நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06

தொடர்ச்சி..

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’  என்ற பெயர் வந்தது யாரால்?

சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதிவருகின்றனர். அதில் ஒன்றுதான் ஆதிதிராவிடர் பெயரை நீதிக்கட்சியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வைத்தார்கள் என்பது.

no496651

இதோ இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் :

‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர் டாக்டர். சி. நடேசனார் ஆவார். இவர்தான் ‘திராடவிடர் சங்கம்’ என்கிற அமைப்பை 1912இல் தொடங்கினார். இதிலிருந்து தான் திராவிடர் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-3

திராவிடர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனார் நீதிக்கட்சி அரசுக்கு அனுப்பிய ஒரு வேண்டுகோளில் ‘பறையர்’ , ‘பஞ்சமர்’ என்ற சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களது வரலாற்றுக்குரிய சிறப்புப் பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1922-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம்நாள் பெயர் மாற்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-5

பஞ்சமர் – பறையர் என்று உழைக்கும் மக்களை அழைக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்ற குரலை முதன்முதலில் டாக்டர் சி.நடேசன் அவர்கள் எதிரொலிக்கச் செய்தார். இவரே வரலாற்றுப்பூர்வமாய் இந்த மக்களுக்குரிய பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயரையும் கண்டுபிடித்து இந்தப் பெயரால் இந்த மக்கள் அழைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசுக்கு வைத்தார். திராவிட இன மக்களின் ஒருங்கிணைந்த திராவிடர் சங்கத்தின் மூலவரான நடேசனாரின் குரலை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டு 1921ல் இம்மக்கள் எவ்வளவு பேர் (சென்னை மாகாணத்தில்) வாழ்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு பஞ்சமர்-பறையர் என்ற சொல் இம்மக்களுக்கு இழிவுதரும் சொல். ஆகவே, இம்மக்களை இனி ‘ஆதிதிராவிடர்கள்’ என்று அழைக்க வேண்டும் என்று 1922 மார்ச் 25ம் தேதி ஒரு பெயர் மாற்ற உத்தரவை பிறப்பித்தது.

தமிழர் சமூக விடுதலை இயக்கம், பொதிகைத் தமிழரசன்

இப்படி எல்லாம் தொடர்ந்து எழுதியும், பேசியும் அன்று முதல் இன்று வரை ‘ஆதிதிராவிடர்’ என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் நீதிக்கட்சியினர்.

ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.  ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள்.

பல ஆண்டுகாலமாகவே அப்படித்தான் தங்களை அழைத்துக் கொண்டு வந்தனர். தாங்கள் ஆரம்பித்த அமைப்புகளுக்கும் அப்படியே பெயரிட்டு வந்தனர்.

வைரக்கண் வேலாயுதம்பிள்ளை, மதுரைப்பிள்ளை, க.அயோத்திதாசர் மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய சபைக்கு ஆதிதிராவிடர் மகாஜன சபை என்று பெயர். இது உருவாகிய ஆண்டு 1890.

athidravidan-issueயாழ்ப்பாணத்திலிருந்து 1907ல் வெளியான பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்திரன்.

1919ல் கொழும்பு -இலங்கையில் இருந்து வெளியான மற்றொரு இதழுக்கு ‘ஆதிதிராவிடன்’ என்ற பெயரே வைக்கப்பட்டது.

1917இல் இந்தியாவில் அரசியல் சீர்திருத்த விஷயமாக சென்னைக்கு வந்த செம்ஸ்போர்ட் பிரபு, மாண்டேகு பிரபுவிடம் ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயரைப் பற்றியும், ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு விண்ணப்பம் தயாரித்து திரு. பி. வி. சுப்பிரமணிய பிள்ளை, திரு. வி. முக்குந்து பிள்ளை,  திரு. எம். சி. ராஜா, திரு. டி. ஓங்காரம், திரு. எம். சண்முகம்பிள்ளை, திருமதி. திருப்புகழ் அம்மாள், திரு. கே. முனுசாமி பிள்ளை, திரு. வி. இராஜரத்தினம்பிள்ளை, திரு. வி. பி. வாசுதேவப்பிள்ளை, திரு. வி. பி. வேணுகோபால்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்ட விண்ணப்பம் இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (ஆதிதிராவிடர் வரலாறு, 1922, திரிசிராபுரம் ஆ.பெருமாள்பிள்ளை)

ஆதிதிராவிட மகாஜனசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக்குக் கொடுத்த கோரிக்கையிலே மக்கள் கணக்கெடுப்பிலும், மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் ‘பறையர் – பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்கு பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அப்போதைய சென்சஸ் அதிகாரி திரு.ஈட்ஸ் இதனை ஏற்கவில்லை. ஆனால் ஆதிதிராவிடர் மகாசபை பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக்கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது.

அப்படியானால் நடேசனாரின் பங்கு என்ன?

ஆதிதிராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சி.நடேச முதலியார் சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே தாமாக முன்மொழிந்தார். ஆனால், நீதிக்கட்சியினரே முன்வந்து இதை செய்யவில்லை.

ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் சொல்வதென்ன?

சி. நடேச முதலியாரே ஆதிதிராவிடர் என்ற பெயரை கண்டுபிடித்து வைத்ததுபோல எழுதுகிறார்கள். இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்கள் பேனாக்களில் மைக்குப் பதிலாக பொய்யை ஊற்றி எழுதுகிறார்கள்.

1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படிச் செய்தனர்.

m-c-rajaசட்டமன்றக்கூட்டமொன்றில் 1922 சனவரி 20ல் ஆதிதிராவிடர் எனும் பெயரை அரசாணையில் குறிப்பிட வேண்டும் எனும் தீர்மானத்தை எம்.சி.ராஜா முன்மொழிந்தார். ராவ்பகதூர் திரு. நம்பெருமாள் செட்டியார் வழிமொழிந்தார். சட்டமன்ற உறுப்பினரான எம்.சி. மதுரைப்பிள்ளை ஆதரித்துப் பேசினார்.

தீர்மானம் நிறைவேறியது. அந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்பெயரை அங்கீகரித்து அரசு உத்தரவிட்டது.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடரை சேர்த்ததற்கு யார் காரணம்?

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க போராடி வெற்றி பெற்றது நீதிக்கட்சி ஆட்சியின் சாதனை என்று திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினருக்கு சாதகமாக எழுதுவதில் எத்தனை வெறித்தனம் இவர்களுக்கு?

இந்த வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.

பார்ப்பன ஆசிரியர்கள் எவ்வளவு வகுப்பு வெறுப்பைக் கக்குகிறார்கள் என்பதை சர் தியாகராயர் தமக்கேற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் விளக்கிக்கூறினார்.

1917 டிசம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டில் பேசுகையில் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

new-pachaiyappar1‘நான் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த சமயம். எனது சமீன்தார் நண்பர் ஒருவர், தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி, என்னைச் சிபாரிசு செய்யும்படிக் கேட்டிருந்தார்.

பார்ப்பனரல்லாத மாணவர்கள் இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால் அந்த மாணவருக்கு எப்படியும் ஒரு இடம் தர வேண்டும் என்று கடிதம் எழுதிப் பச்சையப்பன் கல்லூரித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைத்தேன். கல்லூரியில் எந்த இடமும் காலி இல்லை என்று குறிப்பிட்டு எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின்னர் சில பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித்ததை நான் அறிந்தேன். இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தியிருக்கும்? பொதுவாக நான் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அப்படித் தலையிடுவது தவறு என்றும் கருதி வந்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் விஷயத்தில் நான் கண்டிப்பான விதிமுறைகளை வகுத்தேன். என் அனுமதியின்றி, எந்த மாணவனையும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டேன்!’’

இவ்வாறு தியாகராயர் உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.

திராவிட இயக்க வரலாறு, கே.ஜி.மணவாளன், பக்.89-90

1926ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரியில் அனுமதியில்லை என்ற நிலை இருந்தது. இதை அப்போதே ரெட்டைமலை சீனிவாசனாரும் குறிப்பிட்டிருக்கிறார். ரெட்டைமலை சீனிவாசனார் தம் ஜீவிய சுருக்கம் என்ற நூலில் கூறுகிறார் :

‘‘ஆங்கிலேயர்கள் மட்டுமே கலந்துகொண்டு வெற்றி பெறுகிற வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், அந்த தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என பிரிட்டிஷ் பார்லிமென்டில் காங்கிரஸ் ஒரு மசோதா சமர்ப்பித்தது. பறையர் மகாஜன சபையார் சென்னை வெஸ்லியன் மிஷன் காலேஜ் ஹாலில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி  என்னும் பார்லிமெண்ட் மெம்பரிடம் சமர்ப்பித்தார்கள். அந்த மனுவில்,

‘வெளிஜில்லாக்களின் நாட்டுப்புறங்களில் ஜாதி வித்தியாசம் கட்டுப்பாடு இன்னும் முதன்மை பெற்று கொடுமையாய் நடக்கிறது. அறிவீனமான நாட்டுப்புறவாசிகள்தான் இப்படி நடந்து வருகிறார்களென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது மல்லாமல் இந்த ராஜதானியின் தலைநகரமாகிய சென்னையிலுள்ள பச்சையப்பன் கலாசாலை என்னும் சிரேஷ்ட வித்தியாசாலையிலும் பறையர், பறையர் பிள்ளைகளைச் சேர்க்கப்படாதென்று கட்டோடே விலக்கியிருக்கிறதும்….’’

ayothidhasar

– என்று பச்சையப்பன் காலேஜில் ஆதிதிராவிடரை சேர்ப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை அப்போதே அறிஞர் அயோத்திதாசர் குறிப்பிட்டு எதிர்த்திருக்கிறார்.

மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி,   ‘சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்.  (தமிழன், சனவரி 6, 1909)

1917ல் பிராமணரல்லாத மாணவர்களை சேர்க்கச் சொன்ன நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயர் ஏன் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க சொல்லவில்லை? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1921ல் தியாகராயருக்கு இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4.8.1921ல் சட்டமன்றத்தில் சௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து முகமது உஸ்மான் சாகிபு தனது இஸ்லாமிய சகோதரர்களை கூட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கூறி, அவர் மேற்கொண்டு ஒரு கோரிக்கையை வைத்தார்.

image_110‘‘….இந்த மாநகரத்திலுள்ள பெரிய இந்து நிலையமாகிய பச்சையப்பன் கல்லூரி நான் சார்ந்துள்ள சமுதாயத்தினர்க்குத் திறக்கப்படுவதில்லை. இந்தச் சமயத்தில் இங்குள்ள மதிப்பிற்குரிய நண்பர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியார், திரு.ஓ.தணிகாசலம் செட்டியார் ஆகிய அக்கல்வி நிலையத்தின் அறங்காவலர்களை ஒரு தாராள மனப்பான்மை மேற்கொண்டு எல்லாச் சமுதாயத்தாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இங்கு வற்புறுத்த விரும்புகின்றேன்.’’

இந்த கோரிக்கைக்குப் பிறகாவது நீதிக்கட்சியின் தலைவர் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.

இதுதான் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு போட்ட பட்டை நாமம். ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தொடர்ந்து அதற்காகப் போராடினார்கள்.

இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன்னுடைய ஜீவிய சரிதத்தில் இவ்வாறு கூறுகிறார் :

‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’

பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொடர்முயற்சியால் 21-11-1927ல் அனுமதி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி வெற்றி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினர் தான் பெற்றுதந்தார்கள் என்று எழுதுவது அயோக்கியத்தனம் அல்லவா?

(தொடரும்)

14 Replies to “நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06”

  1. மறைக்கப்படும் சாதி வெறியை வெளிப்படையாகச் சொல்லும் கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அவருடைய உழைப்பு பாராட்டத் தக்கது.

  2. எங்களுக்குத் தெரியாத உண்மைகளை வெளிப்படுத்தும் கட்டுரை.

  3. “பார்ப்பன ஆசிரியர்கள் எவ்வளவு வகுப்பு வெறுப்பைக் கக்குகிறார்கள் என்பதை சர் தியாகராயர் தமக்கேற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் விளக்கிக்கூறினார்”
    கட்டுரையாளர் கூறும் ‘வெறுப்பைக் கக்குகிறார்கள்’ என்கிற வேகமான வார்த்தைக்கும் கூறப்பட்ட சம்பவத்தில் ‘கல்லூரியில் எந்த இடமும் காலி இல்லை என்று குறிப்பிட்டு எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின்னர் சில பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித்ததை நான் அறிந்தேன்’ என்ற நிகழ்ச்சிக்கும் பிணைப்பே இல்லை. கட்டுரையாளர்தான் இல்லாத வெறுப்பைக் கொட்டுகிறார். மேலும் ‘இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தியிருக்கும்?’ வேடைனையில் அழ்நதபின், அந்த ஜமிந்தார் மகனுக்கு இடம் கொடுத்திருக்கலாமே? ஒரு அல்ல எல்லா பார்ப்பனப் பையன்களையும் வெளிஎற்றியிருக்கலாமே? மேலும் அதே பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் மற்ற மாணவர்கள் செய்த மற்றும் செய்யும் ரவுடித்தனகள் தற்போதும் உலகப் பிரசித்தியும் இணைத்தல பிரசித்தியும் பெற்றவையாயிற்றே! இதே காரணத்திற்க்காக அன்று ஜமிந்தார் மகனுக்கு இடம் மறுக்கப்பட்டிருந்தால், சில காலத்திற்க்க்காகவாவது, பச்சையப்பன் கல்லூரி நன்றாக இருந்தது அல்லவா?

  4. பறையர் , ஆதிதிராவிடர் இவர்கள் இந்துவா இல்லையா
    முதலில் இதை தெளிவுபடுத்துங்கள்
    இந்துகளுக்கும் ,ஜாதி இந்துகள் ஆதிதிராவிடர்கள் மோதல்
    ஊடகங்கள் கதைகள் ஒளிவு இல்லாது சொல்லும்
    அப்படியானால் இவர்கள் யார்
    பூனூல் போடலாமா
    இந்து என்ற அடையலாம் என்ன
    என்ன செய்தீர்கள்
    திராவிடம் கிடக்கட்டும்

  5. Dear Casmalam
    ஆம் அவர்களும் இந்துக்களே கலைஞர் குலாலர் இனத்தை சார்ந்தவர். கலைஞர் கருவூலகண்காட்சியில் அவரது தந்தை முத்துவேலரின் புகைப்படத்தில் அவரதுநெற்றியில் திருநீருபட்டை கழுத்தில் ருத்திராஷ்ஷகொட்டை இடுப்பில பஞ்சகச கட்சை தோளில் பூணுலுடன் தான் காட்சி அளிக்கிறார். எனவே பூணுல் அணிவது எல்லா வர்னத்தாருக்கும் உண்டு. ஆனால் காலப்போக்கில் ஒவ்வொரு வர்ணத்தாரும் பூணுலை கழட்டிவிட்டார்கள். இன்று சில பிராமிணர்கள் கூட பூணுலே அணிவதில்லை.

  6. நமது பாரதம் வேத பூமி .புண்ய பூமி ,கர்ம பூமி,ஞான பூமி ,யோக பூமி
    இங்கு பிறந்தவர் அனைவரும் உயர்ந்தோரே;அனைவரும் ஹிந்துக்களே;
    இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்
    வெள்ளைக்காரர்களும்,,மிஷனரிகளும்,திராவிடக் கட்சிகளும் விதைத்து நன்றாக அறுவடை செய்து கொண்டிருக்கும் விஷப் பயிர்தான் இந்த ஜாதி என்னும் பணப் பயிர் (cashcrop)
    பிறப்பு என்றமே நம் நாட்டில் மேன்மையை நிர்ணயித்ததில்லை .
    நீதிகளிலேயே உயர்ந்தது ‘விதுர நீதி’
    விதுரன் பிறப்பை யாரும் விமர்சிப்பதில்லை .
    அதனால்தான் ‘நதி மூலம் ரிஷி மூலம்’ கேட்காதே என்று சொல்வர் .
    கபடமில்லா பக்திக்கு வேடன் கண்ணப்பனே உதாரணமாகக் காண்பிக்கப் படுகிறான்.
    அவன் நாயன்மாராக வைக்கப் பட்டான் .
    சொல்லிக் கொண்டே போகலாம் .
    இரா.ஸ்ரீதரன்

  7. //கட்டுரையாளர்தான் இல்லாத வெறுப்பைக் கொட்டுகிறார்//
    கட்டுரையாளரிடம் எந்த வெறுப்பும் இருப்பதாக தெரியவில்லை. ரியாலிடிக்குத்தான் மனதில் தேவையற்ற மேன்மைவாத எண்ணங்களும் காலவதியாகிப் போன சாதிய வெறுப்பும் ததும்பி வழிவதாக எனக்குத் தோன்றுகிறது.

  8. சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி,
    கிராமம் அனைத்தும் தவபூமி,
    சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்,
    சிறுவனைவரும் ராமனே..

    எல்லோரும் ஓர் குலம்
    எல்லோரும் ஓர்நிறை
    எல்லோரும் இந்நாட்டு மன்னர்.

    சாதி இரண்டொழிய வேறில்லை

    சாதி மதங்களைப் பாரோம்
    உயர் ஜன்மம் இத்தேசத்து எய்தினராயின்,
    வேதியராயினும் ஒன்றே..
    அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே…

    எல்லாம் நமது மூத்தோர்களின் வாக்குகள்..

  9. வெங்கடேசன்
    ஆவணங்களைக் கொண்டு அசத்துகிரிர்கள் . தொடரட்டும் இந்த நற்பணி.
    அன்புடன்
    சுப்பு

  10. தமிழ்நாட்டு அரசியலில் ஜாதிதான் பிரதானமாக இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், பிராமணர் அல்லாத மக்களுக்கும் தாங்களே சாதித்து விட்டதாக திராவிட இயக்கத்தார் மார் தட்டிக் கொண்டாலும் அவர்கள் பல பொய் புரட்டுகளையும், தங்களுக்குச் சாதகமான விஷயங்களுக்கு வெளிச்சம் போட்டும், பாதகங்களைத் திரை போட்டு மூடியும் வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பல விஷயங்களை மிக ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கும் ஆசிரியரை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை. பெயருக்கும் புகழுக்கும் இவர்கள் எழுதுவதில்லை. உண்மையை நிலைநாட்டி, பொய் பித்தலாட்டங்களுக்குச் சாவு மணி அடிக்கத் துடிக்கும் இவரைப் போன்றவர்களுக்கு உறுதுணையாக இருக்க உறுதி பூணுவோம்.

  11. என் நண்பர் சொல்வார், ஒரு கன்னட காரனை தமிழரின் தந்தை என்று சொல்லி எப்படி எம்மற்றுகிரார்கள் என்று’. அதே பெரியார், தமிழை காட்டு மிராண்டி என்று கூறினாராம்’. என்ன கொடுமை இது.
    இந்த திராவிட ஏமாற்றுகாரர்கள் கிருஸ்துவ முஸ்லீம்களிடம் காசு வாங்குவதால் தான் அவர்களை விமர்சிப்பதில்லை. இந்த நாதீகர்களின் வேலை, தமிழர்களிடம் உள்ள கடவுள் பக்தியை குறைப்பது. இப்படி பக்தி குறைந்த தமிழர்களை கிருதுவ்ர்கலாகவோ, முஸ்லீம்களாகவோ மதம் மாற்றுவது மிக எளிது. (சமிபத்திய உதாரணம் பெரியார்தாசன்). ஏன் ஒரு நாத்திக அமைப்புக்கு கிருத்துவர்களும் முஸ்லீம்களும் பணம் கொதிக்கிறார்கள் என்பதற்கும், ஏன் திராவிட அம்மைப்புகள் கிருத்துவ முஸ்லீம் மதங்களை மேலோட்டமாக விமர்சிப்பது அல்லது விமர்சிக்காமலே இருப்பதற்கும் காரணத்தை நான் அப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.

  12. ஈ வே ரா வின் கருத்துக்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்?
    கடவுளே இல்லை என்று பேசி வந்த பெரியார் தாசன் இப்போது அல்லாவை ஒப்புக் கொள்கிறாரா?
    ஏன் இந்த மாற்றம்?
    அவர் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டு விடுவாரா?
    அது ஈ வே ராவின் பெண் உரிமைக் கருத்துக்கு எதிரானது இல்லையா?
    கமலா தாஸ் என்ற மலையாளப பெண் எழுத்தாளர் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார் .
    ஆனால் அவர் இறக்கும் தருவாயில் மனம் நொந்து தான் தவறு செய்து விட்டதாகவும் ,இஸ்லாத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்பதையும் வெளிப்படையாக கூறினார் .
    இர.ஸ்ரீதரன்

  13. மகாகவி பாரதியார் கனகலிங்கம் என்ற, ஹிந்து சமுதாயத்தின் மிகக் கீழ் நிலையில் இருந்த சகோதரனுக்கு பூணூல் அணிவித்தார் .
    அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை
    சொல்லப் போனால் அது எல்லோருக்கும் உண்டு.
    அந்தக் காலத்தில் அதற்கு ஒரு அர்த்தம் இருந்தது.
    ஏனென்றால் அந்தணர்கள், வேதம் படிப்பது,சடங்குகள் செய்வது,கோயில்களில் அர்ச்சகராக இருப்பது,உலக நன்மைக்காக யாகங்கள் செய்வது, நீதி மற்றும் சாஸ்திரங்களுக்கு விளக்கம் அளிப்பது,மன்னருக்கு தர்மத்தை எடுத்துரைப்பது,ஆட்சியில் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகள் செய்தனர்.
    அவர்கள் சொத்து சேர்ப்பது, பொருள் ஈட்டுவது , அதற்காக வேலை செய்வது எல்லாம் இல்லை.
    மன்னர்கள் அவர்களது பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்தனர்
    இன்னும் ஒரு சிலர் யாசகம் செய்தே அன்றாடம் உணவு உண்டனர்.

    ஆனால் இன்று அதெல்லாம் அர்த்தமற்றதாகப் போய்விட்டது.
    ஏதோ முன்னோர்கள் செய்ததை கொஞ்சம் விடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்.
    பிறப்பால் எவரும் அந்தணர் ஆவதில்லை.

    இரா.ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *