மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

இக்கட்டுரை எழுதப்படும் மார்ச் 2010 ஆரம்பத்தில், புகழ்பெற்ற சுவாமியார் ஒருவரின் தகாத செயல்கள் பற்றி 24 மணிநேரமும் ஊடகங்கள் கொண்டுவரும் விதவிதமான செய்திகள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வீடியோக்களில் வருவது உண்மையாகவே அந்த சாமியார்தானா? அல்லது வேறு சிலர் கூறுவதைப்போன்று அந்த வீடியோ டூப் அல்லது Trickshot மூலமாக எடுக்கப்பட்டதா? அந்த சாமியார் உண்மையானவரா அல்லது போலியா?

இதைப்போன்ற அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவதில்லை.

நம் வேதங்களைக்கொண்டே பரமாத்மா உலகத்தையும் உயிர்களையும் படைத்தார் என்று நம்பும் பழமைவாதிகளில் நானும் ஒருவன்.

ravana2மனிதன் தோன்றிய, சாமியார்கள் தோன்றிய பழங்காலத்திலேயே போலி சாமியார்களும் தான் தோன்றியிருப்பார்கள். இராமாயணத்தில் இராவணன் சீதையை சிறையெடுக்க சாமியாராகத்தானே வந்தான்!. இன்று போலி சாமியார்கள் அதிகமானதற்கு காரணம் மக்களின் பேராசையே! (மற்றும் அறியாமை ஒரு சிறிய அளவிலும்தான்). போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு ஒரு குறைவும் ஏற்படப்போவதில்லை. இந்துக்களுக்கு புதியதாக ஒரு பிரச்சினையும் உருவாகப்போவதில்லை. ஒரு வார செய்தியோடு இவ்விவகாரமும் முடிவுக்கு வரும்.

சந்நியாசம் என்ற மிகவும் புனிதமான நிலையையோ அல்லது யோகா என்னும் உன்னதமான பயிற்சியையோ இக்கட்டுரையில் நான் தவறாக எழுத முற்படவில்லை.

காலத்திற்கேற்றபடி தத்துவத்தை புரிந்துகொள்ள உதாரணங்கள் மாறலாமே தவிர அடிப்படைகள் மாறமுடியாது என்னும் கொள்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவன் நான். அடிப்படைகளே
(அதாவது தத்துவ உண்மைகளே) மாற்றப்படலாம் என்று வெளிப்படையாகவோ அல்லது குறியீடுகளின் மூலமாகவோ வைக்கப்படும் வாதத்தை மறுதலிப்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம் என்பதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சந்தைப் பொருளாதார தன்மையின் படி எங்கு ஒரு பொருளுக்கான Demand அதிகமாகிறதோ அங்கு Capacityயும் Supplyயும் அதிகமாகும். சமூக ஒழுங்கின்மையின் தாக்கம் அங்கு இருந்தால் போலிகள் பெருகியே தீரும்.

சந்தையில் விற்றுக்கொண்டிருக்கும் யோகா:

125 ஆண்டுகளுக்கு முன்னால் சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று இந்து மதத்தையும், வேதாந்த தத்துவத்தையும் முறையாக அறிமுகப்படுத்தியவுடன் பல்லாயிரம் வெள்ளையர்கள் இந்திய ஆஸ்ரமங்களுக்கு வருகை தந்தார்கள். சுவாமி அரவிந்தர், ரமண மகரிஷி போன்றவர்களின் ஆஸ்ரமங்களுக்கு வந்து அவர்களிடம் கேள்விகளைக்கேட்டு, பதில்களை பெற்று, அவற்றை புத்தகமாக வெளியிட்டு, மேற்கத்திய நாட்டு மக்களுக்கு இந்து மதத்தை எடுத்து சென்று, தாங்களும் மேன்மை அடைந்தார்கள்.

காலம் செல்ல செல்ல, யோகா மற்றும் இந்து தத்துவங்கள் பிரபலமாகும்போது, அது வர்த்தகமயமாகவும் ஆயிற்று. இந்தத் துறையில் கொஞ்சம் அறிமுகம் உள்ளவர்கள் கூட யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கு மேற்கத்திய நாடுகளில் கூட சந்தை உள்ளது என்று அறிந்து கொண்டார்கள். இந்தியாவில் சந்தை விரிப்பதை விட வெள்ளையர்களின் நாட்டிற்கே சென்று யோகா கடைகளை திறந்தால் மகசூல் அதிகமாகும் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் யோகா சொல்லித் தருபவருக்கு தேவையான தகுதிகள் என்று மிகவும் சிறிய விஷயங்களை வைத்துக்கொண்டார்கள். நன்றாக ஆங்கிலம் பேசும் திறமை, சிறிய அளவில் சம்ஸ்கிருத அறிவு, பதஞ்சலி யோக ஸூத்ரம், பகவத் கீதையின் சில ஸ்லோகங்கள், நடைமுறை வாழ்க்கையிலிருந்து சில உதாரணங்கள், Presentation Skills போன்றவை ஒரு யோகா மற்றும் தியான பயிற்றுவிப்பாளருக்கு இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கும் அடுத்தபடியாக இவர்களைப்போன்ற சாமியார்கள் “Introductory Course” நடத்துவதற்காக ஒரு சிஷ்ய கூட்டத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்த சிஷ்யர்கள் குருவையும் மிஞ்சியவர்கள். முதல் வார Weekendல் “Introductory Course”ஐ கற்றுக்கொண்டு அடுத்த வாரத்தில் இவர்கள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்களால் பயிற்றுவிக்கப்படும் யோகத்திற்கும், அத்வைதத்திற்கும் இதே கதிதான். (உண்மையான யோகத்திற்கும், அத்வைதத்திற்கும் ஒரு குறையும் இல்லை). நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. “கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சு” என்று.

adhi-sankaraபகவத்பாதர் என்ற ஆதிசங்கரரும் அவரின் அடியொற்றி நடந்த நம் பூர்வாச்சார்யர்களும் தங்களின் உடலை வருத்தி அந்நிய மதங்களை மறுதலித்து அத்வைத மதத்தை புணருத்தாரணம் செய்தார்கள். ஆனால் மேற்கூறிய வகையினர் அந்த இமயம் போன்ற தத்துவத்தை “Homeopathy”யில் மருந்தை “Dilute” செய்வதைப்போல், அத்வைத சாக்ஷாத்காரத்தை அடையத் தேவைப்படும் தகுதிகளை பேசாமாலோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்தோ, கடைக்கு சென்று கத்திரிக்காய் வாங்குவதைப் போன்றே அப்பேரின்ப நிலையை அடைந்து விடலாம் என்கிறார்கள். மூன்று மணிநேரம் மூக்கைப்பிடித்து கொண்டு உட்கார்ந்தால் அத்வைத சாக்ஷாத்கார அனுபவம் ஏற்பட்டு விடும் என்று கொஞ்சம் கூட கூசாமல் புரளி மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

“Authentic and Traditional” ஆக வரும் முன்னோர்கள் அனுசரித்த மரபுவழி சம்பிரதாய தத்துவங்களை பின்பற்றுபவர்கள் தங்களால் அதை நீர்த்துப் போகச் செய்து பிரசாரம் செய்ய முடியாது என்பதால் ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள். ஆனால் யோகா, தியானத்தை வர்த்தகமாக்குபவர்கள் அத்வைதத்தை தவறாக புரிந்து கொண்டதாலோ அல்லது சபையில் எடுபட வேண்டும் என்பதாலோ மிகவும் dilute செய்யப்பட்ட யோக, தத்துவப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். Seminarகள் பலவற்றை நடத்துகிறார்கள்.

யோகாவின் பரிணாம வளர்ச்சி:

    Yoga For Sex:

இந்த தத்துவத்தை உதிர்த்த புண்ணியவான் யார் என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்ற சாமியாரில் ஒருவரா அல்லது வெள்ளைக்காரன் ரூம் போட்டு கண்டுபிடித்ததா என்பது தெரிய வில்லை. சில ஆசனங்களை செய்வதின் மூலம் நிறைய நேரம் பெண்ணுடன் சேட்டைகள் புரியலாம் என்னும் அரிய கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியிருக்கிறார்கள். பிரம்மச்சரியம் என்பது அஷ்டாங்க யோகத்தின் முதல் படியான யமம் என்பதிலேயே அடக்கம். இன்னொரு வகையில் கூறுவதானால் யமம் என்னும் தகுதி அடைந்த பிறகே ஆசனத்திற்கு செல்ல முடியும். ஆனால் ஆசனத்தின் வாயிலாகவே பிரம்மச்சரியத்தின் எதிர் நிலைக்கு செல்ல முடியும் என்பது உண்மையிலேயே அரிய கண்டுபிடிப்புதானே!.

    Yoga for Pets:

yoga-for-petsபதஞ்சலி முனிவர் இதைக்கேட்டால் மனம் வெதும்புவார் என்பது நிச்சயம். மனிதகுலம் உய்வடைவதற்காகவே அவர் அளித்த அஷ்டாங்க யோகத்தை நாய்களுக்கும் பூனைகளுக்கும் கற்றுத்தருகிறார்கள். நான் இதை முதலில் கேட்டவுடன் நாய்களையும் பூனைகளையும் தலைகீழாக கட்டி தொங்க விடுவார்கள் என்று நினைத்தேன். ஒருவர் கீழ்வருமாறு எழுதினார்.

“The Yoga instructor sits cross-legged, telling the class to say “OM”.
Instead, some students bark”.

    Patents for Yoga:

ஆச்சரியப்படாதீர்கள். உண்மைதான் இது. ஒரு ஆஸ்ரமம் தாங்கள் கண்டுபிடித்த Step-By-Step Yogic Posturesஐ Patentன் மூலம் சொந்தம் கொண்டாடுகிறது. கடைசியில் யோகாவை கண்டுபிடித்ததே நாங்கள்தான் என்று இன்னொரு குழுவினர் Patent வாங்கி விடுவார்களோ என்னவோ!. பாவம் பதஞ்சலி முனி. அசமஞ்சமாக இருந்திருக்கிறாரே! கண்டுபிடித்தவுடனேயே Patent வாங்கி Hologram முத்திரையை பதித்திருக்க வேண்டாமோ!

பேராசை பெருலாபம்:

யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் (Meditation) போன்றவை மேற்கத்திய நாடுகளில் பிரபல்யம் ஆனவுடன் அதற்குரிய உபகரணங்களின் சந்தையும் வெகுவாக களை கட்டியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தியானத்திற்கான தனிமனித கொசுவலை, யோகா படுக்கைகள், யோகா உடுப்புகள், ஊதுவத்திகள், படங்கள், ருத்திராக்ஷ கொட்டைகள் மற்றும் மாலைகள், பயிற்சி செய்யும் முறைகளை விளக்கும் CDக்கள், புத்தகங்கள் போன்றவை பல பில்லியன் டாலர்களுக்கு விலை போகின்றன. மந்திரித்த உபகரணங்கள் Deluxe விலையிலும், மற்றவை சாதா விலையிலும் சந்தைப்படுத்த படுகின்றன. யார் மந்திரித்தார்கள், எந்த முறையில் மந்திரிக்கப்பட்டது என்றெல்லாம் விவரங்கள் தேவையில்லை. இந்தியாவில் ஒரு கோயிலில் மந்திரிக்கப்பட்டது என்றால் போதுமே!.

இந்து மதத்திலிருந்து யோகாவை பிரிக்கும் முயற்சி:

இந்தியாவிலிருந்து இப்பயிற்சிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் இவைகள் வெளிநாடுகளிலேயே பிரபல்யம் அடைந்தன. ஆனால் கடந்த 10, 15 வருடங்களாக இந்தியாவிலும் இந்த வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் கூறும் புனிதத்தன்மையை இங்கு அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். முக்கியமாக பயிற்சியை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் “ஓம்” என்னும் பிரணவத்தை உச்சரிப்பது, ஒரு கடவுளின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தியானம் செய்வது இங்கு பிரச்சினையில்லை.

aumஆனால் இக்குறியீடுகள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் நாடுகளில் நாம் ஊகிக்கிறபடியே எதிர்ப்பை கிளப்பியது. இன்றும் சில நாடுகளில், உதாரணமாக மலேசியாவில் இப்பயிற்சிகள் தடை செய்யப் பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளில் தியானம் செய்யும் கிறிஸ்தவர்கள் பயிற்சியை முடிக்கும்போது “Amen” என்று கூறலாம் என்று சிலர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்து கடவுளின் படத்திற்கு பதிலாக சிலுவையை உபயோகிக்கிறார்கள். முஸ்லீம்கள் பயிற்சி முடியும்போது எதுவும் சொல்வதில்லை. அவர்கள் ஒரு படத்தையும் வைத்துக்கொள்வதில்லை. கடையை திறப்பவன் வாடிக்கையாளனுக்கு வேண்டியதைத்தானே விற்க முடியும்! இவற்றைப்போன்ற “Adjustments” மற்ற மதத்தினருக்கும் யோகாவை எடுத்துச்செல்ல உதவுவதால் இது ஒரு நல்ல முயற்சி என்றும் நம் ஆட்களே கூறுகிறார்கள். (பதஞ்சலி முனிவர் இந்துவே அல்ல. அவர் ஒரு செக்கியூலர்வாதி என்று எதிர்காலத்தில் கூறுவார்களோ என்னவோ!)

யோகாவின் அபரிமிதமான வளர்ச்சி:

இன்று கிட்டத்தட்ட எல்லா தனியார் கம்பெனிகளிலும் யோகா என்பதை ஒரு கட்டாயமான பயிற்சி முறையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். (“Executive Development Program”). ஏறக்குறைய எல்லா தனியார் மருத்துவ மனைகளிலும் “Stress Relief” மற்றும் சாந்தமான மனதை அடைய யோகா மற்றும் தியான பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் நான் கொச்சைப் படுத்தவில்லை. ஆனாலும் இத்தகைய கார்பரேட் யோகாவை பயிற்றுவிப்பவர்கள் மூன்று முக்கியமான விஷயங்களைப்பற்றி வெளிப்படையாக கூறிவிட்டால் நன்றாக இருக்கும்.

(1) தகுதி (முக்கியமாக ஆஹார நியமம்)
(2) மிதமிஞ்சிய பலன்கள் (அதாவது சமாதி நிலை) ஏதும் இவ்வகை பயிற்சியினால் ஒருவருக்கு கிடைக்காது என்பது.
(3) சில வியாதிகள் குறிப்பாக ஆஸ்த்மா, மைக்ரேய்ன் தலைவலி போன்றவை குணமாகும் என்றும் உடல் மூப்படையாமல் தடுக்கிறோம் என்றும் புருடா விடாமல் இருப்பது.

யோகம் பற்றி சில விஷயங்கள்.

(1) அஷ்டாங்க யோகத்தின் (மொத்தம் 8 படிகள்) முதல் இரு படிகளாக யமம் மற்றும் நியமம் என்பவை கூறப்பட்டுள்ளன. பெரும்பாலானோருக்கு இது தெரிந்து இருந்தாலும் அவற்றை கீழே தருகிறேன்.

ஐந்து விஷயங்கள் யமம் என்பதில் கூறப்பட்டுள்ளன. அவையாவன. அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசரியம் மற்றும் அபரிகிருஹம். இதைப்போன்றே நியமத்திலும் ஐந்து விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன. சௌச்சம், ஸந்தோஷம், தபஸ், ஸ்வாத்யாயம் மற்றும் ஈஷ்வரப்பிரணிதானம். இக்கட்டுரை யோகம் மற்றும் அத்வைதம் போன்ற தத்துவத்தை விளக்குவதற்காக எழுதப்பட வில்லை. எனக்கும் அதற்குரிய தகுதியில்லை. ஆனால் எந்தவொரு ஆன்மீக பயிற்சிக்கும் தகுதிகள் அவசியம் என்று உறுதியாக நான் நம்புவதாலும் அந்த தகுதிகளை
வளர்த்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதாலும் அத்தகுதிகள் பட்டியலிடப்பட்டன.

(2) அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆஸனம், ப்ராணாயாமம் மற்றும் தியானம் என்ற மூன்று நிலைகளை நேரடியாக (தகுதிகளைப்பற்றி கவலையேயில்லாமல்) பயிற்சி செய்தால் எட்டாவதாக கூறப்படும் ஸமாதி (பேரின்ப நிலை) கிடைத்துவிடும் என்று வெளிப்படையாகவோ அல்லது குறியீடுகளின் மூலமோ இப் போலி யோகாவாதிகள் கூறுகிறார்கள். அஷ்டாங்க யோகத்தின் மற்ற 4 படிகளை பதஞ்சலி முனிவர் “Time Pass” ற்காக எழுதினாரா என்று தெரியவில்லை. வெள்ளையர்களில் பலர் இவ்வகை யோகாவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த நிலைமை இந்தியாவிலும் ஏற்பட்டது விந்தைதான்!

healing-mass(3) “செவிடர்கள் பார்க்கிறார்கள், குருடர்கள் கேட்கிறார்கள்”. (வேண்டுமென்றேதான் மாற்றிக்கூறினேன்) இந்த வாசகங்களை கேட்டவுடன் நமக்கு சிரிப்புதானே வருகிறது. பலகாலமாக இவ்வகையான அறைகூவல்களை கேட்கிறோம்.

இந்த அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் சிறிய அளவில் நம் ஆட்களும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஸ்த்மா போன்ற குணப்படுத்த முடியாத வியாதிகளை யோகா, ப்ராணாயாமம் மற்றும் தியானம் மூலமாக குணப்படுத்த முடியும் என்று கூறி வருகிறார்கள். நானே ஒரு ஆஸ்த்மா நோயாளிதான். “Cortico-Steroids” மற்றும் “Bronchodilators” மூலமாகத்தான் என்னுடைய ஆஸ்த்மா கட்டுக்குள் இருக்கிறது.நான் யோகாவையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.

ஆஹார நியமம் என்பது எனக்கு மிகவும் கடினமானது. சர்க்கரைப்பொங்கல் இருந்தால் ஒரு கை பார்க்கவே செய்வேன். அதுவும் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு வெல்லம் சேர்த்து, தாராளமாக நெய்யை கலந்து செய்யும் சர்க்கரை பொங்கலை கண்டால் எனக்கு யோகம், தியானம் எல்லாம் மறந்தே போய்விடும். மோர்க்குழம்பு, வெத்தக்குழம்பு, அறைத்துவிட்ட முருங்கைக்காய் பொரித்த கூட்டு போன்றவை இருந்தால் கீதை கூறிய ஆஹாரத்தில் “Moderation” மூளையிலிருந்தே வெளியேறிவிடும். இவற்றை நகைச்சுவைக்காக நான் கூறவில்லை. முக்காலே மூணு வீசம் பேர் உலகில் என்னைப்போன்று இருப்பவர்கள்தான். முதலில் நாக்கை ஒரு அளவிற்கேனும் கட்டுப்படுத்தி விட்டு பிறகு ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது.

அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அறிவியலின்படி ஆஸ்த்மா நோய் சில காலம் நீடித்தால், தொண்டைக்குழாயின் “Bronchotis Liner” பழுதடைந்துவிடுகிறது. நம் உடலின் சில பாகங்கள் பழுதடைந்தால் அது சரியாக வாய்ப்பு கிடையாது. அதில் இந்த பாகமும் ஒன்று. யோகாவை செய்தால் ஆஸ்த்மா குணமாகும் என்றால் இந்த லைனரும் சரியாக வேண்டும்.

கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன் இந்த வியாதி விளையாட்டுகளை பற்றி பார்த்து விடலாம்.

இந்திய மருத்துவ கழகம், பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ், அமேரிக்காவின் மருத்துவ அமைப்புகள் ஆகிய அனைத்துமே யோகா மற்றும் தியானத்தினால் எந்த நோயும் குணமாகாது என்று அறுதியிட்டு கூறுகின்றன. அறிவியலை மட்டுமே நான் நம்பவில்லை என்றாலும் இதை குறித்துக் கொள்வோம்.

புதிய சொல்லாடல்கள்:

Psychic Healing, Quantum Healing, Divine Vibrations, Touch Energy, Pranic Healing, Spiritual Healing, Self Healing, Holistic Healing, Chakras Energy, Intuitive Healing, Channeling the Energy, Mindbody Healing,
Music Healing, Crystal Healing, Brain Wave Cycle,Gemstone Therapy (இவை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா!)

யோகா, தியானம் போன்றவைகள் நடுத்தர மற்றும் உயர்வகுப்பு மக்களிடம் மட்டுமே எடுபடுகிறது. இது கிட்டத்தட்ட “Status Symbol” என்பதாக மாறியிருக்கிறது.

மேலே பட்டியலிடப்பட்ட சொற்களில் முக்காலே மூணுவீசம் நம்மூர் ஆட்களால் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டு பிரபல்யம் அடைந்துள்ளன.

அறிவியலும் ஆன்மீகமும் கலந்த கலவை:

energy-imaging-quantumஇந்த கும்பல் வெறும் வியாதியை நிவர்த்தி செய்கிறோம் என்பதோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் அறிவியல் என்ற அவியலாகவே தங்கள் கடையை திறக்கிறார்கள். ஆன்மீகத்தினால் நம்பகத்தன்மை, கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கை, பழைய பெருமை போன்றவை கிடைக்கிறது. உதாரணமாக Psychic, Divine என்பவை அமானுஷ்ய சக்தியை சுட்டும் சொல்லாடல்கள். ஆன்மீகம் மட்டும் இருந்தால் ஏதோ நாகரீக வளர்ச்சி அடையாதவர்களின் உளறல்கள் என்பதாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருப்பதால் அறிவியலையும் கலப்பார்கள். உதாரணமாக Quantum, Brain Wave போன்ற சொற்கள் நவீன அறிவியலில் பயன்படுத்தப்படுபவை. கூடவே குறிப்பாக இச்சொற்கள் அளவில் மிகச்சிறியதை சுட்டும் சொற்கள். அதாவது கண்ணிற்கு தெரியாத ஆனால் அறிவியலால் ஒப்புக்கொள்ளப்பட்ட ந்யூரான்களைப்போன்ற துகள்களின் ஓட்டம் என்பதாக புரிந்துகொள்ளத்தக்க சொல்லாடல்கள். இவர்களையெல்லாம் சாதாரணமாக எடை போட முடியாது. உடையில் காவியையோ அல்லது பைஜாமாவையோ உடுத்தியிருந்தாலும் மிகப்பெரிய கம்பெனிகளை நடத்துபவர்கள். சந்தை பொருளாதார நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள்.

சரி, இன்று வியாதியை தீர்க்கும் சந்தையை பற்றி கூறியாயிற்று. வியாதிகளைப்பற்றி நம் மதத்தின் கருத்து என்ன? அந்த பின்புலத்தை கொஞ்சம் பார்த்துக்கொள்ளலாம். அதற்கும் முதலில் நம் மதத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு தத்துவமான “Karma Theory” “கர்மா கொள்கை”ஐ பார்த்தாக வேண்டும். [புத்த மற்றும் ஜைன மதங்கள் நம் மதத்திலிருந்தே இக்கொள்கையை கைக்கொண்டன].

கர்மா கொள்கை:

கர்மா என்பது புண்ணிய கர்மா மற்றும் பாப கர்மா என்று இரண்டாக பிரியும். ஏற்கெனவே செய்யப்பட்ட அல்லது செய்யப்போகும் புண்ணிய, பாப கர்மாக்கள் மூன்றாக பிரியும். சஞ்சிதம், பிராரப்தம் மற்றும் ஆகாமிகம். முன் ஜென்மங்களில் நம்மால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள ஆனால் இன்னும் பலனைத்தர ஆரம்பிக்காத கர்மாக்கள் சஞ்சிதம் (அவிழ்க்காத மூட்டை). சஞ்சிதத்திலிருந்து சில பலனைத்தர ஆரம்பித்ததாலேயே நாம் பிறந்திருக்கிறோம். இது பிராரப்தம். இப்பொழுது நாம் செய்து கொண்டிருக்கும் கர்மாக்கள் ஆகாமிகம். இவை இதே ஜன்மத்தின் பிற்பகுதியிலோ பின் வரும் ஜன்மங்களிலோ பலனளிக்கும்.

பேச்சு வழக்கில் வீட்டிலுள்ளவர்கள் “என் பிராரப்தம். அதான் அனுபவக்கிறேன்” என்று கூறுவதை கேட்டிருக்கலாம்.

ஒரு மனிதன் அத்வைத சாக்ஷாத்கார அனுபவத்தை அடைந்தால் அவனுடைய சஞ்சித கர்மாக்கள் பஸ்மமாகின்றன. அவன் அந்த நொடியிலிருந்து செய்யும் (அவனுடைய உடல்) செயல்கள் எந்த கணக்கிலும் வராது. அதாவது அவனுக்கு மறுபிறப்பு கிடையாது. ஆனால் ஞானியாகவே ஆனாலும் அவனின் பிராரப்தம் முடியும் வரையில் இந்த உலகில் வாழ்ந்தாகவேண்டும். துக்கங்களை அவனுடைய உடல் அனுபவித்தாக வேண்டும்.

மனிதனின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் (வியாதிகள் போன்றவை) பிராரப்த கர்மாக்களினாலேயே ஏற்படுகின்றன.

சரி, எல்லா துக்கங்களையும் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டுமா என்றால் இல்லை. இங்கு மூன்று வழிகள் உள்ளன. முதலாவது வகை துக்கங்களை அனுபவித்துத்தான் தீர வேண்டும். இரண்டாவது வகை துக்கங்களின் கடுமையை பிராயச்சித்தத்தின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும். மூன்றாவது வகை துக்கங்களை முழுவதுமாக அகற்ற முடியும்.

சாதாரண மனிதனுக்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன.

(1) துக்கம் வந்தவுடன் அது எந்த வகை துக்கம் என்பதை அவனால் கூற முடியாது. அதாவது அனுபவித்துத்தான் தீர வேண்டுமா, கடுமையை குறைக்க முடியுமா அல்லது அகற்ற முடியுமா என்பது அவனுக்கு தெரியாது.

(2) துக்கங்களுக்கான காரணம் முன் ஜெனமத்தில் செய்த பாவமாகவும் இருக்கலாம் அல்லது இந்த ஜென்மத்தில் செய்ததாகவும் இருக்கலாம். சாதாரண மனிதனால் இதை கண்டு கொள்ள முடியாது.

பிராயச்சித்தங்கள் பல விதமாக செய்யப்படலாம். குறிப்பிட்ட தேவதையை உத்தேசித்து பூஜைகள், சிறப்பு வேண்டுதல்கள் போன்றவை. இவை தவிர ஜோசியத்தின் மூலம் பிராயச்சித்தத்தை அறிந்து அதற்கான பூஜைகளை செய்வது. இன்று பிராயச்சித்தமும் பல ஜோசியர்களால் சந்தை படுத்த பட்டிருந்தாலும் ஜோசியம் என்பது சம்பிரதாயமாக இந்துமதத்தில் இருந்து வந்துள்ளது. முற்காலங்களில் சாதாரண துக்கங்களுக்கு ஜோசியரை அண்டமாட்டார்கள். நாட்பட்ட துக்கமாக இருந்தால்தான் ஜோசியரை அணுகுவார்கள்.

மதப் பெரியவர்களுக்கும் வியாதிகள்:

ஆனானப்பட்ட ஆதிசங்கரருக்கே சில காலம் கடுமையான “Fistula” இருந்திருக்கிறது என்று ஒருசில சங்கர விஜய நூல்களில் குறிப்பு இருக்கிறது (அவரால் வாதத்தில் தோற்கடிக்கப் பட்ட தாந்திரீகர்கள் செய்வினை வைத்ததால் இது ஏற்பட்டது என்றும் சில நூல்களில் காணப் படுகிறது). ரமணருக்கும் இராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கும் இருந்த கடுமையான வியாதிகளை நாம் அறிவோம். ஞானியாகவே
ஆனாலும் பிராரப்தம் இருந்தால் உடலை வருத்தியே தீரும் என்பதற்காக இதை எழுதினேன்.

”நாம் சாதாரணமான வியாதிகளுக்கு கூட உடனடியாக மாத்திரை சாப்பிட்டு விடுகிறோம். அந்த துக்கத்தை நாம் அனுபவிக்காததினால் நம்முடைய பாப மூட்டைகள் குறைவதில்லை. முடிந்தவரை வியாதிகளை தாங்கிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்” என்று காஞ்சி முனிவர் ஒருமுறை உபன்யாசத்தில் கூறியிருக்கிறார். உடனே வியாதி வந்தால் டாக்டரிடம் போகக்கூடாது என்று சொல்வதாக எடுத்துக்கொள்ள கூடாது. அவர் சாதாரண சளி, அஜீரணம் போன்றவற்றை மட்டுமே கூறினார்.

வியாதியை நிவர்த்திக்க  “Miracles”:

(1) பைபிலில் பல இடங்களில் இயேசு மனிதர்களின் வியாதிகளை நிவர்த்தி செய்திருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது.

(2) நம் மத வரலாற்றிலும் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆதி சங்கரர் ஒரு ஊமையை வேதம் கூற வைத்ததை படித்திருக்கிறோம். “மந்திரமாவது நீறு” என்னும்படி நாயன்மார்கள் வியாதியை தீர்த்து வைத்துள்ளதையும் படித்திருக்கிறோம்.

விவேகானந்தர் நேரடியாக கண்ட “Miracles”:

விவேகானந்தர் இந்தியாவில் பல மனிதர்கள் அற்புத சக்தியை கொண்டிருப்பதை தான் கண்ணால் கண்டதாகவே எழுதியிருக்கிறார் (The Complete Works of Vivekananda – Part2 – The Powers of the Mind) . ஆனால், அவர் அத்வைத நிலையை அடைய இந்த சக்திகள் தடையாக இருக்கும் என்பதைத் தான் மையமாகக் குறிப்பிடுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த சொற்பொழிவில் தான் கண்ணால் கண்ட அற்புதங்களை பகிர்ந்து கொள்கிறார்.

ஹைதராபாத்தில் ஒருவர் காற்றிலிருந்தே எந்த பொருளையும் எடுக்கும் சக்தி பெற்றவர் என்பதை அறிந்து அவரை சந்திக்க தன் நண்பர்களுடன் செல்கிறார். அந்த மனிதர் வெறும் இடுப்பு துணியுடன் சுவரின் மூலையில் விவேகானந்தரால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். விவேகானந்தரும் அவருடன் இருந்தவர்களும் அந்த பிரதேசத்தில் விளையாத மற்றும் விற்காத பழங்களான திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை கேட்டிருக்கிறார்கள். காற்றிலிருந்தே தன்னுடைய உடல் எடையை காட்டிலும் 2 மடங்கு எடை அளவுக்கு பழங்களை எடுத்திருக்கிறார்.பிறகு எல்லோரும் பழங்களை சாப்பிட்டிருக்கிறார்கள்.

“Mind Reading” என்ற சக்தியை கொண்டிருந்த இன்னொருவரை விவேகானந்தர் சந்தித்திருக்கிறார். அவரை இரண்டு வகையாக பரிட்சித்து பார்த்திருக்கிறார். முதலில் விவேகானந்தரும் அவருடன் இருந்தவர்களும் ஒவ்வொரு கேள்வியை எழுதி தங்களின் சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவரை சந்தித்திருக்கிறார்கள். சந்தித்தவுடனேயே அவர்கள் என்ன கேள்வியை கேட்க நினைத்தார்களோ அவற்றை கூறி அவற்றிற்கான பதில்களையும் அந்த மனிதர் கூறியிருக்கிறார்.

இரண்டாவதாக அம்மனிதர் ஒரு காகிதத்தில் எதையோ எழுதி அதை விவேகானந்தரிடம் கொடுத்திருக்கிறார். அதை பார்க்காமல் தன்னுடைய சட்டைப்பையில் வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதைப்போன்றே விவேகானந்தரின் கூட இருந்தவர்களுக்கும் ஒவ்வொரு காகிதத்தில் எதையோ எழுதி, அதை பார்க்காமல் வைத்துக்கொள்ளுமாறு கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவரிடமும் எந்த மொழியிலாவது ஏதாவது சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ நினைத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். விவேகானந்தர் அம்மனிதர் படிக்காத சம்ஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தை மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய பாக்கெட்டில் இருந்த அந்த மனிதர் கொடுத்த காகிதத்தில் அதே வாக்கியம் இருந்திருக்கிறது. விவேகானந்தரின் கூட இருந்தவர்களில் ஒருவர் குரானின் ஒரு வாக்கியத்தையும் இன்னொருவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்திலிருந்த தான் படித்த வாக்கியத்தையும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சட்டைப்பாக்கெட்டிலும் சரியாக அந்த வாக்கியங்கள் இருந்திருக்கின்றன. அதாவது மற்ற மனிதர்கள் எதை நினைக்க போகிறார்களோ அதை முன்கூட்டியே அறியும் சக்தி அம்மனிதருக்கு இருந்திருக்கிறது.

இன்றைய நிலையில் “Miracles” சாத்தியமா:

நான் சுவாமி விவேகானந்தரை விடுவதாக இல்லை. மேற்கூறிய அற்புதங்களை கூறிவிட்டு விவேகானந்தர் தொடர்ந்து சொற்பொழிவில் கூறியவை.

“In very remote times in India, thousands of years ago, these facts used to happen even more than they do today. It seems to me that when a country becomes very thickly populated, Psychical power deteriorates. Given a Vast country thinly inhabited, there will, perhaps be more of psychical power there”.

vivekananda21இன்றைய காலகட்டத்தில் அவர் எழுதிய இந்த விளக்கம் நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள தக்கது. மக்கள் தொகை பெருக்கம்அபரிமிதமாக ஆகி விட்டதால் நகரங்களில் இந்த வகை அற்புதங்கள் நடக்க சாத்தியம் குறைவாகிறது என்கிறார்.ஆனால் தொலை தூரகிராமங்களில் இதற்கான சாத்தியம் அதிகம் என்றும் கூறுகிறார்.

1900ம் ஆண்டில் அவர் இந்த சொற்பொழிவை ஆற்றும்பொழுது இந்தியாவில் மக்கள் தொகை 30 கோடிகள். இன்றோ 110 கோடிகள். அதாவது துறவிகளால் முடியாது என்று எழுதவில்லை. “Live TV”யில் நம் வாழ்க்கை படம் பிடிக்க பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் “அற்புதங்கள்” நிகழாது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

சரி, என் ஆஸ்த்மாவை என்ன செய்வது?

ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு தகுதிகள் பிற்காலங்களில் ஏற்பட்டு நான் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும் என் ஆஸ்த்மா குணமாகாது என்பதை நன்றாக புரிந்து கொண்டுதான் பயிற்சியில் இறங்குவேன். நான் இறக்கும்வரை ஆஸ்த்மா இருக்கப்போவதால் “Cortico-Steroids” மற்றும் “Bronchodilators” மருந்துகளை கைவசம் மறக்காமல் வைத்திருப்பேன்.

Mass Hysteria:

ஒரு தமிழ்திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி. கடவுளை நான் காட்டுகிறேன் என்று கிராமத்தில் உள்ள அனைவரிடமும் பணம் வசூலித்து விடுவார். எல்லோரையும் ஒரு மலை அடிவாரத்திற்கு வரச்சொல்வார். தீடிரென்று “கடவுளே! வந்து விட்டாயா” என்று கத்துவார். கூடி இருப்பவர்கள் எங்கே? எங்கே என்று கேட்டவுடன் “அடப்பாவிகளா! பொண்டாட்டி பத்தினியாக இருந்தால்தான்டா கடவுள் கண்ணுக்கு தெரிவார்” என்றவுடன் அனைவரும் நன்றாக கடவுள் தெரிகிறார் என்று கூறி விடுவார்கள். இது ஒரு வகையான “Mass Hysteria”.

யோகா என்பது இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி, “Word of mouth” மூலமாகத் தான் பரவியுள்ளது. ஒருவர் தான் யோகா செய்ததால் மனம் லேசாக ஆகிவிட்டது என்று கூறி விட்டால், எங்கே தான் அப்படி கூறா விட்டால், கடவுள் அருள் இல்லை அல்லது பயிற்சியை ஒழுங்காக செய்யவில்லை என்றாகி விடுமோ என்ற பயத்தில் அடுத்தவரும் இதையே கூற சில வருடங்களில் இது “Mass Hysteria” போல் ஆகிவிட்டதோ என்று நினைக்கிறேன். இது என்னுடைய Thesis மட்டுமே!.

என் “Meditation” அனுபவம்:

meditation_classகிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் ஒரு தனியார் கம்பெனியில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். “Executive Development” என்னும் அடிப்படையில் வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் இவ்வகை “Meditation” ஒருநாள் வழங்கப்பட்டது. ஒரு பெண்மணி எங்களை ஒரு அறையில் பாய்களை கொடுத்து படுத்துக்கொள்ள சொன்னார். விளக்குகளை அணைத்துவிட்டு தன்னுடைய பயிற்சியை ஆரம்பித்தார். எனக்கு நினைவில் உள்ளவரை அவரின் “Commentary”ஐ தருகிறேன்.

“ஓம்…நீ இப்பொழுது ஒரு தனியான அறையில் இருக்கிறாய்.அந்த அறை உன்னுடையது. யாரும் அதில் நுழைய முடியாது. உன் மனது லேசாக இருக்கிறது. உன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான அனுபவங்கள் மட்டுமே உனக்கு நினைவிருக்கிறது. கசப்பான அனுபவங்கள் முழுவதையும் மறந்து விட்டாய்…..ஓம்…”.

இதே போன்ற நடையில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சென்றது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே சில பேரை பார்த்து ரசிப்பது பிடிக்கும். குடித்து விட்டு உளருபவர்கள், சிறு குழந்தைகளின் சேட்டைகள், இவரைப்போன்று மேதாவித்தனமாக உளருபவர்கள் போன்றவர்களை நேரம் போவது தெரியாமல் பார்த்து ரசிப்பேன்.

இப்பயிற்சியில் இன்னொரு விஷயமும் நடந்தது. இப்பயிற்சி மதியம் சுமார் 2 மணி அளவில் நடந்தது. 1 மணிக்குத்தான் எங்களுக்கு “Special Lunch” அளிக்கப்பட்டது. “Naan” வகை ரொட்டிகள், சன்னா மசாலா, வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் இத்தியாதி உணவு வகைகளுடன் ஐஸ்கிரீம் வரை ஒரு பிடி பிடித்து விட்டு “வானம் கீழே, பூமி மேலே” என்று ஒரு விதமான மதப்பில் இருந்தோம். இந்நிலையில் ஒரு பாயையும் கொடுத்து படுக்க செய்து, ஒருவர் மெதுவான குரலில் (பெண்ணுடைய குரல் வேறு) “Running Commentary”ம் அளித்தால் என்ன ஆகியிருக்கும்? ஆம். கிட்டத்தட்ட 20 பேர் இருந்த அந்த அறையில் பெரும்பாலானோர் பேரின்ப நிலையான அத்வைத சாக்ஷாத்காரத்தை அடைந்து விட்டார்கள்.சிலர் அதற்கான குறியீட்டையும் வெளிப்படுத்தினர். (ஆழமான குறட்டை).

புனிதத்தன்மையை அடைய முயலும் போலிகள்:

மேற்குறிப்பிட்ட யோகா மற்றும் தியான வகுப்புகளில் (குறிப்பாக முஸ்லீம்கள் அல்லாத சமூகங்களில்) சந்தை களை கட்ட சில விஷயங்களை நம் மதத்திலிருந்து எடுத்துக்கொள்வார்கள்.

(1) முதலாவதாக ஓம் என்னும் பிரணவம். ஏனென்றால் இந்த சப்ததிற்கு “Market Value” அதிகம்.
(2) இவர்கள் தவறாமல் கூறும் இன்னொரு விஷயம். யோகா மற்றும்தியானங்களை பழங்கால ரிஷிகளும் பயிற்சி செய்தார்கள். ஒப்பீட்டளவில் இது சரியான விஷயம்தான். ஆனால் இவர்கள் கூறுவதன் நோக்கமும் “Market Value”ஐ அதிகரிப்பதற்குத்தான்.
(3) முன்னரே கூறியபடி இவர்கள் கூறாமல் விடும் சில விஷயங்களும் உண்டு. கீதையில் பகவான் ஆன்மீகப்பயிற்சி செய்ய விரும்புவோர் ஆஹாரம், தூக்கம், பொழுதுபோக்குகள் போன்றவை தகுந்த அளவில் (Moderation) இருக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார். பிரம்மச்சரியம் என்பதையும் பதஞ்சலி ஒரு தகுதியாக குறிப்பிட்டிருக்கிறார்.

எங்கு நோக்கினும் தீக்ஷை மயம்:

ஒரு கதை. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் கூறப்படுவது. ஒருவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்தது. எந்த புத்தகங்களை படிப்பது, எவ்வழியில் செல்வது போன்றவற்றில் அவருக்கு இருந்த சந்தேகங்களை போக்கிக்கொள்ள ஒரு பெரியவரிடம் சென்றார். அப்பெரியவர் வந்தவரிடம் கீழ்வருமாறு அறிவுரைகளை வழங்கினார்.

“காலை பிரம்ம முகூர்த்தத்தில் (4 மணி அளவில்) எழுந்து விடு. காலைக் கடன்களை முடித்து நித்ய பூஜைகளை முடி. பின் சம்பிரதாய புத்தகங்களை படி.பிறகு.. பிறகு என்று இரவு 11 மணி வரை ஆன்மீக சம்பந்தமான வேலைகளை மட்டுமே செய். நடுவில் மிகக்குறைந்த நேரம் சொந்த வேலைக்காக செலவிடு. இப்படி 10 முதல் 15 வருடங்கள் விடாமுயற்சியுடன் ஆன்மீக பயிற்சி செய்தால் ஆத்ம குணங்களை சம்பாதித்துவிடலாம். பிறகு ஒரு குருவை அண்டி அவர் கூறும் வழி நடந்தால் வைகுண்டத்தை அடைந்து விடலாம்” கேட்டவருக்கு ஏன் கேட்டோம் என்றாகி விட்டதாம். அவர் விடுகிறபடியாக இல்லை. வேறு ஒரு பெரியவரிடம் சென்று அதே கேள்வியை கேட்டார். இப்பெரியவர் சிறிது மாற்றி அறிவுரைகளை வழங்கினாராம்.

ஆத்ம குணங்களை அடைந்து விட்டால் காமம், கோபம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற்று விடலாம். உடல் உபாதைகளை மனக்கவலை கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் புரிதலை அடையலாம். பிறகு வேறு பல பலன்களை பட்டியலிட்டாராம். உடனே நம்முடைய ஆள், ஸ்வாமி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இரண்டாம் பெரியவர் முதலாமவர் கூறியதையே “ரிப்பீட்டு” செய்திருக்கிறார். (4மணிக்கு எழு, இரவு 11 மணிவரை ஆன்மீக வேலையையே தவமாக செய் -10 முதல் 15 வருடங்களுக்கு)

ramanujaஇராமானுஜாச்சாரியார் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம்
பெற்ற கதை தெரிந்திருக்கும். 16 முறை அலைய விட்டு கடைசியாக 17வது முறைதான் இராமானுஜாச்சாரியாருக்கு உபதேசம் செய்தார் என்று படிக்கிறோம்.(Conveyance Allowance கூட கொடுக்காததாக கேள்வி!). ஒவ்வொரு முறையும் இராமானுஜரிடம் “இந்த அதிகாரத்தை சம்பாதித்து கொண்டு வா என்று நம்பிகள் கூறுவாறாம்”.அதிகாரம் என்றால் தகுதி. சில காலம் கழித்து இராமானுஜர், நம்பிகள் அறிவுறுத்திய தகுதியை அடைந்து பிறகு செல்வாராம். இப்படி 17 முறை நடந்திருக்கிறது.

சிலருக்கு இதை படித்தவுடன் ஒரு கேள்வி எழலாம். இராமானுஜாச்சாரியார் உபதேசத்தைப் பெற்றுக்கொண்டவுடன் “ஆசையோடு இருப்போரெல்லாம் வாருங்கள்” என்று அவ்வூர் கோயிலிலிருந்து எல்லோருக்கும் உபதேசம் வழங்கினாரே! ஆனால் இங்கு நாம் மறக்காமல் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியது என்னவெனில் தன் குரு கூறியதை Dilute செய்யாமல்தான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசித்தார்.

தந்த்ர சாஸ்த்ர பூஜா கிரமங்களை அனுசரிப்பது மிக மிக கடினம். தீக்ஷை வாங்குபவர் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் பூஜைக்காக மெனக்கெட வேண்டியிருக்கும். ஆசாரங்கள், ஆஹார நியமங்கள் போன்றவை மிகவும் சரியாக அனுசரிக்க பட வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்னும் முதுமொழிக்கேற்ப தகுதியின் அடிப்படையிலேயே முற்காலங்களில் சந்நியாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றோ ஆயிரம் ரூபாய்க்கு மூன்று தீக்ஷைகளை வழங்குகிறார்கள்.

Left, Right and Centre என்று கேட்போருக்கெல்லாம் சந்நியாசம் வழங்குகிறார்கள். பிரசவ வைராக்யம், ஸ்மசான வைராக்யம் உள்ளோருக்கெல்லாம் சந்நியாசம் வழங்கியதன் அபத்தத்தைத்தான் நாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

[பிரசவ வைராக்கியம் என்றால் ஒரு பெண் மகப்பேறு முடிந்தவுடன் அந்த வலியை அனுபவித்ததால் மறுபடியும் தன் கணவரை நெருங்கக்கூடாது என்று நினைத்துக் கொள்வாளாம். ஆனால் சில காலம்தான் அவளால் அவ்வாறு இருக்க முடியுமாம்.

ஸ்மசான வைராக்கியம் என்றால் குடும்பத்தில் உள்ளவர் யாரேனும் இறந்து ஸ்மசானத்திற்கு (மயானத்திற்கு) சென்று பிணத்தை அடக்கம் செய்து திரும்பியவுடன் மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது என்று நினைத்து கொள்வார்களாம். ஆனால் உப்பும் புளியும் உடலினுள் செல்ல செல்ல பழைய வழியிலேயே செல்ல ஆரம்பித்து விடுவார்களாம்.

இந்த உதாரணங்கள் சந்நியாசத்திற்கான தகுதியை பற்றி பேசும்போது எடுத்துக்கொள்ள படும்.சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் வைராக்கியத்தை (ஆசை அற்ற நிலை) வைத்துக்கொண்டு சந்நியாசம் வாங்கிக்கொள்ள கூடாது என்பதற்காக கூறப்படும் உதாரணங்கள் இவை.]

[ஆனால் இன்றும் பாரம்பரியத்தைக் கடைப் பிடிக்கும் ஆஸ்ரமங்களில், சந்நியாசம் வேண்டி வருபவருக்கு 2 வருடங்கள் Probation அளிக்கப்படுகிறது. ஒரு நாளைப் போன்றே பல மாதங்கள் தொடர்ந்து ஆன்மீகப்பணியில் ஈடுபடுவோர் நாட்டம் குறைந்தவுடன் (என் மொழியில் கூறுவதானால் சர்க்கரை பொங்கல் சாப்பிட ஆசை வந்தவுடன்) வீட்டிற்கே திரும்பி சென்று விடுகிறார்கள்.
உலகம் ஒரு போலி சாமியார் கிடைக்காததால் தப்பிக்கிறது.]

கொஞ்சம் அத்வைதத்திற்கான தகுதிகளைப்பற்றி:

மற்ற மதங்கள் பொய் சொல்லாமை, திருடாமை, கொல்லாமை, பிறன் மனை நோக்காமை போன்ற நற்குணங்களை பிரதான்யப்படுத்தும். சமூக மற்றும் தனி மனித ஒழுக்கத்தை நிறுவ கடவுளுக்கு பதில் சொல்லும் நிலையான “Last Day of Judgement” மற்றும் சொர்க்கம், நரகம் போன்றவற்றை பற்றிக்கூறி பெயரளவிற்கு ஆன்மீக பயிற்சியைக்கூறி நிறுத்திவிடும்.

ஆனால் நம் மதம் அவற்றைப்போன்றது அல்ல. தனிமனித ஒழுக்கம் மற்றும் கடவுளிடம் பயம் போன்ற நிலைகளைத்தாண்டி மனிதனின் தேடுதல் மற்றும் உந்துதலின் தகுதிக்கேற்பவும் அம்மனிதனின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்பவும் தேவையான பதில்களைத் தருகிறது. அதனாலேயே நம்மதத்தின் புத்தகங்கள் வேதங்களில் இருந்து ஆரம்பித்து இதிஹாச புராணங்களில் முடிகிறது. மனிதனின் முக்கிய கேள்விகளான “நான் பிறப்பதற்கு முன் எங்கு இருந்தேன்?, நான் இறந்தவுடன் என்ன ஆவேன்?, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?” போன்ற மிக முக்கிய கேள்விகளுக்கு அறிவுபூர்வமான பதில்களை தொகுத்து அளிப்பது நம் மதம் மட்டுமே! (Complete and Comprehensive Solutions to All Humans at all levels).

அத்வைதம் என்றால் என்ன என்பதை நாம் பார்க்கப்போவதில்லை. ஆனால் அந்த அனுபவத்தை அடைய ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. சாதன சதுஷ்டயம் என்ற நான்குதகுதிகளை அடைந்தபிறகு ஒரு குருவினை சரணடைந்து உபதேசம் பெற்று சிரவண, மனன மற்றும் நிதித்யாசன முறைகளின் மூலம் அத்வைத சாக்ஷாத்காரத்தை அடைய முடியும். இது என்ன? நாங்கள் P.H.Dஐயே படிக்கிறோம்? இத்தகுதிகள் என்ன பெரிய விஷயமா என்று நினைப்பவர்களுக்கு பகவத் கீதையிலிருந்து ஒரு உதாரணம்.

ஆன்மீகப்பயிற்சிகளை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிக்கொண்டு வருகிறார். ஆறாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான். ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா! என்று கேட்கிறான். இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார். மேலும் பல ஜன்மங்களின் முடிவிலேயே ஒருவன் வீடுபேற்றை அடைகிறான் என்றும் கூறுகிறார். அத்வைத அனுபவம் பெற பல தகுதிகள் வேண்டும். இவற்றை அடைய பல ஜன்மங்கள் தேவைப்படலாம் என்ற முக்கியமான செய்தியை
குறித்துக் கொள்வோம்.

இதைத்தவிர வேதாந்தத்தை நேரடியாக படிப்பவருக்கு பல சந்தேகங்கள் ஏற்படும் என்பதால் பல கிரந்தங்கள் “Introductory Texts” உள்ளன. பிரக்ருதியின் உருவாக்கம், உயிர்களின் பிறப்பு மற்றும் இறப்பு, பஞ்ச பூதங்கள், கர்ம பலன் போன்ற மிக மிக அவசியமான விஷயங்கள் இவற்றில் கூறப்பட்டுள்ளன. இவ்விஷயங்களை பற்றி அறியாமல் நம் சம்பிரதாயத்தின் எந்த புத்தகத்தையும் புரிந்து கொள்ள முடியாது.இதற்கு அடுத்து சம்ஸ்கிருத இலக்கணத்தில் நல்ல பரிச்சயம், ஆறு தர்சனங்கள், கீதை, உபநிஷத்துகள் என்று கற்கும் பயணம் தொடரும்.ஆறாவது தர்சனமான உத்தர மீமாம்ஸையில்தான் நம்முடைய அத்வைத புத்தகங்கள் படிக்கும் பயணம் முடிவுறும். குருவிடம் விளக்கம் பெற்று பின்னர் சந்நியாசம் வாங்கிக்கொண்டு கற்றவற்றை அசைபோட்டால் அத்வைத சாக்ஷாத்காரம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். (அப்பா! போதும்டா சாமி!)

சரி,இங்கு ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டு நான் பிறகு தெளிந்தேன்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் உபநிஷத்துகளை முறையாக கற்க வில்லை. ரமண மகரிஷி எந்த குருவிடமும் சந்நியாசம் பெறவில்லை. அவர்களுக்கு மட்டும் “Special Treatment”ஆ என்றால்! நம்மைப்போன்றவர்களுக்காகவே கர்மா என்னும் தத்துவம் இருக்கிறது. முன் ஜன்மத்தில் ஆன்மீகப்பயிற்சி முடியும் தருவாயில் பிராரப்தம் முடிந்ததால் உடல் விழுந்தது. அதன் தொடர்ச்சியாக இவர்கள் இந்த ஜன்மத்தில் நேரடியாக மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள். நாம் முன்பே பார்த்த கீதையின் உபதேசமும் இதற்கு சான்று.

முன்னர் கூறியதையே மறுபடியும் எழுதுகிறேன். ஆன்மீகப்பயிற்சி என்பது விளையாட்டல்ல.அதற்குரிய தகுதியுடன் அணுகினால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்பதே நம் முன்னோர்களின் கூற்று.

மனிதனின் பேராசை:

2008களின் இறுதியில் அமேரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தவுடன் CNN தொலைக்காட்சியில் “Culprits of the Collapse” (பொருளாதார வீழ்ச்சிக்கு காரணகர்த்தாக்கள்) என்னும் தலைப்பில் 10 மனிதர்களின் பெயர்களை வெளியிட்டார்கள். (சரியாகச்சொன்னால் மானத்தை வாங்கினார்கள்) பெரிய வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் பெயர்கள் முதல் 9 பெயர்களாக அமைந்தன. 10வது நாள் கடைசியாக அவர்கள் வெளியிட்ட பெயர் –

(You ie. Common man) நீங்கள் அதாவது அமேரிக்க பொதுஜனம்.

இதற்கான காரணத்தை ஒரு உதாரணத்தைக்கொண்டு நோக்கலாம். நியூயார்க் நகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வீட்டை சுமார் 75000 டாலருக்கு வாங்க தகுதி உடைய ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அந்நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டை சுமார் 150000 டாலருக்கு தவணை முறையில் வாங்கும் வாய்ப்பைபெற்றவுடன், வட்டி விகிதம் உயர்வதற்கும் வாய்ப்புண்டு என்பதை அறிந்தும் பேராசையால் அவ்வீட்டை வாங்குகிறார். சில ஆண்டுகளிலேயே வட்டி விகிதத்தின் உயர்வால் 1500 டாலர் மாத தவணை கட்டியவர் 3200 டாலர் கட்ட வேண்டும் என்ற நிலை வந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். (Foreclosure). இதே உதாரணத்தை சென்னையில் எடுத்துக் கொண்டால் நங்கநல்லூர், பூந்தமல்லி, தாம்பரம் போன்ற சென்னை புறநகர் பகுதி ஒன்றில் வீட்டை வாங்க தகுதி படைத்த ஒருவர் அடையாறு போட் கிளப் ரோட்டில் ஒரு வீட்டை தவணை முறையில் வாங்க வாய்ப்பிருந்து வாங்கினால் (இங்கு அந்த வாய்ப்பேயில்லை என்றாலும்) அதற்குரிய பாதிப்புகளை அனுபவித்துதானே தீரவேண்டும்!. மனிதனுக்கு பேராசை உண்டாகும்போது தகுதியில்லாமலேயே மேன்மையுற முயற்சிக்கிறான். ஆன்மீக பயிற்சியிலும் இதே நிலைதான் ஏற்படுகிறது.

பிரம்மச்சரியம்:

பிரம்மச்சரியத்தைப்பற்றி எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு முடிக்கிறேன்.

நான் முன்னரே கூறியபடி மனிதன் தோன்றிய நாள்முதலே போலி சாமியார்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். இன்று நவீன தொலைத்தொடர்பு சாதனங்களால் இவ்விஷயங்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.அவ்வளவுதான். போலி சந்நியாசிகள் என்றாலே பெரும்பாலும் பெண்களுடன் உறவு வைப்பதையே பேசுகிறோம். முதலில் பிரம்மச்சரியம் சந்நியாசத்திற்கு அவசியமா? என்பதை பார்ப்போம்.

எல்லா மதங்களும் பிரம்மச்சரியத்தை உயர்த்தி பேசுகின்றன. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில் பாதிரியார்கள் “Celibacy Vow” எடுத்துக் கொண்டவர்கள்தான். புத்தத்துறவிகளை நாம் இந்தியாவிலேயே கண்கூடாக காண்கிறோம்.

(1) போன வருடம் போப் ஆண்டவர் ஐயர்லாந்து நாட்டிற்கு விஜயம் செய்யும்போது ஆயிரக் கணக்கானவர்களிடம் பொதுவாக மன்னிப்பு கேட்டார். ஐயர்லாந்து நாட்டிலிருந்த சர்ச்சுகளின் பல பாதிரியார்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக சிறு குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இன்று அக்குழந்தைகள் அனைவருக்கும் வயது முதிர்ந்துவிட்டது. ஆனால் அந்த வன்முறையின் தாக்கங்களுக்காக அவர்களில் 10 பேருடன் போப் ஆண்டவர் தனியாக பிரார்த்தனை செய்தார். இந்த பிரச்சினை பல மேற்கத்திய நாடுகளில் நடந்து அதற்கு தண்டணைத்
தொகையாக பல மில்லியன் டாலர்களை சர்ச்சுகள் வழங்குகின்றன.

(2) புத்தரின் காலத்திற்கு பின் அவரின் சீடர்கள் புத்தமதத்தை மிகவும் வேகமாக பரப்பினர். ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமலும், தகுதியை சோதிக்காமலும் காண்போரையெல்லாம் துறவிகளாக ஆக்கினார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதாகவும் ஆனது. புத்தமதத்தை சேர்ந்த ஹர்ஷ வர்தனனே அந்த புத்த விஹாரங்களில் நடந்த கூத்துகளைப்பற்றி வெகு கிண்டலாக எழுதியிருப்பதாக படித்திருக்கிறேன்.

சாமியார்களை ஏன் நாம் விடுவதில்லை!

சாதாரணமாகவே மனிதனுக்கு ஒரு தன்மை உண்டு. தன்னால் முடியாததை மற்றவன் செய்யும்போது பொறாமை கொள்வது மனித இயல்பு. தான் மட்டும் உடல் உறவில் ஈடுபடும்பொழுது, சந்நியாசியினால் மட்டும் எப்படி அதை தவிர்க்க முடியும்? இந்த கேள்விக்கான மனதின் வக்கிரத்தை அவன் ஒரு சாமியார் அகப்பட்டவுடன் பழிதீர்த்து கொள்கிறான்.

ஏமாற்றி விட்டார்கள் என்று நீலிக்கண்ணீர்:

மனிதனின் பேராசையை காசாக்க முயலும் இந்த போலிகளை நான் குறை கூற மாட்டேன். சந்தையை உருவாக்கும் ஏமாந்த சோணகிரிகள் இருக்கும்வரை போலிகள் கடையை விரிக்கத்தான் செய்வார்கள். “ஏமாறுவது எங்கள் பிறப்புரிமை” என்னும் பதாகையை கையிலேந்தி கொண்டவர்களை காப்பாற்றுவது நம் வேலையில்லை. சீட்டு ஃபண்டில் முதலீடு செய்து ஏமாறுபவர்களுக்கும், பல காலம் பயிற்சி செய்தேனே என் தலைக்குபின் ஒளிவட்டம் ஏற்படவில்லையே!, அந்த சாமியாரை நம்பி மோசம் போனேனே! என்று கூறுபவருக்கும் வித்தியாசமே இல்லை. 7 சதவிகிதம் வரை மட்டுமே நியாயமான முறையில் வியாபாரம் செய்பவர்களால் வட்டி கொடுக்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறினாலும் படித்தவர்களே பெரும்பாலும் ஏமாறுகிறார்கள்.கண்ட இடத்தில் கண்டதை தின்று, மனதை கண்டபடிக்கு அசுத்தப்படுத்திக்கொண்டு கூடவே ஆன்மீக பயிற்சியும் செய்தால் பேரின்பம் பெறலாம் என்று படித்தவர்களும் நம்புவது அவர்கள் உரிமை.

கடைசியாக:
ஆன்மீக நாட்டமுள்ளவன் பின் எப்படித்தான் குருவை கண்டு கொள்வது? சுவாமி சிவானந்தா கூறியது.

“இந்த குருவிடம் இப்படிப்பட்ட ஒழுங்கீனம் இருப்பதைக்கண்டேன். அந்த குருவிடம் அதைக்கண்டேன் என்றெல்லாம் கூறாமல் உன்னுடைய தகுதிகளை வளர்த்துக்கொள். உனக்கு வேண்டிய தகுதிகள் உண்மையாகவே வந்து விட்டால் குரு உன் வீட்டில் வந்து நிற்பார். உன் முயற்சிகளும் வீணாகாது. நம் சாத்திரங்களும் பொய்க்காது.”

கடைசி கடைசியாக:

உடல்பயிற்சி என்பதற்காக யோகாவை செய்தாலும், மன அமைதிக்காக பிராணாயாமம், தியானம் போன்றவற்றை செய்தாலும் ஆஹார நியமத்தை ஒரு அளவிற்காவது அனுசரிக்காமல் போனால் சில பயிற்சிகளால் தொந்தரவுதான் உண்டாகும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த நிலையான ஆன்மீகப்பயிற்சி என்றாலோ தகுதி இல்லாமல் ஈடுபட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது ஆன்மீகத்தளத்தில் பிரயோஜனம் இல்லை. ஆனால் வர்த்தகத்தில், “Sky is the limit”.

43 Replies to “மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை”

  1. Man is inventing all sorts of techniques to amass wealth and I am sure if poor men start digging our old scriptures, there would be a lot of such techniques in them which could be used for commercial purpose.

    Everyone can become a Yoga teacher today – it has become very cheap. Actually Yoga means the method to control the 5 senses and Asana means the physical exercises. Nowadays, Asana is being taught at centres, by calling people to learn Yoga.
    The author’s analysis should serve as a brake to the rushing people who are looking out for quickfix solutions to their problems.

    (edited and published)

  2. மிக அருமையான கட்டுரை ,நல்ல விளக்கங்கள் ,யார் மனதையும் புண்படுத்தாமல் நிதர்சனத்தை வெளிபடிதியுள்ளார் கட்டுரை ஆசிரியர் . தமிழ்ஹிந்து இணையத்தளம் தரமிக்க கட்டுரைகளை வெளியுடுவதால் இதன் வாசர்களாகிய நாங்கள் பெருமைபடுகிறோம் .வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் எடிட்டர் .நன்றி

    என்னை கவர்ந்த வாக்கியம்
    சந்தைப் பொருளாதார தன்மையின் படி எங்கு ஒரு பொருளுக்கான Demand அதிகமாகிறதோ அங்கு Capacityயும் Supplyயும் அதிகமாகும். சமூக ஒழுங்கின்மையின் தாக்கம் அங்கு இருந்தால் போலிகள் பெருகியே தீரும்.

  3. திரு பாலாஜி அவர்களே உங்கள் கட்டுரையை மிகவும் ரசித்து படித்தேன். ஆழ்ந்த கருத்துக்களை நகைசுவையுடன் கூறியுள்ளீர்கள். சிரிப்பை அடக்க வெகுநேரம் ஆயிற்று. இது சிலநாட்களுக்கு முன் நான் பெரியவரின் தெய்வத்தின் குரல் புத்தகத்தின் சில பாகங்கள் படித்ததையை நினைவூட்டியது. முக்கியமாக நாய் யோகாசனம் படத்தை என்மனைவியிடம் காண்பித்தேன் என்ன என்று கேட்டு கனீனியில் உட்கார்ந்து கட்டுரையை முழுவதும் படித்தபின் தான் நானே மிதிகட்டுரையை படித்துமுடித்தேன்.

    உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு பூரண ஆரோக்கியத்தையும் நீணட ஆயுளையும் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்..

  4. இராப்பக லற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்று அருணகிரிப் பெருமான் முதலாய மகாயோகிகள் எல்லாம் ஏங்கிச் சொல்லும் யோகநிலையும் சமாதியும் மாடர்ன் சுவாமிஜீக்களால் எத்தனை மலினப்பட்டுவிட்டன என்று பாலாஜி நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார். அவர் கூறுவதுபோல இத்தகைய நிகழ்ச்சிகளால் இந்துத்துவம் ஒன்றும் பலம் குன்றி விடாது. வெறும் உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மட்டுமே ஆன்மிகநெறி ஆகி விடாது. இவற்றைக் கற்பிக்க முனைபவர்கள் காவியாடை அணிந்து உருத்திராட்சம் பூண்டு இருந்தாலும் துறவியாகிவிடமாட்டார்கள்.

  5. பாலாஜி, ஆன்மிகம்/யோகம் பற்றி பல கருத்துக்களை கதம்பமாக சொல்லி இருக்கிறீர்கள்..

    வெச்சா குடுமி.. சரைச்சா மொட்டை என்று சொல்லவருகிறீர்கள், இடைப்பட்ட வழி என்று ஒன்றுமே இல்லையா?

    word of mouth என்பது எதிர்மறையான விஷயம் அல்ல.. சொல்லப் போனால், கோடிக் கணக்கில் பணம் கொட்டி மக்களை மூளைச் சலவை செய்து பரப்பப் படும் விஷயங்கள் தான் சந்தேகத்திற்குரியவை.. word of mouth மூலம் ஒருவர் தான் யோகாசனங்களால் அடைந்த பயனை இன்னொருவரிடம் கூறுவது என்பது ஜனநாயக வழியிலான பிரசாரம் தான் இல்லையா?

    யோகம் இன்று பெருமளவில் பலரையும் சென்றடைந்திருக்கிறது. ஆன்மிகம் என்ற தளத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டாலும் கூட, உடல்நலம், செயல்திறன், மனவளம் ஆகிய விஷயங்களில் இலட்சக் கணக்கான மக்களுக்கு நடைமுறையில் நன்மைகளை அளித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.. எனவே உங்கள் அனுபவங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த விஷயங்களை முற்றாக மறுதலிப்பது சரியல்ல.. (சொல்லப் போனால் பதஞ்சலி யோகம் அதன் தூய்மையான வடிவில் *ஆன்மிகவாத* தரிச்னம் அல்லவே அல்ல. அது முற்றாகவே பொருள்முதல்வாத (materialist) தரிசனம் தான். சாஞ்கிய தரிசனத்தின் cousin அது. “ஈஸ்வர ப்ரணிதானம்” என்பதை அது நியமங்களில் ஒன்றாகக் கூறிச் செல்கிறதே தவிர, இறை அனுபவம் என்பதையே மிக உயர்ந்த நிலையாக சொல்லவில்லை, அது கூறும் கைவல்ய-சமாதி என்பது ”இறை அனுபவம்” அல்ல).

    இன்றைய ஆரோக்யம் பற்றீய புரிதலில் நோய் வராமல் தடுப்பது என்பது மிகப் பெரிய புள்ளியாக கருதப் படுகிறது (preventive steps). இங்கு Yoga மிகப் பெரிய பங்கை ஆற்றுகிறது.. சூரிய நமஸ்காரம், சர்வாங்காசனம், கபாலபாதி/பஸ்த்ரிகா பிராணாயாமங்கள் முதலான எளிய பயிற்சிகளை நீங்கள் விடாமல் சரியாக செய்து வந்தால், உண்மையில் “நோயற்ற” நிலைக்கு வெகு அருகில் செல்வீர்கள். இதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்,. அதோடு கடந்த 15-20 வருடங்களில் யோகம்/பிராணாயாமம் பற்றீ ஏராளமான systematic Clinical studies வந்துள்ளது. இவற்றைப் பின்பற்றும் இந்தியர்களும், அமெரிக்கர்களும் முட்டாள்கள் அல்ல. Yoga as a preventive healthcare practice is mainstream today, approved and (even advocated by many) doctors all over the world.

    மருத்துவ ரீதியிலான theraupatic yoga என்ற விஷயமும் போலி அல்ல. கண்டிப்பாக சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்று சில குறிப்பிட்ட chronic வியாதிகளை (எல்லா வியாதிகளையும் அல்ல) பெருமளவு யோகம் மூலம் குணப்படுத்தலாம். அது நிரூபிக்கப் பட்டுள்ளது. பெங்களூரில் Svyasa (Swami Vivekananda Yoga Anusandhan Samstha) என்ற அமைப்பு இத்தகைய residential சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த சிகிச்சைகள் இந்தியன் மெடிகல் கவுன்சிலால் அங்கீகரிக்கப் பட்டவை. எம்.டி வரை படித்த டாக்டர்களே இங்கு ஆராய்ச்சியாளர்களாக இருக்கிறார்கள் – யோக சிகிச்சை முறைகளை செய்கிறார்கள்.

    எனவே modern Gurus தொடர்பான எல்லா விஷயங்களையும் ஏளனம் செய்யவேண்டும் என்பது இல்லை.

    இந்து மத தத்துவங்களும், யோகா போன்ற நல்ல நடைமுறை விஷயங்களும் சந்தைப் படுத்தப் பட்டாவது இளைய தலைமுறையினரிடமும், பல நாடுகளிலும் சென்று சேர்வது நல்ல விஷயம் தான். எங்கோ ஒரு மூலையில், ஒரு சிலரால் மியூசியம் வஸ்து போல பொத்திவைக்கப் படுவதை விட இது நல்லது தான் – இதைத் தான் விவேகானந்தர் சொன்னார். அவர் உபநிஷதங்களை இந்து தர்மத்தின் மைய செய்தியாக வெகுஜன அளவில் பிரசாரம் செய்தபோது, அப்போதிருந்த சம்பிரதாய வாதிகள் அது பெரும் தவறு என்று அவருக்கு எதிராகப் பேசினார்கள். சுவாமிஜியின் அபார ஆளுமையையும் அறிவுத் திறனும் அவர்களை அடக்கி விட்டது. இன்று அதே விவேகானந்தரைப் போற்றீய படி, நீங்கள் அடுத்த கட்ட நவீன செயல்பாடுகளை “சம்பிரதாயத்தின்” பெயரால் கண்டிக்கிறீர்கள். இது ஒரு முரண்நகை!

    மகோன்னதமான கவிதைகளை எழுதிய பாரதி, இந்தத் தமிழ்நாட்டில் தனது படைப்புகளை அச்சிடுவதற்கு, வாங்கிப் படிப்பதற்கு ஆளில்லையே என்று தன் காலத்தில் புலம்பியிருக்கிறான். அந்த நிலை மாறி நல்ல இலக்கியம், நல்ல மத செயல்பாடுகள், நல்ல சமூக முன்னேற்றப் பணிகள் இவற்றை பொருளாதார ரீதியாக ஆதரிக்கும் சூழலும் இந்து மதத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் இன்றைய சூழலில் ஆபிரகாமிய மதத் தாக்குதல்களை அது சமாளிக்க முடியும். இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

    இந்திய தேசிய தொலைக் காட்சியில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பப் பட்டது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இந்து மறுமலர்ச்சி நிகழ்வு. எத்தனை லட்சம் மக்களுக்கு இந்த இதிகாசங்களை இது எடுத்துச் சென்றது என்றூ யோசியுங்கள். எந்த சமய பிரசாரகரும் கனவில் கூட எண்ணமுடியாத scale அது.

    மேலும், சந்தைப் பொருளாதாரம் என்பது பெரும்பாலான நேரங்களில் self correcting. சந்தையில் வரும் போலிகளை அவ்வப்போது சந்தையே வெளியில் தள்ளுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.. வேண்டியது consumer alertness and vigilance மட்டுமே. அதற்காக சந்தையே வேண்டாம் என்பது சரியல்ல.

  6. //இந்திய தேசிய தொலைக் காட்சியில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பப் பட்டது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இந்து மறுமலர்ச்சி நிகழ்வு. எத்தனை லட்சம் மக்களுக்கு இந்த இதிகாசங்களை இது எடுத்துச் சென்றது என்றூ யோசியுங்கள். எந்த சமய பிரசாரகரும் கனவில் கூட எண்ணமுடியாத scale அது. // Good Point.

  7. மிகசிறந்த காலத்திற்கு ஏற்ற கட்டுரை.
    பலவரிகள் சிரிப்பையும் சிந்தனையையும் துண்டின.
    இது பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் நன்றாக உள்ளது.
    இதைவிட மிக பெரிய கொடுமை இந்து மத சம்பிரதாயங்களை மாற்றுவது.
    உதரணமாக, ஒவ்வொரு சாமியாரும் தங்கள் இஷ்டம் போல கோவில்களை கட்டிக்கொண்டு தங்கள் இஷ்டம் போல வழிபாடு நடத்துகின்றார்கள். அதில் ஒரு ஆகமமும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.
    இது நம்முடைய ஆகமங்களை சிதைக்கும்.

  8. //வேண்டியது consumer alertness and vigilance மட்டுமே. அதற்காக சந்தையே வேண்டாம் என்பது சரியல்ல.//
    மிகவும் சரி.
    எவ்வளவு தூரம் வியாபாரமாகியிருக்கிறது என்பதற்க்கு ஒரு சாட்சி நம்ம ஊர் தோப்புக்கரணம் ‘super brain yoga’ என்ற பெயரில் அங்கு உலா வருகிறது! Look up Youtube.

  9. நண்பரே நன்றாக கடைந்திருகிறீர்கள்…
    வெண்ணை கிடைத்தது…
    நன்றி…

  10. திரு பாலாஜி அவர்களே
    அருமையான கட்டுரை. அருமையான நையாண்டி.
    “அத்வைத அனுபவம் ” பற்றி எழுதியிருந்தது வாய் விட்டு சிரிக்க வைத்தது .
    ஆனால் சில கருதத்ுக்கள் உடன்பாடு இல்லை.
    ஆஸ்த்ம என்ன , சர்க்கரை வியாதி கூட குறையும்-அருள் இருந்தால், வியாதிகள் விலகியே ஓடும் -தியானம் செய்தால்-எல்லார்க்கும் அல்ல-சிலருக்காவது .
    உணவு க்கட்டுப்பாடு மிக மிக அவசியம் -ஒரு லைஃப்‌ஸ்டைல் மாற்றம் இன்றி தியானம் செய்வது பலன் அளிக்காது .-நீங்கள் சொல்வது முற்றில்ம் சரி.
    நம் யோக முறைகள் கொச்சை ப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
    நாய்களும் பூனைகளும் இவர்களை யோக சொல்லிக்கொடுக்க சொல்லியா கேட்டன?எதை வைத்ததும் பணம் பண்ணும் ஏமாற்றுக்காரர்கள் இவர்கள்.

  11. Nalla katturai. I came out of a poli samiyar in 2004 due to god grace and leading a normal life. What ever you said in your katturai im just directly mapping myself (iluchavayan that time) and incidents happend that time. Anyway basement week building strong (vadivel joke) is for these poli samiyars. Ennamoo ponga.. basic common sense iruntha thappuchuralam. Every one said Kali kalam, its otherway..

    I would says since truth is strong all these things are revealed only thing ppl should have courage to witness what is happening.

    Vaimaiyeee Vellum.
    –Murali

    (edited and published)

  12. திரு. வேதம்கோபால் அவர்களுக்கு,
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    திரு.வி.சரவணன் அவர்களுக்கு,
    ஆஸ்த்மா போன்ற சில வியாதிகள் அருள் இருந்தால் குணமடையும் என்று
    கூறியிருக்கிறீர்கள். என் கருத்துடன் உடன் பட வில்லை என்றும் கூறி
    உள்ளீர்கள். நானும் அதைத்தானே கூறியுள்ளேன். விவேகானந்தரின்
    உதாரணங்களையும் காட்டியுள்ளேனே!. இன்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு நோய்கள் குணமடையாது என்பதுதான்
    என் கருத்தும்.

    திரு.ஜடாயு அவர்களுக்கு,
    பல நல்ல கட்டுரைகளை தமிழ் இந்து இணையதளத்தில் வெளியிடுபவர்
    நீங்கள்தான் என்று ஊகித்து எழுதுகிறேன்.
    உங்களின் கட்டுரைகளை படித்தவுடன் இவ்வளவு நம்பிக்கைகளை ஒரு
    சேர கொண்டிருப்பது எவ்வாறு சாத்தியம் என்று அதிசயித்திருக்கிறேன்.
    உதாரணமாக பெண்ணுரிமை, சாதிகளற்ற சமுதாயம் போன்றவற்றை பற்றி
    உங்கள் நம்பிக்கைகள் அசாதாரணமானவை. ஆனால் இந்த கட்டுரையை
    பற்றிய உங்கள் விமர்சனத்தில் சில இடங்களில் நான் வேறுபடுகிறேன்.

    (1)என் கட்டுரை கதம்பமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறீர்கள். சில
    இடங்களில் நான் வழங்கிய தலைப்புகள் காணாமல் போய்விட்டன.

    (2)யோகம் என்பது ஆன்மீக தர்சனம் அல்லதான். ஆதிசங்கரரே யோகத்தை
    பயிற்சி என்ற அளவில்தான் ஏற்றிருக்கிறார்.

    (3)யோகா என்பது “நோய் வராமல் தடுப்பது” என்ற அளவில் உலகளவில்
    ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்று கூறியுள்ளீர்கள். நான் இதை மறுக்க
    வில்லையே! ஆஹார நியமம் துளியும் இல்லாமல் செய்யப்படும் பயிற்சியை
    தானே நான் கிண்டலடித்துள்ளேன். மேலும் “நோய் வராமல் தடுப்பது”
    என்பதற்கும் “நோயை குணப்படுத்துவதற்கும்” வித்தியாசம் உள்ளதே.

    (4)அடுத்து யோகாவின் மூலம் நோய்களை (பெருமளவில்) குணப்படுத்த
    முடியும் என்பதற்கு ஒரு நிறுவனத்தை கூறியுள்ளீர்கள். அது நிரூபிக்க
    பட்டுள்ளது என்றும் கூறியுள்ளீர்கள். எனக்கு இங்குதான் பிரச்சினையே.
    “Indian Medical Association”ன்படி எந்த வியாதியையும் யோகா அல்லது
    தியானத்தின் மூலம் குணப்படுத்த முடியாது என்று கூறும்போது இதை
    எப்படி ஏற்றுக்கொள்வது. நான் அறிந்த வரையில் யோகா மற்றும் தியானத்தின் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம் பழைய நூல்களில் இல்லையே! அற்புதம் என்பது வேறு தளம்.Empirical evidenceஆக நம் பழைய புத்தகங்களில் எதுவும் இல்லையே!. நான்
    பழமைவாதி என்று நீங்கள் கூறினாலும் நம் புத்தகங்களில் இல்லாத
    ஒன்றை நவீனர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை எப்படி ஏற்பது?
    தவிரவும், இப்படி ஒரு முறை இருந்திருந்தால் நம் முன்னோர்களே
    நோய்களை குணப்படுத்த யோகாவையும் தியானத்தையும் ஆயுர்வேதத்தில் சேர்த்திருப்பார்களே!

    (5)சந்தைப்பொருளாதாரம் என்பது “Self Correcting” என்றும் போலிகளை
    சந்தையே வெளியே தள்ளும் என்றும் கூறியுள்ளீர்கள். Alan Greenspan-
    Former chief of American Federal Reserve இக்கருத்தைத்தானே கூறி
    வந்தார்.ஆனால் அமேரிக்க பொருளாதாரம் கீழே விழுந்தவுடன்
    “Regulation” வேண்டும் என்ற குரல்கள்தானே ஒலிக்கின்றன.
    “வேண்டியது consumer alertness and vigilance மட்டுமே. அதற்காக சந்தையே வேண்டாம் என்பது சரியல்ல”
    என்று கூறியுள்ளீர்கள். சந்தைப்பொருளாதாரத்தை முழுவதுமாக ஆதரிப்பவன்தான் நான்.
    ஆனால் “Consumer alertness and vigilance” எப்படி உருவாகும்? ஆன்மீகத்தளத்தில் என் போன்றவர்கள் கூற முயல்வது இதைத்தான்.

  13. //இந்திய தேசிய தொலைக் காட்சியில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பப் பட்டது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இந்து மறுமலர்ச்சி நிகழ்வு. எத்தனை லட்சம் மக்களுக்கு இந்த இதிகாசங்களை இது எடுத்துச் சென்றது என்றூ யோசியுங்கள். எந்த சமய பிரசாரகரும் கனவில் கூட எண்ணமுடியாத scale அது///

    சத்தியமான வார்த்தை. தூர்தர்ஷனில் மட்டும் இந்த இதிகாசங்கள் காட்டப்படாவிடில் எனக்கெல்லாம் இப்படி ஒரு உயர்ந்த தத்துவங்கள் இருக்கின்றன என்பதே தெரியாமல் போயிருக்கும். அதுமட்டுமா, தெனாலிராமன் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளையும் , மரியாதை ராமன் கதைகளையும் அன்றைக்கு தூர்தர்ஷன் ஒளிபரப்பியது போல இன்று தனியார் சேனல்கள் ஒளிபரப்ப முனைவது கூட இல்லை. இவர்களுக்கு அவுத்துப் போட்டு ஆடும் பெண்களின் நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவே நேரம் பத்தவில்லை. வருங்கால குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிய விஷயங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று எப்படித் தோன்றும். ஈஸ்வரோ ரக்ஷது.

  14. திரு.ஜடாயு அவர்களுக்கு,
    (தொடர்ச்சி)
    (6)என் அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த யோகாவையும்
    கிண்டலடிப்பது சரியல்ல என்று கூறியுள்ளீர்கள். கட்டுரையில் நான்
    கூறிய அத்வைத அனுபவத்தை அடைந்தபிறகு எங்கள் HR Departmentன்
    அதிகாரியை சந்தித்து என் கோபத்தை வெளிபடுத்தினேன். அவர் கூறிய
    பதில் முக்கியமானது. எங்களுக்கு தியானம் சொல்லிக்கொடுத்த அந்த
    பெண்மணி மிகப்பெரிய Market உடையவர் என்றும் அந்த ஊரிலுள்ள
    எல்லா கம்பெனிகளும் அவரையே தங்கள் அதிகாரிகளுக்கு தியானம் கற்றுக்கொடுக்க கூப்பிடுவதாகவும் கூறினார்.இன்றும் பலருக்கு அவரால் அத்வைத அனுபவம் கிடைத்து கொண்டிருக்கும்

  15. நல்ல பதிவு.
    சந்தைபடுத்துதல் பற்றி நகைச்சுவையாக கூறியிருப்பதால் சற்று அதிகம் போல் தோன்றினாலும், இன்று திருவண்ணாமலை, பாண்டிச்சேரி மாதிரி இடங்களில் சுற்றி வரும் வெளி நாட்டவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்களை அணுகி பேச்சுக் கொடுத்தால் பலரும் எந்த தெளிவும் இல்லாமல் தான் கேள்விப் பட்டதன் அடிப்படையில் அங்கு வந்திருப்பது புரிகிறது. அவர்கள் எமாறுவதர்க்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி ஏமாந்து திரும்பிச் செல்பவர்கள் கண்டிப்பாக இந்து மதத்தின் மேலும் இந்தியர்கள் மேலும் வெறுப்பே கொள்வார்கள் என்றும் எனக்குத் தோன்றும்.
    இந்த சந்தைப் படுத்தல்கள் வெறும் வியாபாரம் என்ற அளவிலோடு நிற்காமல் இந்தியாவின் மேல் பெரும் களங்கம் ஏற்படுத்தும் ஒரு விஷயமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது. இதை ஒழுங்கு படுத்த அல்லது இது மாதிரி வருபவர்களுக்கு guidance கொடுக்க ஏதாவது அமைப்பு உதவினால்நல்லது.

    நம் மக்களுக்கு இதெல்லாம் trial ஒரு மாதிரி ஆகி விட்டது. எதிலாவது சேர்ந்து அரை குறையாக அவர்கள் கற்றுக் கொண்டதை தாமும் கொஞ்சம் காலே அறைக்கலாக முயற்சி செய்து விட்டு ஒன்றும் வேலைக்காக வில்லை. எல்லாம் புருடா. இந்து மதமே புருடா என்று ஒரு பதிவு போட ஒரு வாய்ப்பு என்று ஆகிவிட்டது.

    இதை யாரவது இங்கும் அங்கும் கொஞ்சமாக படிச்சுட்டு நம்மை எல்லாமும் கூட காவிக் கூட்டம் என்று கூறி விடும் வைய்பும் அதிகம்.

    https://www.virutcham.com

  16. எனது நண்பர் ஸ்ரீநிவாசன் சிறு வயதில் ஆஸ்த்மாவின் காரணமாக நடக்கக்கூட கஷ்டப்பட்டார். யோகாசனம் கற்ற, பயின்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பள்ளியில் நடந்த நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால், தகவல்கள் தரத் தயார்.

    கட்டுரை ஆசிரியர் தனது அனுபவத்தை உலகப் பொது உண்மையாகக் காட்ட முனைந்துள்ளார். சாமியார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரது வரையறை ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது.

    இதுபோன்ற ஆபிரகாமிய வரையறைக்குள் ஆன்மீக முயற்சிகளை அடைத்தால் மற்றொரு ஓஷோவோ, ஜே கிருஷ்ணமூர்த்தியோ, தந்திர மார்க்க சாதகரோ, வேறு ஏதேனும் மரபு சாரா மகானோ உதயமாகும் வாய்ப்பு இல்லாமல் போகும். இதைத்தான் ஆபிரகாமிய சக்திகள் விரும்புகின்றன. அவைகள் விரும்புவதைத்தான் நாம் செய்கிறோம் என்பதற்கு இந்தப் பிரச்சினையில் இந்துக்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றொரு உதாரணம். Mere knee-jerk reactions …. ! 🙁

    நான் நித்தியானந்தரை ஆதரிக்கிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிப் பேசி மகிழும் நம் மனத்தில்தான் ஆபாசம் அருவருக்கும் அளவு நிரம்பிப்போயிருக்கிறது.

    ஒரு மாறுதலுக்கு, நித்தியானந்தருக்கு ஆதரவாகப் பேசுகிற மக்களும் அதிகரித்து இருக்கிறார்கள். இந்த ஆதரவு முன்பு இல்லாதது.

    சாமியார்கள் என்றால் கோவணத்தை இறுக்கிக் கட்டிக்கொண்ட பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற தெளிவு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

    அதனோடு, இந்து மதத்தை இழிவு செய்யும் முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. அதன் காரணமாக, “எதனால், இந்து மதத்தைச் சேர்ந்த சாமியார்களை மட்டும் மீடியாக்கள் குறி வைக்கின்றன ?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

    மடி சஞ்சிகள் மட்டும் மறுகிப் போய் சொதப்பலாகச் சமாளிக்க முயல்கிறார்கள்.

  17. சாமியாரா இருந்தா என்னய்யா…. அவனும் மனுசந்தானே …… .

    இது போன்ற ஆதரவு பிளஸ் அனுதாப கலக்கல் பஞ்ச் டயலாக்குகள் தளங்களில் உலா வருகின்றன.

    துறவு என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு மன நிலை.

    இயற்கையுடன் மனிதன் நடத்தும் இறுதிப் போராட்டமே துறவு.

    இல்லறத்தவரின் மன நிலை வேறு. அவர்களின் சிந்தனைத் தளங்கள் வேறு. இல்லறத்தவர்கள் மனைவியை அல்லது காதலியை காணும் போது அவர்களுக்கு காதல் உணர்வு வருகிறது, அதை அவர்கள் தடுக்க விரும்பவில்லை, அவர்களால் தடுக்க முடியவும் இல்லை. அதே போலத்தானே துறவிக்கும் இருக்கும் என சில பரந்த உள்ளம் படைத்தவர்கள் முடிவு கட்டி விடுகின்றனர். எனவே தான் “விடுய்யா … பாவம்…. நமக்கு ஆசை இல்லையா…. அதைப் போல அவனுக்கும் ஆசை இருக்குமையா” என, நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் வகையிலே கருத்து தெரிவிக்கின்றனர்.

    இயற்கையிடம் வாங்கிய அடி போதும், இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், உன்னிடம் அடிமையாக வாழாமல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைவேன் என, வாங்கிய அடியின் வலியில், வேதனையின் மன உறுதி பெற்று ஒருவன் மேற்கொள்வதே துறவு.

    இல்லறத்தாரை பிரம்மசார்யம் கடைப் பிடிக்க சொல்லவில்லை. துறவிகள் பிரம்மசார்யம் கடைப் படிக்க வேண்டும் – முடியா விட்டால் திருமணம் செய்து இல்லறத்தார் ஆகி ஆன்மீகப் பணி செய்யலாம். யாரும் தடுக்கவில்லை.

    பெரிய சாமியார் போல வேடமிட்டு கள்ளக் காதல் செய்வது சரியா?

    //சாமியார்கள் என்றால் கோவணத்தை இறுக்கிக் கட்டிக்கொண்ட பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற தெளிவு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. //

    அடுத்த தெளிவு என்ன, சாமியார்கள் மடத்திலே பப், டிஸ்கோதே…… வைத்து நடத்தினால் அது தவறல்ல என்று சொல்வார்கள் போல இருக்கிறதே! அதை ஒத்துக் கொள்ளாதவன் மடி சஞ்சி என சொல்லி முடித்து விடலாம்.

    (edited and published)

  18. திரு.WiltingTree அவர்களுக்கு,
    உங்கள் உணர்ச்சிகரமான விமர்சனம் படித்தேன்.
    உங்களின் தீவிர இந்துத்துவாவை படித்து மகிழ்ச்சி.
    நான் உணர்ச்சி வசப்படப்போவதில்லை. எனக்கு புரிந்ததை பகிர்ந்து
    கொள்கிறேன்.
    (1)”சாமியார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரது வரையறை ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது.” என்று கூறியுள்ளீர்கள்.

    இதை முழுமையாக மறுக்கிறேன். நான் நீங்கள் உருவகப்படுத்துவதைப்
    போன்ற பழமைவாதி இல்லையென்றாலும், சாமியார்கள் இப்படித்தான்
    இருக்க வேண்டும் என்ற வரையறை நம் மரபு வழி வந்ததே அன்றி
    ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது அல்ல.

    -ஒரு துறவி நம் தர்ம சாஸ்திரங்களின் படி (சில ஸ்மிருதிகளின் படி) 3
    நாட்கள் மட்டுமே ஒரு இடத்தில் தங்க வேண்டும். சத்திரம் சாவடி என்று
    எந்த வசதியும் இல்லாத இந்த காலத்தில் இதை கடைபிடிக்க முடியாது
    என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
    -ஆனால் ஒரு இந்து துறவி அமேரிக்காவிற்கு சென்ற பிறகு முட்டை
    சாப்பிடுவதை நவீனம் என்ற பெயரில் எதற்காக ஏற்க வேண்டும். ஒரு
    குழந்தை கொடுத்ததாம்-குழந்தை வருத்தப்படக்கூடாதென்று சாப்பிட்டாராம். சந்நியாசம் வாங்கிக்கொள்ளும்போதே அக்னி சாட்சியாக
    எந்த உயிருக்கும் கேடு விளைவிக்க மாட்டேன் என்ற அறைகூவல் என்ன
    ஆவது? மரபு வழியிலிருந்தும் தேவையெனில் விலகலாம் என்று ஏற்று
    கொண்டாலும் இதை ஏற்று கொள்ள முடியுமா?

    (2)அடுத்து ஆஸ்த்மா விஷயம். இன்னொருவரும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். உங்கள் நண்பர் கூறியதால் நீங்கள் நம்புகிறீர்கள். சரி.
    அது உங்கள் உரிமை. இன்னொருவர் “Systematic Clinical Studies”
    நடந்திருப்பதாக கூறுகிறார்.
    When is a Study, a Study? – மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும்.
    (அ)குறைந்த பட்சம் 12 பேரை வைத்து செய்தாலும் அது Clinical Studyதான்.
    அடுத்து எவ்வளவு காலத்திற்கு நடத்தப்படுகிறது என்பதும் ஒரு முக்கிய
    காரணி.
    (ஆ)யாரால் நடத்தப்படுகிறது என்பது மிக முக்கியம். நடு நிலையாளர்களை
    கொண்டதாகவும், மருந்தை கண்டுபிடிப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்
    களாயும் இருக்க வேண்டும்.
    (இ)இந்த ஆய்விற்கான அங்கீகாரம் என்பது அந்த ஆய்வின் முடிவு புகழ்
    பெற்ற ஆய்வு சஞ்சிகைகளில் வெளிவர வேண்டும் (உதாரணமாக Lancet,
    New Scientist போன்றவை)
    இப்படியாக இல்லாமல் சில மருத்துவர்களால் நடத்தப்பட்டது என்றாலும்
    அதற்கு அங்கீகாரம் கிடைக்காது.
    இன்னொரு விஷயம். இன்று நாம் இவற்றை ஏற்றுக்கொண்டு விட்டால்
    நாளை நீங்கள் கூறும் ஆபிரகாமிய மதங்களும் Divine Vibration மூலமாக
    செவிடர்களை பேச வைக்கிறோம் என்று உறுதியுடன் அவர்களின்
    வேலையை புணருத்தாரனம் செய்து விடுவார்கள்.

  19. அன்புள்ள பாலாஜி,

    நீங்கள் என்மீது கொண்டிருக்கும் அன்புக்கு மிக்க நன்றி.

    // அடுத்து யோகாவின் மூலம் நோய்களை (பெருமளவில்) குணப்படுத்த
    முடியும் என்பதற்கு ஒரு நிறுவனத்தை கூறியுள்ளீர்கள். அது நிரூபிக்க
    பட்டுள்ளது என்றும் கூறியுள்ளீர்கள். எனக்கு இங்குதான் பிரச்சினையே.
    “Indian Medical Association”ன்படி எந்த வியாதியையும் யோகா அல்லது
    தியானத்தின் மூலம் குணப்படுத்த முடியாது என்று கூறும்போது இதை
    எப்படி ஏற்றுக்கொள்வது.//

    svyasa என்ற அந்தப் பெயரை கூகிள் இட்டிருந்தாலே உங்களுக்கு விடை கிடைத்திருக்குமே
    ———-
    https://www.svyasa.org/ தளத்தின் முகப்புப் பக்கம் இவ்வாறு கூறுகிறது –

    Yoga Research and Yoga Therapy – two Yoga fields which SVYASA has poured life into!

    Over the years, SVYASA has been substantiating scientific validation through Research @ SVYASA. We have successfully published more than 100 papers which have all been indexed in Medline and/or Psychlit/Psychinfo. SVYASA has carried itself as a Centre of Advanced Research (CAR) in Yoga and Neurophysiology accredited by the Indian Council of Medical Research (ICMR).

    SVYASA also houses one-of-its-kind Yoga Therapy Home with a 250-bed inpatient treatment facility called Arogyadhama. This is a Yoga Research Health Home which has been envisioned for prevention and treatment of Diseases, long-term rehabilitation and for Promotion of Positive Health.
    ———–

    இந்த நிறுவனத்திற்குச் சென்று நான் அங்குள்ள டாக்டர்களிடம் உரையாடியிருக்கிறேன்.. யோக சிகித்ஸா என்பது பண்டைக் காலத்திலும் இருந்த வழிமுறை தான், அது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியும் கூட என்று அவர்கள் கூறினார்கள்.

    இந்திய அரசு யோக மருத்துவ முறைகளை அங்கீகரித்திருக்கிறது, நெறிப்படுத்தும் முயற்சிகளையும் ஊக்குவிக்கிறது..

    உதாரணமாக, 2005ல் நடந்த ஒரு சர்வதேச யோகா தெரபி கருத்தரங்கு பற்றிய ரிப்போர்ட் –

    https://www.narthaki.com/info/reviews/rev250.html
    // The Annual Meet was ably organised by Dr RG Singh, General Secretary, Indian Academy of Yoga with cooperation from the staff of the Yoga Sadhana Kendra and Institute of Medical Sciences, BHU. The meet was sponsored by the Medical Council of India and the Ministry of Health and Family Welfare. //

  20. // நான் அறிந்த வரையில் யோகா மற்றும் தியானத்தின் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம் பழைய நூல்களில் இல்லையே //

    யோக வாசிஷ்டம் என்ற மாபெரும் யோக நூலில் ”வியாதி என்பது எப்படி உருவாகிறது, யோக வழியில் அதைத் தீர்ப்பது எவ்வாறு என்பது பற்றிய விரிவான கருத்துக்கள் உள்ளன. svyasa நிறுவனர் டாக்டர் நாகேந்திரா எழுதிய ஒரு நூலில் இதனை விளக்கியிருக்கிறார்.

    ஒரு உபநிஷத மந்திரம் (ஸ்வேதாஸ்வதார உபனிஷத்??) உடனடியாக நினைவுக்கு வருகிறது –

    லகுத்வம் ஆரோக்யம் அலோலுபத்வம்
    வர்ண-ப்ரஸாத: ஸ்வர-ஸௌஷ்டவஸ்ச
    கந்த: சுபோ மூத்ரபுரீஷம்-அல்பம்
    யோகப்ரவ்ருத்திம் ப்ரதமாம் வதந்தி

    உடலும் மனமும் லேசாகுதல், நோய்கள் இல்லாமல் இருத்தல், பரபரக்காத அலைபாயாத தன்மை, உடல் நிறத்தில் மெருகு, குரலில் இனிமை கூடுதல், உடலில் நல்ல மணம் உண்டாகுதல், சிறுநீர்-மலம் குறைதல் : இவை யோகம் பயிலும்போது முதலில் தோன்றும் இயல்புகளாகும்.

    உங்கள் கேள்விக்கு இதில் விடை இருக்கிறது.. ஆகார நியமம், மனதைக் கட்டுதல் போன்றவற்றை செய்துவிட்டு *பிறகு* யோகம் பயில *ஆரம்பிப்பது* என்பதற்கு அர்த்தமே இல்லை.. its a chicken and egg problem.. ஒருவர் உறுதி எடுத்து தவறாமல் யோகாசனங்களையும், பிராணாயமங்களையும் பயிலப் பயில மேற்சொன்ன அம்சங்கள் தானாக வரத் தொடங்குகின்றன – அது தான் யோகம் செய்யும் “அற்புதம்”! மது, புகை, போதை பழக்கமுள்ளவர்கள் கூட யோகப் பயிற்சிகள் மூலம் நிரந்தரமாக இந்தத் தீய பழக்கங்களை விட முடிந்திருக்கிறது..

    ஆகார நியமம் என்பது ரொம்ப ஆரம்ப நிலை சமாசாரம்.. சொல்லப் போனால் அமெரிக்கர்கள் இந்தியர்களை விட உணவு நியமங்கள் விஷயத்தை மிக நன்றாக அறிந்தவர்கள். நீங்கள் ஏளனமாகக் குறிப்பிடும் modern யோகப் பள்ளிகளும், யோக ஆசிரியர்களும் ஆகார நியமம் பற்றி மிக நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.. (just scan websites of some famous Yoga schools, gurus and teachers and you will come to know). சைவ, சாத்விக உணவின் முக்கியத் துவம் பற்றி தெளிவாக சொல்லிவிட்டுத் தான் பயிற்சியை ஆரம்பிப்பார்கள்; ஆனால் அடுத்தநாளே மாமிச உணவை, மசாலா பதார்த்தங்களை விட்டுவிடு என்று சொல்ல மாட்டார்கள், அது சரியான வழிமுறை அல்ல.. பயிற்சியில் ஈடுபட்டு மேலே செல்லச் செல்ல சாதகர்களுக்கே மாமிச உணவின் மேல் உள்ள அலைபாய்தல் குறையும், அலோலுபத்வம் வந்து விடும். பிறகுகூட அவர்கள் மாமிச உணவை சாப்பிடலாம் (விவேகானந்தர் தான் துறவியாகி விட்ட பின்பு கூட மேற்கத்திய நாடுகளில் பயணம் செய்கையில் மாமிசம் உண்டிருக்கிறார்). ஆனால் உணவு பற்றிய சமநிலையுடன் அதை உண்பார்களே அன்றி ருசி ஈர்ப்பினால் அல்ல.

  21. திரு.ஜடாயு அவர்களுக்கு,
    உங்கள் பதில் அருமையாக இருந்தது. தமிழ் இந்து இணைய தளத்திற்கு
    வந்ததின் மூலம் நான் புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
    உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக உரையாடினால் புதிய விஷயங்கள்
    வெளிவரும். நீங்கள் நிறைய ஆதாரங்களை காண்பித்திருக்கிறீர்கள்.
    ஆயுர்வேதம், அத்வைத தத்துவங்கள் நிறைந்ததான யோக வாசிஷ்டம்
    போன்ற நூல்களில் எனக்கு பெரிய பரிச்சயம் இல்லை. தெரிந்து கொள்ள
    முயற்சிக்கிறேன்.ICMR பற்றியும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    பொதுவாகவே மரபு வழியை விமர்சிக்கும் வாசகர்களுக்கு,
    மரபு வழி என்றால் என்ன? நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த
    வழிதான் அது. ஒரு சராசரி மனிதனையும் உயர்த்துவதற்காக அவர்கள்
    கருணையுடன் நமக்கு அருளியிருக்கும் Proven Techniques தான் அவை.
    சிலர் அந்த வழியிலிருந்து சிறிது விலகி வெற்றி அடைந்தாலும்,
    பெரும்பாலானோருக்கு மரபு வழிதான் சிறந்ததாக இருக்கும் என்பது நம்
    முன்னோர்களின் கருத்து.

  22. சாமியார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரது வரையறை ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது.” என்று கூறியுள்ளீர்கள்.

    இதை முழுமையாக மறுக்கிறேன். நான் நீங்கள் உருவகப்படுத்துவதைப்
    போன்ற பழமைவாதி இல்லையென்றாலும், சாமியார்கள் இப்படித்தான்
    இருக்க வேண்டும் என்ற வரையறை நம் மரபு வழி வந்ததே அன்றி
    ஆபிரகாமிய தாக்கத்தினால் எழுந்தது அல்ல.

    Venerable Balaji sir, in which smriti it is said that a sannyasi should not have sex with the apposite sex ?

    -ஒரு துறவி நம் தர்ம சாஸ்திரங்களின் படி (சில ஸ்மிருதிகளின் படி) 3
    நாட்கள் மட்டுமே ஒரு இடத்தில் தங்க வேண்டும். சத்திரம் சாவடி என்று
    எந்த வசதியும் இல்லாத இந்த காலத்தில் இதை கடைபிடிக்க முடியாது
    என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    Adi sankaracharya, Ramanuja, Ramakrishna Paramahamsa, Shirdi Saibaba, Swami Vivekananda, Swami Chinamanyananda, Swami Chidbhavananda, Chandrashekara swamiji, Srinkeri madathipathis, Athiina heads, and so on, had stayed in one place more than three days. Are they sannyasis or not ?

    Which மரபு they belong to ?

  23. Vows of celibacy has been the basic requirement in all religions.Gotama Buddha wa s reluctant to induct women in the Sangha.He was prevailed upon to induct so that the pure religion could be propagated.The following dialogue he had with his disciple Ananda is enlightening
    Ananda: what will be our attitude to women? Buddha : Do not look at them
    Anada:If they want to talk yo us:Buddha:Donot speak to them
    Ananda:If we have to speak to them?:Buddha: Keep awake.Remind yourself your a monk and you should be a lotusleaf with out any mud.If she is 0lder deem her your motheer, young as your sister and if younger cinsider her your child.If any one b\misbehaves he is not my disciple. Later on he is reported to have told Ananda “Now women have been permitted to enter the fold this pure religion and principles which would have stood fast for thousand years will be there only for a fwe hundred year”.(quoted in the book History of the Idea)
    Even christian apostles like Matthew have categorigally instrucyted theie priests not to have any truck with women,Modern times and modified approach to religion in the name of secularism and equality etc, accompanied by a craze for quick fixxes for human problems have produced bogus gurus and intemperate disciples in all most all religions

  24. திரு பாலாஜி/ஜடாயு

    நல்ல கட்டுரை நல்ல கருத்துப் பரிமாற்றங்கள். ஆன்மிகம் ஆன்ம விருத்திக்கான விஷயம். இதில் வியாதிகள் சிறிய தடங்கல்களே தவிர தடைகள் அல்ல. யோகப் பயிற்சிகளை வியாதிகள் நிவாரணம் என்ற முறையில் அணுகுவது நமது ஆன்மிக விசாரணைக்குத் தடையாய் இருக்கும் என்பது எனது கருத்து. வியாதிகள் இருந்துவிட்டுப் போகட்டும் – பாவம் அவைகளும்தான் வேறு எங்கு போகும்?

  25. Hello Wilting Tree,
    I will be killed if I tell the truth to this world with out proof. Nithy avar pechu matrum veli ulaga seyal ellam arumaiyee. I run away from him when I was not able to connect with him deeply. I dont want realize myself as god, I want to be good human being as far as possible.

    Sir Kathavai thira katru varatum, do you know who was writing initial episodes and later continued by whom?. Jatguru Jaggi clearly tell the name of Subha openly AV article.
    Oshon was very open in his tantric experiment. One thing for sure.. i really experienced of being more aware though I was in fasle place for spirituality.
    In the whole world Hinduism is the only religion which keeps on experment by itself and gets bad name due to these type of controversial self claimed godmen . Please do not carried away with his videos, try to know whatz happening after the camera is switched off.
    Try to read books of other masters and try to get deep meaning of it. Dont try to support blindlly just for the reason he admired you thro Yoga or meditation classes .

    Solvathum, solliya padi nadapathum, nadakum pathaiyil anaivarium anaithu selvathume ulagirku nallathu. Abover verse has deep meaning, especially in Nithy’s case.

    Om Nama Shivaya
    Truth Triumphs

    (edited and published)

  26. Mr Balaji, as a doctor I find your assessment of asthma is incorrect.Asthma is prevelant in Australia and New Zeland more than any other country in the world, hence we have a lot of protocols reg the treeatment here. Asthma is an inflamtory disease of the air ways and bronchial constrions are secondry effects only and all are REVERSIBLE..The trigger factors which normally cause asthma are viral illnesses, dust mite allergy, cold weather etc. Normally, childhood asthma does not progress into adulthood.Having said that, it is very much curable condition in a lot of people, by practicing regular Prayanama. Tests have have shown improved lung functions following regular yoga. Prayanama also helps in anxiety/depression disorders, hypertension and cardiovascular diseases ( documented evidences). My daughter does regular ” Bikram yoga”,( being taught by white Aussie lady, by the way!) and her energy levels and general fitness has improved ten fold.. I regularly advise patients to take up yoga for health benifits and believe me, I am not the only Dr who advocates yoga.

  27. திரு ராமா அவர்களுக்கு,

    முதலில் நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.
    என்னுடைய கட்டுரை சிலரின் விமர்சனத்தையும் பலரின் பாராட்டையும்
    பெற்றிருக்கிறது.

    நீங்கள் என் கட்டுரையில் 2 இடங்களை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.
    நீங்கள் ஒரு மருத்துவர். நான் ஒரு ஆஸ்த்மா நோயாளி. நான் சாதாரணமாக
    விஷயங்களை இரு விதமாக பார்ப்பேன். ஆன்மீக விஷயத்தில் அறிவியலை
    நுழைக்க மாட்டேன். அறிவியல் விஷயமென்றாலோ நான் சான்றுகளை
    மட்டுமே நம்புவேன். உங்களுக்கு தெரியாததல்ல. ஆயிரக்கணக்கான
    இணைய தளங்கள் இன்று மருத்துவ துறையில் தவறான தகவல்களை
    தருகின்றன. பருமனை 15 நாளிலே குறைக்கிறோம். நாள்பட்ட
    குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்துகிறோம் என்றெல்லாம்
    கண்ட மருந்துகளை விற்று கொண்டிருக்கிறார்கள். இந்த பின்புலத்தில்
    நான் அதிகார பூர்வ அரசாங்க இணைய தளத்திலிருந்து மட்டுமே செய்திகளை எடுத்து காட்டியுள்ளேன்.

    நான் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து நீங்கள் சுட்டிகாட்டும் செய்திகளை
    நான் எந்த அடிப்படையில் எழுதினேன் என்பதை தெளிவாக்க வேண்டியது
    என் கடமை.
    (1)என்னுடைய கட்டுரையில் நான் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளேன்.

    “அறிவியலின்படி ஆஸ்த்மா நோய் சில காலம் நீடித்தால், தொண்டைக்குழாயின் “Bronchotis Liner” பழுதடைந்துவிடுகிறது. நம் உடலின் சில பாகங்கள் பழுதடைந்தால் அது சரியாக வாய்ப்பு கிடையாது. அதில் இந்த பாகமும் ஒன்று. யோகாவை செய்தால் ஆஸ்த்மா குணமாகும் என்றால் இந்த லைனரும் சரியாக வேண்டும்.”

    பிரிட்டனின் அரசாங்க அதிகாரபூர்வ மருத்துவ அமைப்பான National
    Health Service-NHS இணைதள பக்கத்தை கீழே தருகிறேன்.
    https://www.nhs.uk/Conditions/Asthma/Pages/Introduction.aspx

    அந்த பக்கத்திலிருந்து ஒரு சில வாக்கியங்களை கீழே தருகிறேன்.
    The narrowing of the airways is usually reversible – occurring naturally, or through the use of medicines. However, for some people with chronic
    (long-lasting) asthma, the inflammation may lead to an irreversible obstruction of the airways.

    “Bronchi Tubes” என்பதற்கு பதிலாக “Brochotis Liner” என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நாள்பட்ட வியாதி irreversible
    என்பதைத்தான் நான் “சில காலம் கழித்தால்” என்று எழுதியிருக்கிறேன்.

    (2)என்னுடைய கட்டுரையில் நான் ஆஸ்த்மாவை குணப்படுத்த முடியாது என்று எழுதியிருக்கிறேன். இதற்கும் இதே
    இணைய தள பக்கத்தில் சான்று இருக்கிறது.
    There is no cure for asthma, but there are a number of treatments that can normally manage the condition.
    Treatment is based on two important goals:
    Relief of symptoms.
    Preventing future symptoms from developing.
    “There is no cure for asthma” என்பதையே நான் எழுதியிருக்கிறேன்.

    மேலும் யோகாவாலோ, பிராணாயாமத்தாலோ ஆஸ்த்மாவை குணப்படுத்த முடியாது என்பதை இதே பக்கத்தின் “Treatment”
    என்னும் “Sub-Section”ல் இருக்கும் வாக்கியங்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.
    அது கீழ்வருமாறு.
    Alternative therapies
    A number of alternative therapies have been suggested for the treatment of asthma including:
    traditional Chinese medicine,
    acupuncture,
    ionizers (a device that uses an electric current to charge, or ionize, molecules of air),
    the Alexander technique (a training programme designed to change the way you move your body),
    homoeopathy,
    breathing exercises, including yoga and the Buteyko method (a technique involving shallow breathing), and
    dietary supplements.
    However, there is no evidence that any of these treatments are effective.

    நான் என்னுடைய கருத்தாக இவற்றை தரவில்லை என்பதற்காகவும், வாசகர்களை தவறான பாதையில் கொண்டு
    செல்ல வில்லை என்பதற்காகவும் இந்த மறுமொழி.

    மேலும் இதே போன்ற செய்திகளை அமேரிக்க அதிகாரபூர்வ மருத்துவ
    அமைப்பான CDCலிருந்தோ இந்தியாவின் IMAலிருந்தோ நாம் பெற
    முடியும்.

    யோகாவால் ஆஸ்த்மாவை குணப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரங்கள் ஆயுர்வேதத்திலும், யோக வாசிஷ்டத்திலும்
    உள்ளதாக திரு.ஜடாயு கூறியுள்ளார். நான் அந்த தேடுதலில் உள்ளேன். இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு “Ceasefire” விட்டிருக்கிறோம். சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ கண்டிப்பாக என் கேள்விக்கு
    விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்குள் வேறு யாரேனும் சரியாக அந்த புத்தகங்களிலிருந்த யோகாவை பற்றின
    ஸ்லோகங்களை மறுமொழி இடலாமே. எனக்கும் வேலை மிச்சம். (ஆயுர்வேதம் ஒரு கடல்-நான் எப்பொழுது
    தேடி முடிப்பது)

  28. Mr Balaji, my intention was not to be offensive in anyway. Try this out. Do your lung function tests first and then practice Prayanama and Kapalpahti regularly. Afetr a period of 3 months, follow it up with another lung function tests. Let me know the results.
    If you ever come to Sydney, I will willingly do all the lung function tests for you and we can discuss all aspects of asthma then!!

  29. திரு.ராமா அவர்களுக்கு,
    யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை பற்றி நான் கண்டிப்பாக
    தவறாக எழுதவில்லை. இன்னொரு முறையும் அதையே கூறி விடுகிறேன்.

    என்னை ஆஸ்திரேலியாவிற்கு கூப்பிட்டுள்ளீர்கள். நகைச்சுவையாக கூறினால் வெள்ளைக்காரனிடம் அடி வாங்க என் உடலில் வலுவில்லை.

    ஒரு உண்மையை கூறினால் என் ஆஸ்த்மாவிற்கு நான் தற்போது எந்த
    மருந்துகளையும் தொடர்ந்து எடுத்து கொள்வதில்லை.
    12 வருடங்கள் நான் ஆஸ்த்மாவாலும், தொடர்ந்த அலர்ஜியினால் ஏற்படும்
    சளியினாலும் பாதிக்க பட்டவன். 11/2 வருடங்கள் Chest Specialist டம்
    மருந்து எடுத்து கொண்டதால் தற்சமயம் மிகுந்த ஆரோக்கியத்துடன்
    உள்ளேன்.

    எனக்கு நவீன மருத்துவத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை அதனால்தான்
    ஏற்பட்டது.
    நான் அனுபவித்த வேதனைகளை “Fluticasone Propionate” என்னும்
    அற்புதம் சரிசெய்து விட்டது.

  30. அன்புள்ள பாலாஜி அவர்களே,

    யோகா மட்டுமல்ல, நமது ஆன்மீக நூல்கள் நமது வாழ்க்கைக்குச் சொன்ன நற்கருத்துக்கள் அனைத்தையுமே மேலைநாட்டு மோகத்துடன் கல்வி கற்ற மேலாண்மைப் பண்டிதர்கள் Management Priciples from bhagavat Gita, Thirukkural and Managemenட் போன்ற ஆராய்ச்சிகளால் நீர்த்துப்போகச் செய்துவிட்டார்கள். ஆன்மீகம் சொன்ன கருத்துக்களை மறுமைக்குப் பயன்படுத்தாமல், குறுகிய நோக்கில் இம்மைக்குப் பயன்படுத்த முயன்றதன் விளைவே Corporatised Sanyasis.

    துரதிர்ஷ்டவசமாக ஆன்மீக உரைகளுக்கு ரூ 2000 முதல் ரூ 25000 வரை ஒரு நபருக்கு வசூல் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. நடப்பது எதுவும் நம் செயல் அல்ல என்ற நமது மஹான்களின் அறிவுரையே நம் மனதை அமைதி செய்யும்.

    யோகாவும் நமது உடற்பிணியைத் தீர்க்க வல்லதே. எத்தகைய பிணி என்பதில் வேண்டுமானால் வேறுபாடு வரலாம். மேலைநாட்டு மருத்துவர்கள் நமது பண்டைய வழிமுறைகளை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை, அவர்களுக்கு எதற்கும் ஒரு Laboratory Reportட் வேண்டும்.

    Dr் கிருஷ்ணராமன் பல பிணிகளுக்கு யோகா கலந்த மருத்துவமுறையினால் குணப்படுத்திவருகிறார். பி.கே.எஸ். அய்யங்கார் அவர்களின் யோகமந்திரத்தில் முறைப்படி யோக பயின்றவர். அவரது வலைத்தள முகவரி இதோ:

    https://www.krishnaraman.com/

    நானும் கூட எனது சில உடற்பிணிகளுக்கு யோகா மூலம் நிவர்த்தியை அநுபவித்திருக்கிறேன். சென்னையில் கிருஷ்ணமாச்சார்ய யோக மந்திரம் நோய்க்கேற்ற யோகாப்பியாசங்களைக் கற்பிக்கிறது. யோகா உடனடி நிவாரணம் தருவதில்லை, ஆனால் நாளடைவில் நிரந்தர நிவாரணம் தரும். தாங்கள் பயன்படுத்திய Fluticasone Propionate என்னும்
    அற்புதம் steroid அடங்கியது என அறிகிறேன். பக்க விளைவுகள் வரலாம்.

    ஆதிசங்கரர் ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்டு சுப்ரமணிய புஜங்கம் பாடி, நலம் பெற்றார் என்று படித்திருக்கிறேன். தங்கள் தகவல் புதிதாக இருக்கிறது.

    fistula வுக்கு சஸ்திர சிகிச்சை பல முறைகளில் மேலைநாட்டினர் செய்து தோற்றபின்னர், சுஷ்ருதா 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்த முறையை இந்த நூற்றாண்டில் பின்பற்ற ஆரம்பித்தனர், ஆனாலும் நமது பண்டைய முறைகள் குறித்து அவ்ர்கள் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை, எனவே அமெரிக்க அல்லது ஐரோப்பிய மருத்துவர்கள் யோகாவின் குணப்படுத்தும் ஆற்றலை ஏற்காததில் வியப்பில்லை. fistulectomy செய்த பின்னர் incontinence வரும் வாய்ப்பு உண்டு. மூலாதாரத்தின் அருகிலுள்ள தசைகளுக்குச் செயலாற்றல் தரும் யோகாப்பியாசங்கள் மிக்க நற்பலன் அளிக்க வல்லன. பலனடைந்து எழுதுகிறேன்.

  31. திரு.ந.உமாசங்கர் அவர்களே,
    ஆன்மீக விஷயங்கள் சந்தை படுத்த படுவது குறித்த உங்கள் சிந்தனைகள்
    நன்றாக இருந்தது.

    Laboratary Reportஐ பற்றி நீங்கள் கூறியிருந்தீர்கள். இதில் ஒரு சிக்கல்
    இருக்கிறது. உதாரணமாக ஒரு சித்த மருத்துவர் தன்னுடைய முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் ஒரு வேரிலிருந்து மருந்தை கண்டு
    பிடித்திருக்கிறார். அதை கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்த
    முடியும் என்று கூறுகிறார் என்று வைத்து கொள்வோம். தன்னிடம் வரும்
    சில நோயாளிகளுக்கு அதை கொண்டு வைத்தியம் செய்கிறார் என்று
    வைத்து கொள்வோம். இது வரையில் சமூகத்துக்கு ஒரு பிரச்சினையும்
    இல்லை.
    பிரச்சினை எப்பொழுது ஆரம்பமாகும் என்றால், அந்த மருத்துவர் தன்
    மருந்தை சந்தை படுத்த முயற்சித்தால் Accountabilityக்கு அவர் பதில்
    சொல்லியாக வேண்டும் அல்லவா? எப்பொழுது காசு வாங்கி விடுகிறார்களோ அப்பொழுதே சமூகத்துக்கு அவர்களை கேள்வி கேட்கும்
    உரிமையும் வந்து விடுகிறது. அவர் ஒழுங்காக Patent வாங்கி கொண்டு
    மருந்தை விற்க வருவதில்லையே. என்னுடையது குடும்ப மருத்துவம்.
    இது இரகசியம். வெளியில் கூற முடியாது. ஆனால் நோய் குணமாகும்.
    எல்லோரும் வாங்கி கொள்ளலாம் என்பது தவறுதானே!

    ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கண்ணிற்கு தெரியாத
    ஒரு மருந்தை யோகா கூறுகிறது.ஆய்வு செய்வது கடினம் என்பதும்
    புரிகிறது. ஆனால் யோகாவை பரிந்துரைக்காத மருத்துவர்களே இல்லை
    என்னும்போது அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக அமேரிக்கா,
    பிரிட்டன் மற்றும் இந்தியாவில் அதிகாரபூர்வ மருத்துவ கழகங்களின்
    மூலம் ஆய்வு நடத்த சொல்லலாமே!. நான் கூறினால் எடுபடாது. இவர்கள்
    எல்லாம் மருத்துவர்கள்தானே! இந்த ஆய்வு முடிய சில வருடங்கள் ஆகலாம்.
    ஆனால் முடிவை அதிகாரபூர்வ மருத்துவ கழகங்கள் ஏற்று கொண்டு
    விட்டால், பிரச்சினை முடிந்து விடும் அல்லவா!

    fistulaவை பற்றி கூறியுள்ளீர்கள். எனக்கு தெய்வத்தின் குரல் படித்தது
    நினைவுக்கு வருகிறது. ஆதி சங்கரர் இந்தியாவின் மிக பெரிய ஆன்மீக
    குரு என்பதால் அவரின் வாழ்க்கையில் சில விஷயங்கள் பலவிதமாக
    எழுதப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே யாரும் இட்டு கட்டி எழுத வில்லை.
    நம்மவர் என்னும் உரிமையால் சில விஷயங்கள் எழுதப்பட்டிருப்பதாக
    படித்திருக்கிறேன். அவர் எந்த காலத்தில் வாழ்ந்தார் என்பது முதற்கொண்டு
    சிக்கலாகத்தான் இருக்கிறது. சங்கரர் என்னும் பெயரில் ஆசார்யார்களே
    நிறைய பேர் இருந்ததும் இந்த குழப்பத்துக்கு காரணம் என்றும் காஞ்சி முனி
    கூறுகிறார். ஆஸ்த்மா, Fistula இரண்டையும் வைத்து கொள்வோமே!

  32. //ஆன்மீகம் சொன்ன கருத்துக்களை மறுமைக்குப் பயன்படுத்தாமல், குறுகிய நோக்கில் இம்மைக்குப் பயன்படுத்த முயன்றதன் விளைவே Corporatised Sanyasis.// Great!

  33. பாலாஜி அவர்களே

    //
    அவர் ஒழுங்காக Patent வாங்கி கொண்டு
    மருந்தை விற்க வருவதில்லையே. என்னுடையது குடும்ப மருத்துவம்.
    இது இரகசியம். வெளியில் கூற முடியாது. ஆனால் நோய் குணமாகும்.
    எல்லோரும் வாங்கி கொள்ளலாம் என்பது தவறுதானே
    //

    patent வாங்கிக்கொண்டு தான் மருந்து விற்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே – generics வகையை சார்ந்த மருந்துகள் இல்லையா – patent என்பது அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உலக மக்களை சுரண்ட பயன் படுத்தும் ஒரு கருவி – பொதுவில் சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் உண்மையிலே ஒரு விஷக் கிருமிகள், பிணம் தின்பவர்களுக்கு சமானமானவர்கள் – இவர்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்தபடியால் சொல்கிறேன் – இவர்கள் ஆப்ரிக்காவில் அடிக்கும் கூத்து பற்றி நீங்கள் கேள்வி பட்டதுண்டா என்று எனக்கு தெரியாது.

    தயவு செய்து இவர்களையும் நமது மருத்துவர்களையும் (பாடுபட்டு மூலிகைகளை கண்டு பிடித்து – குறைந்த கட்டனத்திர்க்கோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை செய்கிறார்கள்) ஒப்பிடாதீர்கள்

    நானும் early asthma வினால் இரண்டு வருடம் மிகுந்த கஷ்டப்பட்டேன் தினமும் சுமார் இரண்டு லிட்டர் சளி துப்பிகொண்டிருக்க நேர்ந்தது – நீங்கள் சொன்ன chest specialist டிடம் சென்றேன் அவர் கொடுத்த spray மருந்து தவறாமல் ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன் – சல்லி பிரயோஜனம் இல்லை – ஏக்க சக்க பக்க விளைவுகள் (அதில் ஒன்று விஷம ஏறி – நான் என்னை அறியாமலேயே தூங்கிவிடுவேன் – அலுவலத்தில் தூங்கிவிடுவேன், meeting நடக்கும் பொது பேசிக்கொண்டே இருப்பேன் அடுத்த நொடி தூங்கி இருப்பேன்)

    எனக்கு நம்மூர் மருந்து மூலம் தான் குணமானது – நம்பினால் நம்புங்கள் – மூன்று மாதங்கள் மருந்து மற்றும் பிராணாயாமம் – அத்தனை பிரச்சனையும் தீர்ந்தது – என்ன மருந்து சாப்பிடும் வரை கத்திரிக்காயும் தயிரும் கூடாது என்றார்கள் அவ்வளோதான் – எனக்கு இன்று வரை ஆங்கில மருந்த உட்கொண்டதால் வந்த பக்க விளைவுகள் தீர வில்லை – இன்றைக்கு கூட அலுவலகத்தில் தூங்கினேன் 🙂

    மேலை நாட்டு மருந்து நிறவனங்கள் பணம் சுரண்டுவதிலே தான் குறியாக உள்ளனர் – நம்மூர் காரர்களுக்கு கொஞ்சமேனும் தொண்டு மனப்பான்மை உண்டு – மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு – இங்கே யாரும் ஒரு நோயை வேண்டுமென உண்டு பண்ணி அதற்க்கு வலிய மருந்து கண்டுபிடுத்து FDA approval வாங்கி ஏமாற்றி விற்பதில்லை

  34. Nithyanda and Muhammad, both are evil . but nithyanda is BETTER than evil muhamMAD infact swami & the actress have mutual sex consensus but perverted evil muhamMAD cheated ayesa and zainab using weapon of allah’s will SHAMELESSLY. He raped safiya(killed her husband and father) and looting their property. In hindu population 0.001% devotees are following nithy Now they also reject him but idiot muslims taking him as hero of thier life. nithy didn’t kill anybody inthe name of god but muhamMAD killed many souls inthe NAME OF GOD. now hindus rejecteds this cult but muslims taking that culprit as hero and follow his footsteps of sin
    NITHYANDA IS BETTER THAN MUHAMMAD

  35. The simillarity betweenmuhamMAD and Nithyananda both are fraud they uses god’s name as weapon and sexh with variety of girls 56 age sex with 9yr child ayesa shamelessly&he alsosex with his daugter in law zainab and cheats theirs followers that he got special permission from allah and he gives right to sex with any slave(safiya, juwariya). hindus rejecting nithyanada. but idiot muslims taking muhammad as a role model of thiers life He also told that allah has given special rights to marry more than 4 wives and also sex with slave women(safiya, juwariya,etc…..) shame on muslims.leave that barbaric evil cult.

  36. கட்டுரை நல்ல விசயங்களை ஆராய்வதாக உள்ளது நல்லதுதான். ஆனால் அதற்காக நமது பாரம்பரியமான எல்லா விசயங்களையும் மறுக்க வேண்டாமே. மருத்துவத்தில் ஒவ்வொரு மூளிகைகளினுடையவும் பயன்பாடுகள் நமது முன்னோர்களாகிய சித்தர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். ஆஸ்துமாவுக்கு பிராணயாமம் எப்படி தீர்வாகும் என்கிறீர்கள் நீங்கள் ஆழமாக சுவாசம் எடுக்கும் பொது நுரையீரலின் எல்லா பாகங்களும் வேலை செய்வதால் சிக்கல் தீர்கிறது நீங்கள் எடுத்த மருந்தின் விசத்தன்மை கொஞ்ச நாள் போனபிறகு உங்களுக்கு தெரிய வரும்

  37. எல்லா நண்பர்களுக்கும் எனது வணக்கம்,

    இந்தக்கட்டுரை எழுதிய நண்பர் பலவிஷயங்களை நன்றாகவே எழுதியுள்ளார் சில கொஞ்சம் தடுமாற்றம்தான் எனினும் அவர் ஒரு கருத்தை கூறுகிறார் என்றால் அது வியாபாரத்தின் பொது கருத்துதான் ”” போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்”’.

    திரு பாலாஜி அவர்களே,
    இந்த நோக்கம் நல்லதுதான் எனினும் நீங்கள் எழுதியுள்ள விதம் யோகா என்பது ஒரு உடற்பயிற்சி என்பதாக மட்டுமே நீங்கள் உரைப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக நான் எண்ணுகிறேன்.

    ””ஆனால் யோகாவை பரிந்துரைக்காத மருத்துவர்களே இல்லை
    என்னும்போது அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக அமேரிக்கா,
    பிரிட்டன் மற்றும் இந்தியாவில் அதிகாரபூர்வ மருத்துவ கழகங்களின்
    மூலம் ஆய்வு நடத்த சொல்லலாமே!. நான் கூறினால் எடுபடாது. இவர்கள்
    எல்லாம் மருத்துவர்கள்தானே!””

    கூடிய விரைவில் யோகா கிறித்துவத்திற்கு சொந்தமான பின் (PATENT RIGHTS) ஆய்வுகள் செய்யாமலே உங்களுக்கு அதிகார பூர்வமான அறிக்கைகள் கிடைக்கும் யோகா ஒரு சிறந்த நோய் நீக்கும் கலை என்று, தயவு செய்து காத்திருக்கவும்.

    மிளகா வாங்கக்கூட சாம்பிள் வாங்கிப் பார்த்துத்தான் வாங்க வேண்டிய நாம் யோகாவை தரம் பார்த்து வாங்க வேண்டியதுதான் என்ன செய்ய? (ஆனால் யோகா என்பது கற்று அனுபவிக்க வேண்டிய சமாசாரம்)

    நண்பரே ஒன்று மட்டும் நிஜம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் சில சாமியார்களிடம் கொஞ்சமாவது சரக்கு உள்ளது என்பதை.
    ஏனெனில் அப்படி இல்லை என்றால் அவர்கள் என்றைக்கோ மூட்டையை கட்டிக் கொண்டு போயிருப்பார்கள் இல்லையா?

    ///மேலை நாட்டு மருந்து நிறவனங்கள் பணம் சுரண்டுவதிலே தான் குறியாக உள்ளனர் – நம்மூர் காரர்களுக்கு கொஞ்சமேனும் தொண்டு மனப்பான்மை உண்டு – மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு – இங்கே யாரும் ஒரு நோயை வேண்டுமென உண்டு பண்ணி அதற்க்கு வலிய மருந்து கண்டுபிடுத்து FDA approval வாங்கி ஏமாற்றி விற்பதில்லை////

    நல்ல பதில் நண்பர் திரு சாரங் அவர்களே , ஒரு சின்ன உதாரணம் நமது எலும்பில் ஒரு சாதாரண விரிசல் ஏற்பட்டால் நாம் ஒரு மருத்துவமனையின் சிகிச்சைக்கான பில்லை பார்த்த கணமே நமது கபால எலும்பும் தெறித்து விடும்.
    அதுவே ஒரு கைதேர்ந்த சித்த மருத்துவரிடம் சிகித்சை எடுத்துப் பாருங்கள் சொல்ப ஆயிரங்களை கூட தாண்டாது. மேலும் பின்விளைவு என்பதற்கான வாய்ப்பே கிடயாது.

    திரு ஜடாயு அவர்களின் கருத்துகள் மிக அருமை (எப்போதும் போலவே)

    நண்பர் திருசிக்காரரே நலமா?.

  38. திரு. B.பாஸ்கர் அவர்களே!
    நன்றி,
    “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்பதை முன்னிலை படுத்தி நான்
    கட்டுரை எழுதியதாக நீங்கள் கூறியது மிகவும் சரி”.

    யோகாவை செய்தால் நோய் குணமாகும் என்று ஆயுர்வேதத்தில்
    எழுதியுள்ளதா? என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

    எழுத்தாளர் ஜெயமோகன் “யோகமும் ஆயுர்வேதமும்” என்ற தலைப்பில்
    ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
    https://www.jeyamohan.in/?p=7313
    ஆயுர்வேத மருத்தவர் ஒருவரிடமும், ஸ்வாமி நித்யாவிடமும் (இவர் வேறு
    நித்யா) அவர் செய்த உரையாடல்களை அடிப்படையாக வைத்து இந்த
    கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையின் முடிவு.
    (1)ஆயுர்வேதத்தில் யோகாவைப்பற்றின செய்தியே இல்லை.
    (2)மேலும் அவர் கட்டுரையை ஆரம்பிக்கும்போதே கீழ்வருமாறு எழுதுகிறார்.
    “பொதுவாக யோக முறைகளை யம நியமங்களை கடைப்பிடிக்காதவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது என்பது பத்தியமில்லாமல் மருந்துண்பது போல. அது பலசமயம் வீண்வேலை. ஓயாத கடல்அலைகளுடன் போராடுவது. ஆனால் யோகம் தியானம் முதலியவை எளியமுறையில் உடலை சமனப்படுத்தவும் இளைப்பாற்றவும் உதவுகின்றன என்று சொல்கிறார்கள். யோகம் என்பது அடிபப்டையில் ஆயுர்வேதம்போல ஒரு மருத்துவ முறை அல்ல அது ஒரு அறிதல்முறை என்ற புரிதல் நமக்கு வேண்டும்”

  39. நன்றி திரு பாலாஜி அவர்களே,

    ஒருவிஷயத்தை அனுபவிக்காமல், நாம் அதை விரிவாக விவரிக்க இயலாது. இந்த யோகாவைப் பொறுத்த வரையிலும் அதன் விளைவுகளை நாம் அறிய சிலநாட்கள் பொறுத்துக் கொண்டே ஆக வேண்டும்.

    பெரும்பாலும் நோய்கள் அண்டாத வண்ணம் நமது உடலை தயார் செய்து கொள்வதுவே யோகத்தின் நோக்கம். இதையே சித்தர்கள் பாட்டால் சொல்லி வைத்தார்கள். முக்கியமாக யோகத்தில் நோய்களை தீர்க்கும் விஷயங்களை விடவும் நோய்களை நாம் எதிர்க்கும் வல்லமையை நாம் பெறுகிறோம். ஆனால் ஓரு காலகட்டத்தில் பலருக்கு நோய்கள் விலகவும் வாய்ப்பு உள்ளதாகவே நான் அறிகிறேன், அனுபவமாக.

    ஆனாலும் நாள்பட்டு முற்றிய நோய்களுக்கு வாய்ப்பு இல்லை. எனினும் யோகத்தின் மூலம் நாம் அதனை எதிர்கொள்ளும் சக்தியை பெறலாம் என்பது உண்மை. மருந்து உட்கொண்டு மாளாது வேதனையால் துன்புறும் ஒருவருக்கு பாதி வேதனை முறிந்து போனாலே அவருக்கு அது மகிழ்ச்சிதானே ? அது கட்டாயம் நிகழும்.

    மருத்துவர்களின் பரிந்துரைக்கும் இதுவே ஒரு காரணமும் என்பது எனது கருத்து. எப்படியெனில் யோகத்தின் மூலம் நமது எதிர்ப்பு திறன் வளர்வதனால் அவர்களின் வேலை சுலபமாகிறது.
    நோயை எதிர்ப்பது மட்டும், அதற்கான மருத்துவம் மட்டும் போதும். நோயாளியை பலப்படுத்த கொஞ்சம் மட்டும் சிரமப் பட்டால் போதுமே! அதாவது வீக்கான பேச்மின்ட்டை கொஞ்சம் ஸ்டிராங் பண்றோம் .
    திரு ஜெயமோகன் கூறியது போல் பத்தியம் இல்லாத மருந்தானால் வீண் வேலை என்பது நிஜம்.

  40. தொடர்ந்து தியானம் செய்யும்போது உடலில் நோய் இருந்தால் அது குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *