ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

p_chidambaramஅண்மையில் புதுதில்லியில் நடந்த மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டில் காவி பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரித்தார். நாடு முழுவதும் நக்சல் பயங்கரவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதமும் கொடிய முகத்தைக் காட்டிவரும் வேளையில், மதச்சார்பின்மையைக் காப்பதற்கென்றே பிறப்பெடுத்த காங்கிரஸ் கட்சியின் குரலாக, பயங்கரவாதத்தை மதரீதியாக சமன் செய்யும் விதமாக இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

கற்பனையான புனைவுகளின் அடிப்படையில் சில வழக்குகளில் பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் மற்றும் சில ராணுவ அதிகாரிகளை கைது செய்து, அதையே காரணமாகக் காட்டி காவி பயங்கரவாதம் நாட்டில் வளர்ந்து வருவதாக ப.சிதம்பரம் பூச்சாண்டி காட்டியிருக்கிறார். இதே காலகட்டத்தில், பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அவரை கைது செய்ய கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடத்திய பகீரதப் பிரயத்தனமும், அப்போது, இதே சிதம்பரம் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதமும், அக்கட்சியின் உண்மையான முகத்தை தோலுரிக்கின்றன.

பெங்களூரு குண்டுவெடிப்புகள்:

madanee-sufi-bomb2008 , ஜூலை 25- ம் தேதி கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரு நகரில் ஏழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், இருவர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில காவல்துறை, டி.நசீர் என்ற சிமி இயக்க பயங்கரவாதியை கைது செய்தது.

இவன், கேரளாவில் செய்யப்பட்ட இஸ்லாமிய சேவக் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவன். காஷ்மீரில் இயங்கும் லஸ்கர்- ஏ-தொய்பா எனும் பாக். ஆதரவு அமைப்பின் தளபதியாக செயல்பட்டவன். இவனிடம் நடந்த விசாரணையில், கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் இஸ்லாமிய சேவக் சங்க நிறுவனருமான அப்துல் நாசர் மதானிக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. ஆயினும், மதானியைக் கைது செய்ய கர்நாடகா அரசு அவசரம் காட்டவில்லை.

வழக்கில் மதானி பெயர் சேர்க்கப்பட்டபோதும், சட்டரீதியான நடைமுறைகளில் கர்நாடகா அரசு கவனம் செலுத்திவந்தது. அதற்குள், முன்பிணை பெறும் முயற்சிகளில் மதானி ஈடுபட்டார். அவரது மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம், மதானியைக் கைது செய்ய கெடு தேதி நிர்ணயித்த பிறகே, அவரை கைது செய்ய அம்மாநில காவல்துறை முனைப்பு காட்டியது.

madhani-arrestமதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறையின் ஒரு குழு, அவரது சொந்த ஊரான அனவரசேரி சென்றது. ஆனால், அவரை கைது செய்ய உள்ளூர் காவல்துறை ஒத்துழைக்கவில்லை. ‘மதானியை கைது செய்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும்’ என்று மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் வெளிப்படையாகவே அறிவித்தார். கேரள காவல்துறையின் அனுமதி. ஒப்புதல் இல்லாமல் மதானியை கைது செய்ய இயலாது என்பதால், எட்டு நாட்கள், கொல்லத்தில் கர்நாடகக் குழு காத்திருந்தது.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு, இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு- மதானியை கைது செய்யக் கூடாது என்று நெருக்குதல் கொடுத்தனர். போதாக்குறைக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆக. 12 ம் தேதி கேரளா வந்ததால், மதானியைக் கைது செய்வதை மாநில அரசு தவிர்க்க விரும்பியது. கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரிகள், இந்த தடுமாற்றத்தில் குளிர் காய்ந்தனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இரண்டுமே முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோய்விடக் கூடாது என்ற சிந்தனையிலேயே இப்பிரச்சினையை அணுகின.

prakash-karatஅதற்குள், நீதிமன்றத்தில் சரண் அடைந்து, கைதாவதிலிருந்து தப்ப மதானி முயன்றார். கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு உதவும் வகையில் மதானியை கைது செய்ய மார்க்சிஸ்ட் அரசு ஒத்துழைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் பிரசாரம் செய்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் விளக்கம் அளித்தார்.

” பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் விரோதப்போக்குக்காக மதானி கைது செய்யப்படவில்லை. குற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படியே அவர் கைது செய்யப்படுகிறார். அதற்கு சட்ட ரீதியாக கேரளா அரசு உதவ வேண்டியுள்ளது” என்றார் அவர். அதன் பிறகே, மாநில அரசும் கர்நாடக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தது .

ஒருவழியாக, 17 – 08 – 2010 அன்று மதானியை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உரிய அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. அன்றிரவே நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மிகவும் மரியாதையாக அவர் நடத்தப்பட்டார். இதற்கே தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாவிலும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

மதானி, 1998 கோவை குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கோவை குண்டுவெடிப்பு வழக்கிற்காக, கோவை சிறையில் 9.5 ஆண்டு விசாரணைக் கைதியாக அவர் இருந்தபோது, சிறையில் அவருக்கு ராஜ உபசாரம் செய்யப்பட்டது.

soofiya-madhani-200x150ஆனால், கோவை சிறையில் மதானி கொடுமைப் படுத்தப்படுவதாகக் கூறி கேரளாவில் கலமச்சேரி என்ற இடத்தில் தமிழக அரசு பஸ் (2005) எரிக்கப்பட்டது. அவ்வழக்கில் மதானியின் மனைவி சூபியா குற்றவாளி. அவ்வழக்கில் சூபியாவை கைது செய்ய தமிழக காவல்துறையால் முடியவில்லை. பலத்த முயற்சிக்குப் பிறகே சூபியா 19.12.2009 அன்று கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு இன்னும் முடியவில்லை; அவர் பிணையில் வெளியே நடமாடுகிறார்.

இந்த பஸ் எரிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளி தான் டி.நசீர். அவர் தான் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி.

இவ்வாறாக, 2008 – ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு மதானியின் தூண்டுதல் இருப்பது தெரிந்தும், அவரை கைது செய்ய கர்நாடகா அரசுக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. மதானி கைதை தவிர்க்கவே கர்நாடகா அரசும், கேரளா அரசும் முயன்றன. ஏனெனில், அவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்காக (2001) தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட (2008) முகமது அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் கடத்தப்படுவதை இங்கு நினைவு கூரலாம்.

‘அப்சலை தூக்கில் போட்டால் புதுடில்லியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா கூறியதை, கொடியேறி பாலகிருஷ்ணனின் கருத்தோடு ஒப்பிடலாம்.

இந்த நேரத்தில், 2006 – இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகளுக்காக ஹிந்து பெண் துறவி ஒருவர் எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை எண்ணிப் பார்த்தால், நமது அரசுகளின் லட்சணம் புரியும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

2006 , ஆகஸ்ட் 29-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர நிகழ்வுக்கு சிமி அமைப்பே காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், குண்டு வைக்கப்பட்ட சைக்கிளை விற்றவர் என்ற காரணம் காட்டி, பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டார். அவருடன் லெப்.கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டது 10.10.2008 அன்று. ஆனால் அவரை சட்டவிரோதமாக காவல்நிலையத்திலேயே வைத்து, சித்ரவதை செய்தனர், மகாராஷ்டிர காவல்துறையினர். கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்; நீதிமன்ற அனுமதி பெற்றே விசாரணை நடத்த வேண்டும் என்ற விதி அங்கு அப்பட்டமாக மீறப்பட்டது. பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த பிறகே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (MCOCA) கீழ் 23.10.2008 அன்று பிரக்யா சிங் தாகுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

pragya_thakur_arrestஅந்த 13 நாட்களும் பெண் துறவி என்றும் பாராமல் அவரை சிறப்பு புலனாய்வுத் துறையினர் கடுமையாக சித்ரவதை செய்தனர். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் செய்து தரப்படவில்லை. அவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் (மதானி போலவே) உயர்ந்த நிலையில் உள்ள துறவி என்றபோதும், அவர் கீழ்த்தரமான குற்றவாளி போல நடத்தப் பட்டார். அதன் விளைவாகத் தற்கொலை செய்யும் அளவுக்கு மனம் பேதலிக்கப்பட்டார்.

பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட நாள்: அக். 10; அவர் மீது முறையான வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள்: அக். 23. இவரும் உடன் கைது செய்யப்பட்டவர்களும் பிணையில் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் மீது எந்த ருசுவான சாட்சியத்தையும் மகாராஷ்டிரா சிறப்பு காவல்படையால் காட்ட இயலவில்லை. இறுதியில், சரியான சாட்சியங்கள் இல்லாததால், இவர்கள் மீதான தடுப்புக் காவலை 2009 ஜூலையில் விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

என்றபோதும், ராஜஸ்தானின் ஆஜ்மீர் (2007), ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் (2007), குஜராத்தின் மொடாசா (2008) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் பிரக்யா சிங் தாகுர் குழுவினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி வழக்கிற்கு மேல் வழக்கு தொடரப்பட்டன. இவ்வழக்கில், பெண் துறவி மட்டுமின்றி புரோகித் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு அரசு இழைத்த இன்னல் கொஞ்சநஞ்சமில்லை.

‘ராணுவமும் காவித் தீவிரவாதிகளின் கூடாரமாகி வருகிறது’ என்றும் மத்திய அரசால் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவரை, இவர்களுக்கு எதிரான எந்த அடிப்படை ஆதாரமும் மத்திய அரசாலோ, மாநில அரசாலோ முன்வைக்கப்படவில்லை. ஆனால், பிணையில் (அதற்கு சட்டப்படியான உரிமை இருந்தும்) இவர்களால் வெளிவர முடியவில்லை.

தற்போது, உச்சநீதிமன்றத்தில், பெண் துறவியை சட்டவிரோதமாக 13 நாட்கள் வைத்து மகாராஷ்டிர காவல்துறை நடத்திய சித்ரவதையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வெளிவரும் விபரங்கள், மகாராஷ்டிரா மாநில காவல்துறைக்கு மட்டுமல்லாது, மத்திய அரசிற்கும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன.

சிந்திக்க வேண்டியது யார்?

இருவேறு மாநிலங்கள்; இரு வேறு சம்பவங்கள்; இருவேறு வழக்குகள்; இரண்டிலும் அந்தந்த மாநில அரசுகள் நடந்துகொண்ட நடத்தையை இதுவரை பார்த்தோம். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதானி மீது உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் தான் அவருக்கு முன்பிணை வழங்க அனைத்து நிலை நீதிமன்றங்களும் தவிர்த்தன. ஆனால், அவரை கைது செய்ய கர்நாடகா மாநில அரசு அவசரப்படவில்லை. மதானிக்கு உள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. கைதுக்குப் பிறகும் அவர் கௌரவமாகவே நடத்தப்படுகிறார். அந்த பா.ஜ.க.அரசு மீது தான் மதவெறியுடன் செயல்படுவதாக ‘மதச்சார்பற்றவர்கள்’ குற்றம் சுமத்துகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஆரம்பகட்டத்தில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு என்ன காரணத்தாலோ வழக்கின் திசை மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு திணிக்கப்பட்டது. புனையப்பட்ட இவ்வழக்கில் பல கேள்விகளுக்கு மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் பதிலில்லை. அதே சமயம், வழக்கு தொடர்பான தகவல்கள் என்ற பெயரில், ஊடகங்களுக்கு விசாரணை குறித்த தவறான தகவல்கள் கசியவிடப்பட்டன.

ஊடகங்களும் போட்டியிட்டுக்கொண்டு அவற்றை வெளியிட்டு, நாட்டில் இந்து பயங்கரவாதம் பரவிவருவதாகக் கூறி தங்கள் பங்கிற்கு நாட்டுநலத்திற்கு வேட்டு வைத்தன. அந்த செய்திகள் பல பொய் என்பது இப்போது தெரிய வந்தபோதும், உண்மையை ஏற்க எந்த ஊடகங்களும் இதுவரை முன்வரவில்லை. இதன் விளைவாகவே பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் தங்கள் மீதான கொடூர அடக்குமுறையை நிராயுதபாணிகளாகச் சந்திக்க வேண்டியதானது.

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் நோக்கம். நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது.

மாநிலங்கள் மாறலாம்; அதிகார வர்க்கமும் அரசியலும் மாறுவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். மதானியோ, பிரக்யா சிங் தாகுரோ- அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது அவர்களது உரிமை. இவர்கள் வழக்கில் இருந்து விடுபடுவதும் தண்டிக்கப்படுவதும் காலத்தின் கரங்களில் இருக்கிறது. ஆயினும், ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற நடைமுறை இங்கு காணப்படுவதால், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

9 Replies to “ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?”

  1. Pingback: Indli.com
  2. இந்துக்களின் ஒற்றுமைக் கேள்விக் குறியாகவே தொடரும் வரை மதச்சார்பின்மை என்ற முக மூடியில் அரசியல் வியாதிகள் ஒளிந்து கொள்ளும் நிகழ்வு இருந்து கொண்டே தான் இருக்கும்! ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!

  3. போலி மதச்சார்ப்பின்மை பேசி மொத்த தேசத்தையே காவு வாங்க போகிறார்கள்.

  4. ஹிந்துக்கள் இவ்வளவு கொடுமைப் படுத்தப் படுவது ஏனென்றால் காங்கிரஸ் என்றமே நாட்டின் மற்றும் ஹிந்துக்களின் நலனில் அக்கறை கொண்டதில்லை.
    அதில் உள்ள தலைவர்கள் எல்லோரும் பதவிக்காகவும்,பணத்துக்காகவுமே அதில் உள்ளனர்.அது ஒரு பன்னாட்டு தனியார் கம்பனி போன்றது.லாபம் மட்டுமே அதற்குக் குறிக்கோள் . அவர்களுக்கு நீதி,நேர்மை,தர்மம்,நியாயம் எதுவுமே கிடையாது.யார் வேண்டுமானாலும் அதில் பங்குதாரர் ஆகலாம்.இதை மக்கள், குறிப்பாக ஹிந்துக்கள் உணர வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் சந்ததியினர் பெரும் கொடுமைக்கு ஆளாக நேரிடும்.
    காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் துரத்தி அடிக்கப் பட்டது போல் நாளை தமிழ் நாட்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் துரத்தி அடிக்கப் படலாம்.
    அதனால் ஹிந்துக்கள் சுயநலம்,பேராசை,சினிமா பைத்தியம்,கிரிக்கெட் பைத்தியம், இலவசங்களுக்காக அலைவது, ( படித்த ஹிந்துக்கள் ) ஓட்டுப் போடாமல் தூங்குவது , சமுதாய உணர்வு இன்றி சும்மா கோயில் சுற்றுவது, ஏழை ஹிந்துக்களின் துயர் கண்டும் வாளாவிருப்பது இதெல்லாம் தொடர்ந்தால் கட்டாயம் அந்த நிலை சீக்கிரம் வரும். அப்போது மேடை ஏறிப் பேசும் ஹிந்து விரோதத் தலைவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் பணம், பதவி பெற்றுக் கொண்டு எதிரிகளுடன் சேர்ந்து மேலும் ஹிந்துக்களை கொடுமைப் படுத்துவர்.

    இது நாம் சரித்திரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

    சான்றுகள் :

    பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களின் அடி வருடிகளான நம்ம ஊர் ஜமீன்தார்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பஞ்ச காலத்தில் கூட ஏழை விவசாயி களிடம் கட்டாய வரி வசூல் செய்தது, எட்டப்பன் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு எதிராக வெள்ளையர்களுக்கு உதவியது, படை எடுத்து வந்த முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டு நம்மை காட்டிக் கொடுத்தது ( சிந்து மீது நடந்த முதல் படையெடுப்பு) , கோயிலை இடித்தது( மாலிக் காபூர் என்ற ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தாக்கினான்), கிறிஸ்தவ மததுக்கு மாறிய ஹிந்துக்கள் நம் கலாச்சாரத்தை இழிவு படுத்துவது மற்றும் வெள்ளைக்காரனை உயர்வாகப் பேசுவது ஆகியவை.

    ஸ்ரீலங்கா ,பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,மலேசியா ஹிந்துக்களுக்கு நேர்ந்த கதியும் பார்த்தோம்.
    ஆகவே விழிப்போம், ஒன்று படுவோம்.

  5. பேய்கள் ஆட்சி செய்தல் ………………..

    ஓட்டு பொறுக்கிகள் ஆட்சியில் இதை தான் செய்வார்கள்.

  6. திரு.சேக்கிழான்,
    இந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்ட அபினவ் பாரத் உறுப்பினர்களுக்கு
    எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    2 நாட்களுக்கு முன் ஸ்வாமி ஆஸிமானந்த் என்பவரின் “குற்ற ஒப்புதல்
    வாக்குமூலம்” வெளி வந்துள்ளது. அவர் நேரடியாக வெடி குண்டு
    வைத்ததில் ஈடுபட்டாரா என்றெல்லாம் அலசுவதை விட, அவரும் அவருடைய சகாக்களும் தெளிவான, பட்டவர்த்தனமான அடிப்படை
    வாதத்தை அனுசரித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

    மேலும் நேற்று ஆர்.ஸ்.ஸ் தலைவர் திரு.மோகன் பாகவத் ஒரு கூட்டத்தில்
    கீழ்வருமாறு பேசியுள்ளார்.
    “A majority of the people whom the government has accused (in blast cases), few had left voluntarily and few were told by the Sangh that this extremism will not work here,” Bhagwat said.
    இதன்படி ஹிந்துத்துவா இயக்கங்களில் உள்ள சிலர் கண்டிப்பாக
    “பதிலுக்கு பதில்” என்னும் அடிப்படைவாத மனநிலையில் இருந்துள்ளனர்
    என்பது தெளிவு.

    காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக வழக்கை முடிக்குமா என்றால் இல்லை.
    வேண்டுமென்றே இழுத்தடிக்கும். அரசியல் இலாபம் அடைய
    முயற்சிக்கும். அதே சமயத்தில் நாமும் “சுய பரிசோதனை” செய்து
    கொள்ள வேண்டிய கட்டத்திற்கு வந்து விட்டோம். நீங்கள் எழுதுவது
    போல் “குற்றங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”
    என்று இனியும் கூறிக்கொண்டிருக்க முடியாது.

    ஹிந்து, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒரே கண்ணோட்டத்தில் இனி
    ஊடகங்கள் பார்க்கும். அதற்கு சரியான பதிலடியை பா.ஜ.க வைத்து
    கொள்வது அதன் கடமை.

    இதையும் காங்கிரஸின் சதி என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமாக
    அமையும்.

  7. देअर फ़्रिएन्द्स இது ஏதோ ஒரு மத சார்பாய் தெரிகிறது .மன்னிக்கவும் .இது நமக்கு உகந்ததல்ல .அன்பே நம் மதம் அன்பே நம் கடவுள் அதுவே நமக்கு போதும் .நாம் யாரையும் ஜெயிக்க வேண்டாம் ! அனைவரையும் நேசிப்போம் .
    குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *