நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05

தொடர்ச்சி..

தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை ?

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்த வகுப்புரிமை ஆணையை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை முன்வைத்தது. இந்தச் சட்டம் இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதன்படி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். தேர்தலில் வென்ற இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வர். அவர்கள் மாகாண அரசுகளை அமைத்துக் கொள்ளலாம். இதுவே இரட்டை ஆட்சி முறை. இந்த முறையின்படி 1920 மற்றும் 1923ல் நடந்த தேர்தல்களில் ஆங்கில அரசுக்கு ஆதரவான கட்சியான நீதிக் கட்சி வென்றது.

1920 டிசம்பர் 17ம் நாள், சென்னை மாகாண அரசின் முதல் அமைச்சரவையாக நீதிக்கட்சி பதவிப் பொறுப்பை ஏற்றது.

நீதிக்கட்சியைச் சார்ந்த ஓ. தணிகாசலம் செட்டியார் 5-8-1921 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

‘‘பிராமண மனுதாரரைவிட பிராமணரல்லாத மனுதாரர் குறைவான தகுதியுடையவராக இருப்பினும் அரசுப் பணிகளின் நியமனத்துக்கு உரிய குறைந்த பட்சத் தகுதிகளைப் பெற்றவராக அவர் இருந்தால் ரூ 100/-க்கும், அதற்கு மேற்பட்டும் மாத வருமானம் உள்ள பதவிகளில் பிராமணரல்லாதார்க்கு 66 சதவீதமும் ரூ100/-க்குக் குறைவாக மாத வருமானம் உள்ள பதவிகளில் 75 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.’’

என்பதே தணிகாசலம் அவர்களின் தீர்மானம்.

cnatesamudaliarஇத்தீர்மானத்தை வழிமொழிந்த சி. நடேச முதலியாரின் உரையில் இட ஒதுக்கீட்டுக்கான தருக்க நியாயத்தைவிட அரசாங்க ஆதரவுத் தன்மை ததும்பி வழிந்தது. அது:

“ஐயா, இந்தியாவில் பிரிட்டன் பேரரசுக்கான அடித்தளம் இடுதலில் பிரிட்டன் அரசுக்கு பிராமணர் அல்லாதார் துணை செய்துள்ளனர்…..பிரிட்டன் அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம் அதைக் காப்பாற்ற அவர்கள் விரைந்தோடி வருகின்றனர். இந்த மண்ணின் மக்களின் நலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.”

(சென்னை மாகாண சட்டமன்ற நடவடிக்கைகள், தொகுப்பு 2,1921,பக்-425)

தணிகாசலத்தின் தீர்மானத்துக்கு சட்ட உருவம் கொடுப்பதில் நெருக்கடி ஏற்படுமென்பதை உணர்ந்து இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆங்கிலேய அதிகாரி ஏ. ஆர். கிநாப் இதிலிருந்து தப்புவிக்க ஒரு வழியைக் குறிப்பிட்டார்.

1854 இல் வெளியிட்ட வருவாய்த் துறையின் ஆணையை அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர் சொன்னதன் அடிப்படையில் இதில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு 16-9-1921 முதல் வகுப்புவாரி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

அவ்வாணையில் அரையாண்டு காலத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையைப் பின்வரும் தலைப்புகளின் கீழ்வகைப்படுத்தி அரசுக்கு அரையாண்டு விவர அறிக்கைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

1. பிராமணர்கள்

2. பிராமணரல்லாத இந்துக்கள்

3. இந்தியக் கிறிஸ்துவர்கள்

4. முகம்மதியர்கள்

5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்

6. ஏனையோர்

இவ்வாறு கூறுகிறது அரசு ஆணை எண்-613.

இந்த வகுப்புரிமை ஆணையை கூர்ந்து கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரை குறிப்பாக உணர்த்தாமல் ‘ஏனையோர்’ என்ற தலைப்பில் அடைத்துவிட்டு கடைசியில் தள்ளி விட்டனர்.

இது நீதிக்கட்சி அரசால் பிறப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிடுதல் முழுமையான உண்மையன்று. நீதிக்கட்சியின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் ஆங்கிலேய அதிகாரியால் திருத்தம் செய்யப்பட்டும் பிராமண உறுப்பினர்கள் உட்பட அனைவராலும் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசாணை. இந்த அரசாணையை, ஆங்கிலேயரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட துறை வெளியிட்டது. இது ஒருமை மன உணர்வுடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த அரசாணையில் தெளிவாக இன்ன வகுப்பார்க்கு இவ்வளவு இடங்கள் எனக் குறிப்படாததால் இதை நிறைவேற்ற இயலவில்லை.

நீதிக்கட்சி அரசு மறுபடியும் இரண்டாவது வகுப்புரிமை ஆணையை 15-8-1922 ஆண்டு வெளியிட்டது. (அரசு ஆணை எண்-658).

முதலமைச்சரவையின் பதவிக்காலம் முடிந்தவுடன் 1923 செப்டம்பர் 11ம் நாள் அமைச்சர்கள் தமது பதவிப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர்.

இந்த இரண்டாவது வகுப்புரிமை ஆணையும் சட்டமாகவில்லை என்பதை கீழ்க்கண்ட செய்தியிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

3-12-1950 அன்று திருச்சியில் நடைபெற்ற வகுப்புவாரி உரிமை மாநாட்டில் எஸ். முத்தையா முதலியார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீதிக்கட்சி பதவிக்கு வந்ததும் சட்டசபையிலேயே வகுப்புவாரிப் பிரநிதித்துவக் கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானம் 1920ம் ஆண்டிலேயே நிறைவேற்றம் ஆகியது என்றாலும், 1928 வரை அதை சட்டமாகக் கொண்டுவர முடியாமல்தான் இருந்தது.

நூல்: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?

இரட்டையாட்சி முறையின்படி, 1926 நவம்பர் 8ம் நாளன்று சட்டமன்றத்திற்கான மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் கைப்பற்றினர். அத்தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

200px-psubbarayanஎந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரமுடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்களை அழைத்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

டாக்டர் சுப்புராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும், ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். தம்மை முதலமைச்சராகவும் சுயராஜ்ஜியக் கட்சியினரான ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரையும் அமைச்சர்களாகவும் கொண்ட அமைச்சரவையை அமைத்து ஆட்சிப் பொறுப்பை 4-12-1926ல் ஏற்றார்.

ஒரு சிறுபான்மை உடைய அமைச்சரவை, ஆளுநர் ஆதரவோடும் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடும் ஆட்சி புரிந்து வருதலை நீதிக்கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. புதிய அமைச்சரவையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பணியாற்றி வந்தனர்.  இருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களை இயற்றினர்.

சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்த சுவாமி வெங்கடாசலம் செட்டி 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 23வது நாள் டாக்டர். சுப்புராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு. பி. இராமச்சந்திர ரெட்டியும்,  திரு. எம். கிருஷ்ண நாயரும் ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டன என்றும் அமைச்சரவையானது நிர்வாகத் திறமையில்லாமல் செயல்படுகிறது என்றும் கூறி, அமைச்சரவையை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் வாதிட்டனர்.

அத்தீர்மானம் தோல்வி அடைந்தது.

பாராளுமன்ற சனநாயக முறையில் நேரடியாகப் பதவிகளை அனுபவிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட நீதிக்கட்சியினர், தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தனிப்பட்ட நலன் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனா, ஈவேரா டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார். ஏனெனில், டாக்டர் சுப்பராயன் ஆளும் கட்சியினர். அத்தோடு ஆங்கிலேயரால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டவர்.  ஆளும் கட்சியினர் எவராயினும் அவரை ஒப்புக்கொண்டு மறைமுகமாகப் பதவிகளைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர் ஈவேரா. அதனால், அவர் டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார்.  பார்ப்பனரின் ஆதிக்கம் உள்ள சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆட்சிக்கு வராமல் பார்ப்பனரல்லாத சுப்பராயனின் கட்சியை ஆளுங்கட்சியாக ஆக்கியமைக்கு ஆதரவு தெரிவிப்பதில் பார்ப்பனரல்லாதாரின் நலன்கள் உள்ளது என்று கூறினார்.

முன்னாள் நீதிக்கட்சி உறுப்பினரும், பனகல் அரசரின் செயலரும், பார்ப்பனர் அல்லாதாருமான டாக்டர் சுப்பராயனின் அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை எனக் கூறி ஆளுநரின் செயலில் பாராளுமன்ற சனநாயக உணர்வு இருப்பதாகப் போற்றினார் ஈவேரா.  (குடி அரசு 9-1-27).

இந்த வேறுபாட்டின் காரணமாகவே சுப்பராயன் அமைச்சரவை மீது நீதிக்கட்சியினர் கொணர்ந்த இரண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களையும் ஈவேரா எதிர்த்தார் (குடியரசு 29-3-27) மற்றும் (30-8-27).

இரண்டு தடவைகளிலும் காங்கிரசு மற்றும் சுயராஜ்ஜியக் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் டாக்டர். சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை தப்பியது.

ஒத்த நோக்கங்களைக் கொண்ட காங்கிரசு கட்சியுடன் இணைவதாக நீதிக்கட்சி தலைவர்கள் 1927 ஏப்ரலில் அறிவித்தனர். இதன்பின் கூடிய சிறப்பு மாநாட்டில் (கோவை 2-7-1927) நீதிக்கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் சேர இசைவளிக்கும் தீர்மானம் கொணரப்பட்டது. கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஜே.எஸ்.கண்ணப்பர் இதை ஆதரித்தனர். ஆனால், ஆங்கில அரசிற்கு சாதகம் இல்லாத இந்தத் தீர்மானத்தை ஈவேரா எதிர்த்தார்.

பிரிட்டிஷ் அரசு 1927 நவம்பர் 8ம் நாளன்று ஜான் சைமன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்தது.

இரட்டையாட்சியின் பயன்களை இதுவரை அனுபவித்த நீதிக்கட்சி இப்பொழுது பதவியில் இல்லாத பொழுது ‘இரட்டையாட்சி இருக்கும் வரையில் இனிமேல் பதவிக்கு வர விரும்பவில்லை’ எனக் கோவை மாநாட்டில் தீர்மானித்தது. மேலும் ‘இந்தியர் எவரும் இல்லாததால் சைமன் ஆணைக்குழுவுடன் எவ்விதக் கூட்டுறவும் வைத்துக் கொள்வதில்லை’ எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஈவேரா, சைமன் ஆணைக்குழுவை வரவேற்றார். பொதுமக்களை ஏமாற்றும் காங்கிரசார் முயற்சியில் நீதிக்கட்சியினர் சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். (குடியரசு 20-11-27)

சி.பி.ராமசாமி அய்யரை மீண்டும் சட்ட அமைச்சராக மறுநியமனம் செய்த ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரைப் பதவியிலிருந்து விடுவிக்கவும் கோரும் ஈவேராவின் தீர்மானம் நீதிக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டது.

oct25கோவை மாநாடு முடிந்தபின் அதன் தீர்மானங்களுக்காகத் தம்மிடம் பனகல் அரசர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என ஆளுநர் வைசிராய் இர்வினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சட்டமன்றத்தில் சைமன்குழு நியமனம் பற்றிய பிரச்சினை விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் டாக்டர் பி.சுப்புராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் குழுவிற்கு எதிராக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்கள், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்து பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளை தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி.சுப்புராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியை நாடினார்.

நீதிக்கட்சியினர்க்கு மனநிறைவு ஏற்பட வேண்டி, நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.எம்.கிருஷ்ண நாயரை நிர்வாக ஆலோசனை அவையின் சட்ட உறுப்பினராக ஆளுநர் நியமித்தார். இரட்டையாட்சி இருக்கும் வரையில் பதவியேற்பதில்லை என்று நீதிக்கட்சி தீர்மானம் இயற்றிய பின்னர் இது நடந்தது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்தான் பனகல் அரசர் ஒத்துழைப்பை அளிக்க முன்வந்தார்.

திரு.எஸ்.முத்தையா முதலியார், திரு.எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து, டாக்டர் பி.சுப்புராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார் பனகல் அரசர்.  அதோடு அந்த அரசிற்கு நீதிக்கட்சியின் ஆதரவை அளிக்க முன்வந்தார்.

(மணத்தட்டை சேதுரத்தின அய்யர், ஒரு பிராமண மிராசுதார்; சுயராஜ்ஜியக் கட்சியின் வட்டக் கழகத்தின் தலைவராகவும், மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.)

இந்த அமைச்சரவை 1928 மார்ச் 16ம் நாள் பதவி ஏற்றுக்கொண்டது.

சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து அழைத்து வரப்பட்ட எஸ்.முத்தையா முதலியார் கொண்டுவந்ததுதான் மூன்றாவது வகுப்புரிமை ஆணை.

15-12-1928ம் ஆண்டு இவ்வாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை கீழ்வருமாறு குறிப்பிட்டது:-

(அ) ஒவ்வொரு வகுப்பாரிலும் தகுதியும் தக்கவராகவும் உள்ள வேட்பாளர்களிடமிருந்து அலுவலர்களை நியமனம் செய்யப்படுவது. ஒவ்வொரு 12 பணியிடங்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் பின்வருமாறு விகிதாச்சார நியமனமாக இருக்க வேண்டும்:

பிராமணரல்லாதார் (இந்து)  …..   5

பிராமணர்கள் …..   2

முகம்மதியர்கள் …..   2

ஆங்கிலோ-இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்கள் (ஜரோப்பியர் உள்பட)  …..   2

ஏனையோர் …..   1

(ஆ) இத்தகைய நியமனங்கள் பின்வரும் வரிசைப்படி செய்யப்பட வேண்டும்.

1. பிராமணரல்லாதார் (இந்து)

2. முகம்மதியர்

3. பிராமணரல்லாதார் (இந்து)

4. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

5. பிராமணர்

6. பிராமணரல்லாதார் (இந்து)

7. ஏனையோர்

8. பிராமணரல்லாதார் (இந்து)

9.  முகம்மதியர்

10. பிராமணரல்லாதார் (இந்து)

11. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

12. பிராமணர்

திரு.எஸ். முத்தையா முதலியார் கொண்டுவந்த இந்த ஆணை முதன்முதலாக இன்னின்னார்க்கு இத்தனை இடங்கள் என்று வரையறை செய்தது.

இந்த ஆணையிலும் தாழ்த்தப்பட்டோரை ஒரு வகுப்பாக கொள்ளாமல் ‘ஏனையோர்’ என்ற பெயரில் அடைத்து வைத்து ஒரே ஒரு இடத்தை அளித்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு மிகக் குறைந்த முன்னுரிமையையே அளித்திருப்பதை பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கா இந்த வகுப்புரிமை ஆணைகள்? என்ற கேள்விதான் எழுகிறது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தில் பிராமணர்களைவிட, முகம்மதியர்களைவிட, கிறிஸ்தவர்களைவிட தாழ்த்தப்பட்டோர்,  மக்கள் தொகையில் அதிகமாக இருந்தனர். ஆனால் பிராமணர், முகம்மதியர், கிறிஸ்தவர் ஆகியோர்க்கு இரண்டு இடங்களை தந்துவிட்டு மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?

நீதிக்கட்சி கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூக நீதியல்ல, சமூக அநீதி.

(தொடரும்)

3 Replies to “நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05”

  1. 100 ஆண்டுகளுக்கு முந்தய செய்தி பற்றி தெரிந்து கொள்வது உடன் இன்றைய இந்தியாவில் நடந்து வரும் சமூக சீர்கேட்டை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாசமாக போன நாட்டின் அரை வேக்காட்டு தனமான சட்டங்களும், பண வெறி பிடித்து ஊழலில் ஊறி நாத்தம் பிடித்து போன போலீஸ், வக்கீல்கள் & நீதி துறையினரால் கோடிகணக்கான திறமை வாய்ந்த, IIT, IIM போன்ற பெருமை வாய்ந்த மையங்களில் BE, MBA முடித்த, IT துறையில் நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்களை குடும்பம் சம்பந்தமான சிறிய பிரச்சனைகளில், வரதட்சணை கொடுமை & குடும்ப வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ் பொய்யான கேஸ்களை பதிவு செய்து, எந்த விதமான ஆதாரமும், விசாரணையும் இல்லாமல், உடனடியாக கைது செய்து, போலீஸ் ஸ்டேஷன் இல் கட்ட பஞ்சயத்து செய்து பணத்தை கொள்ளை அடிப்பதோடு அல்லாமல், அவர்களின் வேலை, சுய மரியாதை, நற்பெயர், வாழ்க்கை எல்லாத்தையும் நாசமாக்கி வருடக்கணக்கில் கோர்ட் போலீஸ் என அலைய விட்டு மொத்த வாழ்வையும் அழித்து வருகின்றனர். இந்த உண்மை நிலையை அறிய GOOGLE வெப்சைட்டில் 498a, Domestic Violence, harassed husbands போன்ற தேடு சொற்களை வைத்து தேடி பார்க்கவும்.

  2. நீதிக் கட்சியே வெள்ளைக்காரர்களின் கண்டு பிடிப்புதான்
    தங்களது ஆட்சியை முதலில் எதிர்த்த பிராமணர்களைப் பழி வாங்கவும் அதே சமயம் ஹிந்து சமுதாயத்தைப் பிளவு படுத்தவும் அதை ஒரு அஸ்த்ரமாகப் பயன்படுத்தினர்

    இன்று வெள்ளைக்காரர்களின் இடத்தை் சர்ச்சும், மிஷனரிகளும் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் தூண்டுதல், வோட்டு, மற்றும் வைட்டமின் எம் பரிமாற்றம் இவைகள் மூலம் ஹிந்து சமுதாயத்தை அழிக்க முயல்கின்றனர்
    .
    அதனால்தான் திமுக இப்படி கங்கணம் கட்டிக் கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்துகின்றது
    இர்ர் ஸ்ரீதரன்

  3. நண்பர் வெங்கடேசனின் எழுத்துக்கள் எல்லாமே, கடந்த காலத்தில் நடந்தவை, நாம் மறந்துவிட்டவை, கடந்த காலத்தின் அயோக்கியத்தனங்களில் பயன்பெற்று தம்மை வளப்படுத்திக்கொண்டவர்கள் இன்று அந்த கடந்த காலத்தைப் பற்றி முற்றிலும் பொய்யான தகவலகளை முன்வைத்து வரலாற்றுப் புரட்டல் செய்யும் இன்றையு அயோக்கியத்தனம் எல்லாம் நமக்கு எப்படித் தெரியவரும். வெங்கடேசன் முன் வைக்கும் வரலாறு பெரும்பாலும் எனக்குத் தெரியவராத, இன்றைய தலைவர்கள் மறைத்துவிட்ட தகவல்கள். இவை புத்தக வடிவம் பெற்று திரும்பவும் நடந்த வரலாறு என்ன என்பது நிரந்தர பதிவு பெறவேண்டும். வெங்கடேசனின் முயற்சிகளுக்கும் எழுத்துக்க்ளுக்கும் நாம் எல்லோரும் நன்றி சொல்லவேண்டும்.

    என் தனிப்பட்ட குறைபாடு, கண்ணினியில் படிப்படும் பின்னர் படித்த வற்றை நினைவு கொள்வதும் சிரமமான காரியமாக இருக்கிறது. புத்தகம் போல எளிதான ஊடகம் இல்லை இது. மேலும் நம்மில் சிலருக்கு திடீரென்று கோபம் வந்து, மற்றவர்கள் அதற்கு ஆத்திரப்பட்டு, இது எல்லாமே கடைமூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால், பின்னர் மறுபடி படிப்பது எங்கே நினைவு கொள்வது எங்கே.? புத்தகமாக வந்துவிட்டால் அதற்கு இந்த ஆபத்துக்கள் ஏற்படாது.

    இப்போது எளிதாகக் கிடைபபது ‘நெஞ்சுக்கு நீதி” எல்லா பாகங்களும், ஹிடல்ரின் மெய்ன் கெம்ப்பும் தான். 60 வருட தடை மெய்ன் கெம்ப்பை என்ன செய்து விட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *