ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

சமீப காலமாக செய்திகளில் அண்ணா ஹசாரே குறித்துத்தான் அதிகம் பேசப்படுகிறது. டில்லியில் அவர் ஊழலுக்கு எதிராகவும், மக்கள் லோக்பால் மசோதாவை உடனடியாகக் கொண்டு வரவேண்டியும் அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியதுமே மக்களிடமிருந்து பெருத்த ஏகோபித்த ஆதரவு கிடைக்கத் தொடங்கிவிட்டது. அப்படித் தங்களது ஆதரவை முன்பு எப்போதுமில்லாத வகையில் இளைஞர்கள், வேலையில் இருப்பவர்கள், நடுத்தர மக்கள், எதிர்காலம் இருண்டுவிடக்கூடாது என்று இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள், ஆண்கள், பெண்கள் என்று ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஆதரவுக் கரம் நீட்டினர்.

இதெல்லாம் மகாத்மா காந்தியடிகளுக்குச் சுதந்திரப் போராட்டத்தின் போது கிடைத்த ஆதரவைப் போல எண்ணுவதற்கில்லை. எதிர்காலம் ஊழல் சாம்ராஜ்யமாக ஆகிவிடப் போகிறது என்ற அச்சத்திலும், பல்லாயிரக்கணக்கான தியாகிகள் தங்கள் இன்னுயிர் ஈந்தும், சிறைபட்டும், அடி உதையுண்டும் வாங்கிய சுதந்திரம் மீண்டும் பின்புறவழியாக அன்னியர் வசம் போய்க்கொண்டிருக்கிறதே, இந்த இழிநிலையை மாற்றக்கூடிய சக்தி படைத்த, வழிகாட்டக்கூடிய யாராவது ஒருவர் கிடைக்க மாட்டாரா, அவர் பூனைக்கு மணிகட்ட மாட்டாரா என்று இளைஞர்கள் ஏங்கிக் கிடந்த சூழ்நிலையில் இந்த அண்ணா ஹசாரே வந்து சேர்ந்தார். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல.

இவர் யார்? இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஏராளமான ஊழல், லஞ்சம் போன்றவற்றைக் குறிப்பாக போஃபர்ஸ் ஊழல், குட்றோச்சி தனது வங்கிக் கணக்கைக் காலிசெய்துவிட்டு நாட்டைவிட்டு ஓடியது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், பம்பாய் கார்கில் போர்வீரர்களுக்குக் கட்டிய வீடுகள் ஒதுக்கீடு ஊழல் என்று ஏராளமான ஊழல்கள் நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த போதெல்லாம் வெளிவராத இந்த அண்ணா ஹசாரே இன்று திடீரென்று வந்து குதித்து, கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்று லோக்பால் மசோதா கொண்டு வருவது குறித்து கூச்சல் போடுவது சந்தேகத்தைக் கிளப்புகிறது அல்லவா? இவரது நோக்கம் என்னவாக இருக்கும், உண்மையிலேயே இந்த பாரத புண்ணிய பூமி லஞ்ச லாவண்யமற்ற ஒரு புனித நாடாக ஆகவேண்டுமென்பதுதான் இவரது ஆதங்கமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறதல்லவா?

இந்த லோக்பால் மசோதா குறித்து இத்தனை ஆண்டுகள் கழிந்தபின் இப்போதுதான் ஏற்பட்ட பிரச்சினை போல எல்லா தரப்பினரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்களே, அதுதான் புரியவில்லை. இந்த லோக்பால் சட்டமாகி, லோக்பால் அமைக்கப்பட்டவுடன் இந்திய அரசியல்வாதிகள், அதிகார வர்க்க அதிகாரிகள், இடைத்தரகர்கள், இவர்களெல்லாம் புனிதர்களாக ஆகிவிடப் போகிறார்களா? அல்லது இனி ஊழல் செய்பவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமென்றால், இதுவரை செய்து சொத்துக் குவித்திருக்கிற ஊழல் பெருச்சாளிகள் தப்பிவிட விட்டுவிடலாமா?

இதெல்லாம் ஏதோ பெரிய தவறுகளை மறைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படுபவைகளோ என்கிற ஐயம் எழத்தான் செய்கிறது. சரி, அப்படியே இந்த அண்ணா ஹசாரே சொல்வதைக் கேட்டுவிட்டால்தான் என்ன. இந்த அரசாங்கத்துக்கு என்ன குடிமுழுகிவிடப் போகிறது. அண்ணா ஹசாரேக்குக் கூடும் கூட்டம் ஆளும் காங்கிரஸ் கூட்டணியினருக்குக் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. எந்தெந்த வகைகளிலெல்லாம் அவரை குறை சொல்லலாமோ சொல்லுகிறார்கள். ஆட்சி பீடத்தில் அமர்ந்துகொண்டு இவர்கள் செய்யும் ஊழலைச் சுட்டிக் காட்டினால், வீம்புக்கு இந்த அண்ணா மட்டும் என்ன, யோக்கியரா என்கிறார் திக்விஜய்சிங், கபில் சிபல் போன்றோர். போதாத குறைக்கு நாராயணசாமி என்கிற அமைச்சர், ஏதோ பள்ளிக்கூட பிள்ளையைப் போல முகத்தைப் படு கோணல் செய்துகொண்டு அவர் யார் எங்களுக்கு உத்தரவு போட என்று மிரட்டுகிறார்.

உங்களைப் போன்றவர்களுக்கு ஓட்டுப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பிய ஒரு இந்திய குடிமகன். நாங்கள்தான் சட்டங்களை இயற்றுவோம், இவர் சொல்லுகிறபடியெல்லாம் செய்யமுடியுமா என்கிறார். சரி அப்படியென்றால் நீங்களே செய்திருக்க வேண்டியதுதானே. செய்யாதது மட்டுமல்ல, மக்களை ஏமாற்றுவதைப் போல இப்போதும் முன்பு ஒன்றும், பின்னர் ஒன்றுமாக மாற்றி மாற்றி கதை சொல்லுகிறீர்களே. சி.பி.ஐ. என்றொரு அமைப்பு. மாயாவதி, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் மீது ஏதோ பெரிய அளவில் வழக்கு என்றார்கள். பின்னர் என்ன ஆயிற்றோ தெரியவில்லை; பேச்சு மூச்சே காணோம். யார் அந்த சி.பி.ஐ.யை ஆட்டுவிப்பது. ஏன் அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. அவர்கள் தவறு செய்தால் இந்த லோக்பால் சட்டத்தில் அவர்களையும் கொண்டு வரலாமே, ஊஹூம் அதெல்லாம் முடியாது, அவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பது எதற்காக. அரசியல் செய்து ஆட்சி பீடம் ஏறியிருப்போர் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வு அறவே போய்விட்டது. அவர்கள் அனைவருக்கும் எஜமானர்கள் என்ற அதீதமான எதேச்சாதிகார மனோபாவம் வளர்ந்திருக்கிறது.

திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது. ஆனானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரே ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபக்தர்கள் இயக்கம் என்பதைத் தெரிந்து கொண்டு யுத்த காலத்தில் டில்லி நகர பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டார். இந்த அரைவேக்காட்டு மனிதர்கள் ஆர்.எஸ்.எஸ். ஒரு பிசாசு, பூதம் போல உருவகப் படுத்துவதும், அதனோடு தொடர்புடையவர்கள் என்றால் ஏதோ அன்னிய நாட்டுக்கு நம் நாட்டைத் தாரைவார்த்த கும்பல் போலவும் கூச்சலிடுவதை இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யார் தேசபக்தர்கள், யார் ஊழல் பெருச்சாளிகள் என்பதெல்லாம் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆகையால் திக்விஜய் சிங், கபில் சிபல், போன்றவர்கள் தங்கள் நாவை அடக்கி வைத்துக் கொள்வதே சரி.

இவ்வளவு பேசுகிறார்களே இந்த காங்கிரஸ்காரர்கள். நடந்த ஊழல்கள் பற்றி வாய் திறக்கிறார்களா? ஊழல் செய்த மனிதனை எப்படியெல்லாம் காப்பாற்றலாம், எப்படியெல்லாம் சட்டத்தைத் தங்கள் இஷ்டத்துக்கு வளைக்கலாம், நீதியை எப்படியெல்லாம் திசைமாறச் செய்யலாம் என்று குறுக்கு வழி தேடி அலையும் இந்தக் கும்பல் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு தேசபக்த இயக்கத்துக்கு இழுக்குத் தேடித் தர இனியும் அனுமதிக்கக் கூடாது. இனியொரு முறை இவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கேவலப்படுத்துவார்களானால் இவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர ஆர்.எஸ்.எஸ். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இவர்களை எதிர்த்து அமைதியான முறையில் கருப்புக் கொடிகாட்டி போராட வேண்டும். இந்த இயக்கத்தார் எந்த பதவிகளை வகித்தார்கள். எந்தெந்த பேரங்களில் கையூட்டு வாங்கினார்கள். தேசத்தை எந்தெந்த வகைகளில் காட்டிக் கொடுத்தார்கள்? கோயில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பினார்களா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டு இந்திய மக்களைக் காட்டிக் கொடுத்தார்களா? இந்திய சிறு தொழில்களை அழித்துவிட்டு அமெரிக்க பெரு முதலாளிகலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக அன்னியப் பொருட்களை இறக்குமதி செய்து, இந்தியத் தொழில்கள் முடங்க வைத்தார்களா? எந்த வகையில் இந்த திக்விஜய்சிங் போன்றவர்களை விட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தார் இழிவாகப் போய்விட்டார்கள்.

மனிதனுக்கு நாவடக்கம் தேவை. அதிலும் உயர்த பதவிகளில் இருப்போர் அளந்து பேசுவதுதான் நியாயம். ஒரு திருக்குறளை இந்த மனிதர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

ஒரு பழமொழி உண்டு. “தமிழே தள்ளா புள்ளா, இங்கிலீஷ் தலைகீழ் பாடமாம்” என்று. இவர்களுக்குத் தங்கள் தாய் மொழியிலும் பேச வராது, ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வராது. இந்த அழகில் இதுபோன்ற தமிழ் மொழியின் உலக மறை நூலாம் திருக்குறளை எப்படிப் படிக்கப் போகிறார்கள்? இந்த குறள் சொல்லும் நீதியை எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறார்கள். “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று பாரதி சொன்னதை மீண்டும் நினைவில் கொள்வோம்.

10 Replies to “ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்”

  1. தேசவிரோத கட்சியான காங்கிரசு விரைவில் சமாதியாகும். அதன் பிறகு திக்விஜய் சிங்கு போன்ற கோமாளிகள் புதிய சர்க்கஸ் கூடாரத்தை தேடி ஓடிவிடுவார்கள். இவனைப்போன்ற கோமாளிகள் நம் நாட்டில் எல்லா கட்சிகளிலும் உள்ளனர்.

  2. பிஷப் கோடுவெல் கருத்துகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஈரோடு வெங்காய மண்டி முதலைகளால் (முதலாளிகளால்) சுத்தமாக மூளை சலைவை செய்யப்பட்ட RGB தமிழன் (செந்தமிழன், பச்சை தமிழன், கருன்தமிழன்) நங்கள்.. அது எப்படி தமிழர்களாகிய நாங்க அண்ணாவின் பெயரை வாய்த்த ஒரு அண்ண காவடியை ஆதாரிகறது? காங்கிரசும் எம்மகு எதிரி..பா ஜா கா வும் எதிரி.. 😮

  3. அன்னா ஹசாரே முன் வைக்கும் ஊழலுக்கான எதிர்ப்பு, அதற்கு அவருக்குக் கிடைதத இளைஞர்களின் பேராதரவு, அதனை அரசியல் ஆதாயத்திற்குப் பய‌ன்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகள், எதிர்பதை மட்டுமே மனதில் கொண்ட சாய்வு நாற்காலி அறிஞர்கள், திசை திருப்பும் பத்திரிகைகள்,இவற்றையெல்லாம் தாண்டி ஊழல் ஒழிய வேண்டும்! இறைவா இந்தக் கனவு நனவாகுமா?

  4. //ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு தேசபக்த இயக்கத்துக்கு இழுக்குத் தேடித் தர இனியும் அனுமதிக்கக் கூடாது. இனியொரு முறை இவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் கேவலப்படுத்துவார்களானால், இவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர ஆர்.எஸ்.எஸ். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இவர்களை எதிர்த்து அமைதியான முறையில் கருப்புக் கொடிகாட்டிப் போராட வேண்டும். இந்த இயக்கத்தார் எந்தப் பதவிகளை வகித்தார்கள்? எந்தெந்த பேரங்களில் கையூட்டு வாங்கினார்கள்? தேசத்தை எந்தெந்த வகைகளில் காட்டிக் கொடுத்தார்கள்? கோயில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பினார்களா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டு இந்திய மக்களைக் காட்டிக் கொடுத்தார்களா? இந்தியச் சிறு தொழில்களை அழித்துவிட்டு அமெரிக்கப் பெரு முதலாளிகளின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக அன்னியப் பொருட்களை இறக்குமதி செய்து, இந்தியத் தொழில்கள் முடங்க வைத்தார்களா?//

    இந்தக் கேள்விகளிலெல்லாம் உள்ள ஞாயத்தை இந்திய வாக்காளர்கள் பெரும்பாலானோர் உணரவேயில்லை என்று தோன்றுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நாத்திகர்களும் பொதுவுடைமை வாதியரும் மேற்கண்ட குற்றச் சாட்டுகளை இந்த இயக்கத்தின் மீது எழுப்புவதையே தங்கள் முதன்மை வேலையாகச் செய்து வருகிறார்கள். அவ்வாறு அபாண்டவ்யமான குற்றச்சாட்டுகளை எழுப்பும்போது, அதை எதிர்த்து நீதி மன்ற வழக்குகளைத் தொடர்ந்து, அறியாத மக்களுக்கு இந்த இயக்கத்தின் மேன்மையைப் புலப்படுத்த வேண்டும். எதிர் வினை ஏதும் இல்லையென்றால், தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். தூற்றுதலை இந்த இயக்கம் சட்டை செய்யாவிட்டாலும் பொது மக்களிடம் இந்த இயக்கம் பற்றி மிகத் தவறான கருத்துப் பரவிவிடுகிறது.இந்த நாட்டுக்கு நன்மை செய்ய விரும்பும் இயக்கம், தன்னைப் பற்றிய தவறான கருதுகோள் பரவுவதை அனுமதிக்கக் கூடாது.

  5. அன்புள்ள கோபாலன்ஜி,

    நன்றி.

    காங்கிரஸ் கட்சி ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ். காரர் என்று பிரசாரம் செய்யக் காரணம், அதன்மூலமாக சிறுபான்மையினரிடையே ஆதரவைப் பெறவே. ஊழலுக்கு எதிரான யுத்தத்தில் சிறுபான்மையினரின் பங்கேற்பைத் தடுக்கவும், பாஜக ஆதரவாளர்கள் ஊழல் எதிர்ப்பால் பலனடையாமல் தடுக்கவுமே, காங்கிரஸ் கட்சி இந்தப் பிரசாரத்தை நடத்துகிறது.

    அக்கட்சி எதிர்பார்த்தபடியே, ஹசாரே குழுவினர் இந்தப் பிரசாரத்தால் தடுமாறுகின்றனர். சிறுபான்மையினரை காங்கிரஸ் தவறாக எடை போடுகிறது. அவர்களும் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை அடுத்த தேர்தலில் காங்கிஸ் கண்டிப்பாக உணரும்.

    – சேக்கிழான்

  6. நமது நாட்டில் நடைமுறையில் உள்ள ஜனநாயகத்தின் அபாயகரமான சில ஷரத்துக்கள் என்று நான் நினைப்பவை: 1 . ஓட்டுப்போடும் தகுதி உள்ள ஒருவருக்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு தகுதி உள்ளதாக எவ்வாறு ஏற்க முடியும்? 2 . மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி பற்றி நமது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிகள் உள்ளதாக தெரியவில்லை. மாறாக கிரிமினல் குற்றங்கள் புரிந்திருந்து தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்காக காத்திருப்பவர் கூட மக்கள் பிரதிநிதியாகலாம்! 3 . விளைவு; நமது பாராளுமன்றத்தில் நிறைய கிரிமினல்கள்.

  7. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வடேராவிற்கு யூனிடெக் நிருவனத்தில் 20% பங்குகள் உள்ளாதாம்.
    டி.எல்.f. நிறுவனம் பலகோடி கடன் கொடுத்துள்ளதாம்.

    ஏன். வடேராவிற்கு எல்லா வானூர்தி நிலயங்களில் தடையற்ற சோதனையற்ற அனுமதிகள் ஏன்?
    https://newindian.activeboard.com/t35072637/sonia-manmohan-singh-sleep-on-corruption/?page=18&ts=last

  8. ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள் என்ற கோபாலன் ஜி அவர்களின் கட்டுரை வாசித்தேன். ஆர் எஸ் எஸ் இயக்கத்தோடு அண்ணா ஹசாரே அவர்களுக்கு உள்ள தொடர்பை சொல்லி திக் விஜய் சிங் போன்றவர்கள் செய்யும் பிரச்சாரத்தை கண்டிக்கிறது கட்டுரை. சங்கத்தை இழிவு படுத்தும் திக்கற்ற காங்கிரஸ் காரர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஆனால் அண்ணா ஹசாரே அவர்களின் முக்கியத்துவத்தை மிக சாமான்யமாக மதிப்பிட்டுள்ள கட்டுரையாளரின் கருத்தினை ஒரு தேசபக்தனாக ஏற்க முடியவில்லை.
    “இதெல்லாம் மகாத்மா காந்தியடிகளுக்குச் சுதந்திரப் போராட்டத்தின் போது கிடைத்த ஆதரவைப் போல எண்ணுவதற்கில்லை. ………. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல”.
    மாமனிதர் அண்ணா ஹசாரே அவர்கள் நாட்டின் மனசாட்சியாக விளங்குகிறார். அவரை காந்தி என்பதில் கம்யுனிஸ்டுகளுக்கு வருத்தம் இருக்கலாம். பாரத தேசியவாதிகளுக்கு அது தேவை இல்லை. காங்கிரஸ் பேராயக் கட்சியின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியதில் அவருக்கு இணை யாருளர். அவரது காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரம் சோனியா-ராகுல் என்ற அந்நிய சக்தியை வருகிற தேர்தல்களில் வீழ்த்தும். மக்களுக்கு பாராளுமன்றத்தைக்கண்டிக்கும் உரிமை உண்டு என்பதை நிலை நாட்டும்.
    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

  9. மரியாதைக்குரிய சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களுக்கு, அண்ணா ஹசாரேக்கு உரிய மரியாதையோடு அவருடைய செயல்பாடுகளில் நான் மாறுபடுகிறேன். மகாத்மா காந்தியைப் போல வேறு ஒருவர் இனி பிறப்பது அரிது. அண்ணா ஹசாரே லோக் பால் மசோதா சட்டமானால் போதும் அனைத்தும் சரியாகிவிடும் என நினைக்கிறார். நம் கண் முன்னால் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ௨ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து இருக்கிறதே அதைக் கண்டித்தோ அல்லது அதற்குக் காரணமான கூட்டத்தை எதிர்த்தோ ஒரு வார்த்தை சொன்னது உண்டா? போதாதற்கு சோனியாவை ஊழலுக்கு எதிராகப் போராட வாருங்கள் நாம் சேர்ந்தே போராடலாம் என்கிறார். மாமிசத்துக்கு அலையும் புலியைப் பார்த்து, நீயும் வா, நாம் வள்ளலாரின் புலால் உண்ணாமை பிரசாரம் பண்ணலாம் என்பதைப் போல. “மனதில் உறுதி வேண்டும், வாக்கினில் இனிமை வேண்டும், எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற” ஓர் இலக்கு வேண்டும். திக்விஜய் சிங் இவரை ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி என்று சொன்னால் சொல்லிக்கொள்ளட்டுமே! ஆம்! ஊழலை எதிர்க்கும் யாருக்கும் நான் அனுதாபிதான் என்று சொல்லும் மன உறுதி , நேர்மை இவரிடம் ஏன் இல்லை? இவர் ஒரு மகாத்மாவாகவோ, அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவோ ஆக வேண்டுமானால் இவரது போக்கில் மாற்றம் தேவை. வேறு குறை எதுவும் எனக்கு இவரிடம் இல்லை.

  10. கடுமையான விலைவாசி உயர்வு காங்கிரஸ் அரசுக்கு எல்லா மாநிலங்களிலும் வரும் தேர்தலில் சமாதி கட்டும். ஆந்திரத்தில் ஜெகன்மோகன் கட்சியுடன் மோதமுடியாமல் தவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆதர்ஷ் என்றபெயரில் கட்டிய ஊழல் காங்கிரசை காவு வாங்கும். ஊழல்கள் அதிகம் செய்ய செய்ய, இஸ்லாமிய மக்கள் காங்கிரசுக்கு கூடுதல் வாக்கு அளிப்பார்கள் என்று காங்கிரஸ் காரர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள். இஸ்லாமியர்களும் , காங்கிரசின் ஊழல்களாலும், விலைவாசி உயர்வினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரும் தேர்தலில் பங்களாதேசிகளை தவிர வேறுயாரும் காங்கிரசுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.

    அஸ்ஸாம் உட்பட , பங்களா தேசத்திலிருந்து ஓடிவந்த அகதிகள் குடியிருக்கும் பகுதிகளில் மொத்தம் இந்தியா முழுவதும் 50 தொகுதிகள் தான் உள்ளன. குள்ளநரி கருணாநிதி கூட இந்த தடவை காங்கிரசுடன் கைகோக்க மாட்டார். கையுடன் கை கோத்தால் அவரது கையில் சுட்டுவிடும் என்பது அவருக்கு புரிந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்க, சில ஜோதிடர்களிடம் காசு கொடுத்து, காங்கிரசுக்கு சீட்டு குறைந்தாலும் , மீண்டும் கம்யூனிஸ்டு போன்ற அனாதைகளுடன் சேர்ந்து, காங்கிரஸ் தான் கூட்டணி மந்திரிசபை அமைக்கும் என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகு காங்கிரசை யாரும் சீண்டமாட்டார்கள்.இதுதான் உண்மை நிலை. முலயாமோ, மோடியோ மம்தாவோ பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காங்கிரஸ் அரோகராதான். காந்தியடிகள் கண்ட கனவு நனவாக போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *