ஒரு நதியின் நசிவு
ச.திருமலை
30 Jul 2010 |
அச்சிட
கோள் நிலைதிரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை
என்கிறார் இளங்கோ அடிகள் காவேரியைக் குறித்து. காவேரியைப் போன்ற விஸ்தீரணமும் நீளமும் அகலமும் கிளையாறுகளும் இல்லாமல் போனாலும்கூட தென் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியாக இருந்து வரும் நதி தாமிரவருணி. இந்த நதியின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இதன் கரையில் கற்கால நாகரிகம் செழித்து வளர்ந்ததை ஆதிச்ச நல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பொருநை ஆறு அல்லது தாமிரவருணி நதி, திருநெல்வேலியின் மேற்கே பாபநாசத்திற்கு மேலே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி, பல சிற்றாறுகளுடன் சேர்ந்து, தாமிரம் வரும் நீராக திருநெல்வேலி நகரை அடைந்து, அதன் பின்னே கிழக்கே ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக, கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர்கள் ஓடி, திருச்செந்தூருக்கு அருகே உள்ள புன்னைக் காயல் என்ற இடம் அருகே கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று அல்லது ஒன்றே ஒன்று. இரண்டு பருவ மழைகளினாலும் நீரைப் பெறுவதால் இது வற்றாத நதியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு நதி. வேறு உருப்படியான தொழில்கள் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தை நெற்களஞ்சியமாக ஆக்கும் நதி. பாலாறு, மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு, வராக நதி, சித்தாறு, போன்ற பல கிளை நதிகள் இதில் கலக்கின்றன. ஓரளவுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்து மக்களின் தாகம் தீர்க்கும் நதி. இரண்டு மாவட்டங்களின் உயிரோட்டம். பல ஊர்களுக்கு ஒரே பிடிமானம், ஆத்மா, வாழ்க்கையின் ஒரு பகுதி, ஜீவநாடி. ஒரு காலத்தில் மாசு படாமலும், அழகாகவும் இருந்து கரைபுரண்டோடிய நதி. பத்தினிப் பெண்டிருக்காக ஒரு முறையும், அறநெறி தவறா அந்தணர்க்கு ஒரு முறையும், நீதி வழுவா மன்னருக்கு ஒரு முறையுமாக மாதம் மும்மாரிப் பொழிந்ததாகக் கூறப்படும் மழையினால் வற்றாமல் ஓடிய ஜீவநதி.
தாமிரவருணியின் தோற்றம் முதல் அது வங்காள விரிகுடாவில் கலக்கும் சங்கமம் வரை ஆழ்வார்களால் பாடப் பட்ட வைணவக் கோயில்களும், பல்வேறு சைவக் கோயில்களும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு அமைந்திருக்கின்றன. தமிழையும் சமயத்தையும் வளர்த்த நதி. பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த கழனிகளின் நடுவே இன்றும் நிமிர்ந்து நிற்கும் அக்கோயில்கள் ஆற்றின் கரையைத் தழுவிக் கொண்டு அமைந்திருக்கின்றன.
எந்தவொரு நதியுமே வெறும் உயிரற்ற நீர் ஓடும் பாதை மட்டும் அல்ல. நதிகள் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின், நாகரிகத்தின், பண்பாட்டின், கலைகளின் மூலாதாரமும் கூட. ஒரு நதியின் வரலாறு என்பது அந்தப் பிராந்தியத்தின் வரலாறு. ஆறுகள் தந்த செழுமையினாலும் வளத்தினாலும் அந்த வளம் தந்த சூழலினாலுமே கலைகளும் நாகரிகமும் செழித்து வளர்ந்தன. நதிக்கரைகளிலேயே உலகின் மாபெரும் மனித நாகரிகங்கள் உருவாயின. நாகரிகம் வளர, கலைகள் வளர்ந்தன; கலைகள் வளர ஆற்றின் கரைகளில் அந்த நதிகளை அளித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கோயில்கள் வளர்ந்தன. இவ்வாறாக நதியின் வளத்தால் சமயங்களும் பக்தியும் கலைகளும் பண்பாடும் அவை உருவாக்கிய வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்தே வளர்ந்தன. நதிகள், வனங்கள், மலைகள், நில வளங்கள், சமுத்திரங்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை; உலகத்தின் மக்களும் இல்லை. இயற்கையே நம் வாழ்க்கையின் ஆதாரம். அப்படிப்பட்ட முக்கியமான இயற்கை வளமான நதி வளத்தை, நம் பாண்பாட்டின், கலைகளின் ஆதாரத்தை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகிறோம். நதிகள் மட்டும் அல்ல, அவை வளர்த்த கலைகளையும், பண்பாட்டுச் சின்னங்களையும் நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணமே தாமிரவருணி நதியின் இன்றைய நிலை. இன்று தமிழ்நாட்டின் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு நீர் ஆதாரத்தை, வன வளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீள்கிறது.
முக்கியமாக தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பாசனத்திற்குப் பயன்பட்டு வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது. ஆனால் அப்படி எல்லாம் தண்ணீர் ஓடிய ஆறு இப்போது பல மாதங்களில் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாதுவும் அழிந்து வருகிறது.
ஓர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி நதிக்கரையோரமாகச் சென்றிருந்த பொழுது அந்த நதியின் படுகை முழுவதுமே கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதன் முழு நீளத்திலும் பல்வேறு இடங்களில் போர்க்கால அவசரத்துடன் மணலைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாமிரவருணி ஓடும் பல இடங்களில் ஆற்று மணலை அரசாங்கமே தோண்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். பேர்தான் அரசாங்கம் தோண்டுகிறது என்றாலும் தோண்டும் பணியைச் செய்பவர்கள் தனியார்களே. ஒரு நாளைக்கு ஒரு தோண்டும் இடத்திலிருந்து மட்டும் 5000 லாரிகள் மணலை அள்ளிக் கொண்டு சென்றன. அவ்வளவு மணல் தேவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் என்று இல்லை, தமிழ்நாட்டில்கூட கட்டிடப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. எல்லா மணல் லாரிகளும் கேரளாவுக்கு மணலைக் கொண்டு சென்றன. அங்கு அதை என்ன செய்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கேரளா ஒன்றும் நீர்வளம், மணல்வளம் இல்லாத ஊர் இல்லை. ஆனால் அங்கே மணல் எடுப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்களும் அதைச் சரிவரப் பாதுகாக்கும் கெடுபிடிகளும் இருப்பதால், ஏமாளிகள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து அங்கே எடுத்துப்போய் ஏராளமான விலைக்கு விற்கப்படுகிறது.
தாமிரவருணி என்றாலே தாமிரம் வரும் நீர் என்று அர்த்தம். கனிம வளம் நிறைந்த மணல் அது. ஒரு லாரி லோடில் கிட்டத்தட்ட 5000 ரூபாய் எல்லா லஞ்சச் செலவுகளும் போக லாபம் மட்டும் கிட்டுகிறது என்றார்கள். நமக்கு வீட்டுத் தேவைக்கு வரும் லாரி லோடையும் இந்த லாரிகளையும் ஒப்பிடாதீர்கள். நம் வீட்டுக்கு வரும் லாரியைப் போன்று மூன்று மடங்கு மணல் கொள்ளக் கூடிய பத்து டயர்கள் கொண்ட டிப்பர் லாரிகள். ஆனால் அரசாங்கத்திற்குக் கணக்குக் காண்பிப்பதோ ஒரு சாதாரண லாரி லோடு மட்டுமே. குறிப்பிட்ட அளைவை விட பல மடங்கு அதிகமாக அள்ளுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். அள்ளிய மணல் அருகில் உள்ள பல காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டு தேவைக்கேற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. மலைமலையாய் ஆற்று மணல் குவித்து வைக்கப் பட்டிருந்தன. 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு ஆற்றுப் படுகை வெடிகுண்டுகளால் பறிக்கப்பட்ட ஈராக் போல குண்டும்குழியுமாக, கண்றாவியாகக் காட்சியளித்தன. பெரும் தோண்டும் இயந்திரங்கள் வைத்து ஆற்று மணல் அள்ளப் படுவதை சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. இத்தனையாயிரம் லாரிகள் கிராமங்களுக்குள் ராட்சத்தனமாகச் சென்று கிராமத்தின் அமைதியை இரவு பகல் பாராமல் குலைத்தன. வீடுகளுக்குள் மண்வாரித் தூற்றின. சாலைகள் அனைத்தும் இதன் கனமும் போக்குவரத்தும் தாங்காமல் குண்டும் குழியுமாக மாறின. எங்கும் மணல் புழுதிப் புயலாக வீசியது. ஆற்று நீரும் மணலும் வற்றியதால் சுற்றியிருந்த பகுதிகளின் கிணறுகளும் வற்றத் தொடங்கின. இயற்கை தந்த செல்வத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியினரும் அந்த ஊர்களின் செல்வாக்குள்ளவர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்தனர். இதன் பாதிப்புகளைப் பற்றி மக்களும் கவலைப்படுவாதாயில்லை. எதிர்ததுக் கேள்வி எழுப்பிய ஒரு சிலரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். இருபத்தினாலு மணி நேரமும் தொடர்ந்து அரசாங்க அனுமதியுடன், அரசியல் துணையுடன் தாமிரவருணி ஆற்றின் இயற்கை வளம், அதன் அழகு, எல்லாம் கற்பழிக்கப்பட்டதன் விளைவை இந்த முறை ஐந்து வருடங்கள் கழித்துச் சென்றபொழுது பூரணமாக உணர முடிந்தது. சேது சமுத்திரத் திட்டம் போட்டு கடல் மணலையே அள்ளியவர்கள் ஆற்று மணலையா சும்மா விடுவார்கள்? சுத்தமாகத் துடைத்து இனி எடுப்பதற்கு ஏதுமே இல்லையென்ற நிலையில் கொண்டு நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது ஒட்டுமொத்த நதி ஓடும் பாதையிலும் ஆற்று மணல் என்பதே இல்லாமல் போய் விட்டது.. இனி இந்த அளவு ஆற்று மணல் சேர பல நூறாண்டுகள் ஆகலாம். பல நூற்றாண்டுகளாக ஆறுகள் மலைகளை அரித்து அரித்து இயற்கையாகச் சேகரிக்கப்பட்ட ஆற்று மணல் அனைத்தும் ஒட்டு மொத்தமாகக் கொள்ளை போய் இன்று சகதிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நதிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இயந்திரம் எதையும் பயன்படுத்தாமல் மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள் மட்டும்தான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்… என்று எக்கச்சக்கமான சட்டதிட்டங்கள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் பேராசையினால் தமிழ்நாட்டின் மிக அரிய ஓர் இயற்கை வளம் சில பத்தாண்டுகளுக்குள் மொத்தமாகக் கொள்ளை போயிருக்கிறது. முன்பு என் சிறு வயதில் தினமும் ஆற்றில் குளிக்கச் செல்தல் எங்களுக்குப் பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஒன்றரை மைல் அகலத்திற்கு பரந்த வெண் மணற்பரப்பு இரண்டு புறமும் விரிந்து கிடக்க, கோடைக்காலங்களில் நடுவேயும், மழைக்காலங்களில் பொங்கிக் கரை கொள்ளாமலும் கடலை நோக்கி ஓடும் அந்த நதியைப் பரவசத்துடன் பல முறை கண்டு, குளித்து, அனுபவித்திருக்கிறேன். பெரிய கழிவுகள் எதுவும் ஆற்றில் கொட்டப்படாத பொற்காலம் அது. பௌளர்ணமி நிலவு நாள்களில் சித்திரான்னங்களுடன் ஆற்றில் குளித்து விளையாடி உணவருந்திச் சென்றிருந்த கனவுக் காலம் அது. நிலவு போன்ற வெண்ணிற மணற் பரப்புகளில் அலுப்பே தெரியாமல் காலையும் மாலையும் விளையாடிய விளையாட்டுக் காலம் அது. நீரில் இறங்கி விட்டால் நேரம் போவது தெரியாமல் பல மணி நேரங்கள் அலுப்பின்றி நீந்திக் களித்துக் கண்கள் சிவக்க வெளிவந்த கவலையற்ற பருவம் அது. வற்றாத ஜீவநதி அது. இந்த ஆறு அப்படி இருந்தது என்று இன்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறான், கனவுலகில் இருக்கிறான் என்று நினைத்து நம்ப மாட்டார்கள். ஆம் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட அது ஒரு வாழும் நதியாகத்தான் இருந்தது. உண்மை; வெறும் கற்பனையில்லை.
கருவேலமரக் காடும் மணற்கொள்ளையும் பின்னே கழிவும்
மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும். இன்று மணல் களவு போய் வெறும் சேறும் சகதியுமாக பாழ்பட்டுக் குற்றுயிரும் குலையுருமாக, நானும் இருக்கிறேன் என்று களையிழந்து ஜீவனின்றிக் கிடக்கின்றது. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் என்றால் கட்டற்று ராட்சசன் போல வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்கள் அந்த நதிக்கு மற்றொரு யமனாக வாய்த்திருக்கிறது. இந்த இரு பெரு நாசங்களையும் தவிர வழியில் உள்ள நகரங்கள் முழுவதிலும் பெருத்த மக்கள்தொகையின் அத்தனைக் கழிவுகளும் நதியில் கொட்டப்படுவது மற்றுமொரு சீர்கேடு. பல்லாயிரம் ஆண்டுகளாக செழிக்கச் செழிக்க உணவு உற்பத்தியின் ஆதாரமாக இருந்த நதி இன்று மற்றொரு கூவமாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நதியின் பாதையில் பெரும்பான்மையான இடங்களில் ஆற்றின் அருகே சென்று பார்க்கவே முடியாத வண்ணம் சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக ஆற்றங்கரைகளிலும் ஆற்றின் உள்ளேயும் வளர்ந்துள்ளன. முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் காரில் செல்லும் பொழுதே நதியின் ஓட்டத்தைப் பார்க்கலாம். இப்பொழுது சுத்தமாக அடர்ந்து வளர்ந்த சீமக் கருவேல முள்மரங்களும் பார்த்தீனியச் செடிகளும் பெரு வனமாக வளர்ந்து நதியை மறைத்து விடுகின்றன. அருகில் சென்றால் கூட ஆற்று நீரின் ஓட்டத்தைக் காண முடிவதில்லை. தண்ணீர் பெருக்கெடுத்துப் போகும்பொழுது அந்த மரங்கள் தண்ணீருக்கு அடியிலும் வளர்ந்து இருப்பதினால் யாரும் துணிந்து உள்ளே நீந்திக் கூட சென்று விட முடியாது. உடலைக் கீறிக் கிழித்து விடும்.
தொடர்ந்து நடத்தப்பட்ட மணற் கொள்ளைகள் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பரந்து விரிந்த பெரும் மணற் பரப்பு இன்று காணக் கிடைப்பதில்லை. மணற் பரப்பு இல்லாத படியால் சகதியில் இறங்கி ஆற்றை நெருங்க வேண்டியுள்ளது. இப்படி சீமைக் கருவேல மரங்களும் சகதிகளும் கலக்கும் சாக்கடைகளும் சேர்ந்து இந்த நதியை பயன்படுத்த முடியாத ஒரு கூவம் போல மாற்றியுள்ளன. இந்த நதி மக்களின் வாழ்க்கையுடன் இயைந்த- அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்து அவர்களின் அன்றாடப் பயன்பாடுகளான குளிப்பதற்கும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆரோக்யமான பொழுதுபோக்குகளுக்கும் ஆதாரமாக இருந்த ஒரு நதி. நூறு கிலோமீட்டர்களுக்கும் அதிகமான நீளமுள்ள ஆற்றில் இன்று பல மைல் தூரம் சென்றாலே குளிப்பதற்கும் ஆற்றின் அருகே செல்வதற்கும் ஏற்ற ஒரு சில படித்துறைகளும் மணற்பாங்கான கரைகளும் காணக் கிட்டுகின்றன. நதியின் ஒட்டு மொத்த 150 கிமீ தூரத்திலும் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆற்றை அணுக முடிகிறது, மணற் கரைகள் காணக் கிட்டுகின்றன. அற்புதமான மேற்குத் தொடர்ச்சி பாபநாசம் மலைத் தொடரில் நதி தூய்மையாகவும் தன் இயற்கையான வனப்புடனும் தன் பயணத்தைத் துவக்கும் நதி கீழிறங்கி சமதளத்தில் ஊர்களின் நடுவே ஓடத் துவங்கும் பொழுதே அதனை மாசு படுத்தலும் அசிங்கப் படுத்தலும் துவங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த இந்த ஒரே நதியும் இப்பொழுது மதுரையில் ஓடும் வைகை என்னும் சாக்கடை போல, சிங்காரச் சென்னையில் ஓடும் கூவம் என்னும் சாக்கடை போலச் சீரழிந்து போய் விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
தாமிரவருணிக் கரையில் இருந்த என் கிராமத்திற்குச் சென்றிருந்த பொழுது தினமும் ஆற்றிற்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “இந்த ஊரில் அந்த ஆற்றின் பக்கமே இப்பொழுது யாரும் போவதில்லை. சகதியும், கருவேல முள் மரமும் நிறைந்திருக்கிறது. நீ வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரும் வழியைப் பாரு,” என்று சொல்லி வைத்த மாதிரி பலரும் எச்சரித்தார்கள். வெள்ளம் வரும் காலத்தில் கூட கவலையின்றி குளிக்கச் சென்ற மக்கள் கூட இப்பொழுது இந்த ஆற்றின் அருகில் போவதில்லை. பேயைக் கண்டது போல பயந்து ஒதுங்குகிறார்கள்.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட, வீட்டில் குளிக்கும் ஆள்களை அரிதாகவே பார்க்க முடியும். ஆற்றிற்கோ ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்றிலோதான் அந்த ஊர் மக்கள் அனைவருமே குளிக்கச் செல்வார்கள். குளித்து விட்டு இடுப்பிலோ தோளிலோ ஒரு குட ஊற்று நீருடனும் ஈரம் சொட்டும் உடைகளுடனும் சாரிசாரியாக காலையும் மாலையும் மக்கள் வருவது சாதாரண நிகழ்வாக இருந்துகொண்டுதான் இருந்தது. இன்று ஆற்றிற்குக் குளிக்கவோ ஏன் பார்க்கக் கூடச் செல்ல முடியாத நிலை. முன்பெல்லாம் குடிநீருக்கும் கோயில் விக்ரகங்கள் திருமஞ்சனத்திற்கும் ஆற்றில் இருந்துதான் நீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் துணிகளுடன் சென்றால் துணிகளை ஒருபுறம் துவைத்து வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மணலில் தோன்றி வைத்த இடங்களில் ஊற்று ஊறியிருக்க, குடத்துடன் கொண்டுசெல்லும் தாமிரப் பாத்திரத்தை வைத்து நீரை மொண்டு குடத்தை நிரப்பி விடுவார்கள். இப்பொழுது ஆற்றின் கரையில் மணலும் இல்லை; மணலில் யாரும் ஊற்று நீர் தோண்டுவாரும் இல்லை. எல்லாமே பழங்கனவாய் போனது. இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு முன்பாக பஞ்சாயத்துக் குழாய்களில் உப்பு நீரே ஊற்று நீர், குடிநீர் எல்லாமே. குழாயில் நீர் வராவிட்டாலும் யாரும் ஆற்றுக்கருகே ஒதுங்குவது கூடக் கிடையாது.
எச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் வீட்டுக்கருகே ஓடும் வாய்க்காலிலும் மறுநாள் துணிந்து வீட்டில் இருந்து ஓர் அரைக் கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றுக்கும் சென்றிருந்தேன். கால்வாயில் பாசியும், பச்சையும் படர்ந்து பழுப்பும் பாசி நீலமும் கலந்த நீரில் எங்கு முள்செடிகள் இருக்கும் என்பதைக் கண்டு, விலக்கி, ஜாக்கிரதையாகக் குளிக்கிறார்கள். ஆற்றிற்கு போகும் வழி முழுக்க மலக் காடுகள்; எங்கும் கழிக்கப்பட்ட மனிதக் கழிவுகள், குப்பைகள் நிறைந்திருந்தன. மிகவும் ஜாக்கிரதையாகக் கால்பதித்து நடக்க வேண்டியிருந்தது. முள்ளு மரங்களின் ஊடாக முழங்கால் வரையிலான சகதிகலந்த நீரில் சற்று தூரம் நடந்த பின்னால் குளிப்பதற்கென்று கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுவைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தை அடைய முடிந்தது. அதுவரை வழுக்கி விழாமல் செல்வதே கடினமாக இருந்தது. நல்ல மழை தொடர்ந்து பெய்திருந்தமையினால் ஆறு முழுக்க கருநீலமான நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களின் கழிவுநீர்களையும், குப்பை, அசுத்தங்களையும், திருநெல்வேலி நகரத்தின் ஒட்டு மொத்த வீட்டு, வணிகக் கழிவுகளையும் தனக்குள் அடக்கி, ஒளித்து வைத்துக்கொண்டு மேலோட்டமாக கரும்பச்சையில் கள்ளத்தனமாக, ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பது போல போல நதி ஓடிக் கொண்டிருந்தது, தான் நடந்துவந்த பாதை முழுவதும் ஓர் அடி விடாமல் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு பாழ்பட்டு ஓடிய அந்த நதி. “ரோலிங் வாட்டர்(?!) கேதர் நோ மாஸ்” என்று சின்ன வயசில் படித்ததை நம்பித் துணிந்து கடவுள் மீது பாரத்தைப் போட்டு ஆற்றில் இறங்கி விட்டேன்.
காலுக்குக் கீழே வழவழப்பான்ன சகதியில் சிறிது தூரம் உள்ளே சென்ற பின், நறுநறுவென புது வெள்ளம் கொண்டு போட்டிருந்த- இன்னமும் களவு போகாமல் இருந்த- மேற்குத் தொடர்ச்சி மலைப்பாறைகளின் மணற் துகள்கள் கால்களில் பதிவது பேரானந்தமாக இருந்தது. ஒரு நிமிடம் அந்த ஆற்றில் கலந்திருக்கும் கோடிக்கனக்கான டன் கழிவுகளையும் சீரழிவுகளையும் மறந்து உள்ளே மூழ்கி அடி மணற் கண்டு அங்கேயே மூச்சடைத்து நின்றேன். அந்த இடத்தில் மட்டும் முள்ளு மரங்கள் இருக்காது என்றும் மணல் அள்ளும் பாதையாக இருந்தபடியால் முள் பயம் இல்லாமல் நீந்திக் குளிக்கலாம் என்றும் அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த அளவுக்கு, அந்த நதியைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக நினைத்த உள்ளூர் மக்களே, அஞ்சி அருகே செல்லாத ஓர் ஆபத்தான இடமாக மாறிவிட்டிருந்தது அந்த நதி. பால் கொடுத்து வளர்த்த தாமிரவருணித் தாயை இன்று விஷம் கொடுக்க வைத்து விட்டிருக்கிறார்கள். ஆற்றில் இருந்து வெளியேறிய பின்னர் நண்பரிடம், “இப்பொழுதுதான் தாமிரவருணியில் குளித்து வெளியே வந்திருக்கிறேன்,” என்றேன். “அடடே, நான் தான் சொன்னேனே அதற்குள் இறங்க வேண்டாம் என்று. எதுக்கு ரிஸ்க் எடுத்தீர்கள்? பார்த்து, படை, சொறி, அரிப்பு, தோல்நோய் என்று எதுவும் வந்து விடப் போகிறது,” என்று பயங்காட்டினார். “இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை. பழைய நினைப்பில் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டு இறங்கி மூழ்கி விட்டேன்,” என்றேன். “சரி சரி வாழ்க்கையை வெறுத்து துணிந்திருக்கிறீர்கள். நான் என்ன சொல்வது? உங்கள் பாடு!” என்று விட்டுவிட்டார் அவர். அவர் சொன்னதையே நான் ஆற்றில் குளிக்கப் போனதைக் கேள்விப்பட்ட பல உறவினர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஆற்றில் குளிக்காத மக்கள் அந்த ஊரில் கிடையாது. இன்று அதே நதியைப் பயன்படுத்துவோர் அருகி வருகிறார்கள். அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த ஒரு நதி ஆள்வோரின் சீரழிப்பால் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆற்றில் மனிதர்கள் இறங்காவிட்டாலும் கூட நிறைய பறவைகள் வந்திறங்கியிருந்தன. மணல் தோண்டி ஆங்காங்கே மேடுபள்ளங்களும் ஆற்றின் நடுவே பல திட்டுக்களும் அந்தத் திட்டுக்களில் முள் காடுகளும் அடர்ந்திருக்கின்றன. அந்தத் திட்டுக்களும் கழிவுகள் கொண்டு வரும் நதியும் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன. இவ்வளவு பறவைகளை அந்த ஆற்றில் நான் கண்டதேயில்லை. ஆற்றின் மறுகரையில் தூரத்தே திவ்ய தேசத் திருத்தலங்களும், ஸ்ரீவைகுண்டத்தின் ஓங்கி வளர்ந்து ஏஷியன் பெயிண்ட்டில் வண்ணமயமகாக கம்பீரமாக நின்ற போபுரமும் கோயிலின் நீண்ட காவி அடிக்கப் பட்டப் பிரகாரச் சுவர்களும் தூரத்துப் பசுமையின் நடுவே காட்சியளித்து, இந்த ஆற்றின் மாசும் ஒரு நாள் மாறும், இந்த நதியும் ஒரு நாள் புனிதமடையும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நதியால் தழுவப்பட்டு வரும் கோயில்கள் அமைதிச் சாட்சியாக நம்பிக்கையளித்தன.
இன்று நமக்கு வீட்டிற்குள் கார்ப்பொரேஷன் குழாய் வழியாக நதி நம்மைத் தேடி வந்து விடலாம். நாம் போய்த் தேடிச்சென்று நீந்திக் குளிப்பதற்கும் குடிநீர் கொள்வதற்கும் நமக்கு நதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனாலும் நதி வளமாகவும் தூய்மையாகவும் இருந்தால்தான் அதன் கரைகளில் வாழும் மனிதனும் ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். நதி நசிந்தால் நாகரிகம் நசிக்கும்; கலை நசிக்கும்; மனிதம் நசிக்கும். மேற்கத்திய நாடுகளில் உள்ள நதிகள் அன்றாட மனிதப் பயன்பாட்டுக்கு உரியவை அல்ல. இருந்தாலும் அவைப் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் ஆறுகளை நாம் குளித்து அனுபவிக்க முடியாது. அதன் பாதையில் உருவாகும் அருவிகளும் ஓடைகளும் கண்களுக்கு ரம்யமான காட்சிகளுக்காக உள்ளவை மட்டுமே. ஆனால் நமது நதிகள் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. நம் ஊனிலும் உணர்விலும் கலந்து ஓடும் ஓர் அங்கம். நம் நதிகள் நமக்குத் தெய்வங்கள். இயற்கையைத் தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். நதிக்கரைகளையும் கடவுள்களையும் நம்மால் பிரிக்க முடியாது. வடக்கே இமய மலையின் கங்கை முதல் தெற்கே குமரி முனையின் நதிகள் வரை நம் கலாசாரத்தில், நம் பாரதப் பண்பாட்டில், நதிகள் என்றால் புனிதமானவை; வணக்கத்துக்குரியவை. நதி நம் தாய்; நம் கடவுள். நதி நம் வாழ்க்கையின் ஆதாரம். பாரதம் முழுவதையும் இணைக்கும் இந்துப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று நதி வழிபாடு. ஆறுகளை நாம் தாயாக, தேவியின் வடிவாக நினைத்து அல்லவா வணங்கி வருகிறோம். இயற்கையின் ஒப்பற்ற வரங்களில் ஒன்றை, பல்லாயிரக்கணக்கான நம் இந்துப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றை நாம் என்றிலிருந்து அசிங்கப்படுத்த ஆரம்பித்தோம்? தாயாக வணங்கிய நதியை நாம் நச்சு நீராக மாற்றிய அலட்சியம் எங்கு எப்போது துவங்கியது? எப்படி நாம் நம் வணங்கிய கடவுளை அழிக்கத் துணிந்தோம்?
இயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் பாரதப் பண்பாட்டின் அடிப்படைக் கூறு. கடவுள் பக்தி இருந்தவரை, நம்பிக்கை இருந்தவரை நாம் இயற்கையைப் போற்றி வணங்கிப் பாதுக்காக்கத் தவறவில்லை. என்று நம் நம்பிக்கையின் வேர்கள் அசைக்கப் பட்டனவோ, என்று திராவிட இயக்க, கிறிஸ்தவ மதமாற்ற விஷக் கிருமிகள் நம்மிடையே பரவத் தொடங்கியதோ அன்றிலிருந்து இயற்கையை இறைவனாக மதித்து வணங்கும் நம் வழக்கம் தளர ஆரம்பித்தது. நம் வீழ்ச்சியின் துவக்கம் அன்றிலிருந்து துவங்கியது. கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். நம் தொன்மையான நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி மாற்றுவதன் மூலம் நமது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது நம்மை ஆக்கிரமித்த பிரிட்டிஷாருக்கும் போர்ச்சூக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் எளிதாக இருந்தது. அன்று வெள்ளைக்காரர்கள் பின்பற்றிய அதே உத்தியை கடந்த 45 ஆண்டுகளாக நம்மை ஆளும் திராவிடக் கட்சிகளும் பின்பற்றி, நம் நம்பிக்கைகளை நம் வழிபாட்டு முறைகளை நம் கலாசாரக் கூறுகளை கேலிக்குள்ளாக்கி, அதன்வழியே அவற்றை அழித்து அதன் விளைவாக நம் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று நம் கலாசாரம் அழிக்கப் பட்டதோ அன்றே நம் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படும் என்பதை நம் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவதார் போன்ற திரைப்படங்கள் உணர்த்துவது இந்த எளிய உண்மையைத்தான். நம் நம்பிக்கைகள் அழிக்கப் பட்டதால் நம் நதிகள் அழிக்கப் பட்டன. நம் பண்பாடு அழிக்கப்பட்டால் நம் இயற்கை வளங்களும் சேர்ந்தே அழிக்கப் படும்; அதன் பிறகு நாம் இன்னும் ஆப்பிரிக்க மக்கள் அனுபவிக்க நேரும் கொடும் வறுமையையும் வறட்சியையுமே சந்திக்க நேரும். நம் கலாசாரத்தை, நம் பண்பாட்டை நம் இந்து தர்மம் கற்றுக் கொடுத்த அடிப்படைகளை நாம் மறந்தால் நாம் எல்லாவற்றையுமே அதனுடன் சேர்ந்து இழந்தவர்களாகிறோம், அதுவே நசித்து வரும் நம் காவேரியும், தாமிரவருணியும் இன்று நமக்கு உணர்த்தும் பாடங்கள். இனிமேலாவது, காலம் கடப்பதற்கு முன்னால் நம் மக்கள் இந்த விஷ சுழலில் இருந்து வெளியேற முயல வேண்டும்.
இன்னும் நதி வற்றி விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கிறது. என்றாவது நம் தேசத்தின் இயற்கை வளங்கள் மீதும் பாரம்பரியச் சின்னங்கள் மீதும் நம் மண்ணின் மீதும் அக்கறையுள்ள, தேசத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கம் இல்லாத ஓர் அரசாங்கம் அமையுமானால் நிச்சயமாக இந்த நதியை மீட்டெடுத்து விடலாம். அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இந்த நதி முற்றிலுமாக மற்றொரு கூவமாக மாறி விடும் முன்னால் மீட்டெடுக்க வேண்டியது மிக மிக அவசரம். நதி உற்பத்தியாகும் இடத்தில் தொடங்கி கடலில் சேரும் சங்கமம் வரை ஆற்றின் கரைகளிலும் உள்ளேயும் உள்ள ஆக்கிரமிப்புகள், முள் செடிகள் அகற்றப் பட வேண்டும். மணற் கொள்ளை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நதியில் சாக்கடைகளையும் கழிவுகளையும் கொண்டுசேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும். காட்டுச் செடிகளும், விஷக் கொடிகளும் நீக்கப்பட வேண்டும். நதி என்பது தோற்றத்தில் இருந்து, கடலில் கலக்கும் இடம் வரை, தூய்மையான நீராக, மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பயன்படுத்தக் கூடிய ஓர் அளப்பரிய வளமாக, மீண்டும் ஒரு வாழும் நதியாக மாற்றப்பட வேண்டும். இந்தக் காரியங்களை ஓர் அரசாங்கத்தினால் மட்டுமே செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரமும், அதிகாரமும் அரசிடம் மட்டுமே உண்டு. கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்? எப்பொழுது செய்யப் போகிறார்கள்? இனி வரும் தமிழ்நாட்டு அரசியலில் இந்தக் கனவு நனவாகும் ஒரு காலம் இனி எப்பொழுதாவது நம் வாழ்நாளில் வருமா?
நம் சந்ததியினருக்கு நாம் விட்டுவிட்டுப் போகப்போவது என்ன?
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அதிகார துஷ்பிரயோகம், அரசியல், அலட்சியப் போக்கு, ஆதிச்சநல்லூர், இந்துத்துவம், இயற்கை, இயற்கை வளம், இயற்கைச் செல்வம், கருவேலமரக் காடு, கலாசாரம், கிணறு வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, கூட்டுக் கொள்ளை, கேரளா, சட்ட மீறல்கள், சமூகவியல், சுற்றுச்சூழல், சுற்றுப்புறச்சூழல், சூழலியல், ஜீவநதி, தண்ணீர், தமிழக அரசு, தமிழகம், தமிழர், தாமிரபரணி, திருநெல்வேலி, நடவடிக்கைகள், நதி, நீர் மாசு, நீர் மேலாண்மை, பசுமை, பாபநாசம், புன்னைக் காயல், பொருநை ஆறு, மணற்கொள்ளை, மனிதஉரிமை, மாநில அரசு, வரலாறு, வளம், வழிபாடு, வாழ்வியல் ஆதாரம்
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
30 July 2010 at 10:44 am
திருமலை, மிக நல்ல கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன?