“யே பரீட்ஷா பேப்பர் எக்கட பம்பிஸ்தானு” – எழு நிமிடம் யோசித்து, எனக்குத் தெரிந்த தெலுங்கில் செப்பினேன். நீரு மதராஸா என்றபடியே நிமிர்ந்து பார்த்தான் கே.ஜி.அர்ஜுன ரெட்டி என்கிற கே.ஜி. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அந்தக் காலத்து தனுஷ் முகம். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட். ஒரு கையில் அலட்சியமாய் விசிறியபடி ஒரு நோட்டுப் புத்தகம். அதற்குள் நான்காய் மடித்து வைத்த சமூக அறிவியல் வினாத்தாள். கடைசித் தேர்வை முடித்துவிட்டு பஸ் வருவதற்காகக் காத்திருக்கிறான். நான் ஏன் காத்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை.
பஸ் ஸ்டாண்ட் வழக்கம்போல் அமைதியாக இருக்கிறது. அதே வெயில். அதே வெக்கை. தமிழ் வாசனையே இல்லாத இடம். ராயர் சந்நிதி தவிர மந்த்ராலயத்தில் எனக்குப் பிடித்தமான இடம் இது மட்டுமே. மந்த்ராலயம் என்னும் குட்டிக் கிராமத்தின் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் இருக்கிறது பஸ் ஸ்டாண்ட். பக்கா தெலுங்கு வாடை. பஸ் வருவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள். பிஸினெஸ் பேசாத பெருமக்கள். தெலுங்கில் மாட்லாடுவார்கள். கன்னடம் பேசினால் புரியும். அரைகுறை தெலுங்கில் பேச்சுக்கொடுத்தால் உரிமையோடு பேசுவார்கள். இந்தி, ஆங்கிலம் பேச்சில் எட்டிப்பார்த்தால் சற்றே தள்ளிப்போவார்கள்.
மந்த்ராலயம் முதல் விஜயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். சந்திரபாபு நாயுடு மூன்றாவது முறையாக முதல்வராகிவிடுவார் என்ற புனே மிட்டே பத்திரிக்கையின் கவர்ஸ்டோரி என் கண்ணை மறைத்தது. எங்கு பார்த்தாலும் தெலுங்கு தேச அலை என்றார்கள். இந்த முறையும் சந்திரபாபுதான் என்று எல்லோரையும்போல் நானும் நம்பினேன்.
அனந்த்பூர் செல்லக் காத்திருந்த, சுமாராக தமிழ் பேசத் தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். “தெலுங்கு தேசத்திற்கு இனி வாய்ப்பே இல்லை,”- அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன். காங்கிரஸ் இப்போது ஜெயிக்காவிட்டால் எப்போதும் ஜெயிக்காது என்றார். ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளரோ என்று நினைத்து அலட்சியப்படுத்தினாலும் பின்னாளில் அவர் சொன்னதுதான் உண்மையானது.
மந்த்ராலயம் இன்னும் மாறிவிடவில்லை. பஸ் ஸ்டாண்டில் வழக்கம் போல் கூட்டமில்லை. புதிதாகக் கழிப்பறை முளைத்திருக்கிறது. ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் நேரடி பஸ் விட ஆரம்பித்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் ஆரம்பித்து டைம் கீப்பர் நோட்டீஸ் போர்டு வரை எங்கெங்கும் தெலுங்கு மயம். மாதிரிக்குக் கூட ஒரு சின்ன ஆங்கில வார்த்தை தென்படவில்லை.
ஒரு பக்கம் துங்கபத்திரா. இன்னொரு பக்கம் பிருந்தாவனம். சுற்றிலும் நான்கு தெருக்கள். அதில் நாற்பது கடைகள். கடைகளை விட லாட்ஜ் அதிகம். எட்டு ஓட்டல்கள். எங்கே போனாலும் மசால் தேசை. மந்த்ராலயம் இவ்வளவுதான். தரிசனத்திற்கு தனியாக வரும் எல்லா ஆண்களுமே இங்கே பேச்சுலராக கருதப்படுகிறார்கள். பேச்சுலருககு ரூம் தரமாட்டார்கள். கொடுத்தாலும் அநியாய விலை. இந்த முறையும் பேச்சுலராகவே வந்ததால் அல்லாட வேண்டியிருந்தது. நிம்மதியான, திருப்தியான தரிசனமும் கிடைத்தாகிவிட்டது. மூன்று மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ். இன்னும் நிறைய நேரமிருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் பொழுதைப் போக்கிவிட்டு தேவஸ்தானத்தில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று திட்டம்.
கே.ஜி பர்ஸை திறந்து சில்லறை எண்ணினான். 25 பைசா ஒன்று உருண்டு ஓடியது. பார்த்து எத்தனை நாளாச்சு? பர்ஸில் ஓர் ஓரமாய் பாலகிருஷ்ணா சிரித்தார். என்.டி.ஆரின் மகன் என்று கே.ஜி அறிமுகப்படுத்தி வைத்தான். தெரியாதது போல் கேட்டுக்கொண்டேன். பாலகிருஷ்ணாவின் ரசிகனா என்று கேட்டேன். பாலகிருஷ்ணா நடித்த படம் பிடிக்கும் என்றான். போன மாதம் ரீலிஸான சிம்ஹா செம ஹிட்டாம். இந்த வாரம் ரீலிஸாகும் கலேஜாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னான். அடுத்தவாரம் முதல் அவனது பர்ஸில் மகேஷ்பாபு இருப்பார்.
55 ரூபாய் பஸ் பாஸ். தமிழ்நாடு போல் இலவசமெல்லாம் இல்லை. சி, சேத்னாப்பள்ளி டூ மந்த்ராலயம் என்று எழுதியிருந்தது. கண்டக்டர் பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வாராம். கே.ஜியின் காலை ஆகாரம் கம்புதான். பள்ளிக்கூடத்தில் லன்ச். நேரம் இருந்தால் மதிய சாப்பாட்டுக்கு தேவஸ்தானம் போகலாம். பெரும்பாலும் போவதில்லை. 12 மணிக்குள் அங்கே போவது முடியாத காரியம் என்றான். சாவகாசமாக சாப்பிடப்போகலாம் என்று நினைத்திருந்த எனக்குக் கொஞ்சமாய் அதிர்ச்சி. டோக்கனையும் பர்சையும் காப்பாற்றவேண்டுமே என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டது.
என்னிடம் இரண்டு டோக்கன் இருக்கிறது. கூட வருகிறாயா என்று கேட்டேன். டோக்கனே தேவையில்லை. சரியான டயத்துக்குப் போகணும். முயற்சி பண்ணிப்பார்க்கலாம் என்று எழுந்தான்.
பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து, இடது புறம் திரும்பி, 100 ரூம்ஸ் தாண்டி வலது புறம் திரும்பி ஒரு சின்ன சந்தில் நடந்தால் தேவஸ்தானத்தின் ஆஸ்தான உணவுக்கூடத்திற்கு வந்துவிடலாம். தரிசனத்திற்குப் போடப்பட்டிருப்பதை விட அதிகமான இரும்புத் தடுப்புகள். வளைந்து வளைந்து உள்ளே நடந்தால் யாரோ ஒரு பெண் எல்லோரையும் சுத்தத் தமிழில் வசைபாடிக்கொண்டிருந்தார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. உள்ளேயிருந்து ஒருவர் வெளியே வந்து கன்னடத்தில் அந்தப் பெண்ணை வெளியே தள்ளி விரட்டியதும் அந்தப் பெண் வெறிபிடித்தவளைப் போல் கையில் இருப்பதை தூக்கி எறிந்தாள்.
உணவுக்கூடத்தின் உள்ளே இரண்டு பந்தி நடந்துகொண்டிருந்தது. அடுத்த பந்திக்காக ஏறக்குறைய இருபது பேர் காத்திருந்தார்கள். கே.ஜியும் நானும் போய் உட்கார்ந்துகொண்டோம். கை கழுவணுமா என்று கேட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தேன் கைகழுவும் இடத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது. கை கழுவ வேண்டுமென்றால் நீந்திக்கொண்டுதான் போகவேண்டும். பரவாயில்லை, வரும்போதுதான் கழுவினேன் என்று இன்ஸ்டெண்ட் பொய்யை உதிர்த்து வைத்தேன். என்னுடைய பதிலுக்குக் காத்திராமல் எழுந்துபோய் சிரத்தையாகக் கைகழுவிவிட்டு அமைதியாக வந்து உட்கார்ந்துகொண்டான்.
தட்டு விநியோகிக்க ஆரம்பித்தார்கள். சிடுசிடுவென்று ஓர் ஐயங்கார் தட்டை விநியோகத்தபடியே வர, பரிசு வாங்குவது போல் இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டோம். சற்றே பெரிய சில்வர் தட்டு. எங்கள் வீட்டில் மஞ்சள், மிளகாய் வகையறாவெல்லாம் இது போன்ற தட்டில்தான் வைத்து மொட்டை மாடியில் காய வைப்பது வழக்கம்.
இன்னொரு ஐயங்கார் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வர, சிரத்தையாக தட்டில் பிடித்துக் கழுவிக்கொண்டோம். கொஞ்சமாய் முகத்திலும் வந்து விழுந்தது. குடிக்கத் தண்ணீர் ஊற்றினார்கள். கையில் பாட்டில் எடுத்து வந்தால் அதில் ஊற்றுவார்கள். சில வருஷங்களுக்கு முன்வரை பத்து ரூபாய் டெபாசிட் கொடுத்து டம்ளர் வாங்கி தண்ணீர் குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அதுவும் கிடையாது.
பெரிய அன்னக்கரண்டியில் சாதத்தை எடுத்துத் தட்டில் பரப்பினார்கள். அதன் மேல் சாம்பார் ஊற்றப்பட்டது. சற்றே துக்கலான சிவப்பு நிறத்தில் சாம்பார். ஆனாலும் காரமில்லை. உப்பு குறைச்சலாக இருந்ததாகத் தோன்றினாலும சாம்பார் ருசித்தது. இன்னொரு முறை சாப்பார் கேட்டு மொத்த சாதத்தையும் பிசைந்து உள்ளே தள்ளினேன். அதற்குள் இன்னொருவர் பருப்புப் பாயசத்தை அள்ளி, சாதத்தின்மேல் தெளித்துவிட்டுப் போனார். சாதத்தை ஒதுக்கிவிட்டு பாயசத்தை ஒருபிடி பிடித்தேன்.
பாயசத்தை முடித்துவிட்டு தயிர்சாதத்திற்காகக் காத்திருந்தேன். எந்த ஐயங்காரும் எட்டிப்பார்க்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் பாயசத்தோடு எழுந்துகொண்டார்கள். தயிர்சாதம் இல்லாத லன்ச் என்னால் ஜீரணிக்க முடியாது. லீமெரிடீய்ன் டீம் லன்ச்சில் கிளையண்டுக்கு முன்னால் உட்கார்ந்து சர்வரிடம் தயிர்சாதம் இல்லையா என்று கேட்டு மானத்தை வாங்கி, பழைய மேனேஜரை சிடுசிடுக்க வைத்த பெருமை எனக்கு உண்டு. வயிற்றில் அரை இன்ச் இடமில்லை என்றாலும் தயிர்சாதம் வரும்போது வயிறு வழிவிட்டுவிடும். மடத்தில் எப்போதும் தயிர்சாதம் கேட்காமலே வரும். ஏனோ இந்தமுறை வரவேயில்லை.
எழுந்து, நீச்சலடித்து, கைகழுவிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறும்போது இன்னொரு கட்டடத்தைப் பார்க்க நேர்ந்தது. பிராமணர்களுக்கான உணவுக்கூடமாம். உள்ளே நுழைந்து நடக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் கட்டுக்கட்டாய் இலைகள். இன்னொரு பக்கம் வேறு பாத்திரங்களில் அன்னதானப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு வளைவில் திரும்பியதும் ஓரமாய் உட்கார்ந்திருந்த ஆசாமி ஓடி வந்து, உங்களுக்கெல்லாம் சாப்பாடு அங்கே இருக்கிறது என்று தெலுங்கில் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது.
திரும்பி உணவுக்கூடத்தின் மைய மண்டபத்துக்கு வந்தபோது கே.ஜி எனக்காகக் காத்திருந்தான். “சும்மா, உள்ள சுத்திப்பார்க்கலாம்னு போனேன்,” என்று தமிழில் முணுமுணுத்தேன். புரியாமல் என்னைப் பார்த்தான். மைய மண்டப வாசலில் இடது புறத்தில் ஒரு சலவைக்கல் தென்பட்டது.
மைய மண்படத்தை விட்டு வெளியேறி குறுக்குச் சந்துகளைக் கடந்து வந்தால் தேவஸ்தானத்து வாசலில் ராயர் சிலையாய் உட்கார்ந்திருந்தார்; லாங் ஷாட்டில்.
ரஜினியை ஞாபகப்படுத்தினார். “என்ன ராயரே… வேத பிரஸ்தனமெல்லாம் சொன்னீங்க.. பகவானுக்கு முன்னாலே ஜாதியே கிடையாதுன்னு சொன்னீங்க… இங்கே எதையும் கண்டுக்காம சைலண்ட்டா இருக்கீங்க..” முட்டிக்கொண்டு வந்த கேள்விகளையெல்லாம் விசிறியடித்தேன். ராயரிடமிருந்து மெல்லிய புன்னகை; அதே ரஜினி புன்னகை!

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
சாதி எனப்படுவது யாதெனின்…
ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]![சுமைதாங்கி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/sumaithaangi-isakki-amman1.jpg)
சுமைதாங்கி [சிறுகதை]
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்
மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்
பண்டைக்குலமும் தொண்டக்குலமும்
சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்
யாதுமாகி….![பால் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/outcast.jpg)
பால் [சிறுகதை]![தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/koveru-kazhuthaigal-by-imayam.jpg)
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]
ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை![மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manmathan-ambu.jpg)
மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]
சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்
பாரதியின் சாக்தம் – 4





அறியாமையினால் மாத்வப் பிராமணர்களை அய்யங்கார் என்கிறார் கட்டுரை ஆசிரியர். அரசாங்கமே சாதிப் பிரிவினையை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் பண்ணும்போது பிராமணர்கள் மட்டும் விதி விலக்கா என்ன? .ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும், மந்த்ராலயத்தில் இருப்போரும், அங்கு வழிபடச் செல்வோரும் மகான் ராகவேந்திரர் ஆகிவிடமுடியாது. ராம்கியும் ரஜனி மயக்கத்தில் இருக்கிறார் போலும்.
மந்த்ராலயத்தில் எல்லா பக்தர்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் ஏற்பாடு வர வேண்டும்
மந்த்ராலயத்தில் அய்யங்கார் கிடையாது. மாத்த்வ ராயர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
மந்த்ராலயம் கோவில் கிடையாது. அது ஒரு மடம். எல்லா ஜாதியினருக்கும் தனித்தனி மடம் இருப்பது போல , மத்வ பிராம்மணர்களுக்கு என்று இந்த மடம் உள்ளது. கோவில் பொது. மடம் தனி. காலப் போக்கில் இந்த மடம் பொது ஜனங்கள் வரும் இடம் ஆகி விட்டது. ஆனால் போஜனம் மட்டும் தனி. இன்றைய காலகட்டத்தில் இது சகிக்க முடியாமல் போனாலும், அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
இதே போல் தான் உடுப்பியும் தனித் தனி மடங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கே காலம் காலமாக நடைபெறும் வழக்கமே இன்றும் பின்பற்றப் பெறுகிறது. அங்கேயும் பிராம்மணர்களுக்கு இன்றும் தனிப் பந்தி தான்.
சரி. நான் ஒன்று கேட்கிறேன். மிகவும் பின்பட்டவர்களாகக் கருதப் படும் அருந்ததியர், பறையர் போன்றோர் தங்கள் தங்கள் குலதெய்வத்துக்கு தனி கோவில் வைத்துள்ளனர். அதில் பிறர் வழிபடுவதில்லை. அவர்கள் வழக்களிலும் தலையிடுவதில்லை. பிற சாதியினரிடம் அவர்கள் நிதி வசூலித்தாலும், அந்தக் கோவில் முற்றிலும் அவர்களுடையதே. அவர்கள் சொன்னது தான் அங்கே சட்டம். இப்படியாக ஒரே சேரிக்குள் இரண்டு மூன்று கோவில்கள் இருக்கும். ஆனால் அங்கே முரண்பாடு இல்லை. மந்த்ராலய விஷயத்தில் மட்டும் ஏன் இந்த குறுக்குக் கேள்வி ?
கொங்கு நாட்டில் கவுண்டர்களுக்கு என்று தனி கோவில்கள் உள்ளன. அங்கே போய் யாரும் நாங்க சொள்ளறபடி தான் செய்யணும் என்று சொல்வதில்லை. பார்ப்பான் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த தனி கண்ணோட்டம் ?
என் நண்பர் ஒருவர் என்னிடம் அங்கலாய்த்த விஷயம் இது. ரொம்ப ஆச்சாரமான வாழ்க்கையை மேற்கொண்டால் பலரிடமும் ,பல இடங்களில் இருந்தும் , விலகி நிற்க வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் ‘பாரு பாப்பானுக்கு தலைக்கேறிப் போச்சு ‘ என்று பேச்சு வரும். ஒரேயடியாய் ஆசாரத்தை விட்டு விட்டால் ‘ பாருடா கலி காலம் ! பாப்பானே தறுதலையாயிட்டான்’ என்கிறார்கள்.
வள்ளுவர் சொன்ன விஷயம் இப்போ சொல்லணும்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134
பிறப்பொழுக்கம் ஆசாரத்தோடு சேர்ந்தது. அகங்காரம் இல்லாத வரை பிரச்சினை இல்லை.
Its very sad to hear they are still practicing this kind of caste standard, that too in Sri Ragavendra’s Mutt. Hmmmm, I too feel sometimes certain brahmins are just not too keen to mix with normal non brahmin hindus. They are among themselves only.
Here in Singapore, I noticed it very openly. I am born in Singapore, so I am local. I always visit 2 temples. One is perumal temple and another Sri Ram temple. But the priest won’t speak with me or even smile. But he will speak casually and give prasad to people from india.
And if its a brahmin family from india, the priest is full of smiles and give prasad even they not asking for it.
At times, I think I am a foreigner in Singapore and all the brahmins from india are singaporeans.
தயைகூர்ந்து இங்குள்ள அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள்.
// சிடுசிடுவென்று ஓர் ஐயங்கார் தட்டை விநியோகத்தபடியே வர //
// எங்கள் வீட்டில் மஞ்சள், மிளகாய் வகையறாவெல்லாம் இது போன்ற தட்டில்தான் வைத்து மொட்டை மாடியில் காய வைப்பது வழக்கம்.//
எந்த ஒரு இந்து அமைப்பாக இருக்கட்டும், இப்படி நேரிடையாக விமர்சிப்பது முறையன்று என்று கருதுகிறேன். இதுவும் நிரூபிக்கக்கூடிய objective விஷயமன்று. இது ஒரு தனிநபருடைய perception என்று தான் தெரிகிறது. அது உண்மையாக இருக்கலாம், அதற்குக் கண்டிப்பாக வருத்தங்கள். அல்லது துரதிஷ்டவசமாக ஏற்பட்ட misunderstanding ஆகவும் இருக்கலாம். எப்படி இருப்பினும், objective ஆன ஆதாரமின்றி அதை வைத்து இம்மேடையில் விவாதிப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்.
எனினும், இப்படி விமர்சனம் செய்வது இந்து விரோதிகளுக்குத் தீனி கொடுப்பதாகிவிடும். இது வேட்டுக்குட்டுச் சண்டையோ, பொருளாதார ரீதியில் ஒருவரைப் பிற்படுத்தக்கூடிய முயற்சியோ அல்ல; ஆசாரம் சம்பந்தமானது. அதில் நாகரீகமான கருத்து வேறுபாடு இருக்கலாம். ஒருவருக்கு ஒரு விஷயம் ஒவ்வாதேன்றால், அதனை விட்டு விலகியிருப்பதே சரி. அவரவர் தத்தம் கொள்கைகளில் திடமாக இருந்து வழிகாட்டியாக, எடுத்துக்காட்டாக இருக்கட்டும், அப்படிச் செய்தாலே பலர் மாறிவிடுவர்.
மனதளவில் மரியாதை காட்டுவதை நாம் மறந்துவிட்டு, superficial-ஆன வெளி விஷயங்களில் நேரத்தைக் கழிப்பது வீண். நான் கூறியது எவருக்கேனும் மனம் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும்.
(edited and published)
//சரி. நான் ஒன்று கேட்கிறேன். மிகவும் பின்பட்டவர்களாகக் கருதப் படும் அருந்ததியர், பறையர் போன்றோர் தங்கள் தங்கள் குலதெய்வத்துக்கு தனி கோவில் வைத்துள்ளனர். அதில் பிறர் வழிபடுவதில்லை. அவர்கள் வழக்களிலும் தலையிடுவதில்லை. பிற சாதியினரிடம் அவர்கள் நிதி வசூலித்தாலும், அந்தக் கோவில் முற்றிலும் அவர்களுடையதே//
மிகச்சரி. எங்கள் வீட்டுக்கு மிக அருகில் ஒரு மந்ராலயம் இருக்கின்றது. இராகவேந்திரர் மிகப்பெரியவர் என்றமதிப்பு எனக்கு இருந்தாலும் நெடியோன்குமரன் கூறியுள்ள இதே காரணத்தால்நான் அங்குச் செல்வதில்லை. வேதம் ஓதும் வைதிகப் பிராமணர்களுக்குத் தனிப் பந்தி என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடிகின்றது. சைவமடங்களில் ஆன்மார்த்தசிவபூசா துரந்தரர்களுக்குத் தனி பந்தி இருப்பதுபோல. அந்தப் பந்தி மாகேசுரபூசை எனப்பட்டு குருபூசை முதலியசிறப்பு நாட்களில் மட்டும் அனுசரிக்கப்படும். அன்னதானத்தில் சமபந்திதான் தருமம். அப்பொழுதுதான் இந்து என்ற ஏகாத்தும உணர்வுதோன்றும். இல்லாதபோனால் பிராமணர்கள் இந்துக்கள் அல்லர் என்றல்லவா எண்ணப்படும்?
ராம்கி மிக அழகாக எழுதி இருக்கிறார். தமிழ்ஹிந்துவில் சாதிப் பிரச்னையை கண்டும் காணாமல் இருந்து விடுவார்களோ என்று நினைத்தேன் – தைரியமாக இக்கட்டுரையை வெளியிட்டதற்கும் பாராட்டுக்கள். அதே நேரத்தில் பதில் சொல்கிறேன் என்று சாதியத்தை நியாயப் படுத்தி சில பேர் கமெண்டுகள் போட்டது அபத்தமாக இருக்கிறது.
மடமாக இருந்தாலும் அருந்ததியர் – பள்ளர் – பறையர் கட்டிய கோவிலாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும் சக மனிதனை ஒதுக்கிப் பார்க்கும் சாதியத்தை ஆதரிக்கவே கூடாது. இந்த சாதியம் பார்ப்பனர்களிடமிருந்தே உருவானது என்று நான் நினைக்கவில்லை. இந்துக்களிடம் இது பொதுவாக இருக்கிறது அவ்வளவுதான்.
ராம்கி உங்களுக்கு தெரியுமோ என்னவோ, சென்ற நூற்றாண்டு வரை சைவம், வைணவம், மாதவம் எல்லாமே தனி மதங்களாகவே இயங்கி இருக்கின்றன. இப்போது தான் இந்து என்ற குடையின் கீழ் அவை வந்திருக்கின்றன. அத்துவிதம், விசிட்டாத்துவிதம் ஆகிய கொள்கைகளின் பின் சேர்ந்த கூட்டமும் தம்மை தனியொரு மதமாகவே நினைத்திருக்கின்றனர்.
இப்போது முஸ்லிம் தர்காவிற்குள் ஒரு இந்து நுழைவது அவ்வளவு எளிதஅல்லவோ அப்படியே இந்த மாத்துவ, சைவ கோவில்களுக்குள் மற்ற நம்பிக்கையாளர்கள் நுழைவதும் எளிதாக இல்லை. அந்த அந்த சமூகத்தினுள் மற்ற சமூகங்கள் குறித்த எதிர்ப்பும் இருந்தது. இன்னமும் இது இருப்பது கேடு.
மாத்வ சித்தாந்தம் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. நீங்கள் “பகவானுக்கு முன்னாலே ஜாதியே கிடையாதுன்னு சொன்னீங்க…” இப்படி சொன்னது ரஜினியையா, ராகவேந்திரறையா என்று தெரியவில்லை. ராகவேந்திரர் அப்படி சொல்லி இருக்க சாத்தியம் குறைவு. ஏனெனில் மாத்வ சித்தாந்தம் “தாரதம்மியத்தை” பாகுபாட்டை ஆதரிக்கிறது.
திருக்கோவில்களும் சரி, திருமடங்களும் சரி, வழிபாட்டுத்தலங்களே. வழிபாட்டுத்தலங்களிலாவது சாதீயம் இல்லாதிருத்தலே முறை. வழிபாட்டு உரிமை வேறு. பூஜை உரிமை வேறு. பூஜை உரிமையில் ஆசார அனுஷ்டானங்கள் பாரம்பரிய உரிமைகள் வருகின்றன. வழிபாட்டு உரிமை அனைவருக்கு பொதுவானது.
வழிபட வரும் பக்தர்களுக்கு அன்னம் பாலித்தல் என்பது இறைத் தொண்டே. இறைத்தொண்டில் சாதீயம் முறையானதல்ல. சாதீயம் கலந்தால் இறைத்தொண்டு பிழைபட்டுப் போகும்.
பலவேறுபட்ட சாதியினர், மரபினர் தத்தமக்கு எனத்தனிக் கோவில்கள் வைத்திருப்பதையும் சாதீய அடிப்படையில் தனிப்பந்தி போடுவதையும் ஒன்று படுத்த முடியாது.
ஆசாரங்கள் என்றால், பிறப்பால் அந்தணரான சிலர் அல்லது பலர் இன்று புகை, மது, மாது எனப் பலவிதமான பிறழ்களில் சிக்கியுள்ளதையும் பிறப்பால் அந்தணரல்லாத சிலர் அல்லது பலர் இவற்றில் சிக்காததுடன், திருக்கோவில் அல்லது திருமடங்களுக்குச் செல்லும் தினங்களில் தத்தமது குல வழக்கமானாலும் கூட புலால் உண்ணாது ஆசாரம் கடைப்பிடிப்பதையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இத்தகு விவரங்கள் கணக்கில் கொள்ளப்படாமல் பிறப்பின் அடிப்படையில் மாத்திரம் தனிப்பந்தி என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம் போன்றதே. நமது மதவிரோதிகள் சொல்வது இருக்கட்டும். நமது மனசாட்சி என்ன சொல்கிறது என்பது முக்கியம் அல்லவா?
1979 ஆம் ஆண்டு எனது மூன்று நண்பர்கள் வேனிற்காலத்தில் ஈரோடு சென்றனர். கடும் வெயில். இருவர் அங்கிருந்த மதுக்கடையில் இரு பீர் பாட்டில்களை வாங்கினர். கடைக்காரர் கடைக்கு உள்ளே இருக்கும் தனி அறையில் அமர்ந்து குடிக்க அழைத்தார். இருவரும் சென்றனர். மூன்றாமவர் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் மட்டுமல்ல, கடையின் படியையும் மிதிக்க மறுத்தார். கடைக்காரர் வெயிலுக்கேனும் ஒதுங்க வருந்தி அழைத்ததும் கடையின் முன் நில்லாது பக்கத்துக் கடையின் முன்னர் சென்று நின்றுகொண்டார். கடைக்காரர் முதல் இருவரிடம் சென்று “அவரென்ன அய்யரா? இப்படி கடை அருகில் நிற்பதைக்கூடப் பாவம் என நினைக்கிறாரே” என்று கேட்டார். ஊர் திரும்பியதும் மூவரும் இதைச் சொல்லிச் சிரித்தனர். ஏனெனில், முதலாமவர் மாத்துவர், இரண்டாமவர் ஸ்மார்த்தர். மூன்றாமவர் கொங்கு வேளாளர். பிறப்பும் மரபும் இன்றைய கால கட்டத்தில் ஆசாரத்தின் அடிப்படை இல்லை என்றே ஆகிப் போனது. இதில் பிறப்பின் அடிப்படையில் தனிப்பந்தி என்பது பிழையன்றி வேறில்லை.
என்னுடன் திருமடத்துக்கு வருகின்றவருக்கு என்னுடன் உணவருந்த இடமில்லை என்றால் நான் எப்படி உணவருந்த முடியும்? பெரும் பிழையல்லவா? பாவமல்லவா? மேலும் இதை உணவென்பதை விட இறைப் பிரசாதம் என்பதே சரியல்லவா? எனது ஆசாரியர் எனது இந்தக் கருத்தினை ஏற்று எனக்கு அனுக்கிரகித்ததை என்னால் மறக்க முடியாது. ஆசாரியர்கள் இந்தப் பழக்கத்தை மாற்ற விரும்பினாலும் மாற்ற முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதே எனது அனுபவம். மாற்றம் நிச்சயம் வரும்.
காஞ்சி மடத்தில் முன்னர் இப்படி இருந்து ஜெயேந்திரர் வந்து சமபந்திக்கு மாற்றியிருக்கிறார்.
என்னதான் நம் ஹிந்து சமுதாயத்தில் குறை இருந்தாலும் ‘காறித் துப்புவது’- அதுவும் உயர்ந்த மகான் ஒருவர் சான்னித்தியம் பெற்ற இடத்தில் – தவறல்லவா? நமது சகோதரர்களின் தவறுகளைப் பொறுமையுடன் சுட்டிக்காட்டி அவர்களை மாற்றுவோம்.
உணவுப் பழக்கம் என்பது தனி நபர் விருப்பம். அவரவர் வழிமுறை.
புலால் உண்ணுவோருடன் (அந்த பழக்கம் உள்ளவர்களுடன்) சேர்ந்து உண்ண மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்கள் தனியாக உண்பதில் தவறில்லை. அதைக் குறை சொல்லுதல் தவறு. இவர்கள் அவர்களுடன் சேர்ந்து அமர்வதால் இனி நான் புலால் உண்ண மாட்டேன் என்று அந்த பழக்கம் உள்ளவர் விட்டுக் கொடுப்பாரா? அப்படி இருக்கையில் இவர்கள் மட்டும் விட்டுத் தர வேண்டுமென நினைப்பது தவறு.
சில பேர் தானே சமைத்ததை மட்டும் உண்பார்கள். சிலபேர் தன் குடும்பத்தில் சமைத்ததை மட்டும் உண்பார்கள். உண்ணும்போது இறைவனை பக்தியுடன் நினைத்து, தேவையற்ற விஷயங்களை நினைக்காமல், ருசியை விட பசிக்கு மட்டும் உண்பவர்களுக்கு இவை எல்லாம் பொருந்தும். இவை எல்லாம் பழக்கங்கள். இவர்கள் தனியாக உண்பதில் குறை கூற முடியாது..
ஆனால் எந்த வைராக்கியமும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் சாப்பிட்டு சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர்கள் இது போன்ற பொது இடங்களில் தனியே சாப்பிட அமர்வதை அனுமதிப்பதும், அவர்கள் அதைப் பெருமையாக நினைப்பதும் கேலிக்குரியது.
அன்புடன்
ஈ. ரா
வைதிக அந்தணர்கள் (குடுமி மற்றும் கச்சத்துடன் வுள்ளவர்கள்) தனியாக சாப்பிடுவதை மற்றவர்கள் சீரணிக்க முடியும். நான் பிராமணனாக இருந்த போதிலும் இந்த மாதிரி இடங்களில் என் நண்பர்களுடன் செல்லும் போது எல்லோருக்கும் பொதுவான பந்தியில் தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். சம்பந்த பட்ட மடங்கள் பழுத்த வைதிக அந்தணர்களை மட்டும் தனி பந்தியில் உட்கார வைத்தால் பிரச்சினை சிறிதும் இருக்காது. சைவர்களில் என்று மட்டும் இல்லை வைணவர்களிலும் சைவ வைணவ தீட்சை உடையவர்கள் தனியாக உண்பது மரபு. இதற்க்கு முக்கிய காரணம் எடுத்துக்கொண்ட தீட்சை படி மந்திரங்கள் ஓதி உணவு உட்கொள்ளும் முறை. முறையாக தீட்சை எடுத்து உடல் முழுதும் விபூதி திருமண் பூசி சமய மரபின் படி உடை உடுத்தியவருடன் நெற்றியில் நீரோ திருமண்ணோ இல்லாது ஆங்கிலேயர் வழில் பேன்ட் சட்டை உடுத்துபவர் ஒன்றாக உணவு சாப்பிட நினைப்பது ( சாதியை மீறி சமய மரபுகளும் உள்ளன) தவறல்லவா? ஆனால் மிலேச்சர்களின் உடை அணிய கூசாதவர்கள் தங்களை அந்தணர் என்று நினைத்துக்கொண்டு அந்தனருக்கான பந்தியில் அமருவதும் இந்த மிலேச்ச அந்தணர்களுக்கு தனி பந்தியில் உணவிடுவதும் கலி கால கூத்து.
எனவே, ராகவேந்திரரிடம், குறை உள்ளது. பிராமணர்களுக்குத் தனியே உணவு படைக்கும் முறையை, அவர் இன்றும் நடைமுறைப்படுத்திவருகிறார். எனவே அங்கு போகாதீர்கள் என்று கூறாமல் விட்ட கட்டுரையாளரும், ராகவேந்திரர் புன்னகை புரிந்தாற்போல்தான் செய்கிறார்.
கட்டுரையாளரின் மனப்பான்மை எப்படி உள்ளதென்றால், அயோத்தியில் வசிக்கும் இஸ்லாமியர்களே, ராமர் கோயில் கட்டுங்கள், ராமர் அங்கு இருக்கட்டும் என்று கூறும்போது, அயோத்தி எங்கு இருக்கிறது என்று கூடத் தெரியாத கருனாநிதிக்கள், ராமர் கோயில் கட்டாதே , ராமர் கிடையாது என்கிறாற்போல், என்றோ மந்த்ராலயம் செல்லும் கட்டுரையாளர், அந்த இடத்தைக் குறைகூறி இருக்கிறார்.
அனைவருக்கும் நன்றி.
காறித் துப்பிவிட்டு வந்தது சிலரின் ஞானக்கண் வாயிலாக தெரிந்துகொண்டு குறித்து சந்தோஷம். இப்படியொரு உணவுக்கூடத்தை கட்டி, பாராம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருப்பது [யார் என்று நான் எழுதி இருந்த] குறிப்பு கட்டுரையில் விடுபட்டுவிட்டது. அதை பெருமிதமாக வெளிக்காட்டிக்கொள்ளும் கல்வெட்டையும் பார்த்து காறித்துப்பிவிட்டு வந்தேன். பத்து வருஷமாக வராத கோபம். வயதாகிவிட்டது என்பது கூட காரணமாக இருக்கலாம்.
மத்வ பிராமணர்கள், ஐயங்கார் என்றெல்லாம் பிரித்துப்பார்க்காமல் பொதுவாகவே மடத்து ஆசாமிகள் என்றே சொல்லியிருக்கலாம். தவறுதான். பிராமணர்களுக்கான உணவுக்கூடத்தை காவல் காத்த ஆசாமியைக் கூட பட்டியலில் சேர்க்கவேண்டுமானால் மடத்து ஆசாமி என்பதே சரியான பதம்.
மந்த்ராலய மகான், மத்வப் பிராமணர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. புவனகிரியில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்தவர். சின்ன வட்டத்தில் அவரைக் கொண்டுவருவது மிகப்பெரிய அபத்தம். இந்துமதம் மட்டுமே தன்னுடைய பலத்தையும் பலவீனங்களையும் வெளிப்படையாக்கி வைத்திருக்கிறது. நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்ளக்கூட மறுப்பது நம்மை விலக்கிவைத்துவிடும்.ராகவேந்திரர், தாரதம்மியம் இல்லாதவராகவே பெரும்பாலான கர்நாடாக, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார் என்பது என்னுடைய நம்பிக்கை.
ராகவேந்திரரிடம் குறை காண்பதோ,எதிர் பிராச்சாரம் செய்வதோ கட்டுரையின் நோக்கம் என்பது சிறுபிள்ளைத்தனம். இனியும் மந்த்ராலய தரிசனம் தொடரும். உணவுக்கூட விஜயம் நிச்சயம் இருக்காது. யாரோ ஏற்படுத்தி வைத்த கறையை துடைக்க நிச்சயம் யாராவது வருவார்கள்,மத்வ குலத்திலிருந்து.
[Edited and Published]
அன்புள்ள ராம்கி
எந்திரன் நல்லபடியாக ஓடி பல்லாயிரம் கோடி லாபம் சம்பாதித்துக் கொடுத்ததற்காக (யாருக்கு லாபம்?) நேர்த்திக் கடன் செலுத்த மந்த்ராலயம் சென்றீர்களா?
) எதற்காக இருந்தாலும் நல்லது.
நீங்களும் ஹரன் பிரசன்னாவும் இனி எந்தக் கோவிலுக்குப் போவதாக இருந்தாலும் கொஞ்சம் கலவரமாக்த்தான் இருக்கிறது
போகட்டும். முதலில் பொது இடங்களில் ஜாதி அடிப்படையில் எந்தவிதமான கவனிப்புகள் இருந்தாலும் ஆட்சேபணைக்குரியதே. அது அரசாங்கம் பிறப்பின் அடிப்படை பார்த்து ரிசர்வேஷன் கொடுத்து முற்படுத்தப் பட்டோர் என்று சொல்பவர்களில் உள்ள ஏழைகளைத் தீண்டத்தகாததாக நடத்தினாலும் சரி மந்த்ராலயத்தில் தனியே பந்தி போட்டாலும் சரி கண்டிக்கத்தக்கதே. ஆனால் பாருங்கள் அரசாங்கம் மக்கள் காசை வாங்கிக் கொண்டு ஜாதி பார்த்து ரிசர்வேஷன் பந்தி பரிமாறும் அயோக்யத்தனத்தை யாரும் கண்டிப்பதில்லை ஆனால் தனியார் மடம் என்றால் மட்டும் எல்லோரும் கண்டிக்கிறோம்.
யாரோ ஒரு ஜாதிக்காரர்கள் நடத்தும் மடத்தில் தனி பந்தி வைத்தால் மட்டும் கண்டிப்பீர்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் அராஜகத்தை கண்டிக்க ஆளில்லை. நான் இரண்டையுமே கண்டிக்கிறேன்.
அது மாத்வர்கள், ஐயங்கார்கள் அல்ல. ஐயங்கார்கள் என்பவர்கள் நம்ம ஊரில் பெரிய நாமம் அதிலும் வொய் நாமம், பாதம் இல்லாத யு நாமம் என்று இரண்டு பிரிவாக இருந்து கோண்டு யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற சண்டையில் மும்முரமா ஆக இருப்பவர்கள். பாவம் அவர்களை ஏன் போய் இழுக்கிறீர்கள். இது வேறு நாமம். இவர்கள் மாத்வர்கள். இது ஒரு தனி ஜாதி அமைப்பின் மடமாக இருந்து இன்று நிறைய பக்தர்கள் சென்று வணங்கும் மடமாக மாறியுள்ளது. தனி ஜாதியாக இருந்த பொழுது தங்கள் உறவினர்கள் மட்டும் சாப்பிடுவதற்கு ஒரு இடம் ஒதுக்கி சாப்பிட்ட வழக்கம் இன்றும் நீண்டிருக்கிறது. காலம் மாறி இருந்தாலும் அவர்கள் தங்கள் பழக்கத்தை தொடர்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆனால் யார் பிராமணர் என்ற கேள்வியை அவர்கள் கேட்ப்பதாகத் தெரியவில்லை. முதலில் சர்ட்டிஃபிகேட்டில் பிராமின் என்று இருப்பவர்களும் பூணூல் போட்டவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்ல. அது பிறப்பால் வருவதல்ல என்ற செய்தி அவர்களுக்கு இன்னும் எட்டவில்லை போலிருக்கிறது. நான் அங்கு சென்றிருந்தால் அபிராமணர்களுக்கு ஒதுக்கிய இடத்தில்தான் சாப்பிட்டிருப்பேன். ஏனென்றால் நான் தகுதியால் பிராமணன் அல்ல. என் நண்பர் ஒருவர் பிறப்பால் தேவர் ஆனால் தகுதியால் பிராமணர் அவரே அந்த இடத்திற்கு தகுதியானவர். பிராமணர் என்பது பிறப்பால் வருவதல்ல. அது இன்னும் அந்த மடம் நடத்துபவர்களுக்குப் புரியவில்லை.
அப்படி தனி இடம் ஒதுக்குவது பிறருக்கு குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு வித்தியாசத்தை தோற்றுவிக்கும். கர்நாடக , ஆந்திர மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றைய சூழ்நிலையில் பிராமணர் என்ற தகுதியை அடைவதற்கு தகுதியானவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவர்களை எப்படி அடையாளம் கண்டு அவர்கள் சாப்பாடு போட முடியும் ஆகவே அதை நீக்கி விடுவதே முறையாக இருக்கும். இருந்தாலும் ஜாதி சார்ந்த மடங்களில் இது போன்ற பாகுபாடுகளை அனேகமாக எல்லா ஜாதியினருமே பல்வேறு இடங்களில் கடைப் பிடித்தே வருகிறார்கள். மதுரையில் சித்திரைத் திருவிழாவின் பொழுது கோனார், நாயுடு, சொளராஷ்டிரா, முதலியார் என்று தனித் தனி மண்டகப் படி நடக்கும் அதில் அந்தந்த ஜாதியினர் மட்டுமே போய் சாப்பிடுவார்கள். பொதுவாக வெளியில் போர்ட் மாட்டி சொல்லாவிட்டாலும் கூட அதுதான் நடை முறை. பல ஊர்களிலும் வைக்கத்தஷ்டமி அன்று பிராமணர்கள் கூடி சாப்பிடுவதும் நடக்கிறது. அங்கு பிறர் போவதில்லை. அவர்கள் காசு வசூலித்து சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்த வழக்கம் அனேகமாக அனைத்து ஜாதியினரிடமும் உண்டு. ஆனால் இங்கு போர்ட் மாட்டி வெளிப்படையாகச் சொல்வதில்தான் பிரச்சினையே. இதே நடைமுறை ஒரு சில ஜாதியினர் நடத்தும் உறவின் முறை கோவில்களிலும் உண்டு. ஆனால் பொது இடம் என்று அறிவித்து விட்டால் அப்படி மந்த்ராலயத்தை அறிவித்திருந்தார்கள் என்றால் பாகுபாடு தவறு மாறாக தனியார் மடம் என்று சொன்னால் அது தவறாகவே இருந்தாலும் அது அவர்கள் மடக் கலாச்சாரம் என்று நாம் விட்டு விட வேண்டியதுதான். நானாக இருந்தால் அப்படி பிரத்யோகமாக சலுகை அளித்தாலும் அதை பெற்றுக் கொள்ள மாட்டேன் அதற்காக இந்து மதமே இதனால் நாசமாகப் போய் விட்டது என்றும் சொல்ல மாட்டேன். அவர்களாக மாற வேண்டும் என்று மட்டுமே விரும்புவேன்.
வேளாங்கன்னி போயிருக்கிறீர்களா? ஜாதி இல்லாத மதம் என்கிறார்கள். ஆனால் அங்கு பாதிரியார் வெள்ளையாக ஏதோ பதார்த்தம் ஒன்றை பிரசாதம் என்று தருவார் அதை அப்பம் என்று சொல்வார்கள். அதை வரிசையில் நிற்கும் பக்தர்களில் எல்லோருக்கும் தந்து விட மாட்டார். நீ ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாயா கிறிஸ்துவனா என்று கேட்ட பிறகே அதை அளிப்பார். இல்லை என்று நீங்கள் சொல்லி விட்டால் உங்களுக்குக் கிடையாது. அவ்வளவுதான் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. அது அவர்கள் சர்ச் அவர்கள் வழக்கப் படி ஒரு சில சாஸ்திரங்கள் பின்பற்றுகிறார்கள். அது போல இது மாத்வர்கள் வழக்கம். மாறினால் நல்லது. நான் அதை ஆதரிக்கவில்லை ஆனால் அதை முன்னிட்டு ஒட்டு மொத்த இந்து மதத்தையும் குறை கூறவும் மாட்டேன்.
எங்கள் தாத்தாவுக்கு திவசம் இட்டால் அதில் எங்கள் குடும்பத்தார் மட்டும் தான் சாப்பிடுவோம். ஆனால் எங்கள் தாத்தா ஒரு பெரிய ஆன்மீகவாதியாக இருந்து ஒரு பெரிய சித்தராக இருந்து மறைந்திருந்து அவரது நினைவு நாளைக் கொண்டாட நிறைய பக்தர்க்ள் வருவார்களேயாயின் அவர்களுக்கு தனியாக ஓரிடத்தில் சாப்பாடு போட்டு குடும்பத்தார் தனியாக ஓரிடத்தில் சாப்பிட்டால் தவறில்லை. அப்படி மாத்வர்களுக்கு மட்டுமாக ஆரம்பித்த பழக்கம் இன்று பிராமணர் அனைவருக்கும் என்று நீண்டிருக்கலாம். இக்காலத்திற்கு தேவையில்லாத ஒரு பழக்கம் அவர்கள் நிறுத்தினால் நன்று. மந்த்ராலயம் பதிவு என்றாலே தமிழ் ஹிந்துவில் கொஞ்சம் வில்லங்கமாகத்தான் இருக்கிறது
)
அது சரி, மந்த்ராலயத்திலாவது எப்படியோ யாரையும் வர வேண்டாம், சாப்பிட வேண்டாம் என்று சொல்வதில்லை. எல்லோருக்கும் சாப்பாடு போட்டு விடுகிறார்கள். நல்ல வேளையாக பக்தர்கள் எல்லோரும் வராதீர்கள் வந்தால் கூட்டம் கூடி விடும், டிராஃபிக் ஜாம் ஆகி விடும் ஆகவே மடத்தின் வி ஐ பி பக்தர்கள் மட்டும் வாருங்கள் என்று சொல்லாதவரைக்கும் சந்தோஷமே. என்ன சொல்கிறீர்கள் ? சமீபத்தில் யாரோ ஒரு மந்த்ராலய சிஷ்யர் அப்படி தன் வீட்டு கல்யாணத்திற்கு வராதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னதாக யாரோ சொல்லக் கேள்வி. அதைப் பற்றி நமக்கு என்ன நாம் மந்த்ராலயத்தை மட்டும் கண்டிப்போம்? என்ன சொல்றீங்க?
அன்புடன்
ச.திருமலை
//ஆனால் தனியார் மடம் என்றால் மட்டும் எல்லோரும் கண்டிக்கிறோம். //
இப்படி சொல்லி விட்டு நீங்களே,
//சமீபத்தில் யாரோ ஒரு மந்த்ராலய சிஷ்யர் அப்படி தன் வீட்டு கல்யாணத்திற்கு வராதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னதாக யாரோ சொல்லக் கேள்வி.//
முரண்பாடாக எழுதுகிறீர்கள்..
ஈ ரா
ரஜினி ராம்கி ரஜினி ரசிகர். அவரை கிண்டல் அடிக்க அது எழுதப் பட்டது. எனக்கு ரஜினிகாந்த் யாரை அழைத்தாலும் அழைக்கா விட்டாலும் ஒரு பொருட்டல்ல அது அவர் தனிப்பட்ட விஷயம். இது சும்மா ராம்கியை சீண்டுவதற்காக போட்ட ஒரு டீசர் மட்டுமே
அன்புடன்
ச.திருமலை
//அது மாத்வர்கள், ஐயங்கார்கள் அல்ல. ஐயங்கார்கள் என்பவர்கள் நம்ம ஊரில் பெரிய நாமம் அதிலும் வொய் நாமம், பாதம் இல்லாத யு நாமம் என்று இரண்டு பிரிவாக இருந்து கோண்டு யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற சண்டையில் மும்முரமா ஆக இருப்பவர்கள். பாவம் அவர்களை ஏன் போய் இழுக்கிறீர்கள்//
திராவிட கட்சிகள் பேசுவது போலவே திருமலை இங்கு மறுமொழி இட்டிருக்கிறார். தமிழ் இந்து இதை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம்.
தமிழ் இந்துவின் கட்டுரை இந்து கடவுளர்கள் கேலிக்குறியவர்களா?
அதை போல ஐயங்கார்கள் கேலிக்குரியவர்களா?
// காறித் துப்பிவிட்டு வந்தது சிலரின் ஞானக்கண் வாயிலாக தெரிந்துகொண்டு குறித்து சந்தோஷம். இப்படியொரு உணவுக்கூடத்தை கட்டி, பாராம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருப்பது [யார் என்று நான் எழுதி இருந்த] குறிப்பு கட்டுரையில் விடுபட்டுவிட்டது. அதை பெருமிதமாக வெளிக்காட்டிக்கொள்ளும் கல்வெட்டையும் பார்த்து காறித்துப்பிவிட்டு வந்தேன். //
கேவலத்திலும் கேவலம்! இப்படி ஒரு அதி நிஹீனமான ஒழுங்கீனத்தை நான் பார்த்ததில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேதியரும் வேதமொதுபவரும் கூடி வைதிக கார்யம் செய்யும் இடத்தை, அதுவும் மிகப்பெரிய மகானுக்குப் பிருந்தாவனம் அமைக்கப்பட்ட இடத்தை அசுத்தப்படுத்துவாராம். அச்சிங்கப்படுத்தியதில் பெருமைப்பட்டும் கொள்வாராம். தி.க. காரர்களையும் பெரியார் கட்சியையும் மிஞ்சிவிட்டார் கட்டுரையை எழுதியவர். பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திற்கு முதலில் போவானேன்?
தனக்கொரு கருத்து வேறுபாடு/ஆட்சேபம் இருந்தால் சாத்வீக முறையில் அதைப் பற்றி முறையிடுவது என்பது வெகு சீக்கிரமாக மறைந்து வருகிறது.
இப்படிப்பட்ட துர்நடத்தையை, அதுவும் சட்டவிரோதமான ஒன்றைச் செய்த கட்டுரையாசிரியர் பிறரைக் குறைகூருவதர்கான உரிமையை இழந்துவிட்டார்.
//ஐயங்கார்கள் என்பவர்கள் நம்ம ஊரில் பெரிய நாமம் அதிலும் வொய் நாமம், பாதம் இல்லாத யு நாமம் என்று இரண்டு பிரிவாக இருந்து கோண்டு யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற சண்டையில் மும்முரமா ஆக இருப்பவர்கள்.//
நம்மவர்களே வைதீகர்களைப் பற்றி இப்படிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தால், நம் கலாச்சாரத்திற்கு விரோதிகளான ஆக்கிரமிப்பு மதங்களை எளிதாக வென்று விடலாம். அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
பாலாஜி , கந்தர்வன்
ராம்கிக்கு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக நாமத்தில் இருக்கும் வித்தியாசங்களைச் சொன்னேன். மற்றபடி யாரையும் இழிவு படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள ஐயங்கார்கள் தம்மிடம் உள்ள வடகலை தென்கலை வேறு பாடுகளை மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று பட வேண்டும் என்பதே என் விருப்பம். தீவீர வைணவர்களிடம் இந்து என்ற உணர்வு இருப்பதில்லை என்பதை நான் ஒரு சிலரிடம் கண்டிருக்கிறேன் அவர்கள் வைணவத்தை தனி மதமாகவே நினைக்கிறார்கள். அந்த நிலையும் மாற வேண்டும். நான் ராம்கியிடம் சற்று விளையாட்டாகச் சொல்லியிருந்தது உங்களை புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அதற்காக மிகவும் வருந்துகிறேன். தளத்தார் என் பின்னூட்டத்தை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ச.திருமலை
I am with you on this Mr Kantharvan, Very good response and thank you
///தீவீர வைணவர்களிடம் இந்து என்ற உணர்வு இருப்பதில்லை என்பதை நான் ஒரு சிலரிடம் கண்டிருக்கிறேன் அவர்கள் வைணவத்தை தனி மதமாகவே நினைக்கிறார்கள். அந்த நிலையும் மாற வேண்டும். ///
வைணவர்கள் என்ன, வேறு பார்வையில் பொதுவாக பல அந்தணர்களும் கூட ஹிந்து மதத்தைத் தமது நோக்கை விட்டுப் பார்ப்பதே இல்லை. அதனால்தான், அவர்களால் அந்தணர்களுக்கு மட்டும் தனிப்பந்தி என்பது எந்த அளவுக்கு மற்றவர்களை மனம் நோகச்செய்யும் என்பததையும் அதன் தாக்கத்தையும் உணராமல் இருக்கிறார்கள். தனிப்பந்தி என்பது வேறு ஆசாரம் என்பது வேறு. அப்படி ஆசாரம் பார்ப்பவர்கள் மட்டும் தனியே தாங்களே தங்கள் உணவைப் பார்த்துக்கொள்வதை யார் குறை கூறமுடியும்? அப்படியே ஆசாரம் என்றாலும் கூட அச்சாரத்தக் கடைப்பிடிக்காத ஒரு அந்தணருடன் உணவருந்துபோது தோஷப்படாத ஆசாரம் ஒரு அந்தணரல்லாதவருடன் சேர்ந்து உணவருந்தும்போது தோஷப்பட்டுவிடும் என்றால் அது தீண்டாமைதானே. தீண்டாமை அறவே களையப்படவேண்டியது. தீண்டாமையைக் கடைப்பிடித்துக்கொண்டு, வாய் வழியாக வெறுமே வைஷ்ணவம் சாதி பார்ப்பதில்லை என்று எத்தனை உதாரணங்களை நாம் காட்டினாலும் அது எடுபடாது என்பதே உண்மை.
நாமெல்லாம் ஹிந்து என்ற ஒன்றுபட்ட அடையாளம் வேண்டும் என்றால் அதற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டாமா?
ராம்கி அவர்களின் நடவடிக்கை வெறுமே பார்க்கும்போது தவறாகப் படலாம், ஆனால் அதுவே எதிர்வினை என்று நோக்கும்போதுதான் அதன் காரணம் புரியும். வினை தவறாக இருந்தால் எதிர்வினை எல்லா நேரமும் சாத்வீகமாக இருக்கும் என்று கொள்ள முடியாது. எல்லாரும் ஒன்றுபோல இருப்பதில்லை, அதிலும் தாக்கப் பட்டவன் தனது மனம் தனது பிறப்பின் காரணத்தால் நோகடிக்கப் பட்டவன் சாத்வீகமாக இருக்கவேண்டும் என்று சொல்வது வேடிக்கை.
திரு.ராம்கி அவர்களே! மந்த்ராலயத்தில் பஸ் ஸ்டாண்டைப் பார்த்தீர்கள்.ரூம் வாடகை அதிகம் என்று கண்டுகொண்டீர்கள். அசம பந்தி சாப்பாட்டை சாப்பிட்டீர்கள்.காறித் துப்ப வேண்டிய காரியத்தை செய்தவர் பேரைப் பார்த்துக் காறித் துப்பினீர்கள். எல்லாம் சரிதான். மந்த்ராலய மகானை தரிசித்தீர்களா? அங்கு சாதிவாரியாக வரிசை இருந்ததா? அதைப் பற்றி சொல்லவே இல்லையே.
உமாசங்கர் ஐயா,
விசாரம் மந்த்ராலயத்தில் நடப்பது சரியா தவறா என்பதல்ல. துப்பியதெல்லாம் சரியா என்பது தான்.
// ஒரு அந்தணருடன் உணவருந்துபோது தோஷப்படாத ஆசாரம் ஒரு அந்தணரல்லாதவருடன் சேர்ந்து உணவருந்தும்போது தோஷப்பட்டுவிடும் என்றால் அது தீண்டாமைதானே. //
இரண்டு உதாரணங்கள் கூறுகிறேன் –
சின்ன வயதில் எங்கள் வீட்டில் வருடந்தோறும் ச்ராத்தம் நடக்கும். அப்பொழுது வைதீக அந்தணர்கள் சாப்பிடுவதை நாங்கள் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கூறுவர் (நாங்கள் அதற்கு வேண்டிய மடி ஆசாரங்களைக் கடைபிடிக்காததனால்). இது சரியோ தவறோ, நாங்கள் ஒரு நாளும் காறித் துப்பவேண்டும் என்று மனதில் கூட நினைத்ததில்லை.
சென்ற வருடம் என் தகப்பனார் என்னை ஒரு மடத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அது ஒரு ஸ்மார்த்த மடம். நாங்கள் எல்லோரும் வைதீக பிராம்மணர்கள் சாப்பிடும் வரை உணவுக் கூடத்தின் வெளியில் உட்கார்ந்துக் கொண்டோம். அதுவும் ஓர் அக்ரஹாரம் – வீதியில் உள்ள திண்ணைகளில் தான் உட்கார்ந்தோம். பிறகு அவர்கள் சென்றபிறகு தான் உள்ளே நுழைந்தோம். வெளியில் உட்கார்ந்தவர்களுள் பிறவிப் பிராம்மணரும் பலர் அடங்குவர், பிராம்மணரல்லாதவரும் பலர் இருந்தனர். இச்சம்பவத்திலும் கூட யாரும் காறித் துப்பவில்லை.
எங்கள் வீட்டில் சிராத்தத்தில் நடப்பதையோ மேற்கூறிய மடத்தில் நடப்பதையோ நான் சரியா தவறா என்று இம்மறுமொழியில் விசாரிக்கப் போவதில்லை. விஷயம் என்னவென்றால், இவ்விரு நேரங்களிலும் யாரும் காறித் துப்ப ஏன், ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்க, கட்டுரை எழுதியவருக்கு மாத்திரம் வேறு நியாயமா?
// நோகடிக்கப் பட்டவன் சாத்வீகமாக இருக்கவேண்டும் என்று சொல்வது வேடிக்கை. //
நீங்கள் கூறுவது சரியான கண்ணோட்டம் அல்ல. ஒரு குழுவினர் தரக்குறைவாக நடந்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது என்று கூறுவதனால் அக்குழுவினருக்குத் தான் இழுக்கு. ஒருவர் எப்படி நடக்கலாம் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பைத் தாழ்த்துவது அவர்களுக்கும் நல்லதல்ல.
அவருக்கு அவ்வளவு கொந்தளிப்பு என்றால் அக்கட்டிடத்தைக் கட்டியவர் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டிருக்கலாம். அல்லது, நிர்வாகியிடம் முறையிட்டிருக்கலாம்.
// தீண்டாமையைக் கடைப்பிடித்துக்கொண்டு, வாய் வழியாக வெறுமே வைஷ்ணவம் சாதி பார்ப்பதில்லை என்று எத்தனை உதாரணங்களை நாம் காட்டினாலும் அது எடுபடாது என்பதே உண்மை. //
யாரைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. இப்போதே சொல்லிவிடுகிறேன்: நான் தீண்டாமையைக் கடைப்பிடித்ததுமில்லை, ’வெறுமே’ வைஷ்ணவம் சாதி பார்ப்பதில்லை என்றும் சொல்லுவதில்லை.
திரு கந்தர்வன் அவர்களே
நீங்கள் கட்டுரை ஆசிரியர் துப்பியதனால் சாதியத்தை அவர் கண்டிக்கும் தகுதியை இழந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். துப்பியது என்பது சாதியத்தைக் கடைப்பிடித்ததர்கான எதிர்வினை என்கிறேன் நான். அது உங்களுக்கும் தெரியும். நீங்கள் இந்த எதிர்வினை சாத்வீகம் அல்ல என்கிறீர்கள்.
உங்கள் உதாரணங்கள் இங்கு பொருந்தவில்லை. பொது இடமான திருமடத்தில் தனிப்பந்தி என்பது வேறு. ஒரு வீட்டில் திவசச் சாப்பாடு என்பது வேறு. இரண்டையும் ஒப்பிடுதல் தவறு. அது போலவே வைதீக அந்தணர்களுக்கும் பிற அந்தணர்களுக்கும் இருக்கும்/ அல்லது காட்டப்படும் பாகுபாடு பிறப்பின் அடிப்படையில் அமைந்ததல்ல. இப்படியெல்லாம் நீங்கள் கூறும் காரணங்கள் “பிறப்பின் அடிப்படையில் தனிப்பந்தி என்ற தீண்டாமையை நியாயப் படுத்தும் முயற்சி” என்பது உங்களுக்கே புரியவில்லையா? அப்படியானால் நீங்கள் உங்கள் கடைசிப் பத்தியில் தீண்டாமையைக் கடைப்பிடிக்காததாகக் கூறுவது முரணாகப் படவில்லையா?
திரு அரவிந்தன் நீலகண்டனின் ( http://www.tamilpaper.net/?p=987 ) ஒரு நாஸி மாமி படிக்கும் கீதை பகுதி 2 இல் (நீங்களும் இதில் உங்கள் கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள்) உள்ள பின்வரும் கருத்துக்களைப் பாருங்கள்.
QUOTE:
“பதினெட்டாம் அத்தியாயத்தில் (மோட்ச சன்னியாச யோகம்) பகவத் கீதை குணங்களின் அடிப்படையில் அறிவை மூவிதமாகப் பிரிக்கிறது. இதில் உயர்ந்ததான சத்வ அறிவை இப்படி வரையறை செய்கிறது:”
“வெவ்வேறாகவுள்ள பொருள்கள் அனைத்திலும் வேறுபாடில்லாததும் அழிவில்லாததுமான ஒரே வஸ்துவை எவன் பார்க்கிறானோ அந்த ஞானத்தை சாத்வீகம் என அறி. (பகவத் கீதை 18:20)”
UNQUOTE:
சாத்வீகம் என்பது என்ன என்பதை அழகாகப் படம் பிடிக்கும் மேற்கண்ட இப்பகுதி உங்களுக்கு விடை அளிக்கும். திருமடத்தில் இந்த பகவத் கீதை வரிகளுக்கு மாறாக அதன் நிர்வாகமே நடக்குமானால், அங்கு வரும் பக்தர்களைப பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி நடத்துமே ஆனால், அது சாத்வீகம் ஆகாது. அதன் எதிர்வினை மட்டும் சாத்வீகம் ஆகவேண்டும் அதிலும் கூட சாதாரணப் பக்தனிடமிருந்து வரும் எதிர்வினை சாத்வீகமாக இருக்கவேண்டும் என எதிபார்ப்பது வேடிக்கைதான். திருமடத்தின் சாத்வீகம் அற்ற செயலைக் கண்டிக்காமலோ அதைத்திருத்தாமலோ அதன் எதிர்வினையான சாத்வீகம் அற்ற செயலைக் கண்டிப்பது பிழையானதே. நான் எதிர்வினையை நியாயம் என்று சொல்லவரவில்லை. திருமடமே சாத்வீகம் அற்ற செயலைச் செய்வதைத்தான் கவனத்திலிருந்து தவறவிடக்கூடாது என்கிறேன். அந்தச் செயல்தான் மூலம், அது இல்லாவிட்டால் இது இல்லை.
கட்டுரை ஆசிரியரின் பிழை/ தவறு ஒரே ஒரு முறைதான். ஆனால் திருமடமோ திரும்பத்திரும்ப வேளாவேளைக்கு இந்தத் தவறைச் செய்கிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதுவும் இந்தத்தவறு வருகின்ற பக்தர்கள் மீதில் — ஒருவரல்ல இருவரல்ல ஆயிரக் கணக்கில் –இழைக்கப் படுகிறது, எது மிகக் கொடியது?
எவனாவது தாடிக்காரன் வந்து “ஒக பாமு, ஒக மத்வா ரொண்டு சூசேசி, பாமு சம்பொத்து ஆ மத்வானிகு பாக சம்பு” என்று சொல்லும் வரை திருந்தமாட்டார்கள் போல.
ஏற்கெனவே பலர் ‘காறித் துப்பி’யுள்ள ஒரு இடத்தைப் பார்த்து ஒருவன் தானும் துப்பி விட்டுப் போனால் அந்த இடம் மேலும் அசுத்தம் தான் ஆகும்.
அதை விட ஒரு துடைப்பமும், முறமும் எடுத்து சுத்தப் படுத்தி,பினாயில் தெளித்து ஒரு ஊதுவத்தி கொளுத்தி வைப்பானேயானால் அந்த இடத்தையும் சுத்தப் படுத்தினவனாவான்.அவனும் போற்றப் படுவான்.நாலு பேருக்கு வழி காட்டியாவான்.
டாக்டர் ஹெட்கேவர் சமுதாயத்தைப் பார்த்து சும்மா ‘காறித் துப்பி’ விட்டுப் போயிருந்தால் இன்று சாதி வித்யாசம் பாராத ஆர்ர் எஸ் எஸ் நமக்குக் கிடைத்திருக்காது.
நாராயண குரு ஈழவர்களின் நிலை கண்டு காறித் துப்பி விட்டு தன் வழியே போயிருந்தால் இன்று அவர் ஒரு மாபெரும் சீர்திருத்தவாதியாகப் போற்றப் படமாட்டார்.
ராஜா ராம் மோகன் ராய் சமுதாயத்தின் மீது சும்மா காறித்துப்பி விட்டுப் போயிருந்தால் பல சமுதாய சீர்திருத்தங்கள் அக்காலத்தில் நடந்திருக்காது
சுவாமி தயானந்தர் காறித் துப்பி விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போயிருந்தால் ஆரிய சமாஜம் உதயமாகியிருக்கது. ஏராளமானோர் தாய் மதம் திரும்பியிருக்க முடியாது.
டாக்டர் ஹெட்கேவர், நாராயண குரு, ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தர் ஆகியோர் கொடிக்கனக்கானவர்களில் ஒருவராக வந்தவர்கள்.
ராம்கி போன்றோர் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரே. சாதாரண மனிதர்களின் வெளிப்பாடு சாத்வீகமாக இருக்காது என்பதுதான் உண்மை. அதற்குக் காரணமான சாதிக் கொடுமையை, தீண்டாமையைத் தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், திவச சாப்பாடு, வைதீக ஆசாரம் என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டும் போக்கு இருந்தால் எங்கிருந்து, எப்போது திருந்துவது? ராம்கி அவர்கள் பரவாயில்லை இதோடு நிறுத்திக்கொண்டார், வேறு சிலர் மதம் மாறுகின்றார். அவரை எப்படிஸ் சமாளிப்பது?
தவறை உனாரதவன் திருந்த வழியில்லை.