பாரதி: மரபும் திரிபும் – 1

ஆசிரியர் முன்னுரை:

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

“பாரதி பெண் உரிமைக்கும் விடுதலைக்கும், தலித்துகளுக்கும், பார்ப்பனரல்லாதவர்களுக்கும்,
தமிழ் மொழிக்கும், பொதுஉடமைக்கும் விரோதி…. விரோதி….. விரோதி..

மொத்தத்தில் அவர் எழுதியது, பின்பற்றியது எல்லாமே ஒருபுள்ளியில்தான். அது அவருக்குள் இருந்த பார்ப்பனீயமே. அந்த ஒற்றைப் புள்ளியில்தான் அவருடைய கவிதை, கதை, கட்டுரைகள் அமைந்துள்ளன. பார்ப்பனீய சிந்தனையிலேயே அவர் வாழ்ந்தார்; இறந்தார்”

– இத்தகைய விஷமத் தனமான, பொய்மை ஊற்றெடுக்கும் கட்டுக் கதைகளை அந்தப் புத்தகத்தில் அவர் உளறி இருக்கிறார். இந்த புத்தகம் பாரதியாரை முழுமையாகப் படித்தோ அல்லது ஆய்வு செய்தோ நடுநிலைமையுடன் எழுதப்பட்டது அல்ல. பாரதியின் மீது அவதூறை மட்டுமே வீசும் நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த நூல். ஏனென்றால் அவர் ஒரு பார்ப்பனர். இது ஒன்று போதும் மதிமாறனுக்கு, பாரதியை வசைபாட!

மதிமாறனின் இந்தப் புத்தகத்துக்கு மட்டுமே பதில் எழுதப்படுவது அல்ல இந்தக் கட்டுரைகளின் நோக்கம். நாமும் பாரதியை அறியாமல் இருக்கிறோம். புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நவீன தமிழ்ச் சமுதாயத்தின் விடிவெள்ளியாக வந்துதித்த பாரதி என்ற மகத்தான ஆளுமையின் முழு பரிமாணத்தையும் உணராமல் இருக்கிறோம். அதை உணர்த்துவதும் இக்கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம்.

அந்த முழுப் பரிமாணத்தையும் இந்த கட்டுரைத் தொடரில் உண்மையில் எழுத முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு எல்லாவற்றையும் தொட்டுவிட ஆசைதான்.

பார்ப்போம்.

 -0-

 

“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி பாரதி  பாடாதது ஏன்?”

‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ என்ற நூலில் ‘அப்படியென்ன பாரதியின் பொல்லாத காலம்’ என்ற தலைப்பில் வே.மதிமாறன் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘‘பெண்கல்வி குறித்து, வீரவேஷம் கட்டிப் பாட்டுப் பாடிய பாரதி மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து, 1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.

வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டுப் பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’

ஆம். முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.’’

இப்படி வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைத்திருக்கிறார்.

-0-

ஜெமினிகணேசனைத் தெரியுமா?

இப்படிக் கேட்டால் சிலருக்குத் தெரியாது.

காதல் மன்னன் நடிகர் ஜெமினிகணேசனைத் தெரியுமா? அப்போதுதான் எல்லோருக்கும் தெரியும். அவரின் இளம்பருவம் குறித்து சின்ன தகவல்.

ஜெமினியின் சின்னதாத்தா நாராணயசாமி ஐயர் வசதி படைத்தவராக இருந்ததால், ஜெமினியை ராஜகுமாரனைப் போல குதிரைமீது அமர வைத்து பள்ளிக்கூடத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அந்த பள்ளியின் நிர்வாகி பாலையா என்பவர் ஜெமினிகணேசனின் வலது கையைப் பிடித்து வெள்ளித்தட்டில் தங்கக் காசால் ‘ஓம்’ என்று எழுத வைத்தார். அவ்வளவு செல்வச் செழிப்புள்ள குடும்பம் நாராயணசாமி ஐயர் குடும்பம்.

நாராயணசாமி ஐயர் ‘ஸ்மார்த்தா’ வகுப்பைச் சேர்ந்தவர், Mulukanadu subcaste. புதுக்கோட்டை மன்னரிடம் வேலை பார்த்தவர். தனிச் செல்வாக்குடன் வலம் வந்தவர். இவரது குடும்பம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்பிற்குரிய குடும்பமாக திகழ்ந்தது.
                    
நாராயணசாமி ஐயராக இருந்தாலும் இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மாளை மணந்தார். ஆம். அக்காலத்தில்- கடுமையான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் செய்தவர் ஒரு பிராமணர். பெண்களை கல்விக்கு அனுப்பக்கூடாது என்ற சம்பிரதாயத்தை அப்போது உடைத்தவரும் இவரே. அதுவும் ஒரு பிராமணர்.

எந்தப் பெண்ணை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்?

‘‘மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த – பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்’’ என்று வே.மதிமாறனால் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணைத் தான் – டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைத்தான்.

ஆம். முத்துலட்சுமி அம்மையார் நாராயணசாமி ஐயரின் மகள். முத்துலட்சுமி அம்மையார் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.  அவர் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பின்பு எப்படி முத்துலட்சுமி அம்மையார் ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்’ என்று யாரும் மதிமாறனிடம் கேட்டு விடாதீர்கள்! அப்படி நீங்கள் கேட்டால் ‘அதிகப் பிரசங்கி’ என்று பட்டம் கொடுத்துவிடுவார்.

முத்துலட்சுமி அம்மையார் பிரம்மஞான (தியோசோபிகல் சொசைட்டி) சபையில் மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகளைத் தவிர்த்து 1914-இல் டாக்டர் சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டார். அதனாலேயே அவர் முத்துலட்சுமி ரெட்டி என்று அழைக்கப்பட்டார். ரெட்டி வகுப்பும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தது அல்ல.

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபிறகு பெண்களுக்கு என்று தங்க தனியாக விடுதி அப்போது இல்லை. அந்தச் ‘சிரமத்தைப்’ போக்கியவர் பிராமணரான பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயரும் அவரின் மனைவியும்தான். அவர்கள் குடியிருந்த வீட்டின் அருகிலேயே தங்க வைத்து கவனித்துக்கொண்டனர்.
 
இனி விஷயத்துக்கு வருவோம்.

பாரதி 1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லையே ஏன்?

பாரதி 1908-ஆம் ஆண்டே புதுச்சேரிக்குப் போய்விட்டார். 1912-இல் அவர் புதுச்சேரியில் வாழ்ந்துகொண்டிருந்தார். 1908 முதல் 1912 ஆண்டு முடிய பாரதியின் சூழ்நிலையைப் பார்ப்போம்.
சென்னையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகை 1908 செப்டம்பர் 5-ஆம்தேதிவரை வெளிவந்தது. புதுச்சேரியிலிருந்து அக்டோபர் 10-ஆம்தேதி முதல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 1910 மார்ச் மாதம் ‘இந்தியா’ நின்றுபோனது.

1910 ஜனவரி முதலாக பாரதி சொந்தமாக நடத்திய உயர்தர மாதப் பத்திரிகை ‘கர்மயோகி’ அதுவும் சில இதழ்களோடு 1910-லேயே நின்றுபோனது.

‘விஜயா’ பத்திரிகை 1909, கிருஷ்ணஜெயந்தி முதல் வெளிவந்தது. 1910 ஏப்ரலுக்குப் பிறகு விஜயாவும் நின்றுபோனது.

சூரியோதயம், பாலபாரதி கூட 1910-க்குள்ளேயே நின்றுவிட்டது.

1910ம் வருஷம் முடிவதற்குள் தமக்கென ஒரு பத்திரிகை இல்லாத சங்கடமான நிலைமையை அடைந்துவிட்டார் பாரதி.

ஆம். புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்றுபோயின. அதன்பின்பு, புதுவையில் இருந்த காலம்வரை அவர்வேறு பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து சமகால அரசியல் போக்குகளை எழுத முடியாத நிலை 1913 வரை பாரதிக்கு ஏற்பட்டது.
 
1910-ஆம் வருஷத்துக்குப் பிறகு பாரதி பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக்கூடிய விஷயங்களை எழுதுவதில் முனைந்தார்.

1910 நவம்பரில் ‘மாதா மணிவாசகம்’ என்ற பெயரில் தமது மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். புதிய ஆத்திச்சூடி சிறுபிரசுரமாக 1914-இல் வெளியாயிற்று. அதே ஆண்டு பாரதியின் ஆங்கிலத் துண்டு பிரசுரம் ‘பொன்வால் நரி’ சென்னையில் வந்தது.

1912-ஆம் வருடம் அவருக்கு முக்கியமான காலம். அந்த ஒரே ஆண்டில் புகழ்பெற்ற சில நூல்களை எழுதி முடித்தார். பகவத்கீதை மொழிபெயர்ப்பு, கண்ணன்பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் முதலிய நான்கு பெரிய நூல்களும் 1912ல்  உருப்பெற்றன. 1912-இல் எழுதப்பெற்ற கண்ணன்பாட்டு 1917-இல்தான் வெளியாயிற்று. பாஞ்சாலி சபதம் முதல்பாகம் 1912-இல் வெளியாயிற்று. இரண்டாம் பாகம் பாரதி காலமான பிறகு 1924-இல் வெளியாயிற்று. குயில்பாட்டு 1923-இல் வெளியாயிற்று.

இதுதான் 1910 முதல் 1912வரை அவர் எழுதிய எழுத்து என்று கூறிவிடலாம்.

அதன்பிறகுதான் சுப்பிரமணிய சிவா 1913 ஏப்ரல் முதலாக ‘ஞானபானு’ என்ற மாதப் பத்திரிகை ஆரம்பித்தார். இது மூன்று வருடங்கள் நடந்தது.  மறுபடியும் 1913-இல்தான் ஞானபானுவில் பாரதி  எழுதியுள்ளார்.

இம்மாதிரி ஒருசில எழுத்துகளே புத்தக வடிவில் வந்ததால் பாரதியை மறுபடியும் சுதேசமித்திரனில் எழுதும்படி புதுவை நண்பர்கள் சொன்னார்கள். 1904-இல் ஆரம்பமான சுதேசமித்திரன் தொடர்பு 1906-இல் நின்று போயிருந்தது. மீண்டும் 1915 ஜூன் மாதம்தான் மீண்டும் பாரதி மித்திரனில் எழுத ஆரம்பித்தார்.

ஒரு சம்பவம் நடந்த உடனே எழுதினால்தான் உண்டு. அதன்பிறகு அது பழைய சம்பவங்களில் ஒன்றாகிவிடும். 1912-இல் தனக்கான பத்திரிகை ஒன்றையும் கொண்டிராத பாரதி, முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எழுதாதது பாரதியின் குற்றமல்ல. அது ஒரு தற்செயலான நிகழ்வு. தவிரவும் அந்தச் செய்தி பாரதிக்குத் தெரிந்திருந்ததா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் பௌத்த அறிஞருமான க.அயோத்திதாசர் தமிழன் இதழை 1914 வரை நடத்திக் கொண்டு இருந்தார். அதுவும் 1912-இல் சென்னையில்தான்  நடத்திக்கொண்டு இருந்தார். மதிமாறன் கூறுவதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றியோ அவரின் சாதனைப் பற்றியோ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த க.அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில் ஏன் எழுதவில்லை? இதை ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்று சொல்லலாமா? அது காரணமாக இருக்க முடியாது. அந்தச் செய்தி அயோத்திதாசருக்குத் தெரிந்திருந்ததா என்பதைத்தான் ஆராய வேண்டும்.
 
மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.

1912-இல் ‘மெட்ராஸ் யுனைட்டெட் லீக்’ என்ற அமைப்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் இதுவே ‘திராவிடச் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்தவர் நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சி.நடேசனார். இவரே திராவிட இயக்கத்தின் நிறுவனர்.

‘‘ஆண்டுதோறும் பல்கலைக்கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்துவதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது’’ என்று முரசொலி மாறன் ‘திராவிட இயக்க வரலாறு-தொகுதி 1’ என்ற நூலில் கூறியுள்ளார்.

அப்படியானால் மதிமாறன் கூறுவதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றியோ அவரின் சாதனைப் பற்றியோ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட- அதுவும் ஊக்குவித்தலை கடமையாகக்கொண்ட- ‘மெட்ராஸ் யுனைட்டெட் லீக்’  ஏன் பாராட்டி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை? ஏன் முத்துலட்சுமி அம்மையாரை அழைத்து பாராட்டுவிழா நடத்தவில்லை? இதுவும் ஒருவகை ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’

பெண்ணியச் சிந்தனையாளரான(?) ஈவெரா அந்தக் காலகட்டத்தில் பலசரக்குக் கடை நடத்திக்கொண்டிருந்ததாலும் இந்த விஷயத்தில் அவர் அப்போது ஞானசூன்யம் என்பதாலும் அப்போது ஏன் ‘ஈவேரா முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை?’ என்று கோமாளித்தனமாக நாம் கேட்போமானால் நாம் மதிமாறனுக்கு அண்ணன் ஆகிவிடுவோம். அதனால் அதுபோன்ற மூளைவீங்கிக் கேள்விகளைக் கேட்காமல் நீதிக்கட்சியைப் போற்றிப் பாராட்டுகின்ற மதிமாறனுக்கு இன்னுமொரு செய்தியையும் சொல்லலாம்.

முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி மசோதாவைக் கொண்டு வந்தபோது பிராமணரான சத்தியமூர்த்தி மட்டும் எதிர்க்கவில்லை. மதிமாறன் போற்றிப் பாராட்டுகின்ற நீதிக்கட்சியினரும் முதலில் ஆதரிக்க மறுத்தனர்; அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர் என்பதும் பிறகு மக்களுடைய ஆதரவு அம்மையாருக்கு இருப்பதானாலேயே மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதையும் வரலாறு கூறுகிறது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)

அதுமட்டுமல்ல, நீதிக்கட்சிப் பிரமுகரான ஏ.பி.பாத்ரோ இளம்வயது விவாக விலக்கு மசோதாவை எதிர்த்தார் என்பதையும் வரலாறு கூறுகிறது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)

விவாகரத்தைச் சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிக்கட்சி கண்டித்தது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)

மதிமாறன், தான் போற்றுகின்ற நீதிக்கட்சி பெண்ணிய சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டுமா என்ன?

இதற்கெல்லாம் மதிமாறன் என்ன பதில் சொல்லப் போகிறார்?

(தொடரும்…)

41 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 1”

  1. அருமையான தொடர்.
    வாழ்த்துக்கள் மு வெங்கடேசன் அவர்களே!

  2. அய்யா, மதிமாறன் எல்லாம் மதித்து நீங்கள் ஒரு மறுப்பு எழுதுகிறீர்கள். அவர் அவர் ப்ளாகில் அல்லது சிறு பத்திரிக்கைகளில் அநேகமாக வாரம் 7 அவதூறு எழுதுகிறார்.. நீங்களும் வாரம் 7 பதில் எழுத வேண்டும். அவர் எழுதும் பத்திரிக்கைகளையும், அதன் ஆசிரியர் பேரையும் பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும். நாங்க அதை நம்புவதில்லை.எங்களுக்கு இந்த பதிலும் தேவை இல்லை. அவரைப் படிப்பவர்கள் உங்களை எந்தக் காலத்திலும் படிக்கப் போவதும் இல்லை. எனவே உங்கள் யெநெர்ஜிஐ பாசிடிவ் விஷயங்களில் செலவு செய்து, எங்களுக்கும் நம் வரலாறு, சமுதாயம், சமயம் பற்றி எழுதுங்கள். நாங்களும் புதிதாகத் தெரிந்து கொள்வோம்.

  3. அய்யா வெங்கடேசன் அவர்களே,

    தங்களுக்கு எங்கள் அன்பும் , நன்றியும் உரித்தாகுக. அற்புதமான சாட்டை அடி. அவருக்கு உறைக்குமா? இனியாவது திருந்துவாரா?

  4. அவதூறை அப்படியே விட்டுவிட்டால் அது ”உண்மை” ஆகிவிடும். ஆகவே மதிமாறன் ஒரு பொய் புளுகும் அவதூறு பேர்வழி என்றாலும், பதிலளிக்க முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.

    வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி

  5. போடு சபாஷ்
    எங்ககள்க்கும் விவரம் தெரிவித்தத்ரதர்க்கு நன்றி

  6. அருமையான தொடர்.
    வாழ்த்துக்கள் மு வெங்கடேசன் அவர்களே!

    ம.வெங்கடேசன் என்று இருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

  7. கடந்தகாலத்தில் நடந்ததை நடந்தவாறே கூறுவது எழுதுவது மட்டுமே உண்மையான வரலாறாகும். அவைகள் மட்டும்தான் காலத்தை வென்று நிற்கும். உண்மை வரலாற்றினை எழுதிவரும் ம.வெங்கடேசன் அவர்களின் பணி தொடரட்டும். அதற்கு ஸ்ரீ.பார்த்தசாரதிப் பெருமாள் அருள்புரியட்டும்.

    வித்யா நிதி

  8. அபாரம். தகவல்களை குவிக்கிறீர்கள். இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக எழுதுங்கள். நன்றி

  9. சுய மரியாதை இயக்கத்தில் இருந்து பின் பொதுவுடைமை வாதியாகவும் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பரந்தவருமான தோழர் ஜீவாதான் மகாகவி பாரதியை வானளாவப் புகழ்ந்து பெருமைப் படுத்தியவர். உலகத்துக்கு பாரதியை அடையாளம் காட்டியவர். பாவம் அவருக்குத் தெரியவில்லையே இந்த மதிமாறனுக்குத் தெரிந்த அளவுக்கு பாரதியின் கொள்கைகள். பாரதி பிராமண குலத்தில் பிறந்தான் என்பதற்காகவே அவனைத் துரத்தித் துரத்தி இழிவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள் சில மூடர்கள். அதில் இந்த மதிமாறன் என்பவரும் ஒருவராக இருக்கலாம். யாரைப் பற்றி யாரெல்லாம் பேசுவது, எழுதுவது என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. இந்த மனிதர் வழிபடும் தலைவர்களைப் பற்றி இப்படி இழிவு செய்து எழுதினால் இந்த மனிதனால் தாங்கிக்கொள்ள முடியுமா? மூடர்களுக்கும், வேண்டுமென்றே பொய்யை உரத்தக் குரலில் மெய் போல சாதிக்கத் துடிக்கும் இவர் போன்ற மனிதர்களை துச்சமென எண்ணி ஒதுக்கி விடுங்கள். பதில் சொல்லத் தேவை இல்லை. பாரதியை தமிழர்கள் நன்கு அறிவர். உலகமும் நன்கு அறியும். சூரியனின் ஒளிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவை இல்லை. பேதைகளை தெளிவிக்க முடியாது. அவர்கள் அப்படியே இருக்கட்டும்.

  10. இந்த மதிமாறனை தமிழ் நாட்டின் ’திக் விஜய சிங்’ என்று சொல்லலாமா? அந்த ஆள் தான் RSS இயக்கத்தை பற்றியும் ஹிந்துக்களை பற்றியும் நேரம் கிடைத்தபொழுதெல்லாம் அவதூறு அள்ளி வீசிக்கொண்டிருப்பார். இந்த ஆளோ அனாவசியமாக பாரதியார் போன்ற ஒரு மாமனிதரை பற்றியும் பிராமணர்களை பற்றியும் தப்பு தப்பாக எழுதிக்கொண்டிருக்கிறார். நிங்கள் கொடுக்கும் பதிலடி அவசியம் தான். எல்லா வற்றையும் விபரமாக புட்டு வைத்ததற்க்கு நன்றி, மேலும் எழுதுங்கள்.

  11. தகவல்களை அருமையாகத் திரட்டியிருக்கிறீர்கள். பொய்களின் மூலம் இந்தியர்களுக்குள் துவேஷத்தை விதைத்து வளர்த்தாயிற்று. ஒற்றுமையை உருவாக்க முனைபவர்களுக்குச் சற்றுச் சிரமம் ஏற்படும்தான். முயற்சிகளைக் கைவிடாமல் தொடர வாழ்த்துக்கள்.

    அப்படியே பாரதி Dr முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எழுதியிருக்காமல் போயிருந்தாலுமே அதற்கு இப்படியெல்லாம் இட்டுக் கட்டி அவரையே கருவியாக்கி இன வாதத்தை ஞாயப் படுத்தத் தேவையில்லை.

    மதிமாறன் போன்ற கட்டுரையாளர்கள் இந்தியர்களிடம் ஒற்றுமை தப்பித் தவறிக்கூட இருந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையாக இருப்பவர்கள் என்பது புரிகிறது. ஜாதிய வாதம் நீர்த்துப் போகாமல் நெய்யூற்றி வளர்க்க முனையும் அவரது முயற்சிகளைத் தூள் தூளாக்கியிருக்கிறது உங்கள் உழைப்பு. பாராட்டுக்கள்.

  12. ///அதனால் அதுபோன்ற மூளைவீங்கிக் கேள்விகளைக் கேட்காமல் நீதிக்கட்சியைப் போற்றிப் பாராட்டுகின்ற மதிமாறனுக்கு///

    வாய்விட்டுச் சிரிக்க முடிந்தது. மதிமாறன் போன்ற காமெடியன்களுக்கு பதில் சொல்வது வீண் வேலை என்றாலும், பாரதியார் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வாய்பிருப்பதால் தொடர்ந்து எழுதுங்கள். ம. வெங்கடேசனின் பெரியாரின் மறுபக்கம் படிப்பதற்காகவே தமிழ்ஹிந்துவின் வாசகன் ஆனேன். இன்னும் பலரின் மறுபக்கத்தையும் நல்லவர்களின் உயர்ந்த விஷயங்கள் பற்றியும் வெங்கடேசன் தொடர்ந்து எழுத வேண்டும்.

    மதிமாறனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என்றாலும் எதிர் வினை இல்லாவிட்டால் உண்மை என்னவென்று தெரியவராமல் பலர் ஏமாந்திருக்க நேரிடும் என்பதால் இந்த உழைப்பு பாராட்டுக்குரியது.

    ///இதற்கெல்லாம் மதிமாறன் என்ன பதில் சொல்லப் போகிறார்?// பார்ப்பனீய வசைபாடுவதை விட வேறென்ன செய்வார். இவ்வளவுக்கும் பாரதியார் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு பூனூல் போட்டு எல்லோரும் ஒரு ஜாதி என்று முழங்கியவர். அவர் கதை தெரிந்தும் பாரதியார் மீது சேறு பூசுபவன் மானமுள்ள தமிழனாக இருக்க முடியாது!

  13. மதிமாறனுக்கும் மன்குனிகளுக்கும் பதில் சொல்லும் வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்.`ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ` என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.தமிழில் முதல் இஸ்லாமியச் சிறுகதை எழுதியவர் பாரதியார்.1920 ஆம் ஆண்டில் ரயில்வே ஸ்தானம் என்ற இஸ்லாமியர் பற்றிய சிறுகதையை ஸ்வதேசமிதிரன் நாளிதழில் எழுதினார். நடு வீதியில் நின்று கொண்டு பாரதியாரோடு சாயபு கடையில் தேநீர் குடித்ததாக பாரதிதாசன் எழுதியிருக்கிறார்.வேற்றுமை உணர்வு என்பது பாரதியைப் படித்தவனுக்கே வராது.

  14. ஸ்ரீ வெங்கடேசன் அவர்களின் இத்தொடர் ஆணித்தனமான வரலாற்று
    ஆதாரங்களுடன் ஆரம்பமாகிறது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    ஞானபானு மகாகவி பாரதி பாரத நாட்டின் ஒற்றுமையிலும் நமது சனாதன ஹிந்து பாரம்பரியம் பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த பற்று உறுதியுடன் சமூக சீர்திருத்தினை முன்னெடுத்து சென்ற மாமனிதர். பெண் விடுதலை தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் கவி கொடுத்தவர். இன்றும் நமக்கெல்லாம் ஊக்கத்தின் வற்றாத ஊற்றாக விளங்குபவர். இது எப்படி கால்டுவெல்லின் கள்ளப்பிள்ளைகளுக்கு பொறுக்கும்.
    சூரியனைப்பார்த்து நாய் குரைத்தது போல அவரது புகழைக்கண்டு பொறாமை கொண்ட திராவிட இயக்கத்தினர் ஆரம்ப காலமுதலே அவரை குற்றம் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அக் காலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் சபாபதிமோகன் போன்ற திமுக பேச்சாளர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
    மகாகவி ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அவரது சீர்திருத்த இயக்கத்தினைப்போற்றினார். இது பற்றியும் ஸ்ரீ வெங்கடேசன் எழுதவேண்டுகிறேன்.
    திருநீறணிந்தார் அடியார்க்கும் அடியேன்

  15. தெளிவான வாதத்தை நிறுவியிருக்கிறீர்கள். மதிமாறன் எழுதியதை சில மாதங்கள் முன் படித்ததாக நினைவு. அப்போதே பாரதி மீதான விமர்சனம் குறித்து மனதுக்குள் கேள்வி எழுந்தது. காலத்தின் அடிப்படையில் கருத்தை மதிப்பிட வேண்டும் என்று. ஆனால் தமிழகத்துக்கு வெளியே இருக்கும் எனக்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை. குறைந்தபட்சம் இப்போது தெளிவு கிடைத்தது நன்றி.

  16. ம வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம்,

    தங்களுடைய முயற்சி பாரட்டுதலுக்கு உரியது, உங்கள் ஆராய்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். முகப்புத்தகம் மூலம் இன்னும் எவ்வளவோ மாக்கள் நம்மை தாக்கி எழுதி கொண்டுதான் உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் யார் பதில் சொல்லுவார்களோ, அந்தமட்டில் தங்களின் முயற்சி வரவேற்பிற்கு உரியதே.

    ஈ வே ராவின் மறுபக்கம் புத்தகத்திலிருந்தே நான் தங்கள் ரசிகன், இந்த முயற்சியும் புத்தகமாக வருவதற்கு வாழ்த்துக்கள்

  17. மதிமாறன் என்ற பேர்வழியை இப்போதுதான் கேள்வியுறுகிறோம். நாம் அவருக்கு அல்லது அவரைபோன்ற போலி திராவிட உணர்வாளருக்கு பதிலுரைப்பது தேவையற்றது என்றாலும் பொய்வளர்த்த கழகத்தவர் வாந்தி எடுக்கும் கட்டுரை எல்லாம் சரித்திரச் சான்றுகள் ஆகும் ஆபத்தை உணர்ந்து தக்க சான்றுகளுடன் எதிர்கொள்வது சரியானது என்பது காலத்தின் கட்டாயம்.

  18. பாரதியாரைப்பற்றி அவதூறு செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம்,என்றிருக்கும் வே.மதிமாறனை,அவரின் பிழைப்பில் மண் அள்ளிப்போடலாமா?ம.வெங்கடேசன்.பிச்சையை தடுப்பது பெரும் பாவம் ம.வெ.

  19. ம வெங்கடேசன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த கட்டுரையை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதில் கிறித்துவம் பெற்றெடுத்த போலி திராவிட இன வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களால் சொல்லப்படும் பொய்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்பொழுது அவசியமாகிறது.

    இவர்கள் சொல்லும் பொய் கதைகளுக்கு நாம் விளக்கம் எழுத வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தாலும், இது போன்ற கட்டுரைகளில் பல அறிய வரலாற்று தகவல்களும் கிடைக்கின்றன. ஆதலால் இது தேவையான கட்டுரையே. வெங்கடேசன் அவர்கள் இது போன்ற மேலும் பல கட்டுரைகளை எழுத வேண்டும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  20. MADHIMARAN DOES NOT DESERVE FOR ANY REPLY.
    FROM HIS WRITINGS, WE CAN COME TO THE CONCLUSION, HE IS NOT AN ARDEN READER AND HE DOES NOT KNOW HISTORY.
    I DO NOT KNOW WHY HE DID NOT BLAME BRAHMINS FOR 9/11 TERRORISTS ACTVITIES IN AMERICA. HIS STANDARD IS THAT MUCH ONLY.
    BUT BY YOUR ARTICLE I HOPE WE CAN KNOW MORE ABOUT BHARATHIAR.

  21. மகாகவி பாரதியார் குறித்து நான் நடத்திய இலவச அஞ்சல் வழிப் பாடத்திட்டத்தில் வெளிவந்த பாடங்களைக் கீழ்கண்ட வலைப்பூவில் படியுங்கள். மகாகவி பற்றிய பல விவரங்களை அதில் தெரிந்து கொள்ளலாம். பேதைகள் சிலர் பாரதியைப் பற்றித் தரக்குறைவாக எழுதும்போது அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க அவை உதவும். நன்றி.

    https://www.ilakkiyapayilagam.blogspot.com

  22. இத்தனை தீர்க்கமான கட்டுரையா. முத்துலட்சுமி அம்மை தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்றே நினைத்திருந்தேன். வெ.மதிமாறன் அவர்கள் பல நல்ல கருத்துகளை எடுத்து வைப்பவர். அவருடைய பார்பனீய கோபம் இதை கவணிக்க தவறிவிட்டாத கருதுகிறேன்.

    மேலும் வெ.மதிமாறன் அளவுக்கு இல்லையென்றாலும் எனக்கும் பாப்பனர்கள் மேல் கோபம் உண்டு. இன வரன்முறை செய்து கோவிலுக்குள் விடாமல் அவர்கள் செய்வது இன்னும் தொடர்கிறது. கோவிலின் அமைப்புகள் அனைவரையும் கடவுளை பார்க்க அனுமதியளிக்கும் வகையில் இருக்கவேண்டும். அதை தடுத்து கடவுளைப் பார்க்க 1000 ரூபாய் கொடுத்தவனுக்கு ஒரு வரிசை, 500 ரூபாய்க்கு ஒரு வரிசை. அதிகம் கொடுத்தவர்கள் அருகே. காசில்லாதவர்கள் தொலைவில்என்பது போல செய்வது கண்டிக்கத்தக்கது. பெரும் கோவில்களுக்கு செல்லும் போதெல்லாம் நான் இலவச தரிசனத்திலேயே செல்லுவேன். ஆனால் பத்தடிக்கும் முன்பே கடவுளை எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டியதிருக்கும். இதற்கெல்லாம் காரணம் பார்பனீயம் எனும் போது அதை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. மாறாக கோபம் தான் வருகிறது.

    வெ.மதிமாறன் இனி இது போன்ற பிழைகளை கலைந்து உண்மை எழுதுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

  23. மதிமாறன் எல்லாம் ஒரு ஆளா? ”சரக்கு” இல்லாததால் பத்திரிகைகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர். பிழைப்பிற்கு என்ன செய்வது சென்று யோசித்து கழகத்தவர் போல பார்ப்பன எதிர்ப்பு, பாரதி எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறார். தனது வலைப்பூவில் கேள்வி-பதில் என்று ஏதேதோ அவர் பிதற்றி வருவதைப் பார்த்தாலே அவரது அறிவின் ’மேதைமை’ விளங்கும். இஸ்லாத்தையோ, கிறித்துவத்தையோ எதிர்த்து அவர் ஒரு வார்த்தை பேச மாட்டார். காரணம் அவர்கள் அவரை ஆதரித்து வருகின்றனர். அவர் கேள்வி-பதில் எழுதும் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு இஸ்லாமியர். மதிமாறனின் மற்றொரு புரவலர் ஒரு கிறித்துவர். இவர் எல்லாம் ஒரு ஆள் என்று மதித்து ம.வெ. பதில் சொல்ல வேண்டியதில்லைதான்.

    ஆனால், ’பாரதி’யை எதிர்த்து அந்த நபர் தீவிரமாக விஷமப் பிரசாரம் செய்து வரும்போது, வேறு வழியில்லை பதிலளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் எதிர் விடை அளிக்கும் அளவுக்கு ம.மாவுக்கு சரக்கு போறாது. ஜமா சேர்ந்து ஏதாவது கிறுக்கினால் கூட முடியாது. மையத்தை விட்டு விட்டு பார்ப்பனீயம், ராஜாஜி, காந்தி, சத்தியமூர்த்தி என்று எதையாவது பிதற்றிக் கொண்டிருப்பார். பாவம்.

    தொடர் அருமை ம.வெங்கடேசன். உற்சாகமாய்த் தொடருங்கள்.

  24. அன்புள்ள ஜெகதீஸ்வரன்,

    “இதற்கெல்லாம் காரணம் பார்பனீயம் எனும் போது அதை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. மாறாக கோபம் தான் வருகிறது.”

    கோயில்களில் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் என்று தரிசனக்கட்டணம் இந்து சமய அறநிலைய கோயில்களில் தான் வாங்கப்படுகிறது. இதற்கு பார்ப்பனர்கள் பொறுப்பு இல்லை. மேலும் திருப்பதி போன்ற (பிறமாநில) கோயில்களிலும் கட்டண தரிசனமுறை ஆந்திர அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பார்ப்பனர்களால் நடத்தப்படுவது அல்ல.

    ஆனால் ஒன்று செய்யலாம்.

    கோயிலில் பணியாற்றும் பார்ப்பனர்களை தவிர, சாமி கும்பிட வரும் பார்ப்பனர்களுக்கு , தனிச்சலுகை அளிக்கும் திருப்பதிகோயில் “சாத்துமுறை ” தரிசனம் போன்றவற்றை ஒழிக்கவேண்டும்.

    தாங்களும் , பார்ப்பனர்கள் மீது தேவை இல்லாமல் துவேஷம் கொள்ளவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்களுக்கு ஒரு கேள்வி ?

    கோயில்களில் மட்டும் தான் பணம் படைத்தோருக்கு கூடுதல் மரியாதையா? அரசியல் கட்சிகள், மருத்துவ மனைகள், அரசு அலுவலகங்கள் , ஓட்டல்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு என்று எங்குபோனாலும் பணத்துக்கு தான் கூடுதல் மரியாதை. இதற்கு பார்ப்பனனா காரணம் ? பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்று சொன்ன முதியோர் வாக்குக்கு ஒப்ப, ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதுக்கு பிறகு தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழிநிலையே காரணம்.

    ஒரு அரசியல் பிதாமகர், தன் அக்காள் பேரனிடமே , அமைச்சர் பதவிக்கு , மனைவி மூலம் பல நூறு கோடிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அதன் பின்னரே அவர் அமைச்சராக முடிந்தது என்று உலகப்புகழ் பெற்ற ….. யா ஒலிநாடா மூலம் இன்டர்நெட்டில் சிரிப்பாய் சிரிக்கிறதே ?

    எனவே, பார்ப்பனர்களை மட்டும் தேவை இல்லாமல் குற்றம் சொல்வது வருந்தற்குரியது. எந்த கோயிலிலாவது பார்ப்பனர்களால் மட்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தாங்கள் கருதினால், தயவு செய்து அது எந்த கோயில் என்று விவரமாக சொல்லுங்கள். தவறு செய்தோரை கண்டித்து, திருந்த செய்வோம். முடியவில்லை என்றால், அந்த கோயிலை புறக்கணித்து , அதே ஊரில் வேறுகோயில் கட்டி , நாராயண குரு செய்தது போல நாமும் வழிபடலாம். தயாரா?

  25. முத்துலட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி அவர்கள் அவர்களை நோக்கி அப்படி என்றால் உங்கள் இல்ல பெண்களை தேவதாசி ஆகுங்கள் என்று கூரினாரமே.அவரும் ஐயர் என்றால் அது எப்படி புரியவில்லையே
    வைத்து கொள்வதற்கும் ,திருமணம் செய்து கொள்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.முதல் மனைவி இறந்த பிறகு குழந்தைகளை பார்த்து கொள்ள அழைத்து செல்லப்பட்டவரை மணந்து கொண்டார் என்று மாற்றுவது சரியா
    திரு எம் எஸ் அவர்களோ/முத்து லட்சுமி அவர்களோ அவர்களுக்கு தாயின் சாதி தான் வரும் என்று தானே இருந்தது.எம் எஸ் எனபது மதுரை சண்முகவடிவு தானே.அவருக்கு ஒரு சஹோகதரர் இருந்தாரே சக்திவேல் என்று ,அவர் பிராமணரா,இசை வெள்ளாலரா
    திரு வாலி விகடனில் எழுத்தும் போது ஒருமுறை எம் எஸ் அவர்கள் மடிசார் கட்டி கொண்டு சங்கராச்சாரியாரை பார்க்க போன போது கோவித்து கொண்டார் என்று எழுதியிருப்பது /எதை காட்டுகிறது.
    பாரதிதாசன் சின்ன மோளம் பெரிய மோளம் என்று அண்ணா துரையை/கருணாநிதியை திட்டியதை நீங்கள் கூட தானே எழுதியிருந்தீர்கள்.யார் பெரிய மோளம்,சின்ன மோளம் யாருடைய வாரிசுகள் அப்படி அழைக்கபடுவார்கள் என்று தெரியாமலா எழுதினீர்கள்
    கருணாநிதி நானும் ஜெமினியும் உறவினர்கள் என்று(முத்துலட்சுமியின் தாய் அவர் அத்தை.பல தலைமுறைகளாக அவர் குடும்பத்தில் /சாதியில் பிறந்த அழகு/அறிவு ஆற்றல் மிகுந்த பெண்களை தேவதாசிகள் ஆக்குவது,வைப்பாட்டியாக வைத்து கொள்வது தானே நடந்து வந்தது)கூறியதை கிண்டலடித்தவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டார் என்று முழு பூசணிக்காயை மறைப்பது என்

  26. எனது பழைய பதிவு ஒன்று :

    ‘பார்பன சேவை’ என்றால் என்ன ? (ப‌ழம்பெரும் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் ‘பார்பன சேவை’ புரிந்ததாக எழுதும் ந‌ணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் )
    https://athiyamaan.blogspot.in/2008/10/blog-post_11.html

  27. கோயிலில் பணியாற்றும் பார்ப்பனர்களை தவிர, சாமி கும்பிட வரும் பார்ப்பனர்களுக்கு , தனிச்சலுகை அளிக்கும் திருப்பதிகோயில் “சாத்துமுறை ” தரிசனம் போன்றவற்றை ஒழிக்கவேண்டும்.”

    இந்த சாத்துமுறை தரிசனம் எல்லாப் பார்பனர்களுக்கும் இல்லை. திருப்பதி கோயில் ஜீயர்கள் வகுத்தளித்த நடைமுறைகளைப் பின்பற்றுபவருக்கு மட்டுமே.

  28. பாரதி ஒரு அக்கினிக்குஞ்சு. அவனை தவறுதலாக புரிந்து கொண்டோர் யாருமில்லை. ஆனால் அவனைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்த போலி கழகங்கள் மக்களால் விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  29. //கோவிலின் அமைப்புகள் அனைவரையும் கடவுளை பார்க்க அனுமதியளிக்கும் வகையில் இருக்கவேண்டும். அதை தடுத்து கடவுளைப் பார்க்க 1000 ரூபாய் கொடுத்தவனுக்கு ஒரு வரிசை, 500 ரூபாய்க்கு ஒரு வரிசை. அதிகம் கொடுத்தவர்கள் அருகே. காசில்லாதவர்கள் தொலைவில்என்பது போல செய்வது கண்டிக்கத்தக்கது. //

    ஜகதீஸ்வரன், அதைச் செய்வது பார்ப்பனர்களா அல்லது “இந்து சமய அறநிலையத் துறையினரா?” அந்தப் பணத்தை பார்ப்பனர்களா வாங்கிக் கொள்கின்றனர்? அது சீட்டுக்கள் மூலம் விற்கப்பட்டு அரசு கஜானாவுக்குத் தானே செல்கிறது. பார்ப்பனர்கள் இன்னும் 400, 500 ரூபாய்தானே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்? எங்கோ ஓரிரண்டு இடங்களில் நடக்கும் சம்பவத்தை வைத்துக் கொண்டு முழுமையாக பார்ப்பனர்களைக் குற்றம் சாட்டாதீர்கள்.

    அது திருப்பதியோ திருவண்ணாமலையோ திருப்பரங்குன்றமோ பழனியோ தரிசனத்துக்கு இவ்வளவு என எழுதி வைத்துக் கட்டணம் வாங்குவது பார்ப்பனர்கள் இல்லை. நீங்கள் தேந்தெடுத்த அரசாங்கம்தான். நீங்கள் கண்டிக்க வேண்டியது அரசைத் தான். பார்ப்பனர்களை அல்ல.

    நன்றி

  30. மிகத் தெளிவாக தங்களது தரப்பை முன்வைத்ததற்கு நன்றி.

  31. நீங்கள் பெரியார் பற்றி எழுதிய புத்தகமும் இப்படித்தான் இருந்தது. தகவல் பிழைகள் குறைவாக இருப்பதால் நீங்கள் பெரியார் மீது விசும் சேற்றுக்குக் குறைவில்லை. மதிமாறனின் ஆதங்கம் வேறு. பெண் விடுதலைக்காக களத்தில் பாடுபட்டவர்கள் பலர் இருக்க பார்ப்பன சிந்தனை வெளி மீண்டும் மீண்டும் பாரதியிடம் தஞ்சம் புகுந்தது. அவர் சொல்லவரும் இந்த செய்தியை விவாதியிங்கள். மதிமாறனும் பாரதி பக்தராக இருந்தவர்தான். அவர் அளித்துள்ள ‘மக்கள் தொலைக்காட்சி’ பேட்டியில் முதலில் இதைத்தான் சொல்கிறார். அக்னிகுஞ்சு என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். ஆனால் பாரதியை விரோதியாக பாவிக்கும் மனநிலையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்காக அவர் சேகரித்த ‘ஆதாரங்கள்’ ஒரு குரூர மனநிலை கொண்டவரைத்தான் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.

  32. ஜெகதீஸ்வரன், தங்களுடைய பின்னூட்டம் ஆச்சரியத்தையும், வருத்ததையும் ஏற்படுத்துகிறது. தமிழகம் மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள 90 சதம் கோயில்கள் கொள்ளையர்களான அரசாங்கத்திடம் தான் உள்ளது. அதுவும் வசதிமிக்க கோயில்கள் ஒரு 10 சதம் கூட இருக்காது. ஆனால் மீதம் உள்ள 90 சதம் கோயில்களில் 50 சதம் பண்டாரங்கள் மற்றும் பூசாரிகள் நீங்களாக 40 சதம் பிராமணர்கள் 500 ரூபாய் அளவில் தான் சம்மளம் பெறுகிறார்கள். இது தாங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியமான விசயம் தான்

  33. பூவண்ணன், உங்கள் பின்னூட்டம் தொடர்புடைய விஷயம் ஏதும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே! இசை வேளாளராக இருந்தாலும் ரெட்டி சமூகமானாலும் அது ஒடுக்கப்பட்ட சமுதாயம் இல்லையே! அந்தக் கட்டுரையாளர் அதற்குத்தானே மறுப்பு எழுதியிருக்கிறார்? உங்கள் பின்னூட்டம் சற்றும் கட்டுரைக்குத் தொடர்பில்லாததாக இருக்கிறதே! ஏதோ மறுப்பு சொல்லவேன்டும் என்பதற்காக பின்னூட்டமிட்டீர்களோ?

  34. எது ஒடுக்கப்பட்ட சமுதாயம்,எது ஒடுக்கபடாத சமுதாயம் எனபது யார் முடிவு செய்தது.
    தேவதாசிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல என்பதை விட பெரிய கொடுமை எது
    பல நூற்றாண்டுகளாக நித்யசுமங்கலிகளாக கோவிலில் அர்ச்சக பணி புரிபவர்கள்/மற்றும் பரம்பரை புரவலர்களுக்கு தாசிகளாக இருக்க நிர்பந்திக்கப்பட்ட பெண்களை/அவர்களை தந்த சமூகங்களை ஒதுக்கப்பட்ட சாதிகள் இல்லை என்பதில் எவ்வளவு பெரிய சூழ்ச்சி அடங்கியுள்ளது.
    கலைஞரை ஆதிக்க சாதி போல் காட்டுவதில் தானே இந்துத்துவத்தின் சூட்சுமம் /அடித்தளம் உள்ளது.

    பல நூற்றாண்டுகளாக தேவதாசிகளோடு உறவு கொண்டு புரட்சிக்கு இலக்கணமாய் விளங்கினர் பிராமணர் என்று கூட கட்டுரையாளர் எழுதலாம்.இப்போது அவர் எழுதியுள்ளதே அதே தானே.
    தேவதாசிக்கு பிறந்த குழந்தைக்கு என்ன என்ன உரிமை உள்ளது/எந்த சாதியில் வரும்/ஆனாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்/பெண்ணாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெளிவாக நடைமுறையில் இருந்த எழுதப்பட்ட விதிகள் இன்றும் உள்ளதே.

  35. அரசாங்கம் உருவாக்கிய புதிய குறிப்புகள் தான் BC SC ST .இதில் இருக்கும் குழுக்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு போவதும் நடக்காத ஒன்று அல்ல
    ஒரே சாதி வேறு வேறு மாவட்டங்களில் வேறு பிரிவுகளின் கீழ் வருவதும் உண்டு.
    நரிக்குறவர்/கேப்மாரி MBC கீழ் வருவதால் ஆதிக்க சாதி ஆகிவிடுவார்களா.
    இசை மூவர் என்று அழைக்கப்பட்ட மூவரில் D K பட்டம்மாள் பற்றி படியுங்கள்.damal krishnasamy pattammaal /madurai shanumugavadivu subbulakshmi /madras lalithaangi vasanthakumaari இவை ஆசிரியரின் பிராமண கலப்பு மன ?புரட்சியை விளக்கும் என்று நினைக்கிறேன்
    Pattammal was born in an orthodox Brahmin family in Kancheepuram of Tamil Nadu, India.[4] She was named as Alamelu, but fondly called “Patta” as a child prodigy.[5][6] Her father, Damal Krishnaswamy Dikshithar, who was deeply interested in music, inspired her to learn Carnatic music.[7] Her mother, Kanthimathi (Rajammal), although a talented singer herself, was not permitted to sing even for friends or relatives in line with strict orthodox tradition.[7] Despite her orthodox background, Pattammal sang and showed considerable music talent at an early age.[4]

    மெட்ராஸ் லலிதாங்கி /மதுரை சண்முகவடிவு /முத்துலட்சுமி ரெட்டி எல்லாம் சம காலத்தவர்.அவர்களின் தந்தை பிறந்த சமூகத்திலா அவர்கள் வந்தனர்.
    இவர்கள் பெரிய கலைஞராக விளங்கிய அதே காலததவரான DK பட்டம்மாள் அவர்களின் தாயார் பாட கூட அனுமதியில்லாத நிலை ஏன்.
    திராவிட இயக்கம் வந்ததால் இவர்களின் தந்தை என்று google செய்தால் ஒரு பெயர் வருகிறது.
    மதுரை ஷண்முக வடிவுவின் தாயார் அக்கம்மாள் என்று தானே எவ்வளவு google செய்தாலும் வருகிறது.

  36. வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்!!!! மதிமாறனுக்கு என் தொடர் சங்கிலி பதிலடியை சில வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன். அவருடைய வலைப்பூவில் “பாலா” என்ற பெயரில் நான் கொடுத்த பதில்களை (மக்கள் தொ.கா பேட்டி பக்கத்தில்) படித்துக் கொள்ளுங்கள். நான் மௌண்ட் ரோடு நூலகத்தில் பாரதி கட்டுரைகளைப் படித்து, அதன் மூலம் கிடைத்த சிற்றறிவைக் கொண்டு என் பதிலை அளித்தேன். ஆனால் வெங்கடேசன் அருமையான ஆராய்ச்சிகளுடன் கட்டுரைகளை எழுத தொடங்கியிருக்கிறார். எல்லாம் வல்ல பராசக்தி உமக்கு அருள்புரிவாராக!!!!

  37. விஜயபாரதம் பதிப்துள்ள உங்கள் பெரியாரின் மறுபக்கம் இப்போது தான் துவங்கினேன். தமிழ் ஹிந்துவின் ஆர்வமிகு வாசகன் என்கிற முறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு உள் நுழைந்தேன் உங்கள் கட்டுரையில் துவங்குகிறேன்.

    மதிமாறன் என்ற பெயர் எனக்கு இப்பொது தான் அறிமுகம். இருப்பினும் அத்தகு முட்டாள் மூளை வீங்கிகளுக்கு அஞ்சா விட்டாலும் உண்மைகளை பதிவு செய்யவும் அதனை பலர் தெரிந்து கொள்ள வகை செய்யவும் நமக்கு கடமை இருக்கிறது. அந்த வகையில் இந்த கட்டுரை இன்றியமையாதது. என் நண்பர்களுக்கு நிச்சயம் அச்சிட்டு அனுப்ப்வேன்.

    உங்கள் நற்பணி தொடர என் பிரார்த்தனைகள்.

  38. தெளிவான தகவல்கள். பதில் தருவது காரணமாக இருந்தாலும் கருத்து கோர்வை அழகாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *