குரு வலம் தந்த கிரி வலம்

ramanarஇது “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த” கதைதான். வயோதிக நிலையில் ஒருவனுக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை பயன் நிறைந்ததுதானா என்ற ஒரு சந்தேகம் வருவது இயற்கையே. அதன்படி யோசிக்கையில், நான் மதுரையில் பிறந்து வளர்ந்ததையும், அங்குதான் பால ரமணர் ‘தன்னை உணர்ந்து’ ஞான நிலை அடைந்தார் என்று தெரிந்து கொண்டதையும் என் வாழ்வில் மிக்க பயனுள்ளதாக நினைக்கிறேன். சுமார் இரண்டரை முதல் பதினான்கு வயது வரை நான் மதுரையில்தான் வளர்ந்தேன். நான் படித்த பள்ளியும் ரமணர் படித்து முடித்த பள்ளிக்கு அருகேதான் இருந்தது. அவர் படித்த காலத்தில் வேறு பெயர் என்றாலும், எனது காலத்தில் அவர் பள்ளிக்கு UCHS என்று பெயர்; எனது பள்ளிக்கு MCHS என்று பெயர். அருணாச்சலத்தால் கவரப்பட்டு அவர் திருவண்ணமலை செல்லுமுன் அவர் அந்த பள்ளியில்தான் படித்தார். அவர் விதேக முக்தி அடைந்தபோது எனக்கு ஆறு வயதே ஆகியிருந்ததால், நான் மதுரையில் இருந்தபோது அவரைப் பற்றி ஏதும் தெரிந்திருக்க நியாயமில்லை.

1950- களில், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, அடிக்கடி தனியே மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் எனக்கு உண்டு. எனது வகுப்பு மாணவன் ஒருவனைச் சந்திக்க கோவிலின் தெற்கு கோபுர வாசலின் எதிரே உள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு வழியே அடிக்கடி சென்றது உண்டு. அந்தத் தெருவில்தான் பால ரமணர் இருந்தார் என்பதோ, அங்குதான் “அருணாசலம்” என்ற பெயரைக் கேட்டதுமே அவருக்கு ஒரு பிரமிப்பு வந்தது என்பதையோ, அங்கிருந்து ஒருவழிப் பிரயாணமாக அவர் திருவண்ணாமலை சென்றடைந்தார் என்பதோ எனக்கு அப்போது தெரியாது. அப்புறமாக அது தெரிய வந்தபோது, ரமணர் புழங்கிய இடங்களில் நானும் இருந்திருக்கிறேன் என்ற நினைப்பே எனக்கு அவர் அருள் கிடைத்தது போன்று உணர்ந்தேன். அதன் பின் யோசித்துப் பார்த்தபோது வந்த நினைவலைகளை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வடக்கு கோபுரம் திசையில் எங்கள் வீடு இருந்தாலும், நான் சாதாரணமாக கிழக்கு திசையில் உள்ள அம்மன் சந்நிதி வழியாகத்தான் கோவிலுக்குள் நுழைவேன். அப்படிச் செல்லும்போது நேராக சந்நிதிக்குப் போகமுடியும் என்றாலும் இடது புறத்தில் உள்ள, இறைவனுக்கு உகந்த, மகிமை வாய்ந்த பொற்றாமரைக் குளத்தை பிரதக்ஷிணமாகச் சுற்றி வரும்படி எனது பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி வரும்போது குளத்தின் மேல்சுற்றில் சுவர் மேல் இறைவன், மாணிக்கவாசகர் உள்ளிட்ட தனது பல அடியார்கள் பொருட்டு, நடத்திய 64 திருவிளையாடல்கள் பற்றிய சித்திரத் தொகுப்பைப் பார்த்துக்கொண்டே வருவேன். அது முடிந்ததும் தெற்கு கோபுர வாசல் முனையில் ஒரு விபூதிப் பிள்ளையார் இருக்கும். அந்த இடத்திலிருந்து பார்த்தால் சில கோபுரங்கள் மிக அழகாகத் தெரியும். அந்த அழகுக் காட்சியை ரசித்துக்கொண்டே, சில படிகள் இறங்கி கால் கழுவிக்கொண்டு அப்புறமாக அம்மன் சந்நிதி நோக்கிச் செல்வேன்.

அப்படி ஒரு நாள் செய்யும்போது, அந்தப் படிகளிலேயே உட்கார்ந்திருந்தேன். அப்போது திடீரென்று எனக்குள் ஒரு எண்ணம் உதயம் ஆயிற்று. அதாவது, “ஒரு வேளை எனக்கு திடீரென்று மரணம் நேர்ந்தால், அம்மனிடம் என்ன வேண்டிக்கொள்வது?” என்று தோன்றியது. அப்போது எனக்கு 11 வயதுதான் ஆகியிருக்கும் என்பதால், மரணம் பற்றி எண்ணம் தோன்றுவதற்கு எத்தகைய முகாந்திரமும் கிடையாது. சாவு பற்றி ஏதாவது தெரிந்திருக்கலாம் என்றால் எனது கொள்ளுத் தாத்தா அந்தக் கால கட்டத்தில்தான் இறந்தார். அவர் எங்களிடம் அவ்வளவு பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாததால் அவரது பிரிவு என்னை அவ்வளவு பாதித்திருக்க முடியாது. ஆனாலும் அந்தச் சமயத்தில் யாராவது ‘மரணம் என்பது எல்லோருக்கும் உண்டு என்றும், வயதானோர்களுக்கு இயற்கை மரணம் வரும், சிறியவர்கள் அதைப் பற்றி பேசுவது சரியில்லை’ என்றும் சொல்லியிருக்கக் கூடும். அது தவிர நான் என் தாத்தா- பாட்டியிடம் மதுரையில் வளர்ந்து கொண்டிருந்தேன். என் பெற்றோர்கள் வட இந்தியாவில் தொலை தூரத்தில் இருந்ததால் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர்களைப் பார்ப்பேன். என் தாயும் அருகில் இல்லாததாலோ, அவரை எப்போதோ பார்ப்பதாலோ ஏதோ காரணத்தால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியதோ என்னவோ? அது தோன்றிய உடனேயே மனதில் ‘அப்படி ஒரு வேளை நேர்ந்தால் தாயிடம் என்னை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக் கொள்ளவேண்டும்’ என்றும் தோன்றியது.

பல ஆண்டுகள் கழித்து, பகவான் ரமணருக்கு சொக்கப்ப நாயக்கன் தெருவில் நேர்ந்த மரணானுபவம் பற்றி நான் படித்தும், எனக்கு மேற்படி நடந்த நிகழ்ச்சியைப் பற்றி ஞாபகம் வரவே இல்லை. மேலும் பல வருடங்கள் கழித்து ரமணாஸ்ரமத்தில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஞாபகம் வந்தது. மரணம் பற்றிய சிந்தனை வந்தபின் அதைத் தொடர்ந்து வந்த எண்ணங்கள் எதுவாயினும், பகவானது சிந்தனை போல் அதிசயமாய் எனக்கும் அவருக்கு நேர்ந்த சொக்கப்ப நாயக்கன் தெருவுக்கு அருகேயே நடந்தது ஒரு வேளை ரமணரது தொண்டனாகும் பாக்கியம் எனக்கு உண்டு என்று காட்டுவதாக அமைந்ததோ? இதெல்லாம் 1950- களில் நடந்தது. 1969-ல் ரமணரைப் பற்றி முதலில் அறிந்திருந்தும், 1971-ல் முதன் முறையாக கிரி வலம் செய்திருந்தும், இதைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் கூட எனக்கு 2008-ல் தான் தோன்றியது. அதற்கு முன் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நான் மதிப்பு கொடுக்கவில்லை போலும்.

என் தாத்தா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால், நாங்கள் மதுரையிலிருந்து திருச்சிக்குக் குடி பெயர்ந்தோம். அங்கு எனது கல்லூரிப் படிப்புக்குப் பின், அங்கிருந்து தொழில்நுட்பப் படிப்பைத் தொடர பெங்களூர் சென்றேன். மூன்று வருடம் கழிந்து அங்கேயே மேலும் மூன்று வருடங்களுக்கு நான் படித்த இடத்திலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் முதன்முறையாக பகவான் ரமணரைப் பற்றிக் கேள்விப் பட்டேன். என் கூட தங்கியிருந்த நண்பனின் தந்தை ரமணரின் பக்தர் என்றும், அவர்கள் திருச்சியிலிருந்து பெங்களூர் வரும் வழியில் ரமணரை தரிசனம் செய்வது வழக்கம் என்றும் அவன் சொல்லக் கேட்டேன். அந்தத் தகவல் அப்போதும் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

பெங்களூரில் இருந்த கடைசி வருடத்தில், எனக்கு தானியங்கிக் கருவிகள் மூலம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் ‘செயற்கை அறிவு’ படிப்பில் நாட்டம் வந்தது. அதனால் கணினி சம்பந்தப்பட்ட இயல்களைத் தவிர தாவர இயல், சமூக இயல், மதம், தத்துவம் போன்ற பல மாறுபட்ட இயல்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஓரளவு படித்து ஆராய வேண்டி வந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்து மதத் தத்துவ நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என்னுடன் பணி புரிந்த முதிர்நிலை ஆசிரியர் ஒருவரிடம் “பகவத் கீதை”யின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு கேட்டேன். அவர் “பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே” என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதன் மகிமையையும், பாரத கண்டத்தின் பண்டைய வழிகள் எப்படி மனிதனை நல்வாழ்க்கையின் மூலம் உயர்த்திச் செல்கிறது என்பதையும் நான் அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்துதான் என்னை மேலும் படித்து அறிந்து கொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தப் பெரியவரிடம் நான் செய்த ஒரு பணிதான் என்னை சென்னையில் உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியர் பணியில் அமர வைத்தது. இப்படியாக நான் 1969-ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன் .

அந்த வருடத்தில் ஒரு நாள் எனது மாணவன் ஒருவனுடன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும்போது, எங்கள் பேச்சு மதம், தத்துவம் பற்றிச் சென்றது. அப்போது அவன் தனக்கு ரொம்பத் தெரியாது என்றும், அருகே மகரிஷி ஒருவர் இருந்ததாகவும், அவர் எப்போதும் “நான் யார்?” என்று தன்னை விசாரிப்பதே தத்துவத்தின் முதல் படி என்று சொல்வார் என்றும் சொன்னான். உடனே என்னிடம் அதற்கான பதிலையும் கேட்டான். நான் யாவரும் சொல்வதுபோல “நான் ராமன்..” என்று ஆரம்பித்தேன். அவன் இடைமறித்து அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள், ஆனால் அது உங்கள் பெயர்தான் என்று சொல்லி தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொண்டு போனான். அப்போதும் எனக்கு ஏதும் உறைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து அவனைப் பார்த்தபோது அவனுக்கோ அந்தச் சம்பவம் சிறிது கூட ஞாபகம் வரவில்லை. அதனால் அந்த சம்பவம் எனக்காகவே நடந்தது போல் நான் உணர்கிறேன். அது நடந்து ஒரு வருடம் கழித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் ஞாயிறு இதழில் ரமணர் படம் ஒன்றுடன் இதே “நான் யார்?” விசாரம் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அப்போதும் எனக்கு அது புரியவில்லை; அது பற்றி மேலும் எதுவும் நான் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இல்லை. ஆனால் இவர்தான் அந்த மாணவன் குறிப்பிட்ட மகரிஷி போலும் என்று லேசாக ஞாபகம் வந்தது.

அந்த வருடம் விடுமுறையில் எனது ஊருக்குச் சென்றிருந்தபோது என் தாய் தமிழ் வாரப் பத்திரிகையான ‘ஆனந்த விகடன்’ இதழ்கள் சிலவற்றைக் காண்பித்து, எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி எடுத்து வைத்திருப்பதாக அதில் தொடராக வந்து கொண்டிருந்த ‘அருணாச்சல மஹிமை’யைக் காண்பித்தார். நான் சென்னை திரும்பியதும் அவ்வப்போது அந்தத் தொடரைப் படித்துக் கொண்டு வந்தேன். திருவண்ணாமலை ரிஷிகளையும் சாதுக்களையும் பற்றி ஒரு சுற்று எழுதியபின், அருணாச்சலத்துடன் தொடர்பு கொண்ட சென்னையைச் சுற்றியுள்ள கோவில்களைப் பற்றி கட்டுரைகள் வர ஆரம்பித்தன. அப்படித்தான் திருமுல்லைவாயிலில் உள்ள வைஷ்ணவி ஆலயம் பற்றியும் வர ஆரம்பித்தது. புது இடமாகிய திருவண்ணாமலைக்குச் செல்லும் தயக்கத்தினால் அருகே இருக்கும் இக்கோவிலுக்கு முதலில் சென்றுவரலாம் என்று தோன்றியது. சில நண்பர்களிடம் சொன்னதும் அனைவருமாக ஒரு சனிக் கிழமை போகலாம் என்று தீர்மானித்தோம். ஒரு அமாவாசையன்று எனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அந்த வார இதழில் பூர நட்சத்திரத்தன்று அம்மனுக்கு விசேஷ பூஜை உண்டு என்று எழுதியிருந்ததால், பஞ்சாங்கத்தைப் பார்த்தேன். நாங்கள் செல்லவிருந்த நாளுக்கு ஒருநாள் முன்பாக வெள்ளிக் கிழமையன்று பூரம் என்று அறிந்தேன். உறவினர் வீட்டிலிருந்து நான் வரும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று சந்நிதியில் நின்று கொண்டிருக்கும்போது, எனக்குப் பின் பக்கமாக எனக்கு ஏதும் அறிமுகம் இல்லாத மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து வைஷ்ணவி கோவிலுக்கு நான் இருக்கும் இடத்திலிருந்து எந்த ரூட் பஸ் செல்கிறது என்று அறிந்துகொண்டேன். அதை என் நண்பர்களிடம் சொன்னபோது அவர்களோ தங்களால் அந்த வெள்ளிக்கிழமை பூரத்தன்று வரமுடியவில்லை என்றும், முதலில் என்னைக் கோவிலுக்குப் போய் பார்த்துவிட்டும் வரச் சொன்னார்கள். நான் அலுவலகத்துக்கு மறு நாள் போயிருந்தபோது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. எனது மூத்த ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு ‘வரும் வெள்ளிக் கிழமை மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு கல்வி சுற்றுலா செல்லவேண்டும், என்னால் முடியுமா?’ என்று கேட்டார். ‘எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது, உங்களை அழைத்துச் செல்ல பஸ் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வரும்’ என்றும் சொன்னார். சுற்றுலா இடம் எங்கே என்று நான் கேட்டபோது அவர் வைஷ்ணவி ஆலயம் அருகே இருக்கும் ஒரு இடத்தைக் குறிப்பிட்டார். எனக்கோ பழம் நழுவிப் பாலில் விழுவது போன்று இருந்தது. நானும் எனது கோவில் செல்லும் எண்ணத்தைச் சொல்லி, சுற்றுலா முடிந்ததும் நான் அங்கு இறங்கிக் கொள்வதாகச் சொன்னேன். அவரும் சம்மதிக்கவே அங்கு சென்ற எனக்கு சுற்றுலா இடத்திற்கு நேர் எதிரிலேயே கோவில் இருப்பதைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். தானாகவே நடந்த ஏற்பாடுகளுடன், இப்படித்தான் நான் ரமணர் அடியார்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு முதன் முறையாகச் செல்ல நேர்ந்தது.

அதன் பின் நான் அடிக்கடி வைஷ்ணவி கோவில் செல்லும் வழக்கத்தைக் கொண்டேன். இன்றும் எனது பிள்ளைகளுக்கும் அங்கு செல்லும் வழக்கம் உண்டு. முதலில் மைலாப்பூரில் ஒரு மகிழமரத்தடியில் வாசம் கொண்ட வைஷ்ணவி தேவி பின்னே ஒரு தீபாவளி நன்னாளில் திருமுல்லைவாயிலில் நான் சென்ற இடத்தில் குடிகொண்டார். பின்னர் நான் மணந்த மனைவியும் ஆங்கிலத் தேதிப்படி அதே நாளில் பிறந்தவர் என்று அறிந்தபோது இறைவனின் லீலைகளில் இதுவும் ஒன்றோ என்று எண்ணிக் கொண்டேன்.

விகடனில் தொடர்ந்து வந்த பயணக் கதைகளில் ‘கிரி வலம்’ பற்றி ஒரு நாள் மிகவும் சிலாகித்து எழுதப்பட்டிருந்தது. அதன் மேன்மையை பகவானும் பலருக்குச் சொல்லியதாகவும் தெரிய வந்தது. அதைப் படித்த எனக்கு 1971 ஆகஸ்டு மாதத்தில், ஒரு நாள் திடீர் விடுமுறை வரவே, கிரி வலம் போக வேண்டும் என்ற நோக்கத்துடனேயே திருவண்ணாமலைக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். ஊர் வரும் சமயம் பஸ்ஸில் ஒருவரை மலை எங்கே இருக்கிறது என்று கேட்டேன். அவரும் காட்ட, அது முன்னிரவு ஏழு மணி அளவாதலால் ஜன்னல் வழியே திரைபோற்றியது போல் காணப்பட்ட “ஞான தபோதனரை வா” என அழைக்கும் மலையை முதன் முதலாக தரிசனம் செய்தேன். ஆச்ரமத்தில் தங்கலாம் என்பது அப்போது எனக்குத் தெரியாததால், கோவில் அருகே இருந்த ஒரு லாட்ஜில் தங்கினேன். காலையில் எழுந்து தயார் ஆனதும், கோவிலில் உள்ள சந்நிதிகளை மெதுவாக சுற்றி வந்து அண்ணாமலையார் கர்பக் கிருகத்தில் நுழைந்தேன். எவரும் அங்கு இல்லாத தனிமையிலும், ஏதும் அலங்காரம் செய்யப்படாத லிங்க வடிவிலும் அண்ணாமலையாரை திவ்ய தரிசனம் செய்தேன். அது போன்ற எளிமையான தரிசனம் எனக்கு வெகு நாட்கள் கழிந்த பின்பே மறுமுறை கிடைத்தது. சுமார் இரண்டு மணி நேரம் கடந்தபின் ரமணாஸ்ரமம் நோக்கிச் சென்றேன். காலை 11 மணிவாக்கில் ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ரமணர் வெகுகாலம் வீற்றிருந்த “பழைய ஹால்” உள்ளே சென்று அமர்ந்து ரமணர் பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டு, கிரி வலம் செல்ல அது சரியான நேரம்தானா என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். கிரி வலம் போகலாம் என்று தோன்றாததால், அன்று மதியமே சென்னை திரும்பிவிட்டேன்.

girivalamஅந்த வருடமே டிசம்பர் மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி ரமண ஜெயந்தி வரும் என்று அறிந்து, முதலில் சிதம்பரம் சென்று தரிசனம் பார்த்துவிட்டு, அங்கிருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை சென்று அடைந்தேன். அன்று காலையே ஜெயந்தி விழா முடிந்திருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு, ரயிலில் இருந்து இறங்கி குதிரை வண்டியில் ஏறும்போது, மறுநாள்தான் ஜெயந்தி என்று வண்டிக்காரர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இரவில் நேரம் கழித்து வந்த எனக்கு, ஆஸ்ரமத்தில் இருந்த ஒருவர் நான் சாப்பிட்டு விட்டேனா என்று கேட்டபின் “அதிதிகள் தங்கும் அறை” ஒன்றைக் காட்டி அங்கு உறங்கச் சொன்னார். மறு நாள் அதிகாலை, அப்போதைய வழக்கப்படி விறகு அடுப்பு ஒன்றின்மேல் பெரிய தவலையில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை எடுத்து குளித்துவிட்டு, கிரி வலம் போவது பற்றி யோசித்துக்கொண்டே ஆஸ்ரமத்தின் வாசற்படி மேல் உட்கார்ந்தேன். அப்போது வாசலில் இருந்த பெரிய இலுப்பை மரத்தின் திசையிலிருந்து ஒரு பாம்பு நெளிந்து எனது வலப்புறமாகச் சென்றதைப் பார்த்தேன். என் மனதில் என்ன தோன்றியதோ, உடனே எழுந்து எனது முதல் கிரி வலத்தைத் தொடங்கினேன்.

என் தொடக்க நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது, மதுரை, திருச்சி, பெங்களூர், சென்னை வழியாக திருவண்ணாமலையை அடைந்ததே ஒரு வலம் போன்று தோன்றுகிறது. அதிலும் ரமணர் இருந்த இடத்திலிருந்தே அவர் இருக்கும் இடத்தை அடையவே ஒரு பெரிய வலம் தேவைப்பட்டிருந்தாலும், கடைசியாக அடைந்ததே அவர் அருள்தான் என்றால் என் வாழ்வில் நான் வேறு என்ன விழைய வேண்டும்?

4 Replies to “குரு வலம் தந்த கிரி வலம்”

  1. gurubhyo namah;
    s.raman
    that was inspiring.
    i give below a gist that i had copied handwritten long ago from some article given to me for
    reading by devotee:
    ” Sri KunjuSwami said:
    Qnce Bhagavan showed the Holy Hill , Arunachala ,and said: ‘this is the store House of all spiritual Power. Going round it,you benefit in all ways. Just as you make Japa in Kasi/Varanasi
    it is particularly beneficial. Going round the Hill you get countless benefits, thereby it is called Sanchara Samadhi..While walking aound the Hill the body is active but the mind is at rest at its source.The mind is free from distractions.
    Through sanchara samadhi one easily gets Sahaja Samadhi.Hence our forefathers praised the value of pilgrimages.A pilgrimage enables one to get set in sanchara samadhi.””

    you may share your experiences on this.
    gurubhyo namah.

  2. //நேற்று தமிழக முதல்வர் தானைத் தலைவர் தன் படை புடைசூழ ஸ்டேடியத்துக்கு வந்து ஐபிஎல் போட்டியைக் கண்டுகளித்தார். போட்டியில் சென்னை வெற்றிபெற்று தோனி பேசுகையில், “அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். Its supposed to be tomorrow.” என்று சொன்னவுடன் அரங்கம் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தது. சிவமணி உற்சாகமாக ட்ரமஸ் அடித்து ஆரவாரம் செய்தார்.
    தலைவர் முகத்தையும் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். //

    பார்ப்பன அடிவருடியா தோனியும்? அடக் கொடுமையே…

  3. ஆசிரியர் குழுவிற்கு மிக்க நன்றி. இவ்வாரத் தொடக்கத்தில்தான் இக்கட்டுரையை அனுப்பியும், இவ்வளவு சீக்கிரம் இது பதிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    அறிந்தோ அறியாமலோ இதை நான் புத்தாண்டு நன்னாளில் பார்க்க நேர்ந்தது. ஆங்கிலத் தேதிப்படியும், தமிழ் வருடப்படியும் ரமணர் விமுக்தி அடைந்த நினைவு நாளில் (ஏப்ரல் 14-ந் தேதி), அதுவும் சரியாக அறுபது-ஆண்டு சுழற்சிக்குப் பின் இதை விக்ருதி ஆண்டில் நான் பார்த்தமைக்கும் எனக்கு மகிழ்ச்சியே.

    Sri. Ganapathy:

    I was fortunate to have met and talked to a few contemporary devotees of Sri Ramana Maharishi, including Sri Kunju Swami. Yes, I do share the points conveyed by Swami. You may get to know more from him, including the one on how he went up some portion of the hill against Ramana’s advice, by reading the book on Reminiscences by him. As for myself, I plan to continue writing on some of my own.

    Raman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *