[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 21-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

அம்பேத்கர் தொடர்கிறார்…  

“…ஆப்கானியர் படையெடுப்பு நீகழ்ந்தால் பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில வீரர்களைப் பெரும்பாலாராகக் கொண்ட இந்தியப் படையின் செயல்பாடு எப்படியிருக்குமென்று நடத்தப்படும் ஆய்வு எவ்வளவுதான் மனத் துன்பம் தரக்கூடியதாக இருப்பினும், இதனை நான் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினையெனலாம்.

‘படைகளில் முஸ்லீம் படைவீரர்களின் உயர்விகிதம் நிரந்தரமான அமைப்புமுறையென்று நான் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதைத் தக்க வகையிலே மாற்றியமைக்க இயலாதென ஏன் கருத வேண்டும்?’ எனச்சிலர் கூறலாம். இவ்வமைப்பைத் தேவையான வகையில் திருத்தியமைக்க இயலுமெனக் கருதுவோர் அம்முயற்சிகளில் ஈடுபடட்டும். ஆனால், இதுவரை மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களைக் கொண்டு எண்ணிப் பார்க்கையில் அதை அவ்வளவு எளிதில் திருத்திவிட முடியாதென்பது புலனாகும். மாறாக, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தியமைக்கப்படும்போது, முஸ்லீம் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் பொருட்டு, இந்தியப் படையமைப்பு இவ்வாறுதான் முஸ்லீம் மேலாதிக்கத்துடன்தான் இருக்கவேண்டுமென்று சட்டத்திருத்தமே செய்யப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை. இந்துக்களுக்கெதிராக, முஸ்லீம்கள் இத்தகைய கோரிக்கைகளில் இதுகாறும் அவர்கள் வெற்றிபெற்றே வந்துள்ளனர். எனவே, இந்தியப் படையின் அமைப்பு இப்போதிருக்கும் நிலையிலிருந்து மாறப்போவதில்லை என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையிலேயே, நமது வருங்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். அடிப்படைகள் ஏதும் மாறிவிடவில்லையென்ற நிலையில், நாம் எதிர்நோக்குகின்ற சிக்கலும் அப்படியே நீடிக்கிறது.

முஸ்லீம்கள் நிறைந்த இப்படை, ஆப்கானியப் படையெடுப்புக்கு எதிராகப் போராடி நாட்டைக் காக்குமென்று இந்துக்கள் நம்பிக்கைக் கொள்ள முடியுமா? முடியும் என்று போலித் தேசிய வாதிகள்தான் பதிலளிப்பர். இவ்வினாவிற்கு விடையளிக்க முற்படுமுன், மெய்ம்மை நிலையை உணரத் துணிவு கொண்டவர்கள் ஒருகணம் தீர சிந்தனை செய்தல் வேண்டும். இந்துக்கள் காக்கப்படுவதற்கு மாறாக அழித்தொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள் (அவநம்பிக்கையாளர்கள்) என்று முஸ்லீம்கள் கருதுகின்றனர் என்பதை மெய்ம்மை நாட்டம் கொண்டோர் ஒருபோதும் மறக்கவியலாது. மேலும், ஐரோப்பியரைத் தம்மினும் மேலானவர்களாக ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்கள், இந்துக்களைத் தம்மினும் தாழ்வானவர்களாகக் கருதுவதையும் மறுப்பதிற்கில்லை. முற்றிலும் முஸ்லீம் படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகள், இந்துப்படைத் தலைவர்களின் கீழ் செயல்படநேரின், எவ்வளவுதூரம் தளபதிக்குப் பணிந்து நடப்பர் என்பது ஐயப்பாடே!

முஸ்லீம்களிலேயே கூட வடமேற்குப் பகுதி முஸ்லீம்கள்தான் இந்துக்கள்மீது மிகுந்த பகைமையும் வெறுப்பும் கொண்டவர்கள் என்பதையும் மெய்ம்மை நாட்டமுள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அனைத்துலக முஸ்லீம் உணர்வு குறித்த பிரசாரங்களுக்கு, பஞ்சாபி முஸ்லீம்கள் எளிதில் இரையாகக் கூடியவர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இத்தனை எதிர்மறைச் சூழல்களைப் பற்றி நன்கறிந்திருந்தும், முஸ்லீம் நாடுகள் படையெடுத்து வந்தால், இந்தியப் படையிலுள்ள முஸ்லீம்கள் நாட்டுப்பற்றோடு போராடுவர் என்றோ, அத்தகைய படையெடுப்பு நிகழ வாய்ப்பில்லையென்றோ கருதும் இந்துக்கள் உண்மையாகவே மிகுந்த அசட்டுத் துணிச்சல் கொண்டவர்கள்தாம் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

1889-இல் தியோடர் மாரிசன் கூடப் பின்வருமாறு கூறியுள்ளார்:

“இந்திய மக்கள் வன்முறையால் அடக்கியாளப்பட வேண்டியவர்கள் என்று முஸ்லீம்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம் ஒன்றே, இந்திய நாட்டுக்கு விடுதலையளித்தலாகாது என்பதற்குப் போதுமான காரணமாகும். தன்னாட்சி பெற்ற இந்தியாவின் மீது வடக்கிலிருந்து ஆப்கானியர் படையெடுக்க முற்படும் கட்டத்தில், இந்திய முஸ்லீம்கள் தம் நாட்டவரான இந்துக்கள், சீக்கியர்களோடு ஒன்றுபட்டுப் போராடி, பகைவரை எதிர்ப்பதற்குப் பதிலாக, சமய உறவெனும் நெருக்கத்தால் ஈர்க்கப்பட்டுப் பகைவர்களுடன் சேர்ந்து விடுவர்.”

1919-இல் கிலாபத் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த இந்திய முஸ்லீம்கள், இந்தியாவின் மீது படையெடுக்கும்படி ஆப்கானிஸ்தானத்தின் அமீரை வேண்டினர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, தியோடர் மாரிசனின் கருத்து வெறும் ஊகமல்லயென்பதை உணர்கிறோம்.

ஆப்கானிஸ்தான் படையெடுத்தால் பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்களைக் கொண்ட படை எப்படி நடந்து கொள்ளும் என்பது மட்டுமே நம்மை எதிர்நோக்கும் பிரச்சினை அல்ல. இந்துக்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்க்கவேண்டிய மற்றொரு முக்கியமான பிரச்சினையையும் ஈண்டு நோக்குவோம். படைவீரர்களின் விசுவாசம் எப்படியிருந்தாலும் ஆப்கானியப் படையெடுப்புக்கெதிராக இப்படையை இந்திய அரசு தடையின்றிப் பயன்படுத்த இயலுமா?

இது தொடர்பாக, முஸ்லீம் லீகின் நிலைப்பாட்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அஃது நமக்கொன்றும் புதிதன்று. அந்நிலைப்பாடு முஸ்லீம் லீக் தோன்றுவதற்கு நெடுநாள் முன்பாகவே, கிலாபத் குழுவால் வகுக்கப்பட்டுவிட்டது. வருங்காலத்தில் எவ்வளவு காலத்திற்கு முஸ்லீம்கள் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார்கள் என்ற வினாவுக்குத் தீர்வில்லை. இந்நிலைப்பாட்டில் முஸ்லீம் லீகினால் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வெற்றிபெற முடியவில்லை என்பதைக் கொண்டு வருங்கால இந்திய அரசுக்கெதிராகவும் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறிவிட முடியாது.

இந்துக்களின் கண்ணோட்டத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடு நாட்டுப்பற்றுக்கு முரணானதென்றாலும், முஸ்லீம்களின் சமயக் கண்ணோட்டத்திற்கு மிக இணக்கமானதாகவே முஸ்லீம் லீகினால் பரிந்துரைக்கப்பட்டு இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் ஒப்பிசைவைப் பெற்றுவிட இயலுமாதலின் முஸ்லீம்கள் வெற்றி பெறவே வாய்ப்பு மிகுதியெனலாம். இவ்வாறு, இந்தியாவின் போர்ப்படைகளை முஸ்லீம் பகைநாடுகளுக்கெதிராகப் பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதில் முஸ்லீம் லீக் வெற்றி பெறுமாயின், இந்துக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? இதுவும் இந்துக்கள் தீர்வு காணவேண்டிய சிக்கல்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையால் உருவாகியுள்ள இருநாட்டு மனப்பான்மை தொடர்ந்து நிலவும் சூழ்நிலையில் அரசியலமைப்பில் ஒரே நாடாக இந்தியா தொடருமெனில் இந்தியாவின் பாதுகாப்பைப் பொருத்தமட்டில் இந்துக்கள் இரு பேராபத்துகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் இடர்பாட்டுக்கு உள்ளாவார்கள். போர்ப்படைகள் இருக்கும். ஆனால் அவற்றைத் தேவைக்கேற்பப் பயன்படுத்துவதற்கு முஸ்லீம் லீகின் குறுக்கீடுகளும் தடைகளும் இருக்கும். அதையும் மீறிப் பயன்படுத்தும்போது படைகள் எந்த அளவுக்கு நாட்டுப் பற்றோடு போரிடுவர் என்ற ஐயமும் இருப்பதால் நாட்டுப் பாதுகாப்பு என்னும் இன்றியமையாத் தேவையே கேள்விக்குரிய பிரச்சினையாகிவிடும்.

பஞ்சாபி, வடமேற்கு எல்லைப் புற முஸ்லீம்களின் மேலாதிக்கம் ஓங்கியிருக்கும் இப்படைகளை மிகுந்த பொருட்செலவில் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும் இந்துக்கள், முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கு எதிராக அப்படையை நம்பகமாகப் பயன்படுத்த இயலுமா என்ற தவிப்பிலிருக்க நேரிடும். முஸ்லீம் லீகின் கண்ணோட்டமும் முட்டுக்கட்டைகளும் தொடர்ந்தால், இந்தியப் படையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்தாலும்கூட, அவற்றைத் தேவைக்கேற்ப இந்திய அரசு பயன்படுத்த இயலா நிலைமை ஏற்படும். தற்போது பிரிட்டிஷ் வல்லாட்சியின் கீழ் இருப்பதைப் போன்ற நிலையில், இந்திய நாடு அண்டையிலுள்ள முஸ்லீம் நாடுகளுக்கு அஞ்சியடங்கி அவற்றின் நிழலில் வாழ நேரிடும்.

‘பாதுகாப்பான எல்லை வேண்டுமா, பாதுகாப்பான படை வேண்டுமா?’ என்ற கடினமானதொரு தேர்ச்சியைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இந்துக்கள் உள்ளனர். இக்கட்டத்தில் இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய முதிர் அறிவுமிக்க பாதை என்ன? இந்தியாவுக்குப் பாதுகாப்பான எல்லை வேண்டுமென்பதற்காக முஸ்லீம் இந்தியாவும் தங்களுடனேயே சேர்ந்திருக்க வேண்டுமென்று கோருதல் அவர்களது நலன்களுக்கு உகந்ததாகுமா? அல்லது பிரிவினையை ஏற்றுக்கொண்டு அதன்வழி நம்பகமான படையைப் பெறுதல் இந்துக்களின் நலன்களுக்கு உகந்த வழியா?

ஐயத்திற்கிடமில்லாதவாறு ஓர் உண்மை நம் முன்னே தெளிவாகத் தெரிகிறது. இப்பகுதிவாழ் முஸ்லீம்கள் இந்துக்களுக்கெதிரான கடும்பகைமை உணர்வு மிக்கவர்கள் என்பதே அது. முஸ்லீம்களை வெளியே அனுப்புவதால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு மிகுதியா? அவர்கள் உள்ளே இருந்து வருவதால் பாதுகாப்பு மிகுதியா? நல்லறிவு பெற்ற எவருமே இக்கேள்விக்கு முஸ்லீம்களை உள்ளேயிருத்தி அவர்களின் பகைமையை எதிர்த்து நிற்பதைவிட அவர்களை வெளியே அனுப்பிப் பகைமையை எதிர்கொள்வதே பாதுகாப்பானது’ என்றுதான் பதிலிருப்பர்.

முஸ்லீம்களை வெளியேற்ற விரும்புதலே உள்ளார்ந்த நாட்டுப்பற்றின் வெளிப்பாடாக இருக்க முடியும். இந்தியப் படைகளில் முஸ்லீம்களின் மேலாதிக்கத்தை அறுதியாக முடிவுக்குக் கொண்டுவர இஃதொன்றே உற்ற வழி.

முஸ்லீம் மேலாதிக்கத்தை நீக்குதலை எவ்வாறு சாதிக்க இயலும்? பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தல் ஒன்றே அதற்கு உற்ற வழியாகும். பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிந்துபோனபின், இந்தியா தனது செல்வ வளங்களையும் மனித வளங்களையும் கொண்டு, முற்றிலும் நம்பகமான படையினை நிறுவ முடியும். அதன் பயன்பாட்டிற்கெதிராக முட்டுக்கட்டைகள் போட எவரும் இரார். அதை எந்தப் பகைவருக்கெதிராக, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் எவரது கட்டளைகளும் நம்மை முடக்க வியலாது. பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியாவின் வலிமை குன்றி விடுமென்று அஞ்சத் தேவையில்லை. மாறாக இந்தியாவின் வலிமை பன்மடங்காய் பெருகும்.

தற்போதைய படையமைப்பினால் படையில் தங்கள் எண்ணிக்கைச் சிறுமையால் தங்கள் பாதுகாப்பு எவ்வளவு தூரம் பின்னடைவுக்குள்ளாகியுள்ளது என்பதை இந்துக்கள் இன்னமும் சரியாக உணரவில்லையென்றே தோன்றுகிறது. இத்தகைய கேடானதொரு பின்னடைவை, மிகவும் அரிய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்துக்கள் உணர்ந்தபாடில்லை…

 

…இந்திய அரசின் வருவாயில் பெரும்பகுதி இந்துஸ்தானத்திலிருந்தே கிடைக்கிறது. பாகிஸ்தான் மாநிலங்களிலிருந்து வெகுசொற்ப அளவே கிடைக்கின்றது என்பதை இவ்விவரங்கள் காட்டுகின்றன. சொல்லப் போனால் பாகிஸ்தான் பகுதி மாநிலங்களின் அரசுச் செயல்பாடுகள், இந்துஸ்தான் மாநிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. அதாவது, இந்துஸ்தான் மாநிலங்களின் வளத்தை உறிஞ்சும் அட்டைகளாகவே பாகிஸ்தான் மாநிலங்கள் விளங்கி வருகின்றன. அவை மத்திய அரசின் நிதிக்குக் கொடுப்பது கொஞ்சமே என்பது மட்டுமல்ல. மத்திய அரசு வருவாயில் பெரும்பகுதி இம்மாநிலங்களுக்குச் செலவிடப்படுகிறது. மத்திய அரசின் மொத்த ஆண்டு வருவாய் 121 கோடி ரூபாய் அளவினதாகும். இதில் ஆண்டுதோறும் 52 கோடிரூபாய் படைகளுக்காகச் செலவிடப்படுகிறது. இப்பெருந்தொகை எந்தப் பகுதியில் செலவிடப்படுகிறது? இந்த 52 கோடி ரூபாயின் பெரும்பகுதியை வரியாகக் கொடுப்பவர்கள் யார்?

போர்ப்படைகளுக்காகச் செலவிடப்படும் இந்த 52 கோடி ரூபாயின் பெரும்பகுதி பாகிஸ்தான் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் படைக்காகச் செலவிடப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் இந்துக்களிடமிருந்து திரட்டப்பட்ட இந்த 52 கோடி ரூபாயின் பெரும்பகுதி, இந்துக்களல்லாதவர்களே பெரிதும் நிறைந்துள்ள படையின் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அவலநிலை நிலவுதல் எத்தனை இந்துக்களுக்குத் தெரியும்? இந்த அவலம் யாருடைய செலவிலே நடத்தி வைக்கப்படுகிறது என்பதையும் எத்தனை இந்துக்கள் அறிவர்?

இன்றைய அவலநிலையினைத் தடுக்கும் திறமில்லாத இந்துக்களை இதற்குப் பொறுப்பாக்க முடியாது. ஆனால் இதே நிலை நீடித்துத் தொடருவதை அனுமதிக்க வேண்டுமா? இதுவே இன்று நம்மை எதிர்நோக்கும் கேள்வியாகும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் விரும்பினால், அதற்கு உறுதியான வழி பாகிஸ்தான் பிரிந்துபோகவிட்டுவிடுவதே. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பது, நம்முடைய அழிவுக்கான ஆயுதத்தை நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு அல்லது காசு கொடுத்துக் கொள்ளிக்கைட்டை வாங்கி முதுகில் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். எனவே, பாதுகாப்பான எல்லை என்பதைவிடப் பாதுகாப்பான படையை நாடுவதே நன்மையான காப்பு நெறியாகும்.’’

அம்பேத்கரின் இந்தக் கருத்து ஏதோ பாகிஸ்தான் ஏற்பட வேண்டும் என்ற உந்துதலினால் ஏற்பட்ட கருத்து அல்ல. இது அம்பேத்கருக்கு இருந்த இந்திய தேசிய உணர்வினால் ஏற்பட்ட கருத்து.

1942 பிப்ரவரி மத்தியில் பம்பாய் வாக்லே ஹாலில் வசந்தகாலப் பேருரைகள் நடந்தன. பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள் பற்றிய விவாதங்களுக்கு மூன்றுநாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த விவாதங்களின் போது டாக்டர் அம்பேத்கர் அங்கு இருந்தார். ஆச்சார்ய எம்.வி.டோண்டே கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் அம்பேத்கர் உரையாற்றியபோது,

‘‘பாகிஸ்தான் என்பது ஒரு விவாதத்திற்குரிய விஷயமே அல்ல என்று கூறுபவர்களின்பால் என்னுடைய வார்த்தைகளை நான் வீணாக்க விரும்பவில்லை. அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்று கருதப்பட்டால், பாகிஸ்தான் உருவாவது அவர்களுக்கு ஒரு பயங்கரமான விஷயமாகிவிடும். வரலாற்றை மறந்துவிடுங்கள் என்று மக்களிடம் சொல்வது தவறு. வரலாற்றை மறந்துவிடுகிறவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது.

இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்ஜியத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்திவிடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள்.

சாதி இந்துக்களிடம் சில பிரச்சினைகளில் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால் நமது பூமியைக் காப்பாற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்’’

என்று கூறினார்.

தேசிய உணர்வின் வெளிப்பாடே, இஸ்லாமியர்களை படையில் இருந்து குறைத்து விரோத சக்திகளை வெளியேற்றிட வேண்டும் என்பது. அம்பேத்கரின் இந்தக் கருத்து ஒரு தீர்க்கதரிசியின் கருத்து. எந்தக் காரணத்திற்காக முஸ்லீம்களை படையில் இருந்து குறைக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னாரோ அந்தக் காரணம் 1947-48இல் காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்தபோது சரியெனப் புலப்பட்டது.

Lieutenant Colonel Thapa was a Prisoner of War (PoW) in Pakistan and General Sir Douglas Gracy was the Commander-in-Chief of the Pakistan Army. Lieutenant Colonel Thapa’s friendship with General Gracy came to his rescue otherwise he would have met the fate of other prisoners of war who were killed by the Pakistani Army. A small and narrow valley at a height of 7500 feet above sea level, Skardu is divided into two parts by the Indus river. Before the arrival of Lieutenant Colonel Sher Jung Thapa at Skardu, the Wazir Amar Nath Mahajan saw the signs of a gathering storm. Skardu tehsil had a greater area under it than a normal tehsil. There were five jagirdars called Rajas, who exercised considerable influence over the population in their respective areas. They were Raja of Rondu; Raja of Khapalu; Raja of Shigar; Raja of Skardu and Raja of Kharmang. On 11 February 1948, Skardu was surrounded by an enemy of about 600 troops, while the strength of soldiers under Lieutenant Colonel Thapa of 6 JAK Rifles was only 130. He had to face many odds during the war against the Pakistani forces as scores of Muslims in the Skardu area had secretly joined the enemy. Not only this, many of the Muslim soldiers in Indian platoons deserted the army and joined the enemy. So much so that three Muslim wireless operators operating from the Bungalow of Lieutenant Colonel Thapa also deserted, thus jeopardising the signals. Once having worked as Brigade Signal Officer, Lieutenant Colonel Thapa himself operated the wireless set.

Lieutenant Colonel M.L. Chhiber (Retd.) in his book “Pakistan’s Criminal Folly in Kashmir” has quoted Brigadier Thapa on the indifferent attitude of Muslim community in Skardu area towards Indian troops. He said, “Every Muslim civil officer, schoolboys, servants of local shopkeepers and all who were employed to secure information about the enemy did not do so. They knew that the enemy was coming. They took all precautions to see that we were kept in the dark and then were attacked by surprise. This attitude of the Muslims there goes to prove how determined, united and eager they were. They wanted the Pakistan flag to fly. The Pakistan agents here did a thorough job.” (ட்ரிப்யூன் 30 அக்டோபர் 1999)

இந்தியப் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தியவர் அம்பேத்கர்…

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம் குறித்து அம்பேத்கர் தீவிரமாகத் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 

One Reply to “[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்”

  1. //இன்றைய அவலநிலையினைத் தடுக்கும் திறமில்லாத இந்துக்களை இதற்குப் பொறுப்பாக்க முடியாது. ஆனால் இதே நிலை நீடித்துத் தொடருவதை அனுமதிக்க வேண்டுமா? இதுவே இன்று நம்மை எதிர்நோக்கும் கேள்வியாகும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் விரும்பினால், அதற்கு உறுதியான வழி பாகிஸ்தான் பிரிந்துபோகவிட்டுவிடுவதே. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பது, நம்முடைய அழிவுக்கான ஆயுதத்தை நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு அல்லது காசு கொடுத்துக் கொள்ளிக்கைட்டை வாங்கி முதுகில் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். எனவே, பாதுகாப்பான எல்லை என்பதைவிடப் பாதுகாப்பான படையை நாடுவதே நன்மையான காப்பு நெறியாகும்.’’//

    //இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்ஜியத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்திவிடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள்.//

    அம்பேத்கார் சொல்லி விட்டால் அது வேத வாக்கா என்ன? இந்திய பிரிவினையின் போது அந்த நேரத்தில் அவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இன்றைய கால கட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் அறிவார்ந்த செயலாகுமா? கார்கில் போரில் பாகிஸ்தானியர்களை விரட்டி நமது மண்ணை மீட்டெடுத்ததில் ‘முஸ்லிம் ரெஜிமண்டுக்கு’ அதிக பங்கிருக்கவில்லையா? அந்த போரில் தனது பிரதிநிதித்துவத்துக்கு அதிகமாகவே உயிர்களை முஸ்லிம் வீரர்கள் இழந்தனரே!

    அம்பேத்காரின் சொல்லுக்கு கட்டுரையாளர் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறது. அப்படி என்றால் இந்து மதத்தை பிடிக்காமல் தனது தோழர்களோடு புத்த மதத்தை தழுவினார் அம்பேத்கார். அவர் வழியில் கட்டுரையாளரும புத்த மதத்துக்கு சென்று விடுவாரா?

    அம்பேத்காரின் வாக்கை அவரது இனத்தாரே புறந்தள்ளி விட்டனர். பல கோடிகள் இருந்த தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு லட்சம் பேரைத்தான் அவரால் புத்த மதத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.

    அம்பேத்காரிடமிருந்து இஸ்லாமிய எதிர்ப்பை மட்டும் எடுத்துக் கொண்டு இந்து மதத்தை பற்றி அவர் கூறிய கருத்துக்களை கண்டு கொள்ளாமல் விடுவது சிறந்த தர்மமா என்பதை கட்டுரையாளரின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்

    (Edited and published)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *