மத சார்பின்மை என்னும் பெயரில் இந்து மதத்தை ஓரம் கட்டுவதாக நினைத்துக் கொண்டு, தமிழக அரசின் இலச்சினையில் உள்ள கோபுரத்தை எடுத்து விட்டு திருவள்ளுவர் உருவத்தைக் கொண்டு வரப்போகிறார்களாம். இதைக் கேட்டவுடன் தோன்றியது, ‘சபாஷ்! சரியான தேர்வு!” பெருமாள் இருக்கும் வரை, திருநாள் வரும் என்பார்களே அதைப் போல திருக்குறள் இருக்கும் வரை இந்து மதத்தைப் பரப்ப தனியாக ஒரு நூலும் வேண்டாம்.
திருவள்ளுவர் கூறுவது நான்மறைப் பொருளே என்று சங்கப் புலவர்களே சொல்லி இருக்கும் போது, வரும் சமுதாயம், அவர்களை நம்புமா? அல்லது இவர்களை நம்புமா? மேலும் தமிழ் படிப்பவர் இருக்கும் காலம் வரை, திருவள்ளுவர் கூறுவது வேதக் கருத்துதான் என்பதை அவரவர் படித்துப் புரிந்து கொள்ள முடியும். இவர்களுக்குத்தான் புரியவில்லை. அதன் காரணம், பிறவிக் குருடர்கள் யானையின் ஒரு அங்கத்தைத் தடவிப்பார்த்து, அதுவே யானையின் முழு உருவம் என்று சொன்ன கதையைப் போல இவர்களும், பிறவிக் குருடர்களாக, திருக்குறளை தொட்டுவிட்டு வந்துள்ளனர்.
எப்படி இவர்களைப் பிறவிக் குருடர்கள் என்று சொல்லலாம் என்று கேட்கலாம். மாபெரும் பொக்கிஷம் போன்ற திருக்குறளை அறிய ஒரு மனித அறிவும், அனுபவமும் மட்டும் போதாது. காலம் காலமாக முன்னோர் சொன்ன விளக்கங்களையும் கேட்டு நாம் அணுகினால்தான், யானை போன்ற அந்த பெரும் நூல் சொல்லும் விஷயங்களை, எந்த எண்ணத்தில் வள்ளுவர் சொன்னாரோ அந்த எண்ணத்தில் தெரிந்து கொள்ள முடியும். திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர். இதனை, “தருமர், மணக்குடியர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தாரிவர்” என்று சொல்லியுள்ளார்கள். அவர்தம் உரைகளை ஒட்டியே நாமும் பொருள் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நாமும் பிறவிக்குருடர்கள் போல மூடக் கூட்டுறவு முழுதும் அபாயம் என்ற நிலையில் இருப்போம்.
**********
திருக்குறள் மத சார்பற்றது என்று இவர்கள் சொல்வதில் எனக்கு என்ன புரியவில்லை என்றால், திருக்குறள் படித்த இவர்கள் , திருவள்ளுவ மாலையைப் படித்திருக்க மாட்டார்களோ? பல பதிப்புகளிலும், திருவள்ளுவ மாலையையும் சேர்த்துதானே திருக்குறள் அச்சிட்டுள்ளார்கள்? திருவள்ளுவ மாலையில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களெல்லாம் நீங்களோ, நானோ எழுதியவையா என்ன? திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்? எடுத்துக்காட்டாக, வெள்ளி வீதியார் எழுதின பாடலைப் பாருங்கள்.
செய்யா மொழிக்கும் திருவள் ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
இதற்குரிய ரல்லாதா ரில்.
எவர் ஒருவராலும் செய்யப்படாததால் வேதம் ‘செய்யா மொழி’ எனப்படுகிறது. செய்யா மொழியும் பொய்யா மொழியும் (திருக்குறளும்) ஒன்று. இரண்டும் ஒரே பொருளைப் பற்றி பேசுகின்றன. இவற்றுக்கிடையே ஒரே ஒரு வேறுபாடு தான் இருக்கிறது. செய்யா மொழியை அந்தணர் மட்டுமே ஓத முடியும். பொய்யா மொழியை ஓத குறிப்பிட்ட சிலரால்தான் முடியும் என்பது இல்லை. யார் வேண்டுமாலும் ஓதலாம்.
உக்கிரப் பெருவழுதியார் இன்னும் ஒரு படி மேலே போய் நான்முகக் கடவுளே திருவள்ளுவராகப் பிறந்து திருக்குறள் எழுதினார் என்கிறார்.
“நான் மறையின் மெய்ப் பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த”
என்று சொல்கிறாரே, அப்படிப்பட்ட திருக்குறள் மத சார்ப்பின்மையைப் பறை சாற்றுகின்றது என்றால், அது இந்து மதத்தின் இயல்பு என்றல்லவா தெரிந்து கொள்ள வேண்டும்? இந்து மதமே மத சார்பின்மை தான் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்? மத சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தை ஒதுக்குவது முட்டாள்தனம் அல்லவா?
இந்தப் பாடல்களைப் போல பல பாடல்களிலும் திருக்குறளும் நான்மறையும் ஒன்று என்று சங்கப் புலவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். இதில் சமணர், பௌத்தரே சொந்தம் கொண்டாட முடியாத போது, கிறிஸ்துவரும், நாத்திகரும், மத சார்பின்மைக் காவலர்களும் கிட்டேயே நெருங்க முடியாது.
**********
வள்ளுவர் எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது இவர்கள் வாதம். பழைய உரையைப் படித்திருந்தால் யானையைத் தடவிப் பார்த்த பிறவிக் குருடர் போல இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.
வள்ளுவர் இந்து மத தெய்வங்களை வெளிப்படையாகவே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் அவர் கூறியுள்ள இலக்கணங்கள் இந்து மதம் கூறும் பரம்பொருளுக்கே முழுமையாகப் பொருந்துகின்றன.
வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், பிறவிப் பெரும் கடல் நீந்த அடி கொடுக்கும் இறைவன் என்றெல்லாம் வருபவை இந்து மதம் காட்டும் தெய்வம்தானே என்பதை மறுப்பவர்கள் உள்ளனர்.
ஆனால் அப்படி மறுக்கும் சமணர்களோ, பிற மதத்தவரோ சொல்ல முடியாத ஒரு தெய்வத்தை மிக வெளிப்படையாக எழுதியுள்ளார் திருவள்ளுவர். அது பாற்கடலைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஜ்யேஷ்டா தேவி என்னும் மூதேவி. குறள் 617 – இல் ‘மாமுகடி’ என்று மூதேவியின் பெயர் வருகிறது. மாமுகடி என்று மூதேவியைத் தான் அவர் சொல்கிறார் என்று மெய்ப்பிக்கும் வண்ணம், அதே குறளில், ஸ்ரீ தேவியையும் குறிப்பிடுகிறார்.
மடியுளாண் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
இதன் பொருள் – ஒருவன் சோம்பலில் மூதேவி வாழ்கிறாள். சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருமகள் வாழ்கிறாள்.
மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது – இன்றைய தமிழக முதல்வர் உட்பட. அவர் கொடுத்துள்ள குறளோவிய விளக்கத்தில் இவர்கள் பெயரை நீக்கி வேறு ஒரு விளக்கத்தைத் தர முடியாது. அவர் கொடுத்துள்ள விளக்கத்தைப் பாருங்கள்.
“திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.”
சுட்டிக்காட்டப் பயன் படும் சொற்கள் என்று இந்தத் தெய்வங்களின் பெயரை சொல்லி நிறுத்தி விட்டார். எங்கிருந்து இந்தப் பெயர்கள் வந்தன? மத சார்பின்மையில் முளைத்த பெயர்களா இவை? அல்லது திருவள்ளுவரும் வசதிக்காக இந்து மதத்திலிருந்து கடன் வாங்கிக் கொண்டாரா? அல்லது சொல்ல வந்தக் கருத்தை வேறு வழியில் சொல்லத் தெரியவில்லையா?
தெரிவது என்னவென்றால் திருவள்ளுவர் பின்பற்றிய மதம் இந்து மதமாக இருந்திருக்க வேண்டும். தமிழ் மக்களிடையே நிலவிய மதமும் இந்து மதமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மத்தியில் உலவும் தெய்வங்களின் பெயரை, அவற்றுக்குத் தொடர்பாக உள்ள கருத்துடன் இப்படிச் சொல்ல முடியும்.
குறள் 610 – இலும் திருவள்ளுவர் மற்றொரு இந்து தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளார். அது குறளனாய் வந்து மூவுலகும் ஈரடியால் அளந்த த்ரிவிக்ரமன் என்னும் வாமனன்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு.
இங்கே அடியளந்தான் என்பது ‘எல்லா உலகையும் அளந்த இறைவன்’ என்று பரிமேலழகர் கூறுகிறார். தாயதெல்லாம் என்று வருவதால், முன்னே அடியளந்தான் என்றது, திருமாலைக் குறிக்கிறது.
அடியளந்தானுக்கும் திருக்குறளுக்கும் ஒற்றுமை இருக்கிறது.
அடியளந்த வாமனனும் குறளன்.
அவன் அளந்தது இரண்டியால் மூவுலகங்களை.
திருவள்ளுவர் ஆண்டது குறள் வகையை.
இவரும் இரண்டடியால் மூன்று புருஷார்தங்களான தர்மம், அர்த்தம், காமம் என்பவற்றை அளந்து, அறம், பொருள் இன்பம் என்று முப்பாலாகக் கொடுத்துள்ளார். இந்த மூன்றை ஒழுங்காகக் கடை பிடித்தால் நான்காவதான வீடு பேற்றைப் பெறலாம். வீடு பேறு என்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலையானது. அதை அடையத் தேவையான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றில் உள்ள நிமித்தங்களை வேத மதம் கூறுகிறது. அந்த வழியைப் பின் பற்றியே திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
108 என்னும் எண் ஞானத்துக்கும், தியானத்துக்கும் இந்து மதம் கொடுத்த எண். திருவள்ளுவரும் 108 அதிகாரங்களை அமைத்துள்ளார். அறத்துப்பால் முடிவில் இந்து மதக் கருத்தான ஊழ் என்பதைக் கொடுத்துள்ளார். அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாக வரும் என்பதால் இப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஊழ்வினைக் கருத்தை இந்து மதம் சொல்லாமல், வேறு எந்த மதம் சொல்கிறது?
இந்து மதத்தில் வாமனனுக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. வாமன அவதாரம் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பது வாமன புராணத்தின் மூலமாகத் தெரிகிறது. உலகமே வாமனனின் பிடியில் இருக்கிறது. இப்படி வாமனனைப் பார்ப்பது ஜோதிட சித்தாந்தம். சூரியப் பயணத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கும் இடம் வாமனின் முதல் அடி. அந்த அடியைத் தூக்கி, உயர்த்தி சமநோக்கு நாளன்று (விஷு அல்லது வருஷப் பிறப்பு) வானை அளந்து, பிறகு காலை இறக்கி, தட்சிணாயனம் ஆரம்பிக்கும் இடத்தில் வைப்பது இரண்டாவது அடி. மூன்றாவது அடி வைப்பது பூமியின் தென் பகுதியில். அது துலா புண்ய காலம். அது ஐப்பசி ஆரம்பிக்கும் நேரம். அன்று புது வருடம் கொண்டாடும் வழக்கமும் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பின் பற்றப்பட்டது. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாமன அவதாரம் பற்றிய புராணம் தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்டிருக்க வேண்டும்; அதனால் தான் அதனை ஒரு குறட்பாவில் உவமையாகவே அவர் சொல்லத் துணிந்தார்.
வாமனனைப் போல மற்றுமொரு தெய்வத்தைப் பற்றி வள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிறார். எந்த தெய்வத்தைப் பழிக்கிறார்களோ, அந்த தெய்வம் எந்தக் கல்லூரியில் படித்தவர் என்று கேட்டார்களோ அந்த தெய்வத்தைப் புகழும் குறள் அது.
குறள் 773 – இல் ராமனைப் பற்றிய செய்தியை மறைமுகமாகக் கூறுகிறார்.
“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”
பகைவனிடம் கருணை காட்டாது போரிடுவதே ஆண்மை என்றும், போர்க்களத்தில் பகைவன் தாழ்வுற்ற பொழுது அருள் செய்வதே மேன்மை என்றும் கூறுவர். இங்கு ‘என்ப’ என்றது வழக்கில் உள்ள ஒரு கருத்து என்றாகிறது. இங்கு சொல்லபப்டும் பேராண்மையும், ஊராண்மையும் ஒருங்கே இருந்த ஒரே ஆண்மகன் ராமன்.
இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில், “இலங்கையர் வேந்தன், போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாகப் படடானது நிலைமை நோக்கி அயோத்தி இறை மேற்செல்லாது ‘ இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என விட்டதைப் போலது” என்று பரிமேலழகர் வெளிப்படையாகவே இராமாயண நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டிக் கூறுகிறார்.
ராமனது இந்தச் செயல் அன்றும் பேராண்மையாகப் பேசப்பட்டிருத்தலாலேயே, ‘பேராண்மை என்ப’ என்று ராமனைக் கருத்தில் கொண்டு வள்ளுவர் கூறியிருக்க வேண்டும்.
திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன் …
குறள் 550 -ல் மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் …
சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல …
எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும் ….
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம் (ஜடாயு & ஜாவா குமார்) என்ற கட்டுரையிலிருந்து.
வேதங்கள் என்றும் அந்த பரமாத்மனைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றன. அந்த பரமாத்மன் மனுஷ்ய அவதாரம் எடுத்தால், வேத புருஷனும் அவனுடன் இப்பூவுலகில் அவதாரம் எடுக்க வேண்டும், அந்த பரமாத்மன் ராமனாகப் பிறந்த போது, வேதமும் ராமாயணமாகப் பிறந்தது.
திருக்குறளும் வேதமே என்றனர் ஆன்றோர். திருக்குறளின் அறத்துப் பால் கூறும் தர்ம நெறிகளின் இலக்கணம் முழுவதும் வேதநெறிப் பட்டதே. திருக்குறளுக்கு வழங்கும் பல பெயர்களில் “உத்தரவேதம்” என்பதும் ஒரு பெயர் என்பது குறிப்பிடத் தக்கது.
அப்படிப்பட்ட ஒரு இந்து ஞானிக்கு அரசுச் சின்னத்தில் இடம் – அவர் இந்து மதம் பற்றிச் சொல்லவில்லை என்ற போர்வையில்.
ராமன் என்ற ஒருவனே கிடையாது என்று கடலையே தோண்டத் தலைப்பட்டவர்கள் திருவள்ளுவரையும், திருக்குறளையும் கொஞ்சம் தோண்டிப் பார்திருக்ககூடாதா?
அங்கே தெரிந்திருக்குமே வேத நெறியும், இந்து தர்மமும்!
இந்து மதத்தை வெறுப்பவர்கள், இந்து ஞானியைக் கொண்டாடுகிறார்கள்.
நல்ல காமெடி!

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
கடவுளின் பணித்திட்டம்
பணிப்பொன்
தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்
கம்பன் கண்ட சிவராம தரிசனம்
தமிழர் கண்ட நீளா தேவி
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2
கம்பன் பாடிய குறள்
பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5
பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
அச்சுதனின் அவதாரப் பெருமை
தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2
வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்
கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்



சரியான நெத்தியடி!
- ராமன்
ஜெயஸ்ரீ அவர்களே
மற்றுமொரு அருமையான கட்டுரை. தட்சிணாமூர்த்தி என்று பெற்றோர் தனக்கிட்ட பெயரை தூய தமிழ்ப் பெயராக மாற்ற நினைத்து “கருணாநிதி” என்று அதுவும் ஒரு சமிஸ்க்கிருதப் பெயரென்பதை அறியாமல் வைத்துக் கொண்ட எல்லாம் தெரிந்தவர் தானே இவர்? இவருக்கு வள்ளுவரைப் பற்றி என்ன தெரியும் அவரது குறள்களையெல்லாம் தப்பும் தவறுமாக மாற்றி எழுதியதைத் தவிர? தன் பெயரை தப்பாக மாற்றி வைத்துக் கொண்டது போலவே இப்பொழுது சின்னத்தையும் சின்னத்தனமாக மாற்றும் முடிவை எடுக்கிறார்.
நன்றி
விஸ்வாமித்ரா
திருவள்ளுவர் ஹிந்துவாகவோ சமணராகவோ இருந்திருக்கலாம். ஆனால் அவர் எந்த சமயப் பற்றும் இல்லாத ‘secularist’ கண்டிப்பாக இல்லை! அவர் வாழ்ந்த காலம் எனக் கருதப்படும் ஒன்று முதல் ஐந்தாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வைதீக சமயமும் சமணமும் பரவலாக இருந்தன என்று சொல்லப்படுகிறது. இளங்கோ அடிகள் சமணர் என்று கருதப்பட்டாலும் சிலப்பதிகாரத்தில் ஹிந்து சமயம் பற்றியும் பொதுவாக சமூகம் ஹிந்து சமயத்தை ஒட்டியே மக்கள் நடந்தது போலவும்தான் எழுதியுள்ளார்.அதே போல திருவள்ளுவர் சமண சமயத்தையும் ஹிந்து சமயத்தையும் ஒட்டியே எழுதியிருக்கலாம் அல்லவா? புலால் உண்ணாமை மற்றும் ஊழ்வினை பற்றி அழுத்தமாக எழுதியுள்ளது மற்றும் குறிப்பாக எந்த ஹிந்து கடவுளைப் பற்றியும் (கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்) எழுதாதது அவர் சமணராக இருந்திருக்கலாமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஜெயஸ்ரீக்கு நன்றி.
தலைப்பில் இருக்கும் கேள்விகுறி நீக்கப்படவேண்டும். திருவள்ளுவர் இந்து முனிவர் தான் எனிவே கேள்விகுறி தேவையில்லை.
நச்சுன்னு இருக்கு இந்த கும்தக் கட்டுரை !
Rishi please read these, Thiruvalluvar was not a Samanar, He was a Hindu!
http://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-2/
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html
http://indiainteracts.in/members/2007/02/26/Thirukkural-is-Saffron-RSS-literature-Come-let-us-BAN-it/
நல்ல கட்டுரை; காலத்துக்கு ஏற்ற கட்டுரை.
ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே!
சில நாட்களுக்கு முன் தமிழ் இந்து தளத்தில் கோபுரம் தமிழ் இலச்சினையில்
இருந்து நீக்கப்படுவது தவறு என்ற ரீதியில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
நீங்கள் “திருவள்ளுவர் சிலை வந்தால்தான் என்ன?” என்று கேள்வி
கேட்கிறீர்கள்? நல்ல சிந்தனை.
ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. திருவள்ளுவர்
இந்து மதக்கருத்தைத்தான் கூறியுள்ளார் என்பதில் நம்மை போன்றவர்களுக்கு மாற்று கருத்தே இல்லையென்றாலும், நம் அடுத்த
தலைமுறையின் கதியை யோசிக்க வேண்டியிருக்கிறது. அடுத்த
தலைமுறைக்கு நியாயமான திருக்குறள் உரை கிடைக்குமா என்பதில் ஐயம்
இருக்கிறது. “கருணாநிதியின் சிந்தனைகள்” என்னும் பெயரில் B.A, M.A
பட்டங்கள் வர இருக்கின்றன. இவற்றைப்போன்றவற்றை ஒப்புக்
கொள்பவர்கள்தான் இனிமேல் Vice-Chancellorஆக வர முடியும் என்ற
நிலை இருக்கிறது. இவர்களை போன்ற கல்வியாளர்கள் சரியான
திருக்குறள் உரையை பாடத்திட்டத்தில் வைப்பார்களா என்பது
சந்தேகமே!
அண்மையில் “திருக்குறள் உரை விபரீதம்” என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. எழுதியவர் சாமி.தியாகராசன். இந்த நூற்றாண்டில்
வெளிவந்திருக்கும் திருக்குறள் உரைகள் மூல நூலிருந்து பெருமளவில்
விலகி உள்ளதை தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு தெய்வநாயகம்
திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்று நிறுவுவதற்காகவே உரை எழுதியது,
வேறு சிலர் திருவள்ளுவர் எந்த மதத்தையும் சாராதவர் என்பதை
நிறுவுவதற்காகவே உரை எழுதியது போன்றவற்றை ஆதாரங்களுடன்
மிக தெளிவாக எழுதியுள்ளார்.
எது எப்படியெனினும் இந்த இலச்சினை மாற்றத்தோடு இவர்களின்
இந்து மத துவேஷம் நிற்காது என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளலாம்.
சரியாகச் சொல்லியுள்ளீர்கள் ஜெயஸ்ரீ.
ஔவையார் எழுதிய ஒரு நீதி நூலில் (நல்வழி அல்லது மூதுரை) ஒரு பாடல் உண்டு..
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும், கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும் –
ஒருவாசகம் என்றுணர்.
திருக்குறளும், இந்து புனித நூல்களும் சொல்வது ஒரே வாசகம் என்று தமிழ் மூதாட்டியே சொல்லியிருக்கிறார். எனவே திருவள்ளுவர் இந்து ஞானி என்பதற்கு வேறு என்ன சான்றிதழ் வேண்டும்??
// Athiravi
26 April 2010 at 11:37 am
தலைப்பில் இருக்கும் கேள்விகுறி நீக்கப்படவேண்டும். திருவள்ளுவர் இந்து முனிவர் தான் எனிவே கேள்விகுறி தேவையில்லை //
அதிராவி சார், கேள்விக் குறி அவர் இந்து ஞானியா இல்லையா என்பதற்காக அல்ல.. அந்த இந்து ஞானியின் சின்னம் இடம்பெறுமா இல்லையா என்பது குறித்து..
அச்சச்சோ உண்மையெல்லாம் சொல்லிட்டேங்க. இனி அரசு சுதாரிச்சு பெரியார் உருவத்தை வைக்கப்போகுது!!!!
வள்ளுவர் இந்து மத முனிவர்களுள் ஒருவர் என்பதற்கு, பல சான்றுகளை கொடுக்கலாம்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி
( நீத்தார் பெருமை 25)
பொறிகளை அடக்கி ஆளும் முனிவர்களைப் பார்த்து, அவர்கள் தன பதவியை பிடித்து விடுவார்களோ என இந்திரனே அஞ்சுகிறான் , இதில் இருந்தே பொறிகளை அடக்கி ஆள்வதால கிடைக்கும் வலிமை தெளிவு என்கிறார் வள்ளுவர்.
எனவே
இந்திரன் தேவர்களின் தலைவன்,
முனிவர்கள் ஐம்புலன்களை அடக்கி தவம் செய்வது ,
அதை கண்டு அஞ்சி இந்திரன் பல வழியிலும் அவர்களின் தவத்தை நிறுத்த முயன்றது
என எல்லாவற்றையும் இரண்டே வரியில் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி விட்டார் வள்ளுவர்.
அதனால் தான் வள்ளுவர் என்ற பெயரைக் கேட்டாலே பெரியாருக்கு எரிச்சல் வந்து விடும்.
இப்படியாக வள்ளுவர் இந்து மத முனிவர் என்பதற்கு, பல சான்றுகளை கொடுக்கலாம்.
ஆலய கோபுரம் தமிழர் பண்பாட்டிற்கே உரித்தான தனித் தன்மை வாய்ந்த கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம். தமிழ் நாட்டில் உள்ள அம்மாதிரியான ஆலய கோபுரங்களிலேயே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலய கோபுரம் உய்ரம் மிகுந்தது என்பதால் அதனை மாதிரியாக வைத்து அரசுச் சின்னத்தை உருவாக்கினர். மற்றபடி ராஜபாளையத்துக்காரரன குமாரசாமி ராஜா சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்ததால் அருகில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலய கோபுரத்தை அரசுச் சின்னமாக்கிவிட்டார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
கலாசாரம், நுண்கலைகள், கட்டிடக் கலை போன்றவை ஒரு குறிப்பிட்ட வட்டாரம், அங்குள்ள மக்கள் வாழும்முறை முதலான்வற்றைப் பிரதி பலிப்பவை. திருவள்ளுவர் என்கிற ஹிந்து தத்துவ ஞானி உலகப் பொதுமறையினை இயற்றி வேதகால ரிஷிகளைப் போல் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானவராகிவிட்டவர். எனவே தமிழரையும் அவர் வாழ்விடத்தையும் பிரதிபலிக்கும் ஆலய கோபுரத்தைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசுச் சின்னமாக வைத்திருப்பதே அறிவுடைமை.
சத்தியபாமா, உங்கள் கமெண்ட் உங்கள் அளவில் ஓர் உலக சாதனை. வாழிய நீவிர். ஏனென்றால், அதில் மலர் மன்னன் என்கிற பெயரே வரவில்லையே! சாதனைதானே?!
[...] என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்? மேலும் 0 கருத்து | ஏப்ரல் 27th, 2010 at 2:08 pm under Blog [...]
தமிழ்ஹிந்து வாட்ச் டாக் என்பது ஆசிரியர் குழுவின் நிழலா? நேரடியாகச் சொல்ல முடியாததற்காக ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டிருகிற பினாமியா? சில தகவல்களைக் குறிப்பிடுகையில் உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி எழும்போது மீண்டும் விளக்கம் அளிக்க நேரிடும். எனவேதான் நான் வெளியிடும் கருத்தின் அடிப்படை எங்கிருந்து பெறப்பட்டது என்பதை முன்னெச்சரிக்கையுடன் முன்னதாகவே குறிப்பிட்டு விடுகிறேன். இதில் ஏதும் பிரச்சினையா? மலர்மன்னன் என்ற பெயரே அலர்ஜியாக இருக்கிறதா? எனது மறுமொழியில் கருத்து ஏதும் இல்லையா? மலர்மன்னன் என்கிற பெயர் மட்டும்தான் இருக்கிறதா? அதனை என் அளவில் ஓர் உலக சாதனை என்று எள்ளி நகையாட வேண்டிய அவசியம் என்ன?
திரு கார்கில் ஜெய் அவர்களும் அறிஞர் மலர்மன்னன் அவர்களின் பெயரைத் தமது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கக் கண்டேன். அவரையும் கிண்டல் செய்யப் போகிறீர்களா அல்லது அவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் நான் பெண் என்பதால் எனக்கு மட்டும் இந்த இளப்பமா?
இதற்கு முன்பும் ஒரு சமயம் மலர்மன்னன் அவர்களின் கட்டுரை ஒன்றை வேறு ஒருவர் இதே தளத்தில் குறிப்பிட்டு அதற்குரிய சுட்டையும் தெரிவித்திருந்தார். மேலும் ஒருவர் இதே தமிழ்ஹிந்துவில் அவரது கட்டுரை முழுவதையுமே தனது மறுமொழியில் மலர்மன்னன் பெயரைக் குறிப்பிட்டே வெளியிட்டிருந்தார்.
ஹிந்து என்கிற உணர்வுள்ளவர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் வாதத்திற்கு ஆதரமாக மலர்மன்னன் பெயரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பல்வேறு தளங்களுக்குச் சென்றால் காணமுடியும். அதேபோல் மலர் ம்ன்னன் அவர்களின் கட்டுரைகள் இணையத்தில் எத்தனை இடங்களில் அப்படியே எடுத்துப் போடப்படுகின்றன என்பதும் தேடினால் தெரியவரும். ஆகவே நான் மட்டும்தான் அவரது பெயரைக் குறிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம். எனது மறுமொழிகள் எல்லாமே அவரது பெயர் இல்லாமல் வருவதில்லை என்பது போன்ற பிரமை யினையும் ஏற்படுத்த வேண்டாம்.
‘இரா’ சத்தியபாமா, 7 தடவை மலர்மன்னன் துதி பாடியுள்ளீர்கள். எப்படியோ, இங்கே இருந்தும் ஒரு பை சொல்லி வெளியேறுகிறேன்.
Bye.
திரு. tamilhinduwatchdog என்பவர் கருத்துக்களைப் பற்றிப் பேசாமல் தனிப்பட்ட முறையில் கிண்டலடித்தும் , அநாகரீகமாக எழுதியும் வருவதும் சரியல்ல.
இதை எப்படி தமிழ் இந்து அனுமதிக்கிறது?
அது என்ன ” பஞ்ச பாண்டவர்களைப் போல அவர்கள் வந்து கலாட்டா செய்தார்கள்? “.
” பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினார்? ” “குடிகாரன் என்று எழுதப்பட்டிருக்கிறது ” மாதிரி மீண்டும் பிரச்சினைக்கு அஸ்திவாரமா?
ஜெயஸ்ரீ அவர்களே அருமையான கட்டுரை
நன்றி
The Tirukural is one of the most revered and beautiful Hindu scriptures on dharma and human ethics.
Hats off to the author for her fine article.
I have read some of other articles written by you and i am convinced
that you are well read and deals the subject matter in apt manner.
RGK
தமிழ் புத்தாண்டை மாற்றியாகி விட்டது. இப்போது அரசு சின்னம். இன்னும் எதையெதை மாற்றப் போகிறாற்கள் தெரியவில்லை.
இந்துக்களே ,இந்த கருணாநிதி எதுவேனாலும் செய்வார். இவருக்கு ஒட்டு போட்டது அரசு இயந்திரத்தை நல்ல முறையில் நடத்ததான் .
ஒட்டு போட்ட இந்து மக்களின் நம்பிக்கைகளை கேவல படுத்தவோ அல்லது காலங்காலமாக இருண்டு வரும் இந்து சின்னங்களை அழிக்கவோ கூடாது.
இப்படியே போச்சுன இந்துக்கள் எல்லாம் அழியவேண்டியதுதான்.
இந்த கோபுரம் மாற்றும் முயற்சிக்கு அனைத்து இந்துக்களும் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்த கோபுரம் மாற்றம் நடந்தே தீரும்.
ஏம்பா இந்த பிஜேபி RSS இந்து மக்கள் கட்சி எல்லாம் என்னைய பண்றீங்க ?
சினிமா நடிகைகளை தொரத்தி தொரத்தி போராட்டம் பண்றிங்களே (இந்து மக்கள் கட்சி), உங்களுக்கு இந்த கோபுரம் மாற்றும் அநியாயம் புரியலையா?
அப்புறம் எப்படியா தமிழக மக்கள் உங்கள நம்புவாங்க ?
ஆனந்த்
பமாகோ,மாலி.
(Edited and published.)
ஆப்பயன் குன்றும் , தென்புலத்தார், மறந்தாலும், ஆகிய குறட்பாக்களும் அவர் ஹிந்து சம்யதவரே என்று அறியலாம்.
நன்றி
Anand
Is it not the Hindus who voted this mob into power in the first place? By electing DMK for short term gains like, free, Tv, rice, etc, Hindus have sold out. Period. Why blame RSS/ BJP?
MK knows this and will buy them again in the next election. The Hindus of TN do not have even a micro particle of scruples, decency and love for their religion and culture.They will sell the entire heritage for few rupees. Soodu Sorani illatha janmangal.
இந்தப் பிரச்சினையில் ஒரே நிலையை எடுங்கள்- கோபுரம் சின்னத்தில் இருக்க வேண்டும்.அதை மாற்றக் கூடாது.தமுமுகவினருக்கு திருவள்ளுவர் கூட பிடிக்கவில்லை.சட்டசபை கட்டிடத்தை சின்னமாக்கு என்கிறார்கள்.
காலால் உதைத்த கண்ணப்ப நாயனாருக்கும் , கருப்புக் கண்ணாடி கருநாய்நிதிக்கும் வித்யாசம் உண்டு. எப்படியோ, திருவள்ளுவருக்கு நேரம் சரியில்லை; அவருடைய சரியான பிறந்த தேதியோ, மாதமோ ,வருடமோ தெரியாது. அதனால் அவருடைய ஜாதகத்தையும் செய்து பார்த்து பரிகாரம் தேட முடியாது. எவ்வளவு நாளோ, அவருக்கு வரப்போகிற வாழ்வு?
இவர்கள் இந்து சமயத்தை மட்டும் வெறுப்பவர் அன்று. தமிழையும் வெறுப்பவரே. ஈவேரா தமிழ் காட்டுமிராண்டி பாஷை தமிழன் காட்டு மிராண்டி, வள்ளுவரும் தொல்காப்பியரும் ஆரிய அடிவருடி, தமிழ் இலக்கியங்கள் குப்பைகள் என்று கூறியது எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி எழுதிய குறள் உரை என்று கூறும் ஒரு வேடிக்கையான நூல் கடவுள் இல்லையென்று கூறுகிறது! வள்ளுவர் கூறியதை மறுத்து எழுத கருணாநிதிக்கு என்ன உரிமை? உண்மையை முழுதும் திரித்து எழுதுவது உரையா? கடவுளை மறுப்பவன் தலையில் குணமில்லை என்கிறார் வள்ளுவர் குறள் 9. கருணாநிதிக்கு தலை இருக்கிறதா? கம்பனை பழித்தார் அண்ணா. அண்ணா எழுதிய கம்ப ரசம் முழுப் பொய். தமிழுக்கு இழுக்கு.
இவர்கள் தமிழ் பற்றுள்ளவரா? இல்லை. நாள் தோறும் குறள் சிலம்பு என்று பிதற்றுகின்றனர். இளங்கோ கண்ணனை நாராயணனை புகழ்ந்து ஆய்ச்சியர் குரவை என்று பாடினார். இவர்கள் இந்துக்களை வெறுக்கும் வெறியர்கள். அவ்வளவே
நாம் விழிக்க வேண்டும். வெறியர்கள் பணம் சூறையாட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்துக்கள் பொறுமையாளர் என்பதால் பித்தலட்டாங்கள் செய்கின்றனர். நம் பொறுமைக்கும் எல்லை உண்டு
முதலில் வள்ளுவர் ஆர்? வாழ்ந்த காலம் எப்போது? என்றெல்லாம் அறுதியிட்டு ஆரும் கூறவில்லை. கூறவும் முடியாது. ஏனென்றால், இந்தியாவில் வரலாறு உணர்வை ஆரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவைல்லை ஆதிகாலம் முதல்.
விளைவு? அவரவர் தங்கள் மனம்போன போக்கில் வரலாற்று நாயகர்களைப்பற்றி எழுதித்தள்ளி விட்டாரகள். பொதுவாக அனைத்துமே hagiography தான். Biography கிடையாது.
ஏனென்றால், biography ல் குறை, நிறை சொல்லப்படும். Hagiography ல் நிறைமட்டுமே சொல்லப்பட்டு, நாயகனை தெய்வத்துக்குச் சமமானவனாகவோ, அல்லது மனிதருள் மாணிக்கமாகவோ காட்டப்படும்.
வள்ளுவர் மயிலாப்பூரில் சேரியில் ஒரு புலையராகப்பிறந்தாரகவும் அவருடன் பிறந்த தங்கையே அவ்வையார் எனவும் என்றெல்லாம் மறைமலை பிதற்றுகிறார். அவரைப்படிப்பவர் நிறைய பேர்.
இங்கே சாரநாதன் வள்ளுவரை இந்துவாக்குகிறார். இந்து சமயக்கருத்துகள் விரவிக்கிடப்பதாகவும், ஒரு குறளில் இந்துக்கடவுள் ‘மூதேவி’யைக்குறிப்பிடுகிறார் எனவும் சொல்கிறார். திருச்சிக்காரனோ, இன்னொரு குறளில், இன்னொரு இந்துத்தத்துவம் சொல்லப்படுகிறது அல்லது புராணக்கதை எடுத்து இயம்பப்படுகிறது என்கிறார். ஜடாயுவோ அவ்வையாரை எழுதியதைக்காட்டி வள்ளுவர் இந்து ஞானி என்கிறார்.
இதற்கு நாம் ஒரு காலத்தின் இயல்பையும் அப்போது வாழும் மக்களின் பொதுவாழ்க்கையும் பார்க்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக:
விடியவிடிய இராமாயாணம் கேட்டானாம். கடைசியில் ’இராமன் சீதைக்கு ஆரடா?’ என்று கேட்டால், ‘சித்தப்பா ’என்றானாம்.
படிப்பது இராமாயாணம். இடிப்பது பெருமாள் கோயில்.
இவை ஒரு சில. இவை நம் வாழ்க்கையில் அன்றாடம் பேச்சுவழக்கில் வருவன.
ஒரு இசுலாமியன் பாடம் நடாத்தியபின் கேள்வி கேட்கும்போது மாணவன் இப்படி தாறுமாறாகப் பதில் சொன்னால், இசுலாமிய ஆசிரியர் முதலில் சொன்ன பழமொழியைத்தான் சொல்வார்.
இதைப்போலவே கிருத்துவ ஆசிரியரும் சொல்வார். இரண்டாவது பழமொழி முதலை விட அடிக்கடி சொல்லப்படுவது. சொல்வர் எவருமாக இருக்கலாம்.
இப்படி பல இந்துமத கலாச்சார வழிவந்தவை மக்களின் வாழ்க்கையில் ஊடுறுவி அனைவர் வாயிலும் எழுத்திலும் கலப்பவை.
பின்னொரு நாளில் அந்த இசுலாமிய ஆசிரியரின் வாழ்க்கையை எழுதுபவர் அவர் இப்படிச்சொன்னார் எனவே இந்து மதத்தைச்சேர்ந்தவராக இருக்கலாம்; அல்லது இந்துமதப் பற்றாளராக இருக்கலாம் என வாதம் பண்ணினால் எப்படி இருக்கும்?
இதைப்போல் வள்ளுவர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் புலங்கியவை எவையோ, அதனைக்கையாண்டால், நல்ல reach ஆகும் என நினைப்பது இயல்பு. அதுவே அவரின் சொல்லாடல்களுக்கு கரணியாம்.
இந்து மத கருத்துகளும் அவ்வாறே.
வேதக்கருத்துகள் வள்ளுவரின் குறளின் இருப்பதை மகாபாவம் என என்னைப்போன்ற ‘மானமிகு’கள் நினைப்பார்கள் என முதல் பத்தியிலே சாரநாதன் கதைக்கிறார்.
அப்படியெல்லாம் ஆபாசமான கருத்துகள் அவை அல்ல. ஆரும் அப்படித் தோண்டிப்பார்க்க மாட்டார்கள். மேலும், அக்கருத்துகள், ப்ல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய வாழ்க்கையில் ஊடுருவியிருப்பதால், அவை இவைதான், அல்லது இவை அவைதான் என எவரும் தோண்டிப்பார்க்காமலே வாழ்க்கையில் – இசுலாமியன், கிருத்துவன், சீக்கியன், ஜெயின் – என்று பின்னிப்பினைந்திருக்கும். தமிழ் இசுலாமியர், தமிழ் கிருத்துவர் வாழ்க்கையில் பல இந்துமதக் கலாச்சார வழக்கங்களை தங்களையறியாமலே எடுத்துக்கொண்டு வாழ்வது அன்றாடம் நாம் பார்க்கும் காட்சி. நம்பமுடியாவிட்டால், ஒரு paying guest ஆக ஒரு இசுலாமியர் அல்லது கிருத்துவர் வீட்டில் வாழ்ந்து பாருங்கள்!
இது எப்படி என்றால், இங்கு எழுதும் எல்லாருக்கும் ஆங்கிலம் தெரியும். சிலருக்கு பக்காவாக. சிலருக்கு ஓரளவு.
ஆனால், நான் படித்தவரை இங்கு எவரும் செகப்பிரியரின் மேல் காதல் கொண்ட அபிமானிகளோ, அல்லது அன்னாரின் எழுத்துகளின் ஆழங்கால்பட்டவரென்றோ சொல்லமுடியாது.
ஆனால், உங்கள் கட்டுரையை நீங்கள் பொது ஆங்கிலத்தில் (commonly understood or simple English) ஓரிரு பக்கங்கள் எழுதினால், அதில் பல சொல்லாடல்கள் (Vocabulary, idioms and phrases) செகப்பிரியரிடமிருந்து வந்தவையாகவே இருக்கும். ஆங்கில மொழியறிஞர்கள் சொல்வது யாதெனின், செகப்பிரியர் ஆங்கில சொல்வழக்கில் ஊடுருவிவிட்டார். அவர் ஆரென்று தெரியாமலே அவர் உங்கள் எழுத்தில் வந்து விடுகிறார். பள்ளிசெல்லா கடைனிலை தேம்ஸ் நதி படகோட்டி கூட பத்து வரிகள் பேசினால், அதில் நாலைந்து செகப்பிரியர் தெரிப்பார் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதுதான் வள்ளுவரின் குறளில் நாம் காணும் இந்துமதக்கருத்துகள் ஊடுருவுதல்; இந்துமதக்கடவுளரின் பெயர்களச்சொல்லல், இந்து மதப்புராணக்கதாபாத்திரங்களை குறிப்பிடுதல்.
திருவள்ளுவர் ஆர்?
நான் கண்டுபிடித்துவிட்டேன்:
He is ‘a riddle wrapped in a mystery inside an enigma.’
(Apologies to Churchil)
பேச்சு வழுக்குக்கும் செய்யுள் வடிவில் வரும் படைப்புக்கும் கூட வித்யாசம் தெரியாமல் பிதற்றினால் என்ன செய்வது
உடுக்கை இழந்தவன் கை போல – இது பேச்சு வழக்கில் உள்ளதா. இடுக்கண் வருங்கால் – இது உள்ளதா – துப்பார்க்கு – இது உள்ளதா.
பேச்சு வழக்கில் என்னவெல்லாமோ இருக்கு அதை எல்லாமா வள்ளுவர் சேர்த்துக்கொண்டார்
ஒரு படைப்பு என்பது நன்கு யோசித்து வார்த்தைகளை திரட்டி எழுதப்படுவது – சும்மா மரினா பீச் பேச்சு இல்ல அல்லாது நீங்கள் மனம் போல போக்கில் எழுதுவது அல்ல
தமிழில் இசுலாத்தை பற்றி ஒரு புத்தகம் வருகிறது – அதில் எங்கயாவது சீதைக்கு ராமன் ஆருடா என்பது போன்ற வாக்கியங்கள் வருமோ? வராது –
திருக்குறள் தெருவில் பேசுவதை எல்லாம் சொல்வதற்காக வந்ததல்ல
நாம் காணும் கருமங்களை அப்படியே எதோ ஒன்றில் பொருத்தி பார்த்தல் இப்படிதான் எடா கூடமாக ஆகும் – எதற்கும் எதற்குமோ முடிச்சோ போடுவது என்பது இது தான்