மதமெனும் பேய்

vallalar”பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்

என்கிறார் வள்ளலார். ஏகாதிபத்திய,அதிகார சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்க உருவாக்கியிருக்கும் ஒரு விஷயமே மதம். பொதுவுடைமை சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ் அவர்கள் மதம் பொதுஜனங்களுக்கு போதையேற்றும் ஒரு அபினி என்று சொன்னார். ஆனால் நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”

என்று பேசிக் கொண்டே போனார் நண்பர் ஒருவர். அவர் சொல்வது முற்றிலும் தவறு, அது உச்சரிப்புப் பிழையால் வந்த குழப்பம் என்று நான் கூறினேன். ஆன்மிக அருட்செல்வராகிய வள்ளலார் எப்படி மதத்தைப் பேய் என்று சொல்வார்? அதுவும் அந்தக் குறிப்பிட்ட வரி தெய்வமணிமாலை என்னும் பிரபலமான துதிப் பாடலில் உள்ளது. கந்தகோட்டத்தில் உறையும் முருகப் பெருமானைப் போற்றி வரம் கேட்கும் பாடல். அதிலே போய் மதம் பேய் என்று ஒரு வரி வருமானால் அது முற்றிலுமே முரணாக இல்லையா? என்று கேட்டேன். ஆமாம், நீங்கள் சொல்வது தர்க்கபூர்வமாக இருக்கிறது. அதன் சரியான பொருளை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு விஷயத்தை அவருக்கு விளக்கினேன்.

இங்கே வள்ளலார் எடுத்தாளும் சொல் madham (मद:). இதன் பொருள் ஆணவம், செருக்கு, கொழுப்பு என்பதாகும். மதத்தல் என்று வினைச்சொல்லாகவும் வரும். யானைக்கு மதம் பிடித்தலைக் குறிக்கும் “மதம்” என்ற சொல்லும் இதே உச்சரிப்பு கொண்டது தான். களிப்பு,வேட்கை மிகுதியால் மதநீர் ஒழுகி ஒழுகி யானையின் முகத்தில் தடமாகவே பதிந்து விடும். அதற்கு மதச்சுவடு என்று பெயர். பெருங்களிப்பு, பித்து, மயக்கம், காமவேட்கை இவற்றை யானையின் மதத்தோடு ஒன்றுபடுத்திப் பாடும் பல பாடல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டு.

வாய்க் கொழுப்பு என்பதைக் குறிக்க ”வாய்மதமோ வித்தைமதமோ” என்று குற்றாலக் குறவஞ்சியில் (பாடல் 76) வருகிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு குணங்களையும் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறான ’அறுபகை’ என்னும் ஆறு பகைவர்களாக உருவகிப்பார்கள். பரிமேலழகர் உரையில் ”காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளா யுள்ள ஆறு குற்றங்கள்” என்று குறிப்பிடுவார் (குறள், அதி. 44, அவதாரிகை). வள்ளலார் பாடலின் மற்ற வரிகளையும் இணைத்துப் பார்த்தால் காமம், குரோதம், மதம், லோபம் ஆகிய பகைகளிடத்திலிருந்து தம்மைக் காக்க அவர் வேண்டுவது தான் இந்தப் பாடல் என்பது தெளிவாக விளங்கும்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும் (சத்சங்கம்)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் (தீநட்பு விலக்கல்)

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும் (நல்லொழுக்கம்)

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும் (மதம் அறுதல்)

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும் (காமம் அறுதல்)

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும் (லோபம் அறுதல்)

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. (தெய்வ வணக்கம்)

சமயம் என்ற பொருள் கொண்ட மதம் என்ற சொல்லே வேறு. அது matham (मत:). அந்தச் சொல்லுக்கு ’ஏற்றுக் கொண்ட கருத்து’ என்பது பொருள். அதனால் தான் தேர்தலில் போடும் வாக்குகளுக்கு ஹிந்தியில் matha-daan (मतदान) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். சம்மதம் என்றால் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்ட கருத்து. மதித்தல், மதிப்பு ஆகிய சொற்களும் இதிலிருந்தே வருகின்றன. இச்சொல் மதி அதாவது அறிவு என்ற வேர்ச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே மதம் என்பதற்கு அறிவுபூர்வமாக (கண்மூடித்தனமாக அல்ல) ஏற்றுக் கொண்ட கருத்து என்பது உள்ளுறை பொருளாக நிற்கிறது. கீதையில் ‘இதி மே மதம்’ (இது என் கருத்து) என்று பல இடங்களில் கண்ணன் கூறுவதாக வரும்.

இதற்கு இணையாக நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல் religion. அந்தச் சொல்லின் மூலத்தைப் பார்ப்போம்.

Middle English religioun, from Anglo-French religiun, Latin religion-, religio supernatural constraint, sanction, religious practice, perhaps from religare to restrain, tie back.
First Known Use: 13th century

இந்தச் சொல் கட்டுப்படுத்துவது, அனுமதிப்பது, ஆணையிடுவது, சார்ந்திருப்பது ஆகியவற்றைக் குறிக்கும் வேர்ச்சொல்லில் இருந்தே உருவாகியிருக்கிறது. rely, reliable ஆகிய சொற்களும் வேர்ச்சொல் அளவில் religion என்ற சொல்லுடன் தொடர்புடையவை.

மதத்தைக் குறிக்க இருமொழிகளிலும் பயன்படும் சொற்களே அவை பிரதிநிதித்துவப் படுத்தும் மதங்களின் இயல்பைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

buddhism_and_christianity_book_coverகாலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். அதனால் தான் கிறிஸ்தவத்தைக் குறிக்க christianity என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஆங்கில மொழியில் ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்க ity என்ற பதம் வழங்கும் – originality, chastity, liberty என்பது போல. கிறிஸ்தவத்தைக் குறிக்கும் சொல் இந்தச் சொற்களுடன் ஒத்திசைவு கொண்டுள்ளது.

Hinduism, Buddhism, Jainism, Mohammedanism என்று மற்ற மதங்களைக் குறிக்க ism என்ற வார்த்தையை உபயோகித்தார்கள். 18-19ம் நூற்றாண்டுகளில் ism என்ற இந்தச் சொல் ஒரு வினோதமான, தனிப்பட்ட சிந்தனையையோ அல்லது கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதையோ குறித்தது. பெரும்பாலும் எதிர்மறை நோக்கிலேயே பயன்படுத்தப் பட்டது. racism, fascism, nazism ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதே ரீதியில் கிறிஸ்தவத்தையும் Christism என்றே அழைக்கவேண்டும் என்று ஒரு சாரார், குறிப்பாக மேற்கத்திய நாத்திகவாதிகள் அப்போது சொன்னார்கள். இன்றும் சிலர் அப்படிக் கூறி வருகிறார்கள்.

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சுதந்திரமான, புரட்சிகரமான, கலகத் தன்மையுடைய சிந்தனைகளைக் குறிக்க ism என்ற சொல்லை நவீன கலை, இலக்கிய, தத்துவ கோட்பாட்டாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் – cubism, communism, impressionism, transcendentalism, existentialism, structuralism, feminism. காலனியத்திற்குப் பின் வந்த காலகட்டங்களில் ism என்ற சொல் ஒருமித்த சிந்தனைப் போக்கு என்ற பொருளிலேயே வலுவாக நிலைபெற்று விட்டது – அந்த சிந்தனைப் போக்கு நேர்மறையானதவோ அல்லது எதிர்மறையானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு பீடத்தின் மீதமர்ந்து மற்ற மதங்களை ‘இசங்களாக’ முத்திரை குத்தியது கிறிஸ்தவம். தான் இதற்கெல்லாம் மேற்பட்டது என்று சொல்லிக் கொண்டதன் மூலமாக கருத்து ரீதியான சித்தாந்தம் என்பதாக இல்லாமல், ந்ம்பிக்கை, விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அமைந்த ஒரு குழு நடவ்டிக்கை (faith based cult/creed) என்று தன்னைத் தானே கிறிஸ்தவம் அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டது! கிறிஸ்தவத்தில் இறையியல் மட்டுமே உள்ளது; தத்துவம் இல்லை. மேற்கத்திய தத்துவ சிந்தனை முழுவதும் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை நிராகரித்தே வளர்ந்துள்ளது என்று அதன் வரலாற்றைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும். இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டு முறைகளும், சமய ஆசாரங்களும் உருவாகி அவை பொதுமக்களிடையே பரவின. இவற்றின் சாரத்தை விடுத்து வெளித் தோற்றங்களிலேயே மக்கள் ஆழ்ந்துவிட்டபோது ஞானியர் சமயத்தின் தத்துவ சாரத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டினர். அவர்கள் மதத்தை நிராகரிக்கவில்லை; உண்மையான ஆன்மிக அனுபவம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றே கூற விழைந்தார்கள்.

பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே

என்றார் வள்ளலார். இங்கு சமயங்களை இறைவன் என்ற பெருங்கடலில் சென்று சேரும் நதிகளாகவே காண்கிறார்.

நதி உண்ட கடலெனச் சமயத்தை உண்டபர
ஞான ஆனந்த ஒளியே

என்றும்

மைவிடாது எழு நீலகண்ட குருவே – விஷ்ணு
வடிவான ஞானகுருவே
மலர்மேவி மறை ஓதும் நான்முகக் குருவே
மதங்கள் தொறும் நின்ற குருவே

என்றும் பாடுகிறார் வள்ளலாருக்கும் முன்பு தோன்றிய தாயுமானவர்.

இது இந்து மரபில் நீண்ட நெடுங்காலம் பயின்று வந்த சமய சமரச தரிசனமேயாகும். சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ பேருரையில் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். தான் சிறுவயதில் கற்ற ஒரு துதிப் பாடலில் இருந்தே தனக்கு சமயங்களின் சமரசம் என்ற தரிசனம் கிடைத்ததாக அதில் அவர் கூறுகிறார் –

நால்வேதங்கள், சாங்கியம், யோகம், சைவம், வைஷ்ணவம் போன்று பற்பல வழிகளை தங்கள் விருப்பத்தின் காரணமாகவும், இயல்புகளின் காரணமாகவும் மனிதர் கொள்கின்றனர். இறைவா, எல்லா நீர்ப்பெருக்குகளும் சென்று சேரும் பெருங்கடல் போல, நேராகவும், வளைந்து நெளிந்தும் செல்லும் இந்த எல்லாப் பாதைகளின் முடிவாகவும் நீயே இருக்கிறாய்!

– சிவ மஹிம்ன ஸ்தோத்திரம், 7.

மத வழிபாட்டின் ஒரு அங்கமாக உள்ள துதிப்பாடலே மதங்களை ஒன்றிணைக்கும் உன்னதமான மனித நேயப் பார்வையையும், மதங்களைக் கடந்து செல்லும் ஞானப் பார்வையையும் அளிப்பதாக உள்ளது. இந்து மதத்தின் பேரியல்பு அல்லவா இது!

இந்தத் தாய் மதத்தைப் பேய் என்று வள்ளலார் கண்டிப்பாக சொல்லவில்லை.

26 Replies to “மதமெனும் பேய்”

  1. ஆங்கிலேயர்களின் கள்ளத்தனத்தை அருமையாக அரங்கேற்றி பறை சாற்றி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், பாரதத்தை, எவ்வளவு கேவலப்படுத்திச் சுராண்டினார்கள் என்பதைவைத்துக்கொண்டே அவர்களுடைய, கிறித்தவ மதம், ஒரு சுராண்டல் மதம் என்றும், ‘அன்பு’ ‘ஆண்டவன்’ என்ற பெயரில், காழ்புணர்ச்சியைக் காட்டி, பாரத்தத்தையும், மக்களையும், “பகன்” /”பாகன்” என்றும் “விக்ரக ஆராதனை செய்பவர்கள்” என்றும் குறை கூறி, தாங்களே அதைத்தான் செய்கிறார்கள் என்பதை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தவர்கள் என்றும் நிரூபணம் செய்யப்பட்டு இருக்கின்றது.

  2. இன்று தான் मद – मत வேறுபாடு தெரிந்து கொண்டேன். தமிழில் வேறுபாட்டுடன் எழுத முடியாமையால் இது பலருக்கும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

    அற்புதமான கட்டுரை.

  3. நல்ல விளக்கம்.
    இது புரியாமல் பெரியாரும் வள்ளலாரும் ஒன்று என்று சிலர் புருடா விட்டு மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்கிறார்கள்.

  4. வள்ளலாரின் மதம் விஷயத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள். இனியும் இந்த வரிகளை வைத்து வள்ளலார் மத விரோதி என ஜல்லியடிக்க முடியாமல் பலர் பிழைப்பில் மண்ணை போட்டு விட்டீர்கள். 🙂 வாழ்த்துக்கள்.. எந்த விஷயத்தையும் காண்டக்ஸ்ட் இல்லாமல், பிழையான அறிதலுடன், அடிப்படை ஹிந்து தத்துவமரபின் அறிவும் இல்லாமல் பார்ப்பது எத்தனை தவறென இக்கட்டுரை அழகாகக் காட்டுகிறது. மூளையுள்ளவன் புரிந்து கொள்வான் என நம்பலாம்.

    ஆனால் இந்த இஸம் சமாச்சாரம் கொஞ்சம் உதைக்கிறது. நாஸியிஸம், பாசிஸம், ரேசிஸம் என்கிற வார்த்தைகள் உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டில்தான். Monotheism, atheism, polytheism, monism, pantheism ஆகிய வார்த்தைகள் 19 ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்துள்ளன. அத்துடன் poverty, anxiety, ஆகிய வார்த்தைகள் எதிர்மறை பொருள் உள்ளவைதான். நியூட்ரலான பதங்களும் உள்ளன: gravity போன்றவை. எனவே இந்த ஆய்வு சரியா என்பது தெரியவில்லை.

  5. மிகவும் அருமயான விளக்கம் . வள்ளலார் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடயுமா?

  6. சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி

    என்று எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் ?

    பாமரஜீவன்

  7. // அத்துடன் poverty, anxiety, ஆகிய வார்த்தைகள் எதிர்மறை பொருள் உள்ளவைதான். நியூட்ரலான பதங்களும் உள்ளன: gravity போன்றவை. எனவே இந்த ஆய்வு சரியா என்பது தெரியவில்லை. //

    உண்மை. cruelty, brutality, banality ஆகிய வார்த்தைகளும் நினைவில் வந்தன. அதனால் தான் நேர்ம்றையோ எதிர்மறையோ “ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்க ity என்ற பதம் வழங்கும்” என்று எழுதினேன். அதாவது கிறிஸ்தவம் இயல்பானது, மற்ற மதங்கள் செயற்கையானவை என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

    // இந்த இஸம் சமாச்சாரம் கொஞ்சம் உதைக்கிறது. நாஸியிஸம், பாசிஸம், ரேசிஸம் என்கிற வார்த்தைகள் உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டில்தான். Monotheism, atheism, polytheism, monism, pantheism ஆகிய வார்த்தைகள் 19 ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்துள்ளன //

    ஓ… சரி. திருத்திக் கொள்கிறேன். இப்படி சொல்லலாமா? மைய நீரோட்ட கிறிஸ்தவம் தவிர மற்ற மதக் கொள்கைகளைத் தான் “இசம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இல்லையா?

    தவிர “இசம்” என்ற தனிச்சொல் பொதுவாக மட்டம் தட்டும், இழிவுபடுத்தும் தொனியிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.

    https://www.etymonline.com/index.php?term=-ism

    -ism

    suffix forming nouns of action, state, condition, doctrine, from Fr. -isme, from L. -isma, from Gk. -isma, from stem of verbs in -izein. Used as an independent word, chiefly disparagingly, from 1680.

  8. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

    இதற்கு என்ன பொருள் கூற போகறீர்கள் ஜடாயு.

    மனிதனை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்
    நாளடைவில் மதங்களாக, சமயங்களாக உருபெற்று
    நாளடைவில் அவற்றின் உண்மை சாரத்தை விட்டு
    ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி விட்டன.
    இது எல்லா மதங்களிலும் பொதுவான ஒன்றாக உள்ளது.

    எந்த நெறியின் சாரம் மனிதர்களை நெறிப்படுத்துமோ அவை
    சாரம் இழந்து சக்கைகள் மனிதர்களிடம் போற்றப்படுகின்றன.

    உலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவருமே மனிதர்களை
    நெறிப்படுத்தவே தாம் அடைந்த அனுபவங்களை தெரிவித்து சென்றார்கள்
    ஆனால் மனிதர்கள் அவர்கள் சொன்ன கருத்தை விட்டு
    தங்களுக்கு என்ன புரிந்ததோ அதை வைத்துக் கொண்டு
    உண்மையை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டார்கள்.

    சக மனிதரிடம். சக உயிர்களிடம் அன்பு செய்
    உலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை
    அனைத்து உயிர்களுக்கும் இந்த உலகம் சொந்தம்
    ஆகவே அனைவரையும் சமமாக பாவிப்போம்.
    இதுவே வள்ளலார் நமக்கு சொன்ன கருத்து.

    பாமரஜீவன்

  9. இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள்:

    ஆங்கிலத்தில் இருப்பதற்கு மாறாக, சைவம், வைணவம், சாக்தம் என்ற அதே தொனியில் “கிறிஸ்த*வம்*” என்ற மதத்தின் பெயரும் தமிழில் ஆக்கப் பட்டுள்ளது. இந்த ‘-வம்’ என்ற சொல் (’-துவம்’ என்ற சொல் போல) இயல்பான தன்மையைக் குறிக்கிறது. இது -ity, -ness ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானது.

    ’-வாதம்’ என்ற தமிழ்ச்சொல் தான் -ism என்ற சொல்லுக்கு நிகராகனது.

  10. // ’-வாதம்’ என்ற தமிழ்ச்சொல் தான் -ism என்ற சொல்லுக்கு நிகராகனது.//

    இயம் என்ற சொல்லும் “ism” என்பதற்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. முதலியம் – காபிடலிசம், மார்க்சியம் – மார்க்சிசம் etc..

  11. //sed as an independent word, chiefly disparagingly, from 1680//

    மிகச்சரியாக உங்கள் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.

  12. Pingback: Indli.com
  13. அருமை. பல விஷயங்களை நமக்கு யாராவது தப்பாவே சொல்லித் தந்து விடுவதால் அதையே சரின்னு நினைச்சுக்கறோம்.
    தெளிய வைத்ததற்கு நன்றி.
    உருவ வழிபாடு, ஜோதி வழிபாடு பற்றிய வள்ளலார் நிலைப்பாடு என்ன? அதையும் விளக்கினால் நல்லா இருக்கும்.

  14. இஸ்லாம், கிறிஸ்துவம், ஆபிரஹாமியம் அனைத்தும் இஸ்ரேலியர்களின் ஆதி வேதாகமத்திலிருந்து வந்தவை.
    ஆதி வேதாகமத்தில் இறைவன் பெயர் யெஹோவா ( யெஹ் வஹ்)
    ஆதம் ஏவல் தொடங்கி கிறிஸ்துவுக்கு முன்பு வரை உள்ள அனைத்து இறை தூதர்களும் இஸ்ரேலியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒன்றுதான்.கிறிஸ்துவத்தில் ஏசு நாதர் இறைவனின் மகனாக பார்க்கப் படுகிறார். ஆனால் இஸ்லாத்தில் ஏசு நாதர் ஈசா நபியாகவும், கடைசி நபியாக முகமது நபி மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படுகிறார். (நபி = இறை தூதர்)
    இந்த அனைத்து மதங்களுமே மனித நேயத்தை மட்டும் வலியுறுத்துகின்றன. (இந்த மதங்களில் உள்ள ஒரு சிலர் இந்த பூமியில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்காக படைக்கப் பட்டுள்ளன என்கின்ற கருத்து உள்ளவர்கள். மேலும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று நினைப்பவர்கள்.)
    இந்த மதங்கள் அனைத்துமே இறைவன் மேலானவன் நாம் அனைவரும் இறைவனின் சொல்லை கேட்காத ஆதி பாவத்தினால் வந்தோம் என்னும் நம்பிக்கையில் உள்ளவை.
    மறு பிறவியில் நம்பிக்கை இல்லாதவை.
    சுவர்க்கம், நரகம் எனும் நம்பிக்கை உள்ளவை.
    நித்ய வாழ்வு என்பது சொரக்த்தில் இறைவனோடு இருப்பதே என்று நம்புபவை.

    சன்மார்க்கம் என்பது அடிப்படையே அனைத்து ஜீவர்களிடமும் அன்பு செலுத்துவது.
    எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது.
    சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபே சன்மார்க்கம்.
    இங்கே உரு, உருஅரு, அரு என்னும் கடந்த நிலையே.
    இங்கும் அருட்பெரும் ஜோதி என்னும் ஓர் இறை கொள்கையே உள்ளது.
    எனினும் இறைவன் வேறு நாம் வேறு என்னும் நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆக முடியும் என்னும் நிலை உள்ளது.
    மேலும் சைவ சமயத்தின் சைவ சித்தாந்தம் புரிந்தவர்கள் சன்மார்க்க நிலைக்கு மேல் ஏற முடியும். ஒரு விதத்தில் சைவ சித்தாந்தம் சன்மார்க்கத்தின் படி என்றே சொல்லலாம்.
    வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயம் மற்றும் அனைத்து சமயங்களையும் விட சொன்னார் என்றால் சமயங்களில் சொல்லப்பட்ட ஒருமை நிலையை அடைவதற்கு பதில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறை நிலையினை உணராமல் போய் விடுவார்கள் என்பதனால்தான்.
    ஆக சைவ சமயம் சார்ந்தவர்களின் அடுத்த படி சன்மார்க்கம்.
    ஆகவே சைவ சமயத்தில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள்
    சன்மார்க்கத்தை பாதையாக தேர்ந்தெடுக்க வசதியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் சைவ சமயத்தவர்களால் சைவ சமயத்தோடு வைக்கப் பட்டுள்ளது.
    ஆனால் சன்மார்க்க பாதைக்கு வந்த பின்னர் அனைத்து சமயங்களில் இருந்தும் விடுபட்டு விடுவதனால் சன்மார்க்கிகள் சைவ சமயமோ அல்லது வேறு எந்த சமயமோ சார்வது இல்லை.
    வள்ளல் பெருமான் ஒரு போதும் தன்னை கடவுளாக சொல்லிக் கொண்டதில்லை. மேலும் அவரது உருவத்தை புகைப்படம் எடுக்க கூட அனுமதி அளிக்க வில்லை. அப்படி இருந்தும் ஒரு சில அன்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்தும் (எட்டு முறை)
    அவர் புகைப் படத்தில் விழவில்லை.
    பண்ருட்டி குயவர் ஒருவர் வள்ளல் பெருமானை போல் மண்ணினால் ஒரு சிலை செய்து வந்து அவரிடம் காட்டினார்.
    அந்த சிலையை பார்த்து பொன்னான மேனியை மண்ணாக செய்து விட்டாயே என்று உடைத்து விட்டார்.
    ஆகவே அவர் உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாடுபட்டார்.
    தன்னை துதி பாடுவதை என்றுமே அனுமதித்தது இல்லை.

    ஆகவே ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாம் மார்க்கத்திற்கும் வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

    நன்றி : https://nakinam.blogspot.com

    பாமரஜீவன்

  15. நல்ல விளக்கம் !! நன்றி

    //சமயங்களின் சமரசம்// அதே போல் இது குறுப்பிடுவது இதைத்தான்

    நால்வேதங்கள், சாங்கியம், யோகம், சைவம், வைஷ்ணவம் மற்றும் கௌமாரம், சாக்தம், சண்முகம்

    மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன்..

    நன்றி

    சஹ்ரிதயன்

  16. திரு.ஜடாயு அவர்களே நீங்கள் ism inity இதற்கு விளக்கம் குடுத்தது போதும் பாமரஜீவன் அவர்களின் மறுமொழிக்கு பதில் சொல்லவும் வள்ளல் பெருமானாரின் பெயரை ஆத்திகவாதிகளும் சரி நாத்திகவாதிகளும் சரி அவர் அவர்க்கு தெரிந்த கண்ணோட்டத்தில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி.

    சாதியும் மதமும் சமயமும் காணா
    ஆதியம் அனாதியாம் அருட்பெரும்ஜோதி. என்று கூறும் வள்ளல் பெருமானார் அதே சமயம் நாத்திகவாதத்தையும் ஏற்று கொள்ளவில்லை . மேலும்,
    நாத்திகம் பேசும் நாக்கு முடைநாக்கு நாறிய புண்ணாக்கு என்று நாத்திகர்களை கண்டிபதையும் சற்று பார்க்க வேண்டும் .

  17. 7-11-2010 ஞாயிறு
    நவம்பர் ஐந்தாம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் ஆறாம் நாள் சனிக்கிழமை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் விடுமுறை.எனவே ஞாயிறு நவம்பர் ஏழு காலை கடைத்தெருவுக்கு சென்று செய்தி தாள்கள் வாங்கி வந்தேன். வழியில் ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட நுழைந்தேன். அங்கு என் நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரை குசலம் விசாரித்து விட்டு , வேறு ஏதேனும் செய்தி உண்டா என்றேன். வேறு என்ன? சனிக்கிழமை காலை பேப்பரில் வழக்கமாக போடும் செய்தியை இந்தவார சனிக்கிழமை தீபாவளியை ஒட்டி லீவு என்பதால் ஞாயிற்று கிழமை பேப்பரில் போட்டிருக்கிறான் என்றார். என்ன செய்தி என்றேன்? உடனே தன் கையில் படித்துக்கொண்டிருந்த பேப்பரை என்னிடம் காண்பித்தார். அதில் பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் வழக்கம் போல ஷியா சன்னி முஸ்லிம்கள் மோதலில் ஒரு முஸ்லிம் தீவிரவாதி தற்கொலைப்படையாக மாறி , பெல்ட்டில் வெடிகுண்டுகளுடன் வெள்ளிக்கிழமை தொழுகையின் இறுதி சமயத்தில் வெடி வெடித்ததில் 71 பேர் உடனடி மரணம். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்னும் சிலர் தங்கள் இறுதி மூச்சை விட வாய்ப்பு உள்ளது.இது தான் அந்த செய்தி.

    நண்பர் சொன்னார். ஒவ்வொரு வாரமும் இதே போன்ற சன்னி- ஷியா மோதல்களினால் வெள்ளி க்கிழமை தொழுகையின்போது உயிர்ப்பலி ஏற்படுகிறது என்றார். இதுவரை இந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்களினால் மட்டுமே லட்சக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர் என்றார். ஒரே மத நூலை பின்பற்றுவோருக்கு இடையே ஏன் இதுபோல மோதல்கள் வருகின்றன ? அது அமைதியை விரும்பும் மதம் என்றுவேறு இங்கு சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே என்றேன்.

    அதற்கு நண்பர் சொன்னார் அவர்களது மத நூலில் ” கடவுள் நம்பிக்கையில்லாதவர்களை உடனே கொன்று விடு, உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு ” உருவங்களின் மூலம் இறைவழிபாடு செய்கிற காபிர்களை, அவர்கள் நம் மதத்துக்கு மாறிவர சம்மதிக்காவிட்டால், கொன்றுவிடு.உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” வேத புத்தகம் வைத்துள்ள பிற மதத்தவர்களை, நம் மதத்திற்கு மாறிவர அவர்கள் சம்மதிக்காவிட்டால் அவர்களை கொன்று விடு. உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” நம் மத வாழ்க்கை முறையை பின்பற்றி ஒரு ஊரில், அல்லது நாட்டில் வாழமுடியாவிட்டால், உற்றார் உறவினர் மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் என்று அனைவரும் அந்த ஊர் அல்லது நாட்டை விட்டு வெளியேறி வேறு ஊர் அல்லது நாட்டுக்கு சென்று விடுங்கள். அப்படி வெளியேறும்போது உங்களுடன் வர உங்கள் கணவன், மனைவி, குழந்தைகள் சம்மதிக்கா விட்டால் அவர்களையும் கொன்றுவிடு .உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லோரையும் தங்கள் மதத்திற்கு கட்டாயமாக மாற்றிவிடவேண்டுமென்று அவர்கள் முயல்வதன் காரணம் இதுதான் போலிருக்கிறது என்றார்.

    அது சரி, ஷியா, சன்னி, அகமதியா என்று பல பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்குவதன் மர்மம் என்ன? என்றேன். வேறு ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் தான் உயர்வாக மதிக்கும் தன்னுடைய மதத்தை, வன்முறை, அச்சுறுத்தல், ஆகியவற்றின் மூலம் பிறர் மீது திணிக்கும் போக்கினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரவருக்கு அவரவர் வழி என்று இல்லாமல், எல்லோரும் ஒரே மதத்தினை பின்பற்றவேண்டுமென்று சிலர் தவறாக ஆசைப்படுவதால் இந்த இழிநிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் செய்தித்தாள்களில் படிக்கும் சமயம், நம் மனதில் என்ன தோன்றுகிறது என்றால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பிறரை பயமுறுத்தியும், கொலைகள் செய்தும் தங்கள் மதத்தை பிறரிடம் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்பவர்களால், மனித இனத்துக்கே மதங்கள் வேண்டாம், எல்லா மதங்களையும் கைவிட்டு விடுவோம் என்று மத வாதிகளை குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிடுவார்கள். அந்த நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.” என்றார்.

    பிரதாப்

  18. // இதற்கு என்ன பொருள் கூற போகறீர்கள் ஜடாயு. //

    அன்புள்ள பாமர ஜீவன், கட்டுரையின் கடைசிப் பகுதியைப் பாருங்கள். நான் கூறவந்த கருத்தின் சாரம் அதுவே. நீங்கள் சொல்வதுடன் இயைவதாகவே அது உள்ளது.

    தூய அத்வைத நிலையில் கண்காணும் உலகம் (’ஜகத்’) முழுவதுமே நிறைநிலை அடைந்த ஞானிக்கு பொய்யாகவே தோன்றும். எனவே சமயம் மட்டுமல்ல அறநெறி, ஒழுக்கம், பாவ புண்ணியம் எல்லாமே கூட அங்கே மாயத் தோற்றங்களே. மோட்சம்/விடுதலை என்பது ”நல்லவன் ஆவது” அல்ல; தன்னைத் தான் உணர்ந்து, நன்மை, தீமை இரண்டையும் கடந்து செல்வதே – இது தான் வேதாந்த, சைவசித்தாந்த, வள்ளலார் நெறியாகும்.

    ஆனால், அதற்காக நடைமுறை வாழ்வில் நன்மை தீமை இல்லை என்று ஆகிவிடாது.. அருட்பெருஞ்சோதி அகவல் பாடிய வள்ளல் பெருமான் தான் குழந்தைகளுக்கு நற்பண்புகள் கற்றுக் கொடுப்பதற்காக மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலும் எழுதி அருளினார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

    வெறுமனே நற்பணிகள் செய்வது தான் வள்ளலார் போதித்தது என்றால் பிறகு வள்ளலாருக்கும் மதர் தெரசாவுக்கும் என்ன வித்தியாசம்? ஒருவர் நிறைநிலை அடைந்த ஞான பூரணர். மற்றொருவர் மதப்பிரசார சமூகசேவகர் மட்டுமே.

    // மனிதனை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் நாளடைவில் மதங்களாக, சமயங்களாக உருபெற்று நாளடைவில் அவற்றின் உண்மை சாரத்தை விட்டு ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி விட்டன //

    இந்த ஒரு சிலரின் சதி போன்றவை தத்துவ ரீதியாக ஏற்கக் கூடிய கருத்தல்ல, அது ஒரு பிரசாரம் மட்டுமே. வள்ளலார் போன்ற ஒரு ஞானி அப்படிக் கூறமாட்டார். ஏனென்றால் மனித மனதின் இயல்பே அது தான்.. காலப் போக்கில் எந்த நல்ல நடைமுறையும், ஆசாரமும் சீரழியவே செய்யும்,

    ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
    ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்

    என்கிறார் திருமூலர். .அதனால் தான் இந்து தர்மத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும் மீண்டும் ஞானியர் தோன்றுகிறார்கள். மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

    இப்பொதைக்கு இது போதும் என்று நினைக்கீறேன்.. வள்ளலார் பற்றி விரைவில் விரிவாகவே எழுதுவேன்.

  19. ஜடாயு

    வள்ளலார் மற்றும் நந்தனார் தங்களை நெருப்பில் அர்ப்பணம் / தூய்மை படுதிகொண்டனர் என்பது உண்மையில்லை என்றும் அவர்கள் மதவாதிகளால் தீக்கிரை ஆக்கப்பட்டனர் என்றும் சிலர் பிரசாரம் செய்கின்றனர்.

    சரியான நிலையை எடுத்துகூற முடியுமா ?

  20. Dear Author,
    I can see your limited knowledge about Vallalar. For you “His words of Sathi Madam looks to be maya while Madam enum bei looks to be Anavam”.

    Further, author reference to so called vadem for Vallar words can be only fun as Vallar never accepted vedam are good for human life. These so called vadem are contractions to each other and are against of human life. Research on vedam can reveal further how it is uesless.

    I can’t understand word of “tamilhindu”. I prefer a word which can unite the human race rather than bifurcating
    I can only request to all let us not try to disintegrate the human even does not work for integration.
    Word hindu not having origin of tamil then new word ‘tamilhindu’ derived.
    Requirement is not to divide.
    I believe this site does not sell mail address and make money. When I write in few of social site I can get many spam mails.
    Regards
    J. Kumaresan

  21. வள்ளலார் ஒரு நாள் ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னதாகவும் ,சில நாட்கள் கழித்து அவரது சீடர்கள் பயந்து போய்,அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும், அப்போது இருந்த வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து அறையின் பூட்டை உடைத்துப் பார்த்த பொது அறை காலியாக இருந்ததாகவும்நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
    விஷயம் தெரிந்தவர்கள் இது பற்றிக் கூறலாம் .

  22. வள்ளலார் சொல்ற மாதிரியே நடக்குறது போல கட்டுற வெளியிட்டு இருக்கீங்க. அவர் கடவுளுக்கு உருவம் இல்லை அவர் ஒளிவடிவானவர் நு சொன்னார் ல. நீங்க follow பண்றீங்களா. பொணத்த எரிக்கக்கூடாது பொதைக்கணும் நு சொல்லி இருக்காரு அத சைரீங்கலா.வுங்களுக்கு தேவானந்தா மட்டும் எடுத்துக்குறது மத்தத விட்டுர்றது.இப்ப கரெக்டா கமெண்ட் அனும்சாலும் போடறது இல்லையே நீங்க ஏன் பயமா.

  23. ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
    பலவென் றுரைக்கிற் பலவேயாம்
    அன்றே யென்னின் அன்றேயாம்
    ஆமே யென்னின் ஆமேயாம்
    இன்றே யென்னின் இன்றேயாம்
    உளதென் றுரைக்கின் உளதேயாம்
    நன்றே நம்பி குடிவாழ்க்கை
    நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

  24. Mr.Vairamuthu has written a article about “VALLALAR” in Thinamani.In that article he has spoken ill of Hinduism at length.Hinduism is comparable to worn out cloth – he us audacious in his coments.

    It should be properly challenged.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *