ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2

வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை.

(முந்தைய பாகத்தின் தொடர்ச்சி…)

மஞ்சள் நிறம்:

மஞ்சள் பத்திரிகை என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய அதிகாரத் தரகர்களான ஊடக அறிஞர்களைக் காணும்போது வானவில்லில் தோன்றும் மஞ்சள் நிறம் நினைவில் வந்தால் அதற்கு வானவில் பொறுப்பில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு உள்ள தொடர்புக்கு சிறிதும் குறைவில்லாதது பத்திரிகையாளர்களின் தொடர்பு. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின் மன்மோகனார் ஆட்சி அமைக்கும் முன்பு நடந்த அதிகாரத் தரகு வேலைகளில் ஊடக ஞானிகளான வீர் சாங்க்வி, பர்கா தத் ஆகியோர் பங்கேற்றது நீரா ராடியா ‘டேப்’ வாயிலாக வெளியாகி சந்தி சிரிக்கிறது.

spectrum_mediaஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து 2008 முதலாகவே, நாட்டுப்பற்றுள்ள சில ஊடகங்களால் ‘புலம்பப்பட்டு’ வந்துள்ளது. ஆயினும், ஊழல்கறை படிந்த ஆண்டிப்பட்டி ராசாவையே மீண்டும் அதே தொலைதொடர்புத் துறைக்கு அமைச்சராக்க ஊடக மேதாவிகள் சிலர் நடத்திய தொழில் துஷ்பிரயோகம் நாட்டுக்கு செய்துள்ள தீங்கு சாதாரணம் ஆனதல்ல. கடந்த 2 ஆண்டுகளாக வீர் சாங்க்வியின் ஹிந்துஸ்தான் டைம்சும், பர்கா தத்தின் என்டிடிவியும் வெளியிட்ட செய்திகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்தித்துப் பார்த்தால், அந்த செய்திகளை உண்மையென்று நம்பிய மக்களுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது. ஆனால், தரகு வேலை செய்த அதிபுத்திசாலிகள் எதுவுமே நடக்காதது போல இப்போதும் செய்தி வாசிக்கிறார்கள்.

இப்போதும்கூட, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டது என்று கை கூசாமல் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. முன்னாள் பத்திரிகையாளரும் தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவருமான அருண் ஷோரி இதற்கு அற்புதமான பதில் கொடுத்திருக்கிறார். கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை 2001 முதல் நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய கருத்தை வரவேற்ற அவர், ”அலைக்கற்றை விநியோகம் தொடர்பாக 1998 முதலாகவே கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை நடத்தலாம். அப்போது தான், ராசா கூறிவரும் ‘முந்தைய நடைமுறையையே கடைபிடித்தேன்’ என்ற பித்தலாட்டம் அமபலமாகும். விசாரணைக் குழு முன் ஆஜராக நான் தயாராகவே இருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எப்படி அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன என்பதை விளக்க நான் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் ராசா எந்த முன்னுதாரணத்தையும் பின்பற்றவில்லை. எந்த விதிமுறைகளையும் மதிக்கவில்லை என்பது அப்போதுதான் வெளிப்படும்” என்று கூறி இருக்கிறார்.

கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி.) விசாரணையை எதிர்க்கட்சிகள் கோருவதே பிரதமர் மன்மோகன் சிங்கை கூண்டில் ஏற்றும் நோக்கத்துடன் தான் என்று சில காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் என்ன தவறு? ஊழல் செய்த மத்திய அமைச்சரை ஒன்றரை ஆண்டுகாலம் போஷித்த பிரதமரை கேள்வி கேட்காமல் தெருவில் செல்பவரிடமா விசாரிக்க முடியும்? ராசா விவகாரத்தில் பல பல்டிகளை அடித்த மன்மோகன் சிங்கிடம், அந்த பல்டிகளுக்கு காரணம் யார் என்று கேட்பது தானே விசாரணை நிறைவடைய உதவும்? ”மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை ஜே.பி.சி. விசாரணைக் குழு முன்பு ஆஜரானவர் தானே?’’ என்று அருண் ஷோரி கேட்டிருக்கிறார். எப்போதும் வாயாடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களிடம் இதற்கான பதிலில்லை.

இப்போதும்கூட, அருண் ஷோரியை பா.ஜ.க.வுக்கு எதிராக கிளப்பிவிட முயற்சிகள் நடக்கின்றன. கரண் தாப்பரின் அண்மைய ‘டெவில் அட்வகேட்’ நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள், ராசா விவகாரத்தை அமுக்க நடத்தப்பட்ட நாடகமே. அதற்கு, அனுபவசாலியான ஷோரியே பலியாகி விட்டதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் யார் பேசுவது என்பதை நீரா ராடியா தீர்மானம் செய்ததாக கரண் தாப்பர் உறுதிப்படுத்த முயன்றார். கட்சி மீது சிறு அதிருப்தியில் இருப்பவரை மேலும் சொறிந்து, பிரச்னையை திசைதிருப்ப அவர் முயன்றார். ஆயினும், அதில் கிளம்பிய பரபரப்பால் ராசா விவகாரத்தை கரண் தாப்பரால் நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியவில்லை.

வீர் சாங்க்வி, பர்கா தத் மட்டுமலாது, மேலும் பல ஊடகவாதிகள் ராசா விஷயத்தில் வெளிப்படாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உதாரணமாக, தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, ராசா விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டபோதும், மிக மிக அடக்கமாக, ராசா பெயரையே குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டது. இப்போது பிரச்னை பெரிதாகிவிட்டவுடன், ராசாவை கடுமையாகத் தாக்கி செய்திகள் வெளியிட்டு, பிராயச்சித்தம் செய்கிறது அந்தப் பத்திரிகை. இதே போன்ற நிலையை நாடு முழுவதிலும் காண முடிகிறது. இப்போது அதிர்ச்சிகரமான தலைப்புகளுடன் ‘ராசா’ செய்தியை வெளியிடும் பல தமிழ் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊழல் வெளிப்பட்ட ஆரம்பக் காலத்தில், யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்பதுபோல கண்டுகொள்ளாமல் இருந்தவைதான்.

cbi-raidsஇப்போதும்கூட, ஊடக அறிஞர்கள் என்ற பெயரில் தி.மு.க. சார்பு பத்திரிகையாளர்கள் (இதில் முன்னணி வகித்த பாதிரியார்(?) ஜெகத் கஸ்பர் வீட்டிலும், கடைசி நேரத்தில் பரபரப்பு செய்தி வெளியிடும் ‘நக்கீரன்’ காமராஜ் வீட்டிலும் டிச 15 அன்று சி.பி.ஐ. சோதனை நடத்தியிருக்கிறது) ‘ராசா மீது நடவடிக்கை எடுக்க, அவர் தலித் என்பதுதான் காரணம்’ என்று பசப்பித் திரிகிறார்கள். மஞ்சள்துண்டு மகானுக்கு அடிமையான மஞ்சள் பத்திரிகையாளர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது?

ஆரஞ்சு நிறம்:
வானவில்லின் நிறங்களில் எதிரிடையான நிறம் கொண்டது ஆரஞ்சு. மத்திய ஊழல் கூட்டணி அரசை எதிர்த்துப் போராடும் பா.ஜ.க. போல. ஊழலுக்கு காரணமானவர்கள் போலவே ஊழலை வெளிப்படுத்தியவர்களும் வானவில்லின் வண்ணங்களாக மிளிர்கின்றனர். உண்மையில், பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ராசா விவகாரத்தை மூடி மறைக்கும் சாகசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பட்டிதொட்டி எல்லாம் பரவிவிட்டது. பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் களமிறங்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே சில கட்சிகள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க, வானவில் விவகாரத்தில், காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் முக்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வுடனும் கூட காங்கிரஸ் கட்சியால் நிம்மதியாக உரையாட முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் தங்கள் மீதான புகார்களை நாசூக்காக திசை திருப்ப முயன்றனர். தே.ஜ.கூட்டணி ஆட்சியிலேயே முறைகேடுகள் துவங்கிவிட்டன என்று நடந்த பிரசாரத்தை மீறி, பா.ஜ.க. ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்காக, நாடாளுமன்றத்தை முடக்கவும் பா.ஜ.க. தயங்கவில்லை. இதனால், குளிர்காலக் கூட்டத் தொடரில், மொத்த நாட்களான 23 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.

இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக புலம்பிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு, யாரேனும், முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறையை நினைவுபடுத்தினால் நல்லது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ன ஊழல் செய்தாலும் கண்டுகொள்ளாமல், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியிடம் பிரதமர் எதிர்பார்க்கிறாரா?

பா.ஜ.க மட்டும் ஒழுங்கா என்று கேட்டு திசை திருப்புகிறார் அந்தோனியோ மைனோ (அதாங்க, சோனியா காந்தி) பங்காரு லக்ஷ்மணன் லஞ்சம் வாங்கியது, கர்நாடகாவில் நடந்துள்ள ஊழல் குறித்து கூறும் சோனியா, என்ன சொல்ல வருகிறார்? காங்கிரஸ் ஊழல் செய்யவில்லை என்றா? அல்லது, பா.ஜ.க.வுக்கு அதை சுட்டிக்காட்ட தகுதி இல்லை என்றா? அல்லது ஊழல் ஒரு பெரிய விஷயமில்லை என்றா?

எது எப்படியாயினும், பங்காரு லக்ஷ்மணன் மீது எடுத்த நடவடிக்கை போல எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காதது, பா.ஜ.க.வை குற்றம் சாட்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், பேருந்தில் ஜேப்படி செய்து சிக்கிய திருடனும், பல லட்சம் கோடி அரசுப் பணத்தை கபளீகரம் செய்த அதி புத்திசாலிகளும் ஒரே தராசில் நிறுத்தப்படக் கூடாது என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர். தன் மீதான புகாரை அடுத்து முறைகேடாக ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு நிலத்தை திருப்பி அளிக்க எடியூரப்பா முன்வந்தார். அதன்மூலமாக தனது தவறை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த மனசாட்சி ராசாவிடமோ, நாட்டின் ராசாவிடமோ, ‘ராணி’யிடமோ நாட்டின் ராணியிடமோ இல்லையே?

வாஜ்பாய் ஆட்சி மீது குற்றம் சாட்டினால் பா.ஜ.க. அமைதியாகிவிடும் என்று தப்புக் கணக்கு போட்ட ராசா, சோனியா, கருணாநிதி. டாடா உள்ளிட்டோருக்கு, பா.ஜ.க.வின் முனைப்பு முன்னைவிட அதிகரித்திருப்பது கிலி ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஆளும் கட்சி சார்பான இந்த விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அரசு உணர்ந்துகொண்டது. நாடாளுமன்றத்தில் ஆணவப் போக்குடன் நடந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் கற்பிக்க நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன் தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இதுவிஷயத்தில் தங்கள் கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சிகளின் ஆதரவை சேகரிப்பதிலும் தே.ஜ.கூ. வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக ‘பாமாயில் ஊழல் புகழ்’ பி.ஜே.தாமசை நியமிக்க பா.ஜ.கவின் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த எதிர்ப்புக்கு நல்ல பலன் இப்போது கிடைத்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வீசும் கேள்விக்கணைகளுக்கு பதில் கூற முடியாமல் மத்திய அரசு தடுமாறுவதை நாடே வேடிக்கை பார்க்கிறது. வேறு வழியின்றி, ‘ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையிலிருந்து விலகி இருப்பதாக’ பி.ஜே.தாமஸ் உச்சநீதி மன்றத்தில் விளம்பி இருக்கிறார். ஆயினும் அவரை பதவியில் இருந்து விலக்காமல், சோனியா அடிவருடியான பிரதமர் அமைதி காக்கிறார்.

bjpleaders

ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தியதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, அருண் ஷோரி, ரவி சங்கர் பிரசாத், சரத் யாதவ் ஆகியோருக்கு பெரும் பங்குண்டு. இவர்கள் மீதான நல்லெண்ணம் நாட்டில் நிலவுவதன் காரணமாகவே, காங்கிரஸ் கிளப்பிய அவதூறு பிரசாரம் வலுவிழந்தது. ஆயினும், பா.ஜ.க, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணமாகக் கொண்டு மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என பா.ஜ.க. விரும்பவில்லை என்று அத்வானி கூறி இருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தலாம். ஆனால், இப்போது இந்த ஆட்சியைக் கவிழ்க்காவிட்டால் வேறு எப்போது கவிழ்ப்பது? பெருந்தன்மையைக் காட்ட வேண்டிய இடத்தில் மன்மோகனோ அவரது தலைவியோ இல்லை. உண்மையில், இந்த ஊழலின் ஆணிவேர் ராசாவிடம் இல்லை. அதன் வேர்மூலத்தைத் தோண்டினால், காங்கிரஸ் தான் காயம் படும். அந்த வாய்ப்பை பா.ஜ.க விட்டுவிடக் கூடாது.

மன்மோகன் சிங் நல்லவர் என்று ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் நடத்திவரும் பிரசாரத்தை பா.ஜ.க தொடரக் கூடாது. ராசா விவகாரத்தில் இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றியது பிரதமரின் குற்றம். அதற்கான பலனை அவர் அடைந்தே தீர வேண்டும். நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் கூறும் காரணம் ‘நிர்பந்தம்’ எனில், நாட்டிற்கு தலைமை தாங்கும் தகுதியை அவர் இழக்கிறார். தெரிந்தே ராசாவை ஆதரித்ததால் அவர் கூட்டுக் களவானியாகவும் ஆகிறார். அவரை பதவியில் இருந்து அகற்றாமல் அரசியல் நாகரிகம் பார்ப்பது பா.ஜ.க.வின் வேலை அல்ல.

சிவப்பு நிறம்:

அபாயத்தின் அறிகுறி என்றுமே சிவப்புத் தான். வானவில்லில் உள்ள அதிக அலைநீளம் கொண்ட நிறமும் சிவப்பே- ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு அபாய எச்சரிக்கை செய்து உதவிய நீதிமன்றங்கள் போல. நீதிமன்றங்களின் தலையீடு மட்டும் இல்லையென்றால், வானவில் ஊழலில் பல லட்சம் கோடி நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்திய சதிகாரர்கள் எந்த குற்ற உணர்வும் இன்றி மாபெரும் தியாகியர் போல நாட்டில் இன்றும் உலவிக் கொண்டிருந்திருப்பார்கள்.

dr_swamy

முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிலவும் முறையற்ற நடைமுறைகளை பிட்டுப் பிட்டுவைத்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம் தான். சுப்பிரமணியம் சாமி தொடர்ந்த வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய ஊழல் அரசை கிழி கிழியென்று கிழித்தது உச்சநீதி மன்றம். நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் இன்று என்ன சொல்லப் போகிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் நிலைக்கு மத்திய அரசு ஆளானது. மத்தியப் புலனாய்வுத் துறையின் பசப்பல்களுக்கு ‘நறுக்’ என்று கொட்டு வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ”நாங்கள் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கிறீர்களா?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

”இன்னும் ஏன் ராசாவிடம் விசாரணை செய்யவில்லை? ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? ஊழல் புகாருக்கு ஆளான தாமசால் எப்படி நியாயமான முறையில் விசாரணையை வழிநடத்த முடியும்? நீரா ராடியா ‘டேப்’ வெளியானது எவ்வாறு தவறாகும்? பிரதமரின் யோசனைப் புறந்தள்ளி ராசா அவமதித்துள்ளார்; அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அலைக்கற்றை ஒதுக்கீடுகளை ஏன் ரத்து செய்யக் கூடாது? ” போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலமாக நாட்டின் மனசாட்சியாகத் திகழ்கிறது உச்சநீதிமன்றம். தில்லி உயர்நீதிமன்றமும் சளைக்கவில்லை. இதே போன்ற கேள்விகளால், மத்திய அரசின் ஆணவப் போக்கையும் ஊழலை மறைக்கும் சதிகளையும் இரு நீதி மன்றங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.

அதன் விளைவாகவே, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டி வந்தது. ராசா வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்த வேண்டிவந்தது. ராசாவின் செயலர் கைது செய்யப்பட்டதும், நீரா ராடியாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும், நீதிமன்றத்தால் தான் சாத்தியமானது. நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான போர்க்குரலை வெளிப்படுத்திய காரணத்தால்தான், அதனை ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அடுத்தகட்ட விசாரணைகளில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிப்படப் போகின்றனவோ, தெரியவில்லை. ஒருவகையில் அவை நாட்டிற்கு அவமானம் தான் என்றாலும், அவை அனைத்தும் நாட்டிற்கு நன்மையே அளிக்கும். ஏனெனில் வெட்கப்பட்டு வேதனைப்பட வேண்டியவர்கள் புனிதர்களாக நடமாடும் நாட்டில், நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியதாகி விடுகிறது.

ஆண்டிமுத்து ராசாவின் ”முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் விற்பனை நடந்து” என்ற தொடர் புழுகால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ”அவ்வாறெனில், 2001 முதலாகவே மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தட்டும். அப்போது உண்மை வெளிப்படும்” என்று காட்டமாகவே கூறினர். அதையடுத்து, அவசர அவசரமாக, தனி நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனை மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. ஆயினும், இது விசாரணையை மேலும் ஒத்திப்போட நடத்தப்படும் நாடகமே என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உச்சநீதி மன்றத்தின் கண்டிப்புக்கு அஞ்சி, அலைக்கற்றை மோசடியில் தொடர்புடைய 85 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தொலைதொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அநேகமாக பல மோசடி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் அரண்டுபோய் உள்ளன.
மத்திய அமைச்சர் ராசா எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் (டிச. 15 நிலவரம்) ஏற்பட்டுள்ளதற்கும் உச்சநீதி மன்றத்திற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஏலகிரி சென்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் (டிச. 13) தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியுடன் நிழலாகத் திரிந்த ராசா எங்கிருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருப்பதும், அதனால் மாறன்கள் நிம்மதி அடைந்திருப்பதும், உச்சநீதி மன்றத்தின் சாதனைகள்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த காலத்தில் அரசை நிலைகுலையவைக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டு நாட்டை உலுக்கிய நீதிமன்றங்களும் கூட, ‘பிரதமர் நல்லவர்’ என்ற புராணம் பாடுவதைத் தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இது வஞ்சப் புகழ்ச்சி அணியாக இருக்கக் கூடும்.
நீரா ராடியா ‘டேப்’ வெளியானது எப்படி என்றும் மத்திய அரசை குடைந்திருக்கிறது நீதிமன்றம். இதனாலும் மத்திய அரசிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகருக்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதுவும் மூடுமந்திரமாகிவிடக் கூடாது என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
வானவில் ஊழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ உச்சநீதி மன்றமே காரணமாகி உள்ளது. இதனை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதால் மத்திய அரசின் வேடம் கலைந்துள்ளது. அதன் மூலமாக 2-ஜி ஊழலில் பின்னணியில் இருப்பவர் ‘ராசா’ஜி மட்டுல்ல என்பதும், அரசை ஆட்டுவிக்கும் மாபெரும் ‘ஜி’ தான் அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதும் புலப்படத் துவங்கி உள்ளன.

வானவில்லின் நிறங்கள் ஏழாயினும் அவை அனைத்தும், ஒரே நிறமற்ற ஒளியின் நிறப்பிரிகைகளே என்பது விஞ்ஞான உண்மை. மழை மேகமூட்டம் மறைந்து சூரியனின் முழுக் கதிர்வீசும் வெளிப்படும்போது வானவில்லின் வண்ணங்கள் அனைத்திற்கும் அடிப்படையான- ஒளிச்சிதறலின் ‘மூலம்’ வெளிவரும். அப்போது தான், வானவில் ஊழலுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.

(முற்றும்)

16 Replies to “ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2”

  1. 2G அலைக்கற்றை ஊழல் இந்த நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் சில பெரிய தலைகளைக் காப்பதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு புதிய பிரச்சினையை எழுப்புகிறது. மத்திய பிரதேச மக்களால் தூக்கி எறியப்பட்ட திக்விஜய சிங்கும், அரசியல் அனுபவமோ அல்லது நிர்வாக அனுபவமோ சிறிதுகூட இல்லாத விளையாட்டுப் பிள்ளை ராகுல் எனும் இளைஞனின் துடுக்கத்தனப் பேச்சும், அரசியல் நாகரிகமோ அல்லது யார் குறித்து என்ன பேசவேண்டும் எனும் அடிப்படை மரியாதையோ, ஆங்கில மொழியில் எந்தச் சொற்களை கவுரமான மனிதர்களுக்கு எதிராகப் பேசக்கூடாதோ, அவைகளைப் பேசி தனது அரசியல் அரிச்சுவடித் தனத்தைக் காண்பித்து வரும் சோனியா இவர்களெல்லாம் தான் இந்த நாட்டை குட்டிச்சுவராக ஆக்கப் புறப்பட்டிருக்கும் புதிய சீரழிவுச சக்திகள் . இவர்களைக் குப்பையில் வீசி எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்திய மக்கள் அறிவாளிகள். யாரை நம்புவது, யாரைத் தூக்கி வெயிலில் போடுவது என்பது அவர்களுக்குத் தெரியும். 1977 இவர்களுக்கு மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை.

  2. சேக்கிழான்

    அபாரமான ஒப்பீடுகள். ஸ்பெக்ட்ரம் வருவதே சூரிய ஒளியில் இருந்துதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்களும் சூரியனைச் சின்னமாக வைத்திருக்கும் கட்சியில் இருந்துதான். இப்பொழுது செய்யப் பட வேண்டியவை:

    பா ஜ க வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போர்க்கால அடிப்படையில் எமர்ஜென்ஸி காலத்தில் ஜே பி கூட்டிய படை போல நாடு முழுவதும் அவசரகால கூட்டங்கள் நடத்த வேண்டும்

    தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஜனங்களைக் கவர்ந்து அவர்களிடம் இந்த ஊழலை எடுத்துச் சொல்லும் நாடகங்கள் நடத்தப் பட வேண்டும். சுவரொட்டிகள், இதை விளக்கும் பெரிய பெரிய கார்ட்டூன் ஓவியங்கள் தெருமுக்குகளில் சந்தைகளில் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப் பட வேண்டும். பிட் நோட்டீஸ்கள் அடித்து விநியோகிக்கப் பட வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன இழப்பு என்பதை விளக்க வேண்டும்.

    உடனடியாக பி ஜே பி டி வி ஒன்றைத் துவக்க வேண்டும். கடும் பிரச்சாரம் செய்ய வேண்டும்

    தினமும் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து சிறை செல்ல வேண்டும்

    அத்வானி, ஜெய்ட்லி முதல் லோக்கல் தலைவர்கள் வரை பாராளுமன்றத்தின் முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் அனுஷ்டிக்க வேண்டும்

    பத்திரிகைகளில் தினமும் அனல் பறக்கும் அறிக்கைகளையும் பேட்டிகளையும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு கணம் கூட ஓயக் கூடாது

    திருட்டுப் போன மொத்தப் பணமும் திருப்பிக் கொண்டு வரப் பட வேண்டும். அமெரிக்காவில் மடாஃப் என்பவன் பங்குச் சந்தையில் ஏமாற்றித் திருடிய பணத்தை அவன் வீடு, நிலம், கார் என்று அனைத்தையும் விற்று மக்களுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல ராஜாக்களின் ,சோனியாக்களின், மன்மோகன்களின், கருணாநிதிகளின், கனிமொழிகளின் கடைசி செருப்பு, வேட்டி, புடவை முதல் கொண்டு பிடுங்கப் பட்டு விற்கப் பட்டு கொள்ளை போன பணத்தை மீட்டு நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

    இதைச் செய்வது வரை பி ஜே பி உறங்கக் கூடாது உண்ணக் கூடாது. ஜெயலலிதா இதை விடக் கடுமையாகப் போராட வேண்டும். இந்நேரம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்தப் பிரச்சாரம் சென்று அடைந்திருக்க வேண்டாமா?

    மொத்தத்தில் எதிர் கட்சிகளின் நடவடிக்கை போதுமானவையாக இல்லை திருப்தியாக இல்லை. இவர்கள் இப்படி இருந்தால் இதற்கு மேலும் பெரிய கொள்ளை நடக்கும். இப்பொழுது விஷயத்தை இந்துத் தீவீரவாதம் என்று சொல்லி திசை திருப்புகிறார்கள்

    தமிழ் ஹிந்துவில் வந்த விஸ்வாமித்ராவின் கட்டுரைகளும், சேக்கிழான் கட்டுரைகளும் அச்சடிக்கப் பட்டு நோட்டீஸ்களாக மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக வழங்கப் பட வேண்டும். இதை அதிமுக போன்ற கட்சிகளின் தொண்டர்கள் செய்ய வேண்டும். எமர்ஜென்ஸி முடிந்தவுடன் இதையெல்லாம் செய்துதான் இந்திராவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிந்தது. இப்பொழுது அதை விட பயங்கரமான அபாயம் இந்தியாவைச் சூழ்ந்துள்ளது. என்ன செய்யப் போகின்றன எதிர்க் கட்சிகள். பற்றி எரிய வேண்டாமா அவர்களது போராட்டங்கள்? நீங்கள் இங்கு எழுதுவதன் மூலம் இணையத்தில் படிக்கும் சிறுபான்மையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையினைச் செய்து விட்டீர்கள். அது போதாது கட்சிகள் ஆக்ரோஷமாகச் செயல் பட வேண்டும். சுப்ரமணியன் சுவாமியின் வழக்குகளை மட்டும் நம்பிக் கொண்டிராமல் எதிர்க் கட்சிகள் கடுமையாகப் போராட வேண்டும். நீதி கிடைக்கும் வரை, கொள்ளை போன பணம் திரும்பிப் பெறப் படும் வரை போராட வேண்டும்

    அன்புடன்
    ச.திருமலை

  3. காங்கிரஸ் காரர்கள் பதவியில் இருந்தால் மட்டும்தான் துள்ளுவார்கள். மகாத்மா காந்தி இதை எதிர்பார்த்தார். இந்திய சுதந்திரம் நிச்சயம் என ஆன பின் காந்தியடிகள் பயந்தார். கிடைத்த சுதந்திரத்தை இந்த காங்கிரசார் எப்படியெல்லாம் சீரழிப்பார்களோ என்று நினைத்துத்தான் காங்கிரசை கலைத்து விடலாம், அதன் பயன்பாடு சுதந்திரத்தோடு முடிந்துவிட்டது என்றார். ஆனால் நேருவுக்கு மட்டும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. உலகில் பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் பதவி ஆசையும், பணத்தாசையும், சொத்து சேர்க்கும் ஆசையும் சேர்ந்து கொண்டு இவர்களை யார்கூட வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளத் தூண்டியது. அப்படி ஏற்பட்டது தான் திமுகவுடனான கூட்டு. பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும் மலம் தின்னும். காங்கிரஸ் இன்று தன கூட்டாளிகளைவிட மோசமான ஊழல் வாதிகளாயினர். அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பது வெளியானால் சிலர் இந்த நாட்டை விட்டுக்கூட ஓட வேண்டியிருக்கும். ஓடி விடுவார்கள். 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் இதில் அறுபது சதம் யாருக்கு? முப்பது சதம் யாருக்கு, மீதி பத்து சதம் யாருக்கு? விடை தெரிந்தால், மத வாதமோ, ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதம், இந்து பயங்கர வாதம் எனும் பேச்செல்லாம் மறைந்து போகும். ஜால்ராக் கூட்டம் பொந்துக்குள் பொய் ஒளிந்து கொள்வார்கள். அந்த நாள் வரத்தான் போகிறது. அன்று பார்ப்போம் இந்த திக் விஜய் சிங், பிரணாப் முகர்ஜி எனும் மக்கள் பலம் இல்லாத ஒரு தலைவன் இவர்களெல்லாம் என்ன ஆகிறார்கள் என்று . பார்ப்போம்.

  4. நிஜமாவே தலையும் சுத்துது. இப்படிப்பட்ட கேடு கேட்ட பசங்க நாட்டை ….ச்சே

  5. //மஞ்சள்துண்டு மகானுக்கு //

    தயவு செய்து இந்த வார்த்தையை மாற்றவும் !!! கேடு கேட்ட அரசியல் வியதியதியை குறித்து வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீர்த்து போக வேண்டாம் !!

    மற்றபடி மேலும் உங்கள் எழுத்துக்களை படிக்க காத்திருக்கிறேன் மீடியாவின் பச்சோந்தி தனத்தை வெளிக்கொணர்ந்தது மிக்க நன்றி !!! முடிந்தால் தேதிவாரியாக எப்படி அவர்கள் அதை தவிர்த்தார்கள் (பெயரையும் குறிப்பிடுங்கள் ) அந்த பத்திரிகை வாசிப்பவர்களுக்கு விழிப்பாக இருக்கட்டுமே!

    நன்றி

    சஹ்ரிதயன்

  6. JPC கண்டிப்பாகத் தேவை என்பது காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷுங்க்லு கமிட்டி விசாரிக்கும் முறையிலே தெரிகிறது. (https://hmsjr.wordpress.com/) இவர்களை விட்டால் 2G ஏலத்தில் ஊழலே இல்லை என்று ஊத்தி மூடிவிடுவார்கள்.

  7. //எது எப்படியாயினும், பங்காரு லக்ஷ்மணன் மீது எடுத்த நடவடிக்கை போல எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காதது, பா.ஜ.க.வை குற்றம் சாட்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், பேருந்தில் ஜேப்படி செய்து சிக்கிய திருடனும், பல லட்சம் கோடி அரசுப் பணத்தை கபளீகரம் செய்த அதி புத்திசாலிகளும் ஒரே தராசில் நிறுத்தப்படக் கூடாது என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.//

    சேக்கிழான் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் குருமூர்த்தி எழுதிய ஜேப்படி எடுத்துக்காட்டை ஜேப்படி அடித்துள்ளீர்கள். ஊழலில் எள் முனையளவு கூட சமாதானம் செய்ய இயலாது. பாருங்கள்! தனி மனிதராகவும் எக்ஸ்ப்றேச்சொடு இணைந்தும் போபோர்ஸ் ஊழலை எதிர்த்துப் போராடிய குருமூர்த்தி. எடியுரப்பா போன்ற ஜெப்படிக்குட் துணைபோக வேண்டிய நிர்பந்தம். முப்பதாண்டு காலத்திற்குள்ளாக இந்த வீழ்ச்சி.
    இன்றைய செய்திப்படி சோனியா காங்கிரஸ் அளவிற்காவது ஊழலை எதிர்க்க சவால் விடுகிறார். என்னே நம் துரதிர்ஷ்டம்.
    மேலும் ஜாதியை மீறி பீகாரில் வெற்றி பெற்றதாக கூவும் பா ஜ க எடியுரப்பாவின் ஜாதி அரசியலிற்கு சாமரம் வீசுகிறது. வெட்கக்கேடு.

    நீதிமன்றம் ஒன்றுதான் ஆறுதல். இல்லையேல் வரும் தேர்தலில் வாக்கு விலையை ஏற்றவேண்டியதுதான்.

    பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை போபர்ஸ் ஊழலையும் விசாரித்தது.
    கையில் மிஞ்சியது ஏதுமில்லை.
    மகேசன் தீர்ர்ப்பு எப்படியோ!!

  8. The congress has hoodwinked the oppositin and the public by not allowing the formation of JPC and by adjourning thr parliament every day.The PM is the creature of the Parliament and he is not above the law.He could have diffused the situation by offering to be examined under commisiion by the Supreme court if as he says “nothing to hide”Kapil Sibal acts more like a defence counsel and not as a responsible cabinet minister.Even before the Supreme court decides the case he has ordered action against the companies who were granted the licences.This is nothing but intimidating and prevent them from telling the truthhe.Ishe notobstructing justice?Mrs.GAndhi.s outburst against BJP and other satellites in the Congress trying ti throw muck on the Sang Parivar is only to obfuscate the issue .create a feeling of insecurity and go for midterm elections in which a terrified aam admi expected to vote for them
    A.T.Thiruvengadam

  9. காங்கிரஸ்காரங்களுக்கு வெட்கம்,மானம், சூடு, சொரணை எல்லாம் போய் வெகு வருஷங்கள் ஆகின்றன. இதற்கு, மன்மோஹன்சிங் மட்டுமே போதும், ஆதாரம் காட்ட. இவர்களின் அரசியல் பாணி நேரானதல்ல, நேர்மையானதும் அல்ல. திமுக உடன் சேர்ந்தவுடன், கெடுவைக்கும் உத்திகளையும், பணயம் கேட்கும் வேலைகளிலும் இறங்கி, மானத்தை விற்றுப் பிழைக்கும், தங்கள் சொந்த மானத்தையல்ல, இந்தியத் திருநாட்டின் மானத்தை விற்றுப் பிழைக்கும் கேவலமான தொழில் முறையில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு பல வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்த அழகு, மோகன்தாஸ் சொல்லை மீறி, கட்சி நடத்தி, கடைசியில், கட்சியின் சுதந்திரத்தை, ஒரே ஒரு வெள்ளைக்காரியிடம் இழந்து நிற்கின்றதிலிருந்து தெரிகின்றது. அன்டனியோ மைனோவே இதற்கு சாட்சி. கருணாநிதியையும் ஸ்பெக்ட்ரம் ஊழலையும், தற்போதுதாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பவர்களே, இந்தக் கேடுகெட்ட காங்கிரஸ்காரங்கள் தான். தற்போது விசாரணை செய்துகொண்டிருக்கும் உச்ச “வழக்கு” மன்ற
    “வழக்குபதிகளை”, எப்படியாவது வழுக்குபதிகள் ஆக்குவதற்கு, கபில் சிபல் எதற்கும் தயார் நிலையில் இருக்கும் ரடன் டாட்டாவை அனுகிக்கொண்டிருக்கின்றார். எதுவும் முடியாவிட்டால், அவர்கள் பணி ஓய்வு பெறுவதை, இலவு/இழவு காத்த எதுவோ போல் காத்துக்கிடப்பார்கள். இப்படிப்பட்டக் கேவலமான காங்கிரஸ் மற்றும் திமுக விஷக் கிருமிகளிடமிருந்து, விடுதலைபெற/நஷ்ட ஈடு பெற, காப்பீட்டு முறை/விலகிக்கொள்ளும் உரிமை, நமக்குத் தேவை. ஏனெனில், பல கிழக்கிந்தியக் கம்பனிகளுக்கு இவர்கள், பாரதத்தை விற்று, வெகுநாட்களாகின்றன. அந்நிய முதலீடு கோஷம் தான் இவர்கள் விற்பனை உத்தி. மன்மோகன்சிங், மான்டேக்சிங்,பண்ணையார் சிதம்பரம் இவர்களே இந்தியமானத்தை விற்ற, உலகவங்கித் தரகர்கள்.

  10. //இல்லையேல் வரும் தேர்தலில் வாக்கு விலையை ஏற்றவேண்டியதுதான்.//
    176000 கோடி ரூபாயை தமிழகத்தின் மொத்த வாக்காளர்களுக்கும் சமபங்காகப் பிரித்தால் தலைக்குச் சற்றொப்ப 40000 ரூபாய் வரும். எப்பதுக்கலும் போக எஞ்சியதில் 20000 ரூபாய் ஓட்டுக்கு விலை கேட்கலாம். ஆனால், இந்தச் செலவுக்குக் கள்ள ஓட்டு லாபகரமானது என்று போய்விடுவார்கள் அமுக்கிய முற்போக்குக் கூட்டணியினர். நீதிமன்ற விசாரணை மட்டுமல்ல JPC விசாரணையும் மிக அவசியம். வேறு எந்த விசாரணையையும் இவர்கள் சொதப்பிவிட்டுத் தப்பிவிடுவார்கள். ஷுங்க்லு வைத்த பொங்கலு போல.

  11. வாக்கு வங்கி அரசியலில் சற்று காலை நீட்டி வாக்கு வாங்கி அரசியலில் தி மு க வும் முன்னணி எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவின் இடைதேர்தலில் இந்த அசிங்கம் பரவக் கண்டேன். தமிழக ‘ரேட்’ கிடைக்கவில்லை என்பதனால் ஆறுதல் அடைந்து பா ஜ க விற்கு இந்த ஊழல் எதிர்ப்பு தகுதியை வழங்க எனக்கு மனமில்லை. காங்கிரசின் அளவை காங்கிரசைவிட குறுகிய காலத்திலேயே பா ஜ க எட்டிவிடும் என்பதே அனுமானம்.

    மேலும் தரமும் கொள்கையும் ஊழலுக்கு எதிரி. ஆட்சிக்கு வருவதற்கு இணையான இலக்கு ஊழலைப் பரவச் செய்தல். இதில் தி முக இந்தியாவின் முன்மாதிரி. நரேஷ் குப்தா போன்ற நல்லிதயத்தின் குமுறல் வேண்டுமானால் இவர்களை ஏதும் செய்யலாம். வாக்கு விலை ஏறி தி மு க ஆட்சிக்கு வந்தால் வியப்படைய மாட்டேன்.

    ஊழல் விசாரணை எதுவும் (எல்லா தளங்களிலும்) இதுவரை எந்த பலனையும் தரவில்லை என்பது நோக்கற்குரியது. கிட்டத்திட்ட மீட்சி இல்லை.

    நிச்சயம் தண்டனை தான் என்பது போல் தோற்றமளிக்கும் குற்றச்சாட்டுக்கள் கூட இறுதியில் பொய்த்து போகின்றன. எடுத்துகாட்டாக இந்தியன் வங்கி சிங்கப்பூர் கிளை வழியாக காங்கிரசிற்கு அந்நிய செலாவணியாக பணபரிமாற்றம் நடைபெற்றது. (கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்தியன் வங்கி இயங்கிவந்த சமயம். ஆண்டு நினைவில்லை) இந்தியத் தேர்தல் விதிகள் படி அந்நிய செலாவணியாக அரசியலமைப்புகள் நன்கொடை பெற வழியில்லை. காங்கிரஸ் முடக்கப்படும் என்று ஆவலாய் இருந்தேன், நான் முடங்கிப் போனது தான் மிச்சம்.

    ஊழல் (அன்றிலிருந்து இன்று வரை) உண்மையில் ஒரு பிரச்சினையா? அல்லது வாக்களர் வரை ஊழல் ஒரு பங்குப் பிரச்சினையா?

  12. நீல வண்ணத்தில் இன்னொரு இழை பாரத ஸ்டேட் வங்கி. 10000 கோடி வரை இதில் பங்கெடுத்த (போலியா?) நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது. நீதி மன்றம் இதையும் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. பல வங்கிகள் பல நிறம். இன்னொரு இணை spectrum நாளை விரியலாம். இந்த ஊழலின் அளவை விட இதன் வீச்சும் இணையமும் (network ) நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.

  13. அன்பர் ராம்கிக்கு,

    கர்நாடகாவில் நிகழ்ந்துள்ள ஊழல், கண்டிப்பாக பா.ஜ.க. மட்டுமல்ல, நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டியது தான். இதை சுட்டிக் காட்ட குருமூர்த்தியின் கருத்தை ஜேப்படி அடித்ததில் எந்தத் தவறும் இருப்பதாக நான் காணவில்லை.

    சற்றே சிந்தித்துப் பாருங்கள். பா.ஜ.க.வில் சக்தி வாய்ந்தவரான (கர்நாடகத்தில் மட்டுமேனும்) எடியூரப்பாவை கண்டித்து, சங்க முன்னணித் தலைவர் ஒருவர் பத்திரிகையிலேயே (ஜேப்படித் திருடர் என்று)
    விமர்சிக்க முடிகிறது. இத்தகைய நிலையை காங்கிரஸ் கட்சியில் காண முடிகிறதா?

    ஊழல் செய்ததன் பலனை எடியூரப்பா விரைவில் அடைவார். கண்டிப்பாக அவரது அரசால் பா.ஜ.க பெருமை கொள்ளவில்லை. இதனை நான் ஏற்கனவே எனது ‘மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்’ (https://tamilhindu.com/2010/11/karnataka_politics/) கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    அதே சமயம், எடியூரப்பாவைக் காட்டி, பல லட்சம் கோடி மதிப்பில் முப்பெரும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி தப்பிவிடக் கூடாது. ஜேப்படித் திருடனைக் கட்டி மக்களை திசை திருப்பி, கொள்ளைக் கும்பல் தப்பிவிடக் கூடாது. இதுவே என் கட்டுரையின் அடிநாதம்.

    ஒரே ஒரு மாற்று உடை, ஒரு காக்கி நிக்கருடன் நாடு முழுவதும் பயணம் செய்த தீனதயாள் உபாத்யாய வழிநடத்திய கட்சியான ஜன சங்கத்தின் தற்போதைய வடிவமே பாரதிய ஜனதா கட்சி. இன்று அக்கட்சி அடைந்திருக்கும் சறுக்கல்களுக்கு கண்டிப்பாக தானே தீர்வு காணும் என்பதே என் நன்னம்பிக்கை.

    – சேக்கிழான்.

  14. நன்றி சேக்கிழான்
    அலைக்கற்றை ஊழலின் அடிவேரைக் களைவதைப் பற்றி நான் குறை கூறவே இல்லை. அதில் பா ஜ க வின் பங்கு பற்றியே பேசினேன். பா ஜ க எடியூரப்பாவை நீக்கும்வரையாவது ஊழலை பா ஜ க எதிர்ப்பதை என்னால் ஏற்க இயலவில்லை. என்றாவது ஒரு நாள் பா ஜ க திருந்தும் அல்லது தண்டனை பெரும் என்று கூறி வாளாவிருக்க இயலவில்லை.
    குருமூர்த்தி முன்னணித் தலைவர் என்று சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இதை பா ஜ க வின் சுற்றரிக்கையாகவும் விநியோகிக்க வேண்டுகிறேன்.
    துவக்க காலத் தலைவர்களின் நேர்மை எளிமை மட்டும் ஒரு இயக்கத்திற்குப் போதுமானது அல்ல. அதை நினவு கூறுவோமாயின் நம் பொறுப்பு இரட்டிப்பாகிறது. ஏனெனில் பண்டிதரின் வாரிசாக எடியூரப்பா தெரிவது இன்னும் அபத்தம்.
    தயங்காதீர்கள் குரல் கொடுங்கள்.
    கொள்கை என்றாவது வெல்லும்!

  15. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரும்பயன் பெற்றவர் சோனியா என்பதால் இந்த ஊழல் எவ்வித உறுதியான நடவ்வடிக்கையும் இன்றி அமுங்கிப் போய்விடும் என்பதே என் அனுமானம். போஃபர்ஸ் கதிதான் இதற்கும் ஏற்படும். க்வோட்ரோச்சி எவ்வளவு எளிதாகத் தன் ஊழல் பண மூட்டையை எடுத்துச் செல்ல ஸி.பி.ஐ. அனுமதித்தது என்பதை நினைத்துப் பாருங்கள். சோனியாவிடம் பலவகைகளிலும் குவிந்துள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு, அவர் குறிப்பிட்ட காலம் சிறையில் வைக்கப்பட்டு, அதன் பின் குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்டாலன்றி ஹிந்துஸ்தானத்திற்கு விமோசனம் இல்லை. எவ்விதப் பொது அறிவும், கல்வியும், நமது கலாசாரம் பற்றிய அரிச்சுவடி படிப்பும் இல்லாத ராஹுல் என்கிற வாய்த்துடுக்குச் சிறுவனை வருங்காலப் பிரதமர் என்று முன்வைக்கத் துணியும் அளவுக்கு நமது நாட்டின் நிலை சீர்கெட்டுப் போனதை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.
    கர்நாடக அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அங்கே எடியூரப்பா, அனந்தகுமார் யாருமே சரியில்லை. சரியான நபர்கள் ஒதுக்கப்பட்டு விட்டனர். எடியூரப்பா தனது சாதியை நம்பியிருக்கும் மோசமான அரசியல்வாதி. அவரை முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்ததுமே கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கர்நாடக பா.ஜ.க.வில் நல்லவர்கள் உள்ளனர். அவர்களைத் துணிந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். இல்லையேல் கர்நாடக்த்தைக் கை கழுவிவிடவேண்டியதுதான்!
    -மலர்மன்னன்

  16. திருமலை போன்று நுறு பேர் இருந்தால் நன்றாகவே சூடுபிடிக்கும்.
    ரத்தம் கொதிக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *