[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 17ம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம்  –  இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

இஸ்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிக நெருக்கத்தில் உள்ள சமயம் என்ற பிம்பம் பிரபலமான தலைவர்கள் முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை மனதில் வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் ஈவேரா கூட இஸ்லாமே மதமாற்றத்திற்கு சிறந்தது என்றார். ஆனால் அம்பேத்கர் தீண்டப்படாதவர்களின் மதமாற்றத்திற்கு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. ஏன்? ஏனென்றால் அம்பேத்கர் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார். அம்பேத்கர் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்பதை எதை வைத்து நிர்ணயிப்பது? இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனென்றால் அம்பேத்கரின் மதமாற்றம் வெறும் பொருளாதார காரணங்களுக்காக அல்ல. அதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மதமாற்றம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவைகளுக்காக மட்டுமல்ல. ஆன்மிகம், கலாச்சாரம், சமூகமுன்னேற்றம், தேச முன்னேற்றம், தேசபாதுகாப்பு, தேசிய உணர்வு, சமூக உணர்வு, சமூக அங்கீகாரம், சேர்ந்து வாழுதல், பெண்கள் உரிமைகள் போன்ற எண்ணற்ற காரணங்கள் அதன் பின்னே நிற்கின்றன. மதமாற்றத்தின் மூலம் இவைகளுக்கு ஊறுவிளைவிப்பதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அதேசமயம் தீண்டப்படாதவர்கள் மனங்களில் இந்த நேர்மறையான எண்ணங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் மிக கவனமாகவே செயல்பட்டு வந்தார்.

தலித்துகளின் தேசியக் கண்ணோட்ட்த்திற்கான அவசியம்:

11-1-1950ல் பரேல் பகுதியில் பம்பாய், மாநில ஷெட்யூல்டு சாதி சங்கத்தின் சார்பில் அம்பேத்கருக்கு பாராட்டுவிழா நடந்தது. அப்போது அவர் பேசுகையில், ‘தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தலித்துகள் தேசியக்கண்ணோட்டத்தை ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும்? ஏனென்றால் இது நமது தேசம் என்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது. தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பிரிட்டிஷாருக்கு உரிய திறன், விருப்பம் ஆகியவை இல்லாதிருப்பதை அம்பேத்கர் உணர்ந்தே இருந்தார். அதனால்தான் ‘நாட்டில் எல்லோருக்கும் நீதியை வழங்கக்கூடிய அளவுக்குச் சமூக மற்றும் பொருளாதார நெறிமுறைகளைத் திருத்தும் துணிச்சல்மிக்க ஓர் அரசாங்கம் தேவை என வலியுறுத்தினார். இந்தப் பங்கைப் பிரிட்டிசார் எப்போதும் ஆற்ற இயலாது எனவும் குறிப்பிட்டார். எனவே அவர் பின்வரும் முடிவுக்கு வந்தார் : ‘‘யாராலும் நம் குறைகளைத் தீர்க்க இயலாது. நமது கைகளில் அரசியல் அதிகாரத்தைப்பெற்ற ஒரு வாய்ப்பில் அமைந்த அரசியல் சட்டத்தால் மட்டுமே அவ்வாறு தீர்க்க இயலும். இத்தகைய அரசியல் அதிகாரம் இல்லையெனில் நம் மக்களால் நம் பிரச்சினைகளைத் தீர்வுக்குக் கொண்டுவர இயலாது.’’ லண்டன் வட்டமேசை மாநாடு செல்லுமுன் ‘இந்திய சுதந்திரத்திற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு உரிமைகளுக்காகவும் கண்டிப்பாய் வாதாடுவேன்’ என்று கூறிவிட்டுத்தான் சென்றார். சொன்னதுபோலவே வட்டமேசை மாநாடில் பேசினார்.

இந்தியாவுக்கு பூர்ண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தன் நாட்டுப்பற்று நிலைப்பாட்டிலிருந்து அம்பேத்கர் அணுகினார். இந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் தொடரும்போது தாழ்த்தப்பட்ட சாதிகள் தம் நிலையிலிருந்து மேம்பட இயலாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ‘இந்த அரசாங்கம் தொடர்ந்து இப்படியே இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தில் எந்தவொரு பங்கும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை’ இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தேசிய விடுதலை இயக்கத் தலைமையில் ஒரு சிலரைக்காட்டிலும் அம்பேத்கர் முன்னணியில் நின்று 1930 டிசம்பரில் இவ்வாறு குறிப்பிட்டார் : ‘தாழ்த்தப்பட்ட மக்கள் டொமினியன் அந்தஸ்தைக் கோரவில்லை. ஆனால் மக்களால் மக்களுக்கான, மக்களின் பெயரிலான அரசாங்கத்தைக் கோருகின்றனர்’’ (நூல் : சனநாயகப் புரட்சியும் அம்பேத்கரும்)

அம்பேத்கருக்கு பிடித்தமான “பாரத்” :

அம்பேத்கருக்கு தேசிய உணர்வு இருந்தது. அதனால்தான் தம்முடைய மக்களை – தாழ்த்தப்பட்டவர்களை – விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக போகாதவாறு பார்த்துக் கொண்டார். ‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார். அவருடைய அச்சகத்தின் பெயர் ‘பாரத் பூஷன் பிரிண்டிங் பிரஸ்’ என்பதாகும். தான் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடும்பொழுது வெறும் இந்தியாவோடு நிற்கவில்லை அம்பேத்கர். ‘இந்தியா என்ற பாரத்’ என்பதை குறிப்பிட்டுள்ளார். தேச உணர்வு கொண்ட அம்பேத்கர் தேசிய உணர்வு இல்லாதிருந்தவர்கள் யார் என்பதை வெளிப்படையாக தம் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா?

தேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும். அம்பேத்கர் கூறுகிறார் : “….இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால்  ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். முஸ்லீமுக்கு இபிபெனே இபி பத்ரியா நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லீம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லீமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.

அதாவது இஸ்லாமியர்கள் இந்திய மண்ணைவிட இஸ்லாமிய மண்ணையே விரும்புகிறார்கள், விரும்புவார்கள் என்பதை இங்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். முஸ்லீம்களுடைய தேசபக்தி, தேசிய உணர்வு எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை துல்லியமாக விளக்குகிறார் அம்பேத்கர். ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார் : “சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்பதிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும். எனவே, இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலையும் சுதந்திரமும் பெறுவதில் மட்டுமல்லாது அந்த விடுதலையையும் சுதந்திரத்தையும் வேறு எந்த அந்நிய சக்தியிடமிருந்தும் பாதுகாப்பதிலும் உடன்பாடு ஏற்படுவது அவசியம். உண்மையில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விடவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது அதைவிடவும் முக்கியமான கடமை என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மிக முக்கியமான கடமை விஷயத்தில் முன்போல் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தோன்றவில்லை. எது எப்படியிருந்தபோதிலும் இந்த விஷயத்தில் முகம்மதியர்களின் போக்கு அத்தமை நம்பிக்கையளிப்பதாக இல்லை.

இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணிகாக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்க முடியாது என்று முஸ்லீம் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துகளிலிருந்து இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய இரண்டு கூற்றுகளைக் கீழே தந்துள்ளேன். 1925ல் லாகூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டாக்டர் கிச்சுலு பின்வருமாறு பேசினார் : ‘‘காங்கிரஸ் உயிரற்றிருந்தபோது, கிலாபத் கமிட்டிதான் அதற்கு உயிர்ப்பிச்சை அளித்தது. கிலாபத் கமிட்டி அதனுடன் இணைந்தபோது இந்து காங்கிரஸ் 40 ஆண்டுகளில் செய்ய முடியாததை அது ஒரே ஆண்டில் சாதித்தது. ஏழு கோடி தீண்டப்படாதவர்களைக் கைதூக்கிவிடும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டது. உண்மையில் இது முற்றிலும் இந்துக்கள் செய்ய வேண்டிய பணி. அப்படியிருந்தும் காங்கிரசின் பணம் இதன் பொருட்டு செலவிடப்பட்டது. என்னுடையவையும் எனது முஸ்லீம் சகோதரர்களுடையவும் பணமும் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது. எனினும் தீரமிக்க முஸ்லீம் சகோதரர்கள் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அப்படியிருக்கும்போது, முசல்மான்களாகிய நாங்கள் டான்ஸிம் பணியை மேற்கொண்டு, அதன் பொருட்டு இந்துக்களுக்கோ, காங்கிரசுக்கோ சொந்தமாக இல்லாத எங்கள் பணத்தைச் செலவிடும்போது இந்துக்கள் ஏன் எங்களுடன் சச்சரவு செய்ய வேண்டும்? இந்த நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுவித்து சுயராஜ்யம் அடைந்த பிறகு ஆப்கனியர்களோ வேறு முஸ்லீம்களோ இந்தியா மீது படையெடுப்பார்களேயானால், முஸ்லீம்களாகிய நாங்கள் அவர்களை வீரத்தோடு எதிர்த்துப் போரிடுவோம், அந்நியப் படையெடுப்பிலிருந்து நாட்டை பாதுகாக்கும் பொருட்டு எங்கள் புதல்வர்கள் அனைவரையும் பலி கொடுக்கச் சற்றும் தயங்கமாட்டோம். ஆனால் ஒரு விஷயத்தை நான் பட்டவர்த்தனமாக, தெள்ளத் தெளிவாகக் கூறியாக வேண்டும். என்னுடைய அன்பான இந்து சகோதரர்களே, நான் சொல்லுவதை மிகக் கவனமாகக் கேளுங்கள். எங்களது டான்ஹிம் இயக்கப் பாதையில் தட்டுத்தடைகளை ஏற்படுத்துவீர்களேயானால், எங்களுக்குள்ள உரிமைகளை வழங்க மறுப்பீர்களேயானால் ஆப்கனிஸ்தானுடனோ அல்லது வேறு எந்த முஸ்லீம் நாட்டுடனோ நெருங்கிய உறவு பூண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் எங்கள் ஆட்சியை நிறுவுவோம்.’’

முஸ்லீம்களின் விரோதி ஆங்கிலேயர்கள் அல்ல- இந்துக்களே:

1939 ஜனவரி 27ஆம் தேதி சில்ஹட்டில் மௌலானா ஆஸாத் சோபானி நிகழ்த்திய உரை நமது கவனத்திற்குரியதாகும். ஒரு மௌலானாவின் கேள்விக்குப் பதிலளித்து மௌலானா ஆஸாத் சோபானி பேசியபோது கூறியதாவது :

‘‘ஆங்கிலேயர்களை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதை ஆதரிக்கும் தேர்ந்த, தெளிந்த, சிறந்த தலைவன் இந்தியாவில் யாரேனும் இருக்கக்கூடுமானால் அது நானாகத்தான் இருக்க முடியும். எனினும் முஸ்லீம் லீக் சார்பில் ஆங்கிலேயர்களுடன் எத்தகைய போராட்டமும் இருக்கக்கூடாது என்றே விரும்புகிறேன். நமது மாபெரும் போராட்டம் பெரும்பான்மையினராக உள்ள நமது 22 கோடி இந்துப் பகைவர்களுடன்தான். ஆங்கிலேயர்கள் நாலரை கோடிப் பேர்தான். அப்படியிருந்தும் அவர்கள் கிட்டத்தட்ட இந்த உலகம் முழுவதையுமே விழுங்கி ஏப்பமிட்டு, மகாவலிமை மிக்கவர்களாகிவிட்டார்கள்.

அந்த ஆங்கிலேயர் களைப் போன்றே கல்வி கேள்வியிலும், அறிவுத்திறத்திலும், தரத்திலும், செல்வத்திலும், எண்ணிக்கையிலும் முன்னேறியுள்ள இந்த 22 கோடி இந்துக்கள் ஆற்றல் மிக்கவர்களானால் முஸ்லீம் இந்தியாவையும் படிப்படியாக எகிப்து, துருக்கி, காபூல், மெக்கா, மெதினா மற்றும் யஜூஜ், மஜூஜ் போன்ற சிற்றரசுகளையும் விழுங்கிவிடுவார்கள். (உலகம் அழிவதற்கு முன்னர் அவர்கள் இந்தப் பூமியில் தோன்றி தங்கள் முன்னால் எதிர்ப்பட்டதை எல்லாம் விழுங்கி விடுவார்கள் என்று குரானிலும் கூறப்பட்டிருக்கிறது.) ‘ஆங்கிலேயர்கள் மெல்ல மெல்ல பலவீனமடைந்து வருகிறார்கள்….. அண்மை வருங்காலத்தில் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிடுவார்கள். எனவே, இஸ்லாமின் மிகப் பெரிய விரோதிகளான இந்துக்களை எதிர்த்து இப்போதே போராட்டத்தைத் தொடங்கி அவர்களைப் பலவீனப்படுத்த வில்லை என்றால், அவர்கள் இந்தியாவின் ராமராஜ்யத்தை நிறுவுவதோடு படிப்படியாக உலகெங்கும் வியாபித்து விடுவார்கள். அவர்களை (இந்துக்களை) பலப்படுத்துவதும் அல்லது பலவீனப்படுத்துவதும் 9 கோடி இந்திய முஸ்லீம்களின் கையில்தான் இருக்கிறது. ஆகவே, முஸ்லீம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டு போராடுவது ஆழ்ந்த சமயப்பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லீமின் இன்றியமையாத கடமையாகும். அப்போதுதான் இந்துக்கள் இங்கு காலூன்றிக் கொள்ள முடியாது, தங்களை நிலைநாட்டிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயர்கள் வெளியேறியதும் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ முடியும்.

‘‘ஆங்கிலேயர்கள் முஸ்லீம்களின் பகைவர்களாயினும் இப்போதைக்கு நம்முடைய போராட்டம் ஆங்கிலேயர்களுடனல்ல. முதலில் முஸ்லீம் லீகின் துணைகொண்டு இந்துக்களுடன் ஏதேனும் ஓர் உடன்பாட்டிற்கு வரவேற்றும். பின்னர் ஆங்கிலேயர்களை எளிதாக விரட்டிவிட்டு, இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிலைநாட்ட முடியும். ‘‘எச்சரிக்கையாக இருங்கள்! காங்கிரஸ் மௌல்விக்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள். ஏனென்றால் 22 கோடி இந்துப் பகைவர்களின் கரங்களில் முஸ்லீம் உலகம் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

மௌலானா ஆஸாத் சோபானியின் உரையின் சுருக்கத்தை மேற்கண்டவாறு தந்திருக்கும் ஆனந்த பஜார் பத்திரிகையின் நிருபர் காங்கிரஸ் மாகாணங்களில் முஸ்லீம்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டதாக அநேக கற்பனையான நிகழ்ச்சிகளையும் மௌலானா விவரித்ததாகக் கூறுகிறார் : “மாகாண சுயாட்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, காங்கிரஸ் மந்திரிசபைகள் அமைக்கப்பட்டன. இந்துக்களின் ஆதிக்கத்திலுள்ள காங்கிரசின் கரங்களில் முஸ்லீம் நலன்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டா என்று தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்; ஆனால் இந்துத் தலைவர்கள் இதில் வேறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். எனவே, தாம் காங்கிரசை விட்டு வெளியேறி லீகில் சேர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரது பயத்தை காங்கிரஸ் அமைச்சர்கள் உண்மையாக்கிவிட்டனர். எதிர்காலத்தை இவ்வாறு முன்கூட்டியே கணிப்பதற்குப் பெயர்தான் அரசியல் என்பது. எனவே, தாம் ஒரு மாபெரும் அரசியல்வாதி என்று தம்மை வருணித்துக் கொண்டார். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னதாக வலுக்கட்டாயமாகவோ, நேசபூர்வமான முறையிலோ இந்துக்களுடன் ஏதேனும் ஓர் உடன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற தமது கருத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இல்லையென்றால் 700 ஆண்டுக்காலம் முஸ்லீம்களிடம் அடிமைகளாக இருந்துவந்த இந்துக்கள் முஸ்லீம்களை அடிமைப்படுத்தி விடுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.’’ முஸ்லீம்களின் மனதில் எத்தகைய எண்ணங்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்துக்கள் அறிவார்கள். நாட்டின் சுதந்திரத்தைத் தங்களை அடிமைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்றும் அவர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். எனவே, சுதந்திரம் அடைவதை இந்தியாவின் அரசியல் லட்சியமாக ஆக்கும் விஷயத்தில் அவர்கள் அத்தனை ஆர்வமில்லாதவர்களாக, அக்கறையில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். எதையும் சரிவர நிர்ணயிக்கக்கூடிய தகுதியில்லாதவர்களது அச்சங்கள் அல்ல இவை. மாறாக, சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் விவேகம் குறித்து தமது அச்சங்களை வெளியிட்டிருக்கும் இந்த இந்துக்கள் தங்களுக்கு முஸ்லீம்களுடனுள்ள தொடர்பு காரணமாக எந்த ஒரு கருத்தையும் கூறுவதற்கு முற்றிலும் தகுதியுடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

முஸ்லீம்களின் மூக்குக் கண்ணாடிகளின் வழியாகத் தெரியும் கடவுள்:

திருமதி அன்னிபெசன்ட் கூறுகிறார் :

‘இந்தியாவின் முகம்மதியர்கள் சம்பந்தமாக, மற்றொரு கடுமையான பிரச்சினை எழுந்துள்ளது. முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவு லக்னோ நாட்களில் இருந்தது போன்று இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை இத்தனை அவசரமானதாக இருந்திருக்காது. அந்த லக்னோ நாட்களில்கூட இந்தப்பிரச்சினை ஏறத்தாழ நிச்சயமாக எழுந்திருக்கவே செய்யும். சுதந்திர இந்தியாவிலும் முன்னோ பின்னோ எப்போதேனும் எழவும்கூடும். கிலாபத் கிளர்ச்சிக்குப் பிறகு நிலைமை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. கிலாபத் கிளர்ச்சியை ஊக்குவித்ததன் மூலம் இந்தியா எண்ணற்ற இன்னல்களுக்கு, அல்லல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இவற்றில் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக முஸ்லீம்களின் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் பகைமை உணர்வு கடந்த காலத்தைப் போன்றே அப்பட்டமாக, கூச்சநாச்சமின்றி பீறிட்டெழுந்திருப்பதாகும்.

வாளேந்தும் பழைய முஸ்லீம் மதம் மீண்டும் புத்துயிர் பெற்று வருவதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுக்காலமாக மறந்து போயிருந்த தனித்து ஒதுங்கி நிற்கும் பழைய போக்கு மீண்டும் தலையெடுத்து வருவதைக் காண்கிறோம். ஜஸ்ருத்-அரபை, அரபிய தீவை முஸ்லீமல்லாதவர்களின் மாசு படிந்த பாதங்கள் படாத புனித பூமி என்று உரிமை கொண்டாடுவதை நோக்குகிறோம். ஆப்கானியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தால் நாங்கள் எங்களுடைய சக மதத்தினருடன் சேர்ந்து கொள்வோம்; தங்கள் தாயகத்தைப் பகைவர்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் இந்துக்களின் தலைகளை கொய்தெறிவோம் என்று முஸ்லீம் தலைவர்கள் பிரகடனம் செய்து வருவதைக் கேட்கிறோம்.

முஸ்லீம்களின் பிரதான விசுவாசம் இஸ்லாமிய நாடுகளின் மீதிருக்கிறதே அன்றி தங்கள் தாய்நாட்டின் மீது இல்லை என்பதைக் காண்கிறோம். அவர்களது அத்யந்த ஆசை ‘ஆண்டவனின் ராஜ்யத்தை’ ஏற்படுத்துவதுதான் என்பதை அறிகிறோம். ஆனால் அந்த ஆண்டவன் உலகுக்கெல்லாம் தந்தையல்ல, அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவரல்ல, தங்களுடைய தீர்க்கதரிசி என்னும் முசல்மான்களின் மூக்குக் கண்ணாடிகள் வழியாகத் தெரிபவரே அந்த ஆண்டவன்; முஸ்லீம் அல்லாதவர்களைப் பொறுத்தவரை, ஆரம்பகால முஸ்லீம்களைப் போலவே மோசஸ் வழிப்பட்ட எகோவாவைக் கடவுளாக் கொண்ட எபிரேயர்களும் தங்களுடைய தீர்க்கத் தரிசி தங்களுக்கு அருளிய மதத்தைக் கடைபிடிக்கும் சுதந்திரத்திற்காகப் போராடியதை வரலாற்று ஏடுகளில் காண்கிறோம்.

முஸ்லீம்களின் உண்மையான விசுவாசம் இருக்குமிடம்:

கடவுளின் கட்டளைகளை மனிதன் மூலம் தரும் இத்தகைய சமய தத்துவங்களை எல்லாம் கடந்து உலகம் முன்னேறிவிட்டது. அவ்விதமிருக்கும்போது, தங்களது தீர்க்கத்தரிசி வகுத்துத் தந்த சட்டங்களுக்கு தாங்கள் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும் மேலாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று முசல்மான்களின் தலைவர்கள் இப்போது முன்வைத்திருக்கும் கோரிக்கை குடிமையியல் மரபொழுங்கையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடியதேயாகும். இது அவர்களை மோசமான குடிமக்களாக்குகிறது. ஏனென்றால் அவர்களது விசுவாச மையம் நாட்டுக்கு வெளியே இருக்கிறது; மௌலானா முகமது அலி, சௌகத் அலி போன்ற பிரபல முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும் தங்களுடைய சக பிரஜைகளின் நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரமாக முடியாது. இந்தியா சுதந்திரமடைந்தால் மக்கள் தொகையில் முஸ்லீம் பகுதியினர் – அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் தங்களது தீர்க்கத்தரிசியின் பெயரால் பேசுபவர்களைத்தான் பின்பற்றுவார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு உடனடி அபாயமாக மாறிவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், பலுச்சிஸ்தான், பெர்சியா, ஈராக், அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களுடனும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஏனைய முஸ்லீம்களுடனும் கூட்டுச் சேர்ந்து இஸ்லாமின் ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டுவர முனைந்து ஈடுபடுவார்கள். இந்திய சமஸ்தானங்களிலுள்ள முஸ்லீம்களின் துணைகொண்டு பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் – இங்கு முஸ்லீம் ஆட்சியை நிறுவுவார்கள். இந்திய முசல்மான்கள் தங்கள் தாயகத்திடம் விசுவாசம் கொண்டிருப்பார்கள் என்று நாம் நம்பினோம். முஸ்லீம்களில் சில படித்த வர்க்கத்தினர் இத்தகைய முசல்மான்களின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முயல்வார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிகச்சிலரே ஆவார்கள். வெறிகொண்ட முஸ்லீம்களின் எதிர்ப்பை அவர்களால் தாக்குப் பிடித்து நிற்க முடியாது, இந்த முயற்சியில் அவர்கள் சமயப் பகைவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்படவும் கூடும். இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதை மலபார் நமக்குக் காட்டியுள்ளது.

வழிப்போக்கர்களின் குரல்வளையை நெரித்துக் கொல்லச் சொல்லும் கடவுள்:

இந்தியாவில் ‘கிலாபத் ஆட்சியின்’ மற்றொரு சுயரூபத்தைக் காண நாம் விரும்பவில்லை. மாப்ளாக்களிடம் மலபாருக்கு வெளியே உள்ள முஸ்லீம்கள் எத்தகைய பரிவும பாசமும் அனுதாபமும் வைத்துள்ளனர் என்பதை தங்களுடைய சக சமயத்தாருக்கு அவர்கள் ஓடோடி வந்து உதவியதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களது சமயம் போதிப்பதாக அவர்கள் நம்புகிறார்களோ அதையே அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று திரு.காந்தியே கூடக் கூறியிருக்கிறார். இது உண்மை என்றே அஞ்சுகிறேன். ஆனால் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்யும்படியும் அல்லது வழிவந்த தங்களது பழைய சமய நம்பிக்கைகளைக் கைவிட மறுப்பவர்களை நாட்டைவிட்டுத் துரத்தும்படியும் தங்களுடைய மதம் தங்களுக்குப் போதிப்பதாக நம்புவர்களுக்கு நாகரிகமடைந்த ஒரு நாட்டில் இடமில்லை.

முற்காலத்துக் கொள்ளைக் கூட்டத்தினர் மக்களை அதிலும் மடியில் பணத்துடன் செல்லும் வழிப்போக்கர்களைக் குரல்வளை நெரித்துக் கொல்லும்படி தங்களது கடவுள் தங்களுக்குக் கட்டளையிட்டிருப்பதாக நம்பி வந்தார்கள். இத்தகைய ‘கடவுளின் சட்டங்கள்’ ஒரு நாகரிக நாட்டின் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துத் துவைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இந்த இருபதாம் நூற்றாண்டில், வாழும் மக்கள் இத்தகைய பத்தாம் பசலியான, மத்தியகாலக் கருத்துக்களை நம்புபவர்களை ஒன்று திருத்தி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும், அல்லது அவர்களை நாடு கடத்த வேண்டும். அவர்களுக்குரிய இடம் அவர்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்தான். தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு எதிராக அங்கு இதேபோன்ற வாதங்களை அவர்கள் முன்வைக்க முடியும். நீண்டகாலத்துக்கு முன்னதாக பெர்சியாவில் பார்சிகள் விஷயத்திலும், நம் காலத்தில் பாஹைஸ்டுகள் விஷயத்திலும் இவ்வாறுதான் நடைபெற்றது.

முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம் சமய உட்பிரிவினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முஸ்லீம்களில் எல்லாப் பிரிவுகளது சுதந்திரத்தையும் பாதுகாத்துள்ளது. இவற்றில் எந்த ஒரு பிரிவும் சிறுபான்மையாக இருக்கும் பகுதியில் சமூகப் பகிஷ்காரத்திலிருந்து அதனைப் பாதுகாத்துவிட முடியாது என்றாலும் மற்றபடி ஷியாக்கள், சன்னிகள், சபிகள், பாஹைஸ்டுகள் போன்ற பல்வேறு முஸ்லீம் பிரிவினரும் பிரிட்டிஷ் அரசாணையின் கீழ் பாதுகாப்பாகவே வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளை விட பிரிட்டிஷ் ஆட்சியில் முகமதியர்கள் அதிக சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவைப் பற்றி சிந்திக்கும்போது முகமதியர்கள் ஆளும் அபாயத்தையும் கருத்திற்கொள்வது அவசியம்’’

 முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 ||  பாகம் 16

(தொடரும்….)

5 Replies to “[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்”

  1. // அம்பேத்கரின் மதமாற்றம் வெறும் பொருளாதார காரணங்களுக்காக அல்ல. அதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மதமாற்றம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவைகளுக்காக மட்டுமல்ல. ஆன்மிகம், கலாச்சாரம், சமூகமுன்னேற்றம், தேச முன்னேற்றம், தேசபாதுகாப்பு, தேசிய உணர்வு, சமூக உணர்வு, சமூக அங்கீகாரம், சேர்ந்து வாழுதல், பெண்கள் உரிமைகள் போன்ற எண்ணற்ற காரணங்கள் அதன் பின்னே நிற்கின்றன. மதமாற்றத்தின் மூலம் இவைகளுக்கு ஊறுவிளைவிப்பதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அதேசமயம் தீண்டப்படாதவர்கள் மனங்களில் இந்த நேர்மறையான எண்ணங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் மிக கவனமாகவே செயல்பட்டு வந்தார். //

    தலித்துகளை சட்டியிலிருந்து அடுப்புக்குள் குதிக்கச் சொல்லும் “முற்போக்கு” / “பிற்போக்கு” மதமாற்ற வியாபாரிகளுக்கும், தேசபக்தி, பொறுப்புணர்வு, ஆன்மிக, சமுக, தனிமனித விடுதலை நாட்டம் கொண்ட உண்மையான தலைவரான அண்ணல் அம்பேத்காருக்கும் உள்ள வேறுபாடு துல்லியமாகத் தெரிகிறது.

  2. தமிழ் ஹிந்து தளத்தின் நிர்வாகிகளே காபா முன்பு சிவாலயமாக இருந்ததா
    என்ற கட்டுரைக்கு பதிலாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது https://neermarkkam.blogspot.com/2011/10/kaaba-munbu-sivaalayamaha-irunthatha_15.html
    இதை நேர்மையாக சிந்தித்தால் உங்களுக்கு உண்மை புரியும் என்று நினைக்கிறேன் இனிமேலாவது இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் இந்துமத்தின் கொள்கையையும் இஸ்லாத்தின் கொள்கையையும் ஒப்பிட்டு கொள்கை ரீதியாக விமர்சித்தால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு காபா முன்பு சிவாலயமாக இருந்தது பைத்துல் முஹத்தஸ் பெருமால்கோவிலாக இருந்தது போன்ற ஆய்வுகளைத் தவிர்த்துடுவீர்கள் என்று நினைக்கிறேன்

  3. Abdul,

    You have principles in Islam? it is news to me.

    If it is there, pls tell that to your fellow muslims to practise it.

    Let them not go around killing people in the name of islam & then some one like you comes & says ” terrorism has no religion, Koran does not justify violence blah blah..”

    We have had enough of this nonsense.

  4. அம்பேத்கர் எந்த மதத்துக்கு மாறசொன்னார் என்பதை வேண்டுமானால் நீங்கள் உங்கள் விருப்பப்படி சொல்லலாம்.ஆனால் அவர் மதம் மாறவேண்டும் என்று சொன்னதை யாரும் மறுக்க முடியாது.அவர் தேசம் என்பதையோ தேசியம் என்பதையோ ஏற்றுகொண்டார் என்பது உண்மையாகக்கூட இருக்கலாம்.ஆனால் எப்போதுமே இந்து மதத்தையும் சாதி இந்துக்களின் மேலாண்மையையும் ஏற்றுகொண்டதில்லை.அம்பேத்கரை ஏற்றுகொள்வதாக இருந்தால் முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும்.ஆனால் முஸ்லிம்களை மறுப்பதற்கு மட்டும் எற்றுகொள்வதென்பது ஏமாற்று வேலையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *