புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02

பாகம் – 01

dalit_waterதாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்பதை உயர்த்தப்பட்ட சாதியார் நிரூபித்த சம்பவங்கள் பல உண்டு. அம்மாதிரியான நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே நடைபெற்றிருக்கின்றன. முக்கியமாக, அம்பேத்கரின் மனதில் ஆழமான வடுவை, தான் இந்துவல்ல என்பதை, ஆணி அடித்தாற்போல புரிய வைத்த சம்பவங்கள்தான்  கோவில் நுழைவுப் போராட்டங்களும், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டமும்.

பம்பாய் டாகுர்துவார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு கோவில், தீண்டத்தகாதவர்களின் பிரவேசத்திற்காக  திறந்திருக்கும் என்று 1927 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அம்பேத்கர் அக்கோவிலின் அமைப்பாளர் குழுவின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைச் சந்திப்பதற்கான நேரம் விசாரித்துக்கொண்டார். பிறகு அவர் சித்கருடன் கோவிலை அடைந்தார். ஆனால், அருகாமையில் வசித்த மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். அனைவரும் சேர்ந்து அவரைத் தாக்கினார்கள்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அம்பேத்கர் தன் சாமர்த்தியத்தை உபயோகித்து, கோவில் செயலாளரின் அழைப்பின் பேரில்தான் அங்கு இருவரும் வந்துள்ளதாக விளக்கினார். நீண்டநேரம் வாத விவாதம், கேள்வி-பதில் விளக்கம் நடந்தன. இந்த மோதலுக்குப் பிறகு அம்பேத்கரும் சிவதர்கரும் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனர்.

டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக், பாபாசாகேப் கவாய் ஆகிய இருவரும் அமராவதி நகரில் அம்பாதேவி கோவிலுக்குள் தீண்டத்தகாதோர் நுழைவதற்கான சத்தியாகிரகத்தை ஆரம்பிக்க நிச்சயித்தனர். ஆலயப் நிரவேசக்குழு சார்பில் 13-11-1927 அன்று அமராவதி நகரில் இந்திரபுவன் தியேட்டரில் ஒரு மகாநாடு நடத்தப்பட்டது. அம்பேத்கர் தலைமை வகித்துத் தன் உரையில் கூறினார் :

caste___rig_veda___krsna_dvaipayana_vyasadeva‘‘எந்தக் கட்சிகளுக்கும் தீண்டத்தகாதவரின் ஆலயப் பிரவேசத்தினால் தீட்டு ஏற்பட்டுவிடாது. ஆகவே, தீண்டத்தகாத சமூகத்தினருக்காகத் தனியாகக் கோவில்கள் கட்டலாம் என்ற கருத்தை நான் எதிர்க்கிறேன். இந்துமதம் இந்துக்கள் அனைவருக்கும் உரியது என்றால் அது தீண்டத்தகாதவர்களுக்கும் உரியது என்றுதானே பொருள். இந்துமதத்தின் வளர்ச்சிக்குத் தீண்டத்தகாதவர்களான வால்மீகி முனிவர், ரவி தாஸ், சோகாமேளா முதலிய புனிதர்களும், க்ஷீத்நாக் போன்ற மஹர் சாதிப் பக்தர்களும் பெரிய அளவில் உதவி இருக்கின்றனர்.’’ என்று கூறினார்.

மகாநாட்டின் இரண்டாம் நாளன்று பரார் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர் யு.எஸ்.காபர்டேவின் அறிவுரையின் பேரில் ஆலயப்பிரவேச சத்தியாக்கிரகத்திற்கான நாள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடத்தப்படுவதற்குத் தள்ளிப் போடப்பட்டது.

பம்பாய் தாதர் பகுதியில் 1928 செப்டம்பரில் கணேசர் திருவிழாவில் தரிசனத்திற்கும் வழிபடவும் தீண்டத்தகாதவர்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், விழாக்குழுவினர் இதை ஏற்கவில்லை. ஆகவே அந்த விழாவில் தீண்டத்தகாதவர்கள் கலந்து கொள்வதைத் தடுக்கப் போக்கிரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். காவல்துறைவினரும் தீண்டத்தகாதவர்களுக்கு உதவ மறுத்து விட்டனர்.

கேலூஸ்கர் குருசிம், அம்பேத்கரும் அங்கு சென்று விழா மண்டபத்தில் சாதி இந்துக்களின் போக்கை எதிர்த்தனர். கடைசியில் மாலை 4 மணிக்கு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

ஆனால், விழாக்குழுவினர் 1929ல் மேற்படி உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டுவிட்டதென அறிவித்தனர். அம்பேத்கர், போலே, நிரபோ தன்கர் டாகரே ஆகியோர் சென்று மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கினர். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தீண்டத்தகாதவர்கள் கோவிலுள் செல்ல முடிந்தது.

இம்மாதிரியான கோவில் நுழைவுப்போராட்டங்களைச் சிறிய அளவில் அம்பேத்கர் பங்கெடுத்து நடத்தினார். ஆனால், அவரின் அடிமனதில் நெருப்புப் பொறி ஒன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது. அம்பேத்கரிடம் பற்றி எரிந்துகொண்டிருந்த அந்த நெருப்பு ஒருநாள் எரிமலையாக மாறியது. ஆம். அதற்கான இடம்தான் மஹாட் நகர்.

மஹாட்டில் என்ன நடந்தது?

பம்பாய் சட்டமன்றத்தில் 4-8-1923 அன்று எஸ்.கே. போலே ஒரு முக்கியமான தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி ஆறு, குளம், கிணறு  நீர்த்தேக்கம் முதலிய தண்ணீர் கிடைக்கக்கூடிய பொது இடங்களிலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பொது இடங்களிலும் தீண்டத்தகாதோர் பிரவேசிப்பதற்கு யாதொரு தடையும் கூடாது என்று முடிவு  செய்யப்பட்டது. பம்பாய் அரசு தன்னுடைய எல்லாத் துறைகளும் இந்தத் தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. ஆனால், உண்மையில் அந்தச் சட்டம் பின்பற்றப்படவில்லை. அன்றாடச் சமூக வாழ்வில் தீண்டத்தகாதோர் பொது இடங்களுக்கு வர அனுமதிக்கப்படவில்லை.
 
பொது இடத்துத் தண்ணீர் குடிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்று என்பதையும், அதற்குச் சட்டமும் பின்பலமாக இயற்றப்பட்டுவிட்டது என்பதையும் நிரூபிக்க அம்பேத்கர் ‘மஹாட்’ என்ற ஊரில் ‘சௌதார்’ என்ற பொதுக்குளத்தில் நீரைப் பருகித் தனது மனித உரிமையை நிலைநாட்டிக் கொள்ள நிச்சயித்தார். அப்போது தான் மற்றவர்களுக்கு இந்த உரிமை சரியாகப் புரியவரும் என்று அவர் கருதினார்.

மஹாட் என்ற ஊரை தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. மஹாட் நகரசபை ஏற்கனவே 1924ல் ‘இந்தக் குளம் பொதுக்குளமாகும். இதன் தண்ணீரை, தீண்டத்தகாதவர்கள் உட்பட, அனைத்து மக்களும் சுதந்திரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இதனால் அம்பேத்கர் தனது போராட்டம் சட்டத்தை மீறுவதற்கல்ல. சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருதவற்காகவே என்று உறுதியளிக்க முடிந்தது.

தனியார் நீர்நிலைகள் மீது தீண்டத்தகாதவர்கள் உரிமை கோர முடியாதென்று அவருக்குத் தெரிவிம். ஆனால் நகரசபை எல்லைக்குள் இருந்த பொதுக் குளத்தின்மீது, நகரசபைவில் சாதகமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், ஒரு குடிமகன் அல்லது மனிதன் என்ற முறைவில் யாரும் தனது உரிமையை நிலைநாட்டலாம் என்பதே அம்பேத்கரின் கண்ணோட்டம்.

மஹாட் நகரில் தீண்டத்தகாதோர் மாநாட்டை 19-3-1927ம் அன்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 5000 பேர் வந்தனர். இத்தகைய சூழ்நிலைவில் தண்ணீர்க் கஷ்டம் இருக்கக்கூடாது என்பதற்காக உயர்த்தபப்ட்ட வகுப்பினரிடமிருந்து 40 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி வைக்கப்பட்டது.

dalit_ambedkar_mahad_water-pondமறுநாள் காலை 9மணிக்கு மகாநாடு தொடங்கியது. தீண்டத்தகாதவர்களும் சௌதார் குளத்திலிருந்து நீர் நிரப்பிக் கொள்ளலாம் என்று மஹாட் நகரசபை எடுத்த முடிவை அமல்படுத்த வேண்டும் என்று இந்த மகாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கேற்ப அம்பேத்கர் புறப்பட்டதும் அவரைத் தொடர்ந்து 5000 பேர்களடங்கிய கூட்டம் ஊர்வலமாகச் சென்று சௌதார் குளக்கரையை அடைந்தது. அவர்கள் அக்குளத்தின் இனிய நீரைச் சற்றுப் பருகித் தங்கள் உரிமையை நிலைநாட்டினார்கள்.  பிறகு அனைவரும் மகாநாட்டு அரங்கிற்குத் திரும்பிவிட்டனர். அவர்களது முகத்தில் அற்புதமான மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒளிர்ந்தன.

பிறகு அவர்கள் நான்கைந்து பேர் கொண்ட பல குழுக்களாகப் பிரிந்து நகர்ப்பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம் மறுபுறம் சனாதனிகள் தீண்டத்தகாதவர்கள் மீது தாக்குதல் நடத்த, தீண்டத்தகாதவர்கள் உள்ளூர் வீரேசுவரர் கோவிலுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர் என்றும் இந்துமதத்திற்கு பேராபத்து வந்துவிட்டது என்றும் பிரச்சாரம் செய்தனர். திடீரென சனாதனிகள் மகாநாட்டு உணவுக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

லத்திக் கம்புகளால் தீண்டாதவர்களை தாக்கினர். ஒன்றிரண்டு பேராகத் தீண்டத்தகாதோர்,  மகாநாட்டுப் நிரதிநிதிகள்  என்று யாரெல்லாம் தென்பட்டனரோ அவர்களையெல்லாம் அடித்துநொறுக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் பார்த்தபோது அம்பேத்கருக்கு கோபம் பொங்கிவந்தது. ஆனால் இங்கு அம்பேத்கர் விவேகத்தைக் கையாண்டார். நாம் திருப்பித் தாக்கக்கூடாது. அகிம்சையை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளைவிட்டார். அதன்படியே தலித்துகள் அமைதியாக எல்லா இன்னல்களையும் தாங்கினர்.

கலவரம் அடங்கியதும் காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவரும் சம்பவம் நடந்த பகுதியைப் பார்வையிட்டனர். காவல்துறைவினர் கலவரம் செய்தவர்கள்மீது வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடைவில் பிராமண சமூகத்தினர் பெருமாள் கோவிலில் கூட்டம் நடத்தி, சௌதார் குளத்தை சுத்திகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அக்குளத்திலிருந்து 108 குடம் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் சாணம், பசுவின் சிறுநீர் பெற்றுக் கலந்து கெட்டிப் படுத்தி, பாலும் தயிரும் கலந்து பானைகளில் வைக்கப்பட்டது. பிறகு தண்ணீர்க் குடங்களில் அக்கலவையை ஊற்றி அனைத்தையும் மீண்டும் குளத்தில் கொட்டிவிட்டனர்.

நான்கு நாட்களுக்கு யாரும் குளத்தின் பக்கம் போகவில்லை. பிறகு பொதுமக்கள் அங்கே தண்ணீர் எடுக்க வரத்தொடங்கினர். அக்கூட்டத்தில் முகம்மதியர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் தண்ணீரைத் தொடுவதால் குளம் தீட்டுப் பட்டுவிட்டதாக பிராமணர்கள் யாரும் நினைக்கவில்லை.

மஹாட் நகரசபை 4-8-1927ல் புதியதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி சௌதார் குளம் பொதுவானது என்று முன்பு எடுத்த முடிவை நகரசபை திரும்பப்பெற்று ரத்து செய்தது.

சௌதார் குளம் சனாதனிகளால் சுத்தி செய்யப்பட்ட செய்தி அறிந்த அம்பேத்கர் கடுமையான வழி காண முடிவெடுத்தார். மீண்டும் சத்தியாகிரகம் செய்ய முடிவெடுத்து டிசம்பர் 25, 26 ஆகிய இரு நாட்களை தேர்ந்தெடுத்தார்.

மஹாட் பகுதி சனாதனிகள் நவம்பர் 27 அன்று வீரேசுவரர் கோவிலில் கூட்டம் நடத்தி டிசம்பரில் நடைபெறவுள்ள தீண்டத்தகாதோர் சத்தியாகிரகத்தை எப்படி முறியடிப்பது என்பது பற்றி விவாதித்தனர்.

பின் 12-12-1927 அன்று மஹாட் உரிமைவியல் நீதிமன்றத்தில் அம்பேத்கர், சிவதர்கர் ஆகியோர் மீது இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். நீதிமன்றம் டிசம்பர் 14 அன்று தடை உத்தரவு ஆணை பிறப்பித்து அம்பேத்கர் முதலியவர்களுக்கு நோட்டீஸ்  அனுப்பியது.

எல்லா அதிகாரிகளும் 19 அன்று அப்பகுதிவில் குழுமி விட்டனர். சௌதார் குளத்தின் நாற்புறமும் போலிஸ் காவல் போடப்பட்டது. மகாநாட்டுத் தலைவர்களும் தொண்டர்களும், கூட்டம் கூட்டமாக மக்களும் 21 அன்றிலிருந்து வந்து சேரத்தொடங்கினர்.

டிசம்பர் 25ம் நாள் அன்று மஹாட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள தாஸ்காம் துறைமுகத்தை வந்தடைந்தார் அம்பேத்கர். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப்பின் அவரிடம் மாவட்ட நீதிபதியிடமிருந்து வந்த கடிதம் ஒன்று தரப்பட்டது. ‘உடனே மஹாட் வந்து என்னைச் சந்திக்கவும்’ என்று நீதிபதி எழுதியிருந்தார். ஆகவே அம்பேத்கர் தனது நண்பர் ஸஹஸ்ரபுத்தேவுடன் சென்று நீதிபதியைச் சந்தித்தார்.

நீதிபதி சத்தியாகிரகத்தை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அம்பேத்கர் நான் என்னுடைய ஆதரவாளர்களுடன் விவாதித்த பிறகு என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று பதிலளித்தார்.

மாலை 4.30 மணிக்கு மகாநாடு தொடங்கியது. மகாநாட்டில் அம்பேத்கர் பேசியபொழுது ‘நாம் சௌதார் குளத்திலிருந்து நீரெடுத்துப் பருகாவிட்டால் உயிர்போய்விடுமோ என்ற பிரச்சினை எதுவும் இல்லை. இதன்மூலம் மற்றவர்களைப் போல் நாமும் மனிதர்கள்தான் என்பதை நிலைநிறுத்தவே விரும்புகிறோம். இந்தக்கூட்டம் சமூக சமத்துவத்திற்குப் நிள்ளையார் சுழி இடுவதற்காக நடத்தப்படுகிறது. அத்தகைய நோக்கம் கொண்ட இயக்கத்திற்கு இங்கே பந்தக்கால் நாட்ட விரும்புகிறோம்.’

இந்த மகாநாட்டை அம்பேத்கர் 5-5-1789 அன்று பிரான்ஸ்  தேசிய இயக்கத்தினர் பாரிஸ் அருகில் வெர்செவில்ஸ் என்ற இடத்தில் நடத்திய கூட்டத்துடன் ஒப்பிட்டு, ‘பிரெஞ்சுப் புரட்சியை நடத்த அவர்களுக்கு ஓர் அமைப்பு தேவைப்பட்டது. நாமும் அதுபோன்றதோர் அமைப்பை உருவாக்க வேண்டும். பிரெஞ்சு தேசிய சபை எடுத்துக்காட்டிய அதே வழிதான் இந்து சமூகம் உயர்வு பெறுவதற்குத் தேவைப்படும் வழியாகும். இரண்டு அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு இந்து சமூகத்திற்குப் புதிய வடிவம் தர வேண்டும். சமத்துவம், சாதியற்ற சமூக அமைப்பு என்பவையே அந்த அடிப்படைகள்’ என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில்தான் முக்கியமானதோர் தீர்மானம் இயற்றப்பட்டு அங்கேயே நிறைவேற்றப்பட்டது.

book_burningஇந்து சனாதானிகள் எந்த மனுநீதி நூலை வைத்து தீண்டாதாரை நசுக்கினார்களோ – அந்த மனுநீதி நூல் சனாதனிகள் மூளையில் ஆணி அடித்தாற்போல் பதிந்து இந்துசமூகத்தை பிளவுபடுத்திட வைத்ததோ அந்த மனுநீதி நூலை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற தீர்மானம் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டது.

இரவு 9மணிக்கு மகாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு, மனுநீதி நூல் அதன்மேல் வைக்கப்பட்டு தீண்டத்தகாத சாதிச் சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர்.

மனுநீதி நூலின் தகனம் முடிந்தபின் அம்பேத்கர் எழுந்து ‘ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்துகொள்ளட்டும்’ என்று முழங்கினார். மறுநாள் பெயர் கொடுத்திருந்த எல்லோரும் சத்தியாகிரகம் செய்ய தயாராக இருந்தனர். அன்று மாவட்ட நீதிபதியும் அவ்விடம் வந்து கோர்ட்டில் தாக்கலாகியுள்ள வழக்கைப் பற்றித் தெரிவித்தார். சட்டத்தை மீறினால் தண்டனை கிடைக்கக்கூடும் என்று தெளிவுபடுத்தினார்.

டிசம்பர் 27 அன்று சத்தியாகிரகிகளின் ஆர்வம் உச்சநிலையை எட்டியது. இந்தப்போராட்டம் இந்து சமூகத்தின் போக்கை எதிர்த்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அதனால் அரசாங்கத்தை எதிரியாக ஆக்கிக் கொண்டு நமது சக்தியை விரையமாக்கிவிடக்கூடாது என எச்சரித்து, சத்தியாகிரகம் ஒத்திவைக்கப்படுகிறது. நாம் போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டதாக இதற்கு அர்த்தமில்லை. நமது கிளர்ச்சி  நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும் என்று அறிவித்தார்.

அம்பேத்கரின் முடிவைக் கேட்டு அவைவினர் திகைத்துப்போய்விட்டனர். சில நிமிடங்களுக்கு நிசப்தம் நிலவியது. பிறகு அனைவரும் எழுந்து நான்கு நான்கு பேர் வீதம் வரிசையாக ஊர்வலம் புறப்பட்டனர். சௌதார் குளத்தை ஒருமுறை வலம்வந்து 12 மணிக்குத் திரும்பினார்கள். இரவு 10மணிக்கு சக்கிலியர் சேரியில் கூட்டம் நடைபெற்றது. அத்துடன் அம்மகாநாடு முடிவுற்றது.

சௌதார் குளத்து நீரைப் பயன்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்கில் 1937 மார்ச் 17ஆம் நாள் பம்பாய் உயர்நீதி மன்றம் தீண்டப்படாத வகுப்பு மக்களின் சார்பாகத் தீர்ப்பு வழங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன் தாணாவில் துணை நீதிபதி தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பைப் பம்பாய் உயர்நீதி மன்றத் தீர்ப்பு உறுதி செய்தது.

இந்த சௌதார் குள நிகழ்ச்சி அம்பேத்கரை மிகவும் பாதித்துவிட்டது. இஸ்லாலீயர்களும், கிறிஸ்துவர்களும் குளத்தில் தண்ணீர் அள்ளும் உரிமை உள்ளபோது நாம் தண்ணீர் அள்ளக்கூடாதா? அப்படியானால் நாம் இந்து இல்லையா? என்பதே அவர் உள்ளத்தில் சுழன்றுகொண்டிருந்த கேள்வி.

சௌதார் குள நிகழ்ச்சி மூலம் மனம் நொந்துக்கொண்டிருந்த அம்பேத்கருக்கு வேறு ஒரு நிகழ்ச்சி அவரின் உள்ளத்தை மேலும் ரணமாக்கியது.

அம்பேத்கர் 1929 ஆகஸ்டில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடுவதற்காக ரத்தினகிரிக்குச் சென்றார். அவர் தீண்டத்தகாதவர் என்பதால் அவருடைய ஆடையைச் சலவை செய்ய அங்குள்ள சலவையாளர் மறுத்துவிட்டார்.

பிறகு அம்பேத்கர் பம்பாய் அரசு அமைத்த ஸ்டார்ட் கமிட்டிக் குழுவினருடன் பெல்காம், கான்தேஷ், நாசிக் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு பள்ளியில் தன் மகனை வகுப்பறைக்கு வெளியில் உட்காரவைக்கிறார்கள் என்று புகார் செய்ததைக் கேட்டு அம்பேத்கர் அங்கு விசாரிக்கச் சென்றார். ஆனால், அவரே தீண்டத்தகாதவர்தான் என்பதால் பள்ளித் தலைமையாசிரியர் அவரையே உள்ளே விடவில்லை.
 
இத்தகைய கசப்பான அனுபவம் ஒருவரை இந்துமதத்தில் இருக்க சம்மதிக்க வைக்குமா? இவற்றையெல்லாம் விட அவர் நடத்திய கோவில் நுழைவு போராட்டம்தான் அம்பேத்கரின் உள்ளத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. நாங்களும் இந்துக்கள் தானே! என்பதை நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட கோவில் நுழைவுப்போராட்ட முயற்சியை எதிர்த்து, இல்லை தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை சனாதனிகள் பறைசாற்றிய நிகழ்ச்சியாக அமைந்து விட்டது.
 
இஸ்லாமிய எதிரிகளுக்குப் பயந்து கோவிலை மூடி வைத்திருந்த சரித்திரங்கள் நமக்குத் தெரியும். ஆனால் சொந்த சகோதரர்கள் எங்கே கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து புகழ்பெற்ற கோவிலை சனாதன இந்துக்கள் மூடி வைத்திருந்ததை அறிவீர்களா? ஆம். தம் சொந்த இன மக்கள் கோவிலில் நுழையக்கூடாது என்ற காரணத்திற்காக. ஒருநாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஒரு வருடக்காலமாக சனாதன இந்துக்கள் கோவிலை மூடி வைத்திருந்தனர்.

நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில்தான் இந்த மனித நேயமற்ற நிகழ்சி நடைபெற்றது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும்  கோவிலில் நுழைந்து வழிபட உரிமை உண்டு என்பதை நிலைநாட்டுவதற்காக அம்பேத்கர் ஆரம்பித்த போராட்டம்தான் காலாராம் கோவில் நுழைவுப் போராட்டம்.

1930ல் நாசிக்கில் உள்ள காலாராம் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆரம்பித்தார் அம்பேத்கர். தீண்டப்படாத வகுப்பு மக்கள் சத்தியாகிரகக் குழு ஒன்றை அமைத்தார். ஒரு காலக்கெடு கொடுத்து அந்நாளுக்குள் கோவிலைத் தீண்டப்படாத மக்களுக்குத் திறக்காவிடில் சத்தியாகிரகம் செய்வோம் அக்கோவிலின் அறங்காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதேவேளைவில் அக்கோவிலில் உள்ள இராமனை வழிபடும் உரிமையைப் பெற்றிட நாசிக்கில் அணி  திரளுமாறு மக்களுக்கு எழுச்சி மிக்க அறைகூவல் விடப்பட்டது.

கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது. சத்தியாகிரகம் ஆரம்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. 1930, மார்ச் 2 ஞாவிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அம்பேத்கர் தலைமையில் மாநாடு தொடங்கியது. முடிவில் ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது.

காலாராம் கோவிலின் கிழக்கு வாயில் அருகில் அந்த ஊர்வலம் வந்ததும், மாவட்ட நீதிபதி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், நகர நீதிபதி ஆகியோர் அந்த நுழைவாயில் அருகில் வந்தனர். கோவிலின் எல்லா நுழைவாயில்களும் மூடப்பட்டு விட்டிருந்ததால் ஊர்வலத்தினர் கோதாவரிப் படித்துறைப் பக்கம் சென்றார்கள்.

அங்கே அந்த ஊர்வலம் ஒரு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது. அன்றிரவு பதினொரு மணிக்குத் தலைவர்கள் கூடிப்பேசினார்கள். அனைத்து அம்சங்களையும் விவாதித்தபின் கோவிலின் வாயில்களின் முன்னர் அமைதியான முறைவில் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு  செய்தனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அப்போராட்டம் 1930 மார்ச் 3ஆம் நாள் காலை தொடங்கியது.

8000 சத்தியாகிரகிகள் பதிவு செய்திருந்ததில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழுவினரான 125 ஆண்களும் 25 பெண்களும் கோவிலின் நான்கு நுழைவாவில்களின் முன்பும் அறப்போரைத் தொடங்குவதற்காக நின்றனர். ஆனால் கோவிலின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுக் கிடந்தன. அருகில் போகக்கூடாது என்பதற்காக வாசல்களில் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நுழைவாயில் முன் சத்தியாக்கிரகிகள் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடினார்கள். பஜனை செய்தார்கள்.

dalit_kalaram_temple_entry_ambedkarமூவாயிரத்திற்கும் மேற்பட்ட தீண்டப்படாத வகுப்பு மக்கள் அங்கே குழுமினர். காவல்துறையினர் எச்சரிக்கைவிட்டு செயலில் இறங்கத் தயாராக நின்றனர். கோவிலின் ஒவ்வொரு நுழைவாவியிலிலும் பலத்த காவலர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரண்டு முதல் வகுப்பு நீதிபதிகள் தேவையான நடவடிக்கையை எடுப்பதற்காகக் காலை முதல் அங்கேயே இருந்தனர். காவல் துறை கண்காணிப்பாளரான ரினால்ட்ஸ் அவருடைய அலுவலகத்தைக் கோவிலுக்கு எதிரே அதற்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு மாற்றிக் கொண்டார்.

கோவிலின் நான்கு நுழைவாயில்களும் மூடப்பட்டுவிட்டதால் சாதி இந்துக்களும் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த முட்டுக்கட்டையை நீக்குவது எப்படி என்று சாதி இந்துத் தலைவர்கள் இரகசியமாகக் கூடிப்பேசினார்கள்.
 
அன்றிரவு நாசிக் குடிமக்கள் கூட்டம் சங்கராச்சாரியார் டாக்டர் குற்றக்கோட்டி தலைமையில் நடைபெற்றது. வைதிக இந்துக்கள் பெருமளவில் அக்கூட்டத்தில் இருந்ததால் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. கூட்டத்தில் கற்களும் செருப்புகளும் வீசப்பட்டன.

இச்சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து ஒரு மாதம் நடந்தது. ஏப்ரல் 9ம் நாள் வந்தது. இராமனின் உருவத்தைத் தேரில் வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நாள் அது. ஆகவே, தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு உருவாக்கப்பட்டது. இருதரப்பிலும் உள்ள சிலர் தேரை இழுத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  அக்காட்சியைக் காண அன்று பகற்பொழுதில் ஆயிரக்கணக்கானவர்கள் கோவிலின் முதன்மை வாயிலருகே கூடினார்கள். தான் தேர்ந்தெடுத்த ஆட்களுடன் அம்பேத்கர் அக்கோவிலின் வாயிலருகே நின்றார். ஆனால், அம்பேத்கரின் போராட்ட வீரர்கள் தேரைத் தொட்டு இழுப்பதற்குள் சாதி இந்துக்களில் இருந்த சிலர் அவர்கள் மீது பாய்ந்து அவர்களோடு சண்டை இட்டனர்.

முன்னரே தாங்கள் இரகசியமாகத் திட்டமிட்டிருந்தவாறு சாதி இந்துக்கள் தேரை இழுத்துக் கொண்டு ஓடினர். முட்கள் நிறைந்த, இருபுறமும் பாதை வசதியில்லாத ஒரு குறுகலான தெரு வழியாக வேண்டுமென்றே தேரை இழுத்துச் சென்றனர். அத்தெருவின் இருமுனைகளிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறைவினர் அரணாக நின்றிருந்தனர்.  கத்ரேக்கர் என்ற பெயர் கொண்ட பந்தாரி இளைஞன், சுடுவதற்கான ஆணைக்காகக் காத்துக்கொண்டிருத காவல் துறையின் அரணையும் துணிச்சலாக உடைத்துக்கொண்டு தேரை நோக்கிப் பாய்ந்து சென்றான். அடுத்த நொடியில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் பெருங்கூட்டமாகத் தங்கள் மீது எறியப்படும் கற்களையும் கூடப் பொருட்படுத்தாமல் பாய்ந்து முன்னேறிச் சென்று அத்தேரைக் கைப்பற்றினார்கள். படுகாயமடைந்த கத்ரேக்கர் கீழே விழுந்து குருதி வெள்ளத்தில் மிதந்தான்.

அம்பேத்கரை அவருடைய தோழர்கள் பாதுகாத்தனர். அவரைப் பாதுகாப்பதற்காகப் பிடிக்கப்பட்ட குடைகளும் சின்னா பின்னமாயின. அதனால் அவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. நாசிக் நகரம் முழுவதும் தீண்டப்படாத வகுப்பு மக்களும் சாதி இந்துக்களும் தடுப்பாரின்றி மோதிக் கொண்டனர்.

உடன்பாடு காணுமாறு இருதரப்பினரிடமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர் மூஞ்சே, சங்கராச்சாரியார் டாக்டர் குற்றக்கோட்டி ஆகிய இருவரும் உடன்பாட்டை உருவாக்கிட முயன்றனர். பெருஞ்செல்வரான நிர்லா1930 ஏப்ரல் மாத மத்தியில் பம்பாயில் அம்பேத்கரைச் சந்தித்து அது தொடர்பாகப் பேசினார். ஆனால், தீண்டப்படாத வகுப்பு மக்கள் தம் கொள்கையில் உறுதியுடன் நின்றனர். அதனால் சாதி இந்துக்கள் புகழ் மிக்க காலாராம் கோவிலை ஓராண்டுக் காலம் மூடியே வைத்திருக்க நேரிட்டது.

1930ல் டாக்டர் மூஞ்சே அளித்த உறுதிமொழியின் பேரில் அப்போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு குழுவை அமைப்பதாக 1930ல் மூஞ்சே உறுதி கூறிவிருந்தார். பல மாதங்கள் கடந்த பின்னரும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அப்போரட்டத்தைத தொடங்குவது என்று முடிவு  செய்தனர்.

1931ல் மீண்டும் தொடங்கியது போராட்டம். அம்பேத்கர் அவர்களிடையே கிளர்ந்தெழும்படியான உரையை ஆற்றினார். நாசிக்கில்  நண்பகலில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் ஓர் ஊர்வலத்தை நடத்தினர்.

ஊர்வலத்தின் ஒரு திருப்பத்தில் வைதிகக் கும்பல் ஊர்வலத்தினர் மீது கற்களை வீசியது. இதுவும் கலவரத்தில் முடிந்தது. அப்போராட்டம் 1935 அக்டோபர்  மாத இறுதிவரை நீடித்தது.

அன்றைய பம்பாய் மாகாணம் முழுவதும் தீண்டப்படாதவர்களுக்கு சனாதன இந்துக்கள் விதித்திருந்த மனிதநேயமற்ற சட்டங்கள் அம்பேத்கரின் மனதை இறுக்கியது. ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச்சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கறுப்புக் கவிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.

பம்பாயில் தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும்போது அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.

பம்பாய் மாகாணத்தில் சோனார்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்பாய்ச்சி உடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கைவில் நமஸ்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இப்படி சட்டங்கள் செய்து தீண்டப்படாதவர்களை மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தினர் சனாதனிகள்.

இதையெல்லாம் பார்ப்பவருக்கு எப்படி இந்துமதத்தில் இருக்க மனம் ஒப்பும் என்பதை நடுநிலையாளர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்துதான் – இந்த நாட்டில் தீண்டப்படாதவர்கள்மீது இந்துக்கள் நடத்திய கொடுமைகளைப் பார்த்துத்தான் அம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தார்.

இதில் குற்றம் அம்பேத்கருடையது அல்ல. இந்துமதத்தை – மனுநூலை – காரணம் காட்டி தீண்டப்படாதவர்களை அடிமைகளைவிட மோசமாக நடத்திய பிராமணர்கள், உயர்சாதி இந்துக்கள்தான் குற்றம் இழைத்தவர்கள்.  அவர்கள்தான் இதற்கு ஜவாப்தாரிகள்.

ஆனால், ஒன்று யோசிக்கத்தோன்றுகிறது. ஏன் அம்பேத்கர் இந்துமதத்தை சீர்திருத்த முயலவில்லை? கேரளத்தில் தோன்றிய நாராயணகுரு போல் இந்துமதத்தை சீர்திருத்த முயன்றிருந்தால் அவர் வெற்றிபெற்றிருக்கலாம் அல்லவா? என்ற எண்ணம் நமக்குத் தோன்றலாம்.

ஆனால், உண்மையில் அம்பேத்கர் முதலில் இந்துமதத்தை சீர்திருத்தத்தான் முயன்றார். அதற்கான வேலை திட்டங்கள் தான் சௌதார்குளம் போராட்டமும், காலாராம் கோவில்நுழைவுப் போராட்டமும். அம்பேத்கருடைய ஆரம்பகால செயல்பாடுகள், பேச்சுகள் அப்படித்தான் அமைந்திருந்தன.

அடுத்த கட்டுரையில் அவற்றைக் காண்போம்.

10 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02”

  1. Pingback: Indli.com
  2. இந்து உயர் சாதியினர் இவ்வளவு கேவலமாக தீண்டத்தகாதவர்கள் என்று நம் சகோதரர்களை நடத்தியிருக்கின்றனர் என்பதைப் படிக்கும்போதே மனம் பதைக்கிறது. தற்போதும் சில குறிப்பிட்ட சாதியினர் தங்கள் சாதிவெறியை கடைப்பிடிப்பதைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படுகிறேன். ஹிந்து மதத்தை பல அறிஞர்கள் , மகான்கள் சீர்திருத்தியுள்ளனர். ஏனெனில் ஹிந்து மதம் காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது. ஆனால் இஸ்லாம் இன்னும் முகமது நபி காலத்திய கோட்பாடுகளுடன் வன்முறை கலாசாரத்துடன் உள்ளது. அதை திருத்த எந்த அறிஞராவது முயன்றால் அவருக்கு அதோகதிதான். ஆனாலும் இஸ்லாத்தை வன்முறையிலிருந்து திருத்த மிதவாத முஸ்லீம்கள் முயலவேண்டும்..

  3. மேல் சொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை கவிநடையில் இங்கு என்னால் இயன்ற வரையில் தர முயன்றிருக்கிறேன். தகவல் தந்த பேரறிஞர் வேங்கடேசனுக்கு நன்றிகள்..

    நீர் சூழ் இவ்வுலகில் வாழ்பவர் எல்லாம்
    நித்தியமாம் பரம்பொருளின் தவப்புதல்வர் என்றால்
    சீர் பெற்ற கோயிலும் திருத்தேரும்
    செம்மலாம் பரம்பொருளை வழிபடுதற்கான
    ஆரா விருப்பின் அடிப்படையாயுற்ற
    அற்புத நிலையங்கள் எனில் வாரும்

    ஊரெல்லாம் கூடி இழுக்கிற தேரின்
    உன்னத வடம் பிடித்து இழுப்போம் என்றான்
    கூர் விழியன் குற்றமில் செய்கை
    குணமுடையான் ஒருவன் அங்கு நின்று…

    அந்த சீராளன் ஓர் இளைஞன்
    செம்மை அறம் காக்க வந்த கத்திரேக்கரன்
    சுந்தர உருவினன் சூரியனையும் எட்டிப்
    பிடிக்க முயலும் உழைப்பாளி

    விந்தையான மனுநீதி முறைமை கண்டு
    வாய் விட்டுச் சிரித்து இது
    மந்த புத்தி மடையர்கன்றி மற்றார்
    மறந்தும் தொடக் கூடாதென்றவன் அவன்

    அண்டையில் நின்ற தன் அயலவரை உறவினரை
    அன்புடன் அழைத்தனன் ஆண்டவன்
    அழகிய நாமங்கள் கூவுமின் கூவி
    கொண்டாடுமின் என்றான்

    கோலத் தேர்
    கும்பிட்டு குனிந்தே வடம் தொட்டான்
    அவ்வேளை…….

    நில் என்றான் ஓராள்
    நிறுத்தென்றான் மற்றோரால்
    பல் என்றான் ஓராள்
    புலை என்றான் வேறோராள்
    கல் என்று ஓராயிரம் கல் கொண்டு தாக்க
    கருத்தழிய முன்னம்
    சில் என்று வந்து துப்பாக்கி சன்னம்
    சிதைத்தது…. அந்தோ அந்தோ ..

    கல்லும் மல்லும் குண்டும்
    கருத்து இல் மனிதர் சொல்லும்
    வல்லுறவாய் தாக்க மனிதர்
    கொலை பட்டு யுத்தகளமானது
    தேர் விழாவாம் திருநாள்

    உலகமே போற்ற உயர்வாய் உகந்த தேர்
    நிலை கொண்டு விட்டதங்கே
    நியாயம் தனைக் கண்டு நாராயணனும்
    நின்று விட்டான்… அமைதியாய்
    மக்களுடை ‘மதம்’ தனைக் கண்ட படி..

    கண்ணனாய் பிறந்த கடவுளும்
    கோபியக் கண்ணனென்றே
    கோதறு புகழ்பெற்றான்

    குமரனாம் முருகனும் வேடர்
    குலக்கொடி மீதே காதல்
    கொண்டு வந்து அவளை கூட்டிச் சென்றனனாம்

    இது அறியாத மனிதர் இங்கே அமைக்கின்ற அவலம் கண்டால்
    ஆர் ஆரிடம் சொல்லி அழுவது அறிகிலோமே?

    வான்மீகி ஆகி மாவசிட்டனாக
    வந்த ஒரு மாமனிதன் சுற்றம் இங்கே
    வலி கொண்டு துடிக்கிறது…

    தி.மயூரகிரி சர்மா (நீர்வை, யாழ்ப்பாணம்)

  4. இந்திய ஆலயங்கள், மன்னர்கள் ஆதரவுடன், அவற்றில் உறையும் தெய்வங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டவை. பிற்காலத்தில், அம்மன்னர்கள் பரம்பரைகள் மாறி, அந்நியர்கள் ஆதிக்கம் ஏற்பட்ட போது, ஏற்பட்ட நிகழ்ச்சிகளை, கட்டுரை விவரிக்கின்றது. ஆலயங்களில் தெய்வங்களை வணங்க, நிச்சயமாக, அந்நாளில், அடிப்படையான பழக்கங்களான, குளித்தல், மரக்கறி உண்ணுதல் போன்றன, போராட்டக் காரர்களின் தலைவர்களாலும், போராட்டக் காரர்களாலும், எவ்வளவு தூரம் பின்பற்றப்பட்டன என்பது தெரியாது. நேற்றோ முந்தினமோ, வெளிநாட்டில், லக்குமி தேவியின் உருவம் புட்டத்தில் பதித்த, நீச்சல் உடை பவனி,நடைபெற்றது. மற்றும், உண்ணா விரதம் இருக்கும் போது, எதிரிலேயே அமர்ந்து, உண்ணும் கேளிக்கை நடத்தும் சமுதாயம் இது. எனவே, இவைகளையும் மனதில் கொண்டு, கட்டுரை தொடர்தலும், வாசகர்கள் படித்துப் பாராட்டுதலும் நன்று.

  5. அம்பேடுக்கர் இவ்வாறு நடந்து கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய மெக்காலே கல்வி முறை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. என்னை பொறத்தவரை கிறித்துவ பிரிட்டிஷ் கல்வி முறையால் அவர் மூளை நன்றாக மழுங்கிவிட்டது என்று தான் சொல்வேன். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் நாராயண குரு அய்யா அவர்கள். அறிவியல் தொடர்பான கேள்விக்கு நீங்கள் கணக்கு புத்தகத்தில் பதில் தேட கூடாது. அப்படி இருக்கையில் இவர் ஏன் மதம் மாறினார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்க வாய் நாடி வைப்ப செயல் என்று வள்ளுவர் கூறியது அவருக்கு தெரியாமல் poivittathu.

    ராஜா,

    நீங்கள் சொல்லும் உயர் சாதியினர், பிரிட்டிஷ் அடிவருடி உயர் சாதியினர். ஆதலால் எழுதும் பொழுது தெளிவாக எழுதுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். எவனவன் மூளையை மழுங்க செய்யும் ஆங்கில கல்வி முறையை படித்தார்களோ அவர்கள் அனைவரும் தான் இந்த செயலை செய்தர்கள். கம்யூனிஸ்ட் கயவர்கள் கூட்டம் உருவானதே இந்த ஆங்கில கல்வி படித்த உயர் சாதியினர் தான் என்பதை மறந்துவிட வேண்டாம். இப்பொழுதும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதன் அடிவருடி தொலை காட்சிகளும் இந்த மேற்கத்திய அடிவருடி உயர் சாதி கயவர்கள் தான் காரணம்.

  6. மகாத்மா காந்தி நூல்கள் (20 – பகுதிகள் – அவினாசலிங்க செட்டியார்)
    டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறார் ?!! அவரது குற்றசாட்டுகள் –
    1. மனிதாபிமாமற்ற நடத்தை
    2. குற்றம் செய்தவர்கள் கூச்சமின்றி தங்கள் நடவடிக்கைகளை நியாயம் என்று ஸ்தாபித்தல்
    3. அவர்களுடைய கூற்றிற்க்கு வேத நூல்களில் தாம் கண்டுபிடித்த ஆதாரம்
    டாக்கர் அம்பேத்கர் அவரது பிரசங்கத்தில் உண்மையிலும் மதிப்பிலும் சந்தேகத்திற்கு கிடமான நூல்களை பொறுக்கியெடுத்து மேற்கோள் காட்டியுள்ளார். தங்கள் மதத்தின் பிரதிநிதிகளாக இருக்க சிறிதும் தகுதியற்ற இழிவான இந்துக்களின் போக்கை அவர் சுட்டிகாட்டியுள்ளார். இது பெரும் தவறு என்பது என் அபிப்பிராயம். அவர் காட்டியுள்ள உதாரணத்தைகொண்டு தீர்மானிப்பதாயின் உலகில் எல்லோரும் அறிந்த சாசுவதமான எந்த மதமும் அவர் சோதனையில் தேறமுடியாது.
    அறிவாளியான டாக்டர் அம்பேத்கர் சாமர்த்தியமான தமது பிரசங்கத்தில் தம்கட்சியை நிரூபிப்பதில் அதிகப்படியாகப் போயிருக்கிறார். சைதன்யர் , ராமகிருஷ்ன பரமஹம்சர், ராஜாராம் மோகன்ராய் ,தாகூர் ,விவேகானந்தர் இன்னும் பலராலும் உலகமறிய ஒப்புக்கொள்ளப்பட்ட ஒருமதம் அம்பேத்கர் கூறுவதுபோல் அவ்வளவு தகுதியற்றதாக இருக்கமுடியாது.
    ஒரு மதத்தை அது உற்ப்பத்தி செய்துள்ள உதாரண புருஷர்களான சிறந்த மகான்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டுமே யன்றி மிகவும் மட்டமானவர்களைக் கொண்டு தீர்மானிக்க கூடாது ஹரிசன் (18.7.36)

  7. சோழன், ரியாலிட்டி ஆகியோரின் பதிலை படிக்கும் போது இன்னும் ஆயிரமாயிரம் அம்பேத்கர்கள் தோன்றவேண்டுமென்றே தோன்றுகிறதே

  8. ( தலித்துகளும் பிராமணர்களும் – கே.சி. லட்சுமிநாராயணன் )

    காந்தி அம்பேத்கர் இருவருமே மிகவும் போற்றுதலுக்கு உரிய பெரும் தலைவர்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இருந்தும் இருவரிடமும் சில குறைகள் இருந்தது என்பதையும் மறைக்கமுடியாது மறுக்கவும்முடியாது என்பதுதான் எதார்த நிலை. அதில் முக்கியமாக தேவைஇல்லாதது காந்தியின் அளவுக்கு மீறிய இஸ்லாமிய பாசம் அம்பேத்கரின் அளவுக்கு மீறிய இந்துமத வெறுப்பின் வெளிப்பாடு. நான் விரும்பிய சில அம்பேத்கரின் கொள்கைகள்.

    1. பாக்கிஸ்தான் பிரிவினையை மறைமுகமாக ஆதரித்தாலும் அப்படி பிரிந்தால் இங்குள்ள இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு கட்டாயம் அனுப்பிவிடவேண்டும் அவ்வாறு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை நாம் இங்கே அழைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதை செய்ய தவறியது காந்தி காங்கிரஸ்
    2. மொழிவழி மாநிலங்கள் பிரிப்பதை குறித்து ஏற்ப்படுத்திய எஸ.கே.தார் கமிஷனுக்கு அம்பேத்கர் ஒரு நீண்ட மனுவை அளித்து மொழிவாரி மாநிலங்களாக பிரிப்பதால் உண்டாகும் பின் விளைவுகளை எடுத்துகூறி அது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும் என்று எச்சரித்தார். அதற்கும் காந்தி காங்கிரஸ் செவிசாய்கவில்லை இன்று இதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகி நமது தேசிய சிந்தனையை முற்றிலுமாக இழந்துள்ளோம் என்பது மிகவும் வேதனைகுறிய விஷயமாகும்.
    3. நான் முதலில் இந்தியர்களாகவும் பிறகு ஹிந்துகளாகவோ முஸ்லீமாகவோ இருக்கிறோம் என்று சிலர் கூறுவதை நான் விரும்பவில்லை. நாம் இந்தியர்கள் என்ற விசுவாசத்தை மதம் பண்பாடு மொழி ஆகியவற்றால் உருவாக்கூடிய எந்த விசுவாசமும் மிகச் சிறிய அளவில் கூட பாதிக்ககூடாது என்று நான் விரும்புகிறேன். மக்கள் அனைவரும் முதலிலும் இறுதியிலும் இந்தியர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    4. இஸ்லாத்தில் சகோதரத்துவம் என்பது உலகில் அனைத்து ஜனங்களுக்குமான சகோதரவத்துவம் அல்ல. அது முஸ்லீம்களுக்கு மட்டுமே இடையே உள்ள சகோதுவரத்துவம். அது ஒரு தனி கார்பரேஷன் போன்ற கட்டுபாடன அமைப்பு அந்த கார்பரேஷனுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு வெறுப்பை தவிற வேறு எதுவும் கிடையாது. அதனால் பல கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டுவர்களுக்கு தயவு தாஷ்சின்யம் காட்டுவது தவறான முன்உதாரணம் ஆகும். இதனால் அவர்களது வெறிசெயல் இந்துகளுக்கு எதிர்கும் திராணியில்லை என்ற கேவல எண்ண மனபோக்கால் மேலும் வெறுப்புக்கள் தீவிரமடையுமே அன்றி குறையாது.

  9. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை ஹிந்துகளிலிருந்து முற்றிலும் தனியாக பிரிக்கும் ஒரு சூழ்ச்சித்திட்டத்தை அன்றைய பிரட்டிஷ் ஏகாதிபத்திய அரசு செயல்படுத்த முயன்றது. அன்று இந்தியாவில் முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் சீக்கியர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்குத் தேர்தல்களில் தனி வாக்காளர் தொகுதிகள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் இருந்தன. அது போல் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகளை அமைக்க வேண்டும் என்ற யோசனையைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிலர் எழுப்பினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரிதிநிதிகளைத் தாழ்த்தப்பட்ட மக்களே தேர்தெடுக்க வேண்டும் என்பதே யோசனை.. இதற்கு காந்தி எதிர்பு தெரிவித்ததோடு இது தலித்துகளை இந்துகளிடமிருந்து பிரிக்கும் கொடுஞ்செயலாகும் என்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

    காந்திக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. அதில் மிகவும் தீவிரமடைந்து கருத்து வேறுபாடு இதுதான். பின்பு பல தலைவர்களின் பெரும் முயற்சியால் அம்பேத்கர் விட்டுகொடுத்து தலித்துகளுக்கு மட்டும் என்று சில தனிதொகுதிகளை ஏற்படுத்தி தேர்தலில் எல்லா பொதுமக்களும் அவர்கள் சார்நத கட்சிக்கு வாக்களிக்கும் முறையை ஒத்துக்கொண்டார். இதில் வேதனை என்னவென்றால் இதன்பின் வந்த தேர்தல்களில் அம்பேத்கர் சார்பில் போட்டியிட்ட தலித்துகளை காங்கிரஸ் சார்பில் நின்ற வேறு ஒரு தலித் வேட்பாளர் தொடர்ந்து தோற்கடித்துவந்தது இருவருக்குமிடையே உள்ள பிரிவை மேலும் அதிகரித்தது. பெருந்தன்மையாக காந்தி காங்கிரஸ் சார்பில் தலித் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தாமல் இருந்தால் நிச்சயம் அம்பேத்கரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும். அதை செய்ய காந்தி மறுத்துவிட்டார் என்பதே உண்மை.

  10. சோழன் மற்றும் ரியாலிட்டி ஆகியோர்களின் கமெண்டுகளைப் படிக்கும்போது, அம்பேத்கர் பற்றிய தவறான கருத்துக்கள் எந்த அளவு பரப்பப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. இவர்கள் இத்தகைய தவறான கருத்துக்களினால் எழுந்த தவறான புரிதல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

    இதைச் சரி செய்ய, தமிழ் இந்து தளத்தில் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள், மற்றும் அவர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை அடிக்கடி வெளியிடவேண்டும் எனக் கோருகிறேன்.

    ஜெய் பீம் ! வந்தே மாதரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *