மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

சரஸ்வதி நதி ஒரு தொன்ம நினைவாக இந்திய மனதில் தொல்-வரலாற்றுக் காலம் தொட்டே ஓடிக்கொண்டிருக்கும் ஒன்று. ஆனால் வரலாற்றின் ஆவணங்கள் மீட்டெடுக்கப்படும் போது அதன் இடம்தான் என்ன? பழமையான கற்பனையா அல்லது ஒரு யதார்த்தமா? அல்லது அதன் ஆன்மீக பண்பாட்டு குறியீட்டு முக்கியத்துவமா?

danino_cover2

வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான மிச்சேல் தனினோ (Michel Danino) எழுதியுள்ள நூல் ‘The Lost River: On the trail of the Saraswathi’ : மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி எனும் நூல் இந்த கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை காண முயல்கிறது. இந்த நூல் ஒரு அறிவியல் தேடல். தேடப்படும் பொருளோ நம் நரம்புகளில் இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழும் பண்பாட்டின் மூல ஊற்றுக்களைத் தேடி. இந்த பண்பாட்டின் ஊற்றுக்கள் வெறும் உருவகங்கள் மட்டுமில்லை. அவை தார் பாலை வனத்திலும் இமயம் முதல் குஜராத் வரை நீண்டுகிடக்கும் வறண்ட நதிப் படுகையிலும் அடி ஆழத்தில் துயில் கொண்டிருக்கின்றன என்பது இந்த தேடலை மிகவும் சுவாரசியமானதாக ஆக்குகிறது.

இந்த நூலின் முதல் பகுதி நம் நாட்டின் காலனிய ஆட்சியின் போது சரஸ்வதி நதிப்படுகையை பிரிட்டிஷ் நிலவியலாளர்கள் கண்டடைந்த விதத்தை விவரிக்கிறது. தனினோ மிகவும் சிரமப்பட்டு அந்த காலத்தின் அரிய வரைப்படங்களை சேகரித்து ஒரு அழகிய தேடல் படலத்தை உருவாக்குகிறார்.

உதாரணமாக 1862 இன் பிரிட்டிஷ் இந்திய வரைபடம் காகர் நதியின் இணை நதியை சூர்ஸ்வதி (‘Soorsutty’) என கூறுவதை அளிக்கிறார். (பக்.20) அண்மைக்காலங்களில் செயற்கைகோள் புகைப்படத்தின் விளைவாகவே சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டதாக தவறாக சில வட்டங்களில் புழங்கும் கதை தவறானது என்பதை இது காட்டுகிறது. அந்த நதிப்படுகையைச் சுற்றிலும் இருக்கும் நாட்டார் வழக்குகளில் சரஸ்வதி ஒரு சாஸ்வதமான இருப்பாகவே இருந்துவந்ததை தனினோ பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலம் காட்டுகிறார். ”மறைந்த நதி” என இந்த வறண்ட நதிப் படுகையை மகாபாரதமும் வேதங்களும் கூறுவதைச் சரஸ்வதியுடன் இணைத்துப் பேசும் நிலவரையியலாளர் சி.எஃப்.ஓல்தம், வேதங்களும் சரி மகாபாரதமும் சரி சரஸ்வதி குறித்துகூறும் விவரணஙகள் ”அந்தந்த காலகட்டங்களைச் சார்ந்த உண்மையாகவே இருந்திருக்க வேண்டும்” என கூறுகிறார். (பக்.34)

வேத இலக்கியத்திலிருந்து புராண இலக்கியம் வரையிலுமாக சரஸ்வதி குறித்து கூறப்படும் தொன்ம சேதிகளை ஐதீக விவரணங்களை தனினோ தொகுத்தளிக்கிறார். இந்த தொன்ம பரிபாஷைக்குள் ஒளிந்து இருக்கும் சரஸ்வதி குறித்த நிலவியல் தரவுகள் என்னவாக இருக்கும் என தேடுகிறார். சரஸ்வதி பயணித்த வரலாற்றுப்பாதை எது?

விஷ்ணுபுராணத்தில் சரஸ்வதி நதி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. மார்கண்டேய புராணத்தில் அந்த நதி வேதத்தில் சரஸ்வதி எந்த வரிசையில் கூறப்படுகிறதோ அதே வரிசையில்தான் கூறப்படுகிறது. பத்மபுராணம் அனைத்தையும் விழுங்கும் அக்னியின் பரவலை சரஸ்வதி நதியின் மறைவுடன் இணைத்து பேசுகிறது. இது அந்த நிலப்பரப்பு முழுக்க பரந்து விழுங்கிய ஒரு வறட்சியை குறித்த நினைவாக இருக்கலாமா? (பக் 44) பின்னர் கல்வெட்டுச்செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றுக்கு நகர்கிறார் தனினோ. இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் சரஸ்வதி குறித்த செய்திகளை அளிக்கின்றன. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தாரிக் ஈ முபாரக் ஷாஹி எனும் நூலில் சரஸ்வதி எங்கே ஓடியிருக்க வேண்டும் என்பது குறித்து கூறப்படுகிறது. (பக்.46)

michel_daninoதனினோ இனி நவீன காலகட்டத்தில் சரஸ்வதி நதி குறித்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு வருகிறார். இங்கு ஆராய்ச்சி படு சுவாரசியமான வேகம் கொள்கிறது. நிலத்தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூர-புகைப்படத் துறையும் எப்படி இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின?ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு தேச பண்பாடு தன் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருந்த அந்த தொன்ம நதி அறிவியலின் விளிம்பில் இருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் வரலாற்று உண்மையாக உயிர் கொண்டு எழுந்த தருணங்கள் படிப்போருக்கு மின்னதிர்வுகளாக ஆர்வக்கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்தேடலின் தொடக்கப்புள்ளியான ஆராய்ச்சி தாள் விஞ்ஞானி யஷ்பால்-ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது ‘Remote Sensing of the ‘Lost’ Sarasvati River’

தனினோ முடிக்கிறார்:

இஸ்ரோ ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த முடிவு யாதெனில் பல தொல்-நதிப்படுகைகள் இருக்கின்றன என்பதும் அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்கவேண்டுமென்பதும். அது நாம் பெரும்பாலான எளிய வரைப்படங்களில் காண்பது போல ஒற்றை வரி ஓட்டம் அல்ல. அதன் சிக்கலான அமைப்பு அந்த பிரதேசத்தின் வரலாற்றின் சிக்கலான நீரோட்டத்தை நினைவுப்படுத்துவது. (பக்.72)

சரஸ்வதி நதி குறித்த அறிவியல் ஆராய்ச்சி பலதுறை நிபுணத்துவத்தைக் கோருகிறது. உண்மையில் பலதுறைகளும் அவையவற்றின் பணிகளின் போது கிடைத்த தரவுகள் ஒருங்கிணைந்து சரஸ்வதியின் தேடலை மேலும் மேலும் விரிவாக்குகின்றன. உதாரணமாக ராஜஸ்தானின் ஜெய்ஸால்மிர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் நிலத்தடி நீர் இயக்கமற்ற (மழை நீர் சேகரிப்பின்) ஒரு தேக்கமாக இல்லாமல் ஒரு நீர் பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அது அண்மைக்கால மழைநீர் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டதல்ல மாறாக ஹிமாலய நதி நீர்களின் தன்மை கொண்டதாக இருப்பதை ஐஸடோப் ஆய்வுகள் மூலமாக அறிகிறார்கள். தொன்ம நதி ஒன்று ஐஸோடோப் ஆராய்ச்சியின் மூலம் உருபெறும் ஆராய்ச்சி சுவாரசியங்கள் பக்கங்கள் தோறும் விரிகின்றன. நிலத்தடி நீர் பம்புகள் மூலம் வெளிக்கொணரப் படும் போது சில இடங்களில் நாற்பதாண்டுகளாக நீர் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கிறது. 1999 இல் மற்றொரு ஆராய்ச்சி நிலத்தடி நீர் மட்டம் இந்த பாலைவனப்பகுதியில் குறையாமல் நீரோட்டமாக ஒரே அளவில் இருந்து வருவதைக் காட்டுகிறது. மகாபாரத்த்தின் கவித்துவ வரிகளை இந்த இட்த்தில் தனினோ வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் “பூமியின் உள் உறுப்புகளூடாக ஓடும் கண்ணுக்குத் தெரியாத பிரவாகம்” (பக்.75)

இதன் பிறகு தனினோ சரஸ்வதி-சிந்து பண்பாட்டு வெளியில் நம்மை ஒரு பெரிய அகழ்வாராய்ச்சி சுற்றுப்பயணத்தில் அழைத்துச் செல்கிறார். நாம் இதுவரை பார்த்து வளர்ந்த ஹரப்பா மொஹஞ்சதாரோ பாடப்புத்தக வரைப்படங்களெல்லாம் கறுப்படித்த மோசமான புகைப்படங்கள் அல்லது சிறுபிள்ளைத்தனமாக எவ்வித அக்கறையும் சிறிதுமின்றி உருவாக்கப்பட்ட கைப்படங்கள். ஆனால் இங்கு நாம் காணும் புகைப்படங்கள் (கறுப்பு வெள்ளை படங்கள்தான்) அருமையாக அப்பண்பாட்டின் கம்பீரத்தையும் பன்முகத்தன்மையையும் நமக்குக் காட்டுகின்றன. மிக அண்மைக்கால அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளின் புகைப்படஙகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

உதாரணமாக பன்வாலியில் உள்ள நெருப்பு சடங்கு கோவில் (பக்.157), கலிபங்கன் வீட்டின் சித்திர தரை (பக்.160), லோத்தாலின் கப்பல் துறை அது எப்படி இருந்திருக்குமென்று ஓவியரின் கற்பனை உருவாக்கம் (பக்.162-3), தோலவிராவின் பாறையைக் குடைந்து உருவாக்கப்ப்ட்ட நீர் சேகரிப்பு அமைப்பு … இவை எல்லாம் நம் கண் முன் ஒரு புதிய உலகை திறக்கின்றன. நம் ஆர்வத்தை தூண்டுகின்றன. இப்புகைப்படங்கள் அனைத்தும் இந்திய அகழ்வாராய்ச்சி மைய காப்புரிமை கொண்டவை. இவற்றை ஒரு மிஷேல் தனினோ பெற முடியுமெனில் ஏன் நம் பாடநூல் பதிப்பகங்கள் பெற முடியாது? இதற்கான ஒரே பதில் சிரத்தையின்மை. நம் குழந்தைகளுக்கு நம் வரலாறு சிறப்பாக் கொண்டு போய் சேர்க்கப்ப்ட வேண்டுமென்பதில் அக்கறையின்மை.

இங்கு மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான கே.எம்.பணிக்கர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கோரிக்கை குறிப்பினை அனுப்புகிறார். ”ஒரு காலத்தில் சரஸ்வதி நதி பாய்ந்தோடி கட்ச் வளைகுடா பகுதிக்குள் பாய்ந்த பாதையில் இருக்கும் பைகானூர் ஜெய்சால்மீர் ஆகிய பாலைவனப்பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிகளை இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” ஜவஹர்லால் நேரு இந்த சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி திட்டத்தை அமுல்படுத்துகிறார்.. (பக்.135) ஆக சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி என்றதுமே “ஹிந்துத்துவ கற்பனை” என கூறுவோர் அந்த கற்பனையையும் ஹிந்துத்துவத்தையும் நேருவிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

sarasvatiriver3

சரஸ்வதி குறித்து தனினோவின் சொந்த கருத்துகள் என்ன? பின்னாட்களில் ஹரப்பன் பண்பாடு என அழைக்கப்படும் அதன் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவேதான் பல அகழ்வாராய்ச்சியாளர்கள் அதை சரஸ்வதி-சிந்து பண்பாடு என அழைக்க தயங்குவதில்லை. இந்த நதிப்படுகை நாகரிகத்துடன் நம் இன்றைய பாரத சமுதாயம் தொடர்ச்சியான பண்பாட்டு உறவு கொண்டுள்ளது. இன்றைக்கும் ராஜஸ்தான் ஆழ்கிணறுகளுக்கு சரஸ்வதி நதியின் நிலத்தடி பிரவாகம் நன்னீர் அளித்து வருவது போல பாரத பண்பாட்டுக்கு ஊற்றுக்கண்களாக சரஸ்வதி பண்பாடு இருந்து வருகிறது. அதன் நினைவு நம் கூட்டு நனவிலியில்.

ஆனால் இந்த மகாநதியின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த அந்த இயற்கை நிகழ்வுதான் என்ன? அது திடீரென நிகழ்ந்த பெருநிகழ்வா அல்லது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த ஒரு மெதுவான மாற்றமா? தனினோ நம் முன்னால் தரவுகளின் அட்டவணை ஒன்றை விரிக்கிறார். ஏழு ஆராய்ச்சிகள் பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்து ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சியின் போது அங்கு வறண்ட சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன. இன்னும் ஏழு ஆராய்ச்சிகள் பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்து ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சியின் போது அங்கு அதீத மழைச்சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன.

இரண்டுமே நிகழ்ந்திருக்கலாம் அதீத மழை அதீத வறட்சி. நிலத்தடுக்குகளின் உராய்வு என அனைத்துமே சரஸ்வதியின் “விநாசனத்தை” ஏற்படுத்தியிருக்கலாம் என கூறுகிறார் தனினோ. அதன் கிளைகள் வேறு நதிகளுடன் இணைந்தன. ஒரு நதி மறைந்தது. அது வளர்த்த ஒரு பண்பாடு தடுமாறியது. வீழ்ச்சியடைந்த்து. மாற்றம் கொண்டு மீண்டது. தன் நினைவுகளில் அந்த நதியை –அன்னைகளில் சிறந்தவளாக, தெய்வங்களில் சிறந்தவளாக- என்றென்றைக்குமாக குடியேற்றி வணங்கியது. அவளே அறிவைத் தந்தாள். அவளே நம் பண்பாட்டை உருவாக்கினாள். அவள் பாரத்த்தின் கூட்டு மனதில் நனவிலும் கூட்டு நனவிலியிலும் வாக்தேவதையாக கலையரசியாக உருவெடுத்தாள். .

ஆக தனினோ முடிக்கும் போது சரஸ்வதி ஒரு புத்தெழுச்சியின் பிறப்புக்கும் ஆழ்ந்த உருவகமாகிவிடுகிறாள்.

இந்நூலை படிப்பதற்கு முன்னால் வாசகர்கள் கட்டாயமாக “நடக்காத படையெடுப்பு”‘Invasion that Never was’ என ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டின் ஆதாரமின்மை குறித்து தனினோ எழுதிய நூலை படித்துவிட்டு இதனை படிப்பது நல்லது. அது ஒரு நல்ல ஆர்வமூட்டும் தொடக்கமாக அமையக்கூடும்.

பாரதத்தின் பண்டைய வரலாற்றினை அறிவது எப்படி என ஆர்வமுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகும் எவருக்கும் இந்த நூல் ஒரு நல்ல கையேடு. ஒரு வரலாற்று புதிரை எப்படி பல கோணங்களில் அணுகுவது என்பதை கூறும் சுவாரசியமான அறிவியல் கதை சொல்லி. அகழ்வாராய்ச்சிக் குழிகளிலிருந்து கடும் சூரிய வெயிலில் அகழ்வாராய்ச்சியாளர்கள் உருவாக்கும் அறிதலை பொதுமக்களுக்கு சுவாரசியத்துடன், அரசியல் சார்பில்லாமல், அதே நேரத்தில் உண்மையை எவ்விதத்திலும் சமரசம் செய்யாமல் கொண்டு வந்து கொடுப்பது எளிதல்ல. அந்த மகத்தான சாதனையை தனினொ செய்திருக்கிறார். அவருக்கு பாரத மக்கள் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள்.

Michel Danino,
The Lost River –On the trail of the Sarasvati
Penguin Books, 2010
Price: Rs 399/-
Pages: 357

16 Replies to “மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..”

  1. சரஸ்வதி பூஜைக்கு அரவிந்தன் சரியான சமர்ப்பணம் செய்திருக்கிறார், மகிழ்ச்சியான பாராட்டுகள்!

    “கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்றுதான் நாம் பூஜை புனஸ்காரங்களை, பாத்திரங்களை சுத்தப்படுத்தும் முறைகளில்கூட, காலம் காலமாக ஆரம்பிக்கிறோம். இந்த மகோன்னத நதியின் வரலாறு பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படவேண்டிய பாரதக் கலாசார தொன்மை வரலாறு.

    த்ரிவேணி சங்கமத்தில் நான் சரஸ்வதியைத் தேடி, அது ஆழ்கடல் நதியா, ஊற்றா, பிரவாகமா என்றெல்லாம் புரியாமல் மாய்ந்து போய் அதிசயித்திருக்கிறேன். ஹிமாலய நதிகளின் வழிபாடும், தொன்மையும், கலாசாரமுமே பாரத கலாசாரமன்றி வேறல்ல. ஒரு முறை, ஒரே ஒரு முறையாவது, ஹிந்துவாகப் பிறந்த எல்லோருமே ஹிமாலயப் பிரதேசத்துக்கு- பத்ரிநாத்துக்கும், அமர்நாத்துக்கும், ரிஷிகேசத்திற்கும், ஹரித்வாருக்கும் சென்று வரவேண்டும். அந்தப் புனிதம், அந்த ஆன்மீக refresh, நரம்புகள் முறுக்கேறி ஒவ்வொரு ‘செல்’லிலும் புனிதம் பளீரிடும் அந்த அநுபவம், சொல்லில் அடங்காத அதிசயம். அம்மாவின் மடியில் படுத்து ஆனந்தமாக உறங்குவது போன்ற சந்தோஷம். இதை அனுபவித்து மட்டுமே புரிந்துகொள்ளவேண்டும். இது சொல்லில் அடங்காதது.

    இதையெல்லாம்கூட ஒரு வெள்ளைக்காரர் வந்து நமக்கு சொல்லித்தரும் வகையில் நாம் இருப்பது விசனிக்கத்தக்கது. காவேரி, முல்லைப்பெரியாறு என்று அபத்த அரசியல் ஸ்டண்ட் காட்சிகள் அரங்கேறும் கலியுகத்தில் ஏதோ இவ்வளவாவது கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    வெல் டன், அரவிந்தன்!

  2. Thank you for introducing this book.
    I will buy it.
    So far i am trying to read whatever books your suggesting.

  3. Pingback: Indli.com
  4. சார், திரு TVR என்பவர் இதை பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நூல் எழுதி உள்ளார். பெயர் மறந்து விட்டது கிடைத்தவுடன் தெரியப் படுத்துகிறேன்

  5. இந்நூலை நான் படித்ததில்லை. ஆனால், திரு.மிச்சேல் தானிநோவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. வளரட்டும் அவரது ஆராய்ச்சி.. புகழ்பெரட்டும் திரு.அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகள்!

    அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!!

  6. நூல் அறிமுகத்துக்கு மிக்க நன்றி அரவிந்த்!

    சித்தர் பரிபாஷையில் சரஸ்வதியை சுழுனையின் (Sushumna) குறியீடாகக் கொள்வர். அதைப் பிண்டத்தில் தேடவல்லார் அருகிவர, அண்டத்திலும் அவ்வண்ணமே போலும்.

  7. குஜராத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மூழ்கிவிட்ட துவாரகையை கண்டுபிடிக்க அகழ்வாராய்வுகல் நடந்து வருவதாக அறிகின்றேன் ;அதன் உண்மைகள் வெளியாகும் போது மகாபாரதம் காவியமல்ல ,சரித்திரம் என்பதை உலகம் அறியும் .அதே போல் டெல்லியை ஒட்டியுள்ள குருஷேத்திரத்தில் அணுக்கதிர் வீச்சு காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் உரைக்கின்றனர் .அப்படியானால் பாரதப்போரில் அணு ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டதா ?இது பற்றி விரிவானதும் ,ஆழமானதுமாய் ஆய்வுகள் தேவைப்படுகின்றது .அரசு இதில் கவனம் செலுத்துமா ?

  8. One Dr.kalyanaraman from Tamilnadu is also actively engaged in the efforts to locate the origin of river Saraswati, the communities that lived and the civilisations that sprang up along her course and has published books.

  9. நாங்கள் இந்திய எல்லையில் இருக்கும் இடத்தின் அருகே உள்ள மானா என்னும் இடத்துக்கு சென்றிருந்தோம், பத்ரிநாத் சென்று விட்டு அங்கிருந்து மானாவுக்கு செங்குத்தான பாதையில் பயணித்தோம், இந்தியாவின் கடைசீத்தேனீர்க்கடை இருக்கிறது அங்கே,

    ”இந்தியாவின் கடைசீத் தேனீர்க்கடை” என்றே தலைப்பிட்டு பயணக்கட்டுரை மின்தமிழில் எழுதினேன்

    அங்கே நாங்கள் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்தைப் பார்த்தோம்

    பொங்கி வருகிறது சரஸ்வதி நதி அங்கே

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  10. தமிழ்த்தேனியின் கருத்தையே நானும் பதிவு செய்கிறேன்! தமிழ்ஹிந்துவில் இது பற்றி விளக்கமாக யாரவது எழுதினால் நன்றாக இருக்குமே! நானும் பத்ரி நாத்திலிருந்து மானாவிற்கு சென்ற போது அங்கு சரஸ்வதி நதியின் பிறப்பிடம் என இருக்க க் கண்டேன்! நன்றி! எதிர்பார்க்கிறோம், சரஸ்வதி பற்றிய கட்டுரையை! மேலும் மானாவில் தான் வேத வியாசரின் இருப்பிடம், மற்றும் அவரால் சொல்லப் பட்டு விநாயகரால் மகாபாரதம் எழுதப் பட்ட இடமும் இருக்கிறது என்று தான் தரிசனம் செய்து வந்தோம்! இதைப் பற்றியும் எழுதினால் நன்று! நன்றிகள்!

  11. திரு அரவிந்த் நீலகண்டன்,
    திரு.மிச்சேல் தானி அவர்களின் ஆய்வுகள் எல்லாம் ஒரு சமுகம் சார்ந்ததாக உள்ளது. அவருடைய உரையாடல்களும் அப்படியே உள்ளது. அவருக்கு இந்தியாவின் மற்ற பண்பாடு பற்றி அதிகம் தெரிந்து இருக்க வில்லை போலும்.
    //குஜராத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மூழ்கிவிட்ட துவாரகையை கண்டுபிடிக்க அகழ்வாராய்வுகல் நடந்து வருவதாக அறிகின்றேன் ;அதன் உண்மைகள் வெளியாகும் போது மகாபாரதம் காவியமல்ல //
    இதில் எந்த அளவிற்கு உண்மை வரும்?
    இதைபோல் லெமூரியாவின்/ குமரிக்கண்டத்தின் கண்டுபிடிக்க அகழ்வாராய்வுகல் நடந்து வருவதாக அறிகின்றேன். வாசகன்

  12. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,

    அருமையான கட்டுரை,வாழ்த்துக்கள்.நீங்கள் இதைப் போன்ற கட்டுரைகள் நிறைய எழுத வேண்டுகிறேன்.நன்றி அய்யா.

  13. முன்பே ஒருமுறை சரஸ்வதி நதி நாகரிகம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றை ” ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ” வெளியிட்டிருந்தது. தற்போது இந்த வலைத் தளத்தில் அதைப் படிக்க மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான மைக்கேல் தனினோ, வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு எல்லோருக்கும் நாம் இந்த விஷயத்தில் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஆனாலும் அரவிந்தன் நீலகண்டன் இவற்றை எல்லாம் இந்த/து வலைத்தளத்தின் மூலம் உலகத்தின் பார்வைக்குத் தந்திருப்பது மிகுந்த நன்றிக் கடனுக்குரியது. வாழ்க பாரதம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *