சுமைதாங்கி [சிறுகதை]

sumaithaangi-isakki-amman1

 

ரி ஃபாதர்” என்றேன் நான் உற்சாகமாக.

வெளியே ஏற்கனவே தொடங்கியிருந்த கோடையின் வெப்பம் தெரியாதபடி இதமான ஏசி அறையை நிறைத்திருந்தது. நெல்லை தூய பிரிட்டோ தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் அலுவலக அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் ஃபாதர் வெற்றியரசன். வழக்கம் போலவே தும்பைப் பூவின் வெண்மையான அங்கியும் நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகமுமாக இருந்தார். அவர் எதிரில் இருந்த மேசையில் புனித சவேரியார் கருப்பு அங்கியுடன், சிலுவையை உயரத் தூக்கிப் பிடித்தபடி, தன் கச்சித வடிவமைப்பில் தன்னை சீனத் தயாரிப்பு எனத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

ஃபாதர் வெற்றியரசன், தென் தமிழ்நாட்டுக் கலைக் கல்லூரிகளில் தமிழ் துறைகள் தோறும் படர்ந்து விரிந்திருக்கும் நாட்டார் வழக்காற்றியல் துறை எனும் சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற ஒரே தலைவர். என் டாக்டரேட் வழிகாட்டியும் கூட.

“இந்தாங்க இளங்கோ இதுதான் கோயிலோட அட்ரஸ். ரொம்ப முக்கியமான விஷயம். இத நல்லா செஞ்சிட்டு வாங்க. சித்திரை கொடை விழாவுக்கு ஒரு வாரம் முன்னாடியே போயிடுங்க. வீடியோ எடுக்கணும். ப்ராஜக்ட் சாங்க்ஷன் ஆகி ஃபண்ட் வந்தபிற்கு உள்ள ரிப்போர்ட்ல வீடியோவை செஞ்சதா காட்டிக்கலாம். எல்லாத்தையும் இப்பவே எல்லா கள ஆய்வும் முடிச்சதா காட்ட வேண்டாம். டாக்டர் மெய்கரன் வரும்போது பூசாரி இண்டர்வ்யூ- அதுக்கு ஆடியோ ரெக்கார்டிங் போதும் – ஃபோட்டோஸையும் வைச்சு பிரசண்டேஷன் ரெடி பண்ணிடலாம்..” என்றார்.

”புரியுது ஃபாதர்”

டாக்டர். மெய்கரன் டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த தமிழர். பூர்வீகம் இங்கெங்கோதான். நாட்டார் ஆராய்ச்சிகளில் தேர்ந்த கை. டிரினிடாட் பல்கலைக்கழகத்தில் ஏதோ ப்ராஜெக்ட் இருக்கிறதாம். ஃபாதர் வெற்றி சொல்லியிருந்தார். என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான் – நாட்டார் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்.

ஃபாதர் வெற்றியும், சர்வதேச அளவில் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நாட்டார் வழக்காற்றியலில் பெரிய கைதான். மூன்று ஆண்டுகள் ஏதோ ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் எதினோகிராபிக்கல் ஸ்டடீஸ் என்கிற சமாசாரத்தைப் படித்து, அதில் படித்த தியரிகளையெல்லாம் தென்னிந்திய நாட்டார் தெய்வங்கள் சடங்குகளுக்கு அப்ளை செய்வதால் இங்குள்ள கல்லூரிகளின் எல்லாத் தமிழ்த் துறைகளிலும் அவர் ஏறக்குறைய ஒரு வானுலகத் தெய்வம்.

”சரி இளங்கோ, இத பத்தி இன்னைக்கி சாயங்காலம் இன்னும் டிஸ்கஸ் பண்ணலாம். பாஸ்கெட் பால் கோர்ட் பக்கமா வாங்க,” என்று சொல்லிவிட்டு முன்னாலிருந்த கணினியின் எல்சிடி திரையில் ஆழ்ந்தார் ஃபாதர்.

”யெஸ் ஃபாதர்” என்றபடி நான் எழுந்தேன்.

***

”கரெக்டா பாஸ் பண்ணுல…”

”லேய் லேய் லேய் எங்கல பாக்க புடதிலயால கண்ணு” அடிவயிற்றுக் குரல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தன.

”இங்குள்ள நாட்டார் தெய்வங்கள் எல்லாமே முக்கியமா மனிதர்களின் மூதாதை வழிபாடு அல்லது இறந்தவர்களைக் கொண்டாடும் நினைவுச்சடங்குகள்தான். ”

பாஸ்கெட் பால் கோர்ட்டில் காலேஜ் டீம் பையன்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருந்த புல் வெளியில் ஃபாதர் என்னுடன் பேசியபடியே நடந்து கொண்டிருந்தார். டீஷர்ட், லீ ஜீன்ஸில் அவருக்கு ஒரு பத்து வயது குறைந்து நாற்பது சொல்லலாமென்று தோன்றியது. அவரிடமிருந்து எழுந்த மெல்லிய லாவண்டர் மணமும் அதனுடன் அதைவிட மென்மையான உயர்ரக ஐரோப்பிய மதுவின் மணமும் அந்த மாலை நேரத்தின் சூழலையே ஏதோ ஆக்ஸ்போர்ட் காம்ப்ரிட்ஜ் போலக் காட்டியது.

“ஆனா அதைக் கும்பிடறவங்க அப்படிச் சொல்றதில்லையே ஃபாதர். இப்ப மாடனக் கும்பிடறவங்க அதை சிவங்கிறாங்க. எசக்கியம்மன கும்பிடறவங்க அது பார்வதிங்கிறாங்க. எல்லாத்தையும் இயக்குற சக்திங்கிறாங்க,” என்றேன் நான். அப்படித்தான் என் அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தாள்.

ஃபாதர் அழகாகப் புன்னகைத்தார். மாலையின் மஞ்சள் வெயிலில் தகதகத்த அவரது டீஷர்ட், “உலகத்தைக் காப்பாற்றுங்கள் ஏனென்றால் இது மட்டுமே பீர் உள்ள கிரகம்” என்று ஆங்கிலத்தில் சொன்னது. அவரது குரலில் ஓர் அதிகார மென்மை இருந்தது.

”இந்த இடத்திலதான் நீங்க ஒரு ஆய்வாளரா விஷயத்தைப் பாக்கணும்… அதுக்கு மேல நாட்டார் தெய்வங்கள்ல ஏற்றப் படறதெல்லாம் பிராம்மணீய அழுத்தத்தால ஏற்படற மேல்நிலையாக்கம். இதன் மூலமா பார்ப்பனர்கள் நாட்டார் தெய்வங்களின் கோயில்களை சூழ்ச்சிகரமாக கைப்பற்றிடுறாங்க… நீங்க ‘சுடலை மோட்சம்’ சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?”

கூடைப்பந்து, மைதானத்துக்கு வெளியே வந்தது. ஃபாதர் எடுத்து அசிரத்தையாக ஆனால் கச்சிதமாகத் திரும்ப எறிந்தார். “தாங்க்ஸ் ஃபாதர்!” என்ற கத்தலுடன் ஆட்டம் தொடர்ந்தது.

“ஆனா அதே ஆளு ஞான மரபுல இசக்கியம்மனையும் சாங்கியத்தையும் முடிச்சு போடுகாரே…” என்றேன் நான்.

“சாங்கியம் கூட பிராம்மணீயம் செரிச்ச பழங்குடி மரபுன்னு பாக்கக் கத்துக்கணும். இளங்கோ, தப்பா நெனச்சுக்காம யோசிச்சு பாத்தீங்கன்னா, நாட்டார் தெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடுன்னு பாக்கும்போது… மேரி மாதாவை கத்தோலிக்கர்கள் கும்பிடுறதுக்கும் இசக்கியம்மையை நாட்டார் தெய்வமா கும்பிடுறதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல? அதைவிட இசக்கியை பார்வதின்னும் பராசக்தின்னும் மேல்நிலையாக்கத்துல சொல்றதுக்கு வித்தியாசம் அதிகம். நான் சொல்றது புரியும்னு நெனைக்கிறேன்…”

ஓர் இந்துவாக எனக்குள் ஏதோ குறுகுறுத்தாலும் ஓர் ஆய்வாளனாக அவர் சொன்னதை எதிர்க்க முடியவில்லை. அவர் தரப்பு, தரவுகளை கச்சிதமாக அடுக்கிக் கட்டப்பட்ட கோட்டை. ஏனென்றால் வாழ்க்கையெல்லாம் இந்துவாக வாழ்ந்த எனக்கு இந்து மதத்தைக் குறித்துத் தெரிந்ததைக் காட்டிலும் அவருக்கு அதிகமாகத் தெரியும். செமினரியில் இரண்டு வருடங்கள் இந்து மதத் தத்துவங்களைப் படித்திருக்கிறார்.

என் மௌனமான மையமான தலையசைப்பையடுத்து ஃபாதர் தொடர்ந்தார்..

”ஆனா பிரச்சினை என்னன்னா, இதெல்லாம் இன்னும் தியரிதான். ஊகம்தான். எனக்கு தெரியுது உண்மைன்னு…ஆனா ஆதாரம்? அதுதான் சரியா கிடைக்கலை பாத்துகிடுங்க… இதுவரைக்கும் தெளிவா பார்ப்பனர்கள் கைப்பற்றிய நாட்டார் தாய்தெய்வக் கோயில்னு எதுவும் கிடைக்கலை. சில இடங்கள்ல சொல்லலாம். ஆனா அங்கயும் பூசாரிகள் இல்லாததால பார்ப்பனர்களை ஊர்மக்கள் நியமிச்சிருக்காங்க. அதை பார்ப்பனீயக் கைப்பற்றல்னு கரெக்டா சொல்லமுடியாது. அதுவும் மேல்நிலையாக்கம்தான் ஆனா சரியா பார்ப்பனர்கள் ஒரு கதைகட்டி ஒரு நாட்டார் கோயிலை தங்களுக்குள்ளதாக்கிட்டாங்கன்னு சொல்ல சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. இதுக்க இம்பார்ட்டன்ஸ் புரியுதா?”

”புரியுது ஃபாதர்” என்றேன் நான்.

ஃபாதரின் நண்பர் பேராசிரியர் ஆபத்பாந்தவ பிள்ளை. அவர்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும், நான் போக வேண்டிய இந்தக் கோயிலைப் பற்றி ஃபாதரிடம் போனில் சொன்னவர். சொல்லும் போது நானும் உண்டு.

ஒரு தலித் சமுதாய அம்மன் கோயிலாம். சரியாச் சொன்னா, மூத்தார் வழிபாடாம். ஆனால் பிராம்மண பூசாரி. சித்திரைக் கொடையில் இப்ப ஒரு பகுதியா சமஸ்கிருத பாராயணம் கூட நடக்கிறதாம். மேல்நிலையாக்கத்துக்கு இதைவிட பக்காவான எடுத்துக்காட்டு வேறென்ன வேணும்?

பொதுவாக உணர்ச்சிகளையே காட்டாத ஃபாதர் போனிலேயே பூரித்துப் பொங்கியதை அன்று கண்டேன். “ஓ லார்ட்! அட இதைத்தான சார் நான் எதிர்பார்த்தேன். எக்ஸலண்ட்! என் தீஸிஸுக்கு சரியான நிரூபணம் பாருங்க. ஆண்டவரே உங்க மூலமா அனுப்பியிருக்கார்… ஹெஹெ.. இல்லைன்னா வரலாறு உங்க மூலமா செயல்படுதுன்னு வைச்சுகிடுங்க. இப்ப என்ன அதுக்கு… சரி. என்கிட்ட ஒரு பிஹெச்டி ஸ்டூடண்ட் இருக்கார், அவரை அனுப்புறேன்… ஹெஹெ… இங்க வாங்க அப்ப உங்களுக்குன்னு ஒரு பாட்டில் உடைச்சிடலாம். ஹெ ஹெ…”

ஃபாதர் உண்மையிலேயே பெரிய மேதைதான் என நினைத்துக்கொண்டேன். அவரது தரவு மாளிகை எனக்குள் பலமான அஸ்திவாரத்துடன் எழுந்தது. இனி இதுதான் நான் வசிக்கப் போகும் கருத்தியல் மாளிகை.

***

பூவரசம் மரக்கிளைகளினூடே நுழைந்து படர்ந்த வெயில் கீற்றுகள்கூட, பட்ட இடத்தில் சுள்ளிடத்தான் செய்தன.

”இதுதான் சார்” என்றார் அவர்.

கையை நீட்டிய போது சட்டை போடாத அவர் விலா எலும்புகள் எக்ஸ்ரே எடுத்ததுபோல் துல்லியமாகத் தெரிந்தன. கருத்த உடலில் நெளிந்த அழுக்குப் பழுப்புப் பூணூலை அடிக்கடி இரண்டு கைகளாலும் அவர் இழுத்துக் கொண்டிருந்தது முதுகைச் சொறிய என்பது தெரிந்தது. அவரது காலைக் குளியலும் கோடையின் புழுக்கமும் அவர் கையை உயர்த்திய போது ஒரு வித கவுச்சி அடிக்க வைத்தது; சிரமப்பட்டு என் முகச்சுளிப்பை அடக்க வேண்டியிருந்தது. குறைந்தது ஐம்பத்தைந்து தாண்டியிருக்கும் அவரது பெயர் பத்மநாப அய்யர் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு விட்டேன். 

அவர் கையை நீட்டிக் காட்டிய இடத்தில் குங்குமம் தேய்த்த பூவரசம் மர நிழலில் கல்லாலான பழைய காலத்து சுமைதாங்கி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிலும் ஆங்காங்கே குங்குமத் தீற்றல்கள்; சிவப்புப் பட்டு ஒன்று அதன்மீது பாவாடை போலக் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கத்திலேயே புதிதாகக் கட்டப்பட்ட செவ்வக சிமெண்ட் அறையின் க்ரில் கதவுகள் இரண்டாக வாய் பிளந்திருந்தன. ‘சுமை தாங்கி அம்மன்: இந்து சாம்பரார் வகை கோயில்’ என சிறிதாக எழுதி அதைவிடப் பெரிதாக “உபயம்: திரு.ராம.இசக்கி முத்து, சுந்தரி இண்டஸ்ட்ரீஸ், 1990” என்று ஸ்டீலை வளைத்து எழுதியிருந்த தொடர் கதவொன்றுக்குப் பாதியாக பிரிவினைக்கு உள்ளாகி இருந்தது..

உள்ளே ஒரு சுதைச் சிற்பமாக பெரிய முண்டகக்கண்களுடனும் கோரைப்பற்களுடனும் கையில் ஒரு சிறுகுழந்தையுடன் நாட்டார் பெண்தெய்வம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். விரைவில் வரப்போகும் கொடைக்கு முன்னேற்பாடு போல எக்கச்சக்க மாலைகள், மஞ்சள், சிவப்பு, பச்சை என நிறக்கதம்பமாகப் போடப்பட்டிருந்தன.

“அம்மனை சேவிச்சுக்குங்கோ, சுமைதாங்கி இசக்கி அம்மன்!’ என்றார் அவர். “ஆரத்தி காட்டுறேன். இன்னைக்கு செவ்வாக்கிழமை. அம்மனுக்கு விசேஷம். அதுவும் பங்குனி ஒடுக்கத்து செவ்வாயா வந்துருக்கேள்,” என்றார். நான் போய்விடுவேனோ என்று அவர் பரபரப்பது தெரிந்தது. சீக்கிரமாக தீபாராதனை காட்டி அந்தத் தட்டில் என் சில்லறை விழவேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருப்பதும் தெரிந்தது.

“மெதுவாச் செய்யுங்கோ சாமி. கொடை முடியுற வரை இங்கயேதான இருக்கப் போறேன். அதுவும் இன்னைக்கு பூரா உங்ககூடத்தான்,” என்றவன் அந்தத் தட்டில் பத்து ரூபாய்த் தாளைப் போட்டேன். அவர் வெகுவாக முகம் மலர்ந்தார்.

சமயமறிந்து, “போட்டோ எடுத்துக்கலாமா?” என்றேன்.

”எடுத்துங்கோ எடுத்துங்கோ பேஷா எடுத்துங்கோ இங்க அப்படியெல்லாம் எந்தத் தடையும் கிடையாது,”

சிறுதுநேரம் ஏதோ சமஸ்கிருத வார்த்தைகளை முணுமுணுத்தபடி பூஜை என்று ஒன்றைச் செய்தார். கூட்டம் பரவாயில்லாமல் இருந்தது. அந்தப் பகுதியிலுள்ள தலித்துகள் மட்டுமல்லாமல் இடைநிலை சாதிகளும் வந்து வணங்குவது தெரிந்தது. பிராம்மண அர்ச்சகர் செய்யும் சமூகவியல் மாயம். கட்டாயம் இதைக் குறிப்பிட வேண்டும். அதையும் இரண்டு போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன். அதை முறைத்த ஒரு கிடாமீசைக்காரரிடம் அய்யரே, “ஏதோ அம்பாளை ரிசர்ச் பண்றாளாம். எடுத்துண்டு போட்டுமே.. அம்பாளோட மகிமை பிராபல்யம் அடைஞ்சதுன்னா அது எல்லாருக்கும் நல்லதுதானே…” என்றார். தட்டில் போட்ட பத்து ருபாயின் மகிமையே மகிமை.

அது சாதாரண ஒதுக்குப்புற நாட்டுப்புறக் கோயில்– கோயிலென்று கூட சொல்லமுடியாது- இப்போதுதான் கோயில், அப்போது ஏதோ ஒரு குடும்பத்தில், பிரசவத்திலோ அல்லது திருமணமாகமலோ இறந்து போன ஏதோ ஒரு பெண்ணின் நினைவாக செய்த சுமைதாங்கியாக இருக்கவேண்டும். இவை தானமாகவும் செய்யப்பட்டு அந்தந்தக் குடும்பங்களால் வழிபடப்படும். கொஞ்சம் கொஞ்சமாக தெய்வமாக்கி, வருடாந்திர பலி கொடை எல்லாம் நடத்துவார்கள்.

ஆனால் அதில்தான் எப்படியோ இந்த அய்யரின் தாத்தா- அவரின் பெயரும் பத்மநாப அய்யர்தானாம்- புகுந்திருக்கிறார். அது இப்போது ஓர் ஐதீகக்கதை போல் ஆகிவிட்டதாம்.

கொடை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்குள் ஊருக்குள் சில தகவலாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஊர்ப் பண்பாட்டை- குறிப்பாக இந்தக் கோயிலை- நன்றாகத் தெரிந்து எனக்கு தகவல் சொல்பவர்கள். கடைசியில் அப்படி ஒருவர் கிடைத்தார்.

எண்பது வயதான சம்முகம் தாத்தா; ஆடு மேய்ப்பவர். அரவங்கோட்டுப் பொத்தை என்கிற மலையடிவார கிராமத்தின் மேய்ச்சல் விளையில் ஒரு மத்தியான நேரம் அவரைப் பிடித்தேன். ”சுமைத்தாங்கியம்மனுக்கு தினசரி பூஜை அந்த சாமிதான். எனக்கு நெனவு தெரிஞ்ச காலத்துல அவருக்க அப்பன் செஞ்சாரு… ஆனா துள்ளுமறி, அதான் தொர பலிகிடா அறுக்க மேலாம்பொத்தை சொள்ளமாட சாமியாடி குடும்பத்து முத்தையந்தான் இப்ப வாரான். அதுக்கு முன்னாடி அவனுக்க அப்பன் சொயம்புமுத்தன் செஞ்சான். சொயம்புமுத்தன் காலத்துலனாக்கா மறிக்க மூளை குடலு ஈரலுன்னு தனித்தனியா எடுத்து 13 சட்டில அம்மனுக்க முன்னாடியே சமைச்சு அவனுக்கே கொடுத்து அங்க சனங்களுக்கு பிரசாதமாவும் கொடுப்பாவ.. ஆனா இப்ப பலி முடிஞ்ச பொறவு சமைக்கதுக்கு அங்கேருந்து எடுத்துட்டு போயிருவாவ…”

மேல்நிலையாக்கம் செயல்படும் விதம் எனக்குப் புரிந்தது. ஃபாதர் இதைச் சரியாகவே கணித்திருந்தார். “இளங்கோ நீங்க வேணா பாருங்க பிராம்மணீயத்தின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க புலால் தொடர்பான சடங்குகள் கொஞ்சம் கொஞ்சமா கோயிலை விட்டு விலக ஆரம்பிக்கும். இதை நீங்க கொஞ்சம் அவதானிக்கணும்.”

எப்போதுமே உள்ளூர் வீடியோகிராஃபரை அமர்த்திக் கொள்வதுதான் நல்லது, பிரச்சினை வராது என்பார் ஃபாதர். செய்துவிட்டேன். ’மாடர்ன் வீடியோஸ்– உங்கள் குடும்பத்தில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஹாலிவுட்டுக்கு நிகரான கிராபிக்ஸுடன் அணுகுங்கள்’ என்று இணையத்தளம்கூட வைத்திருக்கும் அந்த வீடியோக்காரப் பையன் குணசேகரன் எனக்கு மூன்றே நாளில் நல்ல நண்பனாக ஆகிவிட்டான். ”சுமைதாங்கியம்மன் கோயிலுக்கு நானும் போறதுண்டு சார். ஸ்டுடியோ ஆரம்பிச்சப்ப அந்தக் கோயில் அய்யர் கிட்டச் சொல்லி ஒரு அர்ச்சனைக்கு கொடுத்துட்டுண்டு.” அந்தக் கோயிலுடனான பிறசாதிக்காரர்களின் உறவுகுறித்து அன்று மாலையே ஒரு கொஸ்டியனர் தயாரித்து அவனிடம் ஒன்று கொடுத்து நிரப்பி வாங்கிவிட்டேன்.

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. ஏதோ ஐரோப்பாவில் இருந்து வந்த ஆராய்ச்சிக்காரன் அல்லது உளவு பார்க்க வந்த அந்நியன் போல… அட அதுவேதான்! உளவு சேகரிப்பவன்.. எத்தனை சரியாக இருக்கிறது…. இத்தனைக்கும் எங்கள் ஊர் கொடை இதிலிருந்து அப்படி மாறுபட்ட ஒன்றல்ல. ஆனால் ஆராய்ச்சியாளனாக நான் ஒற்றர்களை உருவாக்கி தகவல் சேகரித்து உளவு செய்யும் அதிகாரி. என் தலைமைச் செயலகம்? சிரிப்பிலிருந்து மெலிதாக அசௌகரியத்துக்கு நகர்ந்த அந்த எண்ணவோட்டத்தைக் கோயிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் வந்த ’ஓய்ங்க்’ ஒலி அறுத்தது. குணசேகரனுக்கு வீடியோ எடுக்க அருமையான வ்யூபாயிண்ட் கிடைத்திருந்தது. நானும் முண்டியடித்து அவனுடன் சென்று நின்றுகொண்டேன்.

இதோ இப்போது ஆரம்பமாகிவிடும். சுமைதாங்கியின்முன் மறி என்று அழைக்கப்படுகிற கிடா ஆட்டைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தார்கள். செவ்வரளி மாலைகள் போட்டு துள்ளுமறிக்கிடா சிவலை நிறத்தில் வெள்ளைப் பொட்டு கொண்டதாக வந்தது. சாமியாடி, குளித்த ஈரத்துடன் ஆடியபடியே வந்தார். கூட்டத்தில் ஓர் ஓரமாக பத்மநாப அய்யர் நின்று கொண்டிருந்தார். அவரும் குளித்து ஈரமான காவித்துண்டை வேட்டியின் மேலே கட்டி இரு கை கூப்பி நின்று கொண்டிருந்தார். அவரது குடும்பத்திலிருந்து எவரும் வரவில்லை. வேறு பிராம்மணர்கள் எவரும் இல்லை.

அம்மன் முன்னால் பலவிதமான சைவப் படையல்கள் இருந்தன. மா, மாதுளை பழங்கள், செந்துளுவன், பேயன் பழக்குலைகள் வைக்கப்பட்டிருந்தன. பாக்கு வெத்தலை வைத்து மூன்று வாழைப்பழங்களின் மீது ஒரு கட்டு பத்தியைக் குத்தி வைத்திருந்தார்கள். அதனருகே ஒரு சிறு மரப்பீடத்தில் பழைய ஓலைச்சுவடிக் கட்டு ஒன்று இருந்தது.

சாமியாடி இப்போது சொம்பு நிறைய தண்ணீரை மறி மீது தெளித்தார். அதன் நெற்றி நிறைய திருநீறை எடுத்துத் தீட்டினார். அதன் வெள்ளைப் பொட்டு மறைந்தது. பக்கத்தில் ஒருவர் சாமியாடியிடம் மஞ்சள் துணியில் சுற்றியிருந்த வெட்டுக்கத்தியைக் கொடுத்தார். அதன் பளபளப்பில் மஞ்சள் மிகுந்த சந்தனப்பூச்சும் அதில் குங்கும வட்டமும் தெரிந்தது. சாமியாடி இப்போது அமானுஷ்யக் குரலில் பிளிறினார். ‘ஓயேயேவ்வ்”. சொல்லி வைத்தாற்போல் மறி உணைக் கொடுத்து சிலிர்ப்பியது. அடுத்த வெகுநொடியில் வெட்டுக்கத்தி இறங்கியது. அந்த ஒரு விநாடியில் தாமதித்துவிட்ட முரசுக்காரர் அதை ஈடு செய்வது போல வேகமாக அடிக்க ஆரம்பித்தார். டட்டங்கிடு டட்டங்கிடு டட்டங்கிடு. ஆட்டின் வெட்டுப்பட்ட உடல் வலித்து இழுப்பதுகூட ஏதோ அந்த ஒலிக்கு ஒத்திசைப்பது போலவே தோன்றியது.  அந்த உடலின் இழிப்பசைவு நின்றதும் இருவர் வேகவேகமாக ஆட்டின் உடலையும் தலையையும் அப்புறப்படுத்தினர். இன்னொருவர் ஓர் ஓலையால் பின்னப்பட்ட தடுப்பையைக் கொண்டு ரத்தம் அள்ளித் தெளித்த அந்த தரையில் போட்டார்.

அய்யரே இப்போது சாமி வந்தவர் போலத்தான் காணப்பட்டார். ஒரு வேளை பலியைப் பார்த்து வெலவெலத்துவிட்டாரோ என்று கூட நினைத்தேன். ஆனால் மனிதன் வருடாவருடம் பார்ப்பதுதானே! மிகவும் தளர்ந்த நடையுடன் அந்தத் தடுப்பையில் அவர் அமர்ந்தார். யாரோ அந்த ஓலைச்சுவடி இருந்த மரப்பீடத்தை அவருக்காக நகர்த்தினார்கள். அவர் சம்பிரதாயமாக அந்த சுவடிகளை பிரித்து அசிரத்தையாக அவரது விரல்கள் அச்சுவடிகளில் மேய, வேகவேகமாகப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார்….

…ஓம் ஸ்ரீமாதா ஸ்ரீமகாராஜ்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேஸ்வரி
சிதக்னி-குண்ட-ஸம்பூதா…

முடியும்வரை கூட்டமும் இருந்தது. முடிந்ததும் அன்னதானம்… சைவ சாப்பாடு! எல்லாம் முடிந்து நானும் குணசேகரனும் கிளம்பியபோது மாலை மங்கி, ஒலிப்பெருக்கி, “சுமைதாங்கி இசக்கி அம்மன் பக்தர்களின் சார்பாக இன்று இரவு சரியாக 8 மணி அளவில் சூப்பர் ஸ்டார், நக்மா மற்றும் பலர் நடித்த பாட்சா திரைப்படம் திரையிடப்படும். அனைவரும் வந்து அம்மன் அருளைப் பெறுமாறு வேண்டுகிறோம்” என்றது.

அடுத்த நாள் மதியம் அய்யர் வீட்டில் அவரைப் பேட்டி எடுக்க வேண்டும். வீடியோவுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரியும். இதையும் ஃபாதர் ஊகித்திருந்தார் என்பதுதான் அதிசயம். வாய்ஸ் ரெக்கார்டிங் மட்டுமே சாத்தியம். ”மத்தியானம் வாங்கோ.. எங்காத்திலேயே போஜனம் பண்ணிடலாம்…” என்று கட்டாயப்படுத்திவிட்டார் அய்யர்.

இருண்ட வீடு. ஆங்காங்கே கூரையைப் பிய்த்துக் கொண்டு சூரிய ஒளி கொட்டிக் கொண்டிருந்தது, மிளகு ரசமும் சுட்ட அப்பளமும் ஊறுகாயும். நோஞ்சலாக ஒரு மூன்று வயதுப் பேரன். மகன் ஏதோ மூன்று நான்கு கோயில்களில் பூஜை வைக்கிறானாம். மருமகளும் மாமனாருக்குப் போட்டியாக வாடி வதங்கி எலும்பாகத்தான் நின்றாள். இந்தக் கோயில் பூஜைதான் அவர்களின் வாழ்க்கை ஆதாரம் எனத் தோன்றியது.

“இந்த கோயில்ல பூஜை பண்றதால எங்கவாலயே மத்தவாளுக்கு என்னைக் கண்டா ஒரு இளக்காரம். கும்பாபிஷேகம் இல்லாத கோயில். சித்திரைத் திருவிழாவுக்கு கிடா வெட்டுவா… அத ஒட்டித்தான் நான் சஹஸ்ர நாம பாராயணம் செய்யணும்… பாத்தேளே.. அப்போ என் தாத்தா இதை செய்தப்ப பெரிய பிரச்சனையே ஆயிடுத்து. அப்புறம் சில பெரியவா ஸ்வப்னத்துல அம்பா வந்து இத செய்ய தான்தான் சொன்னதாவும் அப்புறம் அனுமதிச்சதாவும் சொல்றா… ஆனாலும் இவா இத இழிவாத்தான் பாக்கிறா… பொண்ணு எடுக்க, கொடுக்க மாட்டா… என் பையனுக்கு பொண்ணே ஏதோ ரொம்ப தூரத்தில…” என்று சொல்லி, அவசியமில்லாமல் குரலைத் தாழ்த்தி மருமகளுக்கு கேட்கும்படியாகவே ”சவுண்டி பிராம்மணாத்தான் கொடுத்தா…” என்றார். அந்தப் பெண் எரிச்சல் கலந்த அசௌகரியத்தை உணர்வதை அவள் உடல்மொழியில் காணமுடிந்தது.

எப்படி இந்தக் கோயில் பூசாரியாகத் தான் ஆனேன் என்பதை அவர் விவரித்தார். பேட்டியை என் வாய்ஸ் ரெகார்டரில் பதிவுசெய்து கொண்டு நான் கிளம்பிய போது எனக்குள் ஒரு கேள்வி மட்டும் அரித்துக் கொண்டே இருந்தது. ஃபாதர் வெற்றியரசனின் கோட்பாடுபடி பிராம்மணர்கள் தந்திரமாக இந்தக் கோயிலைக் கைப்பற்றினால் ஏன் இந்த ஏழைமை, ஏன் இந்தச் சமுதாய எதிர்ப்பு அவருக்கு…

பிறகு நெல்லையில் ஃபாதரிடம் இதைக் கேட்ட போது, “பொருளாதார வறுமை வேறு, சமுதாய அடக்குமுறையில் ஒரு தந்திரம் என்பது வேறு,” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டார். அந்தக் கேள்விகளை அவர் ரசிக்கவில்லை என்பதை அவர் முகம் மின்னல் வெட்டாக மாறித் தெளிந்ததில் தெரிந்தது. பொருளாதாரம் என் துறையல்ல என்பதால் நானும் அந்தப் பார்ப்பன வறுமையை மறந்துவிட்டு மேல்நிலையாக்கக் கோட்பாட்டில் ஈடுபட்டு டாக்டர். மெய்கரன் வரும்போது அவர் முன்னால் காட்ட வேண்டிய பிரசண்டேஷனை உருவாக்குவதில் முனைப்பாகி விட்டேன்..

டாக்டர் மெய்கரன் போட்டோவில் பார்ப்பதைக் காட்டிலும் ஆஜானுபாகுவாக இருந்தார். ஐம்பது வயதிருக்கும் என்பதை கிருதாவில் மட்டும் வெள்ளையாகத் தெரிந்த முடிகளும் முன்வழுக்கையோடு சேர்ந்த நெற்றியில் ஓரிரண்டு வரிகளாகத் தெரிந்த சுருக்கங்களும் காட்டின. பழுப்பு நிற ஜிப்பாவும் நிறம் மங்கிய நீல ஜீன்ஸும் போட்டிருந்தார். எளிமையாக, சிரித்துப் பழகும் ஆனால் வார்த்தைகளை வீணாக்காத அழுத்தமான மனிதர். தமிழ்துறை இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்-ஆசிரியர் கூட்டத்தில் மிக எளிமையாக, தெளிவாகப் பேசினார். அதன் சாராம்சம் இதுதான்.

நம் பண்பாட்டை ஆராய நமக்கென்று எந்தக் கருவியும் இல்லை. மேலைநாட்டார்கள் உருவாக்கிய அணுகுமுறைகள், கருவிகள் ஆகியவற்றையே நாமும் பயன்படுத்துகிறோம். அவை நம் நாட்டுச் சூழலுக்கு எத்தனை உகந்தவை என்பதைக் குறித்து நாம் சிந்திப்பதே இல்லை. இதன் விளைவாக உருவாக்கப்படும் சமூகக் கோட்பாடுகள் நம் நாட்டுப் பண்பாட்டுச்சூழலுடன் ஒட்டாமல் வெட்டப்பட்டது மாதிரி தனியாக நிற்கின்றன. இன்னும் மோசமாக அவை நம் பண்பாட்டைச் சிதைத்தும் திரித்தும் காட்டுகின்றன. இதிலிருந்து மாறி, நம் நாட்டுப் பண்பாட்டின் அடிப்படையிலேயே நாம் ஆராய்ச்சிக் கருவிகளையும், அறிதல் சட்டகங்களையும் உருவாக்க வேண்டும். அதை உருவாக்க நாம் முயற்சி செய்கிறோம். அதைத்தான் ஃபாதர் வெற்றியரசனும் செய்வதாகத் தான் நம்புவதாக டாக்டர்.மெய்கரன் கூறி முடித்தபோது, நான் அனிச்சையாகத் திரும்பி ஃபாதரைப் பார்த்தேன். ஏனோ அவருடைய முகத்தில் நான் எதிர்பார்த்த மகிழ்ச்சி இல்லை. மெய்கரனின் பேச்சை அவர் அத்தனை ரசிக்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது..

இத்தனைக்கும் அதீதங்கள், அநாவசியங்கள், அடுக்கு மொழிகள், அரசியல் சித்தாந்தங்கள் இல்லாத உரை அது. பொதுவாக தமிழின் தொன்மையையும் அடுக்கு மொழியையும் அல்லது குறைந்தபட்சம் அரசியல் கோஷங்களையும் எதிர்பார்க்கும் அக்கூட்டத்துக்கு ஏமாற்றம் அளித்தாலும் அவரிடம் அனைவரும் ஆர்வம் காட்டினர். தமிழ்துறைக்கே உரிய அசட்டுத்தனமும் வெளிநாட்டு மோகமும் இணைந்த ஒரு விசித்திர ஆர்வம்..

பாதர் வெற்றியரசன் மெய்கரனை ஒரு திறமையான கறுப்பு பூனை கமாண்டோ போல ஏறக்குறைய அரவணைத்து எங்கள் நாட்டார் வழக்காற்றியல் பிரிவின் அறைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பேராசிரியர்களுக்கும் அவருக்கும் மட்டுமாக என் பிரசண்டேஷனைக் காட்ட ஏற்பாடு.

ப்ரொஜெக்டரில் ஃபோட்டோக்கள் முடிந்தன. மெய்கரன் ஒரு தனி ஆர்வத்துடன் கவனிப்பதை என்னால் பார்க்கமுடிந்தது.

ஃபாதர் வெற்றியரசன் இப்போது பேசினார்: “நீங்கள் பார்த்ததும் இனி கேட்கப் போவதும் என் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் மாணவர், உதவிப் பேராசிரியர் இளங்கோவின் ஆராய்ச்சித் தரவுகள். ஒரு நாட்டார் பழக்கம் ஆதிக்க சக்திகளால் மேல்நிலையாக்கம் செய்யப்படும்போது எத்தகைய கதையாடல்களை சனாதனம் உருவாக்குகிறது என்பதற்கான பட்டவர்த்தனமான எடுத்துக்காட்டினை இப்போது நீங்கள் கேட்கப் போகிறீர்கள். இது முடிந்ததும் இதன் உள்ளாடலை நான் விளக்குவேன்..”

நான் பதிவு செய்திருந்த ஆடியோ இப்போது கேட்க ஆரம்பித்தது. எலும்புக்கூட்டு பத்மநாப அய்யரின் பதிவு செய்யப்பட்ட குரல், தொடக்கக் கரகரப்பையும் பழக்கமின்மையையும் தாண்டி அனைவருக்கும் புரியும் ஒலியுடன் கேட்க ஆரம்பித்தது…

“அது ஒரு நூத்தம்பது வருஷமிருக்கலாம் என்னோட மூத்த பாட்டனார்… அவரோட பேரும் பத்மநாபையர்தான். அவர் நூத்தியஞ்சு வயசு வரை இருந்தார்னு சொல்லிக் கேட்டிருக்கேன்… அவர் ஒரு நா சாயுங்காலம் சந்தியாவந்தனம் முடிஞ்சி ஆத்துக்கு வந்துண்டிருந்தார்… அப்போ இங்க கோயிலெல்லாம் இல்ல. சாம்பார மக்களோட குலதெய்வமா இந்த கல் சுமதாங்கிதான் இருந்துது. பொதுவா இந்த வழியா எங்களவா வர மாட்டா… ஆனா அன்னைக்கு ஏனோ இவர் அப்படி வந்துட்டார்… அப்போ இந்த சுமதாங்கியண்டை சத்தியத்தான் சாம்பாரன்னு ஒரு பூசாரி, அம்மன் வந்து ஆடிண்டு இருந்திருக்கான்… இவர் இந்த வழியா வந்தப்ப அந்த அம்மன் வந்து ஆடினவன் இவர் மேல வந்து இடிச்சுட்டான்… எம் பாட்டனார் பத்மநாபையர் ரொம்ப ஆசாரமானவர். ரொம்பவே மடி பார்ப்பார். ரொம்ப கோபக்காரர். “ஏண்டா கீழ்ஜாதிப்பயலே, வேணும்னே எம்மேல இடிக்கிறியா?”ன்னு கோபத்துல தர்மத்தை மறந்து அவரை பளார்னு செவிட்லயே அறைஞ்சுட்டார்…

அப்ப அந்த சாம்பார சாமியாடி சிரிச்சுண்டே…”டேய் பத்மநாபா… நீ தினமும் கும்பிடுறயே அவளேதாண்டா இங்கே எங்குழந்தைகளுக்காக கல்தூண் சும தாங்கியா நிக்கிறேன்… ஏண்டா அங்கேனா பாலும் பழமும் நைவேத்யம் பண்ணுவ.. இங்கேனா அறைவியா… அதே கையால என் காலைத் தொட்டுக் கும்பிட்டு, தலைமுறை தலைமுறையா என்னை அர்ச்சனை செய்வடா” அப்படீன்னு சொல்லியிருக்கான்.

எல்லார் முன்னாலயும் இப்படிச் சொன்னதும் இவர் மூஞ்சியெல்லாம் சேப்பாயிடுத்தாம். இவர் தினமும் ஸ்ரீ சக்கரம் வைச்சு பூஜை செய்றவர். காலைலயும் சாயுங்காலமும் ஸ்நானம் செஞ்சுட்டு லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் செய்றவர். “ஏண்டா சண்டாளா, சர்வ ஞான ஸ்வரூபியான லலிதாம்பா எங்க? குடிச்சுட்டு கண்ட இறைச்சியையும் திங்கிறதுக்காக நீங்க உருவாக்கிக் கும்பிடற இந்த மாதிரி குட்டி தேவதைகள்ளாம் எங்க? நாளைக்கு காலைல உன்னை பஞ்சாயத்துல வந்து என்ன செய்றேன் பாரு…” அப்படீன்னு சொல்லிட்டு ஆத்துக்கு வந்துட்டாராம்.

sri-lalitha

அன்னைக்கு ஏனோ அவருக்கு தூக்கமே வரலையாம். திடீருன்னு அவருக்கு நெஞ்சுல ஏதோ பாரம் ஏறிட்ட மாதிரி இருந்திருக்கு. யாரோ பெரிய சுமையை நெஞ்சில தூக்கி வைச்சுட்டாப்ல.. நிக்க, நடக்கக் கூட முடியலை… அப்பவும் கூட அவர் வீட்ல யாரையும் தொந்தரவு செய்ய இஷ்டப்படலையாம். இப்பன்னா ஹார்ட் அட்டாக்னு சொல்லியிருப்பா… ஆனா அன்னைக்கு அது என்னன்னே தெரியலை. குழந்தை மாதிரி தவழத்தான் முடியறதாம்… இவர் ஒருவேளை அந்திமக் காலம்தான் நெருங்கிட்டுதோன்னு ஊந்து ஊந்து போயி அணையா விளக்கண்டை வைச்சிருக்கிற ஓலைச்சுவடியை எடுத்துப் பிரிச்சாராம்… அவர் பயன்படுத்தின லலிதா சஹஸ்ர நாம ஓலைச்சுவடிதான், நான் அன்னைக்கு கொடையில வாசிச்சேன் பாருங்கோ அதேதான். பரம்பரை பரம்பரையா பூஜாமுறில அத வைச்சிருக்கோம்…

ஆங் எங்க விட்டேன்…மார்ல கனத்தோட  அவர் வந்து அந்த சஹஸ்ர  நாம ஓலைச் சுவடியைப்  பிரிச்சாரா? பிரிச்சு பாத்தா, அவர் நேத்ரத்துல அந்த துளியூண்டு தீப ஒளியில, “ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விஷ்ராந்தி தாயினி” அப்படீன்னு… அப்படீன்னு அம்பாளோட பேரு வருதாம்… இதுக்குப் பொருள் உங்களுக்குத் தெரியுமோன்னா… அவதான் ஜனங்களோட ஜனனம், மரணம், வயோதிகம் அப்படீங்கிற பிறவிச்சுமைகளுக்குச் சுமை… சுமைதாங்கியா இருக்கான்னு அர்த்தம்… அவருக்கு அப்படியே ஆயிரம் கைகளால யாரோ மாறி மாறி அவர் கன்னத்துலயே அறையிற மாதிரி இருந்துதாம்… ஆனா என்ன அதிசயம் பாருங்கோ இப்ப அவரால எந்திருச்சு நிக்க முடிஞ்சதாம்…

அது நடுராத்திரி. ஆனா பாருங்கோ… அம்மா உன்னையா நான் அறைஞ்சேன்னு அந்த ராத்திரியிலேயே எழுந்துண்டு ஓடியிருக்கார்.. ஆத்துல உள்ளவாளெல்லாம் எழுந்துண்டு என்னா ஏதுன்னு பதறியடிச்சுண்டு பாக்க இவர் உன்மத்தனாட்டமா ஓடிண்டிருக்கார்… எங்கே…. அந்த சாம்பாரார் குடிக்கே ஓடியிருக்கார். ஏதோ வெறி பிடிச்ச மாதிரி… அவருக்கு பாதை எப்படி தெரிஞ்சுது? அந்த ராத்திரியிலே தெரியாது. ஆனாலும் கரெக்டா போயி அந்த சம்பார சாமியாடி, அதுதான் சத்தியத்தான் சம்பாரனோட குடிசைக்கே போயிட்டார்… எப்படிப் போனார், தெரியாது… அவன் காலடிலயே போய் விழுந்து, குமுறிக் குமுறி அழுதாராம்,

“…அம்மா உன்னை தலைமுறை தலைமுறையா சடங்காசாரத்தோட கும்பிட்டும் நீ ஸ்பஷ்டமா என் முன்னாடி நின்னப்போ அகங்காரத்தால என் கண்ணை மறைச்சிட்டியேம்மான்னு அழுதாராம்… எல்லாத்துக்கும் இந்த குல அகங்காரம்தானே காரணம்னு பூணூலைக் கழட்டி அந்த சத்தியத்தான் காலடிலயே போட்டுட்டாராம். அவன்கிட்ட தேம்பி தேம்பி அழுதுண்டே,… அம்பாள் எனக்கு சத்தியத்தை காண்பிச்சுட்டா… உங்க வாயாலா சொல்லிட்டா… இத்தனை நாள் என்னவெல்லாமோ சொல்லிக் கும்பிடுற எம்மேல ஆர்ப்பவிக்காத அம்பாள் உங்கமேல ஆர்ப்பவிச்சு எனக்கு ஞானத்தைக் காட்டியிருக்கா. இனி நீங்கதான் என்னோட ஞானகுரு.. நீங்க மன்னிச்சேன்னு சொன்னாதான் இந்த இடத்தை விட்டுப் போவேன்..” அப்படீன்னு நெடுஞ்சாண் கிடையா அவன் காலடியப் பிடிச்சுண்டு கிடந்தாராம்…

அப்புறம் சுமைதாங்கி அம்மன் ரூபத்துல அம்பாள் இரண்டு பேருக்குமே காட்சி கொடுத்து அந்தப் பூசாரிகிட்ட, “இந்த அய்யருக்கு ஞானத்தைக் கொடுக்க நான்தான் இந்த விளையாடலை செஞ்சேன், நீ மன்னிச்சேன்னு சொன்னாதான் இவருக்கு ஞானம் கிடைக்கும். நீயே உன் கையால அவருக்கு பூணூலை மாட்டிவிடு. அதோட என்னோட ஒவ்வொரு கொடைக்கும் கிடா பலி கொடுத்த உடனே அவன் எந்த ஏட்டிலிருந்து என்னோட பெயரைக் கண்டுபிடிச்சானோ அதை என் முன்னால உட்கார்ந்து பாராயணம் பண்ணணும்னு சொன்னாளாம்….

இப்படியா சத்தியத்தான் சாம்பார பூசாரி தினசரி பூஜை பண்றதும் இவரு ஒவ்வொரு கொடைக்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் பண்றதும் நடந்திண்டிருக்கு. அப்போ ஒரு பெரிய பஞ்சம் நாட்ல வந்துடுத்து… அதனால என்னாச்சு… இங்கேருந்த சம்பாராவையெல்லாம் கொத்தடிமைகளா வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சுட்டா…. ஏன்னா பாருங்கோ அவா விவசாய குடிகளா இருந்த பிள்ளைமார் இருக்காளே அவா துரையாளுங்களோட பேசி பணம் வாங்கிண்டு இவாள கொத்தடிமைகளா அனுப்பிட்டா. அப்போ அந்த சம்பார பூசாரியும் அவரோட குடும்பத்தோட போக வேண்டியதாயிடுத்து…

அப்ப அந்த பூசாரியோட ஸ்வப்னத்துல அம்பாள் தோணி, என் பெரிய பாட்டனார்கிட்ட இனி தினசரி பூஜையும் நீர் செய்யும்னுட்டு சூடம் அணைச்சு சத்தியம் வாங்கச் சொன்னா. அதை போல அவர் செஞ்சிட்டுப் போயிட்டார். அன்னைலேந்து எங்க தாத்தாவும் அப்புறம் பரம்பரையா நாங்களும் சுமைதாங்கி அம்மனுக்கு பூஜை செஞ்சுண்டு வர்றோம்…”

வாய்ஸ் ரெக்கார்டர் நின்றது.

ஃபாதர் வெற்றியரசன் பேச ஆரம்பித்தார்,

“மிக அருமையாகப் புனையப்பட்ட இந்தக் கதையாடலை நாம் எப்படி அறிந்து கொள்வது?. நாட்டார் தெய்வத்தைத் தன்னகப்படுத்த ஆதிக்க சக்திகள் உருவாக்கும் திறமையான கட்டமைப்பை இப்புனைவு காட்டுகிறது. இந்தக் கதையாடலில் எந்த இடத்திலும் அந்தத் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் பார்வை இல்லை பாருங்கள். அதற்கு வசதியாக அந்தத் தலித் மக்களே அங்கிருந்து நகன்று விட்டதாகக் கதையை உருவாக்கிவிட்டார்கள்.

இதனை வரலாற்றுப்படுத்தினால் இப்படி ஆழமாகப் பார்க்கலாம். ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம். ஆக இக்கதையின் உண்மை நிகழ்வில் பூணூல் அறுத்தலின் முதல் நிகழ்வு கூட இருந்திருக்கலாம். ஆனால் பார்ப்பன சமூக அகங்காரம் அதற்கே உரிய தந்திரத்துடன் பூணூலை அவர் கழற்றியதாகக் காட்டுகிறது. இங்கே கால்டுவெல் “பிராம்மணீயம் தன் ஆதிக்கத்துக்காக எந்த மூடநம்பிக்கையின் முன்னும் நெகிழ்ச்சியுடன் மண்டியிடும்” என்று சொன்னதை ஓர் ஆராய்ச்சியாளனாக நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பிறகு என்ன நடந்திருக்கும்? அதனை இவர் அரச படையுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி பூணூல் போடவைத்து, பின்னர் இந்த இடத்தின் வழிபாட்டு உரிமையிலும் ஒரு பங்கு வாங்கியிருக்கலாம். அத்துடன் அந்தத் தலித் மக்களை அரசு உதவியுடன் அழித்துவிட்டு அவர்கள் புலம்பெயர்ந்ததாகக் கதைகட்டியிருக்க வேண்டும். பார்ப்பனீயக் கைப்பற்றுதலே எப்படி மேல்நிலையாக்கத்தின் இறுதி இலக்காக இருக்கிறது என்பதற்கான மிகச்சிறந்த வரலாற்று ஆதாரமாக இந்த முழுச் சடங்கையும் அதனோடு இணைத்துப் பின்னப்பட்ட ஐதீகப் பின்னல்களையும் எம் ஆராய்ச்சியாளர் முன்வைக்கிறார்.

இந்த ப்ராஜெக்டில், செயல்திட்டத்தில், இத்தகைய நாட்டார் ஐதீகங்களை மேல்சாதிக் கதையாடல்களிலிருந்து சனங்களின் சாமிகளை மீட்டெடுத்து தலித்துகளின் பார்வையில் மறு கட்டமைப்பு செய்வதும் ஒரு முக்கியமான அம்சம்…”

“தவறு ஃபாதர் வெற்றி” அங்கு நிலவிய குறுகிய மௌனத்தைக் கிழித்தது ஓர் அழுத்தமான தெளிவான குரல்.

டாக்டர் மெய்கரன்!

”அந்த ஐதீகம் பார்ப்பனர்களுடையது மட்டுமல்ல. சாம்பாரர்களுடையதும்தான். சாம்பாரர்களிடம் இது நாட்டுப்பாடலாகக் கூட நிலவி வந்தது…”

ஃபாதர் ஏறக்குறைய உறைந்து நின்றார். அவர் கண்கள் குரோதத்துடன் மெய்கரன் மீது நிலைகுத்துவதைக் கண்டேன். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மெய்கரனின் கணீர் குரல் ஒருவித உணர்ச்சி விம்மலுடன் அறையை நிறைத்தது…
 
…அலறி வந்தார் அந்தணரும் பதறி வந்தார் பார்பபாரும்
அம்மனாடி சத்தியத்தான் சாம்பார குரு பாதமதில்
விழுந்து புரண்டாராம் வேதம் படிச்ச பிராம்மணரும்
அழுது புரண்டாராம் பாதகமில்லா பண்டிதரும்
குலப்பெருமை அகங்காரம் குருடாகிப் போனேனே
அகங்காரம் மேலேறி அரக்கனாய் போனேனே
முப்புரி நூலதனை காலடி முன்னே வைத்து
முப்புரமெரித்த அம்மா மாப்பு தா என்றழுதாராம்

மெய்கரன் நிறுத்தினார்.

எனக்குள் ஏதோ நடுங்கியது. பத்மநாப அய்யரின் அந்தப் பூஞ்சை உருவம், குங்குமம் பூசிய சுமைதாங்கிக் கல், உணை கொடுக்கும் கிடா, ஃபாதரின் குரோதக் கண்கள், அந்தச் சுதைவடிவ அம்மன் என்று ஏதேதோ என் முன்னால் வேகமாகச் சுழன்றன.

மெய்கரனின் குரல் என்னை ஓரளவு சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

”இந்த நாட்டுப்பாடலை நான் கேட்டிருக்கிறேன். இதை என்னுடைய தந்தைக்கு அவர் தந்தை பாடியிருக்கிறார். அதை அவர் எனக்குப் பாடியிருக்கிறார். இப்பாடலை முழுமையாக நான் உங்களுக்குத் தர முடியும். ஏனென்றால், ஃபாதர் வெற்றி, திருவிதாங்கூர் பஞ்சத்திற்காக மேற்கிந்தியக் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமையாக விற்கப்பட்ட சத்தியத்தான் சாம்பார சாமியாடிதான் என்னுடைய மூத்த தாத்தா.”

15 Replies to “சுமைதாங்கி [சிறுகதை]”

  1. கதை அற்புதம். நிறைய உள்குத்து வைத்து எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது…. ஆலந்தூர் மல்லன் எந்த ஊர் காரர்? அவரைப் பற்றிய விவரங்களையும் கொடுத்தால் நல்லது.

  2. அருமை. கிறிஸ்தவ மதமாற்ற கும்பல்கள் பலகாலமாக குத்தகை எடுத்திருக்கும் துறை நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆரய்ச்சிகள். அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை அழகாக எடுத்து வைக்கிறது இக்கதை. மனசாட்சியின்றியும், காசுக்காகவும் இவர்கள் தலைமுறைகளின் சரித்திரத்தையே திரித்து எழுதுகிறார்கள். மக்கள் இனியாவது விழிக்கட்டும்.

  3. ஜெயமோஹனின் “மாடன் மோட்சம்” எனக்குப் பிடித்த கதை. இந்தக் கதையை மாடன் மோட்சம் கதைக்குச் சொல்லும் பதில் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? 🙂

    கடைசிவரி படிக்கும்வரை ஊகிக்கமுடியாத கதையின் முடிவு அட்டகாசம்.

  4. மெய்கரன் என்ற ஒருத்தர் வெளிநாட்டிலே இருந்து வரார்னு எழுதினதுமே புரிஞ்சது. ஏதோ ஒரு வகையிலே இந்தக் கோயிலோடு சம்பந்தப்பட்டவர் என்பது. நல்ல கருத்து. நாட்டார் தெய்வங்களைத் தனிமைப்படுத்தி அதன் மூலம் மக்களையும் பிரிக்க நினைக்கும் ஆன்றோருக்கு (:P) நல்ல அடி.

  5. An absolutely outstanding narrative! This just reflects the actual happenings on the field and exploitation of our innocent folks. My hats off to the author.

  6. ஒரு கல்வியாளராகப் பல ஆண்டுகள் இத் துறையில் இருந்தபோது நாட்டாரியல் துறை ஆய்வின் போலித்தனங்களையும் – அதில் மட்டும் கிறித்தவர்கள் காட்டும் விசேடமான ஆர்வத்தையும்- தவறான வழிநடத்துதலையும் கண்டு நொந்திருக்கிறேன்.இச் சிறுகதை மிக உண்மையான நடுநிலைப் பார்வையோடு அதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

  7. பிரசார நெடி, சுலபமாக யூக்கிக்கக் கூடிய போக்கு என்ற குறைகளை கதையின் தரம், தொன்மத்தை உருவாக்கி இருக்கும் விதம், அந்த பாட்டு எல்லாம் மறக்க வைத்துவிடுகிறது. வாழ்த்துக்கள்!

  8. மிக அருமையான கதை. பல உண்மைகள் பொதிந்து உள்ளன.
    திரு ஆலந்தூர் மல்லன் அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  9. அருமையான கட்டுரை. யதார்தத்தில் நடந்தவை எவ்வாறு காழ் உணர்வுடன் பொய்யை உண்மைபோல் திரித்து பொதுமக்களை ஏமாற்றுவது என்ற கிருஸ்துவ கில்லாடிகளின் முகதிரையை விலக்கிகாட்டியுள்ள விதம் மிகவும் அற்புதம். பணி தொடர வாழ்த்துக்கள்

  10. நல்ல பதிவு. திரு பொன்னீலனின் ‘மறு பக்கம்’ படித்துப் பாருங்கள்.
    நன்றி.

  11. அருமை ஆணித்தரமாக அழுத்தமாக சொலப்பட்ட கதை

    எழுதளருக்கு என்னுடைய பாராடுக்கள்

    நன்றி
    மணிவண்ணன்
    புதுவை

  12. உண்மை என்றும் அழியாது. இது போன்ற போலி அக்கரை கொண்ட கிறிஸ்தவ பாதிரியாரகள் நம்முள் பிரிவு செய்து நமக்குள் சண்டைபோட வைக்கும் நய வஞ்சக செயல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நன்றி.

    நான் நேராக கண்டுள்ளேன்,முதலில் நமக்கு நம் மார்க்கத்தை பற்றி எவளவு தெரியும் என்பதை நம்மிடம் விசயம் பற்றி தெரிந்து கொள்வார்கள். பின்பு அதைவைத்து நம்மை குழப்பி ஜீசுஸ் அது என்பர்.

    பாதர்- பஞ்சகாயம் என்றல் என்ன தெரியுமா?

    நான் – பதில் சொல்லவில்லை (நினைவுபடுத்தி கொண்டு இருந்தேன் மனதில் )

    பாதர்- இயேசுவை சிலுவையில் அறைந்தபோது ஏற்பட்ட 5 காயம் தான். அது உங்க சுலோகத்துல சொல்லி இருக்கு என்றார்

    நான் – எங்கள் வேதம் தோன்றிய காலம் உங்கள் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டை முந்தியது என்று அறிவேன். மேலும் பஞ்சகாயம் என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும் – அதாவது ஆகாயம், காற்று, அக்னி ,நீர், நிலம் ஆகியவை என்று பதில் அளித்தபின் மதமாற்ற முயற்சியை என்னிடம் நிருத்தி விட்டு வேறு பக்கம் தொடங்க சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *