சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6

எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி

முந்தைய,  மற்ற பகுதிகள்

அப்போது வெள்ளைக்காரர்கள் சாதியத்தை எதிர்க்கவில்லை என்றா கூறுகிறீர்கள்?

பிரிட்டிஷ் காலனிய அமைப்பின் அங்கமாக இந்தியாவுக்கு வந்தவர்களில் சில நன்மனம் கொண்ட மருத்துவர்கள், நிர்வாகிகள், கலெக்டர்கள் போன்றோர் தங்கள் சொந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் துயருறும் இந்தியர்களுக்கு சாதி வித்தியாசம் இன்றி உதவினர்; அவர்களது செயல் போற்றுதலுக்குரியது. ஆனால், ஒட்டுமொத்தமாக பிரிட்டிஷ் அரசாட்சி சாதியத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளத் தான் முயன்றதே அன்றி எதிர்க்கவில்லை.

வெள்ளையின மக்களே மேன்மையானவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள். அவர்கள் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை வெளியேற்றினர். இவர்களைக் குற்ற பரம்பரையினர் என அறிவித்தனர். அதாவது பிறப்பால் இந்த வனவாசிகளும், இவர்களது பரம்பரையில் தோன்றும் அனைவரும் குற்றவாளிகள்.

சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியலாளர் ஆண்ட்ரூ மேஜர் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபியர் மட்டும் 1,50,000 பேர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதையும் இத்தகைய வரலாற்றுச் செய்திகள் வெளியே அறியப்படாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசும் சாதி ஆதிக்கவாதிகளாக வெள்ளைக்காரர்கள் ஏன் இருந்தார்கள்?

1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட ’குற்றப் பரம்பரை சட்டம்’ என்ற கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ இறையியல் மற்றும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது.  அதாவது பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவர் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ இருக்க முடியும் என்னும் இறையியலின் ஆதார நம்பிக்கை. அதனால்தான்,  இந்த மதங்களில் இறைத்தூதர்கள் மற்றும் மீட்பர்கள் ஒரு குறிப்பிட்ட மேல்சாதியில் மட்டும் அவதரிக்கிறார்கள்.  உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறந்தார்.  கடைசி இறைத் தூதர் என இஸ்லாமியர்களால்  அழைக்கப்படுபவரும் உயர்குலத்தில்தான் பிறக்கவேண்டியிருந்தது.

தாய் தந்தையர் செய்த பாவம் குழந்தைகளுக்கு வரும் எனும் நம்பிக்கை உலகின் பல கலாசாரங்களில் பொதுவாக இருந்தாலும் இந்து மரபில் அது மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை.  எனவேதான் இரணியனுக்கு பிரகலாதன் பிறக்க முடியும் எனும் கருத்தாக்கம் இங்கு வேரூன்றியது.

யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக  பாவச் சுமையாக வரும் எனும் நம்பிக்கை பாரதத்தில் வேரூன்றிடவில்லை. மாறாக, ஆதாம் செய்த பாவம் ஆதி பாவமாக மனிதகுலம் சுமக்கும் எனவும், கிறிஸ்தவைக்  கொன்ற இரத்தப்பழியை யூதர்கள் பரம்பரை பரம்பரையாக இன்னும் சுமப்பதாகவும் கொண்ட நம்பிக்கைகள் கிறிஸ்தவ மேற்கின் முக்கிய ஆதார நம்பிக்கைகளாக திகழ்ந்தன. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்றப் பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களைச் சார்ந்தவர்களை முத்திரை குத்தினர். ஆக, சாதியத்தை இறுக வைத்த ‘பெருமை’ வெள்ளை அரசாங்கத்தையே சாரும்.

Birsa Mundaஇதனை வனவாசி சமுதாய சான்றோர்கள் எதிர்த்தனர். அவர்களில் முக்கியமானவர் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பாரதத்தின் மத்திய மற்றும் கிழக்கு வனவாசிப் பிரதேசங்கள் முழுவதும் இன்றும் அவதார புருஷராக வணங்கப்படும் பகவான் பிர்ஸா முண்டா என்பவர் ஆவார். இவர் வனவாசிகளை சுரண்டும் வியாபாரிகள், பிரிட்டிஷ் ஆதிக்க வாதிகள் மற்றும் மதமாற்றத்தில் ஈடுபட்ட மாற்றுமத வெளிநாட்டு மதப்பரப்புவர்கள் ஆகியவர்களை இராவணன் என வர்ணித்து போர் புரிந்தார். இவரது  மறைவுக்குப் பின்னர் இன்றைக்கும் இவர் வனவாசிகளின் விடுதலையின் ஒளி விளக்காக திகழ்கிறார். வனவாசிகளை பூணூல் அணிய செய்து சாதியத்தை அழித்தவர் பிர்ஸா பகவான்.

பார்க்க: கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

தமிழ்நாட்டில் பிறமலைக் கள்ளர்கள் போன்ற இனத்தவரைக் குற்றப் பரம்பரையாக அறிவித்த இத்தகைய  இனவாத சட்டத்தை எதிர்த்து போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவார்.

இந்தியாவின்  வேறு இடங்களிலும் இவ்வாறு சாதியத்தை எதிர்த்த சமுதாயப் போராளிகள் தோன்றினரா? அவர்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பல பகுதிகளில் பற்பல சாதியப் போராளிகள் தோன்றினர். உதாரணத்திற்காக சிலரது பணிகள் பற்றி இங்கு குறிப்பிடுவோம்.

சாதியத்தை எதிர்த்து வீர சாவர்க்கர் செய்த சமரசமில்லாத போர் பலருக்கு தெரியாது. அண்ணல் அம்பேத்கரால் பாராட்டப்பட்ட அந்த சாதிய எதிர்ப்பினைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீர சாவர்க்கர் பல கட்டுரைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குட்டகுட்ட குனியக் கூடாது என்றும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் எழுதினார். தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக ஆவதற்கு மேல்சாதியினர் அவரது சொந்த ஊரான ரத்னாகிரியில்  (மகாராஷ்டிரா) எதிர்ப்பு தெரிவித்த போது, வீர சாவர்க்கர் அரசுக்கு எழுதினார், “தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக ஏற்க இயலாத அளவு மனிதத்தன்மை அற்றவர்களுக்கு கல்விச் சாலையே தேவை இல்லை. தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக நியமிக்க முடியாது என்றால் பள்ளியையே இழுத்து மூடிவிடுவதுதான் உசிதம்.” வீர சாவர்க்கரின் ஆதரவின் விளைவாக தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுவது தடுக்கப்பட முடியாததாயிற்று.

ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர், அந்நிலையிலும் அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு (நாசிக்) ஆதரவு தெரிவித்தார். தனக்கு ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதத்தையும், கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையையும் அண்ணல் அம்பேத்கர் தன் ‘ஜனதா’ பத்திரிகையில் வெளியிட்டார்.

veer_savarkar_stampஇருப்பினும்மேல்சாதி மக்களின் சாதிய வெறி விட்டுக்கொடுக்கவில்லை. வீர சாவர்க்கருக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு மேல்சாதியினரிடமிருந்து புகார்கள் போயின. அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.” அண்ணல் அம்பேத்கரின் ‘ஜனதா’ சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளைக் குறிப்பிட்டு அவரை ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என கட்டுரை வெளியிடப்பட்டது.

தாழக்கிடப்பவரை தற்காப்பதே தருமம் எனக்கூறிய அய்யா வைகுண்டர்.

சாதி பேதமில்லாமல் அனைத்து இந்துக்களும் வேதம் படிக்க பாடுபட்ட சட்டம்பி சுவாமிகள்.

மனிதருக்கு ஒரு சாதி -ஒரு மதம் – ஒரு தெய்வம் என்று உரைத்த ஸ்ரீ நாராயண குரு சுவாமிகள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடியதோடு மட்டுமின்றி, தன் சொந்த வாழ்க்கையிலும் அதனைத் தீவிரமாகக் கடைப்பிடித்ததனால் பல இன்னல்களுக்கும் ஆளான மகாகவி  பாரதி.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவரின் மலத்தையும் துடைத்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். சமத்துவ சமுதாயம் வேண்டியும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் துயரைத் துடைக்கவும் பாடுபட்ட சுவாமி விவேகானந்தர். சாதி சமய வேறுபாடின்றி அனைவரையும் குழந்தைகளென அணைத்த தூய அன்னை சாரதா தேவியார்.

இப்படிப் பல தேசிய, ஆன்மிகப் பெரியவர்களைக் கூறலாம்.

கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த விஷயத்தில் ஒவ்வொரு இந்துவும், இந்து சமுதாயமும் செய்ய வேண்டியது என்ன?

சாதியம் என்பது இந்து தருமத்தின் அடிப்படை நூல்களான வேதங்களிலும் சரி, பகவத் கீதையிலும் சரி, சைவத் திருமுறைகள் வைணவப் பிரபந்தங்களிலும் சரி,  அங்கீகரிக்கப்படாத  ஒன்று. தீண்டாமைக் கொடுமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை மறுத்தல், தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை மறுத்தல் ஆகியவற்றுக்கு இந்து தருமத்தில் எள்ளளவும் இடமில்லை. எனவே,  நல்ல இந்துவாக வாழ விரும்புபவர்கள் சாதியத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

வரலாற்று ரீதியாக உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் மூலம் அளிக்கப்படும் நியாயமான இட ஒதுக்கீடுகள் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை அவர்கள் திரும்பப் பெறுவதாகும். இன்று பொருளாதார நிலையிலும் சமுதாய அந்தஸ்திலும் நல்ல நிலையில் வாழும் ஒவ்வொரு இந்துவும் தாழ்த்தப்பட்ட இந்து சகோதரர்களுக்கு வாழ்க்கைக் கடன் பட்டவர்களாவார்கள். எனவே அவர்களிடம் பட்ட கடனை திரும்பக் கொடுப்பது சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் இந்துவின் கடமையாகும்.

அதே நேரத்தில், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் வளங்கள், வாய்ப்புக்கள், வசதிகள் மீது அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை உள்ளது.   சமூக, வரலாற்று ரீதியாக பலவீனங்களுக்கு ஆட்படாத போதும், அந்த ஒட்டுமொத்த உரிமையின் ஒரு பகுதியை அராஜக அரசியல் மிரட்டல்கள் மூலமும், மற்ற சாதி சமூகத்தினரை எதிரிகளாகச் சித்தரிப்பதன் மூலம் அடைந்து விடலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும் தலைவர்களும், அமைப்புகளும் இந்து தர்ம நெறிகளையும், இந்திய ஜனநாயகத்தையும் ஒருசேர அழிப்பவர்கள். இதை ஒவ்வொரு இந்துவும் புரிந்து கொள்ளவேண்டும்.

1) நல்ல இந்துவாக வாழ்வதன் மூலம் சமுதாய சமரசத்தையும் சமுதாய நீதியையும் சமுதாய நல்லுறவையும் பலப்படுத்த வேண்டும்.

2) ஒவ்வொரு இந்து சமுதாய அமைப்பும் தாழ்த்தப்பட்ட நிலையில் வாழும் இந்து சகோதர சகோதரிகளுக்கு நல்ல கல்வி சேவையையும் நல்ல மருத்துவ சேவையையும் அளிக்கவேண்டும். அவ்வாறு சேவை செய்யும் ஒவ்வொரு இந்து அமைப்புடனும் இணைந்து அவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வது நல்ல நிலையில் வாழும் ஒவ்வொரு இந்துவினுடையவும் அடிப்படைக் கடமையாகும்.

3) தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் சுதந்திரம் வேண்டும் என்கிற உண்மையான இந்து தர்ம நெறிக்குப் புறம்பான கருத்துக்களை மதிக்கத் தேவையில்லை. அவற்றை ஒதுக்கி விட வேண்டும்.

(முற்றும்)

51 Replies to “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6”

  1. அருமையான தொடர்.
    //இன்று பொருளாதார நிலையிலும் சமுதாய அந்தஸ்திலும் நல்ல நிலையில் வாழும் ஒவ்வொரு இந்துவும் தாழ்த்தப்பட்ட இந்து சகோதரர்களுக்கு வாழ்க்கைக் கடன் பட்டவர்களாவார்கள். எனவே அவர்களிடம் பட்ட கடனை திரும்பக் கொடுப்பது சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் இந்துவின் கடமையாகும்.//இதற்கு இப்போது உள்ள தீர்வு, கடனைத் திருப்பித் தருபவர்களை கடனில் தள்ளுகிறதே! இப்போதெல்லாம் சமுதாய அந்தஸ்து என்பது பொருளாதார நிலையை வைத்துதானே நிர்ணயிக்கப்படுகிறது.

  2. சிந்தனையை தூண்டிய தொடர். உங்கள் கருத்துகளோடு எனக்கு முழு இசைவில்லாதபோதும், தொடர்ந்து படிக்க வைத்த தொடர். கடைசியாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற பகுதியில் நீங்கள் எழுதி இருப்பதோடு – குறிப்பாக இட ஒதுக்கீடு, அரசியல்வாதிகளின் ஒட்டு வேட்டை – முக்கால்வாசி இசைகிறேன். அய்யன் காளி பற்றிய பகுதிகளை விரும்பிப் படித்தேன்.

    உங்கள் கருத்துக்கு மாறாக ஜாதீயம் என்பது “கிளாசிகல்” இந்து மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்று நான் கருதுகிறேன். இதைப் பற்றி நிறைய பேசியாயிற்று. கடைசியாக ஒன்று. தொண்டரடிப் பொடியாழ்வாரும் “இழிகுலத்தவரேயாயினும்” நாராயணனை வழிபட்டால் வழிபட வேண்டியவரே என்று “உயர்ந்த குல சதுப்பேதிமார்களிடம்” சொல்கிறார். சுடலைமாடனை வழிபட்டால் என்னாவது? இழிகுலத்தவராகவே இருக்க வேண்டியதுதானா? அப்புறம் இழிகுலத்தவர், உயர்ந்த சதுப்பேதிமார் எல்லாம் அன்றைக்கு அங்கீகரிக்கப்பட்டவை என்பது அவர் பாசுரத்திலே தெரியவில்லையா? சங்கரர்-சண்டாளன், நந்தனார்-தீக்குளித்தல் என்று நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு விஷயமும் ஒரு விதிவிலக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது.

    இவற்றை ஒவ்வொரு ஹிந்துவும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது ஏன்? முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் சீக்கியர்களும் பவுத்தர்களும் சமணர்களும் பார்சிகளும் புரிந்துகொள்ள வேண்டாமா? நல்ல ஹிந்துவாக வாழ வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த தளம் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று நினைப்பது (பேரே தமிழ்ஹிந்து என்று இருப்பதை விட தமிழ்-இந்தியன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்) உங்கள் வீச்சைக் குறைக்கும் விஷயம் என்று நினைக்கிறேன்.

    எல்லா மதங்களையும் விட ஹிந்து மதம் (பவுத்த, சமணம்) தொடர்ந்து மாறக் கூடியது. அப்படி மாறித்தான் இன்றைக்கு ஜாதி தவறான விஷயம் என்று எல்லாரும் வாயளவிலாவது சொல்கிறோம். பலரும் உண்மையிலே நம்புகிறோம். அப்படி மாறுவதே ஹிந்து மதத்தின் பலம் என்று நான் உறுதியாக சொல்வேன். இந்த ஒரு காரணம் பற்றியே எனக்கு ஹிந்து மதத்தின் மீது கொஞ்சம் பெருமிதம் உண்டு. எந்த மதத்தில் நாஸ்திகர்களும் எங்கள் மதமே என்று சொல்வார்கள்? பாலை கும்பிட்டால் உறுமும் ஜெஹோவாவும், லா இலாஹா இல்லல்லாஹா என்று முழங்கும் அல்லாவும் கூட இந்த மதத்தில் பங்கேற்க முடியும். அப்படிப்பட்ட பாரம்பரியம், பன்முகத் தன்மை உள்ள ஹிந்து மதத்தைப் பற்றி அபாரமான புரிதலும் எக்கச்சக்க பற்றும் உள்ள நீங்கள் எல்லாரும் கொஞ்சம் paranoid ஆக இருக்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது.

  3. //
    எல்லா மதங்களையும் விட ஹிந்து மதம் (பவுத்த, சமணம்) தொடர்ந்து மாறக் கூடியது. அப்படி மாறித்தான் இன்றைக்கு ஜாதி தவறான விஷயம் என்று எல்லாரும் வாயளவிலாவது சொல்கிறோம்
    //

    எனக்கு தெரிந்த வரை நமது மதம் மாறாமல் நன்றாகவே தான் இருந்துவந்திருக்கிறது, இருக்கிறது – நமக்குத்தான் புரிதல்கள் மாறி உள்ளன – நாம் சிந்திக்காமல் இருந்துவிட்டு மதத்தை குறை சொல்வது சரி என்று தோன்றவில்லை

  4. இன்றைய சூழ்நிலையில் (ஜாதியின் வழியில் இட ஒதுக்கீடு முதலியவை இருப்பதினாலும் பொதுவாக அனைவரும் தத்தம் குல மக்களோடு இசைந்து வாழ்வதை விரும்புவதாலும் ) ஜாதி என்பதை முழுவதும் ஒழிப்பது என்பது அனேகமாக இயலாத காரியம்.ஆனால் ஜாதியை தம் குடும்ப விஷயங்களோடு நிறுத்தி விட்டு பொது வாழ்வில் அதை ஒதுக்க முடியும். மேலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வில்லாமல் சமுதாயத்தில் பழகுவதும் முடியும். அதையாவது செய்யலாம்.

  5. சிலருக்கு அனைவர் கவனமும் தன்மீது விழ வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். இதற்காக எந்த விஷயமானாலும் குதர்க்கமாகவே பேசி தனிச் சால் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். எதிர்மறை யாக ஒன்றைச் சொல்லி, தான் ஏதோ வித்தியாசமாகச் சிந்திப்ப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். இங்கு மறுமொழி எழுதியுள்ள ஆர் வி என்பவர் இந்த ரகம் போலத் தெரிகிறது.

    சாதி என்ற கட்டமைப்பு வேத காலத்தில் இல்லை. வர்ணாசிரமம்தான் இருந்தது என்பதற்கு ரிக், யஜுர், வேதங்களிலும், உபநிஷதங்களிலும், மனு ஸ்மிருதியிலும் கீதையிலும் ஆதாரங்கள் காட்ட முடியும். சாதிகள் தொழில் முறையில் மட்டும் அல்லாமல் பல்வேறு கூறுகளாகவும் உட்பிரிவு களாகவும் சல்லி வேர்களைப் போல இடைக் காலத்தில் பல்கிப் பெருகிப் போயுள்ளன. ஆக சாதியமைப்பு இடைக்காலத்தில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. எப்போது, எங்கிருந்து, ஏன், எப்படி என்பது ஆழ்ந்து ஆராய வேண்டிய விஷயம். அப்படியிருக்க இதைப் போய் கிளாசிகல் ஹிந்து மதத்தின் அங்கீகரிகப்பட்ட பகுதி என்று வர்ணிப்பது வேடிக்கையாக உள்ளது. இது ஒரு சொல் பம்மாத்து என்பதற்குமேல் எதுவும் சொல்வதற்கு இல்லை.

    தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்தில் ஹிந்து சமூகத்தில் சாதியமைப்பு நன்கு வேரோடியாயிற்று. அதனைக் கட்டியழுவோரே மிகுதியும் என்கிற நிலையும் இருந்தாயிற்று. அந்த மிகுதியானோர் மேலாதிக்க சக்திகள் என்பதிலும் ஐயமில்லை. இந்நிலையில் அத்தகையோரை சமாதானமாகப் பேசி வழிக்குக்கொண்டு வரத்தான் தொண்டரடிப்பொடி ஆழவார் போன்ற பக்திமான்களால் இயலும். அவரென்ன, ராமானுஜரா, தடாலடியாக சாதியமைப்பை நொறுக்கிப்போட! அவருக்கும் சரியான பின் வாரிசு அமையாததால் அவருக்குப் பிறகு சாதியமைப்பு புத்துயிர் பெற்றுவிட்டது, தமிழ்நாட்டில். சில சாதிகள் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப சமுதாயத்தில் புதிதாகத் தோன்றுவதும் மறைவதும் உண்டு. உதாரணமாக மலம் அள்ளும் தோட்டி சாதி என்பதாக ஒன்று இருந்ததே இல்லை. அது பிற்காலத்தில்தான் தோன்றியது. முன்பு தமிழ் நாட்டில் கோரைப் பள்ளர் என்று ஒரு சாதி இருந்தது. அது இப்போது இல்லை!

    தமிழ் நாட்டில் பறையர் என்போர் பருத்தி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த காலம் ஒன்று இருந்தது. பின்னர் நெசவுத் தொழிலில் ஈடுபட சாலியர் என்ற சாதி தோன்றியது. அவர்களே சிறிது தலையெடுத்து, கணக்கற்ற முதலியார் பிரிவுகளில் ஒன்றாகிவிட்டனர். அது ஒரு புதிய சாதியாக முதலியார்களில் தோன்றிவிட்டது. இதையெல்லாம் அறிய நிறையப் படிக்க வேண்டும். மானிடவியல் பார்வையும் வேண்டும்.
    இந்த சாதியமைப்பு என்பதெல்லாம் மிகவும் விஷய ஞானத்துடன் விவாதிக்க வேண்டிய சமாசாரம். சும்மா குருட்டாம் போக்கில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் பேசுவது முதிர்ச்சி யினமைக்கே அடையாளம்.

    மதச் சார்பின்மை என்ற சாக்கில் மாய்மாலம் பேசி ஹிந்து சமயத்தைப் புகழ்வது போலப் பேசிக் காலை வாருவதுபோல ஹிந்துக்களால் ஹிந்துக்கள் த்ரப்பு நியாயங்களைப் பேசுவதற்கென்று ஒரு பிரத்தியேக தளம் இருப்பதையும் தட்டிப் பறிக்க வேண்டாம். ஹிந்து மதத்தில் ஸர்வ த்ர்ம ஸம பாவ என்கிற அறிவுரை உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், ஸ்காந்தம், காணபத்தியம், செளரம் ஆகிய ஆறு வகைகளுக்கெனச் சொல்லப்பட்டதுதான். இதில் ஆப்ரகாமிய மதங்களுக்கு இடமில்லை. ஹிந்துக்களின் ஈஸ்வரன் ஒருக்காலும் பொறாமையுடன் பழிவாங்கும் ஜெஹோவா, அல்லாக்களுடன் இணைவைக்கத் தக்கவன் அல்லன் என்பதை ஆர் வி போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வியாதி செக்யூலரிசம் என்னும் இன்பக்‌ஷ்னால் வருவது. இது குணமாக ஹிந்து மதம் பற்றி நிறையப் படிக்க வேண்டும். புராணங்களையும் இதிஹாசங்களையும் மட்டுமே மதக் கோட்பாடுகளுக்கு முழுமையான சான்றாகக் கொள்வதை முதலில் கைவிட வேண்டும்.
    – சத்தியா

    (edited and published)

  6. //முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் சீக்கியர்களும் பவுத்தர்களும் சமணர்களும் பார்சிகளும் புரிந்துகொள்ள வேண்டாமா?//

    வேண்டாம் என்று சொன்னோமா? நீங்கள் போய் அவர்களைப் புரிந்து கொள்ளச் சொல்லுங்களேன்?

    //நல்ல ஹிந்துவாக வாழ வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.//
    ஹிந்துவின் அடிப்படைக் கடமை, சேவையில் பங்கேற்றல் என்று கடைசிக்கு முந்தைய பத்தியில் கட்டுரை ஆசிரியர் எழுதிவிட்டார். (அதாவது ஹிந்துக்கள் எல்லோருமே நல்லவர் என்று சொல்ல முடியாது, சேவையில் பங்கேற்பவனே நல்ல ஹிந்துவாக, அடிப்படையில் ஹிந்துவாகிறான்) அப்படி இருக்கும்போது அடிப்படையில் ஹிந்துவாக இருப்பதுவே நல்ல மனிதனாக வாழ்வதாகும். வேறு மதத்தினருக்கு போதிக்கும் வகையில் ‘நல்ல மனிதன்’ என்று எழுதுவதற்கான கட்டுரை அல்ல இது.

    //இந்த தளம் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று நினைப்பது (பேரே தமிழ்ஹிந்து என்று இருப்பதை விட தமிழ்-இந்தியன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்) உங்கள் வீச்சைக் குறைக்கும் விஷயம் என்று நினைக்கிறேன்.//

    தமிழ்-ஹிந்து வை மாற்றி, தமிழ் இந்தியன் என்று வைக்கலாம். ஆனால் நேபாள , மலேசிய ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்? அதனால் தமிழ்-உலக பிரஜை.காம் என்று வைக்கலாம். தமிழ் என்னும் ஒரு மொழிக்குள் குறுக்காமல் அதைவிட அதிகமாக அனைத்து இந்தியருக்கும் பொருந்தும் வகையில் இந்திய-உலக.காம் என்று வைக்கலாம். உலக என்பது இந்தியாவையும் உள்ளடக்குவதால் அதற்குப் பதிலாக உலக.காம் என்று வைக்கலாம். ஆனால் ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் இதேல்லாம இல்லாமல் வெறும் நம் கலாச்சார தளத்துக்கு உலக.காம் என்ற பெயர் பொத்தம் பொதுவாக இருக்கும் என்பதால், நம் முதன்மை பொருளான ஹிந்துத்துவத்தையே காட்டும் வண்ணம், உலக-ஹிந்து.காம் என்று வைக்கலாம். ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் என்று அலசினாலும், தமிழில் தானே செய்கிறோம்? அதனால் உலக விற்குப் பதிலாள தமிழ் என்பதே பொருத்தமானது. அதனால் உலக-ஹிந்து விற்குப்பதிலாக தமிழ்-ஹிந்து.காம் என்று பெயரை மாற்றலாம் என்று வழி மொழிகிறேன்.

  7. அன்புள்ள ஆர்.வி,

    சாதியம் என்பது ஹிந்து சமுதாயத்தில் நிலவும் தீமை. அந்த தீமை மானுட சமுதாயங்கள் அனைத்திலும் உள்ளது. அந்த தீமையை மேற்கத்திய உலகம் எதிர் கொண்ட விதம் சாதியத்தை இனவெறியாலும் அடிமை முறையாலும் அழித்தது. ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் இனஒழிப்பையும், அடிமைமுறையையும், இயற்கை வள சுரண்டலையும் செய்து தனது இனத்துக்கு சமத்துவத்தைத் தேடித்தந்ததே அல்லாமல், கருத்தியல் ரீதியாகவோ ஆன்மிக ரீதியாகவோ சாதியத்தை ஒழிக்கவில்லை. ஹிந்து சமுதாயத்திலோ அதற்கு மாறாக தொடக்க காலம் முதலே சமுதாய அதிகார அந்தஸ்து பீடங்களுக்கு எதிராக ஆன்மிக குரல்கள் கேட்டவாறே இருந்திருக்கின்றன. சாதியக் கொடுமை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் அதனை எதிர்க்கும் குரல்களே ஆன்மிகக் குரல்கள். இந்த ஆன்மிகம் ஹிந்து தர்மத்தின் ஆன்மநேய ஒருமைப்பாட்டிலிருந்து உருவானது. இதைத்தான் இக்கட்டுரைத் தொடர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஸ்மிருதிகளில் காணப்படும் சாதிய அமைப்பை அதே காலகட்டங்களில் ஐரோப்பிய அரேபிய சட்டநூல்களில் காணப்படும் சமுதாய தளங்களுடன் ஒப்பிடலாம். சாதியம் எந்த அளவு ஹிந்துமதத்தின் ஒரு பாகம் என்றால் serfdom எந்த அளவு கிறிஸ்தவத்தின் ஒரு பாகமோ அவ்வளவுதான். சாதியம் ஹிந்து சமுதாயத்தில் ஒரு உறைநிலையை அடைந்ததற்கு ஒரு காரணம் காலனியத்தால் நமது முதல் வெளியேறியதும், இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதும், மற்றொரு காரணம் இங்குள்ள சட்ட அமைப்பை காலனிய அதிகாரிகள் எந்த அளவு சமுதாய பிளவை ஏற்படுத்த முடியுமோ எந்த அளவு ஐரோப்பிய புத்தெழுச்சி பார்வையில் பிற்பட்டதாக சமைக்க முடியுமோ அந்த அளவு பிற்பட்டதாக இந்த சட்டங்களை உருவாக்கியதும்தான். உதாரணமாக நம்முடைய சாதி நம் சான்றிதழ்களில் அழிக்க முடியாதபடி உள்ளதல்லவா? அதே நேரத்தில் எந்த பிரிட்டிஷ் சான்றிதழாவது அவன் ஆங்கிலோ சாக்ஸனா, கெல்ட்டா, நார்மனா அல்லது வெல்ஷா என கேட்கிறதா? இந்த பிரிவுகளில் சிலதே இங்கிலாந்தின் 85 சதவிகித நிலத்தை உடமையாக வைத்திருந்தார்கள். இதனை ஆங்கிலிக்கன் சர்ச் எஸ்டாபிலிஷ்மெண்ட் இறைச்சட்டமாக அங்கீகரித்திருந்தது. வெல்ஷ்கள் அடிமைகளாக இருந்தார்கள். வெல்ஷுகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்திருந்தால் என்ன? இன்றைய பிரிட்டிஷ் உயரதிகார பீடங்களில் அவர்களின் மேல்சாதியினர்தான் ஆக்கிரமிப்பு செய்கிறார்களா என கணக்கீடு கூட செய்ய முடியாது. சவுதி அரேபியாவில் ஒரு சில ஆயிரங்களே கொண்ட மன்னர் சாதி முழுக்க முழுக்க அனைத்து துறைகளிலும் சொத்துகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனை கேள்வி கூட கேட்க முடியாது. இத்துடன் இந்து சாதியத்தை ஒப்பிட்டு பாருங்கள். நாம் சாதியத்தை அழித்து சமூக நீதியை ஆன்மிக-கருத்தியல் போராட்டம் மூலமாக கொண்டு வர முயற்சிக்கிறோம்.அடுத்த இனத்தை அடிமைப்படுத்தியும் இனக்கருவறுப்பு செய்துமல்ல. எனவே நாம் மெதுவாக முன்னேறுகிறோம். ஆனால் நிச்சயமாக முன்னேறுகிறோம். இதில் நமக்குள்ள உண்மையன இடைஞ்சல் தன்னை சாமானியன் என்றும் சமூக நீதி காவலன் என்றும் சொல்லிக்கொண்டு சமுதாயத்தை கொள்ளையடிக்கும் மாஃபியா குடும்ப அரசியல்கள்தான்.

    அநீ

  8. தமிழ்ஹிந்து என்று இருப்பதை தமிழ்-இந்தியன் என்று தெரிவிக்கும் ஆர் வி யின் ஆலோசனை எவ்வளவு அபத்தமானது என்பதை கார்கில்-ஐக் காட்டிலும் தெள்ளத் தெளிவாக யாராலும் காட்ட இயலுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. கார்கில்-ன் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! படித்து முடித்த பிறகும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருக்கச் செய்துவிட்டது, அவரது சீரியஸ் தொனியிலான நகைசுவை!

  9. நன்றி இரா. சத்திய பாமா.
    அ. நீ அவர்களின் நல்ல விளக்கத்துக்கு நன்றி.

  10. // தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்தில் ஹிந்து சமூகத்தில் சாதியமைப்பு நன்கு வேரோடியாயிற்று. அதனைக் கட்டியழுவோரே மிகுதியும் என்கிற நிலையும் இருந்தாயிற்று. அந்த மிகுதியானோர் மேலாதிக்க சக்திகள் என்பதிலும் ஐயமில்லை //

    ரா.சத்தியபாமா நான் கோடிட்ட பகுதியை சற்று விளக்க முடியுமா?

    இப்படியா தெரியாது – முதலில் வர்னாஸ்வர பிரிவின் படிதான் இருந்து வந்தோம். பொதுவாக மக்களை அவர் அவர் செய்யும் தொழிலை வைத்தே குடியானவன், மீனவன், நெசவாளி, தச்சன், புரோகிதர், தட்டான், வேடன் என்று அழைத்துவந்தோம். பின்னால் தம் தம் பரம்பரைக்கு ஒர் தனி அடையாளம் பெயருடன் சேர்க்க வேண்டும் என்று எண்ணி தங்கள் பரம்பரையில் அதிகமாக புழங்கிவந்த ஒர் வார்தையையே ( அது பரம்பரை பாட்டன் பெயராகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றை) பட்டபெயர் போல் அவர்களாகவே சூட்டிக்கொண்டார்கள். அதை பெருமையாயக எண்ணி தங்கள் பெயரின்பின்னால் சேர்த்துக்கொண்டதுதான் பின்னால் பல ஜாதிகளாக மாரியதா ?

  11. சாரங், நமது மதம் மாறாமல் நன்றகாவே இருந்து வருகிறது என்கிறீர்கள். ஆதி சங்கரரும், ராமானுஜரும், பக்தி இயக்கமும், விவேகானந்தரும் மாற்றித்தான் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் நீங்கள் சொல்வது போல மாறாமல் நன்றாகவே இருந்தது என்று நினைக்கவில்லை. நம் புரிதல் தானாக மாறிவிடவில்லை, அதை மாற்றியதில் இவர்களுக்கெல்லாம் பெரிய இடம் உண்டு. நீங்கள் இவர்களை எல்லாம் மதிப்பவர் என்று நினைக்கிறேன் – வேறு என்னமோ சொல்ல வந்து வார்த்தைகள் சரியாக விழவில்லையோ?

    சத்தியபாமா, முன்னால் நான் எழுதியவற்றையும் படித்துவிட்டு பேச வாருங்களேன்! ஜாதிகள் பெருகியதாக நீங்கள் சொல்லும் “இடைக்காலம்” எங்கே ஆரம்பிக்கிறது? கீதை “காலத்தில்தான்” கர்ணனும் “இருந்தான்” என்பதைக் கூடவா மறந்துவிட்டீர்கள்? “பழி வாங்குவது” ஜெஹோவாவுக்கு மட்டுமே உரிய குணமில்லை. சுடலைமாடனும் அப்படித்தான். சுடலைமாடனை நீங்கள் ஹிந்து மதத்தின் ஒரு பகுதியாக ஏற்காமல் இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை. ஹிந்து மதம் மற்ற “நம்பிக்கைகளை” தன்னுள் காலம் காலமாக ஏற்றுக் கொண்டு வருகிறது. அதனால்தான் புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் என்று ஒரு இதிகாசம் எழுகிறது! முதல் ஜைன தீர்த்தங்கரரான ரிஷப தேவரும் அவதாரம். முல்லை நிலத்தின் கடவுளான மாயன் கிருஷ்ணனில் absorb ஆவதும் அப்படிதான். கார்த்திகேயனும் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனும் இணைவதும் அப்படித்தான். அப்படிப்பட்ட ஹிந்து மதத்தின் ஜெஹோவாவுக்கு இடமில்லை என்று நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. சரி நான் ஒரு சர்ச்சுக்கு போய் மண்டியிட்டு மேரி மாதா என்று தொழுதால் என்னை ஹிந்து மதத்திலிருந்து விலக்கி விடுவீர்களா? வேளாங்கண்ணிக்கு போய் வருபவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட மனநிலை ஹிந்துக்களிடம் வளர்வது மிக துரதிருஷ்டவசமானது. அரசியல் ரீதியான activism என்பதை – பிற மதங்களுக்கு தரப்படும் “அநியாயமான” சலுகைகளை எதிர்ப்பதை – ஆன்மீகத்தோடு குழப்பிக் கொள்கிறீர்கள். அருணகிரி என்பவர் இதே தளத்தில் சமீபத்தில் எழுதி இருந்த மூன்று வகை ஹிந்துக்கள் என்ற கட்டுரையையாவது படித்துப் பாருங்கள்.

    கார்கில், விதண்டாவாதம் செய்ய கிளம்பி இருக்கிறீர்கள். தமிழ்ஹிந்து என்றால் நீங்கள் குறிப்பிடும் அதே நேபாளி ஹிந்துக்களின் கதி என்ன? அட பக்கத்து வீட்டு தெலுங்கர்களின் கதி என்ன? பேச உங்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டு எல்லார் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

    அரவிந்தன் நீலகண்டன், நீங்கள் சொல்லும் கருத்துகளில் அனேகமாக உடன்படுகிறேன். இரண்டு (சிறு) வேறுபாடுகள் – ஒன்று, எனக்கு இந்த தொடரில், ஜாதி ஹிந்து மதத்தின் – குறைந்த பட்சம் கிளாசிகல் ஹிந்து மதத்தின் அங்கீகரிக்கப்படாத பகுதி என்று வாதிட முயற்சிப்பதாக தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல ஜாதி இருந்தது, ஆனால் ஜாதிக்கு எதிராக குரல்கள் எப்போதும் எழுந்துகொண்டே இருந்தன என்று இந்த தொடர் சொல்வதாக தெரியவில்லை. இன்னொன்று சாக்சன் நார்மனை மணந்தால் அது “ஜாதி” இழப்புக்கு அடிகோலாது – அதனால் இந்தியாவோடு ஒற்றுமைகள் இருந்தாலும் “ஐரோப்பிய ஜாதி முறை” ஓரளவு நெகிழ்வுத்தன்மை உடையதாக இருந்தது என்று நினைக்கிறேன்.

  12. வேதம் கோபால் அவர்களுக்கு :
    வர்ணாசிரமம் என்பதையே நீங்கள் தவறாக அர்த்த்ப்படுத்திக் கொண்டிருப்பது உங்கள் மறுமொழியிலிருந்து தெரிய வருகிறது. ஒருவரின் வர்ணம் அவரது குணவியல்பின் பிரகாரம அமைகின்றது. அவர் தமது குண இயல்பின் பிரகாரம் தமது தொழிலைத் தேர்வு செய்துகொள்கிறார். எனவே வர்ணம் மாற்றிக் கொள்ளத் தக்கது. ஜாதி என்பது இவ்வாறான நெகிழ்வுத்தன்மையின்றி மிகவும் கறாராகப் பிறவியின் அடிப்படையில் வருவது. குணவியல்பின் பிரகாரமும் அத்ற்கேற்பத் தேர்வு செய்யும் தொழிலின் அடிப்படையிலும் பிராமணன் சூத்திரனாகவும் சூத்திரன் பிராமணனாகவும் ஆகலாம் என மனு ஸ்மிருதி கூறுகிறது. உடல் உழைப்பை சமுதாயத்திற்கு அளித்தோர் சூத்திரர் ஆவர். சமுதாயத்திற்கு உடல் உழைப்பை அளிப்போரும் அவசியமே. இன்று அரசுத்துறைகளிலும் தனியார் துறையிலும் கடைநிலை ஊழியராகப் பணி செய்வதற்கென்று சிலர் இருந்தே ஆக வேண்டியுள்ளது. ஆனல் எவரும் அவ்வாறு கடைநிலை ஊழியராகத்தான் பணி செய்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுவதில்லை. எனினும் சிலர் தாமகவே அப்பணியைத் தேர்ந்து கொள்கின்றனர். இது ஏன்? இதற்கு விளக்கம் வர்ணாசிரமத்தில் உள்ளது. வர்ணாசிரமத்தின் அடிப்படையில் பிரிவுகள் விவரிக்கப் பட்டுள்ளனவே தவிர அவற்றுக்கிடையே உயர்வு தாழ்வு பேசப்படவில்லை. சூத்திரரை இழிவு செய்யும் வகையிலோ அவர்கள் ஒதுக்கிவைக்கப்படத் தக்கவர்கள் என்றோ சொல்லப்படவில்லை. இன்றைய சமுதாயத்தில் உயர் பத்வியில் உள்ளோர், இடைநிலை அலுவலர், கடைநிலை ஊழியர் என்ற பேதம் உள்ளது! இவர்கள் கலந்துறவாடுவதில்லை! இவர்களிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பித்தது யார்?

    நீங்கள் கேட்பதுபோல் அவ்வளவு சுலபமாக சாதி அமைப்பின் தோற்றம் பற்றி முடிவு கட்டிவிட முடியாது. அறிஞர் மலர்மன்னன் அவர்கள் சாதியமைப்பானது தென்னாட்டவரிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் நிலவிய வலங்கை இடங்கைப் பிரிவுகளை ஆதாரமாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவிக்கிறார். இவ்விரு பிரிவுகளில் பிராமணரும் பறையரும் ஒரே அணியில் வருகிறார்கள்! மேலும் பறையர் பூசாரிகளகப் பணியாற்றவும் உரிமை பெற்றிருந்தனர். நாவிதர்களுக்கு புரோகிதர்களுக்குரிய அந்தஸ்து தரப்பட்டிருந்தமைக்கும் சான்றுள்ளது. சக்கிலியர் என்ற அருந்ததியர் சாதி, நாயக்கர் வம்சம் தமிழ் நாட்டில் குடியேரறிய பின்னரே தமிழர் சாதியமைப்பில் இடம் பெற்றது. ஹிந்து சமயம் பல்வேறு கலாசாரங்களையும் உள்வாங்கிக் கொண்டபோது, எந்தவொரு கலாசாரத்திலிருந்தோ சாதியமைப்பையும் சேர்த்து உள்வாங்கிவிட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் மலர்மன்னன் எழுதி யிருப்பதைப் படித்துள்ளேன்.

    திரு ஆர்வி அவர்களே, நீங்கள் பலதும் முழுமையாகவோ அசலிலிருந்தோ அல்லாமல் மேற்கொண்ட வாசிப்புகளின் அடிப்படையில் உங்களுடைய சொந்த அனுமானங்களின் பேரில் கருத்துச் சொல்வதாகத் தெரிகிறது. கர்ணன் என்பவனுக்கு ஜாதி எதுவும் பாரதத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அவன் ஒரு தேரோட்டியினால் வளர்க்கப் படுகிறான், அவ்வளவே. தேரோட்டி என்பதாக ஒரு சாதி எதுவும் அப்போதும் எப்போதும் இருக்கவுமில்லை. பின்னர் அவன் க்ஷத்திரியனாக அடையாளம் காட்டப்படுகிறான். மேலும் தேரோட்டியாகப் பணியாற்றுதல் இழிவானதாகக் கருதப்படவுமில்லை.

    சுடலை மாடன் பல பிராமணக் குடும்பங்களுக்கு குல தெய்வமாகவே இருப்பதை ஆர் வி அறிய வேண்டும். சுடலை மாடன் மட்டுமின்றி நாட்டார் தெயவங்கள் பலவும் பிராமணர் உள்ளிட்ட மேல் சாதியினர் எனக் கருதப்படும் பல குடும்பங்களில் குல தெய்வமாக வணங்கப்படுகின்றனர். மேலும் நாட்டார் தெய்வங்கள் அவை ஆணாயினும் பெண்ணாயினும் ஏதோவொரு கால கட்டத்தில் சதையும் ரத்தமுமாக நிஜமாகவே மக்கள் மத்தியில் நடமாடி ஏதேனும் ஒருவிததில் சமுதாயத்த்ற்குத் தொண்டு செய்து உயிர்த் தியாகம் செய்தவர்களே. அவ்ர்கள் காலப் போக்கில் பெண் எனில் சக்தியின் அல்லது சக்தியின் பரிவார தேவதைகளில் ஒருவராகவும், வணங்கப்படலாயினர். ஆண் எனில் சிவ பெருமானின் அம்சமாகவோ அவரது கணங்களில் ஒருவராகவோ ஏற்கப்பட்டனர். நாட்டார் தெயவங்கள் குறித்து நிறைய ஆய்வுகள் வந்துள்ளன. தேடிப் படியுங்கள். நாட்டார் தெய்வங்களை பேய்கள், பிசாசுகள், சைத்தான்கள் என்றெல்லாம் வர்ணித்து இழிவு செய்து மக்கள் மனதை மாற்றியவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் என்பதையும் அறிவீர்களாக. நாட்டார் தெய்வங்களை தேவதாமசம் கொடுத்துப் பாராட்டுவது நமது ஹிந்து மரபிற்கு ஏற்புடையதுதான்.

    சாதியமைப்பு ஹிந்து சமுதாயத்தில் எப்போது நடைமுறைக்கு வந்தது என்று என் போன்ற சாமானிய அறிவு படைத்தவளிடம் கேட்டு என்ன பயன்? இது பற்றிய ஆய்வு பலராலும் தீவிரமாக மேற்கோள்ளப்பட்டு வருகிறது. அறிஞர் அரவிந்தன் நீலகண்டன் கூறுவதுபோல் சாதி என்பது எல்லாச் சமூகங்களிலுமே ஏதேனும் ஒரு வடிவில் எக்காலமும் இருந்து வருவதுதான். இப்போதுள்ள சாதியமைப்பை நாம் ஒழித்தாலும் அது வேறு ஒரு வடிவில் க்ளாஸ் ஒன் க்ளாஸ் டூ, க்ளாஸ் த்ரீ க்ளாஸ் ஃபோர் என்ற வடிவங்களில் நீடிக்கும் என ஒரு கூட்டத்தில் அறிஞர் மலர்மன்னன் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.

  13. மேலும் சில சொல்லவேண்டும், வேதம் கோபால் அவர்களின் தொண்டரடிப்பொடியாழ்வார் தொடர்பான கேள்வியை முன்னிட்டு:
    சாதியமைப்பு சமுதாயத்தில் நிலைபெறத்தொடங்கியபோது அதில் தங்களைப் பிறவியின் மூலமாக ஸ்திரப்படுத்திக் கொள்ள விரும்பிய பிராமண, க்ஷத்திரிய வர்ணங்கள் தமக்குப் பிறப்பின் வழியே வரும் உரிமையாகத் தமது வர்ணத்தை மாற்றியமைத்துக் கொண்டன. அவற்றை மூன்றாவது வர்ணமும் பின்பற்றியது. இவையே மேலாதிக்க சக்திகளாகச் சமுதாயத்தில் தம்மை நிலை நிறுத்திக்கொண்டன. பிராமண, க்ஷத்திரிய வர்ணங்கள் தமது நலன் கருதி எப்போதும் கூட்டாகச் செயல் படும் எகிப்திய கலாசாரத்திலும், யூத கலாசாரத்திலும் இதனைக் காணலாம். அங்கும் வேறு பெயர்களில் வர்ணங்கள் உண்டு. மனித சமுதாயம் மட்டுமல்ல உயிரினங்கள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் வர்ணங்கள் உண்டு!
    .

  14. திரு ஆர் வி அவர்கள் சாராங் என்பவருக்கு அளித்துள்ள மறுமொழியில் ஹிந்து மதம் மாறியுள்ளது என்கிறார். ஆர்வி ஹிந்து சமூகத்தை மனதில் வைத்து ஹிந்து மததைப் பற்றி விமர்சிக்கிறார். ஆர்வியால் குறிப்பிடப் படுபவர்கள் ஹிந்து சமுகத்தில் நிலவிய ஏற்பாடுகளைத்தான் மாற்றி யமைக்க முற்பட்டனர். ஹிந்து மதத்தை அல்ல. ஆபிரகாமிய மதங்களின் தாக்கம் காரணமாகவே ஆர் வி அவர்களுக்கு இவ்வாறான குழப்பம் ஏற்படுகிறது. ஆபிரகாமிய மதங்கள் சமூக நடைமுறைகளில் மூக்கை நுழைப்பதோடு தமது சொற்படியே சகலமும் என அதிகாரமும் செலுத்துகின்றன. அதனால் அவற்றில் மத நம்பிக்கைக்கும் சமூக நடைமுறைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஹிந்து மதம் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அதனால்தான் ஹிந்து சமுதாயத்தில் காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகின்றன, தொடக்கத்தில் எவரேனும் எதிர்த்த போதிலும்.

  15. ஆர்வி அவர்களே, போர்களின்போது க்ஷத்ரியரான அரச குலத்தவர்கூடத் தேரோட்டியாக இருந்துள்ளனர். தேரோட்டுவதில் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்ததே காரணம். நான் க்ஷத்ரியன், எனவே தேரோட்டுவது எனக்கு இழுக்கு என எவரும் கருதியதில்லை! அவ்வளவு ஏன், நீங்கள் தேரோட்டி எனச் சுட்டிக் காட்டும் கர்ணனுக்கே பாரதப் போரில் சல்லியன் என்கிற க்ஷத்திரிய அரசன்தான் தேரோட்டி யிருக்கிறான்! கர்ணன் ஒரு க்ஷத்திரியனாகத்தான் இருக்கக் கூடும் என்று அடையாளம் கண்டு அவனைச் சபித்தவர் பரசுராமர்! இதிகாசங்கள், பாகவதம், புராணங்கள் முதலானவை அவற்றின் காவியச் சுவையை ரசிப்பதற்கே. கோட்பாடுகளுக்கு வேதங்களையும் உபநிஷத்துகளையும் கருத்தில் கொள்வது நல்லது. ஸ்மிருதிகளில் அடங்கும் மனு ஸ்மிருதியையும் அது ஒரு அற நூலாகவும் இருப்பதால் கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் ஏற்கலாம். ஸ்மிருதியாகப் பின்னர் பதிவாகிய, முதலில் வாய்மொழியாக, ஸ்ருதியாக வெளிப்பட்ட கீதையினையும் அவ்வாறே அத்தாட்சியாகக் கொள்ளலாம். ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் முரண்பாடு ஏற்படுமானால் ஸ்ருதியையே இறுதி அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என ஸ்மிருதிகளிலேயே சொல்லப்பட்டுள்ளது. இதிகாசங்களும், பாகவாதம் முதலானவையும் ஸ்மிருதிகள் என்ற பகுப்பில் வருவனவாகும்.

  16. //கார்கில், விதண்டாவாதம் செய்ய கிளம்பி இருக்கிறீர்கள். தமிழ்ஹிந்து என்றால் நீங்கள் குறிப்பிடும் அதே நேபாளி ஹிந்துக்களின் கதி என்ன? அட பக்கத்து வீட்டு தெலுங்கர்களின் கதி என்ன? பேச உங்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டு எல்லார் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.///

    திரு RV
    விதண்டவாதம் செய்யவில்லை. பெயர் மாறுவதால் பயனில்லை, மாற்றுவதில் அர்த்தமில்லை என்றுதான் சொன்னேன்.

    தமிழ் ஹிந்து என்று பெயர் இருப்பதால் அல்லது இந்த தமிழ்ஹிண்டு.காம் தளத்தால் நேபாளி ஹிந்துகளின் கதி என்ன அவ்வளவு மோசமாகிவிட்டது?

    மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு என எண்ணவேண்டாம்.

    If You are really serious of what were you saying, please recreate this site in English. All of us will help and serve.

    regards,
    Kargil

  17. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதம் குறித்து அறியும் ஆர்வம் உள்ள தமிழர்களுக்குமாக ஹிந்து மதம் பற்றியும், ஹிந்து சமுகம் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் ஹிந்து தேச நிலவரங்களை எடுத்துக் கூறவும் இந்த தளம் இருப்பதாகப் புரிந்துகொண்டிருப்பதால்தான் இங்கு வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம். இதில் போய் நேபாளி ஹிந்துக்கள் கதி பற்றி கேள்வி எழுப்பினால் என்ன சொல்வது? இந்தத் தளத்தின் நோக்கத்தையே புரிந்து கொள்ளாமல் இதன் பெயரை தமிழ் இந்தியன்.காம் என்று மாற்றி வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறினால் அதற்கு கார்கில்-ன் பதில்தான் பொருத்தமாக இருக்கும். அதில் விதண்டா வாதம் எங்கே உள்ளது?

    நான் மேரி மாதா முன் மண்டியிட்டால் என்னை ஹிந்து மதத்தைவிட்டு விலக்கிவிடுவீர்களா, ஹிந்துக்கள் வேளாங்கன்னிக்குப் போனால், நாகூர் தர்காவுக்குப் போனால் அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? என்றெல்லாம் வேறு திரு ஆர் வி அவர்கள் என்னிடம் கேட்கிறார். எதுவும் செய்யப்போவதில்லை. ஹிந்து சமயத்தில் விலக்கம் செய்யும் நடைமுறை ஏதும் இல்லை. தனி மனித சுதந்திரம் அந்த அளவுக்கு அபரிமிதமாக உள்ளது. இத்னை உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் சரி; இல்லாமல் அலைவது அவரவர் இஷ்டம். தானாக சொரணை வரும்போது வரட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

  18. மூவகை ஹிந்துத்துவர்கள் குறித்து இந்த தளத்தில் அண்மையில் அறிஞர் அருணகிரி அவர்கள் சிந்தனையைத் தூண்டும் ஓர் அருமையான கட்டுரையினை எழுதியிருந்தார்கள். நமது சமூக நிலவரங்கள் குறித்து இடதுசாரி ஹிந்து எதிர்ப்புச் சக்திகள் ஆய்வு என்ற பெயரில் திசை திருப்பும்படியாக எவ்வளவு நூல்களை வெளியிட்டுத் தள்ளுகிறார்கள், அதே சமயம் ஹிந்துத்துவ சார்பில் எத்தனை ஆய்வு நூல்கள் வருகின்றன என்று வேதனையுடன் கேட்கும் அவர் எமது ஆதங்கத்தையே வெளிப்படுத்துகிறார். ஹிந்துத்துவச் சார்புடைய அறிஞர் அருணகிரி அவர்கள் ஹிந்து நலன் கருதி ஏற்கனவே ஏராளமான கட்டுரைகளை எழுதி எமது கவனத்தைக் கவர்ந்தவராவார். அவரது மூவகை ஹிந்துத்துவர் பற்றிய கட்டுரையைப் படிக்குமாறு திரு ஆர் வி எனக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். எமது கருத்தினைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தும் விதமாகவே அவரது அக்கட்டுரை அமைந்துள்ளது. எமக்குள் முரண்பாடு ஏதும் இல்லை. ஆன்மிகத்தோடு அரசியலைக் குழப்பிக் கொள்ளும் நிலை இங்கு இல்லை (ஆன்மிகர் அரசியல் சார்ந்த குரல் எழுப்புவதும் அரசியலார் ஆன்மிக எழுச்சியுடன் உத்வேகம் கொள்வதும் எம்மில் சகஜம். 1947 ஆகஸ்ட் 15 அன்று ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிகத் தவம் கலைந்து விடுத்த செய்தியும் அரசியலார் பசும்பொன் தேவர் ஆன்மிகத்தில் தோய்ந்து புத்துணர்வு பெற்றதும் குழப்பம் காரணமாக அல்ல!) திரு ஆர்வி அவர்கள்தான் ஹிந்துக்கள் தொடர்பான சமூக அரசியல் பிரச்சினைகள் அலசப்படும்போது திடும் திடும் என இதிகாசங்களையும் புராணங்களையும் மக்களின் நம்பிக்கைகளையும் குறிப்பிட்டுத் தாமும் குழம்பி மறறவர்களையும் குழப்ப முற்படுகிறார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  19. Good article ! Ultimately all such articles lead to a conclusion that all Hindus must abandon the Caste system.
    I am very much confused about the Varna system and not able to find out why should Lord Krishna tell in his Bhagvad Gita about this “very much cursed Varna system”. I searched many articles of Hindu reformers, some Christian missionary websites and Hindu acharyas.
    I am not yet concluded in my pursuit to know “Is the Varnashrama Dharma itself the source of troubles to the Hindu religion” or “The system is good for the society as long as it was maintained properly, but those who started deviating from the system are responsible for it’s failure”.
    Please read this one written by the Kanchi Paramacharya :
    https://www.vrnt.org.in/Vedas-Discourses/c3-6-Who_is_responsible_for_the%20decay_of_Varna_Dharma.htm

  20. திரு R.V அவர்களே

    //
    சாரங், நமது மதம் மாறாமல் நன்றகாவே இருந்து வருகிறது என்கிறீர்கள். ஆதி சங்கரரும், ராமானுஜரும், பக்தி இயக்கமும், விவேகானந்தரும் மாற்றித்தான் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் நீங்கள் சொல்வது போல மாறாமல் நன்றாகவே இருந்தது என்று நினைக்கவில்லை. நம் புரிதல் தானாக மாறிவிடவில்லை, அதை மாற்றியதில் இவர்களுக்கெல்லாம் பெரிய இடம் உண்டு. நீங்கள் இவர்களை எல்லாம் மதிப்பவர் என்று நினைக்கிறேன் – வேறு என்னமோ சொல்ல வந்து வார்த்தைகள் சரியாக விழவில்லையோ?
    //

    மதம் மாறவில்லை – சாதியம் என்பது நாமாக திணித்துக்கொண்ட ஒன்று, நாம் செய்தது தவறு என்று இப்போது தெரிந்துகொண்டு விட்டு மதத்தை பழிப்பதை தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன் ராமானுஜர், மற்றும் பலர் நமது மதத்தை சரியாக புரிந்து கொண்டனர் நமது தவறை, தவறான புரிதல்களை திருத்தினரே ஒழிய மதத்தை மாற்றி அமைக்க வில்லை என்பது எனது கருத்து – அவர்கள் எதாவது தர்ம சாச்திரத்தையோ, வேதத்தையோ, வேதாந்தயோ மாற்றினார்களா? இல்லை. அதை சரியாக எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே மாறுதல் கொண்டுவந்தனர்

  21. ரா.சத்தியபாமா அவர்களுக்கு

    இங்கே ஜாதியை யார் ஏற்படுத்தியது என்பதை பற்றி விவாதிக்கிறோம் பலர் கருத்துகளை முன்வைகிறார்கள். இங்கே நான் கூறியதின் தொடர்சியாக ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் பெருமையோடு (அது பரம்பரை பாட்டன் பெயராகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றை) சேர்துக்கொண்டார்கள். அவர்களுக்கென்று தனி வழிபாடுமுறைகளையும் குலதெய்வங்களையும் எல்லைகாக்கும் தெய்வங்களையும் நிர்ணயம் செய்து கொண்டார்கள். அப்படி சில குழுக்களாக வாழ்தவர்கள் ஜாதி விட்டு ஜாதி பெண் எடுப்பதில்லை. தவறு செய்தால் நாட்டாமைகூட்டி ஜாதியிலிருந்து தள்ளிவைத்தார்கள். இதை அவர்கள் பெரும் அவமானமாக கருதினார்கள். எனவே ஜாதி ஏற்ப்பட்டதற்கு தனிமணித குழுக்களே காரணம் என்று நினைக்கின்றேன்.

    இதற்கும் இந்துமதத்திற்கும் வர்ணமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் வர்ண தர்மமானது பிறவியிலேயே ஏற்படகூடியது என்றுதான் ஆதிசங்கரர் வழிவந்தவர்கள் கூறுகிறார்கள். பின்னால் வந்த ராமானுஜர் தயாநந்தர் விவேகாநந்தர் மேலும் பலர் இதை ஏற்கவில்லை. செய்யும் தொழிலே வர்ணத்தை நிர்ணயிக்கின்றது என்று உருதிப்படுத்தினார்கள். இதையே நாமும் ஏற்றுக்கொள்வோம்.

    அடுத்து ஆதிக்க சக்தி பற்றி சொன்னது ஏற்புடையதாக இல்லை. எனது கருத்து ஜாதி நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் அன்னியர் ஆதிக்கமும் அரசியல் கட்சிகளுமே ஆகும். இந்த ஆதிக்கம் பற்றி விரிவாக தெய்வத்தின் குரல் நான்காம் பாகத்தில் குரு என்ற தலைப்பின் கீழ் சந்திரசேகரர் விரிவாக விளக்கியுள்ளார்கள். அதன் ஆங்கில மொழிபெயர்பின் இணையதள பார்வை இடுக்கை திரு ராம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    ஆதிக்கம் பற்றிய மறுமொழி பின்னால்

  22. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சியம் ஒரு காலகட்டம் வரை பிராமிணனுடன் ஷத்திரியனும் வைசியனும் கைகோர்த்து ஆதிக்கம் செலுத்தினர். பின்னால் மாறுபட்டசுழலில் பிராமிணனுக்கு நிகரான அந்தஸ்தை பெறமுடியாததால் அவன் மேல் பொறாமை கொண்டு சமுதாயத்தில் ஏற்ப்பட்ட பின்னடைவுகளுக்கு பிராமிணனே காரணம் என்று மொத்த பழியை அவன்மேல் சுமத்தினார்கள். (குறிப்பு – பிராமிணன் ஜன எண்ணிக்கையில் மிகவும் குறைவு, தேக பலமும் குறைவு, பணபலமும் இல்லை – எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடியும்)

    இவர்கள் நாம் எல்லோரும் ஒரேஇனம் என்று சூத்திரர்களோடு கைகோர்த்து பல காலம் ஆதிக்கம் செய்தனர். இந்த இரண்டுகட்டங்களிலும் பயன் அடைந்தது ஷத்திரியனும் வைசியனும். ஷத்திரின் வைசியன் என்று இன்றுஅடையாளம் காண்பது மிகவும் கடினம். தேசிய கட்சிகளை இவர்களே ஆக்ரமித்தார்கள். போலி ஸெக்பூலரிஸம் பேசும் பெரும்பாலோர் இவர்களே. இந்த இரண்டு காலகட்டங்களிலும் சூத்திரர்கள் நிலைமாறவில்லை. ஜாதி இந்துக்களால் இன்றும் கிழ்தட்டுமக்கள் கொடுமை படுத்தபடுகிறார்கள். இதனால் வெறுப்புற்று கிருஸ்துவ மதத்திற்கு மந்தையாக மாறிக்கொண்டுறிக்கிறார்கள். இதில் விழித்துகொண்ட சிலர் மாநிலஅளவில் தனிக்கட்சிகளை துவக்கி வளர்து இன்று மத்தியில் ஆட்சி செய்பவரின் குடுமியை தங்களிடம் வைத்துள்ளனர். இதனாலேயே தேசிய கட்சிகள் சிறுபான்மையிரிடம் தஞ்சம் புகுந்தது.. நாங்களும் சளைதவர்கள் அல்ல என்று போட்டிபோட்டுக்கொண்டு மாநிலகட்சிகளும் சிறுபான்மையினறுக்கு பாத பூஜை செய்து கொண்டிருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் இந்துக்கள் தாம் பெற்ற சுதந்திரத்தை சிறுபான்மையிரிடம் ஒப்படைத்து முன்றாம்தார குடிமகனாக வாழவேண்டியதுதான் நடக்கும். ஏன் என்றால் இப்பொழுது உள்ள சிறுபான்மையருக்கும் அவர்களிடம் சரண் அடைந்துள்ள மாநில/ தேசிய கட்சிகளுக்கு தேசிய சிந்தனை வாசனைக்கு கூட கிடையாது.

    ” தனதந்தி தனதந்தி தானா – நந்தவனத்தில் ஒர் ஆண்டி அவன் நாலயிருமாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒர் தோண்டி – அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைதாண்டி தனதந்தி தனதந்தி தானா ”

  23. வேதம் கோபால் அவர்களுக்கு,

    ஜாதி பிறவியின் வழியில் வருவது என்று ஆதி சங்கரர் சொல்லவில்லை. ஆனால் சங்கரர் பழக்க தோஷங் காரணமாக சண்டாளனைக் கண்டு ஒதுங்கியதும் அவரை எள்ளி நகையாடி சிவ பெருமான் புத்தி புகட்டிய கதையை நாம் கேட்டிருக்கிறோம்.

    காஞ்சி காமகோடி பீட பரமாசாரியார் நமது மரியாதைக்கும் வணக்கத்திற் கும் உரியவர். ஆனால் அவர் ஒரு மடத்தின் தலைமைப் பொறுப்பபில் இருந்தவர். அந்த மடத்தின் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருந்தவர். மடத்திற்கு இணங்கவே கருத்துகளை வெளியிட வேண்டியவரும்கூட. இதன் காரணமாகவே அவர் காந்திஜியுடன் கருத்து வேறுபடவும் நேர்ந்தது. வ்ர்ணாசிரமம் குறித்து அவர் தெளிவுபட என்ன சொல்லியிருக்கிறர் என்பது எனக்குத் தெரியாது. நான் மனு ஸ்மிருதி யிலிருந்தும் கீதையிலிருந்தும் வேறுபல ஸ்ருதிகளிலிருந்தும் வர்ணா சிரமம் பிறவியின் அடிப்படையில் வருவது அல்ல என்பதைக் கூறுகிறேன். தேவைப்பட்டால் அவற்றின் ஸ்லோகங்களையும் தர இயலும். ஒன்று மட்டும் நிச்சயம். ஹிந்து மதத்தின் இழிவுகளுக்கெல்லாம் காரணம் பிராமணர்கள் தமது வர்ண தர்மத்தைக் கைவிட்டதுதான் என்று காஞ்சி காமகோடி பீட பரமாசாரியார் பிராமணர்களைக் குற்றம் சாட்டுகிறார். பிராமணருக்குப் பிறந்தவர்கள் தாமும் பிராமணர்களாக வேதம் ஓதியும் வேதம் படிப்பித்தும் உஞ்சவ்ருத்தி எடுத்துப் பிழைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். பிராமணப் பெற்றோருக்குப் பிறந்துவிட்டதாலேயே ஒருவன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் அவ்வாறு பிராமணனாகப் பிறந்தவன் அதில் ஈடுபாடு இல்லாமல் வேறு தொழில் அல்லது கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தால் அவனைக் கூடாது, உன் தந்தையின் தொழிலைத்தான் நீ செய்யவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது இயற்கை விதிக்கும் தனி மனித சுதந்திரத்திற்கும் விரோதம் அல்லவா? அது ஹிந்து தர்மத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கே முரண் அல்லவா? எனவே வர்ணம் என்பது பிறவியினால் வருவது அல்ல என்று கொள்வதே சரியாக இருக்கும்.

    மேலும், செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே சாதிக் குழுக்கள் உருவாகியிருக்க வேண்டும். ஒருவரின் பெயர்க் காரணமாக அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இயல்பாகவே தேர்ச்சி பெற்றவராக இருப்பதுண்டு. அவரைச் சார்ந்தோரரும் அத்துறையில் ஈடுபட்டுப் பின்னர் அதுவே ஒரு சாதியாகப் பரிணாமம் அடைந்துள்ளது எனக் கொள்ளலாம்.

    பிராமணனுக்கு பண பலம் கிடையாது, உடல் பலம் கிடையாது என்றெல்லாம் சொல்கிறீர்கள். கடந்த காலங்களில் மன்னர்களிடமிருந்து மானியமாகவே ஏராளமான நிலபுலங்களைப் பெற்றவர்கள் பிராமணர்கள். அக்ரகாரங்கள் பலவும் மானியமாக அளிக்கப்பட்ட்வைதான். மன்னர்களுக்கே ஆலோசனை கூறி ராஜ சபைகளில் செல்வாக்குடன் விளங்கியவர்கள் பிராமணர்கள். மஹாராஷ்டிரத்தில் பேஷ்வாக்களாக ஆட்சி செலுத்தியவர் கள் பிராமணர்கள். பழைய ஹிந்து சமுதாயத்தில் ஊர்ப் பஞ்சாயத்துகளில் பிராமணர் சொல்லுக்குக் கட்டுப்படும் நிலைமையும் இருந்துள்ளது. மதச் சடங்குகளிலும் குடும்ப நல்லது கெட்டதுகளிலும் பிராமணரருக்கே தான தர்மங்கள் பெறுவதில் முன்னுரிமை இருந்தது. இன்றும் கிராமப் புறங்களில் பிராமணர் சொல்லுக்கு உரிய மரியாதை உள்ளது. பிராமணன் என்ற தகுதியினை பிறப்பினால் மட்டுமே ஒருவர் பெற்றுவிட்டிருந்த போதிலும் அவருக்கு ஒரு பிராமணனுக்குத் தரப்பட வேண்டிய மரியாதையை ஹிந்து சமுதாயம் கொடுத்து வந்துள்ளது. அதைக் காப்பாற்றிக் கொள்ள பிராமணர் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார், பரமாசாரியார்.

  24. வேதம் கோபல் அவர்களுக்கு இன்னொன்று சொல்ல மறந்தேன். பிராமணர் நல்ல உடல் வலிமை உள்ளவர்கள்தான். வடக்கே உள்ள பல அகாடாக்களில் நிஜமாகவே ஒருவரே பத்து பேரை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு உடல் வலிமையும் சண்டைப் பயிற்சியும் உள்ள பிராமணர்கள் உண்டு. முரட்டு சம்பல் கொள்ளைக்காரர்களளில் பலர் பிராமணர். சமூக அநீதியை எதிர்த்து பாகி ஆனவர்கள் பாகி என்றால் ஓடிப்போனவர் என்று பொருள்.
    தமிழ் நாட்டிலும் பல பிராமண வஸ்தாதுகள் இருந்திருக்கிறார்கள்! நோஞ்சான்கள் எல்லாப் பிரிவுகளிலும் உண்டு. அதேபோல் பலவான்களும் துணணிச்சல்கார்களும் உண்டு. இதில் பொதுத் தன்மை விதிப்பது சரியல்ல. தஞ்சாவூர் பிராமண மிராசுகளில் பலர் அடாவடிப் பேர்வழிகளாகவும் இருந்ததுண்டு!

  25. // பிராமண வஸ்தாதுகள் இருந்திருக்கிறார்கள்! நோஞ்சான்கள் எல்லாப் பிரிவுகளிலும் உண்டு. அதேபோல் பலவான்களும் துணணிச்சல்கார்களும் உண்டு. இதில் பொதுத் தன்மை விதிப்பது சரியல்ல. தஞ்சாவூர் பிராமண மிராசுகளில் பலர் அடாவடிப் பேர்வழிகளாகவும் இருந்ததுண்//

    பிராமிணர்கள் மற்ற பிராமணர்களிடம் எப்போதுமே வஸ்தாதகத்தான் இருப்பார்கள். பிராமணர்கள் அல்லோதொரைக் கண்டால் தான் சற்று பீதியுடன், லேசாக வாய் குழற, ஒருவித பதற்றத்துடன் ஒதுங்கி விடுவார்கள். (இதிலென்ன சிரிப்பு என்றால், பிரமாணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு தான்.. ஏதோ பெரியாரின் நாயக்கர் ஜாதி போன்று.. )

  26. இப்போது நடக்கும் சில, பலவற்றைப் பார்க்கும் போது எனக்கு தோன்றுவது –
    முன்னாளில் யார் அடக்கினார்களோ யார் அடங்கினார்களோ இன்று அடக்குவது அரசியல்வாதிகள் அடங்குவது(அடக்கப்படுவது) நாம்!
    மண், பொன், பெண் எதுவானாலும் முதல் உரிமை அரசியல்வாதிக்கே(ஆளுங்கட்சியாக இருந்தால் first among equals). நம்முடையது என்று எது இருந்தாலும்(நம் வீட்டுப் பெண்கள் உட்பட) அவர்களுக்கு வேண்டும் என்றால் கொடுத்து விடவேண்டும். இல்லா விட்டால் தூக்கிச் சென்று விடுவார்கள். கேட்க யார் இருக்கிறார்கள்?
    காவல் துறையும் அவர்களின் கைகூலியாக, நீதி மன்றமும் நிதி மன்றமாக, நாம் ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் நம்மை ஆள்பவர்களின் குணாதிசியங்களில் பெரிய வேறுபாடு இல்லாத நிலையில் நம்பிக்கை கொடுப்பதாக எதுதான் உள்ளது?
    சாதி நமக்குத் தேவையோ இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் தேவை நம்மைப் பிரித்தாள! at least பொது இடம் என்று வரும் போதாவது சாதியைப் பார்க்காமல் இருந்தால் நாம் உருப்படுவோம்.

  27. சத்தியபாமா,

    // திரு ஆர்வி அவர்களே, நீங்கள் பலதும் முழுமையாகவோ அசலிலிருந்தோ அல்லாமல் மேற்கொண்ட வாசிப்புகளின் அடிப்படையில் உங்களுடைய சொந்த அனுமானங்களின் பேரில் கருத்துச் சொல்வதாகத் தெரிகிறது. கர்ணன் என்பவனுக்கு ஜாதி எதுவும் பாரதத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அவன் ஒரு தேரோட்டியினால் வளர்க்கப் படுகிறான், அவ்வளவே. தேரோட்டி என்பதாக ஒரு சாதி எதுவும் அப்போதும் எப்போதும் இருக்கவுமில்லை. பின்னர் அவன் க்ஷத்திரியனாக அடையாளம் காட்டப்படுகிறான். மேலும் தேரோட்டியாகப் பணியாற்றுதல் இழிவானதாகக் கருதப்படவுமில்லை. //
    நீங்கள் மகாபாரதத்தை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். கர்ணன் சூதன் என்று மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. கர்ணனுக்கு ஜாதி நிர்ணயிக்கப்படவில்லை என்பது நகைப்புக்குரிய கருத்து. கர்ணனை க்ஷற்றியனாக ஏற்றுக்கொண்டவர்கள் துரியோதனாதிகள் மட்டுமே என்பது உங்களுக்கு தெரியாததாக இருக்க முடியாது. ஏன், கர்ணன் முதல் முறை அர்ஜுனனுக்கு சவால் விடும்போது கூட கர்ணன் தேரோட்டியால் வளர்க்கப்பட்டவன் என்று தெரிந்ததும் பீமன் அவனை எள்ளி நகையாடுகிறான், கிருபர் அர்ஜுனனை ஒரு க்ஷத்ரியன் மட்டுமே எதிர்க்க முடியும் என்று கூறுகிறார், அதனால்தானே அந்த இடத்திலேயே துரியோதனன் அவனை அங்க நாட்டு மன்னன் ஆக்குகிறான்? பாண்டவர்கள் மீண்டும் மீண்டும் கர்ணனை தேரோட்டி மகன் என்று இழிவாகத்தான் பேசுகிறார்கள்.

    // சுடலை மாடன் பல பிராமணக் குடும்பங்களுக்கு குல தெய்வமாகவே இருப்பதை ஆர் வி அறிய வேண்டும். //
    மாடன் பிராமணக் குடும்பங்களுக்கு (இந்த பிராமணர்கள் ஸ்வதர்ம பிராமணர்களா இல்லை பிறப்பால் பிராமணர்களா?) குல தெய்வமாக இருப்பதை எனக்கு சொன்னதற்கு மகிழ்ச்சி. ஆனால் நான் சொன்ன பாயின்ட் வேறு ஆயிற்றே? சுடலைமாடன் எனக்கு படையல் வைக்காவிட்டால் உனக்கு ஆப்பு என்று மிரட்டுபவர். ஆபிரகாமியக் கடவுளான ஜெஹோவாவுக்கும் இந்த பழி வாங்கும், மிரட்டும் குணம் உண்டு. இந்த குணம் உள்ள ஆபிரகாமியக் கடவுளுக்கு ஹிந்து மதத்தில் இடம் இல்லை என்று எழுதி இருந்தீர்களே, அப்போது இந்த குணங்கள் உள்ள சுடலைமாடன் “பிராமணக்” குடும்பங்களுக்கு குல தெய்வம் என்பதை மறந்துவிட்டீர்களா?

    // சாதியமைப்பு ஹிந்து சமுதாயத்தில் எப்போது நடைமுறைக்கு வந்தது என்று என் போன்ற சாமானிய அறிவு படைத்தவளிடம் கேட்டு என்ன பயன்? //
    எனக்குத் தெரியாது என்று இப்போது சொல்கிறீர்கள். முந்தைய பின்னூட்டத்தில் மகாபாரதத்துக்கு பிறகு இடைக்காலத்தில் வந்தது என்று அடித்து சொன்னீர்கள். எந்த ஸ்டேட்மெண்டை வைத்து மேலே பேசலாம்?

    // திரு ஆர் வி அவர்கள் சாராங் என்பவருக்கு அளித்துள்ள மறுமொழியில் ஹிந்து மதம் மாறியுள்ளது என்கிறார். ஆர்வி ஹிந்து சமூகத்தை மனதில் வைத்து ஹிந்து மததைப் பற்றி விமர்சிக்கிறார். ஆர்வியால் குறிப்பிடப் படுபவர்கள் ஹிந்து சமுகத்தில் நிலவிய ஏற்பாடுகளைத்தான் மாற்றி யமைக்க முற்பட்டனர். // சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் எல்லாம் சமூகத்தில் நிலவிய ஏற்பாடா? ராமகிருஷ்ணரும் விவேகானதரும் சமூகத்தை மாற்ற முயற்சித்தார்களா? நீங்கள் கொஞ்சம் யோசித்து எழுத வேண்டும்.

    // ஆர்வி அவர்களே, போர்களின்போது க்ஷத்ரியரான அரச குலத்தவர்கூடத் தேரோட்டியாக இருந்துள்ளனர். தேரோட்டுவதில் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்ததே காரணம். நான் க்ஷத்ரியன், எனவே தேரோட்டுவது எனக்கு இழுக்கு என எவரும் கருதியதில்லை! அவ்வளவு ஏன், நீங்கள் தேரோட்டி எனச் சுட்டிக் காட்டும் கர்ணனுக்கே பாரதப் போரில் சல்லியன் என்கிற க்ஷத்திரிய அரசன்தான் தேரோட்டி யிருக்கிறான்! //
    நீங்கள் மகாபாரதத்தை மீண்டும் படித்தே ஆக வேண்டும். சல்லியன் “தேரோட்டி மகன்”, சூதன் கர்ணனுக்கு தேரோட்ட மறுத்ததும், துரியோதனன் படாத பாடு பட்டு அவனை சம்மதிக்க வைத்ததும் தெரிய வரும்.

    // நான் மேரி மாதா முன் மண்டியிட்டால் என்னை ஹிந்து மதத்தைவிட்டு விலக்கிவிடுவீர்களா, ஹிந்துக்கள் வேளாங்கன்னிக்குப் போனால், நாகூர் தர்காவுக்குப் போனால் அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? என்றெல்லாம் வேறு திரு ஆர் வி அவர்கள் என்னிடம் கேட்கிறார். எதுவும் செய்யப்போவதில்லை. // ஆபிரகாமியக் கடவுளுக்கு ஹிந்து மதத்தில் இடமில்லை என்றும் அடிக்கிறீர்கள். இடமில்லை என்றால் வேளாங்கண்ணிக்குப் போகும் ஹிந்துக்கள் நிலை என்ன என்று கேட்டேன். இப்படியும் சொல்கிறீர்கள். எந்த ஸ்டேட்மெண்டை வைத்து மேலே பேசுவது?

    கீதையை உபதேசித்தவனும் சரி, கேட்டவனும் சரி, மகாபாரத “காலத்தில்” இருந்த மற்றவர்களும் சரி, பிறப்பையே வர்ணாசிரமத்தின் ஆதாரமாக வைத்து நடந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் கீதையில் ஸ்வதர்மம் என்று சொல்லி இருப்பது அவர்களுக்கே வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே. மீண்டும் என் ஒரிஜினல் ஸ்டேட்மெண்டை நினைவுபடுத்துகிறேன் – “உங்கள் கருத்துக்கு மாறாக ஜாதீயம் என்பது “கிளாசிகல்” இந்து மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்று நான் கருதுகிறேன்.”

    கார்கில்,
    // தமிழ் ஹிந்து என்று பெயர் இருப்பதால் அல்லது இந்த தமிழ்ஹிண்டு.காம் தளத்தால் நேபாளி ஹிந்துகளின் கதி என்ன அவ்வளவு மோசமாகிவிட்டது?// நான் அப்படி சொல்லவில்லையே? நேபாளி ஹிந்துக்களைப் பற்றி நீங்கள் அல்லவா பிரஸ்தாபிககிறீர்கள் ?

    // If You are really serious of what were you saying, please recreate this site in English. All of us will help and serve. // தமிழ் ஹிந்து தளத்தின் paranoia எனக்கு இசைவானதில்லை. சில முத்துக்கள் வருவதுண்டு – அவற்றை மொழிபெயர்க்க துணை வேண்டுமானால் புரிய முடியும்.

  28. RVஅவர்களே நீங்கள் வியாசரின் மகாபாரதத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? அல்லது அதன் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டா?

  29. armchaircritic , எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதனால் வியாச மகாபாரதம் என்றாலும் சரி, வேறு எது என்றாலும் சரி, மொழிபெயர்ப்பில்தான் படித்தாக வேண்டும். சில பல மொழிபெயர்ப்புகளை படித்திருக்கிறேன். மகாபாரதத்தின் மீது ஒரு பித்தே உண்டு.

  30. கட்டுரைக்கான மறுமொழிப் பகுதியான இதனை ஒரு கலந்துரையாடலாகப் பயன்படுத்த நேர்ந்தமைக்கு மன்னிக்க வேண்டும். கேட்கப்படும் வினாக் களுக்கு விடை சொல்லியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

    திரு ஆர் வி அவர்களுக்கு எனது கூடுமானவரையில் சுருக்கமான பதில்:
    1. சூத என்கிற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் தேரோட்டி, தேரை உருவாக்கு பவன், சூரியன் என்றெல்லாம் பொருள். அது ஒரு தனி ஜாதியாகச் சொல்லப்படவில்லை. வேண்டுமானால் தச்சர் என்று ஒரு விரிவான பிரிவில் அதனை அடக்கலாம். ஆனால் அது ஒரு இழிவான ஜாதியாகக் கருதப்படவில்லை. மேலும், மஹாபாரத காலத்தில் ஜாதியமைப்பு கட்ட மைக்கப்படவில்லை.
    2. ஜாதியமைப்பின் தோற்றம் குறித்து, மஹா பாரத காலத்திற்குப் பிறகான இடைக்காலம் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்த பின்னும் திரு ஆர் வி எப்போதிலிருந்து என்று குறிப்பிட்டுக் கேட்டதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ஆழ்ந்த ஆய்வு தேவை என்பதால் என் போன்ற சாமானிய அறிவுள்ளவளால் கூறவியலாது என்றேன். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இது சம்பந்தமான ஆய்வு முற்றுப்பெறவில்லை..

    3. திரு ஆர் வி யின் வாதத்திலேயே அவருக்கு விடையும் உள்ளது. அங்க தேசத்து மன்னனாக முடி சூட்டப் பட்டு விட்டதுமே கர்ணன் க்ஷத்திரியனாக வர்ணமாற்றம் பெற முடிந்தது எதனால்? கர்ணன் ஒருவேளை ‘தச்சன்’ என்ற பிரிவில் உள்ளவன் எனில் அவனால் அவ்வளவு எளிதாக க்ஷத்திரிய னாக முடிந்தது எப்படி? வர்ணம் பிறவியின் அடிப்படையில் வருவதல்ல என்பதால்தான். விரோதம் காரணமாக பாப்பாரப் பயலே என்று ஒருவர் ஒரு பிராமணரைத் திட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதனால் சமுதாய அமைப்பில் பிராமண ஜாதி இழிவானது என்று அர்த்தமாகிவிடுமா? கர்ணனைப் பிறர் சூதன் என்று திட்டுவதை இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சல்லியன் பாண்டவர்களுக்குப் பாட்டன் முறை. தவறுதலாக அவன் கெளரவர் சார்பில் நிற்க வேண்டியதாயிற்று. வித்தையில் கர்ணன் அர்ஜுனனுக்குச் சரி சமமானவன் என்பதால் அவனுக்குத் தேரோட்டுவதை தவிர்க்கும் பொருட்டே போர்க்களத்தில் தேரோட்டும் வித்தையில் தேர்ந்த சல்லியன் கர்ணனை இழித்தும் பழித்தும் பேசுகிறான், அவனுக்குத் தேரோட்ட மறுக்கிறான். அடஹ்ற்கு ஒரு சாக்கும் சொல்கிறான். சமயத்தில் கர்ணன் காலை வாரவும் செய்கிறான்.
    4. இன்றைய காலகட்டத்தில் பிறப்பால் உள்ள பிராமணர்தான் பிராமணராகக் கொள்ளப்படுகின்றனர். பிராமணக் குடும்பங்கள் பலவற்றுக்கு நாட்டார் தெய்வங்கள் குல தெய்வங்களாக உள்ளன. இந்த தெய்வங்களின் பெயரால் உயிர்ப் பலி கேட்பதும், அருள் வாக்கு சொல்லி உத்தரவுகள் போடுவதும் மக்களின் தெய்வ நம்பிக்கையைப் படுத்திக் கொண்டு பூசாரிகளும், சாமியாடிகளும் மேற்கொள்ளும் வழக்கம். இதனை ஹிந்து சமயக் கோட்பாடு என்று கருதுவது சரியல்ல.
    5. மஹா பாரத காலத்தில் வர்ணம் என்பது பிறப்பால் வரும் ஜாதியாக அனுசரிக்கப்படவில்லை. கீதாசாரியனும் வர்ணத்தை ஜாதி என்கிற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. தயவு செய்து முன் கூட்டியே ஒரு முடிவை எடுத்துக் கொள்ளாமலும், விவாதத்தில் வெற்றி பேற வேண்டுமே என்ற கவலையைத் தவிர்த்தும் பாரதத்தையும் கீதையையும் படிக்கவும்.
    6. சங்கரர், மத்வர், ராமானுஜர் ஆகியோர் பாஷ்யக்காரர்கள். வேதங்களுக்கு அவரவர் கண்ணோட்டப்படி உரை கண்டவர்கள். வேத காலத்தில் நிலவிய சமுதாய அமைப்பை வேத வாக்கியங்களில் கண்ட விவரங்களின் அடிப்படையில் பரிந்துரைத்தனர். பிற்காலத்தில் சுவாமி தயானந்த ஸரஸ்வதியும் இதையே ஒரு வலிமையான இயக்கக் கொள்கையாகச் செய்தார்.

    7. வேளாங்கண்ணிக்கோ நாகூர்ர தர்காவுக்கோ போகும் ஹிந்துக்களின் நிலையை அவர்கள் தம் மதம் தரும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் எனக் கொள்ளலம். ஆனல் அதற்காக அவர்களை விலக்கி வைப்பதற்கு மாறாக நல்லறிவு புகட்ட வேண்டும். தமிழ் ஹிந்து செய்யும் பணி ஒருவகையில் இதுவே.

  31. திரு ஆர் வி அவர்களே, பழனியாண்டவருக்கு, திருப்பதி வெங்கடாசலபதிக்கு என்றெல்லாம் மொட்டை போட்டுக்கொள்கிறார்கள். சிலர் மிகவும் குரூர மான முறையில் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். ஒரு கோயிலில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கிறார். அது ஒரு வழிபாட்டு முறையாகிவிட்டது. கடவுளைப் ப்ரீதி செய்யத் தன்னைத் துன்புறுத்திக் கொள்ளும் மனோபாவம் உலகில் எல்லா மானிடக் குழுக்களிலும் உள்ள்துதான். பிலிப்பைன்ஸில் ஏசு கிறிஸ்துவுக்காகத் தன்னைச் சிலுவையில் அறைந்துகொள்கிறார்கள். மொஹரத்தின்போது ஷியாக்கள் மார்பிலும் முதுகிலும் அடித்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஊர்வலம் போகிறார்கள். இவையெல்லாம் சமயம் விதித்துள்ள கோட்பாடுகளாகிவிடுமா? நமது கிராம தேவதைகளும் நாட்டார் தெய்வங்களும் கடந்த காலத்தில் சமுதாய அல்லது தான் சார்ந்த குழுவின் நலன் கருதி உயிர்த் தியாகம் செய்து தெய்வ நிலைக்கு சமபந்தப்பட்ட மக்களால் உயர்த்தப்பட்டவர்களே. காலப் போக்கில் அவர்கள் சிவனுடனும், சக்தியுடனும் அடையாளப்படுத்தப்பட்டு அனைவராலும் வணங்கப் படலானார்கள். ஹிந்து சமயம் ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட மதம் அல்ல வாதலால் இவை சகஜமாக ஏற்கப்படுகின்றன. உடனே இதுதான் ஹிந்து மதம் என்றுவிடுவதா? இதுவும் ஹிந்து மதம் ஆட்சேபிக்காத அம்சம் என்று கொள்ளலாம். அதற்காக வேளாங்கண்ணியையும் நாகூர் ஆண்டவரையும் அதேபோல் ஹிந்து மதம் ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதா? குதிரைக்கு குர்ரம் என்பதால் யானைக்கு ய்ர்ரம் என்று சொல்லித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமா?

  32. இன்று சமஸ்க்ருதம் கற்பதில் தீவிர முனைப்பு உலகெங்கிலும் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பள்ளிகளில் சமஸ்க்ருதம் மொழிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது. ஆனால் அந்த மொழியின் மீது பாத்தியதை உள்ள நாம் சமஸ்க்ருதம் தெரியாது என்று சொல்லும் நிலையில் உள்ளோம். என்ன செய்வது, முறைப்படி சமஸ்க்ருதம் கற்கும் வாய்ப்பு நம் பள்ளிகளில் இல்லை. எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம் என்பதற்காக அதனைப் படிக்கும் பள்ளி மாணவர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அதைக் கற்பிக்கும் தரமும், பாடத்திட்டப் பகுதியும் உள்ளன.
    சமஸ்க்ருதம் எல்லாப் பிராந்தியங்களையும் சேர்ந்த அறிஞர்கள் தமக்குள் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கான பொது மொழியாகவே இருந்துள்ளது. உண்மையில் தென்னாட்டவ்ர்தான் அதில் மிகவும் தேர்ச்சிபெற்றவர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களில் பிராமணர் அல்லாதாரும் உண்டு. எனவே அதனை பிராமணர்களின் ஏக போக உரிமையென விட்டுக் கொடுப்பது பேதமை என்ற கருத்தில் அறிஞர் மலர் மன்னன் அவர்கள் ஒரு கட்டுரையில் எழுதியுளார்கள். மேலும் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய, எல்லாப் பகுதியினராலும் வளப்படுத்தப்பட்ட சமஸ்க்ருதத்தை வட மொழி என்று குறிப்பிடுவதே தவறு என்றும் அறிஞர் மலர்மன்னன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். வியாஸ பாரதமும் வால்மீகி ராமாயணமும் சமஸ்க்ருததில் உள்ளவை என்றாலும் அவற்றிலேயே பல பிரதிகள் பல இடங்களில் வித்தியாசப்படுகின்றன. இடைச் செருகல்கள் ஏராளமாக உள்ளன. மொழித் தேர்ச்சி மிக்கவர்களால்தான் அசல் வரிகள் இன்ன்வை என்று இனங்காண முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சமஸ்க்ருதத்தில் உள்ள கிரந்தங்களை மொழிபெயர்ப்பில் வாசிக்க வேண்டியிருப்பது சங்கடம்தான். அஹோபில மடத்தில் வியாஸ பாரதத்தை முழுமையாக மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதனை ஏற்கலாம். எல்லா மொழிகளிலுமே ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது இயற்கை. சமஸ்க்ருதத்தில் இது கூடுதலாகவே உள்ளது. இது இன்னொரு பிரச்சினை. மொழி பெயர்ப் பாளருக்கு மொழியில் புலமை இருந்தால் மட்டும் போதாது. பொது அறிவும், பொருத்தம் காணும் சிந்தனைத் திறமும் அவசியம். எனவே மொழி பெயர்ப்பில் படித்தறிவது என்பது இரண்டாம் பட்சம்தான். என்ன செய்வது, வேறு வழியும் இல்லை. சமஸ்க்ருதம் நிஜத்தில் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய மொழிதான். அஞ்சவேண்டியதில்லை. மேலும் இந்திய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகவும் சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம். காரணம் நமது பேச்சுமொழியிலேயே அது அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. சமஸ்க்ருதத்தை பேச்சுமொழி யாகக் கற்றுக் கொடுக்கும் இயக்கம் சிறப்பாக நடைபெறுவருகிறது. அதில் பயில்பவர்கள் வெகு சீக்கிரமே மிகவும் சரளமாக சமஸ்க்ருதத்தில் பேசத் தொடங்கி விடுகிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

  33. சத்யபாமா,

    என் வாதங்களை நீங்கள் ஏற்கலாம் இல்லை மறுக்கலாம். அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் கர்ணனுக்கு வர்ண மாற்றம் நிகழ்ந்தது என்று என் வாதத்திலேயே இருக்கிறது என்று திரிக்கும்போது மேலே பேச எதுவும் இல்லை. அங்க நாட்டு மன்னன் ஆன பிறகும் பாண்டவர்கள் மீண்டும் மீண்டும் அவனை தேரோட்டி மகன் என்றும் சூதன் என்றும் இழிவுபடுத்துகிறார்கள் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் கர்ணனுக்கு வர்ண மாற்றம் நிகழ்ந்தது என்று நானே சொல்கிறேன் என்று எழுதுகிறீர்கள்! இதற்கு மேலும் “விவாதிக்க” என்னால் முடியாது.

  34. //அங்க நாட்டு மன்னன் ஆன பிறகும் பாண்டவர்கள் மீண்டும் மீண்டும் அவனை தேரோட்டி மகன் என்றும் சூதன் என்றும் இழிவுபடுத்துகிறார்கள் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் கர்ணனுக்கு வர்ண மாற்றம் நிகழ்ந்தது என்று நானே சொல்கிறேனென்று எழுதுகிறீர்கள்!இதற்குமேலும் “விவாதிக்க” என்னால் முடியாது.- திரு ஆர். வி.//

    கர்ணன் அங்க தேச மன்னனாக முடி சூட்டுவிக்கப்பட்டதை நீங்கள் குறிப்பிட்டதால் வர்ண மாற்றம் சாத்தியம் என்ற உண்மை உங்கள் வாசகத்திலேயே இருப்பதாக உங்கள் வாதத்திற்கான விடை உங்கள் வாசகத்திலேயே உள்ளது என்று தெரிவித்தேன். அல்லாமல், வர்ண மாற்றம் நிகழ்ந்தது என்று நீங்கள் சொல்வதாக நான் எங்கே எழுதி யிருக்கிறேன்? போகிற போக்கைப் பார்த்தால் நீங்களே வர்ண மாற்றம் நிகழவில்லை என்று சாதிப்பதற்காகக் கர்ணனை சூதன்தான் என்று சாதிப்பீர்கள் போலிருக்கிறதே! உண்மையில் கர்ணன் சூரிய புத்திரன். சூரியன் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் அம்சம். அவனுடைய புத்திரனாகும் பாக்கியம் பெற்றவன் க்ஷத்த்ரியனுக்கும் மேம்பட்டவன்தான்!

    பகைமை காரணமாகப் பாண்டவர்களும், அர்ஜுனன் மீதான பாசம் காரணமாகப் பிறந்த வெறுப்பில் துரோணரும், கிருபரும், பேரப் பிள்ளகளான பாண்டவர்கள் சார்பில் போராட முடியாமல் போனதோடு, அவர்களுக்கு எதிராகப் போராடும் வில்லாளி கர்ணனுக்கு உதவ அவனது தேரையே ஓட்ட நேர்ந்துவிட்டதே என்ற எரிச்சலில் சல்லியனும் சூதன் என்று கர்ணனை இகழ்வதை, ஆத்திரத்தில் வரும் வெறும் ஏச்சைத்தான் சான்றாகக் கொள்வேன், திருதராஷ்டிரர் உள்ளிட்ட சகலரும், அங்க தேச மந்திரி பிரதானியரும், அரசவைப் புரோகிதரும், மக்களும், அவனை க்ஷத்திரியனாக ஏற்றதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்வது வாதம் அல்ல, பிடிவாதம்! வாதம் எனில் விவாதிக்கலாம். பிடிவாதம் எனில் நானும் பின் வாஙக்த்தான் வேண்டும்! நீங்கள் என்னைவிட வயதில் பெரியவராக இருக்கக் கூடும் என அனுமானிக்கிறேன். என் கருத்துகள் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அருள் கூர்ந்து மன்னியுங்கள்.

    நம் காலத்திலேயே சிவாஜி மஹராஜ் தாழ்ந்த சாதியில் பிறந்திருந்தும் அரியணை ஏறி முடி சூட்டிக்கொள்ள் முடிந்தது. வைதிக பிராமணர்கள் அவரை க்ஷத்திரியராக ஏற்க முதலில் மறுத்து, பின்னர் பரிகாரம் என்ற சாக்கில் ஏராளமாக த்ட்சிணை கிடைக்கும் என்று தெரிய வந்ததும் சத்ரபதியாக அவருக்கு முடி சூட்ட முன் வந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இது நம் காலத்தில் நிகழ்ந்த வர்ண மாற்றம். பின்னணி எதுவாயினும் வைதீகத் தரப்பு இறுதியில் நம் கண்ணின் மணியாம் சத்ரபதி சிவாஜி மஹராஜை க்ஷத்திரியராக ஒப்புக்கொள்ளத்தானே செய்தது?
    ஸத்தியபாமா

  35. ஒரு விஷயம் சொல்ல மறந்தேன்.
    துரியன் கர்ணனை அங்க தேச மன்னனாக முடி சூட்ட முன் வந்தபோது அவன் சூதன், ஆகையால் மணிமுடி தரிக்கத் தகுதியற்றவன், மணிமுடி தரிப்பதாலேயே அவன் க்ஷத்திரியனாகிவிடவும் முடியாது என்கிற ஆட்சேபம் எழுந்ததா? முக்கியமாக பிஷ்மரோ, பேரரசன் திரிதராஷ்டிரனோ துரியன் முடிவை ஏற்க மறுத்து வர்ண மாற்றம் சாத்தியமில்லை, கர்ணன் அங்க தேச மன்னனானாலும் க்ஷத்திரியனாகிவிட முடியாது என்று கண்டனம் எழுந்ததா? அவ்வாறு ஏதும் நடந்து கர்ணன் முடி சூடுவது முதலில் தடைப் பட்டிருந்தால், துரியோதனனின் பிடிவாதத்தின் பேரிலேயே பின்னர் கர்ணன் அங்க தேச மன்னன் என்கிற தகுதியின் அடிப்படையில் க்ஷத்திரியனாக வர்ண மாற்றம் பெறும் உரிமையைப் பெற்றிருந்தால் அப்போது திரு ஆர் வி அவர்களின் வாதம் சரியாக இருக்கும் (கர்ணன் அங்க தேச மன்னன் ஆன பிறகும் சூதன் என்று சிலர் அவனைத் தொடர்ந்து இகழ்ந்து வந்ததால் அல்ல). அபோது என் வாதம் தவறாகிவிடும். நாம் வேண்டுவது உண்மையைத்தான். யார் பக்கம் ஜெயம் என்பதல்ல.

    இந்த விஷயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கக் காரணம், கர்ணன் விவகாரத்தை இங்கு திரு ஆர் வி பிரஸ்தாபித்ததால் மட்டுமல்ல, மஹா பாரத காலத்தில் சாதியமைப்பு கட்டமைக்கப்படவில்லை, வர்ண மாற்றம் அப்போது சாத்தியமாக இருந்தது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகவே இருக்கும் எனப்துதான்.

    தற்சமயம் (தற்சமயம்தான்!) என்னிடம் வியாஸ பாரதம் கைவசம் இல்லை. இதுபற்றி எவரேனும் தகவல் அளித்தால் உபயோகமாயிருக்கும்.

    ஸத்தியபாமா

  36. எங்கள் தளத்தில் வந்த ஒரு மறுமொழி:
    https://koottanchoru.wordpress.com/2010/03/17/துரோணாச்சாரியார்-பிராமண/

    மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் பேச்சுகள், எழுத்துகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” புத்தகத்திலிருந்து:

    (தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – தொகுப்பாசிரியர் ரா. கணபதி)

    பரசுராமர், துரோணாச்சாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே; தர்ம புத்ரர் க்ஷத்ரியராயினும் பிராம்மண குணத்தோடு இருந்தாரே; விஸ்வாமித்திரர் புஜ பல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால் — இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exception கள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் ‘எக்ஸப்ஷன்’ உண்டோ இல்லியோ ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்தபோது கூட உள்ளுரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்பிராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத் தெரிகிறது.

    இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படிச் சொல்கிறார்:

    “கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்றுதான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை.) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”

    (“The Gita does talk of Varna being according to Guna and Karma, but Guna and Karma are inherited by birth” )

  37. முதலில் ஒரு விஷயம் நாம் தெளிவுற வேண்டும் – ஒருவனின் வர்ணம் கூட முதலில் பிறப்பாலேயே நிர்ணயிக்கப் படுகிறது – ஓர் பிராம்மண தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கிறது, அந்த குழந்தையை என்ன என்று சொல்வீர்கள் வர்ணம் இல்லாத குழந்தை என்றா? – பிராமன தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை அந்த வர்ணத்தையே பிறப்பால் அடைகிறது – நிற்க – இந்த பிறப்பால் ஏற்படும் நிர்ணயத்தையும் கடந்து வேறு வர்ணத்தை ஏற்றுக்கொள்ளும் flexibility உள்ளது தான் வர்ணாஸ்ரம தர்மம் – இதன் படி தான் பிறப்பால் வைஷ்யனாக பிறந்தும், தேவையான லக்ஷணங்கள் இருந்தால் க்ஷற்றியனாகவோ, ப்ராம்மனனாகவோ ஆகலாம். அர்ஜுனன் ஏன் க்ஷத்ரியன் – ஒன்று பிறப்பால் அவன் க்ஷத்ரியன் – இறந்து அந்த லக்ஷணங்களை வளர்த்துக்கொண்டு இருந்ததாலும் அவன் க்ஷத்ரியன்

    அர்ஜுனன் நான் எனது வர்ணத்தை விட்டு விட்டு துறவு மேற்கொள்கிறேன் என்று கண்ணனிடம் கூற [மேலும் உயர்ந்ததான ஞான மார்க்கம் இருக்க, கர்ம மார்கத்தை எனக்கு ஏன் போடிக்கிறாய் என்று கேட்கிறான்] – அதற்க்கு கண்ணன் கூறும் பதில் கீதை மூன்றாம் அத்தியாயத்தில் உள்ளது – கண்ணன் அர்ஜுனனிடம் உனக்கு சன்யாச லக்ஷணங்கள் இல்லை என்றே சொல்கிறான். ஆதி சங்கரர் இதற்க்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார் ஒன்று அர்ஜுனன் இதற்க்கு அதிகாரி இல்லை இரண்டு, அர்ஜுனன் க்ஷத்ரியன், அப்படி இருந்து கொண்டு சன்யாசம் வாங்க இயலாது

  38. வர்ணாசிரம தர்மம குறித்து கீதையின் அடிப்படையில் காந்திஜி மேற்கண்டவாறு சொன்ன கருத்தை டாக்டர் அம்பேத்கர் வன்மையாகக் கண்டித்து, வர்ணம் குணத்தால் அமைவதேயன்றிப் பிறப்பால் அல்ல என்றுதான் கீதை உறுதிபடச் சொல்கிறது எனக் கூறுகிறார். காந்திஜி பற்றிய அவரது நூலில் இக்கருத்து உள்ளது. டாக்டர் அம்பேத்கர் ஆன் கந்திஜி என்று தேடினால் கிடைக்கக் கூடும். இச்ச்சிறு நூல் காந்திஜி பற்றி அம்பேத்கர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகும். காந்திஜி பழமைவாதிகளின் கருத்தையே இந்த விஷயத்தில் பிரதிபலிக்கிறார், இதற்கு காந்தி தேவையில்லை என்கிறார், அம்பேத்கர்.

    வணக்கத்திற்குரிய காஞ்சி பரமாசாரியார் ஒரு மடாதிபதி என்ற முறையில் தாம் பொறுப்பு வகித்த மடத்தின் சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்க வேண்டியவராக இருந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  39. திரு சாரங் அவர்கள் கருத்து குறித்து:

    பிறந்த குழந்தை எந்த் வர்ணத்தையும் சார்ந்ததல்ல என்பதால்தான் இரு பிறப்பு என்ற கருத்தாக்கம் எழுந்த்து. ( பிராமண தம்பதியருக்குப் பிறந்துவிட்டதாலேயே குழந்தை பிராமணனாகிவிடுவதில்லை).துவிஜர் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உரியதேயாகும்.அனைவருமே இருபிறப்பாளர்தான் என்பதைக் குறிக்க ஆரிய சமாஜத்தில் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் முப்புரிநூல் அணிவிக்கப்படுகிறது. வர்ண அமைப்பு இன்னதென்று நிச்சயமாகாது எவ்வித் வ்ர்ணச் சார்புமின்றிப் பிறக்கும் குழந்தை அதன் பிறகு சிறிது வளர்ந்தபின் இன்ன வர்ணம் என்று அனுமானத்தின்படி முப்புரி நூல் அனிவிப்பின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. காலப் போக்கில் இது வெறும் சடங்காகிப் போனது. முப்புரி நூல் அணிதல் பிராமணருக்கு மட்டுமின்றிப் பல்வேறு சாதியினருக்கும் உரித்தானதாகவே இருந்தது. முப்புரிநூல் அணிவிப்பு வர்ண விவரணக் குறியீடேயாகும்.

  40. சத்தியபாமா அவர்களே

    இரு பிறப்பு என்பது தானாக ஏற்படுவது இல்லை – அது பிறப்பில் ஏற்படும் வர்ணத்தை ஊர்ஜிதப் படுத்தவே – அப்படி இல்லை என்றால் – குழந்தை நன்கு வளர்ந்த பின்பு தானாகவே முடிவு செய்து – எனக்கு பிராமணன் ஆவதே சரி அதாலால் நான் முப்பிரி நூல் அணிய வேண்டும் என்று அணிவதில்லை – எப்படி நாமகர்ம, ஆயுஷ் ஹோமம் ஒரு கர்மாவோ அப்படியே உபநயனமும் நடக்கிறது – முன் காலத்தில் இருந்தே இப்படிதான். எது எப்படி இருப்பினும் பண்டை காலத்தில் இருந்தே வர்ண தர்மம் என்பது flexibility வழங்குவதற்காக தான் இருந்தது – அதாவது பிறப்பால் ஒருவன் என்ன வர்ணமாயினும், அவன் அவனுக்கு எது லக்ஷனமாக அமையுமோ அதையே வர்ணமாக பிறகு ஏற்கலாம் என்பதுவே அது – வர்ணம் என்பது குணத்தை பொறுத்து absolutely preferential மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் மரபணு தத்துவமே அடிபட்டு போகும்

  41. (“The Gita does talk of Varna being according to Guna and Karma, but Guna and Karma are inherited by birth” )

    “inherited by birth” என்பது சிலர் ( பரமாசாரியார், காந்திஜி போன்றோர்) அனுமானத்தால் சொல்லப்படுவது. கீதையின் நாயகர் சொல்லாதது. மனு ஸ்மிருதியும் இவ்விஷயத்தில் மிகவும் தெளிவாகவே உள்ளது.
    ”சூத்ரோ ப்ராஹ்மணதாம் ஏதி, ப்ராஹ்மணஷ்சைதி சூத்ரதாம் க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைஷ்யந்தவைத (மனு ஸ்மிருதி அத். 1 சூத்திரம் 65)”
    இதன் பொருள்: பண்பு அல்லது நாட்டம்கொண்டு தேர்ந்துகொண்ட தொழில் தகுதியின் அடிப்படையில் பிராமணர் சூத்திரனாகிறார், சூத்திரர் பிராமணன் ஆகிறார். இதே போன்று க்ஷத்திரியர், வைசியரிலும் வ்ர்ண மாற்றத்திற்கு வாய்ப்பு உண்டு.
    இவ்வாறு மிகத் தெளிவாகவே மனு ஸ்மிருதி சொல்கையில் விதி விலக்காக வர்ண மாற்றம் நிகழலாம் என்று சொல்வது பொருந்துமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

  42. //1. இரு பிறப்பு என்பது தானாக ஏற்படுவது இல்லை

    2. வர்ணம் என்பது குணத்தை பொறுத்து absolutely preferential மட்டுமே
    என்று எடுத்துக்கொண்டால் மரபணு தத்துவமே அடிபட்டு போகும். –
    சாரங்//

    1. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் வ்ர்ணம் ஏதுமின்றித்தான் பிறக்கின்றன என்று மனுஸ்மிருதியும் இன்னபிற ஸ்மிருதிகளும் ஏன், ஸ்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது. இதைப் பிரமாணமாக வைத்துத்தான் மகான் ராமானுஜரும் அனைவருக்கும் முப்புரி நூல் அணிவித்தார். முப்புரிநூல் அணிவிப்பு காலப் போக்கில் வெறும் சடங்காகிப் போனது என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவர் சொல்வதும் இதை முன்னிட்டுத்தான். திருவள்ளுவர் மனு ஸ்மிருதியை ஒட்டியே தமது குறட் பாக்களை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஹிந்துவின் தாரக மந்திரமாகக் குறிப்பிடப்படும் தமிழரின் தாய் மதம் ஹிந்து மதம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். வள்ளுவர் வழி எனப்து ஹிந்து சமய வழியே ஆகும்.
    துவிஜன் என்பது மிகுந்த பொருள் ஆழம் மிக்க பதப் பிரயோகம் ஆகும். பிற அமசங்களைப் போல இதுவும் வெறும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் ஆகிப் போனது துரதிருஷ்டமே.

    2. குணம் என்பதற்கு ஒரு பொருள் அல்ல, பல பொருள்கள் உள்ளன. உண்மையில் மரபணு தத்துவத்திற்கு முற்றிலும் ஆதாரமாகத்தான் நமது வர்ணாசிரமத் தத்துவம் உள்ளது. ஒரே தாய்-தகப்பனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் குணவிசேஷம், ரசனை, உடலமைப்பு, உடல் நலம் ஆகியவற்றில் வெவ்வேறு விதமாக அமைவதையொட்டியே வர்ணாசிரம தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. மரபணு தத்துவத்திற்கு இது முரண் அல்ல.

  43. ந்மது சமுதாயத்தில் வர்ணாசிரமப் பிரிவு எப்போது முதல் அமுலுக்கு வந்தது என ஆராய்வது கோழியா முட்டையா எது முதலில் என்கிற யோசனையில்தான் முடியும். தொடக்க கால வேத கால சமுதாயத்தில் ய்ர்ருகுக்கு எதில் ஈடுபாடோ அத்னைத் தாமே தேர்ந்துகொண்டு அவரவரும் தொடக்கத்தில் கட்டுப்பாடு ஏதுமின்றி வாழ்ககையை அமைத்துக் கொள்ள, பின்னர் வழிவழியாக வர்ணாசிரமம் அமைந்திருக்க வேண்டும். அதனால்தான் ஒரு வர்ணத்தைச் சேர்ந்த பெற்றோர் என்ற நிலை உருவாகி அதன் பிறகு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை பற்றிய வர்ண நிர்ணயம் வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.

  44. // Sarang
    16 April 2010 at 5:55 pm

    அதாவது பிறப்பால் ஒருவன் என்ன வர்ணமாயினும், அவன் அவனுக்கு எது லக்ஷனமாக அமையுமோ அதையே வர்ணமாக பிறகு ஏற்கலாம் என்பதுவே அது – வர்ணம் என்பது குணத்தை பொறுத்து absolutely preferential மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் மரபணு தத்துவமே அடிபட்டு போகும் //

    சாரங்க், இங்கு எதற்கு அனாவசியமாக மரபணுக்களை கொண்டுவருகிறீர்கள்? வர்ண முறை என்பது முழுக்க முழுக்க ஒரு *சமூக* அமைப்பு. அதை உருவாக்கியபோதும் சரி, பிறகு பிறப்பு அடிப்படையில் ஆன சாதிகள் வந்தபோதும் சரி மரபணு அறிவியல் பற்றியோ genetics பற்றியோ எந்த அறிவியல்பூர்வமான அறிவுத் துறையும் இருக்கவில்லை.

    நீங்கள் பிறப்பு அடிப்படையில் தான் குணம்/வர்ணம்/சாதி வருகிறது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு பிறகு அதற்கு ஜீன்களில் ஆதாரம் இருக்கிறது என்று கூறவருவது போல தெரிகிறது. அது முற்றிலும் தவறு. They are totally orthogonal to each other. It will be absurd to give pesudo scietific explanations to uphold birth based superiority / racism / caste system. Things like eugenics have been proven false and proven as motivated racist theories posing as science.

    இன்று genetics பிரம்மாண்டமான அளவில் வளர்ந்திருக்கிறது.. Nature vs nurture விவாதம் புதிய திசைகளை எட்டியுள்ளது.. உடல் சம்பந்தமான குணக்கூறுகளைத் தவிர்த்து பெற்றோர்களது அனுபவங்கள், திறன்கள், அறிவு போன்ற விஷயங்கள் பிள்ளைகளுக்கு மரபணு மூலமாகக் கடத்தப் படுவது என்பது அறிவியல் பூர்வமாக சாத்தியமில்லை. அத்தகைய ஊகங்கள் மரபணுத் துறையில் காலாவதியாகிப் போன விஷயம் (க்ரெகர் மெண்டல், லாமார்க் காலத்திய ஜெனடிக்ஸ் அது).

    சூழல் மூலம் மட்டுமே பெற்றோர்களது திறன்கள் குழந்தைகளுக்கு வந்து சேர்கின்றன.. கர்னாடக சங்கீத வித்வான் பையனும் சங்கீதம் பாடுவது அப்படித் தான்… அதில் மரபணு சமாசாரம் எதுவும் கிடையாது.

  45. ஜடாயு அவர்களே

    நான் ஜாதித்வத்தை ஆதரித்து கூறவில்லை – வர்ணாச்ரமம் என்பது முற்றிலுமாக ஒரு ஸ்வதந்திர ஏற்பாடு மட்டுமே என்பதில் தான் எனக்கு வேறுபாடு உள்ளது – அதாவது ஒருவன் தானே (ச்வதந்திரமாக) அதை தீர்மானித்து அதை ஏற்கிறான் என்பதற்கு பெருவாரியாக சித்தாந்தம் கிடையாது – விஷய குளத்தில் பிறந்த பெரும் பாலரும், பிராம்மண குளத்தில் பிறந்த பெரும் பாலரும் பிறந்த குலத்தையே தங்களது வர்ணமாகவும் கொண்டனர் – வெகு சிலரே ஒரு குளத்தில் பிறந்து வேறு வர்ணத்தை ஏற்றுள்ளனர் – இதன் காரணமாகவே வர்ணாஸ்ரம தர்மம் என்பது ஒரு preferential கான்செப்ட், அதாவது தேவை என்றால், லக்ஷணம் இருந்தால் மாறிக் கொள்ளலாம் என்பதாகவே இருந்து வந்துள்ளது – இதை தான் சுட்டிக் காட்டினேன். அது preferential இல்லாவிடில், நுழைவு தேர்வு வைத்துதான் முடிவு செய்தாகவேண்டி வரும் – நாம் மரபணுவை விட்டு விடுவோம் – அதற்க்கு ஆதாரமும் இருக்கிறது, மறுப்பும் இருக்கிறது – ஒரு குழந்தை வளரும் பொது (இன்னும் சூழலில் தாக்கம் ஏற்பட்டு இருக்காத பொது) அதன் பல குணங்கள் அப்படியே பெர்ரோறரை அல்லது குடும்பத்தில் வேறு சிலரை ஒத்து இருக்கும் – இதற்க்கு வேறு எப்படி பதில் சொல்வது?

  46. சத்யபாமா அவர்களே

    நானும் இதன் தாய் சொல்கிறேன்
    //
    ந்மது சமுதாயத்தில் வர்ணாசிரமப் பிரிவு எப்போது முதல் அமுலுக்கு வந்தது என ஆராய்வது கோழியா முட்டையா எது முதலில் என்கிற யோசனையில்தான் முடியும். தொடக்க கால வேத கால சமுதாயத்தில் ய்ர்ருகுக்கு எதில் ஈடுபாடோ அத்னைத் தாமே தேர்ந்துகொண்டு அவரவரும் தொடக்கத்தில் கட்டுப்பாடு ஏதுமின்றி வாழ்ககையை அமைத்துக் கொள்ள, பின்னர் வழிவழியாக வர்ணாசிரமம் அமைந்திருக்க வேண்டும். அதனால்தான் ஒரு வர்ணத்தைச் சேர்ந்த பெற்றோர் என்ற நிலை உருவாகி அதன் பிறகு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை பற்றிய வர்ண நிர்ணயம் வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
    //

    நான் பிரமானத்திற்குள் போகாமல் நடை முறை எப்படி இருந்தது என்பதை தான் சொன்னேன் –

    முன்பு RV அவர்கள் அர்ஜுனன் தந்தை சத்ரியன் அவனும் ஒரு க்ஷத்ரியன் ….. மேலும் யாரும் வர்ணம் மாறியதாக தெரியவில்லை, அதனால் வர்ணஷரம தர்மம் இல்லை வெறும் ஜாதி தர்மமே இருந்தது என்று அனுமானித்தார் – இதற்குதான் நன் பதில் சொன்னேன்

    ராமானுஜர், பட்டர், லோகசாரியரை பற்றி தெரிந்துகொண்ட பின்பும் சாதியத்தை ஆதரிக்கும் போக்கும் தான் வருமோ?

  47. பிறக்கும்போது அனைவருமே சூத்திரராகத்தான் பிறக்கிறார்கள் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்ன? சூத்திரர் என்பது மட்டமானது என்பதல்ல!

    தொடக்கத்தில் உடலையும் அதன் புற உறுப்புகளையும் வைத்தே எவரும் இயங்க வேண்டியுள்ளது. உடலுழைப்பினை முன்வைத்து சமூகத்தில் தனது கடமையினை ஆற்றுவது சூத்திர லட்சணம். எனவேதான், இதர குண விசேஷங்கள் எதுவும் புலனாகாத தொடக்க காலப் பருவத்தில் ஒரு குழந்தை சூத்திரராகக் கருதப்படுகிறது. பிறகு, அதன் குண விசேஷம் புலப் படுகிறபோது அதனை ஊரிஜிதம் செய்யும் வகையில் முப்புரி நூல் அணிவிக்கபடுகிறது. காலப் போக்கில் சாதியமைப்பில் வர்ணம் கல்ந்துவிட்ட பிறகு, முப்புரி நூல் அணிவிப்பது சாதிமுறையிலான வெறும் சடங்காகிப் போனது.

  48. //ஒரு வர்ணத்தைச் சேர்ந்த பெற்றோர் என்ற நிலை உருவாகி அதன் பிறகு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை பற்றிய வர்ண நிர்ணயம் வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.//
    திரு சாரங் அவர்களே, மேற்குறிப்பிட்ட எனது வாசகத்தில் நான் குறிப்பிடு வது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தவராக உள்ள பெற்றோர் தமக்குப் பிறந்த குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபின் அதன் குணவிசேஷங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு ஏற்ப அக்குழந்தையின் வர்ணத்தை நிச்சயித்து முப்புரிநூல் அணிவித்திருப்பார்கள் என்பதேயாகும். அவ்வாறு நிச்சயிக்கப்பட்டு முப்புரிநூல் அணிவிக்கச்ப்படும்வரை சாஸ்திரப் படி குழந்தை சூத்திர வர்ணம் என்றே கருதப்பட்டு வந்திருக்கும்.

  49. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பதில் கருத்து முழுமையும் சரி.
    ஆங்கிலேயர் எப்படி இந்திய தொழில் வளர்ச்சியை அழித்தனர்,கிராமங்களுக்குத் துரத்தப்பட்ட மக்களால் போட்டி அதிகமாகி
    ஜாதி வெறுப்பு எப்படி மிகுந்தது ,இதைப் பயன் படுத்தி ஆங்கிலேயர் எப்படி
    நம்மைப் பிரித்தாண்டனர் -இவற்றை விரிவாக விளக்கி எழுத வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *