராதனைக்குரிய தெய்வங்களே போட்டி, பொறாமையில்லாமல் விட்டுக் கொடுத்துக் கொள்ளும்போழுது, அவர்கள் பெயர்களில் நாம் போட்டி போடுவது மகாபாதகம் இல்லையா?

  26. திருச்சிக் காரன் on January 28, 2010 at 11:29 pm

    Dear Brother Sarang,

    I never say some thing authoritatively, those things which I am not sure of!

    So, when you say //Ram worshipping Shiva // is not mentioned in Vaalmiki Raamayan, I did not counter and say that it is mentioned in Vaalmiki Raamayan, only requested tamilhindu to clarify.

    On seeing the reference given by Mr. armchair critic, I came out open acknowledging what I observed!

    Now Regarding Kamba Raamayan, Mr. Sarang, what is your stance? – Are the verses quoted by Sri Jataayuji are in Kamaba Raamayan or not?

    Can you come out with your stance about wehether //Ram worshipping Shiva // mentioned in Kamba Raamayan now?

    Again Mr. Sarang, if you are younger to Sri Jattayuji, I feel a real brutal shock for me.

    I never expect this much animosity for Shiva (though not direct but obvios) from young People. I thought that the younger generation, especaillay younger generation hindus, to be more tolerant, more liberal, more rational, with more kindness, more courteous and with lesser hatredness.

    But if the younger generation posseses this much dogmatism and animosity, I feel a head spin, this is a danger for the world, danger for India and a danger for hinduism as well.

    But I dont blame you, this much venemous content was passed on to younger generation by the elder generation. These old people pass on the fanatic venom as if it is the true religion, because that is the religion what they know!

    Please excuse me, I have a habit of reacting strongly
    1) whenever I find tactic approval or support for Casteism

    2) whenever I find obvious or hidden promotion of religious fanaticism.

    I think that both are aginst the civilised soceity and detorious to the survival of mankind.

    I can say without hesitation that, any one who have religious hatredness in his heart, he is a Jihaadhi- irrespective of whether a person taunts a weapon or not!
    Any one who has hatredness for the gods worshipped by others, is a Jihadhist, may be we can call them soft Jihadist, if they dont hold any weapon.

    I wish you all success and all the Best .

    Thiruchchikkaaran.

    (edited and published)

  27. திருச்சிக் காரன் on January 28, 2010 at 11:32 pm

    Dera Editorial Team of Tamilhindu,

    I thank you for having published an article about the harmony of shiva and rama worship so quickly and in an appropriate time.

    Thiruchchikkaaran

  28. kargil jay on January 28, 2010 at 11:33 pm

    சைவர்கள் வெங்கடேச சுப்ரபாதத்தை பக்தியுடன் தினமும் கேட்கின்றனர். அதில் ‘விதி சங்கரேந்த்ர வனிதாபி ரர்ச்சிதே’ என்று வருகிறது. அதாவது ‘பிரம்மா, சிவன், இந்திரன் ஆகியோரின் மனைவியர் உனக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.. மகாலக்ஷ்மி துயிலெழுக!!’ என்று ஆகிறது. இதைக் கண்டு சைவர் யாரும் வருத்தப்படுவது இல்லை.

    ஆனால் எத்தனையோ வைணவர்கள், குஜராத்தியர் சிவன் சன்னதிக்கு வருவதை தவிர்க்கின்றனர். சில சமயம் ஏக வசனத்திலும் குறிப்பிடுவதுண்டு.

    எனவே மிகப் பெரிய அறிவாளிகளான ராஜாஜி, ராமானுஜன் இன்னும் எண்ணற்ற மேதைகளைக் கொடுத்த வைணவர்கள், அவர்களின் உயர்தன்மைக்கேற்ப சற்றே அனுசரணையுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து சைவர்களையும், சிவனையும் மதித்து நடத்தல் நன்று.

  29. கந்தர்வன் on January 29, 2010 at 3:11 am

    திரு ஜடாயு அவர்களே,

    நான் ஒன்றும் வெட்டிக் கேள்வி கேட்கவில்லை. ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களுடைய புத்தகத்தை முழுவதும் வாசித்துப் பாருங்கள். அவருடைய தகப்பனாரும், அவரும் இராமாயணத்திற்கு மிக பிரம்மாண்டமான உரை ஒன்றை எழுதியுள்ளதை முன்பே சுட்டினேன். இதை இங்கு பதிவிறக்கம் செய்யவும்: http://www.tamilheritage.org/old/text/ebook/kamban.pdf . ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஒன்றும் “ஸ்டைலுக்காக” வெட்டிக் கேள்வி கேட்கவில்லை. நம் வேத-வேதாந்த நூல்கள், ஆழ்வார் பாசுரம், கம்பராமாயணம் இவற்றிற்கு 50 ஆண்டு காலமாகத் தொண்டு புரிந்துள்ள 80-ஐயும் தாண்டிய வயோதிகர்; பரம பண்டிதர். தர்க்கத்திலும் வாதத்திலும் புலி.

    சுருக்கமாக, “அரன் பெரியான்; உலகு அளந்த அறி பெரியான்” என்ற வெண்பாவிற்கு கம்பர் கூறிய மற்ற வேண்பாக்களுடன் முரன்படாதபடி தான் அர்த்தம் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் கூட அவ்வேன்பாவிற்கு “இங்கு கம்பர் என்ன சொல்கிறார் என்றால், பிரமன் தான் அரி, அரனை விடப் பெரியவன் என்று” என்று அர்த்தம் கொள்ள முடியும். தனியே அவ்வேன்பாவிற்கு நான் இப்பொழுது சொன்ன பொருள் கொண்டால் எந்த வித முரண்பாடும் இருக்கும் போலத் தெரியாது. பல இடங்களில் கம்பர் ‘மும்மூர்த்திகளில் உயர்ந்தவன் திருமால்; அத்திருமாலே இவ்விராமன்’ என்று முழங்குகிறார். விராதன் வதைப் படலம், ஜடாயு வதைப் படலம் இவற்றில் பல இடங்களிலும் “சிவன், பிரமனை விடப் பெரியோன் திருமால்” என்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார். விராதன் வதைப் படலத்தில், “மற்ற தேவதைகள் தவம முதலியவற்றை பாப புண்ணிய வசத்தில் இருந்து வீடுபெறச் செய்பவை; திருமாலோ இவற்றின் வசப்படாமல் யோகா நித்திரையில் ஆழ்ந்து உலக சம்ரக்ஷனம் பண்ணுபவர்” என்றும், “இதை அறியாது மற்ற தெய்வங்களை பரம்போருளாகக் கூறும் மற்ற சமயங்கள் தத்துவத்திற்கு முரனனானவை” என்று முழங்கியுள்ளார். இவரை எப்படி “சமரசவாதி” என்று சொல்ல முடியும்? “அரன் பெரியான்…” வெண்பாவிற்கு நீங்கள் சொல்லியுள்ள விளக்கம் உண்மையானால், கம்பன் தன்னையும், விராதனையும், ஜடாயுவையும் “அறிவிலிகள்; வீடுபேறு அடையமாட்டார்கள்” என்று சொல்லலாகுமே! ஆக “அரன் பெரியான்…” என்ற செய்யுளில் “கம்பர் சிவனையும் திருமாலையும் ஒப்பாக நினைப்பவர்களோ, இவற்றில் யார் பெரியவர் என்றோ தெளியாது மயங்குபவர்க்கு வீடுபேறு கிட்டுவது அரிது” என்று கொள்வதே மற்ற பாகங்களுக்கு முரண்பாடற்றது!

    “சமய நல்லிணக்கம்” என்ற பெயரில் நீங்கள் சொல்லியிருப்பது வைணவ மரபைச் சாடுவதைப் போலுள்ளது. ஏனெனில் “ஆழ்வா,ர் பூர்வாச்சாரியார்க்ள், வைணவப் பெருமக்கள், ராமானுஜர், மத்வர், சங்கரர், இவர்கள் நாள்களில் ‘சிவனை விடப் பெரியோன் திருமாலே; திருமால் தான் பரம்பொருள்; மற்ற தெய்வங்கள் ஜீவர்களே’ என்று சொல்லியுள்ளதால், அந்நூல்களை ஆதரித்தால் நரகமே” என்ற விபரீத அர்த்தத்திற்கு கொண்டு சென்று விடுமே! தயவு செய்து நான் சொன்ன பாயிண்ட்-களை ஆராய்ந்து விட்டு, நான் என்ன எதற்குச் சொன்னேன் என்பதை முடிவு பண்ணுங்கள்!

    ஆகையால் ‘ஸ்டைல்-க்காக எழுதுகிறேன்’ என்று நீங்கள் சாடியதற்கு, நீங்கள் மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும்!!!! X-(

  30. ஜடாயு on January 29, 2010 at 10:20 am

    அன்புள்ள கந்தர்வன்,

    என் வாக்கிய அமைப்பு சரியாக வரவில்லை.. அதனால் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டது, அதற்காக வருந்துகிறேன்.

    இதில் வெட்டி என்பதற்கு “கத்தியால் வெட்டி” என்பது போலப் பொருள் கொள்ளவும். மேலும், ”வெட்டிக் கேள்வி கேட்கும் ஸ்டைல்” பழக்க தோஷம் *எனக்கு* ஏற்பட்டு விட்டது என்று சொல்லிக் கொள்ளவே விழைந்தேன் – ”அதிருக்கட்டும். உங்கள் நோக்கம் தான் என்ன?” என்ற எனது கேள்வியைக் குறித்தது அது.

    மற்றபடி உங்கள் கேள்விகள் வெட்டி (useless) என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

    கம்பனை “சமரசவாதி அல்ல சமய வெறியன்” என்று காட்டுவதற்கு ஒருவர் *பாடுபட்டு* உழைத்திருக்கிறார் என்றால் அந்த முயற்சி முழுவதும் வீணானது, தேவையில்லாதது, பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இந்தப் பாண்டித்யத்தை வேறு நல்ல வழிகளில் செலவழித்திருக்கலாம்.

    பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே…
    ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் ..
    அலங்கலில் தோன்றூம் பொய்மை அரவு என..
    ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவென்றுரைக்கில் பலவேயாம் ..

    எத்தனை எத்தனை பாடல்கள்!! தத்துவ அளவில் கம்பன் ஒரு வேதாந்தி, சமய சமரசம் கொண்டவன் என்று *பல* மரியாதைக்குரிய கம்பராமாயண அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அது எதுவுமே உங்கள் கண்ணில் படவில்லையா அல்லது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

    கம்பன் தமிழ்மண் படைத்த மாபெரும் கவிஞன். அவன் *சமயவாதி* அல்ல, அவனது பெருங்காவியம் *வைஷ்ணவ* நூலும் அல்ல (வைஷ்ணவர்களின் சமய நூல் பட்டியல் எதிலும் அது சேர்க்கப் படவும் இல்லை). அவனது மகோன்னதமான கவிதாவிலாசமும், மேதமையும் இந்து ஞான மரபின், கவிதா மரபின் உச்சம்.

    அதோடு கூட, அவன் இயற்றிய இராமகாதை உலகளாவிய பெரும் காவியம். அவன் உலகக் கவிஞன். “உலகம் யாவையும்” என்று தன் காவியத்தைத் தொடங்கியதே அதற்குக் கட்டியம் கூறுகிறது.

    அப்பேர்ப்பட்ட கவிஞனை சமயவாதக் குப்பிக்குள் அடைப்பது அவனைப் பெருமைப் படுத்தவில்லை, சிறுமைப் படுத்துகிறது; அவனை மட்டுமல்ல, அப்படிச் செய்பவர்களையும் தான்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.