இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6

அவ்வப்போது, முடிந்த போதெல்லாம் நான் சில கோயில் தரிசனங்கள் செய்ய வேறூர்களுக்குப் போவதுண்டு. ஆனால் சில பங்களிப்புகளும், தரிசனங்களும் தானாக எனக்கு அமைந்ததும் உண்டு. மறக்கமுடியா ஒரு தொடர் விசேஷ தரிசனங்கள் பற்றியும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை தானாக அமைந்ததும் அல்லாது, ஒரு குறிப்பிட்ட கால தேசத்துக்குள்ளும் அமைந்ததுதான் எனக்கு மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தன.

puri_jagannath-in-chennaiஎன்னுடன் சக ஊழியராக வேலை பார்த்த முனைவர் ஒருவர்; ஒரிஸ்ஸாவில் இருந்து வந்துள்ளவர். அந்த முனைவரின் உதவியால்தான் நமது “அருணாசல அக்ஷர நாமாவளி“யின் முதற் பதிப்பும் வெளியாகியது என்பது தனிக் கதை. அவர்கள் சங்கத்தின் சார்பாக பூரியில் இருக்கும் ஜெகன்னாதர் கோயில் போல ஒரு கோயிலை சென்னை-மகாபலிபுரம் கீழக் கடற்கரை சாலையில் உத்தண்டியைத் தாண்டி காணத்தூரில் நிறுவிக் கொண்டிருந்தனர். வெகு நாள்கள் ஆகியும் முன்னேற்றம் மிகவும் இல்லாது தடைகள் பலவும் நேர்ந்ததால், விநாயகர் சந்நிதியை முதலில் முடித்து அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து முடித்து விடுவது எனத் தீர்மானித்தனர். அதுவே அவர்களது முதல் முயற்சி என்பதாலும், கும்பாபிக்ஷேகம் பற்றிய விவரங்களை அவர்கள் மிகவும் அறியாததாலும் என்னை ஒரு குழுவின் கௌரவத் தலைவராக ஆக்கி, வைதிக முறையில் செய்து வைக்க வேண்டி, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னனர். அப்போதெல்லாம் எனக்கு நேரமும் இருந்தது, உடம்பை வருத்திக் கொண்டு உதவி செய்யவும் முடிந்தது. நான் எனக்கு அறிமுகமாகி இருந்த வைதிகர்களின் துணைகொண்டு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடிக்க முடிந்தது. அது முடிந்ததும் நாற்பத்தெட்டு நாள்கள் கழித்து வரும் மண்டல பூஜைக்கும் என்னை அழைத்திருந்தனர்.

sankarankoilஅதற்குள் ஒருமுறை காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது காஞ்சிப் பெரியவர்களின் அனுமதியினால் சங்கரன் கோயில் கும்பாபிக்ஷேகத்திற்கு அவர்களுடன் சென்றுவர ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நானும் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கிருந்த அவர்களது பரிவாரத்துடன் சேர்ந்துகொண்டேன். எனக்கு அவர்களது நிகழ்ச்சி நிரல் எதுவும் தெரியாது. அங்கு போனதும்தான் சங்கரன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர்கள் அடுத்தபடியாக திருச்செந்தூர் முருகன், மற்றும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகங்களுக்கும் செல்வார்கள் என்று தெரிந்தது. அவர்களுடன் அப்படிச் சென்றதால் எல்லா கும்பாபிஷேகங்களுக்கும் சென்று நன்கு தரிசனமும் செய்ய முடிந்தது. முதலில் சிவன், அப்புறம் முருகன், அதற்கப்புறமாக அம்பாள் என்று வரிசையாகவும் செய்ய முடிந்தது. அது முடிந்ததும் சென்னை வந்த மறுநாளே பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள பிள்ளையார் சந்நிதி மண்டல அபிஷேகத்திலும் கலந்து கொள்ள முடிந்தது.

இப்படியாக ஒரு தேவையினால் பிள்ளையாரில் ஆரம்பித்து, அது முடிந்து ஒரு மண்டலத்திற்குள் பரமசிவன் குடும்பக் கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்ததை ஓர் அருளாகவே கருதுகிறேன். சங்கரன் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணன் என்பதால் இந்த வரிசையில் முழுமுதற் கடவுளர்கள் இருவரும் உள்ளதை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

இனி வருவது இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் அப்புறம் என்றுதான் ஞாபகம். பக்தர்கள் பலரின் முயற்சியால், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணி செவ்வனே முடிவுற்று, 1996-ம் வருட ஆரம்பத்தில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. சாதாரணமாக அரசர்கள் அல்லது நாட்டுக்கோட்டை தனவந்தர்கள் முன்னின்று நடத்தும் ஒரு பணியை அங்கிருந்த சாமியார் அவர்களின் முயற்சியால் நன்கு நிறைவேறியதைப் பாராட்டாதவர்கள் எவரும் இல்லை. அந்த வைபவங்களில் ஐந்து நாள்களும் கலந்துகொண்டு என்னால் இயன்றதையும் செய்துகொண்டிருந்தேன்.

அந்த கும்பாபிஷேக சமயத்தில் நான் பல அன்பர்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் தான் அந்த ஓதுவார். அவர் திருவாரூர் பக்கம் இருந்த ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பதாகவும், அவர் உள்ள இடத்தில் இருக்கும் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் பாடல் மட்டும் பெற்ற ஸ்தலம் என்றும் கூறி, அந்தக் கோயிலின் திருப்பணி நடைபெறுவதாகவும், நான் எப்போதாவது அங்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திருவாரூர் போக வேண்டும் என்பது எனது நெடு நாளைய ஆசை

thiruvarur

 

ஒவ்வொரு நாளும் சாயரட்சையில் எல்லாச் சிவன் கோயில்களின் கலைகளும் திருவாரூர் கோயில் தியாகராஜர் சந்நிதியில் ஒடுங்கும் என்றும், ஒவ்வொரு நாளும் இந்திரன் அங்கு சாயங்காலப் பூஜை செய்வதாகவும் ஐதிகம். திருவாரூர் என்பதே திரு+ஆர்+ஊர் என்பதைக் குறிக்கும்; லக்ஷ்மி பூஜை செய்த இடம் அது. ஒருமுறை அக்கோயிலின் முகப்பில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருந்த அடியார்களுக்கு வணக்கம் செலுத்தாது சுந்தரமூர்த்தி நாயனார் நேராக சிவன் சந்நிதிக்குச் செல்ல, அதைப் பார்த்த விறனமிண்ட நாயனார் என்பவர் கோபம் கொண்டு “வன்தொண்டரும் புறகு” என்கிறார். வன்தொண்டர் ஆகிய சுந்தரரை அப்படிப் புறந்தள்ளி ஒதுக்கியதோடல்லாமல், அவருக்குத் தனியாக வடக்கு கோபுர வாயிலுக்கருகே ஒட்டுத் தியாகேசராக தரிசனம் கொடுத்த சிவபெருமானையும் அப்படியே உதாசீனம் செய்கிறார். அதனால் அவரிடம் சுந்தரரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்…” எனத் தொடங்கும் அறுபது நாயன்மார்கள் பற்றித் தெரிவிக்கும் “திருத்தொண்டத் தொகை”யை திருவாரூரில் எழுதி முடிக்கிறார். அப்புறம் வெளிவந்த நம்பியாண்டார் நம்பி, “திருத்தொண்டர் திருவந்தாதி”யில் சுந்தரர் மற்றும் அவர் பெற்றோர்கள் இருவரையும் அதில் சேர்த்து அறுபத்து மூவர் ஆக்குகிறார் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கும், சேக்கிழார் பெருமானின் :திருத்தொண்டர் புராணம்” ஆகிய பெரிய புராணத்திற்கும் சுந்தரர் அளித்ததே மூல நூலாகும். அத்தகைய திருவாரூருக்குப் போய்வர வேண்டும் என நான் எண்ணியிருந்ததால், எனது திருவாரூர் அன்பர் ஒருவரது துணை கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள வெவ்வேறு கோயில்களையும் தரிசனம் செய்யப் புறப்பட்டேன்.

நமது ஒதுவார் இருந்த ஊருக்குச் செல்ல அங்கிருந்து டவுன் பஸ்ஸிலேயே போகலாம் என்று அறிந்து கொண்டபின், அதன் நேரமும் தெரிந்துகொண்டு என் நண்பரை நேராகவே பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு நாள் காலை வரச் சொல்லியிருந்தேன். பஸ்ஸோ வந்து விட்டது, ஆனால் நண்பரைக் காணவில்லை. அடுத்த பஸ்ஸில் போகலாம் என்றால் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம் என்பதால், விசாரித்துக் கொண்டு செல்வோம் என்று பஸ்ஸிலேயே அமர்ந்துவிட்டேன். பஸ் புறப்பட்டு சிறிது நேரம் கழித்து என் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் அந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லி, அந்த ஊர் வரும் போது என்னிடம் சொல்லச் சொன்னேன். அவரோ, “நானும் அங்குதான் போகிறேன். கவலை வேண்டாம்” என்றார். என்ன விஷயமாக வந்திருக்கிறேன் என்று அவர் என்னை விசாரிக்க, நான் ஒதுவார் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்ல, அந்த நபரோ ஓதுவார் வீட்டின் எதிரில்தான் அவர் வசிப்பதாச் சொல்லி, அவர் வீட்டிற்கும் வரச் சொன்னார்.

நல்லது என்று சொல்லி, அப்போதுதான் அவர் பெயரையும் விசாரித்தேன். தன் பெயர் அருணாசலம் என்றார். எனக்கோ இறைவனே அழைத்துக் கொண்டு போவது போலத் தோன்றியது. என் கையில் இருந்த அருணாசல நாமாவளி கைப்புத்தகப் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். அவர் வீட்டிற்கும் சென்றேன்; அவரும் அப்போதுதான் பறித்த இளநீர் இரண்டை சீவி எனக்குச் சாப்பிடக் கொடுத்தார். இதற்குள் எனது திருவாரூர் நண்பரும் அடுத்த பஸ்ஸைப் பிடித்து அங்கு வந்து சேர்ந்தார். ஓதுவாரையும் பார்த்துவிட்டு, சிவன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு அன்று மாலையே திருவாரூர் திரும்பினோம். அச்சமயம் திருவாரூர் கோயிலில் நடந்த அண்ணாமலையார் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சம்பவத்தை எனது, “நம்மைத் தேடி வரும் இறைவன்” கட்டுரையில் சொல்லி இருப்பது வாசகர்களுக்கு ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் எனது திருவாரூர் அன்பரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக என் வீட்டில் சொன்னார்கள். அதன்படி அக்குடும்பத்தினர் சென்னைக்கே குடிபெயர்ந்து வந்து சில நாள்களிலேயே, அவரது 80-வயதுக்கும் மேலான பாட்டியார் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும், அவரது இறுதி நாள்கள் அமைதியாக இருக்க பிரார்த்தனை செய்யவும், முடிந்தால் என்னை வரச் சொல்லியும் செய்தி வந்திருந்தது. நான் அன்று மாலையே அங்கு செல்லும்போது, கையில் இருக்கட்டும் என்று நாமாவளிப் பிரதிகள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

பாட்டி மிகவும் முடியாது ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். நான் வந்தது தெரிந்தது, காதும் நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் பேசத் திறன் இல்லை. அதற்குப் போதுமான சக்தி இல்லை. சரியாகச் சாப்பிட முடியவில்லை, திரவங்கள் தான் ஆகாரம். அவைகளும் உடலில் தங்குவதில்லை. சிறிது நேரம் அவரைப் பற்றிப் பேசி விட்டு, அவரது காது நன்கு கேட்கிறது என்பதால் நாமாவளியைப் பாராயணம் பண்ணலாமா என்று கேட்டேன். அவர்களது சம்மதத்தின் பேரில், நான் முன்னே பாடிக் கொண்டிருக்க மற்றவர்களும் புத்தகத்தைப் பார்த்து என்னுடன் பாடினார்கள்.

பாடி முடியும் தறுவாயில், வைத்தியரும் பாட்டியைப் பார்க்க வந்தார். பாட்டி இறந்தால் திருவாரூர் பக்கம் உள்ள தனது கிராமத்தில் இறக்க விரும்புவதாகவும், அன்று மறுநாள் அதிகாலையே கார் ஒன்றில் அவரை அழைத்துச் செல்லப் போவதாகவும் சொல்ல, வைத்தியரும் காலையில் கிளம்பும் முன் drips கொடுக்க வருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார். நான் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி வந்து விட்டேன்.

இரண்டு மூன்று வாரங்கள் சென்றபின், என் வீட்டில் இருந்தவர்களுடன் அந்த அன்பர் பேசி இருக்கிறார். அவர்கள் திட்டமிட்டது போலவே கிராமத்திற்குச் சென்றார்களாம், பாட்டியின் நிலையும் நாளுக்கு நாள் சீராகி, உடல் தேறி சென்னைக்கும் வந்து விட்டார்களாம். எவருக்கும் வருவது போல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சாகும் தறுவாய் என்றார்கள், ஊரில் காலம் முடியட்டும் என்றார்கள், இப்படியும் ஓர் அதிசயம் நடக்கிறது என்றால், மனிதர்களது தவிர வேறு ஒரு சக்தியும் இருக்கிறது என்பதை மீண்டும் உணர்ந்தேன். சில நாள்கள் கழிந்ததும், வேறு எதற்கோ பாராயணம் செய்யும் போது நாமாவளியின் இறுதி இரண்டு அடிகள் என் கவனத்திற்கு வந்தன. அவை:

tiruvannamalaiபவ நோயை தீர்க்கும் மருத்துவரன்றோ ()
மருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பாய் ()

அவைகளைப் பார்த்ததும் வேறு சில அடிகளையும் பார்த்தேன். பல இடங்களில் மலையே மருந்தாய் இருப்பதை உணர்த்துவதையும் நோக்கினேன். அப்போது தான் ரமணரது இந்த “அக்ஷர மண மாலை” அடிகளும் ஞாபகத்திற்கு வந்தன:

மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

சரிதான், பாட்டி பிழைத்தது ஒரு வேளை முதல்நாள் செய்த பாராயணத்தின் பலனாகவும் இருக்கலாமோ என்ற ஓர் எண்ணமும் கிளம்பியது. இது பற்றித் தெரிந்த சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ, அதை எப்படிப் புரிந்து கொண்டார்களோ? ஆனால் பின்னர் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு நாமாவளிப் பாராயணத்தின் அருமையை வெகு சிறப்பாகவே புரிய வைத்தன. இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடப்பதென்னவோ நாராயணன் செயல் என்று நன்றாகவே புரிய வைக்கும்.

(தொடரும்…)

4 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6”

  1. அன்புள்ளம் கொண்ட ஆன்மீக சிவநேய செல்வர்களே
    எல்லாம்வல்ல எம்பெருமான் இந்த பரந்த விரிந்த பெரிய வுலகினை படைத்து ,காத்து,ரட்சித்து அன்பினால் மட்டுமே இயங்க வைப்பது நாம் அறிந்ததொரு செயலாகும்
    அப்படிப்பட்ட பெருமான் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பினும் திருக்கோவில் என்ற ஒரு இடத்தில் நாம் வுய்வு பெற வீற்றிருந்தருள்வது நாம் அறிந்ததே
    நம்மால் ஆலயங்களை கட்டிகாப்பாத்துவது என்பது மிகமிக அறிய பெரிய செயலாகும்.
    ஆகவே எல்லா சிவாலயங்களிலும் தினமும் ஒரு தீபமானது ஒரு வேளையாவது ஏற்றபட்வேண்டும் என்ற பேரவாவினால் தூண்டப்பட்டு இந்த எண்ணெய் தரும் பணியை துவக்கி உள்ளேன்
    இந்த உயர்ந்த தொண்டானது ஏற்கெனவே நாயன்மார்களால் செய்யப்பட்டது தான்

    நமக்கு தேவை எங்கெங்கு சிவாலயங்கள் விளக்கு ஏற்ற எண்ணெய் தேவைபடுகின்றதென்ர செய்தியும் அதற்க்கு நாம் எப்படி உதவினால் அங்கு செய்யமுடியும் என்றும் சொல்ல எல்லோரையும் அழைக்கிறோம் .
    மேலும் இந்த சீரிய பனி அங்காங்கே நடைபெற அனைவரின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கவும் பணிவன்போடு ப்ரார்த்தித்யு கேட்டுகொள்கிறோம்
    வேறு யார் இப்பணியை பண்ணினாலும் தெரியப்படுதும்படியும் அதன் முலம் அந்தந்த வூர் பக்தர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்
    பின் கண்ட வலயதலங்களை
    https://sites.google.com/site/templedeepam
    https://anigopanathar.blogspot.com

    https://vagraharam.blogspot.com

    https://thirunandeeswarar.blogspot.com

  2. திரு ராமன்
    உண்மைதான் -நாமாவளியின் பெருமைகளை அனுபவித்தால் தான் அறிய முடியும் -நம் புனித நூல்களை பாராயணம் செய்தபின் உடனடியாகவே அறியக்கூடியது வார்த்தைகளில் சொல்ல முடியாத மன அமைதி.அது வேறு எதிலும் கிடைக்காது.
    அன்புடன்
    சரவணன்

  3. Dear all co devotees and my best wellwishers,
    Sivayanamaha.
    I am glad to be with you again showing the current status of our Swamis temple as on today.
    The consecration festival is to be celebrated in the simplest but with all aagams,vedas prescribed is to take place between 20.08.2010 to 22.08.2010 at vadapakkam.
    You are invited to view Aalayam Virumbi.’s photo album: Progress on 13=07=2010 Progress on 13=07=2010
    Jul 13, 2010
    by Aalayam Virumbi.
    View Album
    Play slideshow
    Contribute photos to this album

    If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
    https://picasaweb.google.com/lh/sredir?uname=slnvasu&target=ALBUM&id=5493432702345845121&authkey=Gv1sRgCMuLh8iO68DAlAE&feat=email
    To share your photos or receive notification when your friends share photos, get your own free Picasa Web Albums account.

    All are most humbly requested to join us in this noble deed and more news and views are avilable on

    https;//vagraharam.blogspot.com

  4. நான் எதேச்சையாக வேறு ஒரு விஷயம பற்றி தேடும்போது இந்த தளத்தில் உங்கள் எழுத்தக்கள் அறிமுகமாயிற்று…அருமை…என் தொலைபேசி எண் 9940929753..உங்களுடன் நான் பேச வேண்டும்… முடிந்தால் கூப்பிடவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *