முகப்பு » இந்து மத விளக்கங்கள், சைவம்

“தன்பெருமை தான் அறியான்”

அச்சிட அச்சிட

முதல்வனாகிய சிவபரம்பொருள் அனைத்தையும் அறிவோன், முற்றறிவுடையன் (சர்வக்ஞன்), என வேதாகமங்களும் திருமுறைகளும் உரைக்க, மணிவாசகர் அவர்மேல் அறியமையொன்றை ஏற்றி உரைக்கின்றார். சிவன் அறியாத ஒன்று உண்டு. அதுதான் “தன் பெருமையைத் தான் அறியாத் தன்மை”!

the_dance_of_shiva_and_kali_hc74சிவபெருமான் பேராற்றலும் பெருந்தலைமையும் உடைய மகாதேவன். எனினும் ‘காடுடைய சுடலைப் பொடிபூசி’ ‘தோலுடுத்து’ ‘நஞ்சுண்டு’, கூட்டொருவர் இல்லாமல் “தான் தனியனாக” இருக்கின்றான். அவன் தேவர்களுக்கெல்லம் தேவன் என்றால், தன் பெருமைக்குத் தகுந்தபடி பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, அடிசிலும் அமுதமும் அல்லவோ உணவாகக் கொண்டிருக்க வேண்டும்? நஞ்சை அமுதமாக உண்பானோ?. பித்தேறியவன் தான் தன்னந்தனியனாக அலைவான். சான்றோன் கலைஞானம் உடையவன் தன்னையொத்த சான்றோர் கூட்டத்தில் இருப்பதையே விரும்புவான். இத்தகைய மாறுபட்ட இயல்புகளை உடைய சிவன் எங்ஙனம் முதல்வனாவான்?

இந்த ஐயங்களுக்கு மறுமொழியாகத் திருவாசகத்தில் திருச்சாழல் என்னும் பதிகத்தில், ஒரு பெண்,

“எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்,
தன் பெருமை தான் அறியாத் தன்மையன்”

என்று கூறுகின்றாள்.

“எங்கள் சிவபெருமான் தன்னுடைய ஆடையாகப் பீதாம்பரத்தையோ அன்றித் தோலாடையையோ எதை அணிந்து கொண்டாலும், அறுசுவை உண்டியையோ அல்லது ஆலகால நஞ்சையோ எதைத் தன் உணவாகக் கொண்டாலும், அந்த உடை உணவு ஆகியவற்றால் வரும் பெருமை சிறுமைகளைப் பொருட்படுத்தாதவன்;. அவன், உயிர்களின்மேல் கொண்ட பேரருள் ஒன்றைமட்டுமே திருவுள்ளம் கொள்பவன்; அவனுடைய பெருங்கருணையையும் பேராற்றலையும் அவன் இருப்பிடமும் உடுத்த தோலும்  உண்ட நஞ்சும் சுட்டுவன “ என்னும் கருத்தை அப்பெண்ணின் சொற்கள் விளக்குகின்றன.

கோயில் சுடுகாடு:

சிவன் பேரரசன். மஹாராஜாதி ராஜன். என்றால் அவனுக்குக் கோயில் ஜெய்பூர் அரண்மனை, மைசூர் அரண்மனைபோல சகல ஆடம்பரங்களும் கூடியதாக அல்லவா இருக்க வேண்டும்? அச்சமும் வெறுப்பும் தருவதாகிய சுடுகாடு அவனுக்கு எப்படிப் பெருமைதரும் கோயிலாகும் என்பது கேள்வி.

தோள்மேல் கங்காளம்:

சிவன் தோளிலும் மார்பிலும் சிரத்திலும் கரத்திலும் தரித்தும் தாங்கியும் இருப்பன சுடர்விடும் நவரத்தினங்கள் பொருத்தப்பட்ட விலைமதிப்புள்ள அணிகலன்கள் அல்ல.  அவை நரம்புகளால் கோக்கப்பட்ட எலும்பு மாலைகள்.

எலும்பு முதலியவற்றை அறியாமல் தீண்டிவிட்டாலே உடனே நீராடித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கச் சிவன் மார்பில் நரம்பு ஓடு எலும்புமாலை அணிந்து , தோள்மேல் கங்காளம் (முழு எலும்புக்கூடு) தாங்கியுள்ளானே, இதில் என்ன பெருமை? என்பது கேள்வி.

சுடலைப் பொடி பூசி-

சுடுகாட்டு மண்ணை மிதித்துவந்தாலே உடனே நீரில் மூழ்கித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். சிவனோ, சுடுகாட்டுச் சாம்பலையே மேனி முழுதும் பூசி நிற்கின்றானே , இதிலென்ன பெருமை.?

இந்தக் கேள்விகளையே கந்த புராணத்தில் தக்கனும் கேட்டான்.

உங்கள் பரன் என்னும் மேலோன்,
‘கானிற் சிந்தும் என்பொடு சிரத்தொகை அணியுமோ?’
‘தேவர் வெந்த சாம்பரும் பூசுமோ?’
‘கரிந்த தீயுடல் ஏந்தியே கானில், ஈந்த கேசமும் தரிக்குமோ?’
‘உலகம் அழிந்திடும்படி உயிர்களை முடிக்குமோ உங்கள் அமலன்?’

கோயில் சுடுகாடு –

உள்ள பொருள்தான் தோன்றும். இதனைச் ‘சற்காரிய வாதம்’ என்று சைவம் பேசும். காட்சிப் பொருளாக உள்ள பொருள்கள் அனைத்தும் செயப்படுபொருள்கள்; காரியப் பொருள்கள். அவை பேரூழி முடிவில் அழியும். அழிதல் என்பது இல்லாமலே போவதன்று. காரியம் முதற்காரணத்தில் அடங்குவதே அழிதல்; முதற் காரணத்திலின்று காரியமாதலே, தோன்றுதல். சட்டி உடைந்தால் மண்ணாகின்றது. மண்ணிலிருந்து மீண்டும் சட்டி பிறக்கின்றது.

உலகம் சடம் . தானாகப் பிறக்கவும் செய்யாது. தானாக அழியவும் செய்யாது. அதனைப் பிறப்பிக்கவும் ஒடுக்கவும் ஒருவன் வேண்டும். அனைத்தையும் ஒடுக்கியவன் எவனோ அவனே மீளத் தோற்றவும் செய்வான். எனவே அவனை ‘ஒடுங்கி’ எனச் சாத்திரம் கூறும்.

பிரபஞ்சம் அனைத்தும் சர்வ சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கும். மாயை சிவசத்தியைச் சார்ந்து இறைவன் திருவடியில் அவனுடைய வைப்பு சக்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சத்தியாக நிற்கும். சிவசத்தி  பிரிப்பின்றி அவனில் ஒடுங்கி நிற்கும். எனவே அனைத்தும் அவனில் ஒடுங்கிய நிலையில் அவன் ஒருவனே இருப்பன்.

அனைத்தும் ஒடுங்கிய நிலையே இங்கு ‘ சுடுகாடு’ என்றும் அந்த நிலையில் அவன் மட்டும் இருத்தலையே ‘தான் தனியன்’ என்றும்  கூறப்பட்டன.

சத்தியும் அவனுள் ஒடுங்குதலையும் வேண்டும்பொழுது பிரிந்து தோன்றுதலையும் சங்க இலக்கியம், ”பெண் உரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்’ என்று கூறிற்று. சிவனது திருவடியில் ஒடுங்கிய மாயையிலிருந்து, அத்திருவடிச் சார்பால் பிரபஞ்சம் அனைத்தும் மீளத்தோன்றும் புனர் உற்பவத்தை,

“நீல மேனி வாலிழைபாகத்து
ஒருவன் இருதால் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறுநூறு)

என்றும்,

“வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே” (அகநானூறு)

என்றும் சங்க இலக்கியங்கள் பேசின.

சுடலைப்பொடி பூசி:

bhairavar-darasuramசர்வ சங்காரகாலத்தில் பிரமன், திருமால் போன்றோர் உட்பட அனைவரின் உடல்களும் அவரவர் ஆட்சி செய்த உலகங்களும் அனைத்தும் எரிந்து சாம்பலாகும். உமையம்மையும் சிவனுள் கரந்து விடுவாள். தனித்து நிற்பவன் சிவன் ஒருவனே. எரிந்த சாம்பல் முழுவதும் சென்றுபடிவதற்கு வேறு இடம் இல்லாதபடியினால் சிவபெருமான் திருமேனியிலேயே படியும். சர்வ சங்காரத்தின் பின்னும் உலகுக்குச் சிவனே சார்பு என்பதையே ‘சுடலைப் பொடி பூசி’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இந்தச் சாம்பல் ஆதி நீறு எனப்படும். இந்த ஆதி விபூதியை, நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில், ‘மதுகையால் நீறணிந்து” என்று புகழ்ந்தார். திருநீறே சங்க இலக்கியத்தில் வெளிப்படும் முதற் சமயச்  சின்னம்.

இன்னொரு விபூதியும் உண்டு. அது அனாதி விபூதி எனப்படும். அது இறைவன் மேல் இயல்பாக உள்ள திருநீறு. நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு. இதனைத் திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் ‘பராவண மாவது நீறு’ என்று ஓதியருளினார். பரன் என்பதற்குப் பெண்பால் பரை. பரையாகிய சிவசத்தியின் வண்ணமே திருநீறு. திருநீறு அணிதல் சிவசத்தியாகிய சிவனருளுடன் கூடியிருத்தலை உணர்த்தும்.

தோலுடுத்தல்:

தாருகவனத்து முனிவர்கள் வைதிகர்களானாலும் தங்களது வேதக்கல்வியையும் கன்மம் செய்யும் ஆற்றலையும் வியந்து கர்வம் கொண்டு சிவபரம்பொருளின் முழுமுதற்றன்மையை மறுத்துச் சிவனை அழிப்பதற்கு ஒரு அபிசார வேள்வி நிகழ்த்தினர். அந்த வேள்வியிலிருந்து புலியும் யானையும் சிங்கமும் வந்தன. புலியைக் கொன்று அதன் உரியை அரையில் தரித்துக் கொண்டான். யானையைக் கொன்று அதன் தோலை மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்டான். மான்தோல் சிங்கத் தோல்களை ஏகாசமாக அணிந்து கொண்டான். ஏகாசம் என்பது மேலாடையைத் தோளினின்றும் மார்பில் விரிந்து வரும்படி அமைத்துப் பூணூல் போல அலங்காரமாக அணிவது.

எனவே, இவன் நாகரிகமற்றவர்கள் போன்று தோலாடை தரித்தவனல்லன். இவன் உடுத்த தோலாடை இவன் வேதங்கூறும் கன்மகாண்டங்களுக்கும் அப்பாலான், கன்ம பலனை ஊட்டும் அதிகாரி அவனே என்பதனை உணர்த்தும்.

கங்காளம் தோள் மேல் காதலித்தான்:

பிட்சாடனர் (கங்கைகொண்ட சோழபுரம்)பிட்சாடனர் (கங்கைகொண்ட சோழபுரம்)

கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.

படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார். இந்த மூர்த்தம் சிறந்து விளங்கும் திருத்தலம் காயாரோகணம் எனப்படும். இந்த வரலாறு காஞ்சிப்புராணம் காயாரோகணப் படலத்தில் கூறப்படுகின்றது.

இதனால் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனைத் தவிரப் பிற தேவரெல்லாம் செத்துப் பிறக்கும்  ஆன்மவர்க்கங்கள் என்றும் சிவம் ஒன்றே நித்தியப் பொருள் என்றும் உணர்த்தப் பெற்றது.

கபாலத்தில் இரந்துண்பவன்:

சிவனுக்கும் ஐந்து முகம். பிரமனுக்கும் ஐந்துமுகம். அதனால் பிரமன் தானே முழுமுதற் கடவுள் என்ற் கர்வங்கொண்டு திருமாலுடன் கலகமிட்டான். அவன் நடுத்தலையின் முகம் சிவபெருமானை இகழ்ந்து நிந்தித்தது.

“உலகி னுக்குயான் ஒருவ னேஇறை;
உலகம் என்கணே உதித்து ஒடுங்கிடும்
உலகெ லாம்எனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படும்’”

என்று பிரமனின் உச்சித்தலை சிவனை இகழ்ந்து உரைத்தது.

பிரமனுடைய செருக்கை அடக்கி அவனை வாழ்விக்க வேண்டி இறைவன் வைரவக் கடவுளை (பைரவர்) அனுப்பினான். பைரவர் பிரமனின் நடுத்தலையை நகத்தாற் கிள்ளிக் கபாலமாகக் கைக்கொண்டார். அந்த பிரமகபாலம் ஏந்தியவனாகச் சிவபெருமான் ஊழிக்காலத்தில் ஆடுங் கூத்திற்குக் காபாலம் என்றுபெயர். இதனைக் கலித்தொகை என்னும் சங்க இலக்கியம்,

“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால்”

என்றும்,

“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரள
தலைஅங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்”

என்றும் புகழ்ந்து பேசுகின்றது.

பிரம கபாலத்தில் இறைவன் இரந்த செய்தி புராணங்களில் பேசப்படுகின்றது. அவன் வறுமையால் இரக்கவில்லை. இரந்து பெற்ற உணவை அவன் உண்டதாகவும் புராணங்களில் பேசப்படவில்லை.  அவன் இரந்தது குருதிப்பலி. குருதி அகந்தை, கர்வத்தைக் குறிக்கும்.

அவன் இரந்த செய்தியையும் இரந்த பொருளையும் திருமந்திரம் பேசுகின்றது.

“பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்?
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.”

பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”

எனத் திருமூலர் தெருட்டுகின்றார்.

கட்டுரையில் காட்டப்பட்ட செய்திகள் எல்லாம் கந்தபுராணம், காஞ்சிப்புராணம் முதலிய புராணங்களில் சிவபரத்துவத்தை விளக்கக் கூறப்பட்ட கதைகளே.

meykandarகதை கேட்கும் விருப்பம் மக்களுக்கு எல்லாக் காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு. அந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நல்லிசைப் புலவர்கள் சமய உண்மைகளை, தத்துவங்களை உருவகப்படுத்தியும், தேவர்களையும், தெய்வங்களையும் கதைமாந்தர்களாக்கியும் விளக்கிக் கூறினர்.

இங்குக் கூறப்பட்டன சிவபரம்பொருளின் சொரூபநிலை எனப்படும் உண்மைநிலை அல்ல.

இங்கு காட்டப்பட்ட வடிவங்களும், பிட்சாடனக் கோலமும் தமிழகத்தில் கபாலீச்சரம், பசுபதீச்சரம், மாகாளம், காயாரோகணம் எனப் பெயரிய தலங்களில் விளங்குபவை. இவை சைவம் தமிழகத்தில் வளர்ந்த வரலாற்றையும், சைவமானது பவுத்த சமணங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள வேதப்புறம்பான காபாலம், மாவிரதம், பாசுபதம், காளாமுகம் முதலிய நெறிகளைத் தழுவி ஏற்றுக் கொண்ட உண்மையையும் விளக்குவனவாகும். பிற்காலத்தில் வடமொழிப் பாடியகாரர்களால் இதுவே சைவம் எனப் பேசி இகழும் அளவிற்கு இந்நெறிகளுடன் சைவத்திற்கு ஒட்டுதல் இருந்தது.  இதுவே மெய்கண்டார் தோன்றி சிவஞானபோதம் படைக்கக் காரணமாகவும் ஆயிற்று. மெய்கண்டார் வேதத்தைத் தழுவித் திருநெறிய தமிழ்வழி நாட்டிய கொள்கை ‘சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என்றும் சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்றும் ஆன்றோரால் வழங்கப்படுகின்றது.

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமிழிலும், சைவத்திலும் ஆழ்ந்த புலமை உடையவர். பண்டைத் தமிழ் இலக்கியம், திருமுறைகள், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து ஆய்வு நோக்கில் எழுதக் கூடியவர்.

தமிழ்ஹிந்து, திண்ணை, சொல்வனம், வார்த்தை முதலிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

 

93 மறுமொழிகள் “தன்பெருமை தான் அறியான்”

  1. madurai saravanan on February 12, 2010 at 9:37 pm

    நல்ல பதிவு . மஹா சிவராத்திரி வேளையில் தந்து சிவனின் மகிமை உணர்த்தியதற்கு நன்றி .

  2. திருச்சிக் கார‌ன் on February 13, 2010 at 1:05 pm

    சிவ‌ம் சாம்ப‌ல் பூசி, த‌னித்திருந்து வ‌லிமை நிலையைக் காட்டும் த‌த்துவ‌ம். அது த‌த்துவ‌ ஞானியின் நிலை.

    அரி ப‌ட்டுப் பீதாம‌ப‌ர‌ம் த‌ரித்து, வ‌லிமை காட்டும் த‌த்துவ‌ம்.
    அது ம‌ன்ன‌ரின் நிலை போன்ற‌து.

    இர‌ண்டுமே , ட‌பிள் பேர‌ல் க‌ன்னாக‌ செய‌ல் ப‌ட்டு ந‌ம‌து அக‌ந்தையை அழித்து ஞான‌த்தை அளிக்கும்

  3. திருச்சிக் காரன் on February 15, 2010 at 1:40 am

    மதிப்பற்குரிய முனைவர் ஐயா அவர்களே,

    நீங்கள் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிந்தனையை தூண்டி , ஆன்மீகப் பாதையில் முன்னேற வைத்துள்ளது. இந்தக் கட்டுரையில் கூட சிவன் நீறு பூசி, எலும்பு அணிந்து இருந்த கோலத்தை நீங்கள் விவரித்து யாக்கை நிலையாமை தத்துவத்தை எனக்கு சூடு போட்டது போல உணரவைத்தது.

    என்னிடம் ஒரு சிறு பிழை உண்டு. அவசரத்திலே சில கட்டுரைகளை முழுவதும் படிக்காமல் சென்று விடுவேன். அவ்வாறே உங்களின் இந்தக் கட்டுரையையும் முழுவதும் படிக்காமல் ஓரளவு படித்து என் கருத்தையும் எழுதி விட்டேன்.

    பிறகு வேறொரு விவாதத்தில் நண்பர் கந்தர்வன், ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதைப் படித்து விட்டு திரும்பி வந்து இந்தக் கட்டுரையில் அவ்வாறு உள்ளதா எனப் படித்தேன். அப்படியே உள்ளது.

    //கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.

    படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார். இந்த மூர்த்தம் சிறந்து விளங்கும் திருத்தலம் காயாரோகணம் எனப்படும். இந்த வரலாறு காஞ்சிப்புராணம் காயாரோகணப் படலத்தில் கூறப்படுகின்றது.

    இதனால் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனைத் தவிரப் பிற தேவரெல்லாம் செத்துப் பிறக்கும் ஆன்மவர்க்கங்கள் என்றும் சிவம் ஒன்றே நித்தியப் பொருள் என்றும் உணர்த்தப் பெற்றது.//

    நீங்கள் வயதிலும் , அறிவிலும், சிந்தையிலும், பக்தியிலும் எங்களை விட உயரத்தில் இருக்குறீர்கள்.

    இப்போதோ புறம் தொழாமை என்ற கான்செப்ட் முன்னெடுக்கப் பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சைவ வைணவப் பிணக்கு தலை காட்டுகிறது. எல்லாக் கடவுளும் நன்மையே போதிக்கின்றனர். எல்லாக் கடவுள்களும், நல்லவருக்காகா தீமையை எதிர்த்துப் போரிடுவதாகவே உளது.

    எனவே போட்டியும் போராட்டமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலே தானே நடை பெற வேண்டும். இந்நிலையில் சிவன் தான் பெரிய கடவுளா அல்லது நாராயணன் தான் பெரிய கடவுளா என்ற சர்ச்சை நம்மை ஆன்மீகப் பாதையில் முன்னேறாமல் தடுக்குமோ என ஐயப் படுகிறேன்.

    இதனால் ஒரு சாரார் சிவனை மறைமுகமாக மட்டம் தட்டி பேசுவதும், மறு சாரார் நாராயணனை மறைமுகமாக மட்டம் தட்டிப் பேசுவதுமாக இருவருக்கும் இருக்கும் புகழ்ச்சியை விட இகழ்ச்சி அதிகமாகி விடும் போல இருக்கிறதே.

    நீங்கள் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிந்தனையை தூண்டி , ஆன்மீகப் பாதையில் முன்னேற வைத்துள்ளது.

    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே. சமரசத்தை நோக்கி நாம் பல படிகள் முன்னோக்கி வைக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கோருகிறேன்.

    மார்க்கண்டேயன் பற்றி தங்கள் எழுத வேணும் எனக் கோருகிறேன்.
    இது என்னுடைய வேண்டுகோள்.

    புறம் தொழாமை கோட்பாட்டை எதிர்த்துப் போராடியதில் நேரம் செலவிட்ட எனக்கு, மார்க்கண்டேயன், பிரஹலாதன், துருவன் ஆகியவற்றின் வரலாறு ஆன்மீகப் பாதையில் முன்னேற எனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

    உங்களது நடையிலே மார்க்கண்டேயனை விளக்குங்கள் எனக் கோருகிறேன்.
    .

  4. Sarang on February 15, 2010 at 2:12 pm

    //
    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,
    //

    எனக்கு அப்படி என்னும்படி இல்லை – சிவனை பரமாத்மாவாக கொண்டாடுபவர்கள் – மற்றவரை ஜீவாத்மாவாககும் நினைப்பார்கள் – அப்படி இருக்கையில் எல்லா தொழிலையும் சிவனே செய்வதாக நினைப்பார்கள்
    இதை வெறுப்பு கருத்து எனு எண்ணவதற்கு ஏதும் இல்லை – முனைவர் அய்யாவை பார்த்தாலே அன்பு நிறைந்தவர் வெறுப்பு இல்லாதவர் என்று தான் தோன்றுகிறது

    மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்

    மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம்

  5. ஜடாயு on February 15, 2010 at 2:58 pm

    // மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்

    மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம் //

    சாரங், என்னையும் சேர்த்து சொல்கிறீர்களோ?? :) ) பரவாயில்லை.

    முனைவர் அய்யாவின் தீவிர சமயவாதக் கருத்துக்களும் எனக்கு ஏற்புடையன அல்ல என்றும் ஒரு மறுமொழியில் சொல்லியிருக்கிறேன் (”அடிமுடி தேடிய புராணம்- ஒரு விளக்கம்” கட்டுரையில்).

    ஆனால் இதில் திருமாலை *இழிவாக* கூறியிருக்கிறது, இதை மட்டும் தனியே படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கந்தர்வன் அலமருவதில் பொருள் இல்லை. புராண விவரணங்களைக் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளாமல் literal ஆகப் பொருள் கொள்வதன் விளைவு அது – இந்து மரபில் அப்படி ஒருபோதும் செய்யப் படவில்லை என்பதே உண்மை. அதனால் தான் கற்பனைக்கும் மீறிய அதி கற்பனைகளை அதி-யதார்த்தமாக (hyper-reality) புராணங்கள் பேசுகின்றன.

    சிவபிரான் சம்ஹார மூர்த்தி என்பதால் இங்கு பிரபஞ்சம் முழுவதும், படைப்பு/காப்புக் கடவுளர்கள் கூட மஹா சம்ஹாரத்தில் ஒடுங்குவதாக உருவகப் படுத்தப் பட்டுள்ளது என்று நான் புரிந்து கொள்கிறேன். இதே கருத்தாக்கத்தை அப்படியே திருப்பிப் போட்டு சிருஷ்டியின் மீது ஏற்றி வைஷ்ணவத்தில் சொல்கிறார்கள்.

    நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
    தான்முகமாய் சங்கரனைப் படைத்தான் – யான்முகமாய்
    அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
    சிந்தாமற் கொண்மினீர் சேர்ந்து

    - திருமழிசையாழ்வார்.

    அவ்வளவு தான். ஒன்றில் படைப்பு, மற்றொன்றில் அழிப்பு. அதுதான் வித்தியாசம்! இரண்டையுமே குறியீட்டு ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    கங்காளம் என்பதன் குறியீட்டு விளக்கம் அதுதான். சைவ புராணங்கள் காபாலிகம், பைரவம் போன்ற நாட்டார் மதங்களின் கருத்தாக்கங்களுக்கு இப்படி “குறியீட்டு ரீதியாக” விளக்கம் அளித்து சைவத்துள் இணைத்துக் கொண்டது என்று ஒரு வரலாற்றுப் பார்வையையும் சேர்த்தே முனைவர் ஐயா இங்கு எழுதியிருப்பது சுவாரஸ்யமானது.

    இதே போன்று வைஷ்ணவத்திலும் நடந்திருக்கிறது – மத்ஸ்யம், கூர்மம், வராகம், நரசிம்ஹம் ஆகியவை தனிப்பட்ட பழங்குடி வழிபாடுகளாக இருந்தவையே. பின்னர் விஷ்ணுவின் அவதார கோட்பாடு என்னும் சரடில் அவையனைத்தும் இணைக்கப் பட்டன என்றும் வரலாற்றாசியர்கள் பலர் கருதுகிறார்கள்..

    பூரி ஜகன்னாதர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் போன்ற சில கோயில்களில் இத்தகைய இணைப்பு நடந்ததற்கான தடயங்கள் கூட ஐதிகங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன என்றும் மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். .

    இந்துப் பார்வையில் இது பற்றி எழுதப் பட்ட ஒரு நல்ல புத்தகம் –
    Adi Deo Arya Devata – A Panoramic View of Tribal Hindu Cultural Interface
    By Sandhya Jain.
    http://www.amazon.com/Adi-Deo-Arya-Devata-Panoramic/dp/8129105225

  6. கந்தர்வன் on February 15, 2010 at 3:27 pm

    திரு ஜடாயு,

    //
    புராண விவரணங்களைக் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளாமல் literal ஆகப் பொருள் கொள்வதன் விளைவு அது – இந்து மரபில் அப்படி ஒருபோதும் செய்யப் படவில்லை என்பதே உண்மை. அதனால் தான் கற்பனைக்கும் மீறிய அதி கற்பனைகளை அதி-யதார்த்தமாக (hyper-reality) புராணங்கள் பேசுகின்றன.
    //

    ‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத-த்வைத ஆச்சாரியார்கள் புராணங்களை literal-ஆகத் தான் வியாக்கியானம் பண்ணியுள்ளனர். ஆதி சங்கரரும் அப்படியே literal-ஆகத் தான் சாரீரக பாஷ்யத்தில் (III-iii-32) புராணங்களை எடுத்துள்ளார். ஆகையால், ‘இந்து மரபில் இது இல்லை’ என்று நீங்கள் கூறுவது சரி அன்று. இன்றைய எந்த வைதீக மடங்களையும் கேட்டுப் பாருங்கள் – சிருங்கேரி ஆசாரியரைக் கேட்டுப் பாருங்கள், அஹோபில, வானமாமலை ஜீயரைப் போய்க் கேட்டுப்பாருங்கள். அவர்கள் யாரும் ‘புராணங்கள் கற்பனைகள், உண்மை நிகழ்வுகள் அல்ல’ என்று சொல்கிறார்களா என்று கேட்டு வந்து எழுதுங்கள்.

    //
    மத்ஸ்யம், கூர்மம், வராகம், நரசிம்ஹம் ஆகியவை தனிப்பட்ட பழங்குடி வழிபாடுகளாக இருந்தவையே. பின்னர் விஷ்ணுவின் அவதார கோட்பாடு என்னும் சரடில் அவையனைத்தும் இணைக்கப் பட்டன என்றும் வரலாற்றாசியர்கள் பலர் கருதுகிறார்கள்..
    //

    இந்த ஆராய்ச்சி எல்லாம் அரை-குறையானவை. இதைப் போல, “வேதத்தில் விஷ்ணு சூரியனைக் குறிக்கும்” என்றும், “விஷ்ணு, நாராயணன், வாசுதேவன் இவர்கள் வெவ்வேறு தெய்வங்களாக இருந்தனர்” என்றும், “திராவிடக் கடவுளாகிய திருமாலும் ஆரியக் கடவுளாகிய விஷ்ணு வேறு” என்றும் கூறுவதன் கோஷ்டியில் இது அடங்கும். தசாவதாரங்கள் அனைத்துமே விஷ்ணு தான் என்று வேதத்தில் பல இடங்களிலும், பரிபாடல் முதலிய தமிழ் இலக்கியங்கள் சான்றாகவும் உள்ளன. இளங்கோவடிகள் “வடவரையை மத்தாக்கி” என்ற பாடலில் நாராயணனுடைய பத்து அவதாரங்களைப் பற்றியும் பாடியுள்ளார்.

    //
    பூரி ஜகன்னாதர் கோயில்…இத்தகைய இணைப்பு நடந்ததற்கான தடயங்கள் கூட ஐதிகங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன என்றும் மானுடவியலாளர்கள் கருதுகின்றனர்.
    //

    ஐயா, மீண்டும் கூறுகிறேன் – இந்த மனிதவியல் ஆராய்ச்சி எல்லாம் அரைகுரையானவை. இதை ஏற்றால், “ஆரியர்கள் நாடு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு படை எடுத்து வந்தனர்” போன்ற ஆராய்ச்சிகளையும் ஏற்க வேண்டியது தான்!!

    பூரி ஜகன்னாதர் கோயிலையும் ஏழுமலையானையும் ஒரே இடத்தில் ரிக் வேதம் துதிக்கிறது (X.155.1, X.155.3). மிகவும் ச்பஷ்டமாகவே உள்ளது. சாயண பாஷ்யத்திலும் அப்படியே உள்ளது. திருவேங்கடமுடையான் விஷ்ணுவே என்று இளங்கோ மதுரைக்காண்டம், காடு காண் காதை 35 தொடங்கி 57 வரி முடிய தெளிவாகக் கூறுகிறார். இதற்கும் முன் சங்க இலக்கியமான பரிபாடலும் திருமால் அரங்கத்திலும் திருமலையிலும் எழுந்தருளியிருப்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

  7. திருச்சிக் கார‌ன் on February 15, 2010 at 3:40 pm

    //
    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,
    //

    வைணவ‌ ச‌முதாய‌த்தினரின் ம‌ன‌ம் புண் ப‌ட்டு ச‌மூக‌ ஒற்றுமை கெட‌ வாய்ப்பு உள்ள‌தை சுட்டிக் காட்ட‌வே அவ்வாறு எழுதினேன்.

    //மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும் //

    ந‌ல்ல‌து. வைண‌வ‌ர்க‌ள் எப்ப‌டி எண்ணினாலும் எண்ணாவிட்டாலும் , //கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன//இந்த‌க் க‌ருத்து ச‌ம‌ர‌ச‌த்துக்கு இடையூறு ஏற்ப‌டுத்தும் க‌ருத்து என்ப‌தாக‌வே நான் எண்ணுகிறோம்.

    எல்லோரும் அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுளை ம‌ன‌மாற‌ வ‌ண‌ங்க‌லாம். அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுள்க‌ளின் த‌த்துவ‌ சிற‌ப்புக‌ளை எடுத்து வில‌க்க‌லாம். ஒவ்வொரு க‌ட‌வுளுக்கும் ஒரு த‌த்துவ‌ம் இருக்கிர‌து. சிவ‌னாரின் த‌த்துவ‌ம் ஒன்று. இராம‌ரின் த‌த்துவ‌ம் ஒன்று. ப‌ர‌சுராம‌ரின் த‌த்துவ‌ம் ஒன்று. ஆனால் எல்லோருமே ந‌ன்மைக்காக‌ தீமையை எதிர்த்து செய‌ல் ப‌டும் கொள்கை, செய‌ல‌ பாடு உடைய‌வ‌ர்க‌ல். அதே நேர‌ம் ஒவ்வொரு த‌த்துவ‌த்திலும் ஒரு சிற‌ப்பு உள்ள‌து. அத‌ன் புரித‌ல் ம‌க்க‌ளுக்கு உத‌வும்.

    த‌ன‌க்கு பிடித்த‌ க‌ட‌வுளை நெக்குருகி வ‌ண‌ங்குவ‌து , த‌ன் க‌ட‌வுள் வாழி பாட்டுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து, அந்த‌ வ‌ழி பாட்டு முறையை ப‌ர‌ப்புவ‌து என்ப‌து வேறு – ஒரு க‌ட‌வுள் ம‌ட்டுமே உண்மை அல்ல‌து பெரிய‌ க‌ட‌வுள் என்றும், ம‌ற்ற‌ க‌ட‌வுள்க‌ளை வ‌ண‌ங்க‌வே கூடாது என்ற வ‌ழி பாட்டு முறையை ப‌ர‌ப்புவ‌து போட்டிக‌ளை உருவாக்கும் என்ப‌துமே எங்க‌ளின் தெளிவான‌ க‌ருத்து.

    இதை தெளிவாக‌ சொல்லி இருக்கிறோம்.

    //மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம்//

    முனைவ‌ர் ஐயா, என்னை விட‌ வ‌ய‌திலும், அனுப‌வ‌த்திலும் மேலான‌வ‌ர் என்ப‌தால் அவ‌ரிட‌ம் தாழ்மையான் முறையிலே, ஆனால் தெளிவாக‌வே ந‌ம்முடைய‌ க‌ருத்தை தெரிவித்தோம்.

    சார‌ங், நீங‌க‌ளும் என்னை விட‌ வ‌ய‌த‌ன‌வ‌ர் என்றால் உங்க‌ளை தாழ்மையுட‌ன் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌வும் த‌ய‌க்க‌ம் இல்லை. ஆனால் ம‌க்க‌ள் ச‌முதாய‌ ந‌ன்மைக்காக‌ கொள்கை போராட்ட‌ம் தொட‌ரும். By the by நீங்க‌ள் இளைய‌வ‌ர் என‌ நினைக்கிறேன்.

  8. கந்தர்வன் on February 15, 2010 at 4:01 pm

    ஒரே ஒரு திருத்தம்:

    “‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம்.”

    என்பதை

    “‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது இந்துக்களில் ஒரு குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம்.”

    என்று பொருள் கொள்ளவும்.

  9. Sarang on February 15, 2010 at 7:40 pm

    ஜடாயு அவர்களே

    //
    சாரங், என்னையும் சேர்த்து சொல்கிறீர்களோ?? :) ) பரவாயில்லை.
    //

    இல்லை – வேறொரு கட்டுரையின் பின்னூட்டத்தில் நீங்கள் மட்டுமே இரண்டையும் சமமாக எட்திர்தீறல் என்று எழுதி இருக்கிறேன் – அதை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் (அதாவது அந்த கட்டுரையை track செய்து கொண்டிருக்கமாட்டீர்கள்)

    நான் சொல்லவந்ததை முழுவதுமாக பார்த்தல் இப்படி உங்களுக்கு தோணாது என நினைக்கிறேன் அதாவது இந்த இரண்டு பத்திகளையும் சேர்த்து ஒரு பொருள் கொண்டால் [சைவர்களுக்கு சிவன் பரமாத்மா அதனால் அவர்கள் இப்படி கொண்டது தவறில்லை]

    //
    எனக்கு அப்படி என்னும்படி இல்லை – சிவனை பரமாத்மாவாக கொண்டாடுபவர்கள் – மற்றவரை ஜீவாத்மாவாககும் நினைப்பார்கள் – அப்படி இருக்கையில் எல்லா தொழிலையும் சிவனே செய்வதாக நினைப்பார்கள்
    இதை வெறுப்பு கருத்து எனு எண்ணவதற்கு ஏதும் இல்லை – முனைவர் அய்யாவை பார்த்தாலே அன்பு நிறைந்தவர் வெறுப்பு இல்லாதவர் என்று தான் தோன்றுகிறது

    மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்
    //

    //
    அவ்வளவு தான். ஒன்றில் படைப்பு, மற்றொன்றில் அழிப்பு. அதுதான் வித்தியாசம்! இரண்டையுமே குறியீட்டு ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
    //

    நானும் இதே கருத்தை மனதில் கொண்டு தான் இப்படி சைவ புராங்களில் வருவது த்வேஷம் சார்ந்தது அல்ல என்றே கொள்ளவேண்டும் என்று கொண்டேன்

  10. Sarang on February 15, 2010 at 7:46 pm

    //
    சார‌ங், நீங‌க‌ளும் என்னை விட‌ வ‌ய‌த‌ன‌வ‌ர் என்றால் உங்க‌ளை தாழ்மையுட‌ன் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌வும் த‌ய‌க்க‌ம் இல்லை. ஆனால் ம‌க்க‌ள் ச‌முதாய‌ ந‌ன்மைக்காக‌ கொள்கை போராட்ட‌ம் தொட‌ரும். By the by நீங்க‌ள் இளைய‌வ‌ர் என‌ நினைக்கிறேன்.
    //
    நண்பரே நான் சம நோக்குடயவர்களின் லக்ஷணங்களை சொன்னேன் [கண்ணன் சொன்னதை ] – நான் என்னை கூறியதை பற்றி சொல்லவில்லை – அந்த எண்ணம் எல்லாம் எனக்கு வரத்து – வேறு சிலரையும் (வயதிலும்) முதியவர்களாக உள்ளவரையும் அணுகுவதில் வித்யாசம் இருந்தது அதையே சொன்னேன் – என்னை திட்டினால் திட்டுபவர்க்கு புண்ணியமே கிட்டும் (அப்படிப் பட்ட ஒரு கீழ் நிலை மனிதன் நான்)

  11. Sarang on February 15, 2010 at 8:41 pm

    கந்தர்வன் அவர்களே

    //
    புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத-த்வைத ஆச்சாரியார்கள் புராணங்களை literal-ஆகத் தான் வியாக்கியானம் பண்ணியுள்ளனர்.
    //

    இந்த கருத்தை ஒத்தே ஜடாயு அவர்களும் வேறொரு மறுமொழியில் (அடி முடி காண அதிசயம் ஒரு பார்வை) சொல்லி இருக்கிறார் – சைவ புராணங்களை குறியீடாக கொள்வர் ஆனால் வைணவ புராணங்களை அவதார நிகழ்வாகவே கொள்வர் என்று

    அதை தெளிவு படுத்தவே இதை தாழ்மையுடன் சொல்கிறேன்

    ஜடாயு அவர்கள் சொன்னது
    //
    பொதுவாக வைஷ்ணவ புராணங்களில் நிகழ்வுகள் மானுடச் செயல் போன்று அமைந்த தெய்வ லீலைகள் என்று கருதப் படுகின்றன. அவதார தத்துவம் என்ற சரடில் அவை அழகுறக் கோர்க்கப் படுகின்றன. உணர்ச்சிமயமான வெளிமுக பக்திக்கு அவை பெரிதும் தூண்டுதல் அளிக்கின்றன.

    ஆனால் சைவ (மற்றும் சாக்த) புராணங்கள் அனைத்துமே குறியீட்டுத் தன்மை கொண்டவை.
    //

  12. ஜடாயு on February 16, 2010 at 12:12 am

    // ஐயா, மீண்டும் கூறுகிறேன் – இந்த மனிதவியல் ஆராய்ச்சி எல்லாம் அரைகுரையானவை. இதை ஏற்றால், “ஆரியர்கள் நாடு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு படை எடுத்து வந்தனர்” போன்ற ஆராய்ச்சிகளையும் ஏற்க வேண்டியது தான்!! //

    ஐயா கந்தர்வன்,

    முதலில் நான் ”இந்துப் பார்வையில் எழுதப் பட்டிருக்கும் நல்ல நூல்” என்று சொல்லிக் குறீப்பிட்ட புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது அது பற்றி அறிவீர்களா? பின் எப்படி இப்படி வந்து ”அரைகுறை” என்று ஆணித்தரமாக கருத்து கூறுகிறீர்கள்?

    இன்றைக்கு இந்து மதத்தின் வரலாற்றை (மற்றூம் எல்லா புராதன மதங்கள், கலாசாரங்களின் வரலாற்றினையும் கூடத் தான்) மானுடவியல், சமூகவியல், அகழ்வாராய்ச்சி, மேலும் அறிவியல் அளிக்கும் பல்துறை உபகரணங்களையும் கொண்டு ஆராய்கிறார்கள்.. இதெல்லாவற்றையும் ஒரெயடியில் கொசு விரட்டுவது போல தள்ளிவிட்டு எனது ஐதிகம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது இதெல்லாம் அரைவேக்காடு என்று சொன்னால், அது நகைப்புக்குரியது மட்டுமல்ல, தற்கொலைக்கொப்பான செயலும் ஆகும். அப்படிச் சொல்லும் போக்கால் இந்து மதத்திற்கு நன்மை விளையாது, இழப்பே உண்டாகும்.

    ஆரிய இனவாதம் என்ற ஒரு தவறான கருத்தாக்கம் வரலாற்றுத் துறையில் இருப்பதால் (அதுவும் பெருமளவு தேய்ந்து விட்டது) *எல்லா* ஆய்வுகளுமே தவறாகுமா? அதெல்லாம் தூக்கிப் போடவேண்டியதா? என்ன பார்வை இது??

    ஏற்கனவே இந்துமதத்தை ஆய்வு நோக்கில், வரலாற்று, சமூகவியல் நோக்கில் அணுக, வெளிப்படுத்த, ஆய்வு செய்ய நாம் (அதாவது இந்து மரபின் மீது மரியாதை கொண்டு இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் கல்விகற்ற தரப்பினர்) பெருமளவில் தவறிவிட்டோம். நாம் கோட்டை விட்ட நேரத்தில் முற்றாக எதிர்த் தரப்புக்கள் அந்த discourse ஐ கையில் எடுத்து விட்டார்கள். இதிலிருந்து மிகவும் பாடுபட்டு நாம் மீண்டு வரவேண்டியிருக்கிறது. (இது பற்றிய ஒரு சித்திரத்திற்காக, invading the sacred என்று தமிழ்ஹிந்து தளத்தில் search செய்து அது பற்றிய ஒரு தொடரைப் படியுங்கள்).

    இரண்டு ஆபிரகாமிய மதங்களும் தாங்கள் எதிர்கொண்ட பழங்குடி மரபுகள் அனைத்தையும் சிதைத்து, அவற்றைச் சார்ந்தவர்களையும் கொன்றொழித்தார்கள் என்று வரலாறு நெடுக பதிவு செய்திருக்கிறது.

    ஆனால் இந்து தேசத்தில் அவ்வாறு நிகழவில்லை. பல்வேறு வனவாசிகள், பழங்குடியினரின் மரபுகளையும் (அது சார்ந்த மக்களையும்) இணைத்துக் கொண்டு சைவமும், வைணமும் விரிந்து பரந்தது என்ற உண்மையான வரலாற்றைச் சொல்வது சைவ, வைணவ சமயங்களுக்கு இழுக்கு அல்ல, மாறாக பெருமையே. இதை முதலில் உணருங்கள்.

    // பூரி ஜகன்னாதர் கோயிலையும் ஏழுமலையானையும் ஒரே இடத்தில் ரிக் வேதம் துதிக்கிறது (X.155.1, X.155.3). மிகவும் ச்பஷ்டமாகவே உள்ளது //

    ரிக்வேதத்தின் புவியியல் சரஸ்வதி, சப்த-சிந்துவுக்குள் தான். சில பிற்கால சூக்தஙக்ள் கங்கை யமுனை பற்றிப் பேசுகின்றன. அவ்வளவே. அதில் விந்திய மலையே இல்லை, பிறகு அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் எப்படி இருக்கும்? நீங்கள் சொல்வது ஒரு ஐதிக விளக்கமாகவோ, அல்லது சொற்களைக் கொண்டு செய்யும் ஊகமாகவும் மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.

  13. கந்தர்வன் on February 16, 2010 at 3:52 am

    திரு ஜடாயு,

    //
    ரிக்வேதத்தின் புவியியல் சரஸ்வதி, சப்த-சிந்துவுக்குள் தான். சில பிற்கால சூக்தஙக்ள் கங்கை யமுனை பற்றிப் பேசுகின்றன. அவ்வளவே. அதில் விந்திய மலையே இல்லை, பிறகு அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் எப்படி இருக்கும்? நீங்கள் சொல்வது ஒரு ஐதிக விளக்கமாகவோ, அல்லது சொற்களைக் கொண்டு செய்யும் ஊகமாகவும் மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.
    //

    மன்னிக்கவும், வேதங்கள் (சம்ஹிதம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் எல்லாம் சேர்த்து) – அநாதி, அபாருஷேயம் என்பதே வைதீக ஆஸ்திகர்களின் நம்பிக்கையில் ஒரு முக்கியப் பாகம். இதில் “முற்கால சூக்தம், பிற்கால சூக்தம்” என்று கூறுவது எல்லாம் ஏற்புடையது ஆகாது. ஐரோப்பிய அகழ்வாராய்ச்சி-வரலாற்று ஆராய்ச்சி செய்பவர்களிடமே பல கருத்து வேறுபாடுகளும் விவாதமும் உள்ளது. ஆகையால் இந்த ஆராய்ச்சியை வைத்து முடிவாக எதுவும் சொல்ல முடியாது. உதாரணமாக, தமிழ்ச் சங்க நூல்களுக்கு இவர்கள் கூறும் கால வரம்பிற்கு எதிராக சங்க நூல்களிலேயே சான்றுகள் உண்டு.

    ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சமஸ்கிருத ஞானத்திலும் அரைகுறை என்பதற்கு ஒரு சான்று, சங்கரருடைய பாஷ்யத்தில் “பிரும்மம் (பரம்பொருள்)” என்பதையும் “பிரம்மா (நான்முகன்)” என்ற பதத்தையும் George Thibaut என்னும் மொழிபெயர்ப்பாளர் பூசிக் குழப்பி இரண்டுக்குமே “brahman” என்று எழுதியுள்ளது.

    வேதங்கள் அபாருஷேயம் என்பது இன்றைய அனைத்து சங்கர, ராமானுஜ, மத்வ மடங்கள் இன்று ஏற்கும். வேத பாஷ்யகாரர்களும் இதையே எழுதியுள்ளனர்.

    சரி, விஷயத்திற்கு வருவோம். வேதமே இதிகாச-புராணங்களை “ஐந்தாம் வேதம்” என்று கூறுகிறது. இதிகாச-புராணங்கள் வேதங்களின் உபப்பிரம்மணம் (தெளிவாக விளக்குபவை) என்று மகாபாரதம் கூறுகிறது. ரிக் வேதம் X.155.1, X.155.3 ஆகிய மந்திரங்களை முறையே பவிஷ்ய புராணமும், ஸ்காந்த புராணமும் உபப்பிரும்மணம் பண்ணுகிறது (விளக்குகிறது). அவற்றுள், அம்மன்திரங்கள் முறையே திருமளையையும் ஜகன்னாதரையுமே குறிக்கின்றன என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. X.155.3 மந்திரத்தின் சம்ஸ்கிருத மூலத்தைப் படித்தாலே போதும், அது பூரி ஜகன்னாதனைத் தான் குறிக்கின்றது என்பது தெளிவாகும். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு ஓரளவு சரியாகத் தான் உள்ளது. அதைத் தமிழ்ப்படுத்துகிறேன்:

    “வெகுதூரத்தில் யாராலும் செய்யப்படாத, மனிதன் எவனுடைய துணையும் இல்லாமல் கடலில் மிதக்கும் மரக்கட்டையை போய்ப் பற்றுக. அவ்வாறு பற்றினால் வெகுதூரம் தாண்டிச் செல்லலாம்.”

    இன்றளவும் பூரி ஜகன்னாதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலிருந்து தானாகவே மிதந்து வரும் மரக் கட்டையைக் கொண்டு ஜகன்னாதனின் திவ்ய மங்கள மூர்த்தியை புதுப்பிக்கின்றனர் என்பதைக் கேள்விப்படுகிறோம்.

    சரி, வேத பாஷ்யத்ஹ்டில் சாயநாசாரியாரும் இவ்விடத்திற்கு “பூரி ஜகன்னாதனின் பெருமை கூறப்பட்டுள்ளது” என்றே எழுதுகிறார்.

    //
    முதலில் நான் ”இந்துப் பார்வையில் எழுதப் பட்டிருக்கும் நல்ல நூல்” என்று சொல்லிக் குறீப்பிட்ட புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது அது பற்றி அறிவீர்களா?
    //

    நூலை நான் படித்ததில்லை என்பது உண்மையே. இந்துப் பார்வையில் எழுதப்பட்டதாக இருந்தாலும் “வேதங்கள் அபாருஷேயம்” என்பதற்கு முரணாக இருந்தால் அதை வைதிக ஆஸ்திகர்கள் ஏற்கமாட்டார்கள். அவகாசம் இருந்தால் அதை எடுத்து ஆச்சாரியர்களிடம் கேட்டு அதில் வருபவற்றை நிராகரிக்க முடியும்.

  14. ஜடாயு on February 16, 2010 at 2:09 pm

    // வெகுதூரத்தில் யாராலும் செய்யப்படாத, மனிதன் எவனுடைய துணையும் இல்லாமல் கடலில் மிதக்கும் மரக்கட்டையை போய்ப் பற்றுக. அவ்வாறு பற்றினால் வெகுதூரம் தாண்டிச் செல்லலாம்.”

    இன்றளவும் பூரி ஜகன்னாதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலிருந்து தானாகவே மிதந்து வரும் மரக் கட்டையைக் கொண்டு ஜகன்னாதனின் திவ்ய மங்கள மூர்த்தியை புதுப்பிக்கின்றனர் என்பதைக் கேள்விப்படுகிறோம்.//

    இது ஒரு அதி அதீதமான ஊகம். கடலில் மிதக்கும் மரக்கட்டை என்பது நாவாயின் proto வடிவத்தைக் குறிப்பதாக இருக்கலாம். இது வேத இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் வரும் படிமம்.. உதாரணமாக, கடலில் மாட்டிக் கொண்ட புஜ்யு (Bhujyu) என்பவனை அஸ்வினி தேவர்கள் மிதக்கும் கட்டைகளைக் கொண்டு (படகின் ப்ரோடோ வடிவம்) காப்பாற்றுவது பற்றிய மந்திரம் பல சூக்தங்களில் வருகிறது. பூரி ஜகன்னாதரின் மர சிற்பம் பற்றிய ஐதிகம் மிகப் பிற்காலத்தில் ஏற்பட்டது.. அந்த ஐதிகத்தின் originஐயே நான் குறிப்பிட்ட புத்தகத்தில் நீங்கள் படிக்கலாம்..

    இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “கன்யகுமாரி” என்ற பெயர் ஒரு வேத சூக்தத்தில் வருகிறது.. அதே சூக்தத்தில் ”நாவேவ ஸிந்தும்” (கடலில் செல்லும் நாவாய்) என்ற குறிப்பும் வருகிறது. இதை வைத்துக் கொண்டு அது கடல் பக்கத்தில் இருக்கும் கன்யாகுமாரி என்ற ஊரைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் எப்படியிருக்கும் (சரியான crackpot theory என்று கருதப் படும்). அது போல்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.

    // வேதங்கள் அபாருஷேயம்” என்பதற்கு முரணாக இருந்தால் அதை வைதிக ஆஸ்திகர்கள் ஏற்கமாட்டார்கள். அவகாசம் இருந்தால் அதை எடுத்து ஆச்சாரியர்களிடம் கேட்டு அதில் வருபவற்றை நிராகரிக்க முடியும். //

    சந்தோஷம் அப்படிப் பட்ட “வைதிக ஆஸ்திகர்கள்” பெரும்பாலும் பிரசிங்ககளாக மட்டுமே இருப்பார்கள். அதனாலும் ஒன்றும் தவறில்லை. பிரசங்கிகளும் இந்து மரபின், சமூகத்தின் அங்கமே, மறுப்பதற்கில்லை.

    ஆனால் இந்துப் பார்வையில் சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் செய்வது, ஒரு genuine ஆன இந்து அறிவியக்கத்தை, இந்து அறிஞர்களே வளர்த்தெடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். அது ஒரு நவீன அறிவுத்துறை. அதி ஊகங்கள் கொண்ட பிரசங்க வியாக்கியானங்கள் அங்கு ஆதாரமாகாது.

    எனவே, நாம் இரு வேறுபட்ட விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டுமே ஒரு வாழும் மதத்திற்கு, கலாசாரத்திற்கு முக்கியமானவை. இரு தரப்புகளின் domainகளுக்கும் உள்ள எல்லைகளைப் புரிந்து கொண்டு நாம் பேசினால் தான் அது அர்த்தமுடையதாகும்.

    வேதங்கள் (அல்லது எந்த “புனித நூலுமே”) ”அபௌருஷேயம்” அல்ல, அவை அனைத்தும் மனிதர்களால் செய்யப் பட்டவையே என்பதே அறிவியல்ரீதியாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட முடியக் கூடிய கருத்து, என் கருத்தும் அதுவே (ஆனால், அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை.. “தமிழ் என் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்” என்ற புதுக் கவிதையை நினைவில் கொள்கிறேன்).

    வேதங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில், அனுபூதி நிலையில் உதித்த உன்னதமான கவிதைகள், உலகின் ஆதிமுதல் மெய்ஞான தரிசன வெளிப்பாடுகள் என்றே நான் கருதுகிறேன். (ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதைச் சொன்ன ரிஷி, சந்தஸ், தேவதை கொடுக்கப் பட்டுள்ளதை இப்படித் தான் நான் புரிந்து கொள்கிறேன் – it is a part of the documentation). இத்தகைய புரிதலுடன் ஒரு நல்ல “ஆஸ்திக” இந்துவாக நான் இருக்க முடியும் என்றும் நம்புகிறேன், அதை உறுதிபடவும் கூறுகிறேன்.

  15. கந்தர்வன் on February 16, 2010 at 3:12 pm

    ஒரே ஒரு விளக்கம். விவாதத்தை வளர்க்க அல்ல, வைதீக ஆஸ்திகர்கள் கருத்து என்ன என்பதை விமர்சிக்க மட்டுமே:

    //
    வேதங்கள் (அல்லது எந்த “புனித நூலுமே”) ”அபௌருஷேயம்” அல்ல, அவை அனைத்தும் மனிதர்களால் செய்யப் பட்டவையே என்பதே அறிவியல்ரீதியாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட முடியக் கூடிய கருத்து, என் கருத்தும் அதுவே (ஆனால், அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை.. “தமிழ் என் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்” என்ற புதுக் கவிதையை நினைவில் கொள்கிறேன்).

    வேதங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில், அனுபூதி நிலையில் உதித்த உன்னதமான கவிதைகள், உலகின் ஆதிமுதல் மெய்ஞான தரிசன வெளிப்பாடுகள் என்றே நான் கருதுகிறேன். (ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதைச் சொன்ன ரிஷி, சந்தஸ், தேவதை கொடுக்கப் பட்டுள்ளதை இப்படித் தான் நான் புரிந்து கொள்கிறேன் – it is a part of the documentation).
    //

    இந்தக் கருத்துக்கு எதிராக ஆதி சங்கரர் பதில் கூறுகிறார் (பிரும்ம சூத்திரம் I.iii.29):

    As the eternity of the Veda is founded on the absence of the remembrance of an agent only, a doubt with regard to it had been raised owing to the doctrine that the gods and other individuals have sprung from it. That doubt has been refuted in the preceding Sûtra.—The present Sûtra now confirms the, already established, eternity of the Veda. The eternity of the word of the Veda has to be assumed for this very reason, that the world with its definite (eternal) species, such as gods and so on, originates from it.—A mantra also (‘By means of the sacrifice they followed the trace of speech; they found it dwelling in the rishis,’ Rig-veda Samh. X, 71, 3) shows that the speech found (by the rishis) was permanent.—On this point Vedavyâsa also speaks as follows: ‘Formerly the great rishis, being allowed to do so by Svayambhû, obtained, through their penance, the Vedas together with the itihâsas, which had been hidden at the end of the yuga.’

    ஆகையால் சந்தச்சுடனும் தேவதையுடனும் ரிஷி சொல்லப்பட்டது வேதத்தினுடைய அபாருஷேயத்திற்கு முரணானது.

    //
    ஆனால் இந்துப் பார்வையில் சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் செய்வது, ஒரு genuine ஆன இந்து அறிவியக்கத்தை, இந்து அறிஞர்களே வளர்த்தெடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். அது ஒரு நவீன அறிவுத்துறை.
    //

    கண்டிப்பாகச் செய்யலாம். பிரத்தியட்சம் (empirical observation), அனுமானம் (inference) இவை எல்லாம் தக்க பிரமானன்களே. ஆகையால் இவ்வகை ஆராய்ச்சியும் வைதீகமே. ஆனால், நடுநிலையில் நின்று ஆய்வு செய்யவேண்டும். கிரித்துவத்தைப் பரப்புவதற்காக மாக்ஸ் முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்களுடைய “ஆழ்ந்த ஊகத்தை” எல்லாம் கண்மூடித் தனமாக ஆய்வில்லாமல் ஏற்கக் கூடாது. மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய அறிவியல் ஆராய்ச்சியிலோ, peer review, reputation, funding from third parties, போன்ற considerations உள்ளன. அரசியல்வாத அழுத்தங்கள் (political pressures – can someone suggest a better translation? ;-) ) பல உள்ளன. ஆகையால் எந்த ஆராய்ச்சியாளரும் தாங்கள் 20-30 வருடங்களாக ஏற்றுக் கொண்டதை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் (ஆதாரங்கள் கிடைப்பினும்). ஆகையால், இந்நாளில் ‘நடுநிலை ஆராய்ச்சி’ என்பது இந்நாளில் அவ்வளவு சாத்தியம் இல்லை.

    ஏன் சொல்கிறேன் என்றால், நானும் ஆராய்ச்சித் துறையில் தான் வேலை பார்க்கிறேன். இத்துறையில் முனைவர் பட்டம் வைத்துக் கொண்டு அவரவர் செய்யும் பித்தலாட்டத்தை தினமும் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் போது இவ்விஷயங்களை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது சக்தி இருந்தால் ஆதாரங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்ந்த பிறகே அதை உண்மை என ஏற்க முடியும்.

  16. ஜடாயு on February 16, 2010 at 3:44 pm

    அன்பின் கந்தர்வன்,

    // ஆகையால் சந்தச்சுடனும் தேவதையுடனும் ரிஷி சொல்லப்பட்டது வேதத்தினுடைய அபாருஷேயத்திற்கு முரணானது. //

    ”முரணானது அல்ல” என்று சொல்ல வந்தீர்கள் என்று தோன்றுகிறது.
    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் “அபௌருஷேயம்” என்பதை என்ன பொருளில் புரிந்து கொள்வது என்பதற்கு அறிவுபூர்வமான விளக்கம் தேவை என்று நினைக்கிறேன்.

    இந்த விஷயம் பற்றி பகழ்பெற்ற வேத அறிஞர் ஆர்.எல்.கஷ்யப் சொல்வதைக் கீழே அளித்திருக்கிறேன்.. இவர் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பெங்களூரில் ஒரு சிறந்த வேத அகாடமியை நடத்தி வருகிறார், வேதம் பற்றிய பல நூல்களை மிக நேர்த்தியாகப் பதிப்பித்தும் உள்ளார்.

    http://vedah.com/org/literature/vedaBooks/mantrasReveal.asp
    Mantrās themselves reveal the secret

    But the real greatness of the mantra lies, as we learn from the mantrās themselves, in the mode of coming to expression. There is a rik of Dīrghatamas declaring that the abode of the mantra is the supreme Ether known as akşhara, unmoving, where dwell all the Gods; and for him who knows this not, the riks have no use. Here is the rik: “The riks abide in the Immutable, supreme Ether where are seated all the Gods; what can he do with the rik who knows not that? Those who know that are indeed here assembled”, RV (1.164.39). There is this another rik in the same hymn: “The voice, vāk, is measured out in four steps; the wise persons brāhmaņa persons know them. Three of them concealed in the profound secrecy cause no movement; the fourth step is what men call the human speech” RV (1.164.45). The import of this rik is profound. The kavi, the seer of the mantra, delves deep into the inner ocean of the heart, has direct perception of the Home of the Gods, the Fourth Plane turīya and expresses the truths he sees in the words of inspiration that are heard on the acquisition of the primal Word. Thus there are four stations or steps of the vāk, Speech, that sets out from the supreme station of Unmoving. Of these, three stations are concealed in the secrecies, secret, not audible to the human ear and the fourth one, in its descent, is the human speech. All the four stages of Speech are known to the rişhi, one who has control of mind, who is consecrated in the secret and inmost parts of his being, not to any other. Thus is it famous that mantrās were not made but were seen by the kavi, the Seer, the satyashrut. And because the paramam vyoma, Supreme Ether, the abode of the Gods and the original source of the Speech of the riks, is not a creation of anyone, the Veda mantrās manifested out of it are also by courtesy identified with it and are said to be eternal. The paramam vyoma has been there before the appearance and after the disappearance of the rişhi, the seer of the mantra. It does not depend (for its existence) on the seer; on the other hand, the perception of the mantra is possible because of it. The mantra-word and its inalienable meaning are there in the sublime spaces of Ether, self-existent but their manifestation depends upon the achievement and competence of the rişhi. That is how we see frequent mention made in the rik samhita of the rişhi as the author of the mantra e.g. “O Seer, by the lauds of the hymn-composers” RV (9.114.2). “They chanted the mantrās carved out of the heart” RV (1.67.2).

    http://vedah.com/org/literature/vedaBooks/eternalityOfVeda.asp
    Eternality of the Veda and the role of rişhis

    When such riks clearly bring out the nature of mantrās as being created, how, it may be asked, can the Veda be said it be eternal, uncreated? The rik quoted above refers to the original, basic vāk, word, of the mantra abiding in the paramam vyoma, when it speaks of it as eternal. The entire Veda came to be understood as eternal on account of its origin in the paramam vyoma. Consider the rik (8.75.6) by the seer Virūpa. “O Virūpa, by the eternal word give now the impulse of the high laud to the Luminous One”. Even Sāyaņa’s commentary on the rik agrees with this. For he says: “By vāk, is meant speech in the form of mantra, which is eternal that is to say, not produced”. In this view, as explained by us, there is no contradiction inconsistency between the eternality of the Veda and the authorship of the rişhi. This has been clarified by Patanjali, author of the mahābhāşhya, while explaining the sūtra (4.3.101) of Pāņini. Patanjali accepted the eternality of the word and idea contained in the Veda, but not of the arrangement and order of syllables, words and sentences. The arrangement of words in the mantra-verse is of the rişhi’s making for the purposes of making the Veda known. Thus both the statements that the Vedās are both created and uncreated are compatible. That the riks are poetry of an extraordinary kind wherein lies their mantra-character, is evidenced by the hymns of Dīrghatamas and Virūpa above referred to. There are hundreds of such instances in the rik samhita which describe the glory of Speech, but they are not mentioned here for fear of swelling the subject with details.

  17. Sarang on February 16, 2010 at 4:41 pm

    வேதத்தில் உள்ளவைகள் ஒரு மனித அறிவுக்கு அப்பாற்பட்டவையே –

    நீரில் இரண்டு வாயு உண்டு அதில் ஒரு வாயு பிராண வாயு – நிலாவில் மண் கருப்பு போன்றவை பிரத்யக்ஷ்மாகவோ, அனுமானம் மூலமோ அறியவள்ளது அல்ல – ரிஷிகள் இயற்றியது என்பது அவர்கள் தவம் செய்து சூக்ஷ்மமான ஒன்றை அறிந்து கொண்டு அந்த மந்திரத்தை ஒரு சூத்ரம் போல முன்வைத்ததையே குறிக்கும் [மந்திரம் as it is இருந்தது என்பது இல்லாமல் இருக்க வைப்பு உண்டு ] – இன்றும் யாரேனும் தபஸ் செய்தால் நாம் தொலைத்த சம்ஹிதைகளை திரும்ப பெறலாம்

    வேடம் என்பது எல்லா லோகத்துக்கும் பொது – எல்லா லோகத்திலும் சிந்து நதி இருக்க வாய்ப்பு இல்லை- சிந்து நதி போன்ற விஷயங்கள் ரிஷிகள் மூல கருத்துடன் சேர்த்து சொல்லி இருக்கலாம் – ரிஷிகள் உணர்ந்தவற்றை தவிர இன்னும் பல மந்திரங்கள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது

    நீ எதை கொண்டுவந்தாய் இங்கு இழப்பதற்கு என்பதன் மூலம் எல்லாமே இங்கு தான் உள்ளது நித்யமாக உள்ளது என்றும் கொள்ளலாம்

  18. C.N.Muthukkumaraswamy on February 16, 2010 at 11:34 pm

    வழக்கம் போல மறுமொழிகள் மிகச் சுவையாக இருக்கின்றன. திருச்சிக்காரர், கந்தர்வன், சாரங் போன்ற இளைஞர்கள் இந்த இடுகைகளைப் படித்து அறிவு சார்ந்த மறுமொழிகளை வழங்குகின்றார்கள். அனைவர்க்கும் என்பாராட்டுக்களும் நன்றியும்.
    சாதகர்களுக்கு அவர்கள் கொண்டொழுகும் நெறிமீது வெறிபோன்ற பத்தி இருப்பது இயல்பு; அது ஒருவகையில் வேண்டியதும் கூட.

    இருப்பது ஒரே பரம்பொருள். சைவனுக்கு வேறுகடவுள் வைணவனுக்கு வேறு ஒரு கடவுள் என இருந்தால் அல்லவா இருவருக்கும் சமரச உடன்படிக்கையும் சமயப் பொறையும் சகிப்புத் தன்மையும் தேவை. சைவம் சுவானுபவத்தை வலியுறுத்த வைணவம் குணானுபவத்தை வலியுறுத்தும். வடிவமில்லாத பரம்பொருளின் இலக்கணத்தை வடிவத்தோடு கூடியதாகப் பேசிப் பக்தன் இறை அனுபவம் பெறுகின்றான். விஷ்ணுவுக்கு உருவமே(அர்ச்சை) சிரேஷ்டம் என வைணவம் பேசும். சைவம் சிவனுக்குத் திரிநேத்ரம் காளகண்டம் சதுர்புயம் என உருவங்கூறினாலும் அருவ நிஷ்களத்தையே சிரேஷ்டமாகக் கூறும். சிவவியாபகத்தில் பரிபூரணமாதலையே முத்தி எனச் சைவம் பேசும். பரிபூரணம் என்பது வடிவமில்லாதது. ஆதலின் அந்த பரிபூரணத்துக்கே அளவிறந்த வடிவங்கள் உண்டு என்றும் திருமால் வடிவமும் அவற்ரில் ஒன்று என்றும் நாரணன் முதலிய நாமங்கள் இடுகுறியாகவும் காரணக்குறியாகவும் வடமொழி இலக்கணப்படியும் சிவம் ஆகிய பரம்பொருளுக்கும் உரியன என்று திராவிட மாபாடியம் பேசும் இதில் எதுவும் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற விவாதத்துக்கே இடமில்லை. இது சாதகனின் பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற அமையும். ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அவற்றின்வியாக்கியானங்களிலும் சைவன் ஈடுபடுவானேயன்றி ஒதுங்கமாட்டான். நிஷ்கள சிவனைப் பாடும் நாயன்மாரும் உருவத்திற்கு உரிய குணங்களை ஏற்றியே பாடியருளியுள்ளனர். அந்த அருளிச்செயல்களை பிரபந்த வியாக்கியானப் பின்னணியில் வாசிக்கும்போது சைவன் அடையும் ஆனந்தம் அலாதியானது.
    “எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே” என்ற நம்பியாரூரரின் வாக்குக்கு விளக்கமாக அமைந்தது, “அபூர்ணன் என்றா, நிஹிதன் என்றா,வடிவழகில்லை என்றா மேன்மையில்லை என்றா, எனக்கு உபகாரி இல்லை என்றா, எத்தைச் சொல்லி மறப்பேன்”(திருவாய்மொழி 1-10-9) என்னும் ஈட்டுரை. இந்த அனுபவம் சைவம் வைணவம் இரண்டற்கும் பொது.

    சைவம் புராணக்கதைகளைக் கருத்தை விளக்கும் குறியீடாகக் கொள்ளுகின்றதே யன்றிப் பிரமாணமாகவும் உண்மை வரலாறாகவும் கொள்வதில்லை. சைவர்கள் போற்றும் புராணங்களில் கடவுளர்கள் கூடக் கதை மாந்தர்களாக வருகின்றனர். எடுத்துக் காட்டாக, சைவப்புரானங்களில் சிறந்ததாகிய திருவிளையாடற்புராணத்தில், வலைவீசின படலம் என்றொரு கதை உள்லது. அதில், ஆலவாய் அழகன் இறைவிக்குத் தனித்ததோர் இடத்திலிருந்து ‘மந்தணமான வேதமறைப் பொருளை’ உனர்த்தினான்.இறைவன் கூறியருளிய மறைப்பொருலை யாது காரனத்தாலோ எம்பிராட்டி ‘மறதி அடைந்தாள் போலக் கவலையுள் சிறிது தோன்ற ஆதரமிலலாய்க் கேட்டாள்’ . இதனைக் கண்ட இறைவன், ‘எம்பால் பராமுகையாகி வேதப் பயன் ஒருட்படாது கேட்டாய். இக்குற்றந்தன்னால் விரதமும் அறனும் இன்றி மீன்படுத்து இழிஞரான பரதவர் மகளாகுக’ எனச் சபித்திட்டான். தாய்க்குப் பரிந்து வந்த முருகனை ஊமையாகுக எனச் சபித்தான். என்று இப்படி கதை போகின்றது.

    வேதப் பொருளை எப்படிக் கேட்க வேண்டும் எனவலியுறுத்துவதே இந்தக் கதையின் பயன். சாத்திரம் படித்த சைவர்கள் சிவமும் சத்தியும் பிரிக்கமுடியாத குணகுணியாகிய தாதான்மிய சம்பந்தம் உடையவர் என்றும் ஐம்முகச் சிவமே அறுமுகச் சிவம் என்று அறிவர். இக்கதை அம்பிகையின் பெருமையைக் குறைத்துவிட்டது என்றோ முருகனைச் சிறுமைப் படுத்திவிட்டதென்றோ சைவர்கள் கருதுவதில்லை. ஏனென்றால் சிவசத்தியும் முருகனும் யார் என்பாதை அவர்கள் நன்கறிவார்கள்.

    சிவம் வேறு சம்புபட்ச திருமால் வேறு என்று சைவர்கள் கருதுவதில்லை. குணங்குறியற்ற சிவத்தின் எண்ணற்ற தடத்த வடிவங்களில் ஒன்று திருமால் மூர்த்தம். திருமாலை முருகனுக்கு மாதுலன் எனப் போற்றும் அருணகிரிப் பெருமான் ஒரு திருப்புகழில்,”ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை யிகழ்வோர்கள் — — ஏழ்நரகு உழல்வாரே” என்றார். விஷ்ணுவுக்குச் சேவை செய்வோரை இகழ்ந்தாலே ஏழ்நரகுத் துன்பம் என்றால், விஷ்ணுவையே இகழ்ந்தால் எத்தகைய துன்பம் நேரிடும். இதனைச் சைவர்கள் அறியாரல்லர். ஏனெனில் சிவமும் விஷ்ணுவும் வேறல்லர்.

    சிவத்தின் அடி தேடிகர்வ பங்கம் அடைந்த திருமால் பரம்பொருளான திருமால் அல்ல. திருமால் என்ற பெயருடைய உயர்பதவியில் இருந்த ஆன்ம வர்க்கத்தில் ஒருவனே.

  19. கந்தர்வன் on February 17, 2010 at 2:17 pm

    விளக்கங்களை பொறுமையாக எழுதியதற்கு முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

    வைணவர்களின் தரப்பிலிருந்து வரும் விளக்கங்களையும் அறிந்தால் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்க நல்ல வாய்ப்புண்டு என்று நம்புகிறேன். ஆகையால், அனைவர்க்கும் பயன் கருதி இம்மறுமொழியை எழுதுகிறேன்.

    //
    சாதகர்களுக்கு அவர்கள் கொண்டொழுகும் நெறிமீது வெறிபோன்ற பத்தி இருப்பது இயல்பு; அது ஒருவகையில் வேண்டியதும் கூட.
    //

    “வெறி போன்ற பக்தி” என்று சொல்வதை விட, “தத்துவங்களைத் தெளிவாக அறிவதன் மீதும், அவற்றைத் தெரிந்த அளவிற்கு விமர்சனம் செய்வதின் மீதும் உள்ள நாட்டம்” என்று கூறுவது பொருந்தும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

    //
    விஷ்ணுவுக்கு உருவமே(அர்ச்சை) சிரேஷ்டம் என வைணவம் பேசும்.
    //

    இத்துடன்,

    (௧) இறைவனின் அவதாரங்கள் உண்மையே.

    (௨) பகவான் நம்மைப் போன்று இல்லாமல் தானே ‘இன்ன இன்னாரைத் தாய்-தந்தையாகத் தேர்ந்து எடுத்துப் பிறப்போம்’ என்று சங்கல்பித்துப் பிறக்கிறான், ஆகையால் அவன் பிறப்பு தாழ்மையைக் குறிக்காது – மாறாக அவனுடைய எளிமையைக் (ஜீவர்களுக்கு கருணையாலே நேரில் வந்து காட்சி அளிப்பது போன்றவற்றை விரும்புகிறான் என்பதைக்) குறிக்கும்

    (௩) அவதாரம் பண்ணி செய்த சேஷ்டிதங்கள் உண்மையே; மகாபாரதம், இராமாயணம், பாகவதம், முதலிய புராணங்களின் கதைகள் உண்மையே

    இவை மூன்றும் வைணவர்களுடைய நம்பிக்கையின் முக்கியப் பாகங்கள். ஆகையால், வைணவத்தில் புராணங்களைப் பிரமாணமாக எடுப்பது உண்டு.

    //
    சிவத்தின் அடி தேடிகர்வ பங்கம் அடைந்த திருமால் பரம்பொருளான திருமால் அல்ல. திருமால் என்ற பெயருடைய உயர்பதவியில் இருந்த ஆன்ம வர்க்கத்தில் ஒருவனே.
    //

    இதை முன்பு நீங்கள் பண்ண கட்டுரையிலிருந்தே நான் அறிந்து கொண்டேன். ஆனால், பாமர மக்களுக்கு இது அவ்வளவாகப் புரியாது என்று நினைக்கிறேன். ஆகையால், “பரம்பொருளான திருமால் அல்ல” என்பதைத் தெளிவாக, “அனைவரும் கோயில்களில் வழிபடும் வைகுண்ட வாசியான திருமால் அல்ல, திருமால் என்ற பெயருள்ள வேறு ஒரு தேவதை.” என்று கூறினால் சர்ச்சை நடவாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இம்மாதிரி புராணக் கதைகளை விவரிக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவாக நான் கூரியபடியோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றையோ விளக்கம் தந்தாள் நல்லது என்று அனைவரிடமும் வேண்டுகிறேன்.

  20. திருச்சிக் கார‌ன் on February 17, 2010 at 10:57 pm

    மதிப்பற்குரிய முனைவர் ஐயா அவர்களே,

    ந‌ன்றி ஐயா, மிக்க‌ ந‌ன்றி.

    ஒவ்வொரு வார்த்தையும் அமுத‌மாக‌ உள்ள‌ன‌.

  21. ந. உமாச‌ங்க‌ர் on February 19, 2010 at 9:56 pm

    பெருமதிப்பிற்குரிய முனவர் அவர்களுக்கு

    தங்களது முதிர்ந்த அனுபவமும், அகந்தையை வென்ற ஆழ்ந்த அறிவும் தங்கள் மறுமொழியில் பளிச்சிடுகின்றன. சைவத்தின் தனிச்சிறப்பான சமரசப்பாங்கும் அரவணைத்துச்செல்லும் பக்குவமும் தங்களது பதிலில் மின்னுகின்றன. அனைவருமே தங்கள் பாணியைப் பின்பற்றுதல் நலம் எனத் தோன்றுகிறது.

    சிவமயம்.

  22. ந. உமாச‌ங்க‌ர் on February 19, 2010 at 10:13 pm

    கந்தர்வன் அவர்களெ,

    /// ஆகையால், “பரம்பொருளான திருமால் அல்ல” என்பதைத் தெளிவாக, “அனைவரும் கோயில்களில் வழிபடும் வைகுண்ட வாசியான திருமால் அல்ல, திருமால் என்ற பெயருள்ள வேறு ஒரு தேவதை.” என்று கூறினால் சர்ச்சை நடவாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இம்மாதிரி புராணக் கதைகளை விவரிக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவாக நான் கூரியபடியோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றையோ விளக்கம் தந்தாள் நல்லது என்று அனைவரிடமும் வேண்டுகிறேன்.//

    இதே போலவே யாருமே வேதப்பிரமாணங்கள் நாராயணனை மட்டுமே பரப்பிரம்மம் என்று கூறுகிறது என்று கூறாமலும் அப்படியே இதுபற்றி கூறவேண்டி வந்தாலும், சில உபநிஷத்துகளும், வேதப்பிரமாணங்களும் சிவனையே பரப்பிரம்மம் என்று கூறுகின்றன என்றும் எழுதவேண்டும் என்றும் கூறுங்களேன். அதுதான் ந‌ல்ல‌து.

  23. திருச்சிக் காரன் on February 20, 2010 at 2:00 am

    திரு உமா சங்கர் அவர்களே,

    நன்று சொன்னீர்கள். அவரவர் அவரர் பாணியை பின்பற்றுவதே சிறப்பு.

    அப்போதுதான் வழி பட்டு முறைகள் அழிந்து விடாமல் இருக்கும். அதே நேரம் அவ்வப் பொது, இந்து மதத்தின் பிற வழி பட்டு முறைகளையும் சிறிது அனுஷ்டிப்பது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    சைவர்கள் ஒரு வருடத்திலே 50 நாட்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை மனப் பூர்வமாக வழிபட்டால், வருடத்திலே ஓரிரு நாட்களாவது பெருமாள் கோவிலுக்கும் சென்று பெருமாளை வழி படுவது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    இதன் மூலம் இந்துக்கள் சமரசப் போக்கு உடையவர்கள் என்பதும் திண்ணமாகும். அதன் மூலம் சைவர்கள் எந்த தெய்வத்தையும், நிந்திக்கவோ, புறக்கணிக்கவோ செய்யாதவர்கள் என்பதும் நிரூபணமாகும்.

    மேலும் சொக்க நாதருக்கு, நாராயணர் தனது தங்கை மீனாட்சியை மணமுடித்துக் கொடுத்ததாகவும் , முருகனுக்கு நாராயணர் மாமா முறை என்பதாகவும் வழக்கில் உள்ளதும் நீங்கள் அறிந்ததே.

    பிராடச்டண்டு கிறிஸ்தவர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ தெய்வம் மேரியை வணங்காமல் புறக்கணிப்பது போல செய்து விடாமல் இந்துக்கள் சமரசத்தை , சகிப்புத் தன்மையை பின்பற்றி வருகின்றனர்.

  24. கந்தர்வன் on February 20, 2010 at 7:57 am

    திரு உமாசங்கர் அவர்களே,

    // இதே போலவே யாருமே வேதப்பிரமாணங்கள் நாராயணனை மட்டுமே பரப்பிரம்மம் என்று கூறுகிறது என்று கூறாமலும் அப்படியே இதுபற்றி கூறவேண்டி வந்தாலும், சில உபநிஷத்துகளும், வேதப்பிரமாணங்களும் சிவனையே பரப்பிரம்மம் என்று கூறுகின்றன என்றும் எழுதவேண்டும் என்றும் கூறுங்களேன். அதுதான் ந‌ல்ல‌து. //

    நான் எழுத வந்தது என்ன என்றால், உங்களுடைய கடவுட்கொள்கையின் படி “சிவனும் விஷ்ணுவும் ஒன்று” என்று கூறுவீர்கலானால், திருமாலுக்குத் தாழ்மையைக் கூறும் புராணங்கள் “பரம்பொருளான திருமாலைப் பற்றியது அல்ல; வேறு தேவதையைப் பற்றியது” என்று தெளிவாக, பாமரர்களுக்குப் புரியுமாறு எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். “சம்பு பட்சம், அணு பட்சம்” போன்ற சொற்கள் அவ்வளவு எளிதில் புரியாது. நீங்கள் கூறுவதைப் பாமரர்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்று எண்ணுவர் என்று உங்கள் நன்மைக்காக கூறுகிறேன்.

    என்னுடைய கடவுட் கொள்கையை இங்கு விமர்சிக்க வரவில்லை. சிலர் விஷ்ணுவை “அகந்தை உற்றார்” என்று கூறியதாலும், புறந்தொழாக் கோட்பாட்டை “காட்டுமிராண்டித்தனம், ஜிஹாதி வன்முறை, அரபு பாலைவனத்தில் தோன்றிய பிற்போக்குக் கோட்பாடு” என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது.

    உபநிஷத்துக்கள் யாரை பரப்பிரம்மாக கூறுகிறது என்பதை சங்கரர், ராமானுஜர், மத்வர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனி, ஏன் வட நாட்டு புஷ்டி மார்க்கம், நிம்பர்க சம்பிரதாயம், ராமானந்தி சம்பிரதாயம், இவை எல்லாம் ஒருமுகமாக கூறுகின்றன. இந்த ஆச்சாரியர்களின் பாஷ்ய நூல்களிலிருந்து தான் கற்கிறேன். பரிபாடலிலும், “மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி” என்றும், “நாறு அணி துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ” என்றும் பழந்தமிழர்கள் கோஷம் இட்டுள்ளனர். இதை எல்லாம் வைத்து ஒருசேர நடுநிலை நின்று ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். இதற்கு மாறாகவும் முரணாகவும் என்னால் எழுத முடியாது. இதற்காக எந்த தேவதை மேலும் எனக்கு வெறுப்பு உண்டு என்று எண்ணுவது தவறு.

    சொல்லப்போனால், எந்த தேவதையாக இருந்தாலும், எந்த புராணமாக இருந்தாலும், தேவதைகளின் தாழ்மையைக் கூறும் கதைகளை இங்கு விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறேன். இதில் பிரம்ம தேவர் கோப குமாரர்களையும் மாடுகளையும் அபகரித்த கதை, பஸ்மாசுரன் கதை, பாணாசுரன் கதை, இந்திரன் கௌதமர் சினத்துக்கு ஆளான கதை, இந்திரன் நந்தகிராமத்தவர்கள் மீது சினந்து கொண்டு கல்மாரி பொழிந்து தவற்றை உணர்ந்து கண்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கதை, இவையும் அடங்கும்.

    இந்த கதைகளை எல்லாம் public fora-க்களில் விமர்சிக்க வேண்டாம். அவரவர்க்கு இவற்றைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டால், தமது ஆச்சாரியர்களையோ, பெரியோர்களையோ கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

    நன்றி,

    கந்தர்வன்.

  25. கந்தர்வன் on February 20, 2010 at 8:00 am

    பிழைதிருத்தம்:

    // …என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது. //

    // …என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், எங்கள் கடவுட் கொள்கையைத் தெளிவாக விமர்சனம் பண்ணி கட்டிக் காப்பாற்ற அவசியம் வந்தது. //

  26. திருச்சிக் கார‌ன் on February 20, 2010 at 1:04 pm

    //புறந்தொழாக் கோட்பாட்டை “காட்டுமிராண்டித்தனம், ஜிஹாதி வன்முறை, அரபு பாலைவனத்தில் தோன்றிய பிற்போக்குக் கோட்பாடு” என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது.//

    நீங்க‌ள் ஏன் சிந்திக்க‌க் கூடாது?

    ம‌ற‌ந்தும் புற‌ம் தொழாமை என்ப‌து ‍ தான் வ‌ழி படும் க‌ட‌வுளைத் த‌விர‌ வேறு எந்த‌க் க‌ட‌வுளையும் எந்த‌ நேர‌மும் தொழ‌க் கூடாது என்ப‌தே.

    இப்போது ஒருவ‌ர் சைவ‌ர் என்றால், அவ‌ர் பெருமா ள் கோவிலுக்கு சென்று வ‌ண‌ங்கினால், பெருமாள் ப‌க்த‌ர்க‌ள் மகிழ்ச்சி அடைவார்க‌ள். இவ்வாராக ந‌ல்லிண‌க்க‌மும் , ச‌ம‌ய‌ ந‌ட்பும் உருவாகிறது.

    எந்த‌க் கார‌ண‌த்தை முன்னிட்டும் பெருமாள் கோவில் இருக்கும் தெருப் ப‌க்க‌ம் கூட‌ அவ‌ர்க‌ள் போக‌ மாட்டேன் என்றால், அது பிண‌க்க‌த்தை, பூச‌லை, த‌க‌ராறையே உருவாக்கும். முன்பு அவ்வாறு உருவாக்கி இருக்கிர‌து.

    இந்து க‌ட‌வுல்களையே ஒருவ‌ரை ஒருவ‌ர் ப‌ழிப்ப‌து, ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து தேவையில்லை. துவேஷ‌ம் இல்லை என்று சொல்லுவார்க‌ள், துவெஷ‌ம் அதாக‌ வ‌ருகிற‌து.

    புற‌ந்தொழாமை அச்சு அச‌லான‌ ஆபிரகாமிய‌க் கொட்பாடே. த‌ன் ம‌தத்த‌வ‌ர் வேறு க‌ட‌வுளை வ‌ழி ப‌ட்டால் அந்த‌ ம‌த‌த்திற்க்கு போய் விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌த்தினாலெ புற‌ம் தொழாமை உருவான‌து.

  27. Sarang on February 20, 2010 at 7:58 pm

    //
    புற‌ந்தொழாமை அச்சு அச‌லான‌ ஆபிரகாமிய‌க் கொட்பாடே. த‌ன் ம‌தத்த‌வ‌ர் வேறு க‌ட‌வுளை வ‌ழி ப‌ட்டால் அந்த‌ ம‌த‌த்திற்க்கு போய் விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌த்தினாலெ புற‌ம் தொழாமை உருவான‌து.
    //

    அமாம் அமாம் பயமே காரணம்

    ஆழ்வார் ரொம்ப பயந்து தான் நாலாயிரம் சொன்னார் – ராமானுஜர் எல்லோரையும் வைணவர் ஆக்க வேண்டும் என்பதற்காகவே திரு மந்திர உபதேசம் எல்லோருக்கும் தந்தார் – தேசிகர் முகலாய படை எதுப்பின் பொது எல்லோரும் இஸ்லாமியர் ஆகிவிடுவார் என்பதற்காகவே அப்ஹீதி ஸ்தவம் செய்தார் – இன்ன பிற ஆசார்யர்கள் நமது மக்கள் நமது மதத்து நூல்களே படித்து கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணி தேவையே இல்லாமல் எக்க சக்க கிரந்தங்களை செய்தார்கள் – தேவையா சொல்லுங்கள் திருவாய்மொழி என்பது ஆயிரம் சொச்சம் பாடல்கள் – அதற்க்கு ஒருவர் அராயிரப்படி செய்கிறார், ஒருவர் ஒன்பதாயிர படி செய்கிறார், ஒருவர் பன்னிரெண்டாயிரம், ஒருவர் இருவத்தி நாலாயிரம் ஒருவர் முப்பத்தி ஆறாயிரம் – இது மக்கள் இதை படித்துக்கொண்டே இருக்கணும் அதற்கே நேரம் சரியாய் இருக்கும் என்று எண்ணி செய்த திட்டமிட்ட செயல்

    நாய்னன்மார்களும் இப்படி பயந்து தன நிறைய திருமறை செய்தார்கள் –

    ராமாயணம் இருவத்தி நாலாயிர ஸ்லோகம், கீதை பதினெட்டு காண்டம், பதினெட்டு புராணங்கள், எவ்வளோ உபநிஷத்கள், பெரிய மகா பாரதம், பாகவதம், இப்படி இன்னபிற விஷயங்கள் எல்லாமே திட்டமிட்ட செயல் தான்

    இப்படி மேலே உள்ள எல்லாத்தையும் படித்து மக்கள் எஆந்து இருப்பார்கள் – அதனால் மதம் மாற மாட்டார்கள் இரு எண்ணியே இவை யாவும் செய்யப்பட்டன

  28. திருச்சிக் கார‌ன் on February 20, 2010 at 10:41 pm

    உப‌னிட‌த‌ங்க‌ள் சிற‌ப்பான‌ உண்மைகளையே கூறியுள்ள‌ன‌. அவ‌ற்றை த‌ங்க‌ளின் த‌னிப் ப‌ட்ட‌ க‌ருத்துக்கு ஏற்ப‌ வ‌ளைத்து பொருள் கொள்ள‌ முய‌ற்ச்சி செய்ய‌லாம்.

    சிவ‌ன் ப‌ர‌மேச்வ‌ர‌ன் இல்லை, சிவ‌னை தொழ‌க் கூடாது என‌ எந்த‌ உப‌னிட‌த‌மாவ‌து சொல்லி இருக்கிற‌தா?

    பைபிளில் நானே உன்னுடைய‌ க‌ட‌வுள், என்ன‌த் த‌விர‌ உனக்கு வேறு க‌ட‌வுள்க‌ள் வேண்டாம் க‌ட்ட‌ளை இட்டு , நான் பொறாமையுள்ள‌ க‌ட‌வுள் என‌ சொல்லியுள்ளது.

    இந்து ம‌த‌த்திலே எந்த‌ க‌ட‌வுளும் நீ என்னை ம‌ட்டும் தான் வ‌ணங்க‌ வேண்டும், ம‌ற்ற‌வ‌ரை வ‌ண‌ங்க‌ கூடாது என‌ சொல்ல‌வேயில்லை.

    என்னையே ச‌ர‌ண‌டை, நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று தான் சொல்லி இருக்கிறார். அவ‌ரே எந்த‌ ரூப‌த்தை அர்ச்சித்தாலும்,அந்த‌ ரூப‌த்தின் வ‌ழியாக‌ அவ‌ர்க‌ள் கேட்ட‌தை த‌ருவேன் என‌ சொல்லும் அளவுக்கு க‌ருணாமூர்த்தியாக‌, எல்லா வ‌ழி பாட்டின் அடித் த‌ளமாக‌, எல்லாம் த‌ன்னிலே கோர்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌வே இந்துக் க‌ட‌வுள் கூறி இருக்கிரார்.

    இவ்வ‌ள‌வு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப் பான்மையும், வெறுப்பில்லா அன்பு க‌ருத்துக்க‌ளும் உடைய‌ இந்து ம‌தத்திலே குட‌ம் பாலிலே துளி விஷ‌ம் போல‌ ஆபிர‌காமிய‌ முர‌ட்டுப் பிடிவாத‌ ம‌ற‌ந்தும் புற‌ம் தொழா கோட்பாட்டை க‌ல‌க்க‌ வேண்டுமா என்று சிந்தியுங்க‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ளே!

    இந்த‌ உல‌கில் எவ‌ன் ஒருவ‌ன் அத்வேஷ்டா, ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌, க‌ருண‌ ஏவ‌ ச‌ கொள்கையை க‌டைப் பிடிக்கிரானோ, அவ‌ன் எந்த‌ப் பெய‌ரில் இருந்தாலும், எந்த‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌னாக‌ இருந்தாலும் உண்மையில் இந்துதான்.

    யாரையும் வெறுக்காம‌ல், அடுத்த‌வ‌ருக்கு தீங்கு நினைக்காத‌ எந்த‌ வ‌ழிபாட்டு முறையையும் வெறுக்காம‌ல், அவ‌ற்றில் க‌ல‌ந்து கொள்ளும் ம‌ன‌ப் ப‌க்குவ‌ம் உடைய‌வ‌ன் அவனாக‌வே இந்து ஆகி விடுகிரான்.

    ஆனால் தான் சொல்லும் ஒரு க‌ட‌வுள் ம‌ட்டும் தான் உண்மையான் ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள், ம‌த்த‌ க‌ட‌வுள்க‌ள் எல்லாம் ஜீவ‌னில்லாத க‌ல்லுக‌ள் என‌‍

    என்னவோ, தான் க‌ட‌வுளை நேரில் ச‌ந்தித்து பேசி விட்டு வ‌ந்த‌வ‌ர் போல‌வும், தன்னுடைய‌ ஒரெ க‌ட‌வுளுக்கு நிரூப‌ண‌ம் த‌ரத் த‌யார‌க‌ இருப்ப‌து போல‌வும் (ஆனால் நிரூப‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை,என‌வே த‌ர‌ மாட்டார்க‌ள்)

    அத்தாரிட்டி இல்லாம‌லே அத்தாரிட்டி செய்ப‌வ‌ர்க‌ள் ஆபிர‌காமிய‌ கோட்பாட்டில் , செய‌ல் பாடு ஆகிய‌வ‌ற்றை செய்த‌வ‌ராக‌வே ஆகிறார்.

    என்னை ச‌ந்தித்த‌ ஒரு சுவி சேச‌க‌ர் பாலாஜி உண்மையான‌ தெய்வ‌ம் அல்ல‌ என‌க் கூறினார். சிவ‌ன், முருக‌ன் ஈஸ்வ‌ர‌ சொரூப‌ம் அல்ல‌ என‌ சொல‌ப‌வ‌ர்க‌ளுக்கும் அந்த‌ சுவிசெச‌க‌ருக்கும் என்ன‌ பெரிய‌ வித்யாச‌ம்? .

  29. Sarang on February 21, 2010 at 12:16 am

    //
    இந்து ம‌த‌த்திலே எந்த‌ க‌ட‌வுளும் நீ என்னை ம‌ட்டும் தான் வ‌ணங்க‌ வேண்டும், ம‌ற்ற‌வ‌ரை வ‌ண‌ங்க‌ கூடாது என‌ சொல்ல‌வேயில்லை.
    //

    அமாம் இல்லை – ஆனால் யார் யாரை வணங்கினால் என்னென்ன கிடைக்கும் என்று சொல்லிஆகிவிட்டது – நீ வணகும் தெய்வத்தை பரமார்த்த ஸ்வரூபமாக வணங்கினால் தான் மோட்சம் – மேலும் என்னை மட்டுமே மோட்சத்திற்கு வணங்கு என்று பல பல இடங்களில் கீதையில் உள்ளது – அவன் அங்கு சொல்வதை பரமாத்மா ஸ்வரூபமாக யாரேனும் கொண்டு அந்த ஒருவரை மட்டுமே வணங்கு என்று எடுத்துகொண்டாலும் சரி – கண்ணன் சொல்வது ஒருவரிடம் ஸ்திரமான சரணாகதி

    மேலும் மேலும் இல்லை இல்லை என்று சொல்ல்லாதீர்கள் – பல கீதை வாக்கியங்களை நான் மற்கோள் வைப்பேன் – சரி நீங்கள் எங்காவது கீதையில் இப்படி பொருள் வரும்படி ஒன்னு காட்டுங்களேன் – “எல்லோரையும் சரண் அடை உனக்கு முக்தி கிடைக்கும்”

    காட்டு மிராண்டி என்ற விஷம் கலந்தது நீங்கள் தான் நண்பரே – நாங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து போக வேண்டும் என்ற எண்ணத்திலே தான் உள்ளோம்

    ஒருவருக்கே உடல் பொருள் ஆவியை சமர்பித்து எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்கள் விஷம் என்றால் உங்கள் கண்ணில் தான் மஞ்சள் இருக்கிறது

    நீங்கள் சொல்லும் விஷம் யார் யாரை குறை சொல்லும் என்று எண்ணிக்கொட்ட பார்க்காமல் பேசுகிறீர்கள் – புறம் தொழாமையை ஆழ்ந்த பக்தி மார்கமாக முன் வைத்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆசாரியர்கள், ஆதினங்கள், ஜீயர்கள்

    சகல் லோக மான் சஹுனே வந்தே என்பது எல்லா கடவுளிடமும் சரண் அடைந்தாள் மட்டுமே வரும் என்று கிடையாது – அப்படி எண்ணுவது ஒரு எண்ணமே அல்ல – நீங்கள் எதையும் எதையுமோ முடிச்சு போட்டு, கதை பண்ணி விளம்பரம் செய்கிறீர்கள் – உங்கள் புண்ணிய பணியை தொடருங்கள்

    //
    இப்போது ஒருவ‌ர் சைவ‌ர் என்றால், அவ‌ர் பெருமா ள் கோவிலுக்கு சென்று வ‌ண‌ங்கினால், பெருமாள் ப‌க்த‌ர்க‌ள் மகிழ்ச்சி அடைவார்க‌ள். இவ்வாராக ந‌ல்லிண‌க்க‌மும் , ச‌ம‌ய‌ ந‌ட்பும் உருவாகிறது.
    //

    நான் கிருஷ்துவனாக மாறினால் சுவிஷேஷ்க்காரன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான் – அவனை மகிழ்விப்போம். பாபர் மசூதிக்கு குரல் கொடுத்தால் முஸ்லிம் மகிழ்வான் அவனை மகிழ்விப்போம் – எப்படி எல்லாம் point வைக்கிறார்கள்

  30. கந்தர்வன் on February 21, 2010 at 4:32 am

    திருச்சிக் காரன்,

    புறந்தொழாக் கோட்பாட்டைப் பற்றி எவ்வளவு தான் அடியேனும் மதிப்பிற்குரிய சாரங் அவர்களும் எடுத்து விளக்கினாலும், “விடிய விடிய இராமாயணம் கேட்டு…” என்று ஒரு திருஷ்டாந்தம் சொல்வார்களே, அதைப் போல நீங்கள் மறுமொழி இட்டுள்ளீர்கள். இருப்பினும் மற்ற வாசகர்களின் பயன் கருதி (இது வரை விளக்காதவற்றை) விளக்குகிறேன்.

    // சிவ‌னை தொழ‌க் கூடாது என‌ எந்த‌ உப‌னிட‌த‌மாவ‌து சொல்லி இருக்கிற‌தா? //

    “யாரும் சிவனைத் தொழக்கூடாது” என்றா கூறினோம்? “ஒரு கொள்கையை எற்றுவிட்ட நாங்கள் அக்கொள்கையின் படியே நடப்போம்” என்று தான் கூறுகிறோம்.

    // அவ‌ரே எந்த‌ ரூப‌த்தை அர்ச்சித்தாலும்,அந்த‌ ரூப‌த்தின் வ‌ழியாக‌ அவ‌ர்க‌ள் கேட்ட‌தை த‌ருவேன் என‌ சொல்லும் அளவுக்கு க‌ருணாமூர்த்தியாக‌, எல்லா வ‌ழி பாட்டின் அடித் த‌ளமாக‌, எல்லாம் த‌ன்னிலே கோர்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌வே இந்துக் க‌ட‌வுள் கூறி இருக்கிரார். //

    இதை மறுக்கவில்லை. ஆனால், “கேட்டதைத் தருவேன்” என்று கூறவில்லை. “அந்தந்த தேவதைகள் அளிக்கவல்ல பலன்களைத் தருகிறேன்” என்று கூறுகிறார். எனினும், 7.23-இல் “எல்லா வழிபாட்டு முறைகளும் ஒரே பலனை அளிக்கவல்லது அல்ல” என்று உறுதியாகக் கூறுகிறார்.

    // ஆனால் தான் சொல்லும் ஒரு க‌ட‌வுள் ம‌ட்டும் தான் உண்மையான் ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள், ம‌த்த‌ க‌ட‌வுள்க‌ள் எல்லாம் ஜீவ‌னில்லாத க‌ல்லுக‌ள் என‌‍ //

    இப்படி அடியேனோ, சாரங்கோ எங்கு கூறினோம்?

    // என்னை ச‌ந்தித்த‌ ஒரு சுவி சேச‌க‌ர் பாலாஜி உண்மையான‌ தெய்வ‌ம் அல்ல‌ என‌க் கூறினார். சிவ‌ன், முருக‌ன் ஈஸ்வ‌ர‌ சொரூப‌ம் அல்ல‌ என‌ சொல‌ப‌வ‌ர்க‌ளுக்கும் அந்த‌ சுவிசெச‌க‌ருக்கும் என்ன‌ பெரிய‌ வித்யாச‌ம்? . //

    வித்தியாசம் உண்டு. என்ன என்றால், அடியேனோ சாரங்கோ “நீங்கள் வழிபடும் கடவுள் சாத்தான்” என்று கூறவே இல்லை. “உங்கள் இஷ்டப்படி வழிபட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் மனம் விரும்பிய முறையில் தான் வழிபடுவோம்” என்று தான் கூறினோம். மேலும், நாங்களாக முன்வந்து “இந்த ஒரு தேவதைதான் பரதெய்வம்” என்று திணிக்கவில்லை. புறந்தொழாக் கோட்பாட்டை நீங்கள் “காட்டுமிராண்டித் தனம, ஜிஹாதி வன்முறை” என்றெல்லாம் கூறியதால் தான் எங்களுடைய position-ஐ விளக்க நேரிட்டது.

    // என்னவோ, தான் க‌ட‌வுளை நேரில் ச‌ந்தித்து பேசி விட்டு வ‌ந்த‌வ‌ர் போல‌வும், தன்னுடைய‌ ஒரெ க‌ட‌வுளுக்கு நிரூப‌ண‌ம் த‌ரத் த‌யார‌க‌ இருப்ப‌து போல‌வும் (ஆனால் நிரூப‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை,என‌வே த‌ர‌ மாட்டார்க‌ள்) //

    இது பிரகல்லாதனுடைய தந்தை பிரகல்லாதனுக்கு இட்ட வாதம் – “நேரில் காட்டு, இல்லை என்றால் நீ சொல்வது பொய்”. ஆகையால், தயவு செய்து இந்த வாதத்தை விட்டு விடுங்கள். நீங்கள் கூறுவது போல நிரூபித்துக் காட்டுவது என்பது என்னால் சாத்தியம் அல்ல. என் பக்தி பிரகல்லாதனின் பக்திக்கு முன்பு – சூரியனுக்கு முன் மின்மினியைப் போன்றதாகும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.