அழைத்து அருள் தரும் தேவி

மெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரப்பட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில்  “இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம். நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது.

vaishno-devi-temple

ஜம்மூவிலிருந்து   50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே.  ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்’ என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி (வைஷ்ணவி) கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்.

இமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200  அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து  துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும். இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷ¤யுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் கவுண்ட்டர் கணினிமயமாக்பபட்டிருப்பதால் பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள். அதிகபட்சம் 22000  பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால் தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே  புதிய அனுமதி சீட்டுகள்  வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின்  நடந்தோ, குதிரையிலோ, பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ   பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது.

பெரும்பாலான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள், குடும்பங்கள், உரசிக்கொண்டு போகும் குதிரைகள் இவர்களுக்கிடையே  நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கீழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாயாசமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள். கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனாலயங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்க கூடங்கள் என  பல வசதிகள்..  ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்டர் வசதியிருப்பது  என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும்  படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.

ma-vaishno-deviசிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும், தவத்தை கலைக்க முயற்சித்த பைரவ நாத் என்பவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம். இறுதியின்  பைரவ  நாத்  தேவியின் திருவருளால் முக்தியடைந்து விடுகிறான். பிரதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி  மூன்று  பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது. எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன்  அந்த பிண்டிகளை  கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும்.

அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட  6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும்   சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதி சீட்டிற்கான குரூப் எண்ணைப் பெற்று  வரிசையில் காத்திருக்கிருக்கும் போது தான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்ட் சர்க்யூட் டிவியில்  காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதிக்கு அனுமதிக்க பட்டிருக்கிறது என்பது தெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். வரிசையிட்டுச் செல்லும் வழியின் இறுதியில் கண்னாடி சுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை.

vaishno-devi-wallpaperசில காலம் முன் வரை தவழ்ந்து செல்லவேண்டிய குகையாக இருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன்   சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.

அந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை, அதில்தான் சன்னதி. அடுத்தவரின் கழுத்து இடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்த சில வினாடிகளுக்குள் அவசரப் படுத்துகிறார்கள். சரியாகப் பார்ப்பதற்குள் நமது தலையில் கையை வைத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பி விடுகிறார்கள். நுழைந்த மாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம்.

“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில்   யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது. ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம்    வழியிலுள்ள பைரவ நாத் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார்  ஒரு பக்தர்.  பைரவ நாதரையும் தரிசித்துவிட்டு  மற்றோர் பாதைவழியாக  கத்ரா திரும்புகிறோம்.

jammu-katra-palaceகத்ராவிலிருந்து ஜம்முவிற்கு  வந்து  நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது  சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த  சிலை நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம்.  நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை. 1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு  தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது.

அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்,  காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.

throne-in-jammu-palaceஅரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான டாக்டர் கரன்சிங் (முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார். ஒரு அறக்கட்டளை நிர்வகிக்கும்  இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம். அரச குடும்பத்தின்  தலைமுறைகள் சேர்த்த   பலவையான  அற்புதமான ஓவியங்களும்  அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன.  தர்பார் ஹாலில் மன்னர் குடும்ப படங்களைத்தவிர, மினியெச்சர் என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல்   காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக் கண்டு வியந்துபோகிறோம்.

60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக் கொண்டிருக்கும்  நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வச் செழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது. முதல் தளத்தில் 25000 புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது. “மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்” என்ற வாசகம் நினைவிற்கு வந்தது.

6 Replies to “அழைத்து அருள் தரும் தேவி”

  1. தெளிவான கட்டுரை நடை, நேரில் சென்று வந்த நிறைவை தருகின்றது .

  2. எனக்கு வடநாட்டில் சிவத்தையும் அம்பிகையையும் இந்துக்கள் எப்படி வழிபடுகின்றார்கள் என்பதை நேரில் கண்டு அனுபவிக்க ஆசை. ஓரளவு இந்தக் கட்டுரை என் தாகத்தைத் தணிக்கின்றது.

  3. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அம்பிகையை தரிசித்து விட்டு பின்னர் அமர்நாத் சென்று வழிபாடு செய்துவிட்டு இன்று இல்லம் திரும்பியதும் இக்கட்டுரையை இன்று தான் படித்தேன். அருமையான செய்திகளை அறியத் தந்திருக்கும் கட்டுரையாளருக்கு என் இதய நன்றி.

  4. தினசரி தொலைகாட்சியில் இந்த கோவிலைப் பார்த்தாலும் இந்த கட்டுரை நேரில் கோவிலுக்குச் சென்றது போல் இருந்தது. கரன்சிங் அவர்களின் உள்ளதை எங்களுக்குப் புரிய வைத்தது. கட்டிடங்களை விட நல்ல செயல்கள் தான் நிலைத்து நிற்கும் என்பதைச் சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் பனி தொடர்ந்து செழிக்கட்டும்.

  5. தேவியை தரிசிக்க எண்ணம் ஏற்படுத்தும் அருமையான கட்டுரை! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *