சென்ற சனிக்கிழமை (14-ஆகஸ்டு) அன்று தஞ்சையில் சைவ மரபு பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய இப்பதிவும், புகைப்படங்களும் மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து சென்னை நன்மங்கலம் சிவாய நமஹ என்ற சிவத் தொண்டர் மூலமாக நமக்குக் கிடைத்தது. அதனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சிவாய நமஹ என்னும் இறைத்தொண்டர் அனைத்து சிவாலயங்களிலும் திருவிளக்கு ஏற்றும் பணி இடையறாது நிகழவேண்டும் என்பதற்காகப் பற்பல பணிகளைச் செவ்வனே செய்துவருகிறார். அது பற்றிய வலைத்தளம் இங்கே.
- திருச்சிற்றம்பலம் –
நம் சைவ சமயத்திற்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கின்றது. ஆதியும் அந்தமுமில்லா அருப்பெருஞ்சோதியாகிய நம் சிவபெருமானே வேத ஆகமங்களை தம் திருவாய் மலர்ந்தருளினார். முத்தமிழும் மறைகள் நான்கும் ஆனவனாகிய நம் சிவபெருமான் மாதவம் செய்த தென் திசையாகிய செந்தமிழ் நாட்டின்மேல் கொண்ட தனிப்பெருங்கருணையினாலே பன்னிருத் திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் தம் அருளாளர்கள் மூலம் திருநெறிய தமிழில் அருளிச் செய்தார். இக்காலத்தில் சிலர் திருவேடம் பூண்டு தம் தோற்றம் மறந்து வேதாகம நிந்தனையை தமிழ் பற்று என்ற பெயரில் செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். நம் தொன்மையான சைவ மரபினை பாதுகாக்கும் நோக்குடன் நம் சிவபெருமான் அருளிய வேதம், ஆகமம் மற்றும் நம் அருளாளர்கள் அருளிய பன்னிருத் திருமுறை மற்றும் பதினான்கு சாத்திரங்களையும் தகுந்த முறையில் போற்றவும் சைவ பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநாடு திட்டமிட்டபடி 14-08-2010 அன்று மிகவும் சிறப்பாகவும் மங்களகரமாகவும் நடந்தேறியது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. திருநெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் தூப தீபத்துடன் வழிபாட்டினை ஏற்ற, திருவாவடுதுறை ஆதீன கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பஞ்சபுராணம் பாடி மாநாட்டினைத் துவக்கி வைத்தனர்.
ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொடர்ந்து அருளுரை வழங்கினார். அவர் தம் உரையில் “இந்துக்கள் அனைவரும் மொழியின் பேரால் பிரிக்கப்பட்டு சிவ சிந்தையினின்றும் விலகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் போதனைகளைக் குறை கூறுபவர்களை வன்மையாகக் கண்டித்தார். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியையும், திருமுறைப் பயிற்சியையும் எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் பயனுடையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன. அவையில் கூடியிருந்தவர்கள் தங்கள் கண்களின் கண்ணீர் மல்க நாடகங்களைக் கண்டுகளித்தனர். பெங்களூர் சிவச் செல்விகள் பூஜா மற்றும் சரயு ஆகியோர் “தோடுடைய செவியன்…” என்ற திருப்பதிகத்திற்கு நடனம் ஆடி அவையோர்களை சிவானந்தத்தில் ஆழ்த்தினர். பிறகு அடிவர்களுக்கு மாகேஸ்வர பூசை சிறப்பாக நடைபெற்றது.
நண்பகல் அமர்வின் முதல் நிகழ்வாக சென்னை நன்மங்கலம் சிவாயநம அவர்கள் தம் கணீர் குரலில் சிவபுராணம் பாட, கூடியிருந்த அவையோரும் உடன் பாடினர்.
ஸ்ரீகாசி மடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தமூர்த்தி தம்பிரான் சுவமிகள் “மொழிக்கு மொழி தித்திக்கும் திருமுறைகள்” என்ற தலைப்பில் திருமுறையின் பெருமைகளை மிக அற்புதமாக எடுத்துரைத்தார். மேலும், ஹர ஹர நமபார்வதி பதயே| ஹர ஹர மகாதேவா|| என்ற மகுடம் வந்த விதமும், திருமுறைகளில் இந்த வார்த்தைகள் கையாளப்பட்டுள்ள விதத்தையும் காட்டி, சைவப் பெருமக்கள் இம்மகுடத்தைக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வயதான காலத்தில் மட்டும் இது போன்ற பணிகளில் ஈடுபடும் பக்தர்களின் மத்தியில் இளைஞர்களால் இம்மாநாடு நடத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.
துலாவூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள் தம் அருளாசியில், “நித்ய அனுஷ்டானம், சைவ ஒழுக்கம், முறையான தீக்கை இவற்றைக் கடைப்பிடிப்பதே சிறப்பு என்றும் அதுதான் தெய்வீக தன்மையைத் தரும்” என்றும் கூறினார். மேலும், சைவ மரபு என்பதன் முக்கியம் பற்றியும் கூறினார்.
நெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் மற்றும் கோவை சிவஸ்ரீ சுரேஷ் குருக்கள் அருமறைப் பயனாகிய திருஉருத்திரம் மற்றும் சிவ ஆகமங்களை ஓதினர். தற்காலத்தில் சைவ விழாக்களில் காணுதற்கரிய வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர்.
கோவை சைவத்திரு. கந்தசாமி ஓதுவார் அவர்கள் திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.
சைவ நெறி வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைகளை சிவ. கோமதிநாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார். அவர்தம் உரையில் தமிழகத்தில் பூஜைகள் நடக்காத சிவாலயங்களில் சிவாகம வழியில் பூசைகள் நடத்த கழகம் பாடுபடும் என்றும் மொழியின் காரணமாக வேறுபட்டு நிற்கும் சைவர்களிடையே தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார். சைவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தன் கொள்கைகளாகக் கொண்டு எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடியை மட்டுமே நம்பிதான் இவ்வியக்கமே உருவாக்கப்பட்டுள்ளது. சைவப் பெருமக்கள் அனைவரும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தில் சேர்வதைத் தங்கள் கடமையாக உணர்ந்து சேர வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் அணியிலே திரண்டு ஒருமித்த குரல் எழுப்பினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். ஈசன் அருளால் இன்று உருவாகியிருக்கும் இந்த அமைப்பு வெகு விரைவிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்களை உடைய ஓர் சக்தி வாய்ந்த அமைப்பாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நமக்குக் குருவருளும் திருவருளும் தோன்றாத் துணையாக இருக்கும் என்று கூறினர்.
shaivam.org இணைய தள நிருவாகியும், சிறந்த சைவ நெறி புரவலருமான பெங்களூரைச் சேர்ந்த சிவத்திரு. சு. கணேஷ் அவர்கள் “வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என்ற தலைப்பில் நான்மறையின் சிறப்பை முத்து முத்தாக எடுத்துரைத்தார்.
பிரம்மஸ்ரீ அருணசுந்தர குருக்கள் “ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க” என்ற தலைப்பில் சிவ ஆகமங்களின் பெருமைகளை எடுத்துக் கூறினார். திருமுறைகள் எவ்வாறெல்லாம் ஆகமங்களைப் போற்றுகின்றன என்று ஆதாரங்களுடன் கூறினார்.
சைவத்திரு நெல்லை சிவகாந்தி அவர்கள் “திருவருட்பயன்” என்ற தலைப்பில் சைவ சிந்தாந்தக் கருத்துக்களை விளக்கினார். சைவத்தின் பயனே திருவருட் பயன் என்று உறுதியாக எடுத்துக்காட்டுகள் மூலம் கூறினார். திருவருட்பயனை திருக்குறளுடன் ஒப்புநோக்கி விளக்கினார்.
சைவத்திரு சாமி தியாகராஜன் அவர்கள் “அர்ச்சனை” என்ற தலைப்பில் அர்ச்சகர்-இறைவன் இவர்களுக்குள்ள தொடர்பு அதன் பலன் எல்லாவற்றையும் தனக்கே உரிய இனிய நடையில் பேசினார்.
சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு T.N. இராமச்சந்திரன் அவர்கள் இம்மாநாட்டைப் பற்றிப் பேசும்போது “மாநாடு என்றால் இதுதான் மாநாடு” என்று பேசி இம்மாநாட்டிற்கு மேலும் மகுடம் சூட்டினார்.
தருமை ஆதீன மௌனமடம் முனைவர். ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகளில் முழுமையாகப் பங்கேற்று, “தமிழ்சொல்லும் வடசொல்லும் தாள்நிழல் சேர” என்ற தலைப்பில் அழகுற பேசி அரிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும், வேத ஆகம, திருமுறைகள் சிறப்பையும் ஒப்புநோக்கி விவரித்தார். வரலாற்று சிறப்புமிக்க இம்மாநாட்டினை நடத்திய சைவநெறி வளர்ச்சிக் கழகத்திற்கு தம் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
சைவத்திரு பட்டமுத்து அவர்கள் “தமிழ்மொழி வடமொழி” என்ற இருமொழிகளின் பெருமைகளையும் ஒப்பிட்டு ஸ்ரீமத் மாதவ சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிபுராணம் மூலம் மிக அரிய கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும், இரு பாலகர்களை முன்னிறுத்தி வடமொழியிலும் தமிழிலும் உள்ள சிவஞான போத சூத்திரங்களை ஓதச் செய்தார். மேலும், வேதத்தின் சிறப்பை விளக்கி “வடமொழி என்பது தந்தை மொழி என்றும், தென் தமிழ் என்பது தாய்மொழி” என்றும் நயம்பட கூறினார்.
“புற்றில்வாழ் அரவுமஞ்சேன்” என்ற திருவாசகப் பதிகத்திற்கு சிவச் செல்வி சரயு மிக அழகாக நடனம் ஆடினார்.
இறுதியாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் “எல்லாவற்றிலும் நம் முன்னோரின் மரபுபடியே செல்லுதல்தான் நல்லது” என்றும் “கும்பாபிஷேகம் என்பதை குடமுழுக்கு என்று சொல்வது கூட பிழையே” என்று கூறினார். நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த சைவ நேயர்களின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.
சிவத்திரு கோமதிநாயகம் அவர்கள் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்து பலத்த கரவொலியைப் பெற்றார். அன்பர்கள் எழுப்பிய “அரகர” என்னும் ஒலியால் மாநாட்டு மன்றமே அதிர்ந்தது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ முழு முயற்சி எடுக்க சைவ மக்களை இம்மாநாடு வேண்டுகிறது.
- நமது சமய சான்றோர்கள் நமக்குத் தந்துள்ள சைவ மரபுகளை மீறாமல் கடைப்பிடித்து சைவ ஒழுக்கங்களைப் பேணி பாதுகாக்க, சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
- சைவ மக்களுக்கு தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும் என்ற அருளாளர்கள் அருளாணையைத் தமது உயிராகக் கொள்ள வேண்டும் என்று சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
- வறுமையால் வாடுகின்ற திருமுறை ஓதுவா மூர்த்திகளுக்கு மாதந்தோறும் சம்பாவனைக் கொடுத்து ஆதரித்து மகிழும் கோவை ஆனைக்கட்டி மடத்தின் அதிபதி ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளை இம்மாநாடு பணிந்து வணங்கி தனது நன்றியுணர்வு பெருக்கினை புலப்படுத்துகிறது.
- சிவாச்சாரியார்களும், திருமுறை ஓதுவார்களும் நமது சைவ சமயத்தின் இருகண்கள். இவ்விரு பெருமக்களும் நித்திய பூசையிலும் மகா கும்பாபிஷேகங்களிலும் ஒருவரையொருவர் அனுசரித்து உதவுமாறு இம்மாநாடு வேண்டுகிறது.
- இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட சிவாலயங்கள் பலவற்றில் மகா கும்பாபிஷேகமும் தங்க ரதம் அமைத்தல் போன்ற நற்காரியங்களையும் செய்து வருகின்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறையினை இம்மாநாடு பாராட்டுகிறது.
- இம்மாநாட்டில் பங்கேற்ற சைவ அன்பர்கள் அனைவரும் இரு மாதத்திற்கு ஒருமுறை கூடி, சைவ மரபினைப் பாதுகாக்கக் கருத்துப் பரிமாற்றம் செய்து மகிழ வேண்டும் என அன்பர்களை இம்மாநாடு வேண்டுகிறது.
- திருச்சிற்றம்பலம் –

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
சொற்றமிழ் சூடுவார்
கடவுளின் பணித்திட்டம்
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4
வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்
அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை
திருமுறை இசையில் அழகியல் மாற்றம்
ஒரு பயணம் சில கோயில்கள்
இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!
சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்
மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்
ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு
சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி
அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்







அருமையான கட்டுரை, தகவலுக்கு நன்றி,இதுபோல் மாநாடுகள் தொடர்ந்து நிகழ வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெற எல்லாம் வல்ல அந்த சிவா பிரானை பிரார்த்திப்போம். இந்த மாநாட்டு நிகழ்வுகள் முன்கூட்டியே பிரசுரிக்கப் பட்டிருந்தால் போக முடிந்தவர்கள் போய் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்த நிகழ்வினை கட்டுரையாக படைத்த தமிழ் ஹிந்து தளத்திற்கு நன்றிகள்.
சிவாய நம
//சிவாச்சாரியார்களும், திருமுறை ஓதுவார்களும் நமது சைவ சமயத்தின் இருகண்கள். இவ்விரு பெருமக்களும் நித்திய பூசையிலும் மகா கும்பாபிஷேகங்களிலும் ஒருவரையொருவர் அனுசரித்து உதவுமாறு இம்மாநாடு வேண்டுகிறது. //
மிகபோற்றவேண்டிய வரிகள்.
//“இந்துக்கள் அனைவரும் மொழியின் பேரால் பிரிக்கப்பட்டு சிவ சிந்தையினின்றும் விலகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது”//
இதற்க்கு வடமொழி மீது உள்ள பற்றுதான். தமிழ் மொழி பக்தி மொழி அதில் இல்லாத/எழுதாத பக்தி விஷயங்கள் ஏதும் இல்லை.
மூல சிவ ஆகமங்கள் வட மொழியில் எழுதப்படவில்லை. அவைகள் தமிழும் வடமொழியும் கலந்த ஒரு பாலி மொழியில் தான் எழுதப்பட்டன. அதன் மூலபதிப்பு இல்லை, தென்னிதிய சிவச்சரியர்கள் அமைப்பு தான் அதை பதிப்பு செய்து உள்ளனர். 28 ஆகமங்களும் நமக்கு பெயர் அளவில்தான் உள்ளது. 4 ஆகமங்கள் தான் முழுமையாக உள்ளன.
தமிழ் நாட்டில் உள்ள சைவ திருகோவில்களில் திருமுறைபடித்தான் வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
தென்னிதிய சிவச்சரியர்கள் தங்களின் தொழிலை பாதிக்கும் என்பதற்காக தமிழ் திருமுறைகளை பாட ஊக்கபடுத்துவதில்லை.
இந்த மாநாடு தமிழ் சைவர்களிடேயே வட மொழியை உயர்த்தி கூறுவது போன்று உள்ளது. தமிழ் சைவ பேரவை என்ற அமைப்பும் இது போன்று சைவ மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்துகின்றது. இந்த மாநாடு தமிழ் சைவ பேரவை மாநாட்டுக்கு எதிர் போல் உள்ளது.
சோமசுந்தரம்
ஆழ்க தீயதெல்லாம்
அரன் நாமமே வாழ்க
வையகமும் துயர் தீர்க
ஹர ஹர மகாதேவா!
இது போன்ற மாநாடு தமிழகமெங்கும் நடைபெற வேண்டும்.
வைதீக சமயமாம் சைவ சமயம் தழைத்து ஓங்குக!
வேதம், ஆகமம், திருமுறை, சித்தாந்தம் இவற்றை யாராலும் மொழியின் பெயரால் பிரிக்க முடியாது! இவை சைவ சமயத்தின் கண்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இம்மாநாட்டினை நடத்திய சைவநெறி வளர்ச்சிக் கழகத்தை பணிந்து வணங்குகிறேன். வளர்க உங்கள் தொண்டு!
அன்புடையீர்! சைவ மகாநாடு பற்றி முன்பே தகவல் தரப்பட்டு இருந்தால் எங்களை போன்ற சைவ ஆர்வலர்களும் கலந்துகொண்டு இருப்போம். மேலும் சைவ நெறி வளர்ச்சி கழகத்தின் தொடர்பு முகவரி தந்தால் எதிர் வரும் இதுபோன்ற சைவ மகாநாடுகளிலும் சைவ நெறி தொண்டு பணிகளிலும் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். அண்ணாமலை. ஸ்ரீரங்கம்.
Dear Annaamalai, Please send a mail to shaivaneri@gmail.com.
You would be notified on upcoming events of Saivaneri Vazharchi Kazhagam.
தமிழ்ஹிந்து » தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை…
தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துப…
திரு சோமசுந்தரம் அவர்களின் கருத்திலிருந்து நான் சிறிது மாறுபடுகிறேன். தற்சமயம் இருபத்தெட்டு ஆகமங்களும் மற்றும் சில உபாகமங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாகமங்கள் கிரந்த லிபியில் (எழுத்தில்) உள்ளன. மொழி சமஸ்கிருதம். பாலி மொழி என்பது தவறு. சில ஆகமங்கள் தமிழில் விளக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. சிவாச்சார்யார்களின் தாய்மொழியும் தமிழ் தான் என்பதனை அறியவும். அவர்கள் தமிழுக்கு எதிரிகள் அல்ல. பூஜை சமயம் மட்டும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி செய்கிறார்கள்.
நன்றி
M R Ravi Vaidyanaat
// தமிழ் நாட்டில் உள்ள சைவ திருகோவில்களில் திருமுறைபடித்தான் வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
தென்னிதிய சிவச்சரியர்கள் தங்களின் தொழிலை பாதிக்கும் என்பதற்காக தமிழ் திருமுறைகளை பாட ஊக்கபடுத்துவதில்லை.
இந்த மாநாடு தமிழ் சைவர்களிடேயே வட மொழியை உயர்த்தி கூறுவது போன்று உள்ளது. இந்த மாநாடு தமிழ் சைவ பேரவை மாநாட்டுக்கு எதிர் போல் உள்ளது.//
அரைகுறை கருத்துக்களையும், துஷ்பிரசாரங்களையும் கேட்டுக் கொண்டு, சிவபிரானின் உண்மை அடியார்களை அவமதிக்கிறீர் சோமசுந்தரம் அவர்களே.
இந்தத் தஞ்சை மாநாட்டில் கலந்து கொண்டு வழிகாட்டிய ஆதீன கர்த்தர்கள், தம்பிரான்களை விடவும், shaivam.org என்ற அதி-அற்புதமான இணைய தளத்தை பல்லாண்டு காலமாக நடத்திவரும் சிவத் தொண்டரை விடவும், சிவன் கோயில் விளக்கேற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கும் தொண்டரை விடவும் உமக்குத் தான் சைவ சமயத்தின் உண்மைப் பொருள் தெரியும் என்கிற மாதிரி இங்கு வந்து அபத்தமான, பொய்மையான கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் கொஞ்சமாவது யோசியுங்கள்.
இறைவனை அபச்சாரம் செய்தாலும் பொறுத்துக் கொள்வான். அவனது உண்மை அடியார்களைத் தூற்றினால் பொறுக்கவே மாட்டான்.
நவச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.
அன்பர் திரு சோமசுந்தரம் அவர்களே
///மூல சிவ ஆகமங்கள் வட மொழியில் எழுதப்படவில்லை. அவைகள் தமிழும் வடமொழியும் கலந்த ஒரு பாலி மொழியில் தான் எழுதப்பட்டன. அதன் மூலபதிப்பு இல்லை///
சிவாகமங்கள் சிவப் பரம்பொருளின் திருநாவிலிருந்து உதித்தவை. வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் மூலம் சிவமே. அவற்றை மனிதர் யாரும் எழுதியதாகக் கூறுவது அவதூறு ஆகும். தங்களது சிவபக்தியும் திருமுறைகளின் மீதுள்ள பக்தியும் எள்ளளவும் குறைவற்றவை என்பதால் தாங்கள் அறியாது பிழையாக எழுதியது என்றே உணர்கிறேன்.
நம்மில் சிலர் வடமொழி தேவ மொழி என்றும் பிற மொழி மனித மொழி என்றும் கூறுவதற்கு எதிர் வினையாகவும், சந்தர்ப்பவாத அரசியலாரின் குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் பேராசையாலும், மாற்று மதத்தினரின் சதியாலும் செய்யப்படும் வீண் விதண்டாவாதமே “தமிழைத் தாழ்த்தி வடமொழியை உயர்த்திப் பேசுகிறார்கள்” என்ற பிரச்சாரம்.
இத்தகைய பிரசரங்களுக்கு மயங்கி நம்மிடையே பிளவு ஏற்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது. திரு ஞானசம்பந்தப் பெருமான் முதலான சமயக் குரவர் நால்வரும், சந்தானக் குரவர்களும், பிற அருளாளர்களும் சமஸ்கிருதம் தமிழ் இரண்டையும் நமது சைவ சமயத்தின் இரு கண்களாகவே பாவித்து வந்திருக்கின்றனர் என்பது அவர்களது பதிகங்களிலிருந்து/ நூல்களிலிருந்து தெரிகிறதே.
http://www.shaivam.org/gallery/audio/lec_others.htm
மேற்கண்ட நிரலியில் உள்ள “வேதாகம உண்மை – ஒரு விளக்கம்” என்ற உரையைக் கேட்டுப் பாருங்கள். சிவத்திரு கோமதி நாயகம் என்ற சிவத் தொண்டர் சீரிய முறையில் இந்தப் பொருள் குறித்து நமது திருமுறைகளில் உள்ள கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். அனுபவித்துக் கேட்க வேண்டிய உரை இது.
எனக்கும் தமிழ்தான் தாய்மொழி, நான் தமிழை ஆழ்ந்து அனுபவிக்கின்றேன். ஆனால், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம் முதலிய இறை நூல்களின் சாரம் நம்மை நல்வழிப்படுத்தும், அவை நமக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்திருக்கிறேன். பக்தனின் மொழியில் செய்யப்படும் வழிபாடுதான் அவனை உளமார இறைவனை உணரச்செய்யும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. ஆனால் அரசியலார் நம்மிடையே பிளவு செய்ய எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க முதலில் நிற்கவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை.
அன்பர் திரு சோமசுந்தரம் அவர்களே
///தென்னிதிய சிவச்சரியர்கள் தங்களின் தொழிலை பாதிக்கும் என்பதற்காக தமிழ் திருமுறைகளை பாட ஊக்கபடுத்துவதில்லை. ///
இப்படிச் சொல்வது வருந்தத்தக்கது. நமது அர்ச்சகர்கள் தொழில் செய்வதில்லை. தொண்டு செய்கிறார்கள். குலவழியாக இப்படிச் செய்வது தவறு என்று சொல்லி அரசியலில் முதல் நிலை பிடித்தவர்களின் குடும்பம் இன்று வாழையடி வாழையாக பல பெரிய பதவிகளைப் பிடித்தும் ஓயவில்லை.
ஆனால், நமது அர்ச்சகர்களோ பாரம்பரை பரம்பரையாக நமது மூர்த்தங்களையும் கோவில்களையும் காப்பாற்ற அன்னியர் தாக்குதல்களின்போது பட்ட பாடு சரித்திரமாகிப் போனது.
சாதி வித்தியாசமில்லாமல் இறைப்பணி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை. ஆனால் புதிய கோவில்களில் இதை நடைமுறைப்படுத்தலாம். பழையவற்றில் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும்.
நமது அர்ச்சகர்கள் வாங்கும் மாத சம்பளம் கடை நிலை ஊழியர் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கூட இல்லை. அது பலருக்கு ஒரு நாள் சம்பளம். ஒருமுறை நான் அவர்களது மாநிலச் சங்கத்தலைவரை அணுகி அவர்களது சம்பள ஏற்றத்துக்கு நான் உதவ முடியும் என்றபோது அவர் மறுத்தார். சொன்ன காரணம், “எமது கடமை இறைப் பணி செய்வது இதற்கு சம்பளம் வாங்குவது தவறு. பக்தர் தரும் தட்சிணை எவ்வளவானாலும் போதும்” என்றார்.
இத்தனைக்கும் அவர்களை நமது கோவில்களில் ஒன்றும் உயர் நிலையில் வைக்கவில்லை. ஒரு கிறிஸ்தவப் பாதிரிக்கோ, போதகருக்கோ, அல்லது முல்லாவுக்கோ தரும் கவுரவம் ஒரு அர்ச்சகருக்கு கிடையாது.
எத்தனையோ முறை நமது முதல்வர்களும், முல்லக்களும், பாதிரிகளும் ஒரேமேடையில் பார்த்திருப்பீர்கள். ஓரு அர்ச்சகரை அப்படி முதல்வருக்குச் சரிக்கு சமமாக உட்கார வைத்துப் பார்த்ததுண்டா?
தமிழக அரசுக்கு தலைமைக் காஜி என்று ஒருவர் உண்டு. தலைமை அர்ச்சகர் உண்டா? கிடையாது.
பெரிய கோவில்களில் இருக்கும் அர்ச்சகர்கள்தான் வசதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாரும் ஏழைகள்தான். வறுமைக்கோட்டுக்கும் மிகக் கீழே உள்ளனர்.
சைவ அன்பர்களே,
நன் வட மொழி வேதத்தை எதிர்கின்றவன் அல்ல. பண்ணிரு திருமுறைகளும் சைவ திருகோவில்கள் தோறும் ஒலிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
நான் முறையாக திருவாவடுதுறை ஆதினத்தில் உதவியுடன் திருமுறைகளை பயின்றவன். நான் கண்ட அனுபவத்தில் எழுதுகின்றேன். வடமொழி வேதங்களுக்கு தரப்படுகின்ற முன்னிலை நம் திருமுறைகளுக்கும் தரப்படவேண்டும்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை, வேத நெறியை விட பக்தி நெறி சிறந்து விளங்கி வந்துள்ளது. திருவாசகத்தை பாடும்போது பாடுபவருக்கும் கேட்பவருக்கும் கிடைக்கும் மன நெகிழ்ச்சி வேதத்தை ஓதும் பொது கிடைபதில்லை. அதனால் தான், நான் பலமுறை இந்த தலத்தில் பண்ணிரு திருமுறைகளை போற்றவேண்டும், அவற்றை கொண்டு புதிதாக எழும் சைவ ஆலயங்களுக்கு அனைத்து பூஜைகளும் செய்யவேண்டும் என எழுதி வருகின்றேன்.
ஸ்ரீ.சோமசுந்தரம் அவர்களுக்குக் சில கேள்விகள் :
௧. தமிழில் ஆகமங்கள் இருந்ததற்கான சரித்திரக் சான்றுகள் ஏதும் உள்ளனவா?
௨. தாங்கள் குறிப்பிடும் ஆகமங்கள் சைவத்தின் எந்தப் பிரிவை சார்ந்தவை?
௩. சைவ சித்தாந்த ஆகமங்களின்படியான திருக்கோயில் வழிபாடுகள் தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தொடங்கின?
௪. திருமுறை ஆசிரியர்கள் காலத்தின்போது எவ்வகைப்பட்ட வழிபாடுகள் வழக்கில் இருந்தன?
௫. அவர்கள் இவ்வழிபாட்டு முறைகளில் ஏதும் மாற்றம் செய்தார்களா?
இக்கேள்விகளுக்குத் தாங்கள் அளிக்கும் மறுமொழிகளுக்குப் பிறகு இன்னும் நிறைய விவாதிக்கலாம்.
அன்புடன்,
ஆரூரன்
திரு சோமசுந்தரம் அவர்களே,
எனக்கு இந்த விவகாரத்தில் பங்கு கொள்வதற்கு முழு உரிமை இல்லை தான். ஆனால்,
//
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வேத நெறியை விட பக்தி நெறி சிறந்து விளங்கி வந்துள்ளது.
//
என்று கூறுவதில், “வேதம் கூறும் மார்க்கம் வேறு, பக்தி மார்க்கம் வேறு” என்னும் பொருள்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த எந்த இந்து சமயத் தலைவரும் இப்படிப் பிரித்துக் கூறியதில்லை. மாறாக,
(1) வேதம் கூறும் நெறிகளில் பக்தி மார்க்கம் மிக எளியதும் முக்கியமானதுமே. “மோட்சத்தை விரும்பும் நான் அந்த தேவனைச் சரணடைகிறேன்” (சுவேதாச்வதார உபநிஷத், 6.18,19) என்று முமுக்ஷுக்களுக்குப் (மோக்ஷம் பெற விரும்புபவர்களுக்குப்) பரம்பொருளிடம் பக்தி செய்யும் நெறியை விதிக்கிறது வேதம். ருக்வேதசூக்தம் ஒன்று கவிகளிடமும் பாடகர்களிடமும் பரமனின் பெருமைகளைப் பற்றி இசையுடன் பாடுமாறு கட்டளை இடுகிறது. இதெல்லாம் பக்தி/சரணாகதி மார்க்கம் தான்.
(2) வைதீக முறையில் வேதம் ஓதிச் செய்யப்படும் யாக-யஞங்களாகிய சடங்குகளை இறைத்தொண்டாகச் செய்வது மிக முக்கிய அங்கம்; தமிழ் முதலிய மொழிகளில் சமயப்பெரியோர்கள் இயற்றிய துதிகளைப் பாடி நேராக உகப்பிப்பது மற்றொரு அங்கம். அது தவிர, கோயில்களில் நடக்கும் சடங்குகளில் வேதம் ஓதுவதை ஆகமமே சில இடங்களில் விதித்திருக்கலாம் (வைணவ ஆகம விஷயத்தில் தான் இது உண்மை எனக்குத் தெரியும், சிவாகமங்களைப் பற்றி எனக்குத் தெரியாது). இவை எல்லாம் சேர்ந்தது தான் வேத நெறி. இதில் ஒன்றுக்கொன்று குழப்பமோ, போட்டியோ வருவதற்கு இடமில்லை.
அருமை, இதுபோல் மாநாடு தொடர்ந்து பல ஊர்களில் நடைபெற வேண்டும் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன். அவன் அருள் இன்றி இதுபோல் சிறந்த மாநாட்டினை நடத்த இயலாது. திரு சிவாய நமஹ என்னும் இறைத்தொண்டரின் தொண்டு மேலும் தொடர அவருக்கு இறைவன் பூரண அருள்புரிய வேண்டும்.
ஐயா! சைவ சரபம் மா.பட்டமுத்து தலைமையில் நடந்த இந்த மாநாடு தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சைவ மக்களை நல்வழி படுத்தும் விதமாகவும், மரபுகளை மீறாமல் மக்கள் நடக்கவும் உதவியது.
http://shivasevagan.blogspot.com
நன்றி.
சம்பிரதாயம் அல்லது மரபு சமயவொழுக்கத்தில் கட்டாயம்பேணப்பட வேண்டிய ஒன்று. இன்று சைவ சமயத்தில் புதிது புகுத்தும் முயற்சி உண்மையிலேயே திருமுறைகளுக்கு ஆக்கம் தருமேல் மிக்க மகிழ்ச்சி. திருநந்தி தேவர் சிவபெருமானிடம் வேண்டிய வரங்களில் தலையாயதும் முதலாவதும் ‘வேதநிந்தனை சைவநிந்தனை பொறா மனமும்’ என்பது ஆகும். தமிழில் வேதங்கள் இருந்தன,ஆகமங்கள் இருந்தன் என்பதெல்லாம்வெறும் ஊகங்களே. சிவஞான முனிவர் முதலிய பெரியோர்கள் சொல்லாத புதுமை. நம் நாட்டில் யாதானும் ஓர் அபிமானத்தால் படித்தவர்களும் தத்தம் அபிமானத்தால் தம் மனச்சான்றிற்கு விரோதமாகப் பொய்கூறவும் இல்லாததைக் கூறவும் தயங்குவதில்லை..”நம:” ஆர்ந்தன கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாமந்திர செபத்திற்கும் சத்திபீஜம் அணைந்தமந்திரம் செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அக்கினியைமுன்னிட்டுச் செய்யும் உத்தரகிரியைக்கும் வடமொழியேமுக்கிய வுதவியாகவும், ஈசனுடையதிருச்செவி திருவுள்ளங்களை இனிது மகிழ்விக்குமாறு இன்னோசையும் உருக்கமும் அமையப் பாடவும் பொருளறியவும் தென்மொழியே முக்கிய வுதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமும் தமிழர் கொண்டுபவரே யாவர்” எனப் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் அருளியதையே என் மனம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. .அர்ச்சகர்கள் இல்லாத எண்ணற்ற சிவன் கோவில்கள் விளக்கேற்றுவாரின்றிக் கிடக்கின்றன. சைவத் தமிழ் அன்பர்கள் அத்தகைய திருக்கோவில்களை அடையாளம் கண்டு தாம் விரும்பியவாறு திருமுறை வழி வழிபாடு செய்தால் இருவிதப் பயனும் உண்டாகும். அவ்வாறின்றி ஏற்கெனவே நல்லமுறையில் வழிபாடுகள் நடைபெறும் திருக்கோவில்களில் புதுமை புகுத்த முயற்சி செய்ய வேண்டாமே. திருமுறைச் சங்கங்கள் அமைத்து திருமுறைப் பயிற்சியும் சைவசித்தாந்தப் பயிற்சியும் பொதுமக்கள் பெறவழி செய்வதே உண்மையானசிவத்தொண்டு.
இந்த மாநாடு தமிழகமெங்கும் நடைபெற வேண்டும் என எல்லாம் வல்ல பரமேஸ்வரனை பிரார்த்திக்கிறேன்.இந்த மாநாட்டை சிறப்பான முறையில் நடத்திய சிவதொண்டர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.
திருமுறையை பரப்புகிறோம் என்று கூறி, பொருள் சேர்க்கும் நோக்கில் திருமுறைக்கு முரணான கருத்துக்களை ( வேதஆகம மற்றும் வடமொழி நிந்தனை) பரப்பிவருவர்களுக்கு, இது போன்ற மாநாடு கசக்கத்தான் செய்யும்.
நண்பர் ஆரூரன் அவர்களின் கேள்விகள் மிகவும் அருமை.
ஐயா திரு.சோமசுந்தரம் அவர்களே, நண்பர் sivabgs எழுப்பிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லையா?
மேலும் சில கேள்விகள்?
திருமுறையை அருளிய நம் பெருமக்கள்,
௧)திருமுறையால் எந்த கோவிலிலாவது கும்பாபிஷேகம் செய்துள்ளார்களா?
௨)திருமுறையை வைத்து நெருப்பு மூட்டி வேள்விகள் செய்துள்ளர்களா?
Great Writeup. Lots of people have commented about the paltry sum received as salary by the sivacharyars. can we come together and plan to help them in any way that is possible so that they can continue their service. i beleive it is our duty to help these dedicated souls so that they can concentrate serving the temples.
திருமுறைகள் சைவநெறி கருவூலம்.
திருமுறைகள் தமிழகமெங்கும் ஒலிக்க வேண்டும்.
அனைவரையும் திருமுறைகள் ஓத செய்ய வேண்டும்.
திருமுறை காட்டும் வழியில் தான் சைவர்கள் வாழ வேண்டும்.
பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம், சிவாலயங்களில் பூசை எவ்வாறு நடைபெற வேண்டும் என்று பின் வரும் பாடலில் கூறுகிறது.
பெரிய புராணம்
பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.
மனுநீதி சோழர் திருவாரூர் புற்றிடங் கொண்ட ஈசனாரின், பூசனைக்கு தேவையான நிபந்தங்களை, ஆகமவிதியின் படி அருளினார் என் கூறுகிறது.
திருக்குறிப்பு தொண்ட நாயனார் புராணம்
உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே தலைநின்
றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்
கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
தேவர்களின் தலைவனான சிவபெருமானின் பூசனைக்கு, அவர் தாம் சொன்ன ஆகமத்தின் உண்மையான நெறிப்படி அருச்சனை புரிதலையே தலையாய செயலாகக் கொண்டு நம் காஞ்சி காமாட்சி அம்மை அர்ச்சித்தார் என்று தெரிகிறோம்
திருத்தொண்டர் திருவந்தாதி
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும் நீடாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர் – சிவபெருமானை நீடு ஆகமம் காட்டிய அறிவினால் தீண்டி அர்ச்சிபவர் என்று கூறுகிறது.
திரு.சோமசுந்தரம் அவர்களே,
சிவபெருமான் பூசனைக்கவர்தாம் உரைத்த ஆகமத் துண்மையே துணை என திருமுறை கூறுகிறது.
நீங்கள் என்னவென்றால் அத்திருமுறையாலே பூசிக்க வேண்டும் என்று கூறுகின்றிர்கள்.???
திருமுறை அறிவுறுத்தும் சிவபூசை விதிக்கு முரண்பாடாக அல்லவா தங்கள் கருத்து உள்ளது?????
முறையாக திருவாவடுதுறை ஆதினத்தில் திருமுறைகளை பயின்றவன் என்று கூறுகிறிர்கள்.
மேற்கூறிய திருமுறை பாடல்களை அவர்கள் உங்களுக்கு கற்பிக்க வில்லையோ?
சைவசமயத்தை வளர்க்க வேண்டும். ஆனால் நம்முடைய தொண்டு திருமுறை & சித்தாந்த சாத்திர வாக்கின் வழியில் இருக்க வேண்டும் அதனை மீறிய நிலையில் இருக்க கூடாது என அறிவுறுத்த விரும்புகிறேன்.
அன்பர் திரு ராஜகணேஷ் அவர்களே
காஞ்சி பரமாச்சாரியார் அருளால் 1986 ல் துவக்கப்பட்ட கச்சி மூதூர் அர்ச்சகர் நல அறக்கட்டளை கீழ்க்கண்ட முகவரியில் நன்கு இயங்கி வருகிறது. 1940 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுவப்பட்ட திருக்கோவில்களில் உள்ள தகுதி வாய்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள் முதலியவர்களுக்கு (சுமார் 700 பேருக்கு) தற்போது மாதம் ரூபாய் 800 உதவித்தொகையும் ஆயுள் காப்பீடும் (LIC) வழங்கப்படுகிறது. நன்கொடை தருபவர்கள் நேரடியாக அறக்கட்டளை அலுவலகத்துக்கு காசோலை/ வரைவோலை அனுப்பலாம். வருமான வரிச்சட்டம் 80G இன் படி வரிச்சலுகை உண்டு.
அறக்கட்டளையின் பொது நிதியத்தின் (corpus fund) வருவாயிலிருந்தே உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே பொது நிதியத்தை உயர்த்துவதன் மூலம் மேலும் பல தகுதியுள்ள இறைச் சேவகர்களுக்கு உதவ இயலும். உதவித்தொகையும் அதிகரிக்க முடியும். பரமாச்சாரிய சுவாமிகள் மாதம் ரூபாய் 4000 க்கு வருமானம் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது வாழ்நாளில் குறைந்தபட்சம் தனது ஒரு மாத வருமானத்தையாவது இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாகத் தந்து இறை அருள் பெற வேண்டும் என்று கூறினார்கள். அறக்கட்டளை குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடியாவது பொது நிதியாகத் திரட்டினால்தான் தனது நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். இது வரை சுமார் ரூபாய் 4 கோடிதான் திரட்ட முடிந்திருக்கிறது.
KACHCHI MOODOOR ARCHAKAS WELFARE TRUST
16,Second Main Road,Kottur Gardens, Chennai 600 085, India
Phone:+91-44-24471936
http://kmawt.org/
தமிழில் 32 ஆகமங்கள் உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.. சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிய போது, ஒவ்வொரு பகுதிக்கும் அதற்குண்டான ஆகமம் இருக்கிறதாகவும், அந்த ஆகமப்படியே, அங்கிருக்கும் கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று சொன்னார்..
இதை சைவ மரபு இயக்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்..
இந்து மதம் என்பது ஒரு மாயை என்பது நான் புரிந்து கொண்ட உண்மை.. இது ஒரு மதமல்ல.. ஒரு அடையாளம் தான்.. சைவம், வைணவம் தான் நம்முடைய உண்மையான, கடைபிடிக்கக்கூடிய மதங்கள்..
ஒரு வெளி நாட்டுக்காரை, இந்து மதத்திற்கு மாறினால், எந்த கடவுளை கும்பிடுவது, எந்த வழிமுறையை பின்பற்றுவது என்று குழம்புகிறார்..
இதே, அவர் சைவ மதத்திற்கு மாறினால், இந்த மாதிரி குழப்பமே இருக்காது..
ஆகையால், இந்து மதம் என்பது ஒரு தனி மதமல்ல.. பல பாரதிய மதங்களின் தொகுப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. நாம் கடை பிடிக்க வேண்டிய மதங்கள், சைவம், வைணவம், ஸ்கந்தம் ஆகியவை..
அதோடு இன்னொரு உண்மையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. சைவமும் வைணவமும் மற்ற மதத்தினரை தன் மதத்திற்கு மாற்ற முடியும் .. ஆனால், இந்து மதன் என்று நாம் சொல்லக்கூடியது, மாற்ற முடியாது.. ஏனென்றால், இது ஒரு தனி மதமல்ல.. பாரதிய மதங்களின் ஒரு தொகுப்பு மட்டுமே ஆகும்..
ஆதலால், இந்து மதம் மதம் மாற்றாது என்று பிதற்றுவதை விட்டு விட்டு, நம்முடைய சைவத்திலும் , வைணவத்திலும் உள்ள ஆற்றலை மக்களிடம் எடுத்து செல்வோம்.. இது வரை, இந்து மதத்தில் ஜாதிய கொடுமை என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கும் மார்க்ஸியவாதிகளுக்கு, மிஷனரிகளுக்கும், மற்ற சிக்குலர்வாதிகளுக்கும் ஒரு சாட்டையடியாக இது இருக்கட்டும்..
ஆகையால், தோழர்களே.. சைவமும், வைணவமும் கொண்டு, நாம் மதமாற்றத்தில் இறங்குவோம்.. அன்னிய மதங்களின் ஆதிக்கத்தை நாம் தடுத்து நிறுத்துவோம்.. நம்மை வழி நடத்த வரலாறு இருக்கிறது.. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இருக்கின்றார்கள்.. தேவாரமும், திருவாசகமும் இருக்கிறது.. என்ன இல்லையென்றால, இவையெல்லாம், படித்து புரிந்து கொண்டு பக்தியை பரப்பும் ஒரு இயக்கம் இல்லை..
இந்த சைவ மாநாடு அப்படிப்பட்ட இயக்கமாக மாறட்டும்.. அப்பரடியார்களை போல, ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம்.. தேவாரத்தையும் திருவாசகத்தையும் பக்தியுருக பாடுவோம்.. திருவாசகத்திற்கு உருகார் இல்லை.. கண்டிப்பாக வைதீக மதங்கள் எழுச்சி பெறும்…
சொல்லப்போனால், கிறித்துவத்துக்கு, சரியான பதிலடி கொடுக்கப் போவது, சைவமும் வைணமும் தான்.. இவற்றின் மிகப்பெரிய தத்துவங்களுக்கு முன், அவர்களின் கற்கால தத்துவங்கள் காணாமல் போகும்…
ஆகையால், இந்து அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்.. இந்து இந்து என்று கத்துவதை விட்டு விடுங்கள்.. உண்மையான பாரதிய மதங்களை நோக்கி செல்லுங்கள்.. வரலாறு உங்களை வழினடத்தும்.. வெள்ளைக்காரன், நமக்கு பொதுமாத்து போடுவதற்காகவே இந்து என்ற அடையாளத்தை ஏற்படுத்தினான்.. அதாவது, ஒவ்வொரு பாரதிய மதங்களை தாக்குவதற்கு பதில், எல்லாவற்றுக்கும் இந்து என்ற பொதுவான அடையாளத்துக்குள் கொண்டுவந்து, பிறகு, ஜாதி, தீண்டாமை போன்ற ஆயுதங்களை வைத்து மொத்தமாக தாக்குவது.. இன்னும் சொல்லப்போனால், இந்து என்ற போர்வையை போர்த்தி, பொது மாத்து போடுவது..
நாம் ஏன் அதற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும்… அந்த போர்வையை முதலில் தூக்கி எறிவோம்…
ananymous அவர்களின் கருத்து மிகவும் ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். ஏற்கனவே, நாமெல்லாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது மதத்தில் சாதிப் பிரிவினைகள் வலுவாக வேரூன்றி நிற்கின்றன. இது போதாதென்று சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸ்காந்தம் அல்லது குமாரம் என்ற பிரிவுகளை முன்னிருத்துவோமானால், மேலும் சிதறுண்டு போவோம். இப்படியெல்லாம் பிரிவுகளை நாம் பின்னால் தள்ளியும் கூடா ஆங்காங்கே வைணவம் சைவம் என்ற பிணக்கு தலை தூக்குகிறது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று சொல்லும் அளவுக்குக் கூட அது போகிறது. இப்படியிருக்க நம்மை மீண்டும் சைவம் வைணவம் என்று முன்னிலைப் படுத்துதல் நம்மை “ஆப்பசைத்த குரங்கைப்போல” ஆக்கும்.
கணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சாரம் ஆகிய ஆறு சமயங்களையும் சமரசப் படுத்தி, ஒருவருக்கொருவர் இருந்த பிரிவுகளைப்போக்கி, அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்து ஒவ்வொரு இறை மூர்த்தங்களையும் பக்திபூர்வமாக சிறப்பித்துப் போற்றிப் பாடி, இப்பிரிவினர் அனைவரும் தத்தம் மூர்த்தம் மட்டும் அல்லாது, அனைத்து மூர்த்தங்களையும் அனைவரும் வணங்கித் தொழுமாறு ஏற்பாடு செய்து சனாதன தருமத்தை (தற்போதைய ஹிந்து மதத்தை) ஆதி சங்கரர் நிலை செய்தார். அவர் பட்ட இன்னல்கள், சிரமங்கள், எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தகர்க்கும் விதமானதே இந்த யோசனை. பாரதத்தைத் தன அடியாள் மூன்று முறை அளந்து மக்களின் நாடி அறிந்து அவர் செய்ததின் அடிநாதத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
திரு உமாசங்கர் அவர்களே,
திரு anonymous கூறியது சரியாகத் தான் இருக்கிறது. ஷண்மத உபாசனை எல்லாம் வேறு விஷயம், கடவுட்கொள்கை வேறு விஷயம். எந்த தெய்வத்தை யார் வேண்டுமானாலும் அவர் அவர் இஷ்டப்படி உபாசிக்கலாம். ஆனால், கடவுட்கொள்கை என்பதைப் பற்றி அவரவர் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துக் கொள்வதே சனாதன தருமம் தழைக்க வழி. கடவுட்கொள்கையின்படி ஒருவர் சைவ-வைணவ-சாக்த-கௌமார-காணாபத்ய-சௌர மதங்களில் ஒன்றைத்தான் ஏற்க முடியும். கடவுட்கொள்கையில் ஒரு தெய்வத்தைப் பரம்பொருளாகக் கருதி, மற்ற தெய்வங்களை (வணக்கத்திற்குரியவர்களாக இருப்பினும்) அந்த பரம்பொருளால் நியமிக்கப் படுகிறவராகத் தான் கருத வேண்டும். இப்படிக் கொள்பவர்களைப் பார்த்து “சமயவாதி, வெறுப்புக் கருத்து கொண்டவர்” என்று கூற முடியாது.
சைவர்களுக்குச் சிவபெருமான் தான் முழுமுதற்கடவுள், மற்றவர் எல்லாம் அவருக்கு அடங்கியவை. அதே போல வைணவர்களுக்கு விஷ்ணு தான் முழுமுதல், மற்றவர் அனைவரும் அவருக்கு அடங்கியவை. தக்க நூலாதாரம் இல்லாமல் சைவ, வைணவர்களைப் பார்த்து “இக்கொள்கைகளை மாற்றுங்கள். எல்லாம் ஒன்றே” என்று சொன்னால், அது அவர்கள் வழிபடும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை பலவீனமாக்கும். நீங்களே ஆராய்ந்து நான் பின்வருமாறு கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள்: “எல்லாம் ஒன்றே” என்று இருப்பவர்கள் கீழ்க்கண்ட ஏதோ ஒன்றை ஒத்துக் கொண்டு ஆக வேண்டும்:
(1) “சிவன், விஷ்ணு, துர்கை எல்லாம் அவரவர் தங்கள் இஷ்டப்படி செய்துக்கொண்ட கற்பனையே. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கற்பனை பண்ணிக் கொள்ளலாம். அதே போல, இயேசுவும், அல்லாவும், ஜெஹோவா எல்லாம் கடவுள் தான்” என்று கொள்ள வேண்டி வரும். அப்படி “எல்லாம் ஒன்று” என்று இருப்பவர்கள் மிஷனரிக்கள் செய்யும் மதமாற்றத்திற்கு எதிராக ஒன்றையும் சொல்ல இயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
அல்லது,
(2) சிவன், விஷ்ணு, அம்பிகை, கணபதி, முருகன், பிரம்மா, இந்திரன், வருணன், சூரியன், சந்திரன், சுடலைமாடன், இசக்கியம்மன் எல்லாரும் ஊர்-பேர் தெரியாத ஏதோ ஒன்றின் அவதாரங்கள் என்று கொள்ள வேண்டி வரும். அத்தோடு, பல வேத வாக்கியங்களையும், ரிஷி வாக்கியங்களையும், இதிகாச-புராண வாக்கியங்களையும், ஆழ்வார்/நாயன்மார் வாக்குகளையும், வைணவ/சைவ ஆச்சாரியார் வாக்குகளையும் கட்டுக்கதை ஆக்கி விட வேண்டும். இது நம் வீட்டுக்கு நாமே தீ வைத்துக் கொள்வதற்குச் சமம். “உங்கள் வேதத்திலும் புராணங்களிலும் பல முரண்பாடுகளும் பொய்களும் உள்ளன” என்று ஏசும் மதமாற்றிகளின் கூற்றுக்கு நம்மிடம் ஒரு பதிலும் இராது.
அல்லது,
(3) பரம்பொருள் என்று ஒன்றும் இல்லை. பல கடவுளர்கள் தனித்தனியே பல காரியங்களையும் நிர்வாகங்களையும் செய்து வருகின்றனர், அவ்வப்போது ஒவ்வொரு தெய்வத்திற்கு வலிமை மேலோங்கியும், மற்ற தேவதைகளுக்கு வலிமை குறைந்தும் இருப்பதாகக் கொள்ள வேண்டி வரும். அப்படியானால், “இப்படி உள்ள தெய்வங்கள் உங்களை எப்படி ரட்சிக்கப் போகிறார்கள்?” என்று கிறித்தவ மிஷனரிக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஏதும் நம்மிடம் இராது.
எந்த ஒரு சித்தாந்தக்கட்டுரையாக இருக்கட்டும், சித்தாந்தத்தை நன்று விளக்கலாம். சிலருக்கு ஆட்சேபம் இருந்தால் அதை முன்வைப்பது இயற்கையே. “சித்தாந்தத்திற்கு இவர்கள் எதிரிகள்” என்று கூற முடியாது.
உண்மையான ஹிந்து சமரசம் என்னவென்றால், ஹிந்துக்கள் அவரவர் கடவுட்கொள்கைகளைத் தெள்ளத் தெளிய அறிந்துக் கொண்டு அதனைக் கலப்படம் செய்யாமல் பின்பற்றுவதும், அதே சமயம் மற்றவர்களை மனித நேயத்துடன் நடத்தியும் அவர்களுக்கு முழு வழிபாட்டுச் சுதந்திரம் அளிப்பதுமே. அதே சமயம் ஒரு சித்தாந்தத்தை விளக்க வரும் கட்டுரையில் தேவையானதை மட்டுமே எழுத வேண்டும். மற்ற சித்தாந்தங்களின் கடவுளையும் ரிஷிகளையும் ஆச்சாரியார்களையும் தூற்றும் வண்ணம் எழுதக் கூடாது. அப்படி எழுதினால் புண்படுபவர்கள் மறுமொழி எழுதுவதும் தேவையில்லாத விவாதங்களும் விளைகின்றன. இவ்வளவு தான். அது தவிர, தர்க்க ரீதியான, ஆராய்ச்சி பூர்வமாக, நடுநிலையான, ஆதார நூல்களுடன் நடக்கும் விவாதங்கள் நல்ல விவாதங்களே. இத்தகு விவாதங்களால் ஒரு தீங்கும் விளையாது.
எல்லாரும் எல்லாத்தையும் ஏற்றுக் கொண்டால் தான் சமரசம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இத்தளத்தில் நான் இதைப் பல முறை பல விதங்களில் பல சந்தர்ப்பங்களில் விவாதித்து அனைவருக்கும் புளித்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.
திரு சிவப்க்ஸ் அவர்களுக்கு,
உங்களை போன்றே பலரும் இம்மாதிரியான கேள்விகளை பல இடங்களில் கேட்டு உள்ளனர். இவைகள் விவாததிற்கு அப்பாற்பட்டவை. இருந்தாலும் சில விளக்கங்கள்:
௧. தமிழில் ஆகமங்கள் இருந்ததற்கான சரித்திரக் சான்றுகள் ஏதும் உள்ளனவா?
ஆகமங்கள் தமிழும், வடமொழியும் கலந்த ஒரு எழுத்து வடிவில் தான் முதலில் உள்ளது. ஆகமங்கள் சைவத்தின் முக்கியமான பகுதி. அதை வடமொழியோடு தொடர்பு படுத்தவேண்டாம் என்பது என் கருத்து.
௨. தாங்கள் குறிப்பிடும் ஆகமங்கள் சைவத்தின் எந்தப் பிரிவை சார்ந்தவை?
சைவ ஆகமங்கள் அனைத்தும் நம் ‘சிவபெருமானால்’ மொழியப்பட்டது. அதை ஏன் ஒரு மொழியை வைத்து தொடர்பு படுத்துகின்றீர்கள்.
௩. சைவ சித்தாந்த ஆகமங்களின்படியான திருக்கோயில் வழிபாடுகள் தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தொடங்கின?
எப்பொழுது நம் திருகோவில்கள் எழுதனவோ, அப்பொழுதே ஆகமங்கள் தொடங்கின. தில்லை, திருவாரூர் போன்ற கோவில்கள் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்பது இறைவனுக்கே தெரியும். பல மன்னர்கள் இத்திரு கோவில்களை பலவாறு விரித்து கட்டியிருகின்றர்கள்.
௪. திருமுறை ஆசிரியர்கள் காலத்தின்போது எவ்வகைப்பட்ட வழிபாடுகள் வழக்கில் இருந்தன?
சைவ ஆகம வழிபாடுகள் தான் இருந்திருக்க வேண்டும்.
௫. அவர்கள் இவ்வழிபாட்டு முறைகளில் ஏதும் மாற்றம் செய்தார்களா?
பக்தி நெறி வழிபாடுகளை முன்னிறுத்தினார்கள்.
சைவம் என்பது மொழிக்கு அப்பாற்பட்டது. அதை வட மொழிக்கு தாரைவார்த்து விட்டார்கள். தமிழ் நாட்டில் தமிழ் திருமுறைகள் ஓதியே வழிபடலாம்.
சோமசுந்தரம்
திரு கந்தர்வன் அவர்களே
தங்கள் வாதம் விந்தையாக உள்ளது. நீங்களே சொல்வது:
///இத்தளத்தில் நான் இதைப் பல முறை பல விதங்களில் பல சந்தர்ப்பங்களில் விவாதித்து அனைவருக்கும் புளித்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.///
நீங்களே உணர்ந்த பின்னரும் இதை மீண்டும் புளிக்கும் வண்ணம் சொல்ல வேண்டியதில்லையே!
///அத்தோடு, பல வேத வாக்கியங்களையும், ரிஷி வாக்கியங்களையும், இதிகாச-புராண வாக்கியங்களையும், ஆழ்வார்/நாயன்மார் வாக்குகளையும், வைணவ/சைவ ஆச்சாரியார் வாக்குகளையும் கட்டுக்கதை ஆக்கி விட வேண்டும்.///
ஆதி சங்கர பகவத் பாதரை மேற்கோள் காட்டுபவர்கள் அவர் நடந்து காட்டிய சமரசப் போக்கை கடைப்பிடிக்காவிட்டால் பரவாயில்லையா? ஆதிசங்கரர் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அடித்தளத்தையே ஏற்காதபோது நீங்கள் ஆழ்வார், நாயன்மார்கள் என்றெல்லாம் கூறுவது விந்தையாக இருக்கிறது. ஆதிசங்கரர் காட்டிய சமராஸ் வழிதான் இன்றளவும் கோடிக்கணக்கான பேர்களை நம்மிடம் ஒன்றுபட்டு இருக்க வைத்திருக்கிறது. அதைத் தூக்கி எறிவது போல இருக்கிறது உங்கள் கூற்று. மிகவும் ஆபத்தானது.
திருமுறையால் சிவபூசைசெய்வது புதிதன்று. ஆன்மார்த்தசிவபூசையில் திருமுறையின் பங்கு மிகப் பெரிது. ஆனால் பரார்த்த பூசையில் கிரியைகளுக்குத் திருமுறைகள் எந்த அளவுக்கு உகந்தது என்பதுதான் கேள்வி. போற்றித் திருத்தாண்டகங்கள் கூறி அருச்சனை செய்யலாம். அது வேள்விக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? ஸ்ரீருத்திரம் பயன்படும் இடங்களில் நின்ற திருத்தாண்டகத்தைப் பாராயணம்செய்து திருமஞ்சனமாட்டலாம். அது அக்கினி காரியத்துக்குப் பயன்படுமா? ‘ஆலந்தானுகந்து அமுது செய்தானை’ எனும் ஆரூரரின் காஞ்சிபுரத்திருப் பதிகப் பாடலைக் கூறிநைவேத்தியம் செய்தல் பொருந்துமா? பரார்த்த பூசையில் நாம் தலையிட்டுக் குழப்ப வேண்டியதில்லை. முதலில் திருமுறைஓதுதலை நம்மில்லங்களில் நடைபெறுகின்ற சடங்குகளில் முழுமையாகப் பயன்படுத்துவோம். சாதிச் சடங்குகளை ஒழித்துவிட்டு திருமுறை ஓதி சிவத்தை வழிபட்டு எல்லாச் சடங்குகளையும் செய்வோம். நம்மால் திருமுறை ஓத இயலாதபோனால் ஓதுவார்களை ஆதரிப்போம். இதனால் திருமுறைகள் பரவும்.ஏழை ஓதுவார் சமூகமும் பெருமையுறும்.
திரு.சோமசுந்தரம் அவர்களே,
//௪. திருமுறை ஆசிரியர்கள் காலத்தின்போது எவ்வகைப்பட்ட வழிபாடுகள் வழக்கில் இருந்தன?
சைவ ஆகம வழிபாடுகள் தான் இருந்திருக்க வேண்டும்//
மிக்க மகிழ்ச்சி. அதே சைவ ஆகம முறையில் தான் என்றும் திருகோவிலில் வழிபாடு நடைபெற வேண்டும்.
ஏன் இந்த நூற்றாண்டில் மட்டும் அதனை வேண்டாம் என்று கூற வேண்டும்?
உமாபதி சிவாச்சாரியார் பௌச்கர ஆகமத்திருக்கு உரை வடமொழியிலேயே எழுதி உள்ளாரே?
இருக்கு முதல் மறை நான்கு என்று சேக்கிழார் புராணத்திலும் குறிப்பிட்டு இருக்கிறாரே??
ஆரியமாய் அறம், பொருள், இன்பம், வீடு அறைந்து என்ற சிவஞான சித்தியாரிலே அருள்நந்தியார் கூறுகிறாரே??
பன்னிரு திருமுறையில் பல இடங்களில் தமிழ் மற்றும் வடமொழி பெருமையை சேர்த்து நம் பெருமக்களே போற்றி உள்ளார்களே?
அவர்கள் ஏன் ஹிந்தி, மராட்டி,தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளை குறிப்பிடவில்லை??
சிந்தனை செய் மனமே.செய்தால் தீவினை அகன்றிடுமே!!!!
//சைவம் என்பது மொழிக்கு அப்பாற்பட்டது. அதை வட மொழிக்கு தாரைவார்த்து விட்டார்கள்//
நம் பெருமக்களுக்கு எல்லாம் தோன்றாத அறிய கருத்து திரு.சோமசுந்தரம் அவர்களுக்கு தோன்றியுள்ளது போலும்.