நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

முந்தைய பகுதி

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்?

“சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் காவற்படையாகச் செயல்படுகிறவர்கள் சூத்திரர்களே… சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தாழ்த்தப்பட்டோர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து விடுவதை விரும்பவில்லை – இந்தியாவின் ஆட்சி பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் (ஆதிக்க சாதி) இந்துக்களால் நடத்தப்பட்டது.  நகரம் முதல் கிராமம் வரை (ஆதிக்க சாதி) இந்துக்களின் பிடியில் உள்ளது.”

பேரறிஞர் அம்பேத்கர்
அம்பேத்கர் நூல்தொகுப்பு – 9, பக். 174 – 158.

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே அது தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு – முன்னேற்றத்திற்குத்  தொடங்கப்பட்டது அல்ல என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்.

458px-justice_party_1923

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது அரசியல் ஆட்சியை அந்தக் காலத்தில் விஸ்தரித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி.  தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நபர்களைப் பொறுக்கி எடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்த விவசாயிகளிடமிருந்து நிலவரியை வசூலிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பனி அளித்தது.  இந்த நபர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் பிரிட்டிஷ் சர்க்கார் நிர்ணயித்தது. அதை ஆண்டுதோறும் அவர்கள் செலுத்திவந்தால் போதும். இந்தத் தொகைக்குப் பெயர் ‘‘பேஷ்குஷ்’’.

இங்கனம் நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு இஷ்டமான அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம்.  மேலும்,  விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்காமல், ஒரு பெரும்பகுதி நிலத்தைச் சொந்த சாகுபடி என்ற பெயரால் வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு அனுமதி உண்டு.  இவர்களுக்குப் பெயர் ‘ ஜமீன்தார்’,  ‘மிட்டாதார்’,  ‘தாலுக்தார்’ என்பவையாகும்.

இந்த உரிமைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மேலும் மேலும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினர். ‘பேகார் வெட்டி’ என்ற பெயரால் விவசாயிகள் இந்த ஜமீன்தார் இட்ட வேலையைக் கூலி ஒன்றும் இல்லாமல் செய்தாக வேண்டும்.  இவ்வித கொடுமைகள் பல உருவங்களை எடுத்தன.

விவசாயிகள் வீட்டிலிருந்த மாடு முதன் முதலில் போடும் கன்றை ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜமீன்தார் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலிய சடங்குகளுக்கு விவசாயிகள் பால் முதலியவற்றை இனாமாக வழங்க வேண்டும்.  காலப்போக்கில் விவசாயி திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் ஜமீன்தாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைந்தது.

இப்படிப்பட்ட வசூல்களுக்கு ஜமீன்தார்கள் குண்டர் படைகளை வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சர்க்காரின் சார்பாக விவசாயிகளிடத்தில் வரி வசூலிக்கும் காண்ட்ராக்டர்களாக நியமிக்கப்பட்ட இந்த ஜமீன்தார்கள் காலப்போக்கில் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகவே கருதப்பட்டார்கள். குடியானவர்களை எந்த சமயத்திலும் அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றும் அதிகாரமும் அவர்களிடம் இருந்தது.

300px-justice_party_1920sஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் சர்க்காரின் போலீசும், நிர்வாக இயந்திரமும் உதவி செய்து வந்தன. இந்த ஜமீன்தார்களும் அவர்களுடைய ஆதரவில் வாழ்ந்தார்கள்.  தங்களை ஆதரிக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசிகளாகவும், இந்த சர்க்கார் வாழையடி வாழையாக இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இவர்கள் விசுவாசமாக இருந்ததற்காக இவர்களில் பலருக்கு ‘மகாராஜா’, ‘ராஜா’, ‘நவாப்’ போன்ற பட்டங்கள் பிரிட்டிஷ் சர்க்காரால் வழங்கப்பட்டன.

இந்த ஜமீன்தார் முறையைத் தவிர  ‘ரயத்துவாரி – நிலவரி அமைப்பு’ என்ற முறையும் இருந்து வந்தது. 1803 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் கவர்னராக இருந்த லார்டு மன்றோ இந்த முறையை ஏற்படுத்தினார்.  நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நேரடியாக சர்க்காருக்கு நிலவரி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை இது.

ஆனால் நிலம் யாருக்குச் சொந்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு நிலம் சொந்தம் என்பதற்கு சர்க்காரிடம் கணக்கு ஒன்றும் கிடையாது. இதை நிர்ணயிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தாசில்தார்கள் தங்களுக்குப் பணம் (லஞ்சம்) கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்திற்கேற்ப நில அளவை நிர்ணயித்தார்கள். அதைப் போலவே, கிராமங்களில் இருந்த பல முரடர்களுக்கும், சண்டியர்களுக்கும் பயந்து அவர்கள் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறும் இடங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கிவிட்டார்கள்.

உதாரணமாக, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு சண்டியர், அந்த ஊர் தாசில்தாரை ஒருநாள் முழுவதும் குதிரை மீது சவாரி செய்யச் சொன்னாராம். அந்தக் குதிரை போகும் வழி பூராவும் கற்கள் நாட்டப்பட்டு அதற்குட்பட்ட பிரதேசம் பூராவும் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டதாம்.

இந்த ரயத்துவாரி முறை அமுலாக்கப்பட்ட போது ஆந்திராவில் பெருவாரியாக ஜமீன்தாரிமுறை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் – ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, மற்றும் சேத்தூர், சாப்டூர் – போன்ற பல இடங்களிலும் ஜமீன்தார்கள்தான் இருந்து வந்தனர். இங்கனம் ஜமீன்தாரி முறை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெரும்பகுதி ‘ரயத்துவாரி’ முறைக்கே உட்பட்டிருந்தது. இந்த ‘ரயத்துவாரி’ முறைக்கு உட்பட  நிலச்சொந்தக்காரர்களுக்கு ‘மிராசுதார்கள்’ என்று பெயர்.

கொஞ்ச நிலம் வைத்துக்கோண்டிருக்கக் கூடிய குடும்பங்கள் மட்டுமே நிலத்தை உழுது சாகுபடி செய்யும். அதிக நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டு குத்தகைக்கோ அல்லது வார குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது. நிலச்சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.

இப்படிப்பட்ட நிலைமையின் காரணமாக நிலத்தைத் தவிர பிழைப்பதற்கு வேறு தொழில் இல்லாத நிலையில், பாடுபடும் விவசாயிகளிடையே குத்தகைக்கு நிலம் எடுத்துக்கொள்வதற்காக போட்டி வளர்ந்தது இயல்பு.  இதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஒரு வேலையும் செய்யாத நிலச் சொந்தக்கார மிராசுதாரர்களுக்கு  நிலத்தில் விளைந்ததில் 80.85 விழுக்காடு குத்தகை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

இதைத் தவிர கொஞ்ச நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்து நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலங்களைக் கடன் கொடுத்தவர்களே வாங்கிக் கொண்டார்கள். இவ்விதம் இந்த ரயத்துவாரி முறையில் நிலங்கள் சில நபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இந்த மிராசுதாரர்களில் பலர் நிலத்தை விவயாயிகளிடம் குத்தகைக்கு விடாமல், கூலிகளை அமர்த்தி சொந்த சாகுபடி என்ற பெயரால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்தப் பண்ணைகளில் வேலை செய்யும் கூலிகளின் நிலைமையோ படுமோசமானது.

இவ்வாறு அநியாயக் குத்தகை மூலமாக விவசாயிகளையும்,  அநியாயக் கூலியின் மூலமாக பண்ணைக்கூலிகளையும் கொள்ளையடித்து வந்த அந்தப் பெரு மிராசுதார்கள் பிரிட்டிஷ் சர்க்காரை நீடூழி வாழ வேண்டும் என்று விரும்பியது இயற்கையே.

இவர்களைத் தவிர பிரிட்டிஷ் கம்பெனிகளுக்காக இங்கே விளைந்த பருத்தி, கடலை போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டில் வாங்கி ஏற்றுமதிக்காக விற்ற தரகு வியாபாரிகளும் உண்டு. அதே போன்று பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்த நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்த துணி போன்ற பொருட்களை வினியோகம் செய்யும் தரகு வியாபாரிகளும் இருந்தனர். பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கவேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புவார்கள் ?

இப்படி ஆங்கிலேயர்களுடைய பேராசைக்காகவும், தங்களுடைய பேராசைக்காகவும் மற்றவர்களைக் கொடுமைப்படுத்திய ஜமீன்தார்கள், மிட்டாமிராசுதாரர்கள், பண்ணையார்கள், ராஜாக்கள் தான் நீதிக்கட்சியில் இருந்தனர்.

இந்தக் கட்சியின் தலைவர்களின் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும்.

அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்த அநேகமாக எல்லா ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர்.  (தற்சமயம் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற) கஞ்சாம், கோரக்பூர் மாவட்டங்களில் இருந்த

கல்லிக்கோட் ராஜா,
பர்ஐம்பூர் ராஜா,
பர்லாக்கிமிடி ராஜா,
சின்னக்கிமிடி ராஜா,

ஆந்திரா பகுதியில் இருந்த

பொப்பிராஜா,
பிட்டாபுரம் ராஜா,
செல்லப்பள்ளி ராஜா,
பொப்பிலி ராஜா,
தேபுரேல் ராஜா,
வெங்கிடகிரி ராஜா

போன்ற ஜமீன்தார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பிரமுகர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக விஜயநகர மகாராஜாவும் நூஜ்வீட்  ஜமீன்தாரும் இருந்தனர்.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர், சாப்டூர் முதலிய பல ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். சில ஜமீன்தார்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்தனர்.

இந்த ஜமீன்தார்களைத் தவிர தமிழ்நாட்டில் இருந்த பல பெரிய மிராசுதார்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர். உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில் இருந்த நெடும்பலம் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையம் பி.டி. ராஜன், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி. சௌந்திர பாண்டிய நாடார், திருநெல்வேலி மாவட்டத்தில் மேடைதளவாய் முதலியார் போன்றோர்.

இவர்களைத் தவிர சென்னை பி.தியாகராயசெட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி நாடார் போன்ற தரகு வியாபார பிரமுகர்களும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இ300px-justice_party_1930sருந்தனர்.

எனவே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியிலும் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்தவர்களால் ஆனது. தங்களுடைய சுரண்டலுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் பாதுகாவலனாகக் கொண்டிருந்த நிலபிரபுக்களையும்,  ஆங்கிலக் கம்பெனிகள் இந்தியாவில் அடித்த கொள்ளையில் பங்கு கொண்ட தரகு வியாபாரிகளையும் கொண்டதாகவே இந்தத் தலைமை திகழ்ந்தது.

இவர்கள் மட்டுமின்றி சிலோன், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோ – சைனா (இன்று வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்டது) போன்ற காலனி நாடுகளில் வட்டிக் கடைகள் வைத்து அநியாய வட்டி வாங்கி கொள்ளையடித்தவர்களும் இந்தக் கட்சியில் இருந்தனர்.

இவர்களைத் தவிர டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், சர். ராமசாமி முதலியார் போன்ற பிரிட்டிஷ் சர்க்காரின் செல்லப்பிள்ளைகளும் இந்தக் கட்சியில் இருந்தனர். இவர்களுக்கு ‘சர், திவான், பகதூர், ராவ்பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் சர்க்கார் அளித்திருந்தது.  (ஆதார நூல் : ஆரியமாயையா திராவிட மாயையா?  விடுதலைப்போரும்  திராவிட இயக்கமும் பக்-14)

இப்படி மக்களை சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?

நீதிக்கட்சியைச் சேர்ந்த யாரும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடவில்லை. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

கொங்கு நாட்டு ஆர். வீரையன் (1886-1938)

இவர் 1886ல் கோயம்புத்தூர் குக்கிராமமொன்றில் பிறந்தார். இளமைக் கல்வியை சிக்கலின்றி முடித்தார். புறநகரங்களிலே பொதுப்பணத்தாலும் அரசாங்கச் சலுகைகளாலும் நடத்தப்படுகிற பள்ளிகள் பழங்குடி மாணவர்களைச் சேர்க்க மறுப்பதையும், தவறிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனி இடங்களில் அமர்த்தப்படுவதையும் மிக வன்மையாக கண்டித்தார். இந்த அவலக் கேட்டிலிருந்து விடுபட தெருத்திண்ணைகளிலும், மரத்தடிகளிலும் சிறு பள்ளிகளை தொடங்கி வைத்து, வன்கொடுமைகளை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனேயே தீர்வு காணுவதில் முனைப்பாகப் பணியாற்றினார்.

பழங்குடி மக்கள் அஞ்சலகத்திற்குள் செல்லக்கூடாது, பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்ற கட்டுத்திட்டங்களை மீறிப் பலரை அழைத்துக் கொண்டு சென்று பலமுறை விதியோடு விளையாடினார்.

வீதியோரங்களில் வீடமைத்து வாடும் ஏழை எளியோருக்கு உரியவிடத்தில் நிலந்தந்து ஆதரிப்பது ஆளுவோருடைய கடமை என்பதை அன்றைய அரசாங்கத்திற்கு ஓயாமல் உணரச்செய்தவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அச்சுறுத்தியும் அடித்தும் கூலி தராமல் வேலை வாங்கும் கொடிய பழக்கத்தை ஆட்சியாளர் கவனிக்காமலிருக்கும் போக்கினை வன்மையாக கண்டித்து அவற்றிற்குப் பரிகாரம் தேடியவர்.

இவர் 1924ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத்  தெரிந்தெடுக்கப்பட்டார். தீண்டாமையால் விளையும் கொடுமைகளை நீக்க சட்டமன்றத்தில் சிறப்பாகவும்,  குறிப்பாகவும் பாடுபட்டார். தேர்தல் நேரங்களில் ஊர்ச்சாவடிகளுக்குள் பழங்குடி மக்கள் போக முடியாமை, உயர்த்தப்பட்டோர் பழங்குடி மக்களின் குடிசைகளை எரிப்பது, கால்நடைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை அவ்வப்போது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து தீர்வு காணுவார்.

ராவ் பகதூர் வி.ஐ. முனுசாமிப்பிள்ளை (1899-1955)

தாவர உற்பத்தி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். காலச்சூழ்நிலையால் சமுதாய அரசியல் போன்ற துறைகளில் இறங்கும் கட்டாயத்திற்குள்ளானார்.

1926லிருந்து 1937வரை அவர் தொடர்ந்து சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது நேர்மையான உழைப்பும் உண்மையான தியாகமும் இவரைப் பல்வேறு அமைப்புகளில் பங்குபெறச் செய்தன. உதகை மாவட்ட ஆட்சியின் தலைவராகவும் மாவட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். கோவை, நீலகிரி மாவட்டங்களின் கல்வித்துறைகளின் தலைவராகவும், விவசாய மன்றங்களின் செயலாளராகவும்,  கூட்டுறவு நிலையங்களில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1933ல் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பாகக் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார். பழங்குடி மக்கள் உரிமைக்காக, குறிப்பாக அரசியலில் தனி உரிமை பெறுவதிலே இவர் பேரார்வம் காட்டினார். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும், பொதுவாக நாட்டின் நலனிற்கும் மிகச் சீரிய வகையில் திட்டங்களை தந்துள்ளார்.

முதுபெரும் தலைவரான ஆர். சீனிவாசன் போன்றோர்களோடு இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று மாநாடுகளில் கலந்துகொண்ட, பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் அறிமுகமான தமிழகத் தலைவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவராவார்.

1938ல் சென்னை மாநில அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். 1950லிருந்து 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை எய்தினார்.

ராவ் சாகேப் எம்.சி. மதுரைப்பிள்ளை (1880 – 1935)

எளிய குடும்பத்தில் பிறந்து உண்மை உழைப்பாலும் நல்ல பண்பாலும் செல்வந்தரானார். ஏழை எளிய பட்டியல் வகுப்பு மக்களின் நலனிலே அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றினார். சென்னையில் பொதுவாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1921ல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டது. முதலாளி-தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை சாதிச்சண்டையாக உருவெடுத்தது. இதனை புளியந்தோப்புக் கலவரம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேலை நிறுத்தத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான திராவிடர்-ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாக பாவித்து உணவும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார்.

1925ல் இவர் சட்டமன்ற உறுப்பினாராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் தனித்து நின்றே பணியாற்றினார். ஒரு சில சமயங்களில் முதுபெரும் தலைவர் சீனிவாசனாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் அரசியல் அதிகாரமானது பழங்குடி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தனித்தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி முறையே சிறந்தது என இவர் ஆரம்பத்தில் கருதினார்.

சமுதாய நன்மைக்காக, திராவிடர், ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேடையில் பலமுறை கூட்டியிருக்கிறார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பணம், உடை, இருக்க இடம் போன்றவைகளைத் தந்து உற்சாகப்படுத்தினார். இவர் நகர மன்ற உறுப்பினராகவும் சில காலம் தொண்டாற்றியுள்ளார்.

பண்டிதமணி ஜி. அப்பாதுரையார்  (1890-1962)

இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியில் ஆதாரங்களோடு வாதிட்ட உண்மையான பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றைய காலத்து தூயதமிழ் இணைந்தோடும்.  கருத்தில் தரம் தெரியும். திறன் பேசும். அறன் ஒளிரும்.  சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உறக்கத்தை  உதறி செயலிலே வீரத்தை காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.

இவர் 1890ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலேயே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங்கொண்டிருந்தார் என்பார்கள்.

1907ல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் கிறுத்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21 வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அரிய கூட்டங்களை நடத்தினார்.

1912லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார்.

1917ல் மாண்டேகு-செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது, 1924ல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது ஆகியவை இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. 1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினைப் படைத்துள்ளார். 1930லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.

“எங்களுக்கெல்லாம் முன்னரே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மக்களைத்  திருத்தியவர் இவர்” என்று அன்னாரது நீத்தார் நினைவு நாளில் ஈ.வே.ரா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுவாமி சகஜானந்தர் (1891 -1958)

1891ல் வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். சமத்துவக் கொள்கையிலும் தன்னலமற்ற பணியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவராய் வாழ்ந்தார். தமிழ் மொழியில் புலமையும், வேதம், வேதாந்தம் மற்றும் பல கலைகளிலும் ஆழ்ந்த பயிற்சியும் பெற்ற பின்னரே அவர் சமுதாய தொண்டினை மேற்கொண்டார்.

வேதங்களில் கோயில் வழிபாடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பழங்குடியினர் கோயிலினுள் நுழைவதால் மூர்த்தா அல்லது மூர்த்தியின் புனிதம் சீரழிந்துவிடும் என்னும் நம்பிக்கையை இகழ்ந்தார். இந்த மூட நம்பிக்கைக்கு வேதங்களில் ஆதாரமில்லை என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் தன் இன மக்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோயிலை கட்டினார். சிதம்பரத்தில் நந்தனார் மடத்தை நிறுவி மற்றவர்களைப்போல தாமும் ஒரு மடத்தை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.

கல்விப்பணி: ஆன்மிகத்தெளிவு பெறவும் ஆத்மா உயர்வு அடையவும் கல்வி இன்றியமையாதது என்பது அவரது கருத்து. வேதம், வேதாந்தம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியவும் ஆய்வு செய்யவும் கல்வி ஒன்றே துணை செய்யும் என்பதை உணர்த்தினார். அறிவையும் பாதுகாப்பையும் எல்லா மக்களுக்கும் கல்வியே  பயக்கும் என்பதை எடுத்துக்காட்டினார். குறிப்பாக பழங்குடியினர் முழுமையான கல்வி பெற வேண்டும் என விரும்பினார். இக்குறிக்கோளோடு 1910ல் அவர் நந்தனார் பள்ளியை நிறுவினார். இன்றும் இப்பள்ளியை திறமையாக செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

1925ல் சுவாமி அவர்கள் சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே கருத்து ஒருமித்த பழங்குடிச்சமுதாய மக்களின் மற்ற தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அவர் பணியாற்றினார். உணர்ச்சிபொங்கும் அவரது சொற்பொழிவுகள் மற்ற இன மக்களின் உள்ளத்தைக் கூடத்  தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. பழங்குடி மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகவும் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.

பி.எம். வேலாயுதபாணி (1896-1962)

பூஞ்சோலை முத்துவீரர் நாவலர் ஈன்றெடுத்த செல்வர் நமது தலைவர் பி.எம்.வேலாயுதபாணி அவர்கள். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டாற்றும் பேறினை பெற்றார். தன் வட்டத்து மக்கள் பிற பகுதி மக்கள் என்ற பாகுபாடில்லாமல் பொதுவாக மக்கள் சுகாதாரத்தை கண்காணிப்பதோடு, ஆங்காங்கே பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும், சத்திரங்களையும் முதியோர் கல்விக் கூடங்களையும் துவக்கினார்; பிறர்  துவக்குவதற்குக் காரணமாகவும் இருந்தார். சமுதாய நலனிற்காகப் பல மன்றங்களைத் தோற்றுவித்ததோடு அவற்றில் உறுப்பினராக இருந்து செயல்களிலும் ஈடுபட்டார். கௌரவ நீதிபதியாகவும் சிலகாலம் இருந்தார்.

சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக ராணிப்பேட்டை தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தமது மூத்த தலைவர்களோடு பங்குகொண்டு தொண்டாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்பிலிருந்து வழுவாமலும், சமுதாய முன்னேற்றத்தையே குறிக்கோளாகவும் எண்ணி செயல்பட்டார். திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதைக் காணுவதைவிட தீட்டிய திட்டங்கள் செயலுக்கும் பயனுக்கும் உகந்ததா என்பதைக்  கண்காணிப்பதுதான் இவரது கொள்கையாயிருந்தது. மாநில உணவுக் குழு, மதுவிலக்குக் குழு, மருத்துவமனை திட்ட ஆலோசனைக் குழு போன்றவைகளில் இவர் மிகவும் பங்கேற்று பல அரிய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.

பி. பரமேஸ்வரன் (1909-1957)

பி.ஏ. பட்டதாரியான இவர் முதுபெரும் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேரனாவார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் செயலாளராக 1935லிருந்து பத்தாண்டு காலத்திற்கு பணிபுரிந்திருக்கிறார். இந்த இளமைப் பருவ சமுதாய, அரசியல் துறைகளில் ஏற்பட்ட அனுபவங்களோடு இவரை நாடு தெரிந்து கொள்ளுமளவுக்கு இவரது துணிவும் முயற்சியும் பெருந்துணையாய் நின்றன எனலாம்.

தலைவர் என்.சிவராஜ் அவர்களின் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழி நின்று தொண்டாற்ற 1942லிருந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டது இவருக்குள்ள மற்றொரு சிறப்பு. அனைத்து இந்திய செட்யூல் வகுப்பினர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளராகத் திறம்படப்  பணியாற்றியுள்ளார். பின்னாளில் அகில இந்திய டிப்ரஸ்ட் கிலாஸஸ் லீகிற்கு துணைத்தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். 1948ல் சென்னை மாநில பதிவுபெறாத ஷெட்யூல் வகுப்பினர் அரசாங்க ஊழியர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தினார்.

செங்கற்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராகவும் பதவி வகித்தார். பதவிக் காலம் முடியுமுன்பு இடையில் சென்னை மாநில அமைச்சரவையில் இவரை சேர்த்துக் கொள்ளத் தவிர்க்க முடியாத நிலையேற்பட்ட போது மேயர் பதவியிலிருந்து விலகி அமைச்சரானார். இங்கு பல குழுக்களில் பங்கேற்று பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கு உகந்த திட்டங்களை அரசாங்கத்திற்கு தந்தார்.

1964ல் இவர் தனது தலைமையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, விவசாயம், வீட்டுமனை போன்ற பல்வேறு துறைகளில் தனது கருத்தினை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்தார்.

(தொடரும்)

32 Replies to “நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03”

  1. நீதிக்கட்சிக்கு பல பக்கங்கள் எல்லாம் இல்லை போலிருக்கிறது. என்ன பெயரை மாற்றினாலும் ஒரே பக்கம்தான்.

  2. மீண்டும் ஒரு மிக நல்ல கட்டுரைத் தொடர். ஆசிரியருக்கு வந்தனம்.

  3. இதற்குப் பேரெல்லாம் நீதிக்கட்சியா? “அநீதிக்கட்சி”. இதைப் புரிந்துகொள்ள முடியாமல் தமிழக்த்தில் திராவிட கட்சிகளின் அடிமைகளாக இன்னும் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் படித்தாவது இந்த ஜனங்கள் திருந்தட்டும்.

  4. பட்டியலில் வரும் மனிதர்களின் உடைகளைப் பார்த்தால் மேற்கத்திய வெள்ளை நிற ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாகச் செயல்பட, மற்றும் செயல்பட்டு, “கிராமம் , கிராமத்தில் வாழ்வது, கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும், கேவலமான வாழ்க்கை வாழ்வதாகத் சித்தரிப்பது’ போன்றனவற்றைச் செய்து, பர தேசிகளான வெள்ளையர்களிடம் பெயரும், பொருளும் , வசதிகளும் பெறுவதுதான், அம்பேத்கர் உட்பட அனைவரின் குறிக்கோள் மற்றும் சாதனை என்று தெரிகிறது..

  5. அன்றைய சூழலில் எளிய மக்களுக்கு வேறு என்ன வழி இருந்தது? பங்கிம் சந்திர சட்டர்ஜி கூட “இராம ராஜ்ஜியத்தை காட்டிலும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் சூத்திரர்களுக்கு நல்ல நியாயமான நீதி கிடைத்தது” என்கிறதாக எழுதியுள்ளார் என படித்த நினைவு. சமூக தேக்க நிலை அன்று பாரத சமுதாயத்தை பீடித்திருந்தது. மேல்சாதி என கருதப்படக் கூடிய பலர் வெள்ளைக்காரர்களுக்கு போட்ட முகஸ்துதியை ஒப்பிட்டு பார்த்தால் இது விளங்கும்.

    “நமது கவர்னர் துரை அவர்களுடைய நந்தவனத்தைப் பார்த்தவிடத்தில் அது எனது காட்சிக்கு ஆகமப் பிரமாணமாகச் சொல்லப்பட்ட இந்திரனுடைய சிங்காரவனமாகிய கற்பகச்சோலை போல் இருந்தது. அவரது வெள்ளைப் புரவிகள் உச்சைச்சிரவம் என்னும் தெய்வப்புரவி போல இருந்தன. அங்குள்ள தடாகமோ இந்திர சரசு போலிருந்தது. நமது மகிமைப் பிரதாபராகிய கவர்னரவர்களோ போக தேவேந்திரன் என்றே பாவிக்கும்படியாக இருந்தார். அந்த சபையில் இருந்த துரைசானிமார்க்ளோ கந்தவர்வ ஸ்திரீகள் போல இருந்தார்கள். கந்தவர் ஸ்திரீகளுக்கு சிறகுண்டே! இவர்களுக்கு அது இல்லையே ஆதலால் இவர்களை அவர்களுக்கு எப்படி ஒப்பிடுகிறது என்று சந்தேகப்பட வேண்டுவதில்லை. இந்தத் துரைசானிமார்கள் தங்கள் தங்கள் கைகளில் மெல்லிய இறகு விசிறி பிடித்து சொகுசாக அசைத்துக் கொண்டிருந்தார்கள் அவைகள் இவர்கள் சிறகசைப்பது போல இருந்தது.”

    இப்படியெல்லாம் கவர்னர் துரைகளை துதி பாடி சொந்த செல்வம் சேர்த்த மேல்சாதிக்காரர்களுடன் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் தங்கள் சமுதாய உரிமைகளை பெற்றுத்தர போராடியுள்ள விதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.

  6. படத்துக்கும் கட்டுரைக்கு என்ன தொடர்பு?

    படத்திலிருப்பது ஒரு நீக்ரோ பெண்.

    தமிழ்தலித்து or தலித்துகள் கூட்டமுள்ள படத்தைப் போட்டிருக்கலாமே?

  7. மானமிகு கருணாநிதிக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடபு இருக்கிறது அவர் தெலுங்கு காரர் – இதுவோ தமிழ் நாடு ரோட்டுல எங்கு பஆகாளும் அவர் படம் இல்லையா?

    நிக்ரோக்களுக்கு நடந்த கொடுமை உலக பிரசித்தி – நிக்ரோக்களுக்கு நடந்த கொடுமைக்கு நிகராக நம்மவர்க்கும் நடந்தது – நடந்த கொடுமையின் ஆழத்தை அந்த நிக்ரோவின் படம் துல்லியமாக புரிய வைக்கிறது

  8. reality என்கிற பெயரில் எழுதியவருக்கு
    பர தேசிகளான வெள்ளையர்களிடம் பெயரும், பொருளும் , வசதிகளும் பெறுவதுதான், அம்பேத்கர் உட்பட அனைவரின் குறிக்கோள் மற்றும் சாதனை என்று தெரிகிறது..
    என்கிற வரிகள் உண்மையிலேயே அம்பேத்கரை வாசிக்காதவர்களின் குற்றம்.
    அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் – கிட்டதட்ட 37 பாகங்கள் நியூ சென்சூரி புக் ஹவுஸில் கிடைக்கும். படித்துப்பாருங்கள்.
    அவரது குறிக்கோள் என்ன?
    தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாய உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவர். ஆனாலும் இந்நாட்டிற்கு என்றும் துரோகம் செய்யவில்லை, நீதிக்கட்சியினரைப் போல.
    வட்டமேசை மாநாட்டில் பேசும்போது கூட பிரிட்டிஷாரை எதிர்க்க தயங்கமாட்டேன் என்று கூறினார்.
    நான் மதம் மாறப்போகிறேன் என்று அறிவித்தவுடன் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் கோடிகோடியாக பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியும் மயங்காதவர்.
    அவர் புத்த மதத்திற்கு மாறும் போது ‘நான் இந்த நாட்டின் பண்பாட்டிற்கு துரோகம் செய்யவில்லை. ஏனென்றால் புத்தமதம் இந்த நாட்டில் தோன்றிய மதம்.’ என்று கூறினார்.
    இதைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

  9. தமிழ் இந்துவில் வரும் மற்றும் வளரும் கட்டுரைகளெல்லாம், இந்துககளாய் இருந்தும் சமுதாய போராட்டத்தில், இந்துக்களை இழிவுபடுத்துபவர்களையும், இந்துக்களுக்கு எதிராகப போனவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வைப்பவை. ‘ராம் ராஜியத்தைக்காட்டிலும்’, ‘போக தேவேந்திரன் என்றே பாவிக்கும்படியாக’ என்பதேல்லாம், கருணாநிதிக்களைப்போல, ராமர் இல்லவேயில்லை, புராணங்கள் புரட்டுகதைகள் என்றோ , இந்துமதத்திற்கெதிராக எழுதப்படாமல், இந்துமதத்தை ஒட்டி, நின்தாச்துதியாகக் கூட எழுதப்பட்டவைதான். ஆனால் இந்துவாகப பிறந்திருந்த அம்பேத்கர், இந்தியாவில் உருவானது என்று சப்பை கட்டி, இந்து மதத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்த மதத்தில் சேர்ந்தது, அவர் கிறித்தவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ சேர்ந்ததற்கு ஈடுதானே தவிர வேறொன்றும் இல்லை; ஆனால் அம்பேத்கார் அப்படிப்பட்ட செய்கையால், இன்றும், அவர்பெயரால், இந்துமதத்திற்கு எதிராக அக்கிரம் செய்பவர்களுக்குத் துனைபோகின்றாரே தவிர, தமிழ் இந்துவின் எண்ணமான, இந்து மதத்தை அநியாயமான தாக்குதல்களிலிருநது, காப்பது அல்ல; அந்த அளவில், அம்பேத்கர் இந்து மதத்திற்கு, துரோகம் செய்தவர்தான். சட்ட மேதையாக இருநது மட்டுமே தர்ம தேவதை ஆகிவிடமுடியாது.

    (Edited and published.)

  10. //

    படத்துக்கும் கட்டுரைக்கு என்ன தொடர்பு?

    படத்திலிருப்பது ஒரு நீக்ரோ பெண்.

    தமிழ்தலித்து or தலித்துகள் கூட்டமுள்ள படத்தைப் போட்டிருக்கலாமே?
    //

    ஆம். தமிழகத்தில் வன்கொடுமைக்கு உள்ளாகும் தலித்துகளின் படத்தைப் போட்டிருந்தால் உணர்வு பூர்வமான உறவின் காரணமாக வாசகர்கள், தலித்துகளுக்கு ஆதரவு அளிக்கத் தூண்டப்பட்டிருப்பார்கள்.

  11. அம்பேத்கரை பௌத்த மதத்திற்கு மதம் மாற வைத்தது எது ?
    கண்டிப்பாக இந்துமதம் என்று சொல்லிவிடலாம். அதை அவர் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியும் இருக்கிறார்.
    அந்த அளவுக்கு அவர் ரணப்பட்டிக்கிறார்.
    நான் அண்ணா மேம்பாலம் செல்லும்போதெல்லாம் கீழே அமெரிக்கன் எம்பசியில் இந்தியர்கள் கடும் வெயிலில் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள். ஒரு நாற்காலி இல்லை. ஒரு கூரை இல்லை. அமெரிக்க எம்பசி நினைத்திருந்தால் நாற்காலி கூட வேண்டாம், ஒரு கூரையாவது போட்டிருக்கலாம். இது இந்தியர்களை கேவலப்படுத்தும் செயல் என்று என் மனதில் ஓடும். மனதில் ஆத்திரம் கரைபுரண்டு ஓடும். இன்றும் அப்படித்தான். இதையே என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அந்த காலத்தில் பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள் இந்துதமத்தை ஆதாரமாக காட்டி செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்து மதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
    இதற்கு காரணம் இந்துமதம் அல்ல இந்து மத த்தை சரியாக உணராதவர்களின் செயல் என்று நீங்கள் சொல்லிவிடலாம். ஆனால் கடைபிடிப்பவர்கள் இந்துமத த்தை அல்லவா கைகாட்டுகிறார்கள். அதற்கு இந்து மத நூல்களிலிருந்து அள்ளி அள்ளி ஆதாரங்களை கொடுக்கிறார்களே.
    அம்பேத்கர் பௌத்தமத த்திற்கு மாறியது இஸ்லாம், கிறிஸ்தவத்திற்கு மாறியதற்கு சம ம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அறிவுஜீவிகள் மத்தியில் வேண்டுமானால் பௌத்தம் இந்துமத த்திற்கு எதிரானது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.
    ஆனால் ஒரு சாதாரண இந்து மனதில் புத்தர் ஓர் இந்துவே. பௌத்தம் வேறு இந்துமதம் வேறு என்று அவனால் பிரித்துபார்க்க முடியவில்லை. புத்தர் பல அவதாரங்களில் அவரும் ஒருவர் என்பது தான் பலருடைய எண்ணங்களில் ஓடுகிறது. எங்கள் குடிசைப்பகுதியில் உள்ள கோயில்களில் புத்தர் படமும் இருக்கும். நான் பல கோயில்களில் புத்தருடைய போட்டோ இருப்பதை பார்த்திருக்கிறேன். ஏனென்றால் புத்தரும் இந்துக் கடவுளைப் போல ஒரு அவதாரம் என்று ஒரு இந்து நினைப்பதால்தான்.
    அம்பேத்கர்மட்டும் இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்திற்கோ மாறியிருந்தால் நாடு சின்னாபின்னமாகியிருக்கும். இதை நான் சொல்லவில்லை. பல தலைவர்கள் அப்போதே சொல்லியிருக்கிறார்கள்.

  12. வெங்கடேசனுக்கு என் கேள்விகள்;

    1.ஒரு மனிதன் ஏன் மதம் மாறுகிறான்?

    2.இந்து மதமும் பவுத்த மதமும் வேறா அல்லது ஒன்றா என்பதை நீங்கள் ஏன் இந்துவிடன் மட்டுமே கேட்கிறீர்கள்?

    ஏன் அக்கேள்வியை ஒரு பவுத்தமதத்தானிடம் கேட்கவில்லை? அல்லது அவர்களுள் ஆராவது பதில் சொல்லி நீங்கள் படித்திருந்தால் அதை இங்கே எழுதவும்.

    3.அம்பேதகர் பவுத்தத்துக்கு மாறியது பிறமதங்களுக்கு (இசுலாம், கிருத்துவம்) சமமில்லை. ஓகே. பின்னர் அவரின் மதமாற்றம் எதைக்காட்டுகிறது?

    ம்’நான் இந்துவாகப் பிறந்தேன். அதை என்னால் மாற்ற முடியவில்லை. ஆனால் இந்துவாக நான் சாகமாட்டேன். என்னால் அதை செய்ய முடியும்” என்றார்.

    4.இதிலிருந்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

    5. இந்து மதம் தலித்துகளை பலகொடுமைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளது. இன்றைய நிலை என்ன? உங்கள் பார்வையில்.

    6, நீங்கள் தற்சமயம் இந்துவா? பெவுத்தமா?

    வெங்கடேசன் தலித்து போலிருக்கிறது. எனவே பதில்கள் சுவாராசியமாக இருக்கும்.

  13. தமிழிந்து.காமுக்கும் எனக்கும் என்னா பிரச்னைனா, இங்கே எல்லாம் ரொம்பரொமப நீளம். என்னால் படிக்க முடியலை.

    இருப்பினும், வெங்கடேசனின் கட்டுரைகளைமட்டும் – முழுக்க முடிஞசப்புறம் – படிக்கிறேன்.

    அப்போத ஒரு holistic ஐடியா கிட்டும்.

  14. மொத்த எத்தனி பாகம் சார்?

  15. இந்து பெற்றோரின் 14 ஆவது குழந்தை அம்பேத்கர் 1891 AD யில் பிறந்து, 1907 இல், 9 வயதான பெண்ணை மணந்து, 1935 இல் முதல் மனைவி மறைந்தபின் இரண்டாம் முறை மணந்து, 1948 இல் “The Hindu Civilisation…. is a diabolical contrivance to suppress and enslave humanity ” என்று எழுதி 1956 இல் பௌததத்திற்கு மாறினார். மோகன்தாஸுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காங்கிரசால் எதிர்க்கப்பட்டு பின்பு அதே காங்கிரசால் ஆசுவாசப்படுத்தப்பட்டு, இந்து மத எதிரி என்பதால் மட்டுமே, சட்டத்தை எழுத வைக்கப்பட்டார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே வழக்கில் இருந்த இந்து மதம் அசோகர் முதற்கொண்டு முஹம்மதியர்கள், கிறித்தவர்கள் போன்றோர்களால் சீரழிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோலவும், வளர்த்த கடா மார்பில் பாய்வது போலவும், எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்றும் இந்து மதத்தை கேவலப்படுத்தி, பவுத்தரானார். மேலே படியுங்கள்:
    https://en.wikipedia.org/wiki/22_Vows22 Vows of Ambedkar
    After receiving ordination, Ambedkar gave dhamma diksha to his followers. The ceremony included 22 vows given to all new converts after Three Jewels and Five Precepts. On 16 October 1956, Ambedkar performed another mass religious conversion ceremony at Chanda. He prescribed 22 vows to his followers:
    I shall have no faith in Brahma, Vishnu and Maheshwara nor shall I worship them.
    I shall have no faith in Rama and Krishna who are believed to be incarnation of God nor shall I worship them.
    I shall have no faith in Gauri, Ganapati and other gods and goddesses of Hindus nor shall I worship them.
    I do not believe in the incarnation of God.
    I do not and shall not believe that Lord Buddha was the incarnation of Vishnu. I believe this to be sheer madness and false propaganda.
    I shall not perform Shraddha nor shall I give pind-dan.
    I shall not act in a manner violating the principles and teachings of the Buddha.
    I shall not allow any ceremonies to be performed by Brahmins.
    I shall believe in the equality of man.
    I shall endeavor to establish equality.
    I shall follow the noble eightfold path of the Buddha.
    I shall follow the ten paramitas prescribed by the Buddha.
    I shall have compassion and loving kindness for all living beings and protect them.
    I shall not steal.
    I shall not tell lies.
    I shall not commit carnal sins.
    I shall not take intoxicants like liquor, drugs etc.
    I shall endeavor to follow the noble eightfold path and practice compassion and loving kindness in every day life.
    I renounce Hinduism, which is harmful for humanity and impedes the advancement and development of humanity because it is based on inequality, and adopt Buddhism as my religion.
    I firmly believe the Dhamma of the Buddha is the only true religion.
    I believe that I am having a re-birth.
    I solemnly declare and affirm that I shall hereafter lead my life according to the principles and teachings of the Buddha and his Dhamma

  16. ஹிந்து மதத்தில் புரையோடிப்போயிருந்த ஜாதி ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக அம்பேத்கார் போராடினார். அதற்குக் காரணம் ஜாதியின் காரணமாக அவர் பல இடங்களில் பலமுறை அவமானப் படுத்தப்பட்டுள்ளார். அவர் பரோடா சமஸ்தானத்தின் முதல் அமைச்சராக இருந்தபோதும் அவர் குடி இருப்பதற்கு எவரும் வாடகைக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. அவரது அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்தவர் கூட பைல்களைத் தூக்கித்தான் போட்டுள்ளார். குதிரை வண்டியில் தனது சகோதரருடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கையில் இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்தவுடன் குதிரை வண்டியை ஓட்டிச் சென்றவர் அப்படியே வண்டியைக் கவிழ்த்து விட்டுள்ளார். வகுப்பறையில் மற்ற மாணவர்கள் பெஞ்சில் அமர்ந்து பாடம் படிக்க அனுமதி. அம்பேத்கார் அவர்களுக்கோ தரையில் உட்கார்ந்து கொள்ள அனுமதி. இது போன்று அவரது வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்ற போதும் அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு தனது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வந்தார். ஹிந்து சமுதாயதினரிடமும் தீண்டாமையை விட்டுவிட்டு அனைத்து ஜாதியினர்ரையும் சமமாகப் பாவிக்கும்படி பலமுறை வேண்டுகோள் கொடுத்தும் ஹிந்து சமுதாயம் மாறாத காரணத்தினால் தனது வாழ்நாளின் இறுதியில் நமது நாட்டில் தோன்றி எவ்வித கலாச்சார முரண்பாடும் இல்லாமல் இருந்து வருகின்ற பௌத்த மதத்திற்கு மாறியது சரியான முடிவே. இதுவே அவர் ஹிந்து மதத்திற்கு ஆற்றியுள்ள மிகப் பெரிய தொண்டாகும்.

    வித்யா நிதி

  17. இந்து மதம் ஒன்றும் அம்பேத்கார் பெற்றெடுத்த பிள்ளை இல்லை, கெட்டுப்போனதாக சொல்வதற்கும மற்றும் திருத்துவதற்கும; ஜாதி ஆதிக்கம் புரையோடியதர்க்கு, அந்நிய படையெடுப்புகளும், அவற்றால் நிகழ்ந்த இஸ்லாமிய, கிறித்துவ கலப்பும், அந்நியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தான் காரணம்; கடினமான காலக் கட்டத்தில் இருந்த அந்நிய ஆதிக்க இந்தியாவில், 14 பிள்ளைகளைப் பெறுவார்களாம்; இந்து முறைப்படி, முதல் மனைவி இறங்ககும் வரை பொறுத்திருந்து , இரண்டாம் மணம புரிந்தபின், பவுததராவாராம்; பவுத்த சன்யாசிகளப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்; பவுத்த குடும்பஸ்தன் என்ற ஒன்று பவுத்தத்தில் கிடையாது; இந்துவாகப் பிறந்து, இந்துவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதத்தை முதுகில் குத்துவது; எட்டப்பன் கூட இதைச் செய்ததில்லை.

  18. Dear Reality,

    Ambedkar is verily a Bodhisattva in modern times. Perhaps if you or i have been in his place we would have become disenchanted with Hindustan. Ambedkar considered his conversion to a sister spiritual stream well within Hindu/Indic fold. Hinduism is not Brahminical or Vedic or Tantric. It is all that and much more. The problem that the present Hindu society has and which its ‘Peethams and Atheenams’ refuse to address and worse which they even tried to project as Dharma, is a perversion of mind. Dr. Ambedkar rightly recognized and termed it as “social stagnation”. Let us learn from the bitter experiences of Ambedkar and go for a “root and branch reform” – an internal social revolution. Let us open up our traditional decaying institutions to the depressed sections of the society. Let Advaitic Humanism liberate Dalits from Karmic apartheid we have advocated so cunningly in the name of Dharma. Let the real humanist Dharma as manifested by Swami Vivekananda and Ambedkar shine forth upon us.

  19. இந்து மதம் அம்பேத்கர் பெற்றெடுத்த பிள்ளை இல்லைதான்.
    நீங்கள் சொல்லுங்கள் இந்து மதம் யார் பெற்றெடுத்த பிள்ளை?
    கெட்டுப்போனதாக சொல்வதற்கும், திருத்துவதற்கும் யார் யாருக்கு உரிமை உள்ளது?
    ஜாதி ஆதிக்கம் புரையோடியதர்க்கு, அந்நிய படையெடுப்புகளும், அவற்றால் நிகழ்ந்த இஸ்லாமிய, கிறித்துவ கலப்பும், அந்நியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது.
    தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் விடாதே என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?
    தாழ்த்தப்பட்டவர்களை தெருவில் நடக்க விடாதே என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?
    தாழ்த்தப்பட்டவர்களை வேதம் படிக்க விடாதே என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?
    அடிமை வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?

    அம்பேத்கர் தன்னை பௌத்த சன்யாசி என்று எப்போதும் கூறியது கிடையாது.

    ‘வளர்த்த கடா மார்பில் பாய்வது போலவும்’ என்ற வரி அம்பேத்கருக்குப் பொருந்தாது சார். ஏனென்றால் கடாவை பலிகொடுக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தது நீங்கள் சொல்லும் இந்துமதம்.

  20. தமிழ் இந்து வெளியிடும் கட்டுரைகள் அலுவலகங்களிலும், நூலகங்களிலும், டீக் கடைகளிலும்கூட அலசப்படுகின்றன. மரியாதைக்குரிய வெங்கடேசன் அவர்களுடைய இந்தத் தொடரும் அலசப்படுகிறது. இங்கே அவர் கேட்டுள்ள கேள்விகள் இந்துக்களை யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

    இந்தக் கட்டுரை குறித்து, வெங்கடேசன் அவர்களின் கேள்விகள் குறித்து நான் மிகவும் மதிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு இந்துத்துவ அறிஞர் ஒருவரோடு உரையாடினேன். அவர் சொன்ன பதிலை இங்கு இடுகிறேன்:

    ”It is not M.Venkatesan who is the first to say that we should not and can not blame Christians and Muslims for our social evils.

    Param Pujaneya Bala Saheb Deorasji the third Sar Sangha Chalak of RSS said that.

    Dalit anger is part of Hindu civilization. When we inherit the properties of our ancestors we also inherit their debts. Hindu Dharma and Society owe a debt to Dalit community – Their anger is justified and in this case doubly justified so. ”

    குறைகள் இருந்தால் அந்தக் குறைகள் இருக்கின்றன என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்லுவதும், அவற்றை அழிக்க சிரத்தையாகச் செயல்புரிவதும்தான் இந்துத்துவம்.

  21. /அன்புள்ள ம.வெங்கடேசன்,

    //இந்து மதம் அம்பேத்கர் பெற்றெடுத்த பிள்ளை இல்லைதான். நீங்கள் சொல்லுங்கள் இந்து மதம் யார் பெற்றெடுத்த பிள்ளை?//
    இந்த கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்டதில்லை என்றாலும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் என நினைக்கிறேன். இந்து தருமம் எவரும் பெற்ற பிள்ளை இல்லை. நம் அனைவருடையவும் சொத்து. நம் அனைவருடையவும் உன்னதங்களும் தவறுகளும் அதில் அடங்கியுள்ளன.
    //கெட்டுப்போனதாக சொல்வதற்கும், திருத்துவதற்கும் யார் யாருக்கு உரிமை உள்ளது?//
    நிச்சயமாக இந்த அமைப்பினால் மிகவும் கொடுமைப்படுத்த மக்களுக்கு உரிமை உள்ளது. அதாவது தலித்துகளுக்கு.
    //தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் விடாதே என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?//
    இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை வழிபாட்டுத்தலங்களுக்குள் அனுமதிக்காத நிலை 19 ஆம் நூற்றாண்டில் கூட அங்கும் நிலவத்தான் செய்தது.
    //தாழ்த்தப்பட்டவர்களை வேதம் படிக்க விடாதே என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?//
    ஆனால் ஹிந்து சமுதாய சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளுக்கு ஹிந்து சமய சாதியவாதிகளுடன் சேர்ந்து கொண்டு நிச்சயமாக காலனியவாதிகள் முட்டுக்கட்டை போடத்தான் செய்தார்கள்.
    //அடிமை வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சொன்னார்களா?//
    அடிமை முறையை இஸ்லாம் நிறுவனப்படுத்தியது. கிறிஸ்தவம் நியாயப்படுத்தியது. நமது தாழ்த்தப்பட்ட மக்களை குற்றப்பரம்பரையினராக முத்திரை குத்தியதில் நமது சமூக சீர்திருத்தங்களின் வேகத்தை தடை செய்ததில் நிச்சயமாக கிறிஸ்தவ இஸ்லாமிய காலனிய ஆதிக்க மேலாதிக்க சக்திகளின் பங்கு நிறையவே இருக்கிறது. இதை நாம் மறந்து விட முடியாது.
    //வளர்த்த கடா மார்பில் பாய்வது போலவும்’ என்ற வரி அம்பேத்கருக்குப் பொருந்தாது சார். ஏனென்றால் கடாவை பலிகொடுக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தது நீங்கள் சொல்லும் இந்துமதம்.//
    நூற்றுக்கு நூறு சரியான வார்த்தைகள் ம.வெங்கடேசன். ஆனால் இவர்கள் சொல்லும் ஆசாரவாதங்கள் மட்டுமே ஹிந்து மதம் அல்லவே. ராமானுஜரின் இதயத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களுக்காக வழிந்த இரத்தமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமுதாய விடுதலையை பெற்றுத்தந்த ஸ்ரீ நாராயணகுருவின் அத்வைதமும் அய்யா வைகுண்டரின் காவிக்கொடி புரட்சியும் விவேகானந்தரின் வீர முழக்கமும் அல்லவா ஹிந்து மதம். அந்த ஆன்மநேய மானுட விடுதலையை தூக்கிப்பிடிப்பது நம் நோக்கமாக இருக்கட்டும். அண்ணல் அம்பேத்கரின் இருதயம் விசாலமானதாக இருந்தது. எனவேதான் அவர் ஹிந்து பண்பாட்டுக்கு ஊறு செய்யாத நம் மண்ணின் மார்க்கங்களை சுவீகரித்தார். உங்கள் கோபம் நியாயமானது. இன்றும் நம் சமுதாயத்தில் அந்த கருணையை உணரமுடியாதவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்தான். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல நிச்சயமாக அன்பு எந்த திறக்க முடியாத மனக்கதவையும் திறந்துவிடும். சாதிய இருள் மூடிக்கிடக்கும் ‘மேல்சாதி’ என தங்களை தாங்களே நினைப்போரின் மனங்களைக் கூட அத்வைத அன்பு திருத்தி விடும்.

  22. // ……. I shall have no faith in Brahma, Vishnu and Maheshwara nor shall I worship them.
    I shall have no faith in Rama and Krishna who are believed to be incarnation of God nor shall I worship them.
    I shall have no faith in Gauri, Ganapati and other gods and goddesses of Hindus nor shall I worship them.
    I do not believe in the incarnation of God.
    I do not and shall not believe that Lord Buddha was the incarnation of Vishnu. I believe this to be sheer madness and false propaganda. …..//

    தூய அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சிவனையோ, பார்வதியையோ, விஷ்ணுவையோ அல்லது அவர்களைப் போன்ற ரூப-குண தெய்வங்களை வழிபடுவதில்லை. அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது.

    அவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னால், அம்பேத்கார் வடிவமைத்த உறுதிமொழிகள் இந்து மதத்திற்கு எதிரானவை என்று சொல்லலாம்தான்.

  23. அம்பேத்கர் இந்து மதத்தை நிறையவே விமர்சித்துள்ளார் என்பது உண்மையே. ஆனால் அதனை நாம் அதற்குரிய contextல் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இந்துமதம் பற்றி ஈவேராவின் இழிவுரைகளையும், அம்பேத்கரது விமர்சனஙக்ளையும், மேலோட்டமாகப் பார்த்து “இந்து விரோதம்” என்று முத்திரை குத்திவிட முடியும் தான். ஆனால் அவை ஒரே விதமானவையல்ல,

    அம்பேத்கர் தனது பொதுவாழ்வின் தொடக்கத்தில் எழுதிய Riddles of Hinduism நூலில் இந்து தெய்வங்கள், புராணங்கள், சடங்குகளை “பகுத்தறிவு” ரீதியாக கேலியும், விமர்சனமும் செய்துள்ளார் (இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் பண்பாட்டு ரீதியாக அபத்தமானவை). அப்போதைய இந்து சமூகத்தின் மீது இருந்த ஒரு கோபக் கொந்தளிப்பில் இவை அம்பேத்கரால் எழுதப்பட்டவை என்றே நாம் கருத வேண்டியுள்ளது. .

    பின்னர் அடுத்த காலகட்டத்தில் சூத்திரர்கள் யார்’ போன்ற நூல்களில் வேதங்களையும், ஸ்மிருதிகளையும் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் தளத்திற்கு வருகிறார். சட்ட உருவாக்கத்தின் போது சம்ஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று வெளிப்படையாகவே தன் கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

    1945ல் ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு வருகை தந்த போது அங்கு தலித்கள் உட்பட அனைத்து சாதியைச் சேர்ந்த இந்துக்களும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அந்த இயக்கத்தை வாழ்த்தி ஆசிர்வதித்திருக்கிறார் அம்பேத்கர். அந்த இயக்கத்தை நிறுவிய டாக்டர் ஹெக்டேவார் மற்றும் அதன் அப்போதைய தலைவர்கள் பலரும் பிராமணர்களே என்பது குறிப்பிடத் தக்கது. பிராமணீயம் என்ற சொல்லை “சாதீய அடுக்குமுறை” என்ற அர்த்தத்திலேயே தனது எல்லா நூல்களிலும் பயன்படுத்தியவர் அம்பேத்கர். ஆயினும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதி மீதும் அவர் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கவில்லை. ஆரிய-திராவிட இனவாதத்தை முற்றிலுமாக நிராகரித்தார்.

    நாசிக் காலாராம் கோவில் நுழைவுப் போராட்டத்தின் தோல்வி அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாண்டுரங்கன் மீது பெரும் பக்தி கொண்டிருந்த அவரது மனைவி சாதி இழிவு என்ற ஒரே காரணத்தினால் தனது மரணத் தறுவாயில் கூட தன் இஷ்டதெய்வத்தை சென்று வழிபட முடியவில்லை என்ற கொடுமையான யதார்த்தமும் அவரைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. தொடர்ச்சியான பல போராட்டங்களுக்குப் பின்னரும் தலித் உரிமைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் அவரை பௌத்தமதம் நோக்கித் தள்ளின. அவர் பௌத்தராக மதம் மாறியபின் வாழ்ந்தது ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே.

    அம்பேத்கரை சரியான நோக்கில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். realityயின் அம்பேத்கர் பற்றிய கணிப்பு தவறானது. இன்றைய காலகட்டத்தில் ”இந்து மதம்” மீது ம.வெங்கடேசன் வெளிப்படுத்தும் அளவு கடந்த கோபமும் தேவையற்றது என்பது என் எண்ணம்.

  24. அரவிந்தன் நீலகண்டன் ரொம்பவும் தலித்துகளுக்காக கண்ணீர் வடிக்கிறார். இன்னும் சிலர் இருக்கிறார்களாம்.

    அவர்களை அன்பு திருத்துமாம். இப்படியே எத்தினி நாள்கள் சொல்வீர்கள்?

    சிரிக்கவா அழ்வா நீலகண்டன்?

  25. வந்துட்டாருப்பா களிமிகு கணபதி. சொல்றாருப்பா இப்படி:

    . ஆம். தமிழகத்தில் வன்கொடுமைக்கு உள்ளாகும் தலித்துகளின் படத்தைப் போட்டிருந்தால் உணர்வு பூர்வமான உறவின் காரணமாக வாசகர்கள், தலித்துகளுக்கு ஆதரவு அளிக்கத் தூண்டப்பட்டிருப்பார்கள்..........

    நீக்ரோ என்று ஏளனமாக அழைக்கப்படும் மக்களையும் கிறுத்துவ இசுலாமிய மதங்கள் அடிமைகளாக நடத்துவதால் அவர்களும்கூட தலித்துகள்தான். ஒருவேளை அதனால் இந்தப் படத்தைப் போட்டிருக்கிறார்களோ என்னவோ ? 🙂

    ஆனால், அந்தக் கமெண்ட் சொல்லுவதைப் போல, நம்மூரிலேயே தலித்துகள் கோடிக்கணக்கில் இருக்கும்போது ஏதோ வேறு ஒரு நாட்டில் இருக்கும் தலித்தின் படத்தைப் போட்டால் நமக்கு எப்படி ஒரு உறவு பூர்வமன உணர்வு எழும் ?

    நம் தமிழர்களைப் போலவே ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் கொடூரமான கொத்தடிமை வேலைகள் செய்தவர்கள்/செய்து வருகிறவர்கள்தான் படத்தில் உள்ள நீக்ரோ அடிமைகளும்.

    ஆனால், கரும்புத் தோட்டத்திலே, நம் தமிழர்கள் படும் துன்பத்தைப் பற்றி பாரதியார் ஒருவர் மட்டும்தான் உலகிற்குச் சொன்னார். அந்தப் பண்ணைகளை நடத்தியது கிருத்துவர்கள்தான். (இதே தளத்தில் வந்த நரசய்யா அவர்களின் கட்டுரை சொல்லும் டி காமா பற்றிப் பார்க்க: https://tamilhindu.com/2010/05/indian-maritime-history-book-review/)

    பாரதியார் அதைப் பற்றி எழுதும்போது கதறி அழுதுகொண்டே எழுதினாராம். அப்போது ஆங்கிலேயர்களிடம் சர் பட்டம் வாங்கத் துடித்தவர்கள்தான் நீதிக் கட்சியின் பிதாமகர்கள். இவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் பாரதியாரைப் பற்றி மட்ட்மான தகவல்களை இப்போது பரப்பி வருகின்றனர். அவர்களைத்தான் நாம் ஆட்சிக்கட்டிலில் அதிகார பீடங்களில் ஏற்றி அழகு பார்க்கிறோம். உறவுபூர்வமான உணர்வு.

    படத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அந்தச் சிலை பார்போஸா தீவில் உள்ள சிலைகளில் ஒன்று. அந்த ஊர்க்காரர்களையும் கிருத்துவமே அடிமைகளாக வைத்திருந்தது. அந்த அடிமைத்தனத்தைக் குறிக்கும் அடையாளமாகத்தான் அந்த உலகப் புகழ் பெற்ற சிலைகள் வைக்கப்பட்டன.

    அதைப் போலவே, நம் நாட்டு தலித்துகள் விடுதலை பெற்று விட்டார்கள் என்று காட்ட நம்மூரில் மாயாவதி தனக்குத் தானே தெருவெங்கும் சிலைகள் எழுப்புகிறார். உறவுபூர்வமான உணர்வு.

    இந்தியாவில் இருக்கும் தலித்துகளை நீதிக்கட்சிக்காரர்கள், திராவிட இயக்கத்தார் போன்ற கைக்கூலிகளை வைத்து ஒடுக்குவதும், பார்போசா தீவில் அடிமை அரசு நடத்திய அதே கிருத்துவ மதம்தான். அவர்களிடம் கைக்கூலியாக இருந்து தலித்துகளைக் கொடுமைப் படுத்துகிற, இந்து மதத்தை அழிக்க உழைக்கிறது ஈவேரா வழிவந்த திராவிடப் பாரம்பரியம். அதைத்தான் நாமும் ஆதரிக்கிறோம். உறவுபூர்வமான உணர்வு.

    நாம் என்றைக்காவது சோமாலியப் படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டதுண்டா? சோமாலியர்களின் அந்த நிலையை இசுலாம் என்ற மதம்தான் முழுக்க முழுக்கக் உருவாக்கியது என்பதுதான் நமக்குத் தெரியுமா ?

    தெரிந்தால் நாம் கொதித்து எழுந்து இருந்திருக்க மாட்டோம். ஏனென்றால், சோமாலியப் பஞ்சப் பரதேசிகளுக்கும் நமக்கும் இல்லாதது – உறவுபூர்வமான உணர்வு.

    கசாப்பு கஸாபும், அஃப்சல் குருக்களும், மனுசக் கறி தின்னும் மதானியும் நம்மூரில் உள்ளவர்களால் கதாநாயகர்களாக்கப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்த நாம், அந்தக் கேடுகெட்டவர்களை மன்னித்து, அரவணைத்துப் பாதுகாக்கும் கட்சிகளுக்குத்தான் ஓட்டுப் போட்டு ஆதரிக்கிறோம். உறவுபூர்வமான உணர்வு.

    மும்பையில் குண்டு வைத்தவன் தாவுத் இப்ரஹீம் என்பது மும்பைக்காரர்களுக்கே தெரியும். அந்த மும்பை குண்டு வெடிப்புக்கு அடுத்த வருடமே தாவுத்தை ஹீரோவாகக் காட்ட அவன் பெயரை வைத்துத் “தாவுத்” (Daud) என்ற படம் வந்தது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கினார்கள். இப்படி நாம் நமது நாட்டினரோடு உணர்வு பூர்வமாக உறவு காணுவது நம் இயல்பே.

    அதனால், நம்மூர் தலித்தின் போடாமல், வேறு ஒரு நாட்டின் தலித் படத்தைப் போட்டது பெருங்குற்றம்தான். அதுவும் அந்த தலித், தமிழ் தலித்தாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இப்போது உணர்வுபூர்வமான தொடர்பு இல்லாமல் போய்விட்டது பாருங்கள்.

  26. அதே அம்பேத்கரை மிகவும் ஆதரித்து, அன்பு காட்டி வாழ்வில் உயர வழி காட்டியவரும் ஒரு அந்தணர் தான் என்பது சரித்திரம்

    நாம் ஏன் கிறித்தவ சர்ச்சையும் ,இஸ்லாமிய ஏகாதிபத்தியத்தையும் விமரிசிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டோம் என்றால் அவர்கள் பாரத சமுதாயத்தில் நிலவும் பூசல்கள்,குழப்பங்கள் மற்றும் சுயநலம் பிடித்த படித்த,பணக்கார வர்க்கம் ,மேலும் நாட்டுப் பற்று இல்லாத ஊழல் மலிந்த அரசியல் வாதிகளை உபயோகித்து மிக உன்னதமான ஒரு வாழ்க்கை முறையை முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதனால்தான் .
    அதனால் அவர்களின் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பி நமது இளைஞர்களும் ,யுவதிகளும் வழி மாறிச்சென்று விடக்கூடாது என்பதால்தான்.
    மிக உன்னதமான பல கோட்பாடுகளை நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் .அவை எல்லாம் ஒரே முற்றாக அழிந்து விடக் கூடாது .
    அவை நம் மக்களின் வாழ்வை மேம்பட வைக்க உபயோகமாக இருக்க வேண்டும் என்பதுதான் ..
    நமக்குள் இருக்கும் அநீதிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் நாம்தான் முயற்சி செய்து ஒழிக்க வேண்டுமே தவிர ,நமக்கு நல்லது நினைக்காத வேற்றார் அல்ல.
    அதனால் தான் மகாகவி பாரதி ‘ஆயிரம் உண்டிங்கு சாதி ,எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி’ என்று பாடினார்.
    அதே போல் ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசி’ என்று ஒரு குட்டு குட்டினார்

    நாம் அம்பேத்கரை மதிக்கிறோம்,போற்றுகிறோம்,அய்யா வைகுந்தரை போற்றுகிறோம்,நாராயண குருவைப் போற்றுகிறோம் ஏனென்றால் அவர்கள் இந்த மண்ணின் தவப் புதல்வர்கள் .இந்த மண்ணை மதித்தவர்கள் .குறைகளைக் களைய வேண்டும் என்று நினைத்தனரே தவிர நமது முன்னோர்களின் பாரம்பரியத்தில் உள்ள எல்லாஅம்சங்களையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை
    நமது பாரம்பரியம் ஒழிக்கப்பட்டால் அந்த வெற்றிடத்தில் எது நுழையும் என்று அவர்கள் மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருந்தனர்
    அந்த சக்திகளின் முற்கால சரித்திரம் மற்றும் இக்கால நடத்தை இவைகளை நாம் நன்கு அறிவோம்
    அவர்கள் உள்ளே புகுந்தால் குரங்கு அப்பத்தை தின்ற கதை போல் நம் சமுகம் ஆகும் என்று அந்த சான்றோர்கள் அறிந்திருந்தனர்.

    அதற்காக நம் சமுதாயத்தில் உள்ள அவலங்களை நாம் போர்வைக்கு அடியிலே தள்ள நினைக்கவில்லை .
    ஒரு பக்கம் அதற்கான பணிகளையும் செய்வோம் .ஒன்று பட்டு உயர்வோம் .

    ரா.ஸ்ரீதரன்

    .

  27. ஹிந்தியில் வந்த படத்தின் பெயர் ‘தவுட்’. தாவூத் அல்ல. ‘தவுட்’ என்றால் ஓட்டம் எனப் பொருள்.

  28. ஆயிரக்கணக்கில் ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு இன மக்களை மாக்கள் போல் கப்பலில் ஏற்றிச் சென்று அடிமை வியாபாரம் செய்தவர்கள் எந்த மதம் ?
    ஏன் இன்றும் அமெரிக்காவில் கண்டும் காணாத வகையில் கருப்பு இன மக்கள் அவமானப் படுத்தப் படுகிறார்கள் என்பது உண்மை.

    பைசன் என்ற காட்டெருமைகளையும் அமெரிக்காவின் பூர்வ குடிகளான சிவப்பு இந்தியர்களையும் ஒரே மாதிரி மிருகங்கள் போன்ற நோக்கில் வேட்டை ஆடியது எந்த மதத்தினர் ?

    முகலாயப் படை எடுப்பின் போது அவர்கள் அந்தணர் என்று பார்த்தார்களா ,அடித்தட்டு மக்கள் என்று பார்த்தார்களா எல்லோரையும் தானே கொன்று குவித்தனர்?
    ஏன் இன்றும் வளைகுடா முஸ்லிம் நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து செல்லும் ஏழை மக்களை ஏமாற்றி தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொள்வது யார் ?
    அங்கே நமது சகோதரர்கள் செல்ல எதாவது நீதி மன்றம் என்று ஒன்று உண்டா?
    அப்படியே இருந்தாலும் சென்று இது வரை அவர்களுக்கு எதாவது நீதி கிடைத்திருக்கிறதா?
    அதனால்தான் நம் குறைகளை திறந்த மனதுடன் களைய வேண்டுமே தவிர ,எண்ணெய் சட்டியிலிருந்து எரியும் நெருப்பில் விழக் கூடாது .
    அதனால் தான் நாம் வேற்று மத பிரச்சாரங்களை விமர்சிக்கிறோம் .நம் சமுதாயத்தில் உள்ள குறைகளை மறைக்க அல்ல .

    ரா.ஸ்ரீதரன்

  29. அம்பேத்கர் மட்டும் இஸ்லாமிக்கோ ,கிறித்தவத்துக்கோ மாறியிருந்தால் அவருக்கு ஆதாயம் கிட்டி இருக்கும்
    ஆனால் கோடிக்கணக்கான அடித் தட்டு மக்களின் வாழ்வு மிக மிக மேம்பட்டு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியுமா ?
    அது அவருக்கும் தெரியும் .
    ரா.ஸ்ரீதரன்

  30. ஒன்று மட்டும் நிச்சயம்
    ஒரு முழு சமுதாயமுமே ஒரு உயர்ந்த தத்துவத்தால் மாறி நியாமாக நடப்பார்கள் என்பது கனவே

    புத்த மதத்தை பின் பின்பற்றுவதாகக் கூறப்படும் சிங்களவர்கள் ஏன் அவரது அஹிம்சையை தூக்கி எறிந்து விட்டு தமிழ் ஹிந்துக்களுக்கு சமத்துவத்தை அளிக்க மறுக்கின்றனர் ?
    ஏன் உயிர்க்கொலை புரிகின்றனர்?
    ஏன் ,புத்தத் துறவிகளே தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது என்று ஊர்வலம் செல்வதும் ,ஆர்ப்பாட்டம் நடத்துவதும் செய்கின்றனர் .
    ஆக வேறு மதத்துக்கு மாறினாலும் தனி மனிதர்களின் மற்றும் சமுதாயத்தின் குறைகள் முற்றும் தீராது
    ஒவ்வொருவரும் மனம் மாற வேண்டும்
    சில தனி மனிதர்கள் தங்களின் சுய நலத்துக்காக மதத்தை உபயோகம் செய்வது மாற வேண்டும்
    இஸ்லாமிய நாடுகளில் சுல்தான்களும் ,அரச வம்சத்தவரும் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள மதம் என்னும் பூதத்தை காட்டி மக்களை பயமுறுத்துகின்றனர் .
    ரா.ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *