திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இக்கட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும் கட்சிகளில் மூத்ததுக்கு முக்கிய வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழிகளுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக் கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும் விளைந்தது தான். பதவிப் போட்டியும் பொறாமையும் தான் இன்று வரை ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. கொளுந்து விட்டெறியும் இந்த ஆசை தான் வன்னியர்களுக்கு என்றும் மூவேந்தர்களுக்கு என்றும், இன்னும் எத்தனை ஜாதிகள் உண்டோ அவ்வளவுக்கும் அவரவர் பங்கு பெற கட்சிகள் இங்கு முளைத்துள்ளன. அவர்கள் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனங்கள் என்னவாக இருந்தாலும் அவரவர் ஜாதி மீறிய சிந்தனைகள் ஏதும் அவற்றுக்குக் கிடையாது. தம் ஜாதி, பதவி, இவை சார்ந்த பிற சொந்த நலன்கள். இப்படித் தொடங்கியது தான் நூறாண்டு வரலாறு படைத்துள்ளது. அதைத்தான் நூறாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் “பார்ப்பனர் நடு நடுங்க “ என்று நினைவு படுத்துகிறார் இன்றைய தலைவர். அவர் தம் திராவிட இயக்க சிந்தனைகளைப் பெற்றது, பனகல் மகாராஜா பற்றிய பள்ளிப் பாடத்திலிருந்து என்று சொல்கிறார். அவரது பார்ப்பன துவேஷத்துக்கு அவரது நெஞ்சுக்கு நீதியில் காரணம் தேடினால் கிடைக்காது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அன்றைய நாயர்கள், பனகல் ராஜாக்கள், ரெட்டியார்களுக்கும் சரி அவர்களது இன்றைய வாரிசுகளுக்கும் சரி திராவிட என்றால் என்னவென்று தெரியாது. நமது தந்தை பெரியார் கன்னடக்காரர் தான் என்றாலும் காவிரி நீர் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது. நமது கலைஞர், வை கோ, விஜய காந்த், நேரு எல்லாம் தெலுங்கர்கள் தான் என்றாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது நிற்காது. டி.எம். நாயரை நாங்கள் நினைவு கொண்டுள்ளோம் நீங்கள் மறந்தாலும், எங்கள் இயக்க பிதாமகர் அவர், என்று என்ன கூச்சலிட்டாலும் முல்லைப் பெரியார் தகராறு தொடரும். காரணம் திராவிட பிரக்ஞை அவர்களுக்கு இருந்ததில்லை, நமக்கும் இல்லை. நமது சிந்தனைகள் ஒரு பக்கம் பிராமண துவேஷம் மறுபக்கம் சுயஜாதி வெறி. மற்றது பதவி வேட்டை. சுயநலம். இதற்கெல்லாம் மேலாக, சமீபத்தில் சேர்ந்து கொண்டது அவரவர் குடும்ப நலம். குடும்ப நலமே கட்சி நலமும். கட்சி ஒரு குடும்பம்.. அதுவே திராவிட நலனாகக் கோஷமிடப்படும்.

மற்றதெல்லாம், நாத்திகம், பகுத்தறிவு, வடவர் ஆதிக்கம், தமிழ்ப்பற்று, ஈழத்தமிழர் போராட்டம், இத்யாதி எல்லாம் இப்பயணத்தில் அவ்வப்போது அவசியத்துக்கு சேர்த்துக் கொண்டவை. பெரியாரின் நாத்திகம் இந்த வகையினது தான்.

எதுவும் முக்கியமில்லை. பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பிராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை. 1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர் ஒரு மடாதிபதி சுவாமிகளை ஆசீர்வதிக்கும் படி வேண்டி பின் வருமாறு தலையங்கள் எழுதுகிறார், வெகு சீக்கிரம் பகுத்தறிவுப் பகலவன் ஆக இருப்பவர்.

”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.

பகுத்தறிவுப் பகலவன் ஆகப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் சுவாமிகளை.

இன்னொரு முகம் வெகுசீக்கிரம் பிராமண துவேஷியாக அவதாரம் எடுக்க இருப்பவர் எழுதியது. இதுவும் அவரது குடியரசு பத்திரிகை யிலிருந்து தான் –

பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ரா. இரங்கல் எழுதுகிறார்:

“… என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை. அரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும்… நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை… ”

கோவை அய்யாமுத்து தன் ‘எனது நினைவுகளி’ல் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில், நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”.

குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது. இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதிக்கு அங்கு இடமிருக்கவில்லை. ஏனெனில் அவர் பார்ப்பனர் என்று பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த மாற்றம், நாத்திகமும், சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்? காங்கிரஸிலிருந்து விலகியதும் இது எல்லாம் அவரை ஒரு package deal – ஆக வந்தடைகின்றன. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். புராணங்களில் சொல்லப்படும் வரமோ சாபமோ தான் இதைச் சாதிக்கும்.

இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை. ஆனால் அவர் இப்புதிய சிந்தனை பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் அது மிக பாமரத்தனமானதாகவும், அவ்வப்போதைய தேவைக்கு ஏற்றதாகவும் இருக்கும். “ராஜாஜி என் நண்பர் தான். ஆனால் அவர் பார்ப்பான். அவர் சிந்தனைகள் பார்ப்பனருக்குச் சாதகமானதாகத் தானே இருக்கும்?” என்று சொல்லும் அவர் தனது சிந்தனையும் நாயக்கர் சாதிக்கு மாத்திரம் தானே சாதகமாகத்தானே இருக்கும்? அப்படித்தானே எல்லோருக்கும் அவரவர் சாதிக்கு சாதகமாக இருக்கும்? தனது மாத்திரம் எப்படி திராவிட இனம் முழுதுக்குமாக இருக்கக் கூடும்? என்று அவர் யோசித்ததாகவோ, அதற்கு பதில் கண்டதாகவோ செய்தி இல்லை. சாட்சியம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கட்சியையும் சொத்துக்களையும் தனக்கு நம்பிக்கை தருபவரிடம் ஒப்படைக்கிறேன் என்று தனக்கு சேவை செய்து வந்த 26 வயதுப் பெண் மணியம்மையை மணம் செய்துகொள்கிறார். அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம். அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லை. ஆக, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும் என்பது நமக்குத் தான் தெளிவாகிறது. அவர் சொன்னது கிடையாது, கழகக் கண்மணிகளும் கேட்டது கிடையாது.

அவரது எல்லா சிந்தனைகளும் இந்த ரக வெளிப்பாடாகவே இருந்துள்ளன. “சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்?” என்பது பகுத்தறிவுப் பகலவனின் கேள்வி. இந்த ரகத்தில் தான் அவரது சிந்தனைகள் எல்லாமே இருந்துள்ளன. புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாதவை என்று சொல்லும்போது அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற திராவிட இயக்கத்தவர் தம் தமிழ்ப்பற்றில் போற்றிக் கொண்டாடுவதை எல்லாம் அவர் உதறி எறிந்துள்ளார்.

“தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மீக மோசமான காரியம் என்றே படுகிறது”.

இது குடியரசு பத்திரிகையில் தந்தை பெரியாரின் அருளுரை.

ஆனால் தந்தை பெரியாரின் இந்தமாதிரியான கருத்துக்களையும் சரி, தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று திரும்பத் திருப சொன்னதையும் தமிழ் மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும், தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்த பாரதி தாசனும் ஈ.வே ராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லை. திராவிடத்தந்தை தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர். சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை என்று சொன்ன திராவிட தந்தைக்கு என்ன பதில் சொன்னார்கள்?

கருணாநிதி காலையில் குளிக்கச் சென்றால் கூட திராவிடத் தந்தைக்கு பொறுப்பதில்லை. ”ஏன்யா அவன் என்ன இங்கே வேலைசெய்ய வந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?” என்று கடிந்து கொள்வார் பெரியாரும் அண்ணாவும் தமக்கு வழி காட்டியவர்கள் என்று அடிக்கடி சொல்லி தம் சிஷ்ய பெருமையை காட்டிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். வேறு யாரும் சொல்லியிருந்தால் முரசொலியில் கவிதை, தலையங்கம், அல்லது உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி தந்தை வழி நடக்கச் சொல்வாரா தெரியவில்லை.

காரணம் என்ன? ஏன் இந்த மௌனம்? எது இவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்தது? தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்றும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும் சொன்ன பெரியார் எப்படி தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் ஆனார்? அன்றிலிருந்து இன்று வரை திராவிட கட்சிகள் அனைத்திலும், ஏன் தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் வந்தன தான். அவை அனைத்தும் தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. இதை நாகரீகமாக ”நாங்கள் வெறுப்பது பிராமணீயத்தை, பிராமணனை அல்ல” என்று சொல். கவுண்டரீயம், நாயக்கரீயம் வன்னியரீயம் என்றெல்லாம் ஏதும் கிடையாது. பிராமணரை எல்லா தளத்திலிருந்தும் ஒதுக்க இன்னொரு முக்கிய காரணம் இவர்கள் எல்லாரையும் பீடித்துள்ள தாழ்வு மனப் பான்மை. இந்த தாழ்வு மனப்பான்மை தான் திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு சோட்டா மோட்டா நடிகருக்கும் பட்டங்கள் அள்ளிச் சொரிந்து அந்தப் பட்டங்களையே டமாரம் அடிப்பது. சினிமா வசனம் எழுதினால் கலைஞர். வாத்தியார் வேலை பார்த்திருந்தால், பேராசிரியர். எல்லாம் திலகம் தான் சிகரங்கள் தான். உலகத்தில் வேறு எங்கும் காணாத ஒரு அபத்த கலாசாரம்.

தொடர்ந்து, அன்றைய 1910க்களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான சரித்திரம் – திராவிட இயக்கத்தவர்கள் யாரும், அதன் முந்தைய அவதாரங்களையும் சேர்த்து, இன்றைய அதன் கிளைகள் பிரிவுகளையும் சேர்த்து எவரும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவர்கள் கிடையாது. அவரவர்க்கு சொந்த குடும்ப, ஜாதி நலன்கள். அவற்றுக்கு அலங்காரமான, வெளியில் சொல்லத்தக்க ஒரு கொள்கை லேபிள். வடவர் ஆதிக்கம் என்று ஆரம்பித்தது, இன்று அன்னை சோனியா காந்தி சொக்கத் தங்கமாக காட்சி தருகிறது. விதவை மறு வாழ்வுத் திட்டத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளே, நிலையான ஆட்சி தருக” என்று வேண்டப் பட்டார். ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிக் கட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால், சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டது. மதவாதக் கட்சி என்று வசைபாடிய பா.ஜ.க அணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால், அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறது. இதெல்லாம் பெரியார், அண்ணா காட்டியவழியில் சாதியை ஒழிக்கப் பிறந்த கட்சியின் தலைவர் அருளிய வாசகங்கள். ஹிந்தி அரக்கியை ஒழிக்கப்போராடிய கட்சியின் தலைவர் தன் மருமகனுக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்று மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்கிறார். ’என் குடும்பத்தில் எவருக்காவது பதவி தேடினால் என்னைச் செருப்பால் அடியுங்கள்’ என்ற வன்னியர் கட்சித் தலைவர் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் ஏந்தக் கட்சி தரும் என்று தேடி அணி சேர்கிறார். தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்க்கவேண்டும் என்ற அவர் ஆசையும் தீர்கிறது.

ஹிந்தி அரக்கியை விரட்டி தமிழுக்காகவே போராடிய இயக்கம் ஆண்ட 50 வருட கால ஆட்சியில் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை ஒருவர் கல்வி பெறமுடிகிறது தமிழ் நாட்டில். எந்தத் தொலைக் காட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் அரிதாகிக் கொண்டு வருகின்றனர். ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகக் கருதப்படுகிறது. முத்தமிழ்க் காவலர் குடும்பத்து SUN, KTV, SUN Music, SUN News என எதிலும் தமிழ் பேசுபவர்கள் கிடைப்பதில்லை.

அறுபது வருட கால திராவிட ஆட்சிக்குப் பிறகு, குழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைக்க மோதிரம் தரப்படும் என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. தமிழ்த் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு ஆனை பிறக்கிறது. ஏன்? தம் குடும்பத்திலேயே கூட உதயநிதி, கலாநிதி, தயாநிதி என்று தான் பெயர்கள். அது போகட்டும். அவர்களுக்கு தங்க மோதிரம் வேண்டாம். தமிழ்ப் பற்றும் வேண்டாம். வேறென்ன வேண்டும்? பின் ஏன் எல்லா பெயர்களும் நிதி என்றே முடிகின்றன? இருப்பினும் கோஷம் என்னவோ பொறியியல், மருத்துவம், வானசாஸ்திரம் எல்லாம் தமிழில் போதிக்கப்படவேண்டும் என்று எல்லாக் கட்சிகளிலிருந்தும் வருகின்றன பலத்து.

வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மழை நீர் தேக்கி, வளம் தந்த ஏரிகள் தூர்த்தப்பட்டு வீட்டு மனைகளாகின்றன. விளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் வசமாகின்றன. கேட்டால் தொழில் வளம் என்று கோஷமிடுகிறார்கள். நிலத்தடி நீர் எங்கோ அதளபாதாளத்துக்கு போகிறது. அண்டை மாநில திராவிடர்களோ 1971-லிருந்து எந்த ஆற்று நீரையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயில்லை. எல்லாவற்றிலும் திராவிடத் தலைமைகளோ விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. காரணம் என்னவென்று தெரியவில்லை. கர்நாடகாவிலிருக்கும் தன் சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயமோ? சுமுகமாகப் பேசித் தான் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப் படுகிறது. பிராமண துவேஷம் சாதி ஒழிப்பு என்று பெயர் பெறுவது போல, பேசித் தீர்த்துக் கொள்வது என்ற சொல் எதை மறைக்க என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆற்று மணலை அள்ள ஒவ்வொரு குத்தகை விடப்படுகிறது. ஆற்று மணல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது நாட்டின் சொத்து. கவலையில்லை அரசியல்வாதிகளுக்கும் குத்தகை தாரருக்கும். ஒரு முறை ஆற்று மணல் முழுதுமாக அள்ளப்பட்டு விட்டால் தமிழ் நாடு இனி சகாரா பாலை வனம்தான். வேறு எந்த மாநிலமும் தன் நில வளத்தை, கனிம வளத்தைச் இப்படிச் சுரண்ட விடுவதில்லை.

திராவிட இனம், தமிழ் பற்று என்று 60-70 வருடங்களாக உரத்த கோஷம் இட்டவர்கள் தான் தமிழ் நாட்டை மீளமுடியாத ஒரு அழிவுக்கு இழுத்துச் செல்கிறார்கள். இது வரும் தலைமுறை தமிழ் மக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒப்பாகும்.

Courtesy: Kumudam

சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம், சுய ஜாதிப் பற்று என்பது, திராவிட ஆட்சி ஏற்பட்ட 1967லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படுகொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. பட்டியலிட்டு சாத்தியமில்லை. ஆனால் இவை எல்லாம் திராவிட கட்சிகளின் பாஷையில் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் ஜாதி வெறியினால் நிகழ்ந்தவை, உயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரை. இதற்கு என்ன அர்த்தம்? எந்த திராவிட கட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாய்வு செய்ததா? அல்லது தன் கொள்கைகளைத் தான் புனர் ஆய்வு செய்ததா? பறையர்களே பள்ளர்களை சமமாக ஏற்பதில்லையே. திருமாவளவனும் டா. கிருஷ்ணசாமியுமே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லையே? எந்த பார்ப்பனர் இந்த சுய வெறுப்பை விளைவித்தார்? எத்தனை மொக்கையான, அர்த்தமற்ற அபத்தமும் பொய்யுமான சாதிக் கொள்கை இவர்களது? கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இவற்றில் தலையிட்டு சமரசத்துக்கும் அமைதிக்கும் வழி தேடுகின்றன. அவர்கள் எத்தரப்பு சுயஜாதி வெறியையும் கண்டனம் செய்வதில்லை. ஏன்? அவர்களுக்கும் திராவிட கட்சிகள் போலவே ஜாதி வெறியின் முக்கியத்வம் தெரிகிறது. எல்லோருமே நாடகமாடுகிறவர்கள் தான். அவர்களின் கோஷங்கள் வெற்றுக் கோஷங்களே. ஒரு ஜாதியினரைக் கண்டித்தால் மற்ற ஜாதியினரின் ஓட்டை இழக்க நேருமே!

இவர்களில் எவருக்கும், திராவிட கழகங்கள் ஆகட்டும் மற்ற கட்சிகள் எதற்கும் சுய ஜாதி வெறி தான் ஆதாரமானது. அதை வைத்துத் தான் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதும் கட்சிகளின் வெற்றி தோல்வியும் தீர்மானிக்கப் படுகிறது. கல்வி, பதவி எல்லாவற்றுக்கும் ஜாதி சார்ந்து ஒதுக்கீடு. இதுவே ஜாதிகளை என்றென்றைக்குமாக நிரந்தமாக பாதுக்காக்கும் வழியுமாகிறது. ஜாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடு. அந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் உகுக்கும் கண்ணீரும், உதறுவதாகப் பயமுறுத்தும் மந்திரி பதவிகளும், டிவி காமிராக்களை வைத்துக்கொண்டு ஆடும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகங்களும், எல்லாமே திரைப்பட வசனங்கள் தாம். இவர்களது தமிழ்ப் பற்று போலத் தான். எத்தனை லக்ஷம் தமிழர்கள் முள்வேலிக்கம்பிச் சிறைகளில் அடைபட்டிருந்தாலும், ராஜபக்‌ஷேயிடம் தூது சென்று பரிமாறிக்கொண்ட புன்னகைக் காட்சிகள், பெற்று வந்த பரிசுகளும், குலுக்கிக்கொண்ட கைகளும் போதும் தமிழருக்கு நாம் அளித்த துரோகத்திற்கு சாட்சியம் தர.

இன்றைய மத்திய அரசுக்கு தமிழகத் தமிழரும் சரி, ஈழத் தமிழரும் சரி ஒரு பொருட்டே இல்லை என்றதும், அதைவேடிக்கை பார்த்திருப்பது திராவிட கழகங்கள் மாத்திரமல்ல, காங்கிரஸ் கட்சியும் தான். அவ்வப்போது ஒரு கழகம் எதிர்க்குரல் எழுப்பினால், மற்றது மத்திய அரசுக்கு தன்னை மிகுந்த விசுவாசியாகக் காட்டிக்கொண்டு தன் எதிரிக் கழகத்தின் எதிர்ப்புக் குரலை மடியச் செய்யும். எத்தனை உதாரணங்கள் தேவை, காவிரி நீரா, சுனாமியா, தானே புயலா, ஈழத்தமிழர் மரண ஓலமா? எதையும் மத்திய அரசு காதில் விழாதது போல நாடகமாட எதிர் கழகம் துணை போகும்

கழகங்களின் கூச்சலும் பிரசார நாடகமேடை ரக வசனங்களும் சிந்தனைக்கோ இலக்கியத்துக்கோ எந்த கலைக்குமோ வித்தாக முடியாது. எல்லாத் துறைகளிலும், பத்திரிகை, மேடைப் பேச்சு, இலக்கியம், சினிமா, நாடகம், இப்போது தொலைக் காட்சி எதையும் இவர்கள் விட்டு வைத்ததில்லை. இவற்றில் எல்லாம் சுமார் 60-70 வருட காலமாக திளைத்து உலப்பி வந்தாலும், எல்லாம் மலையெனக் குவித்திருந்தாலும், எவையும் உயிரற்றவை. உண்மையற்றவை. உரத்த கூச்சல் கலையாவதில்லை. பொய்மையும் கலையாவதில்லை. திராவிட இயககங்கள் இதுகாறும் படைத்த எதுவும் இலக்கியம் என்றோ கலையென்றோ சொல்லத் தக்கவை அல்ல. ஒரு அடிப்படையான காரணம், இவர்களிடம் உண்மையுமில்லை. கலை உணர்வும் இல்லை. கடந்த கால முற்போக்குக் காரர்கள் போலத்தான். கூச்சலும் பிரசாரமும் அரசியலுக்குப் பயன்படலாம். கலைக்கோ இலக்கியத்துக்கோ அல்ல. தலித் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் நேர்மையானவர்கள். சிறந்த எழுத்துக்கள் அவர்களிடமிருந்து பிறந்துள்ளன.ஏனெனில் அவர்கள் தம் அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள்.

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

57 Replies to “திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்”

  1. சார், ஊரில் முக்கால் வாசிப் பேர் எதோ ஒரு விதத்தில் திராவிடக் கட்சிகளிடம் சலுகை அடைந்தவர்கள். ஒரு ரேஷன் கார்டு, இலவச டிவி, பையனுக்கு கல்லூரியில் சீட்டு, இடமாற்றல் இப்படி ஏதாவது ஒரு வகையில் சலுகை அனுபவித்தவர்கள், அதனால் திராவிடக் கட்சிகளைப் பற்றிய விமர்சனம் எல்லாம் கண்ணை மறைக்கிறது. மக்கள் எவ்வழி அரசன் அவ்வழி என்பது மக்காளாட்சி தத்துவம் ஆகி விட்டது.

    கர்நாடகத்திலும், குஜராத்திலும் நதிநீர்களை இணைத்து விட்டார்களாம். கர்நாடகத்தில் ஹேமாவதி ஆற்றில் இருந்து நீர் வரத்தை திருப்பி விட்டு சிற்றூர் கிராமங்களில் உள்ள கண்மாய் குளங்களுக்கு நிரப்புகிரார்கலாம். நம்ம ஊரில் குளங்களை துற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வளவு மோசமான ஆட்சியை பார்க்கவே முடியாது என்று வெட்ட வெளிச்சமாக தோன்றினாலும் நாற்பது சதவீதத்துக்கு மேல் திமுகவிற்கு ஓட்டு விழுகிறது தானே… இன்னும் ஆறு ஏழு தலைமுறைகளில் இந்த நிலை மாறக் கூடும். அதுவரை ஒன்றும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.

  2. 24/4/2012
    Saraswathi devi had indeed been residing on the tongues of DK and DMK leaders.Their poems,cinemas,stories and speeches indeed prove this.Their question where Saraswathi devi will shit is also realised by the Tamil people.Their poems.cinemas,stories and speeches indeed indicate where Saraswathi devi had been easing herself.Even naasthikas words are honoured by the godess and proved to the satisfaction of all.Jai Saraswathi Maa.

  3. எத்தனை பேர் எத்தனை முறை இவர்களுடைய சுய உருவத்தைத் தோல் உரித்துக் காட்டினாலும், புரிந்து கொள்ளாதவர்கள் போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பவர் கருணாநிதி. பிராமண எதிர்ப்பு என்பது தமிழ் நாட்டில் உருவான ஒரு இயக்கம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதற்கு தேவை இருந்திருக்கலாம். அவர்களுடைய அந்தப் போராட்டம் வெற்றி அடைந்ததற்குக் காரணம், கட்சி வேறுபாடு இல்லாமல் பிராமணர் அல்லாதார் அனைவருமே இந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்தில் ஆதரவு காட்டியதுதான் காரணம். இன்றைய நிலை என்ன வென்றால் கருணாநிதிக்கோ அல்லது வேறு எந்த திராவிட இயக்கத் தலைவருக்கோ பிராமணர்கள் எதிரிகளாக வலுவான நிலையில் இல்லாதபோதும், தூக்கத்தில் எழுந்துகூட கருணாநிதி, பார்ப்பனர்களால்தான் தோற்றேன் என்றெல்லாம் சொல்லுகிறார். ஒரு சினிமா வசனத்தில் இவர் “பேசட்டும் பேசிப் பார்க்கட்டும்” என்று சாக்கரட்டீஸ் பேசுவதாக எழுதினார். அது போல இவர் காலம் கடந்தும், பிராமண எதிர்ப்பில் விஷத்தைக் கக்கினாலும், நாம் சொல்லப்போவது, “விஷத்தைக் காக்கட்டும், கக்கிப் பார்க்கட்டும்” என்பதுதான். இவருடைய வாய்ஜாலப் பேச்சும், மூளையை மழுங்க அடிக்கும் சாமர்த்தியமும் காலம் கடந்தவைகளாக போய்விட்டது. இனியும் இவருடைய மாய்மாலங்கள் எடுபடாது. எதார்த்த நிலைமைகளை உணர்ந்து கொண்டு தமிழர் அனைவரும் முன்னேற பாடுபட வேண்டுமே தவிர, இப்போதும் பார்ப்பான் என்றெல்லாம் சொல்லித் திரிந்தால் பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவார்கள் இன்றைய இளைஞர்கள்.
    திராவிட இயக்கம் என்பது ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களை மூளை சலவை செய்யப் பயன்பட்ட ஒரு சமுதாயத் தீங்கு. அதன் உண்மை சொரூபத்தை எடுத்துக் காட்டும் வெங்கட் சாமிநாதன் அவர்களின் கட்டுரை அருமை.

  4. வெங்கட் சாமிநாதன் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர். தயவு தாட்சணியம் பார்க்காமல் விமர்சிக்கும் அவரது நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது. மரியாதைக்குரியவர் என்பதால் அவரது வாதங்களில் இருக்கும் தவறுகளை சுட்டாவிட்டால், அது நேர்மையற்ற செயல் என்பதை அவரும் ஏற்பார் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

    இன்றும் இந்தியா முழுதும் உள்ள நிலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தலித்கள், பழங்குடிகள், முஸ்லிம்களுக்கு (இந்திய) அரசின் உயர் பதவிகளில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அரசு பதவிகளில் உள்ள ஜாதிகளின் பிரதிநிதித்துவம் இந்தியாவை விட பரவாயில்லை என்று தெரிகிறது. இது தவறான சமூக நிலை என்று வெ.சா. நினைக்கிறாரா? தமிழ்நாட்டில் வடநாட்டு கௌ பெல்ட் மாநிலங்களை விட அபிராமனர்கள், குறிப்பாக பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் முன்னேறி இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பை வெ.சா. மறுக்கிறாரா?

    திராவிட இயக்கம் குறைகள் அற்ற இயக்கம் இல்லைதான். உண்மையைச் சொல்லப் போனால் எக்கச்சக்க குறைகள் உள்ள இயக்கம்தான். ஆனால் சமூக மாற்றங்களில் அதன் பங்களிப்பை முழுமையாக நிராகரிப்பது, திராவிட இயக்கம் = பிராமன் துவேஷம் மட்டுமே என்று ஒற்றை வார்த்தையில் சுருக்குவது வெ.சா.வின் சார்பு நிலையைத்தான் காட்டுகிறது. வெ.சா. பிராமணர், அதனால்தான் இப்படி எழுதுகிறார் என்று நான் ஒரு நாளும் சொல்லமாட்டேன். ஆனால் திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பு வெ.சா.வை மிகவும் கசப்படைய வைத்திருக்கிறது, அது அவரை நடுநிலையிலிருந்து பிறழ வைக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    திராவிட இயக்கத்தில் எத்தனையோ போலித்தனம் இருக்கிறது என்பதோடு அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் கூட பிரச்சினை இல்லை. கருணாநிதி ஒரு hippocrite என்று நிறுவ வெ.சா. தேவை இல்லை. இரண்டு நாள் முரசொலி படித்தால் போதும். ஆனால் அவருக்கிருக்கும் கோபத்தில் பிராமணர்களை உத்தமர்கள் என்று சித்தரிப்பது ஏற்க முடியாதது. // தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக் கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும் விளைந்தது தான். // என்ன பிராமணர்கள் எல்லாரும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கில அரசை முழு மூச்சோடு எதிர்த்தது போல அல்லவா வெ.சா. எழுதுகிறார்? பிராமணர்கள் அளவுக்கு தங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லையே, வெ.சா.வின் மொழியில் சொன்னால், பிராமணர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்சம் அடிமை சேவகம் செய்ய தங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்றல்லவா இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது?

    // சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம், சுய ஜாதிப் பற்று என்பது, திராவிட ஆட்சி ஏற்பட்ட 1967லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படுகொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. பட்டியலிட்டு சாத்தியமில்லை. // அப்படி என்றால் 1967-க்கு முன்பு என்ன ஜாதீய அநியாயங்களே இல்லாமல் தமிழ்நாட்டில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததா? கீழ்வெண்மணிக்கு திராவிட இயக்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றால் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்கு காமராஜர் பொறுப்பேற்க வேண்டாமா? நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் கும்பகோணம் அருகில் வளர்ந்த வெ.சா. அன்றிருந்த ஜாதிப் பிரக்ஞையை இன்றும் பார்க்கிறாரா என்ன? வைத்தியநாத ஐயரை எதிர்த்தவர்கள் என்ன தலித்களா? பிராமணர்கள்தானே?ஹரிஜன ஐயங்காரைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்திலேயே எழுதி இருந்தார்கள், ஐயங்காரின் எதிரிகள் என்ன நாயக்கர்களா தேவர்களா? வெ.சா.வுக்கே சோ. தருமனின் கூகையில் ஒரு அய்யர் தன் நிலங்களை தலித்களுக்கு “விற்றார்” என்று எழுதுவது ஆச்சரியத்தைத் தரவில்லையா? தலித்கள் எல்லா ஜாதியினராலும் அடக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த அவர்களுக்கு வேற்று ஜாதியினர் இது போன்ற வாய்ப்பு தருவது அபூர்வம், வெ.சா. பார்க்காத ஒன்று என்பதால்தானே அந்த ஆச்சரியம்? அவருடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் அபிராமனர்கள்? இன்று அந்த அபிராமனர்களின் படிப்பு நிலை முன்னேறி இருப்பதில் திராவிட இயக்கத்துக்கு பங்கே கிடையாது என்று வாதிடுவது எனக்கு ஒரு மூடிய மனநிலையைத்தான் (closed mind ) காட்டுகிறது.

  5. RV,

    // அப்படி என்றால் 1967-க்கு முன்பு என்ன ஜாதீய அநியாயங்களே இல்லாமல் தமிழ்நாட்டில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததா? //

    திராவிட ஆட்சியிலும் ஏன் ஜாதிய அநியாயங்கள் நடந்தது என்று கேட்டால், ஏன் நடக்கக்கூடாது அதற்குமுன் நடக்கவில்லையா என்கிறீர்கள்.!

    // கீழ்வெண்மணிக்கு திராவிட இயக்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றால் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்கு காமராஜர் பொறுப்பேற்க வேண்டாமா? //

    பொறுப்பேற்க வேண்டும்தான். முத்துராமலிங்கத்தேவரை தூக்கி உள்ளே வை என்று சொன்ன ஈ.வே.ரா., 10 வருடம் கழித்து திராவிட ஆட்சியில் கோபாலகிருஷ்ண நாயுடுவை உள்ளே வைத்து தண்டிக்கச் சொன்னாரா, இல்லை. கன்னா பின்னாவென்று உளறி அம்பலமானார்.

    // வைத்தியநாத ஐயரை எதிர்த்தவர்கள் என்ன தலித்களா? பிராமணர்கள்தானே?ஹரிஜன ஐயங்காரைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்திலேயே எழுதி இருந்தார்கள், ஐயங்காரின் எதிரிகள் என்ன நாயக்கர்களா தேவர்களா? வெ.சா.வுக்கே சோ. தருமனின் கூகையில் ஒரு அய்யர் தன் நிலங்களை தலித்களுக்கு “விற்றார்” என்று எழுதுவது ஆச்சரியத்தைத் தரவில்லையா? தலித்கள் எல்லா ஜாதியினராலும் அடக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த அவர்களுக்கு வேற்று ஜாதியினர் இது போன்ற வாய்ப்பு தருவது அபூர்வம், வெ.சா. பார்க்காத ஒன்று என்பதால்தானே அந்த ஆச்சரியம்? //

    வைத்தியநாத ஐயர் அளவுக்கு அன்றிருந்த திராவிட இயக்க ஆதிக்கசாதியினர் தலித்துகளுக்கு ஏன் செய்யவில்லை என்பதை மறைக்க எதிர்த்தவர்கள் பிராமணர்கள் என்று திரை போடுகிறீர்கள். திராவிட இயக்க ஆட்சியில், வைத்தியநாத ஐயரின் வளர்ப்பு மகன், நேர்மையாளர் கக்கன் தம் இறுதிக்காலத்தில் ஏன் அத்தனை சிரமப்பட்டு மறைந்தார் என்று திராவிட இயக்க அனுதாபியான நீங்கள் கூறுங்கள். அபூர்வங்கள், ஆச்சரியங்கள் ஏன் இன்னும் தொடர்கிறது என்பது புரியும்..

  6. RV,

    கேட்கப்பட வேண்டிய கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

    .

  7. கீழ வெண்மணியில் நடந்த கொடுமைக்கு சாதியக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த விவசாய நிலமற்ற கூலிகள். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மேல்ஜாதி நிலப் பிரபுக்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்ஜாதியினர் என்றாலும் பிராமணர்கள் இல்லை. இந்த கொடுமைக்குக் காரணம் நிலத்தில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்கிறார்கள் என்ற காரணத்துக்காக வெளியூரிலிருந்து கூலிகளை இறக்குமதி செய்தார்கள். இவ்விரு தரப்பு கூலிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வெளியூர் கூலிகளை உள்ளூர் கூலிகள் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிலப்பிரபுக்கள் செய்த செயல்தான் இன்று பேசப்படும் கீழ வெண்மணி படுகொலை சம்பவம். இது வர்க்கப் போராட்டமே தவிர ஜாதிய போராட்டம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சொல்வது போல இது வர்க்கப் போராட்டம் என்பதை புரிந்து கொண்டு, அனாவசியமாக இதில் ஜாதிய மோதல்களைக் கொண்டு வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  8. எந்த வர்க்கப் போராட்டத்திலும் கிராமத்தில் உள்ளவரை மற்றவர் எரித்துக் கொல்வது நடப்பதில்லை.

    பெரும்பாலான தலித்துகளுக்கு எதிரான சாதிக் கலவரங்களில்தான் கிராமத்தில் உள்ள தலித்துகளின் உடமைகளை அழிப்பது, எரிப்பது நடக்கிறது.

    கீழ்வெண்மணியில் இருந்த விவசாயக் கூலிகள் தலித்துகளாக இல்லாமல், வேறு ஒரு சாதியினராக இருந்தாலோ, அல்லது பலசாதிகள் கலந்த தொழிலாளர்களாக இருந்தாலோ அவர்களை எரித்திருக்க மாட்டார்கள்.

    கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கக்கூஸ் போவது கூட உடலில் நடக்கும் வர்க்கப் போராட்டம்தான்.

    பிரச்சினை சாதி அடிப்படையில் நடந்தது. எனவே இதை வர்க்கப் போராட்டம் என்று சொல்லி நீர்த்துப்போக விட முடியாது.

    .

  9. Thiru RV, Thiru Kalimigu Ganapathi pola, உண்மைகளை உணராதவர்கள் இருந்து என்ன லாபம்? பூமிக்கு பாரமே! இதனை காலம் இந்த பொல்லாத திராவிட வாத விஷமிகள் வாழ்ந்தது என்னவோ குறுக்கு புத்தியினால் என்றாலும், அவர்களுக்கு இன்னும் வலு சேர்த்தது இந்தகைய புண்ணியவான்களே! பிராமணர்களே அவர்களை வெள்ளைகாரர்கள் செய்த அடக்குமுறைகளையும் அவர்களின் வாழ்வாதரங்களையும் பிடுங்கி தங்களிடம் அடிமை சேவகம் செய்ய வைத்த அநியாயங்களை உணராத போது பிறரை சொல்லி என்ன பயன்! வெள்ளை காரர்களுக்கு முன்பே, சில இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் கூட விசுவாசமாய் வேலை செய்த பிராமணர்களை நீங்கள் அறிந்திருக்கலாம்! அவர்களில் பாதி பேர் இன்றும் கூட திருவாளர்.கருணாநிதிக்கும் பணிவிடை செய்து கொண்டிருப்பது கண் கூடு! அவர்கள் செய்யும் பணி நேர்மையை பற்றி மாத்திரமே கவலை கொள்வார்களே தவிர, யாரிடம் என்று காவல் கொள்ளார்! இதற்கும் கரணம் திரு களிமிகு கணபதி மற்றும் RV போல இருக்கும் சுய உணர்வு அற்றவர்களே! இவளவு சிரமப்பட்டு திரு வெங்கட் சுவாமிநாதன் அய்யா எழுதி இருக்கும் உணர்வான கட்டுரையில் கூட மட்டரகமான குறை கண்டு பிடுக்கும் இத்தகைய வித்தகர்கள் இருக்கும் வரை உண்மை ஓங்கி ஒலிப்பது சிறிது கஷ்டமே! வருத்ததுடன் மித்திரன்!

  10. //தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக் கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும் விளைந்தது தான். //

    பிராமணர் அடிமைச்சேவகம் புரியவில்லை என்கிறீர்களா? வெள்ளையருக்கு அடிமைச்சேவகம் புரிவதில் பிராமணர் மற்றும் பிராமணரல்ல்தவ்ருக்கு இடையே உண்டான போட்டியால் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது என்பதுதானே உண்மை?

  11. மித்திரன்,

    ஆர்.வி. கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் பதிலைத் தேடுங்கள். அதற்குப் பதிலாக வசவில் இறங்காதீர்கள்.

    உங்களது சாதிய வெறி (பிராமணர்களே….அநியாயங்களை உணராதபோது) அருவருப்பூட்டுகிறது.

    .

  12. திரு.கோபால் அவர்களே….

    இதே தளத்தில் கீழ்வெண்மணி சம்பவம் தொடர்பாக நான் பதிவு செய்த கருத்து இதோ….

    சான்றோன் on April 18, 2012 at 5:24 pm

    கீழ்வெண்மணி கொடூரம் மழுப்பபபட்டதில் இடதுசாரிகளின் பங்கு அசாத்தியமானது……

    அந்த பயங்கரத்தின் பின்னணியில் இருந்த சாதிவெறியை லாவகமாக மறைத்துவிட்டு அதை வெறும் வர்க்கப்போராட்டமாக திரித்துவிட்டனர்…..இன்றுவரை அப்படியே சாதித்தும் வருகின்றனர்…..அதன் சாதிய பின்னணியை கிளற முயன்ற திருமாவளவனை விரட்டியடித்து விட்டனர்…..

    கீழ் சாதிக்கார பசங்களுக்கு இவ்வளவுதூரம் ஆகிப்போச்சா ? என்ற [ இன்றும் நம்மில் பலர் அடிமனதில் இருக்கும் ]மேல்சாதிதிமிர்தான் அதற்கு முக்கிய காரணம்,…..அது வெறும் கூலி உயர்வு போராட்டத்திற்கான எதிர்வினை மட்டுமல்ல…..

    படுகொலை செய்யப்பட மக்களின் போராட்டத்தின் பின்னணியில் இடதுசாரிகள் இருந்தது உண்மை…..ஆனால் அதே காரணத்துக்காக அது மக்களின் நியாயமான எதிர்வினையை பெறவில்லை….[ கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை மக்களுக்கு தெரிந்ததால்]

    அன்றுமுதல் இன்றைய உத்தப்புரம் வரை இடதுசாரிகளின் குரல் மக்களிடம் எடுபடாததற்கு இதுவே காரணம் [ உத்தப்புரம் பிரச்சினைக்கு ஹிந்து இயக்கங்களால் சமரசம் ஏற்ப்பட்டது ]…..” கம்யூனிஸ்டுகள் கால் வைக்கும் இடம் விளங்காது ” என்பது மக்களின் நம்பிக்கை…..

  13. களிமிகு,

    // ஆர்.வி. கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் பதிலைத் தேடுங்கள். அதற்குப் பதிலாக வசவில் இறங்காதீர்கள். //

    இன்னும் எங்கே தேடச்சொல்கிறீர்கள்? குடியரசிலும், விடுதலையிலும், முரசொலியிலுமா ?

    // உங்களது சாதிய வெறி (பிராமணர்களே….அநியாயங்களை உணராதபோது) அருவருப்பூட்டுகிறது.
    //
    முழுமையாகப் படித்துப் பார்க்காமல் சாதிவெறி என்றால், யாருக்கு என்று கேள்வி எழும்..

  14. வெட்டி வீரம்/வீண் ஆடம்பர அடுக்கு மொழி பேச்சு தான் தமிழனின் அடையாளம்.பெரியார் வழிகண்ட/தலைவனாக கொண்ட இவன் ஒரு அரை/கொறை.பிரச்சனை வந்தால் ஜாதி வழியாக வக்கிர நிலை கொண்டு அணுகுவான். தமிழ் காட்டுமிராண்டி மொழி,இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம்,அப்படியே கொடுத்தாலும் தமிழ் நாட்டுக்கு வேண்டாம்,கற்பு பெண்களுக்கு வேண்டாம்,முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்ற பெரியாரின் “அருமையான” கொள்களைக்கு விளக்கமாகவும்/இலக்கணமாகவும் இருப்பவன்.அடி,உதை பட்டாலும் சுயமரியாதை இன்றி சபரிமலை/கர்நாடக க்கு செல்பவன்.மற்றும் சந்தர்ப்பவாதி.மொத்தத்தில் ரண்டான்/கெட்டான்.
    பெரியார் வழி வந்த தமிழத் தலைவர்கள் தமிழ் நாட்டு நலனுக்கு மிக்க “தலைவலியாக “இருக்கின்றனர்.ஜாதி அரசியல்/காழ்ப்புணர்ச்சி செய்தே தமிழனை கெடுத்து உள்ளனர்.தமிழன் விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளனர்.ஆனால் மக்கள் மாறி உள்ளனர் என்பதையும் தெரிந்து வேண்டுமென்றே குழப்புகின்றனர்.அடி பட்டும் புத்தி இல்லை
    பிஷப் கால்டுவெல் இல்லாவிட்டால் திராவிடஇயக்கமில்லை/ஈ.வே ரா.இல்லை/அண்ணாஇல்லை.அண்ணாஇல்லை என்றால் மற்ற உடன்பிறப்புக்களும் இல்லை.ஆக உண்மையான திராவிட இயக்கத்தலைவர் கால்டுவெல் அவர்களே.அவருக்குத்தான் சிலை/மணிமண்டபம் முதலானவை செய்திருக்கவேண்டும்.

  15. பிராம்மணகள்/மற்றவர்கள் என்பதை கால்டுவெல் காட்ட அதையே உடும்புப்பிடியாக
    ஈ.வே.ரா பிடித்துக்கொண்டார். ஈ.வே.ராவை மக்களுக்குப்பிடிக்கவே பிடிக்காது.அவருடைய கொள்கைள் சில வக்கிரபுத்திக்காரர்களுக்கு மட்டும் தான் தெவிட்டாதஇன்பமாக இருக்கும்.அந்த பிராம்மண எதிர்ப்பையே அண்ணா கையாண்டதால் தான் அது அப்போதய மக்களின் உள்ளக்கிளர்ச்சியை தூண்டி
    அதனால் பெருவாரியானவர்களின் ஆதரவைப்பெற்றது என்பது சரித்திரம்.அதைமறுக்கயியலாது.இப்போது சரித்திரம் திரும்புகிறது.
    91இன் அ.தி.மு.க வின் ஆட்சி வெறுப்பால் 96ல் காணாமல் போனது அ.தி.மு.க. 2001இல் நன்கு ஆட்சி புரிந்தும் தி.மு.கவின் இலவசங்களினால் ஆட்சி போனது.2006இன் தி.மு.கவின் கொடுங்கோல் ஆட்சியினால் சன்செட் தி.மு.க ஆகிவிட்டது.மு.க.வின் தி,மு.கவுக்கு இனி பிராம்மண எதிர்ப்பு என்ற பிதற்றல் அவர்களை மறுபடியும் ஆட்சிபீடத்தில் அமர்த்தாது.தி.க வின் கடவுள் இல்லை என்ற கொள்கைக்கு மக்கள் என்றோ சமாதி எழுப்பிவிட்டனர்.

  16. தமிழ்நாட்டில் வடநாட்டு கௌ பெல்ட் மாநிலங்களை விட அபிராமனர்கள், குறிப்பாக பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் முன்னேறி இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பை வெ.சா. மறுக்கிறாரா? -(RV on April 24, 2012 )

    அய்யா ஆர் வீ அவர்களே – நீங்கள் தமிழ்நாட்டுக்குல்லையே குதிரை ஒட்டாதிரும் – சற்று வேறு பல மாநிலங்களில் எப்படி உள்ளனர் என்று பாரும் – தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் ( பிராமன் தவிர) bc / obc /mbc என்று உள்ளனர்- எனவே bc ஆதிக்கம்தான்

    சுந்தரம்

  17. பெரியார் மணியம்மையை மணக்க ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார். ‘வேண்டாம் இந்தத் திருமணம்’என்றே ராஜாஜி ஆலோசனை கூறினார்.
    கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்து தன் திருமணத்திற்கு சாட்சியிட வேண்டும் என்று பெரியார் வேண்டுகோள் விடுத்தார். ‘புரோட்டோகாலை’ச் சுட்டிக்காட்டி அந்த வேண்டுகோளை ராஜாஜி நாகரீகமாக ம‌றுத்தார்.

    ராஜாஜி தமிழில் எழுதிய கடிதங்களை வீரமணியே வெளியிட்டுவிட்டார்.ஆனால் பல ஆண்டுகள் இது ரகசியமாகவே இருந்தது. இரண்டு கிழங்களும் இது பற்றி மூச்சுவிடவில்லை.

    தான் கைப்பட எழுதிய கடிதங்களுக்கு நகல் வைத்துக்கொள்ளாமல் இருந்த ராஜாஜி,தமிழ்நாட்டில் பெரியார் திருமணம் பிரச்ச‌னை ஆனவுடன், தன் தலை உருட்டப்படுவதை அறிந்து, பெரியாரிடம் தன் கடிதங்களுக்கு நகல் எடுத்து அனுப்பச் சொல்லி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

  18. நான் ஒரு பிராமணன். ஆனால் என்னுடைய கருத்துக்களை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.
    எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் யாரும் ஒரு காழ்ப்புணர்ச்சியோடு என்னிடம் நடந்ததில்லை. நான் பெரிய பதவியில் இருந்தும், என்னுடைய சக மற்றும் கீழ் பணிபுரிந்த யாரும் என்னிடம் வேற்று உணர்ச்சியை வெளிப் படுத்தினதில்லை. ஆனாலும்,அவர்களுக்கு பிராமணன் என்றால் ஒரு வெறுப்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது. எனக்குத் தெரிந்து அவர்களை எந்த பிராமணனும் ஏமாற்றியோ அல்லது சூழ்ச்சி செய்ததோ இல்லை.ஆனாலும், ஈ.வே.ரா போன்றவர்களால் அந்த மாதிரி துவேஷம் வளர்க்கப் பட்டிருக்கிறது.
    ன் ஜம்மு காஷ்மீரில் பயணித்த போது, அங்கும் இதே மாதிரி காஷ்மீர் பண்டிட்டுகள் (பிராமணர்கள்) மீது எல்லோரும் துவேஷம் கொண்டிருந்தார்கள். தனிப்பட்ட ஒருவர் செய்யும் தீமைக்கு, அந்த சமூகத்தினர் எல்லோரையும் துவேஷிப்பது நியாயம் ஆகாது. ஆனால் இதைக் கேட்ப்பாரில்லை.

  19. ஈ. வெ. இராம சாமி அவர்கள் விடுதலையில் எழுதியிருந்த ‘பகுத்தறிவுக்கு முந்தைய’ கருத்துக்களைக் கண்டெடுத்துப் பதிவு செய்துள்ள உங்களுக்கு நன்றிகள்.

    இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ள யாவும் ‘உண்மை’கள். ஆனால், இன்று உண்மைக்குப் புறம்பாகவே எழுதும் பத்திரிக்கைக்குத் தான் ‘உண்மை’ என்று பெயர்.

  20. ஸ்ரீ களிமிகு கணபதி,
    //களிமிகு கணபதி on April 24, 2012 at 6:51 pm
    எந்த வர்க்கப் போராட்டத்திலும் கிராமத்தில் உள்ளவரை மற்றவர் எரித்துக் கொல்வது நடப்பதில்லை.

    பெரும்பாலான தலித்துகளுக்கு எதிரான சாதிக் கலவரங்களில்தான் கிராமத்தில் உள்ள தலித்துகளின் உடமைகளை அழிப்பது, எரிப்பது நடக்கிறது.
    //

    நீங்கள் இவ்வளவு ஆழமாக, சாதி அடிப்படையில் அலச ஆரம்பித்த பின் அதைப் பாதியிலேயே நிறுத்திவிடுதல் நேர்மையற்ற செயல். ஒவ்வொருமுறையும் எரிக்கப்படுவது எந்த சாதி என்று ஆரம்பித்துவிட்டீர்கள். எனவே ஒவ்வொருமுறையும் எரித்தது எந்த சாதி என்று எழுதுதல் உங்கள் கடன். அதை விட்டு விட்டு பிராமணர்களைத் திட்ட முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால் உங்கள் கருத்துக்களைப் படிப்பவர்கள் எரிப்பவர்கள் பிராமணர்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடும்.

  21. //எனவே ஒவ்வொருமுறையும் எரித்தது எந்த சாதி என்று எழுதுதல் உங்கள் கடன். அதை விட்டு விட்டு பிராமணர்களைத் திட்ட முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால் உங்கள் கருத்துக்களைப் படிப்பவர்கள் எரிப்பவர்கள் பிராமணர்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடும்.//

    இந்தக் கட்டுரை மற்றும் கமெண்டுகள் கீழ்வெண்மணி எரிப்பைப் பற்றிப் பேசுகின்றன. எரித்தவர்கள் ரேஸிஸ்ட் ராமசாமியின் சாதிக்காரர்களான நாயுடு சாதிக்காரர்கள். எனவே, எரித்தவர்கள் பிரிட்டிஷ் பிராமணர்கள் என்று நான் சொன்னதாக யாரேனும் புரிந்துகொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு உளவியலில் ஆர்வம் உண்டுதான். ஆனால், நான் சைக்யாட்ரிஸ்ட் அல்ல.

    அதே போல, நான் நேரில் பார்த்து இரண்டு முறை ஹரிஜனங்களை எரித்தது முக்குலத்தோர்.

    பின்பு, வன்னியர்களும் தலித்துகளைக் கொன்று குவித்துத் தாங்களும் திராவிட இனவெறி வீரர்கள்தான் என்று காட்டியதைச் செய்தித்தாள்களில் படித்து இருக்கிறேன்.

    நான் ஏன் பிரிட்டிஷ் பிராமணர்களைத் தேவையில்லாமல் திட்ட வேண்டும் ?

    அவர்கள்தான் இங்கு தங்கள் கமெண்டுகள் மூலம் தங்கள் சாதிய மமதையைக் காட்டிக்கொண்டு, எங்களைத் திட்டுங்கள் எங்களைத் திட்டுங்கள் என்று வசவை வரவேற்கிறார்களே.

    நாகரிகமான விமர்சனங்களைக்கூட, செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுகூடத் தடை செய்யப்பட வேண்டும் என்று வாயை மூடச் சொல்கிறவர்கள் இந்துக்கள் இல்லை. மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகள்.

    .

  22. எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
    உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
    முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
    செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி

    https://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari

    இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்

    https://www.dnaindia.com/india/report_sp-worker-beats-auto-driver-to-death-in-kanpur_1665118

    இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
    பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
    https://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html

    https://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
    வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு
    https://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616

  23. //இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.//

    இதைப் பார்த்தால் தமிழகம் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. முழுவதுமாக சாதிக் கலவரங்கள்/சண்டைகள் ஒழிய விட்டாலும் நாட்டின் மற்ற பகுதிகளை விட குறைவாக இருப்பதே நல்ல விஷயம்தான்.

  24. நேற்று சென்னை புறநகர் பகுதியில் இரு சக்கர வாஹனத்தில் வந்த பொது, ஒரு வண்டியில் பெரியார் புத்தகங்கள் விற்று கொண்டு இருந்தார்கள். என்னுடைய காதில் விழிந்த பேச்சு பின் வருமாறு “அய்யா ஒரு புத்தகம் நாலு ரூபா தான், ஒரு பாண் பராக் குட நாலு ரூபா, ஒரு பில்ட்டர் சிக்கரடே குட பத்து ரூபா, இவ்வலோவு சீப் ஆ தரோம் வாங்கிகோங்க” – என்னக்கு வருத்தம் வந்தது – . திராவிட கொள்கைக்கு வேறு நல்ல ஒப்பிடும் இல்லையா.

  25. பூவண்ணன்,

    நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு கருணாநிதி சொன்ன ஞாபகம்

    வருகிறது. ராஜா தலித அதனால் தான் அவர் மீது வீண் பலி சுமத்துகிறார்கள் என்று 🙂

    திருமணத்தை பொருத்தவரை… சாதி மதம் அந்தஸ்து, குடும்ப சண்டை என பல்வேறு

    விதமான விசயத்தை அடிப்படையாக வைத்து வன்முறைகள் நிகழ்கின்றன.

  26. சமீபத்தில் திரு.பால.கௌதமன் எழுதிய ”முத்தமிழ் வித்தவர்” (வித்தகர்) என்ற ஒரு மலிவு விலை புத்தகத்தை படித்தேன். இதனின் விலை ரூபாய் 10தான். ஆர்.எஸ்.எஸ் ஆபீசில் கிடைக்கிறது. மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லியே தம் மக்கள் (குடும்ப) நலனுக்காக உழைத்த திராவிட சிசு தஷ்சினாமூர்த்தி என்ற தெலுங்கு தமிழர், தமிழர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்று மிகவும் நையாண்டியாக பல உண்மை நிகழ்வுகளை அதில் கூறியுள்ளார். அவற்றில் சில இங்கே –
    1. அனந்தநாயகி ஒருமுறை ”மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று வள்ளுவர் கூறியுள்ளார் ஆனால் தங்கள் மந்திரிகள் நடக்கும் விஷயங்களை கூட கூறமுடியாமல் முழிக்கின்றார்கள் என்றார். உடனே நமது வித்தகர் பலத்த நகைப்புடன் இது திருவள்ளுவர் சொன்னதன்று ஔவையார் சொன்னது என்றும், படித்துவிட்ட பேசவேண்டும் என்றும் கின்டல் அடித்தார். இது அவை குறிப்பில் உள்ளது. உண்மையில் இந்த வாசகம் அதிவீரபாண்டியன் எழுதிய ”வெற்றி வேட்கை“ என்ற நூலில் உள்ளது
    2. ஒருமுறை நிரூபர்கள் சிலப்பதிகாரத்தை ஒருவரியில் கூறமுடியுமா என்று கேட்டதற்கு ” கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசமே சிலப்பதிகாரம் என்றாராம். இப்படி ஒரு ரசனை !
    3. மருத்துவம், சித்தாந்தம், வாழ்கைமுறை, விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுிருந்தார்கள். இதை அளித்தவர்கள் பதினென் சித்தர்கள். ஒரு சமயம் திரு.வி.க விழாவிற்கு போய் அவரைப்பற்றி பேசாமல் ” சேலை கட்டிய மாதர்களை நம்பாதே என்றார்கள் சித்தர்கள்” காரணம் அவர்களுக்கு சேலையில்லாத மாதர்களைத்தான் பிடிக்கும் என்றார். இப்படி ஒரு தரம்கெட்ட விமரிசனம்.
    4. நீங்கள் சமீபத்தில் ரசித்த ஜோக் எது என்று ஒரு நிருபர் கேட்டதற்கு நமது தஷ்சினாமூர்தி சமீபத்தில் ஒரு பிர்வியூ திரைஅரங்கிற்கு படம் பார்க சென்றேன். அங்கே கழிவறையில் நான் பார்த்த ஒரு வாசகம் படிக்க நேர்ந்தது அது ”இந்தியாவின் எதிர் காலம் உங்கள் கையில்”. இப்படி ஒரு ரசனை!
    5. ராஜாத்தி என்ற தர்மாம்பாள் யார் ? என்று சட்டசபையில் ஒரு உருப்பினர் கேட்டார் அதற்கு வித்தகரி்ன் பதில் – கனிமொழி என் மகள் – கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் – இப்படி ஒரு விளக்கம்.
    6. இவர் முதல்வராக இருந்தபொழுது ”பூளு பிலிம் பெருகிவிட்டதே” இதை தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு. அதை தடுக்கச் சென்ற போலீசாரும் படத்தை பார்தது ரசித்துவிட்டுத்தான் வந்தனர் என்று ஒரு விளக்கம்.
    7. இவரது ஆட்சிகாலத்தில் தான் ஆபாசத்தில் விஞ்சி நிற்பது இராமயணமா, மஹாபாரதமா என்ற அடல்ஸ் ஒன்லி பட்டி மன்றம் நடந்தது !
    8. காமராஜருக்கு இவர்கள் சூட்டிய பட்டங்கள் – கள்ள தராசு, கருமுண்டம், பனம் கொட்டை மண்டை, யோக மங்களம், பஜனை நாயகம். கூட்டணியில் இருந்தால் மூதறிஞர் விலகினால் குலுக்குபட்டர் குடிலன். எம்.ஜி.ஆர் தயவில் பதவி பெற்று அவர் மேல் கவிதை புனைந்தார் (உயிர் உள்ளவரை மறவேன் என்று) பிரிந்தவுடன் கில்ட் நடிகர், புஷ்குல்லா தொப்பி, மலையாளி. கூட்டணி இருந்தால் வாஜ்பாய் ஜென்டில் மேன் பாலிடிசியன் பிரிந்தால் பண்டாரம் பரதேசி. கூட்டணி இருந்தால் நேருவின் மகளே வா நிலையான ஆட்சி தருக பிரிந்தால் தமிழகத்தில் விதவை பென்சன் உள்ளது வேண்டுமானால் இந்திரா பெற்றுக்கொள்ளலாம்
    இவர்களது பகுத்தறிவும் சுயமரியாதையின் லஷ்சனம் என்ன என்பதற்கு இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

  27. சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, ” நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்” என்றாராம் !!

  28. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் திராவிட இயக்கத்தின் பலன்கள் புரியும்.திராவிட இயக்கம் இல்லாத /வலுபெறாத மாநிலங்களில் சாதி ஒழிந்து விட்டதா,சாதி அடிப்படையில் கொலைகள்,வன்கொடுமைகள் நடை பெறுவதில்லையா.
    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை முதலில் வழங்கியது திராவிட ஆட்சி தான்.சாதி மறுப்பு திருமணதிற்கு அரசு ரீதியான ஆதரவு,பரிசு,இட ஒதுக்கீடு வழங்கியது திராவிட கட்சிகள் தான்.பெண்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தான் .இங்கு நடக்கும் சாதிகடந்த திருமணங்களில் நூறில் ஒரு பங்கு கூட மற்ற மாநிலங்களில் கிடையாது.
    முக்கால்வாசி மாநிலங்களில் வேறு மதத்தவர் நடத்தும் கடைகள்,உணவகங்களுக்கு யாரும் போக மாட்டார்கள்.வெகு எளிதாக மத,சாதி சண்டைகள் பற்றிகொள்ளும்.
    பீகாரில் புமிஹார் பிராமணர்கள் ரன்வீர் சேனா என்று அமைப்பு வைத்து வார வாரம் கீழ்வென்மணிகளை நிகழ்த்துவார்கள்
    அதே போல் குழந்தை திருமணங்கள்,பெண்ணை அடிமையாக நடத்துவது எனபது தான் அங்கு உள்ள நிலை.
    சாதியை சொல்லி உரிமையை கோருவதும்,உரிமையை மறுப்பதும் தலைநகரங்களிலேயே சாதரணமாக நடக்கும்.வேறு சாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யலாம் என்ற நினைப்பு வரவே அங்கு இன்னும் அறை நூற்றாண்டு ஆகும்
    திராவிட இயக்கத்தில் பல குறைகள் இருந்தாலும் மற்ற காங்கிரஸ்/இந்துத்வா கட்சிகள் கோலோச்சும் மாநிலங்களின் நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை பல மடங்கு மேல்.

  29. Poovanan,

    U are livinng in fools paradise. There are several of caste clashes between vanniars & dailts, thevars & dalits etc.,

    The 2 tumbler system is still prevalent in 55 villages in madurai district.

    Dalits are still fighting for temple entry in several places.

    Now coming to religious clashes, even during the congress rule, it was far & few in between.

    That is bcos the percentage of muslim population is the least in tamilnadu.

  30. ஐயா வெ சா அவர்களே திராவிட இயக்கத்தை சரியாகத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். பிராமணர்கள் மீது பொறாமை கொண்ட பிராமணரல்லாத உயர்சாதியினர் தொடங்கிய இயக்கம் என்று திராவிட இயக்கத்தை வர்ணித்திருக்கிறீர்கள். சமூகவியலாளர்கள் இதை relative deprivation theory என்று கூறுகிறார்கள். திராவி இயக்கத்தை ஆராய்ந்த சமூகவியலாளர்கள் இதனை விரிவாக ஆய்ந்திருக்கிறார்கள். சமூகத்தின் மேல் தட்டில் இருப்பவர்களைப்பார்த்து கீழே அதிகாரமின்றி அந்தஸ்து தாழ்வாக உள்ளவர்கள் அப்படி செய்வது இயல்புதான். திராவிட இயக்கம் தோன்றிய காலத்தே அரசு இயந்திரத்தில் பெரும்பாலவர்கள் பிராமணர்கள் காங்கிரசுக்கட்சியிலும் முக்கிய்ப்பொறுப்பிலும் பிராமணர்கள். ஆகவே இதை மாற்ற பிராமணரல்லாதோர் அரசியல் சமூக இயக்கம் கண்டனர் தமக்கு கீழ் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்து அதிகாரத்திற்காக கல்விக்காக இடஒதுக்கீட்டிற்கா போராட முனைந்தனர்.( அன்று பிராமணர்களைக்காட்டிலும் பிராமணரல்லாதோர்(உயர் சாதியினர்) அரசியலில் செல்வாக்கு படைத்தவராக இருந்தனர் என்று சொல்லமுடியுமா).

    இதில் அவர்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும். ஊழல் மலிந்தது என்றாலும். கல்வி சாமானியனுக்கும் சென்றது அதிகாரம் கீழே சென்றது. இந்தியாவிலே(இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களே ஆண்ட மானிலங்களைவிடவும்) மனித மேம்பாட்டில் சமூக மேம்பாட்டில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதற்கு திராவிட இயக்கம் ஒரு முக்கிய காரணம். இன்றைக்கு தமிழகத்தில் தொழில் நுட்பத்துறையில் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேறிய சமூகப்பிரிவினரை விட முன்னேறியுள்ளனர்.
    இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் கற்றவர்கள் மத்தியில் உள்ள புரிதல்.

  31. பூவண்ணன் on April 30, 2012 at 3:39 pm

    ” பெண்களுக்கு சொத்தில் சம உரிமை முதலில் வழங்கியது திராவிட ஆட்சி தான்.”

    திராவிட இயக்கங்களின் பொய் பிரச்சாரத்தை நம்பி பலரும் ஏமாந்து போயுள்ளனர். பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் தங்கள் பிறந்த வீட்டு சொத்தில் பங்கு ஆகியவை பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டமின்றி , குழப்பியவர்கள் மஞ்சள் கட்சியினர். உண்மை என்னவெனில், ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே , The Hindu Succession Act 1956 மூலமாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. எனவே, நண்பர் பூவண்ணன் அவர்கள் தெரிவித்தது சரியான தகவல் அல்ல. மேலும், திருமணமான பெண்களுக்கு, தகப்பன் சொத்தில் பங்கு அளித்து , 1985 லேயே சில மாநிலங்கள் திருமணமான பெண்களுக்கு தகப்பன் சொத்தில் தன் சகோதரர்களுடன் சமபங்கு அளித்து , சட்டத்திருத்தம் செய்தபின்னரே, வட மாநிலங்களை காப்பி அடித்து , மஞ்சள் துண்டு மாமுனிவர் 1989- ம் ஆண்டில் , தமிழ் நாடு சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் கொண்டுவந்தார். எனவே, திருமணமான பெண்டிரின் சொத்து உரிமை , வடமாநிலங்களை காப்பி அடித்து , மஞ்சளார் செய்தது. எனவே, இவர்கள் முதலில் செய்ததாக , பொய் பிரச்சாரம் செய்து, நண்பர் பூவண்ணன் போன்றவர்களை ஏமாற்றி உள்ளனர் என்பது தெளிவாகிறது.

  32. ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல தான் திராவிட இயக்கமும்.அந்த இயக்கத்தை பெருமளவில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் சுவீகரித்து கொண்டதால் அவர்கள் நன்றாகவே பலன் பெற்றார்கள்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் அதன் பலன்கள் புரியும்.
    ஹிந்துத்வம் மற்றும் காங்கிரஸ் கோலோச்சிய/கோலோச்சும் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம்,மத்திய பிரதேசம் ,பீகார் ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிகளுக்கு இடையே ஆன நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை புரியும்.
    திருப்பி அடிக்கலாம்/சாதி கடந்து திருமணம் செய்யலாம்,பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்ற சிந்தனையே அங்கு பின்தங்கிய சாதிகளுக்கு இன்னும் வரவில்லை.
    மதரீதியாக சாதிகள் இல்லை என்று சொல்லும் சீக்கிய மதத்தை ஏற்ற பஞ்சாபில் கூட சாதிபிரிவினைகள் வெகு அதிகம்.முப்பது சதவீதத்திற்கு மேல் இருந்தாலும்/பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் தலித் சீக்கியர்களுக்கும் உயர்சாதி சீக்கியர்களுக்கும் பிளவுகள் மிக அதிகம்.இப்போது கூட கீழ் சாதி சீக்கியரை மணந்த குற்றத்திற்காக சொந்த மகளை கொலை செய்த/வலுகட்டாயமாக கரு கலைப்பு செய்து இறப்புக்கு காரணமான குற்றத்திற்காக மந்திரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
    சாதி வேண்டாம் என்பவர்களை கிண்டலாக /வெறுப்பாக பார்க்கும்,சாதிரீதியான பெருமைகள் /இழிவுகள் சரி தான் என்ற எண்ணமே அங்கு மிகவும் பெரும்பாலோருக்கு இன்றும் உண்டு(பாரதியின் மறைவிற்கு கூட போகாத,அவரை சபித்த நம் தமிழகத்தின் 90 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலை தான் ).இங்கே போலித்தனமாக இருந்தாலும் சாதி வேண்டாம் ,ஒழியனும் என்று பேசுபவர்கள் பலர் உண்டு.தலைவர்களும் அதில் அடக்கம்.அதில் ஓரிரு சதவீதம் சொல்வதற்கு ஏற்ப உண்மையானவர்களாக இருந்தால் கூட அதுவே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம் தான்.
    24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தார்.

    தமிழகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு போவது,பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவது ,சாதி மறுப்பு திருமணங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் முன்னோடியாக உள்ளனர்.
    மத்திய அரசு பணிகளில்,விளையாட்டு,கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கீட்டு வகுப்பினர் பெரும்பாலும் தென் மாநிலங்களை சார்ந்தவர்களே
    தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே ஆன இடைவெளி குறுகி கொண்டே தான் வருகிறது.அதற்க்கு திராவிட இயக்கம் முக்கிய காரணம்

  33. திரு ஜடாயு ஜி,
    நீங்கள் உங்கள் தளத்தில் எழுதிய கட்டுரை பீகாரின் தலித் அர்ச்சகர்கள்:ஒரு புனித புதிய அத்யாயம்( 2007 ம் ஆண்டு அக்டோபர் 10 ) கட்டுரை படித்தேன். மிகவும் அருமை. அதனை இங்கு ஒரு முறை நீங்கள் வெளியிட்டால் நன்றாய் இருக்கும்/.திராவிட கட்சிகள் இல்லாத ஒரு மாநிலத்திலும் நல்ல விஷயங்கள் நிறைய நடப்பது தெரியாமல் பிதற்றுவோருக்கு உண்மை புரிய வாய்ப்பு உண்டாகும்

  34. \\24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தா\\

    அது எல்லாம் சரி….. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே சாதி கட்சிகள் அதிகம் உள்ள மாநிலம் எது என்று தெரியுமா உங்களுக்கு?

    நான் நான்கு மாநிலங்களில் அதுவும் நடுத்தர மாவட்டங்களில் வசித்து இருக்கிறேன். எனது அனுபவத்தை வைத்து உங்கள் கருத்தை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வருகிறது,

  35. திரு ராஜாஜி/திருசத்தியமூர்த்தி/திருசி.பி.ராமசாமி ஐயர்/திருகாமராஜ்/ஓமந்துரார் ஆகியோர் மௌனமாக இருந்து ஈ.வெ.ராவை தட்டிக்கேட்காமல் ஏனோதானோ என்றிருந்ததனால்தான் ஈ.வெ.ராவுக்கு ஆரம்பத்தில் இருந்த அசட்டுத்துணிச்சல்/
    பிதற்றல் அவர் பிராம்மணர்களை பழிப்பதை நியாப்படுத்த
    உதவிஉள்ளது.அவரை யாரும் கண்டிக்கவில்லை மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கை(under sedition act/act of hatred speech at a particular caste/community aimed
    at creating communal disharmony) அவர் மீது இலாமல் போனதினால்தான் மக்களிடையே ஈ.வெராவின் வக்கிர புத்திக்கு பெரும் வரவேற்பு/மற்றும் சமூகப்புரட்சியாளர் என்ற எண்ணமும் மேலோங்க பெரிதும் உதவின.
    முக்கியமாக எல்லாம் தெரிந்த ராஜாஜி அவர்கள் இதில் மௌனம்சாதித்ததோடு
    மட்டுமல்லாமல் இந்தியாவின்/மற்றும் தமிழ் நாட்டு கம்பனின் காவியப்புருஷன்,இந்தியனின் ஒவ்வொருவரின் ஆன்மாவைத்தொடுகின்ற,
    எல்லோராலும் மதிக்கப்படுகின்ற,நமது பாரம்பரியத்தின்
    ஆணிவேரான,அவனுடைய அன்புக்கு ஏங்குகின்ற கோடானுகோடி மக்களின்
    லக்ஷியப்புருஷன் ஸ்ரீராமன் படத்தை ஈ.வெரா நடத்திய ஊர்வலத்தில் காலணியால் அடித்தபோதும் ராஜாஜி வாளாவிருந்துவிட்டாரே என்ற நினக்கிறபோது உள்ளம் குமுறுகிறது.
    ஏன் ராஜாஜி மற்ற தலைவர்கள் அப்படி இருந்தனர்?என்ற கேள்விக்கு
    காலம் என்று தான் பதில் சொல்லுமோ என ஏங்கவேண்டிஉள்ளது.
    ஈ.வெ.ரா, ஸ்ரீராமனை “அம்மாதிரி செய்தது” இந்தியநாட்டு சாதாரண மக்களை
    மட்டுமல்ல/இந்தியாகண்டெடுத்த மஹான்கள்,உத்தமபுருஷர்கள்,பெரும்தலைவர்களையும் செருப்பால் அடித்திருக்கிறார்..
    ஈ.வெ.ரா அவர்கள் தன் சொந்த வீட்டில் ஸ்ரீராமனை என்னவேண்டுமானலும் செய்து
    கொள்ளட்டும்.ஒரு ஊர்வலம் நடத்தி பொது இடத்தில் செய்ய அவருக்கு எந்த உரிமையும் கிடையாது/அதற்கு சட்டமும் இல்லை என்று தெரிந்தும் எல்லாம் தெரிந்த ராஜாஜி மௌனம் சாதித்தனால் மன்னிப்பு கிடையாது/ஈ.வெ.ராவுக்கும் இல்லை.ஈ.வெ.ராவை இம்மாதிரி அவர்மேல் வெறுப்புண்டவர் செய்தால் திராவிடத்தலைவர்கள் சும்மாவிட்டுவிடுவார்களா?சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து சிறையிலிட்டு விடுவர்.ஆனால் ராஜாஜி வாய்பொத்தி/கைகட்டி காலத்தை கடத்தி பிராம்மணர்களை எவன்/என்ன வேண்டுமானாலும் தூற்றித்தப்பித்துக்
    கொள்ளலாம் என்ற நிலைமையை உருவாக்கிக்கொடுத்தவர்.
    ஈ.வெ.ரா தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு அவமானச்சின்னம்.
    (இன்று ராஜா எப்படியோ அப்படியே அவரும்). ஈ.வெ.ராவை தடுக்கமுடியாமல்
    செயலற்று நின்ற ராஜாஜியை பிராம்மணர்கள் மன்னிக்கவே மாட்டனர்.
    “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்ற தெய்வப்புலவர் வாக்கு பொய்யாகுமோ?

  36. ராமபிரானின் திரு உருவப்படத்தை செருப்பினால் அடித்தவர்கள், கலைஞரின் ஆதரவுடன் தான் அந்த செயலை செய்தனர். அந்த அயோக்கிய சிகாமணிகளின் திருட்டு ஊர்வலத்துக்கு, காவல்துறையின் பாதுகாப்பு வழங்கிய கேடி தான் மஞ்சள் துண்டு.

    ஆனால் ராமபிரான் இதுபோன்ற செயல்களால் எந்த பாதிப்பும் அடையாத பரம்பொருள் ஆவார். ஏனெனில், ராமபிரான் படங்கள் அல்லது சிலைகளுக்குள் மட்டும் அடங்குபவர் அல்ல. எங்கும் நிறைந்தவர் என்பதால் , திருடர்கள் கழகம் செய்த இந்த செயல், ஒரு அறியாமையின் விளைவே ஆகும்.

    ராஜாஜியின் பொருளாதாரக்கொள்கைகள் மிக தெளிவானவை. ராஜாஜியின் சீடரான மன்மோகன் சிங் அவற்றை காங்கிரசு கட்சியின் மூலம் 1991- முதல் நிறைவேற்றி வருகிறார்.

    ஆனால் , தமிழகத்தில் காங்கிரசை எப்படியாவது ஒழித்தே தீருவேன் என்று சபதம் செய்த , குல்லுக பட்டன் ராஜாஜி , காங்கிரசுக்கு சமாதி கட்டியதுடன், தன்னுடைய சுதந்திரா கட்சிக்கும் சேர்த்து சமாதி கட்டினார். இது தான் காலத்தின் கோலம்.

    பிறரை அழிக்க நினைப்பவன் தானும் அழிவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். காங்கிரசுக்கு சமாதி கட்டியதற்காக ராஜாஜிக்கு நூறு நோபல் பரிசுகள் கொடுக்கலாம். ஆனால், காங்கிரசை விட தீய சக்தியான மஞ்சளார் கட்சியை வளர்த்துவிட்ட பாவத்தால் , பெரியவர் இன்னும் மீளா நரகத்தில் தான் உள்ளார். அவர் நரகத்திலிருந்து மீண்டு, சொர்க்கம் செல்ல அனைவரும் பிரார்த்திப்போம். ஏனெனில், ராஜாஜி சுயநலம் சிறிதும் இல்லாத தலைவர் என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.

  37. திராவிட எதிர்ப்பு தங்கங்களே

    https://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
    Three states however buck this trend; across caste groupings in Punjab, Kerala and Tamil Nadu, the rate of ownership of basic consumer durables is high. In fact, the asset ownership rate for scheduled castes in these three states is better than that of OBCs and upper castes in all other states.
    Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.
    the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.
    அதாகப்பட்டது தமிழகத்தில்/கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஹிந்டுத்வர்கள் வலுவான நிலையில் உள்ள மாநிலங்களில் உள்ள முற்பட்ட பிரிவினரை விட மேலாம்.அதற்க்கு இங்கு நடந்த நல்லாட்சிகள் தான் காரணமாம்
    இப்ப என்னா சொல்வீங்க
    இப்ப என்னா சொல்வீங்க

  38. திரு பூவண்ணன்.
    நீங்கள் மருத்துவர் ஐயா ராமதாசு அவர்கள் தலைமையில் நடந்த சித்திரை முழு நிலவு இரவு பெருவிழா நேரலையை பார்க்க வில்லை போலும். பார்த்திருந்தால் திரு குரு அவர்களின் பேச்சை கேட்டிருந்தால் உங்களுக்கு உண்மை புரிந்திருக்கும்,

  39. //////பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் இன்னமும் முதல்வராக ஆகமுடியவில்லை என்ற கருத்து தொடர்ச்சியாகப் பேசப்படுகிறதே?

    சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர் பெரியார். அவர் பேசிய விஷயங்களைத்தான் அண்ணா பேசினார். அவருக்குப் பிறகு கலைஞர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் தொடர்பாக சாதி இந்துக்களின் மன இறுக்கத்தைத்

    தளர்த்தும் பணியை பெரியாருக்குப் பின் வந்தவர்களால் அந்த அளவுக்குச் செய்யமுடியவில்லை. அதனால்தான் பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை.

    அதேசமயம் சாதிக்கட்டமைப்புகள் நிறைந்த உத்தர பிரதேசத்தில் ஒரு தலித் ஐந்து முறைக்கு மேல் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது. அங்கே இருக்கும் பிராமணர்களும் மாயாவதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இங்கே நிலைமை அப்படியா இருக்கிறது? அரசியல் அங்கீகாரத்தை விடுங்கள். தலித் இயக்கங்களுக்குக் கூட்டணி அங்கீகாரத்தைக்கூட இங்கே ஒழுங்காகத் தருவதில்லையே.

    கூட்டணி அங்கீகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?

    தமிழகத்தில் இருக்கின்ற பெரிய கட்சிகள் எங்களைப் போன்ற தலித் இயக்கங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கத் தயங்குகின்றனர். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இதுதான் இங்கே நிலைமை. ராமசாமி படையாட்சியாரும் மாணிக்கவேல் நாயக்கரும் முத்துராமலிங்கத் தேவரும் கட்சி தொடங்கியபோது அவர்களுக்குக் கூட்டணி அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆனால் எம்.சி. ராஜா, சிவராஜ், இரட்டை மலை சீனிவாசன், இளையபெருமாள் போன்றோர் கட்சி தொடங்கியபோது அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தரப்படவில்லை.

    இன்று ராமதாஸோ, வைகோவோ, விஜயகாந்தோ கட்சி தொடங்கினால் அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்குவார்கள். ஆனால் நானோ, கிருஷ்ணசாமியோ, ஜான் பாண்டியனோ கட்சி தொடங்கினால் எங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தருவதில்லை. நான்கு, ஐந்து, ஆறு என்று ஒற்றை இலக்கத்திலேயே தொகுதி ஒதுக்குகிறார்கள். கூட்டணிக்கு நாங்கள் தேவை.. வாக்குகளைத் திரட்டித்தர நாங்கள் தேவை.. போஸ்டர் ஒட்டுவது தொடங்கி எல்லாவற்றுக்கும் நாங்கள் தேவை… ஆனால் எங்களுக்கான அங்கீகாரம் மட்டும் கிடையாது. இப்படியான நிலை தொடரும்போது இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா?/////
    Mr poovannan,
    இந்த வார்த்தைகள் திரு திருமாவளவனால் சொல்லப்பட்டவை, அவர் அளித்த பேட்டியை தமிழ் பேப்பர் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் இப்போது புரிகிறதா தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளினால் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் ஏற்பட்ட முன்னேற்றம், உத்தரபிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் 5 முறை முதல்வர் ஆக முடிகிறது,தலித் இயக்கங்களுக்குக் கூட்டணி அங்கீகாரத்தைக்கூட இங்கே ஒழுங்காகத் தருவதில்லையே என்ற ஆதங்கம் புரிகிறதா? உண்மை நிலை இப்படி இருக்க நீங்கள் என்ன திராவிட இயக்கத்தின் சாதனை என்று புலம்புவது உங்களின் அறியாமையை காட்டுகிறது. அவர் பேட்டி நீங்கள் கொண்டாடும் திராவிட கட்சிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுகிறது
    இப்ப என்ன சொல்வீங்க
    இப்ப என்ன சொல்வீங்க

  40. அன்பு திராவிடன்
    உட்டர்ப்ரதேசதில் மக்கள் வோட்டு பல துண்டுகளாக சிதறி உள்ளது.இப்போது முலாயமும் மாயாவதியும் மாறி மாறி வருவது பா ம க வும் விடுதலை சிறுத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல
    இப்போது வெறியோடு ராஜு பையாகளும் யாதவ்களும் பழி தீர்த்து கொள்வார்கள்.இருவரின் ஆட்சியிலும் அதிக அட்டகாசம் உயர்சாதியினரான பிராமணர்,ராஜபுதிரகள் செய்வது தான்.
    சோனியா சுஷ்மா மம்தா ஜெயா ஷீலா பதவியில் இருப்பதால் டௌரி ஒழிந்து விட்டதா,இல்லை பெண் சிசுகொலை குறைந்து விட்டதா
    அதிக எண்ணிகையில் அனைத்து பதவிகளிலும் தலித்கள் ,பெண்கள் இருப்பது தமிழகத்தில் தான்.மத்திய அரசு பணிகளில் ,அரசு அதிகாரிகளாக குஜராத்திலோ இல்லை உட்டர்ப்ரதேசதிலோ கூட மத்திய அரசு பணிகளின் கீழ் ஒதுக்கீட்டு இடங்களை பிடிப்பது தமிழர்கள் தான்
    முதல்வர் ஆவது நல்லது தான்.ஆனால் அது ஒன்று மட்டும் பெரிய மாற்றம் அல்ல.சில ஆயிரம் பேர் உள்ள தேவதாசி முறைக்கு பெண்களை விட வைக்கப்பட்ட கருணாநிதி /அண்ணாதுரை திராவிட இயக்கத்தால் முதல்வர் ஆனது எந்த விதத்திலும் குறைந்த சாதனை அல்ல.
    ஆந்திராவில் காங்கிரஸ் தலித் ஒருவரை முதல்வர் ஆக்கியதாலோ /இல்லை பா ஜ கா மத்தியில் பங்காரு தமிழகத்தில் கிருபாநிதி (அவரும் தி மு க வில் ஐக்கியமாகி விட்டார்)என்ன பெரிய மாற்றம் வந்தது.அவர்களுக்கு ஏதாவது சக்தி இருந்ததா.
    ஒதுக்கீட்டு பிரிவினர் ஒட்டுமொத்தமாக முன்னேறி வருவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
    உத்தர் பிரதேசத்தில் ,குஜராத்தில் தமிழகத்தை விட அதிக அளவில் தலித்கள் மருத்துவராக,பொறியாளராக,வங்கி அதிகாரிகளாக,நீதிபதிகளாக,ஆட்சி பணி அதிகாரிகளாக வருகிறார்கள் என்று கூற முடியுமா.இதையும் கொஞ்சம் பாருங்கள்
    https://www.thehindu.com/news/states/tamil-nadu/article3384834.ece
    On the other hand, when it came to the Backward Classes – other than Muslims for whom 49 posts were reserved, a total of 3,096 candidates (46.2 per cent), including 2,035 male and 1,061 female, participated in the examinations and 220 of them, equal to 47.83 per cent within the category, cleared all the four papers.

    The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.

  41. திராவிட இயக்க வரலாறு என்பது இன்றைய தேதியில், கலைஞரும், அவர் குடும்பமும் தான். கழக சொத்துக்கு யார் வாரிசு என்பதில் , குடும்ப வாரிசுகளுக்கு இடையில் பெரும் போட்டி. இந்த போட்டியை தூபம் போட்டு, சண்டையை அதிகப்படுத்த இளங்கோவன் போன்ற காங்கிரசுக்காரர்கள் வேறு இருக்கிறார்கள். கனி தான் திமுகவுக்கு தகுதியான தலைவர் என்று இளங்கோவன் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார். இனிமேல் திமுகவுக்கு தலைவராக வேண்டும் என்றால், குறைந்த பட்சம் திகாரில் இவ்வளவு மாதம் அல்லது வருடம் அனுபவம் பெற்றவர்கள் தான் என்று நிர்ணயம் செய்துவிடலாம். திமுக என்ற தீய சக்தி அரசியல் திரைவானத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    இலங்கை சிவிலியன் தமிழர்களை கொன்று குவித்த சோனியா அரசுக்கும், அதற்கு துணைபோன கருணாவையும் தமிழன் என்றும் எச்சரிக்கையாக கையாள்வான்.

  42. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு தாத்தாவும், பேரனும், படியேறிக்கொண்டு இருக்கிறார்கள். பேரன் சுமார் 15 -வயது இருக்கும்.தாத்தா சுமார் 70 – வயது இருக்கும்.

    ஏந்தாத்தா, எங்க பள்ளிக்கூடத்திலே வரலாறு பாடப்புத்தகத்தில் ஆரியர் , திராவிடர் என்று சொல்லி இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்று வருகிறதே? அந்த ஆரியர்களும், திராவிடர்களும் யார் ? எங்கே, இருக்கிறார்கள்? அவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

    தாத்தா: சண்முகா, ஆரியன் என்றும் திராவிடன் என்றும் எந்த இனமும் கிடையாது. வெள்ளைக்காரனுங்கோ நம்ம நாட்டை அடிமையாக வைத்திருந்த போது, பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் , பொய் வரலாறு புத்தகங்களை எழுதினர். நம் நாட்டு மக்களை அனைவரையும் கிறித்தவ மதத்துக்கு மாற்ற திட்டமிட்டு செயல் பட்டனர். வெள்ளையன் சொன்ன பொய் என்ன தெரியுமா? வடக்கு இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் வெள்ளையர்கள்-( தோல் நிறம் வெள்ளை) அவர்கள் ஆரியர்கள். தென் இந்தியாவில் உள்ள கருப்பு நிற மக்கள் திராவிடர்கள் – வெள்ளை நிற ஆரியர்கள் , கருப்பு நிற திராவிடர்களை சண்டைபோட்டு தெற்கே விரட்டி விட்டனர் என்று பொய் வரலாறு உருவாக்கினான். உண்மை என்னவெனில், ஆரியர்களின் வேதம் என்று சொல்லும் எல்லா வேதத்திலும், விஷ்ணு என்ற கடவுளை வணங்கும் புகழ்ச்சிப்பாடல்கள் உள்ளன. விஷ்ணு மற்றும் அவனது அவதாரமாக போற்றப்படும் இராமன், கிருஷ்ணன் ஆகியோர் கருப்பர்களே ஆகும். அவை கருப்புசாமிகளே ஆகும். விஷ்ணு, கிருட்டிணன், இராமன் ஆகியோர் கருப்பு நிறம் கொண்டவர்கள் என்பதே எல்லோராலும் ஒத்துக்கொண்ட உண்மை. கருப்பு நிறம் கொண்டவனை கடவுள் என்று கும்பிடும் ஆரியர்கள் எப்படி கருப்பு நிறம் கொண்ட திராவிடர்களை எதிரிகளாக கருதி சண்டை போடுவார்கள். அவ்வளவும் வெள்ளை நாய்கள் கட்டிய கதை.

    இன்னொரு விஷயத்தை கவனி, நம்மூரு பிள்ளையார் கோயில் பூஜை செய்யும் அய்யரும், அவரு சம்சாரமும் நல்ல சிவப்பு. அவங்களுக்கு பிறந்த இரண்டு பையன்களும் நல்ல கருப்பு. பிறக்கும் குழந்தைகள் அம்மா அப்பா இருவரில் ஒருவரை நிறமாக கொள்ளவேண்டும் என்று இல்லை. அம்மாவழி, அல்லது அப்பாவழி மூதாதையரில் யாராவது ஒருவரின் உயரம், நிறம் ஆகியவற்றையும் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்று சயின்சு சொல்லுது.

    வெள்ளைக்காரன் உருவாக்கிய ஆரிய திராவிட கருத்து ஒரு வெட்டிக்கற்பனை தான். நல்ல சிவப்பாக, வெள்ளை தோலுடன் இருக்கும், சில வடநாட்டு எஸ்/சி , எஸ் /டி இயக்க தலைவர்கள் எல்லாம் திராவிடர்கள் அல்ல. அவர்கள் ஆரியர்களே. ஆரியம் என்றால் வீரன் என்று அர்த்தம். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபுராணத்தில் ” பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என்று சிவபிரானை வர்ணிக்கிறார். திராவிட பீடபூமி என்பது தென்னிந்தியாவை குறிக்கும் தக்கான பீடபூமி ஆகும். எனவே, ஆரியன் என்று ஒரு இனம் கிடையாது.திராவிடன் என்றும் ஒரு இனம் கிடையாது.

    கிறித்தவ மெஷினரிகள் தங்கள் மத மாற்ற வியாபாரத்துக்காக வெளிநாட்டு வெள்ளையரை விட்டு எழுதிய பொய் வரலாறுகளே இவை. இந்த பொய் வரலாறுகளை, தமிழ் நாட்டு வந்தேறிகளான சிலர், தாங்கள் காசு பார்ப்பதற்காக , நாட்டு சொத்தை சூறையாட திட்டமிட்டு , பரப்பிய பொய்யுரையே இந்த ஆரிய திராவிட இனவாதம். உலகம் முழுவதும் மக்கள் ஒரே இனம் தான். தோலின் நிறம் மக்களை பிரிக்காது. திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை ஆண்டபோது, ஏராளமான பொய் வரலாறுகளை பாட திட்டத்தில் சேர்த்தன. நீ அந்த பொய் வரலாறு பாடப்புத்தகத்தை படித்துவிட்டுத்தான் இந்த கேள்விகளை கேட்கிறாய். வேறு ஒன்றும் இல்லை.

    பேரன்:- இதற்கு என்ன செய்வது தாத்தா ?

    தாத்தா:- நீ பெரியவன் ஆனதும் உண்மை வரலாறுகளை புத்தகமாக ஆதாரப்பூர்வமாக எழுது. இந்த திராவிட- ஆரிய பொய்யர்களின் புனை சுருட்டை முறியடி. கூட்டம் போட்டு இந்த திருடர்களின் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்து. உலகில் பொய்கள் வெகுகாலம் நிலைத்திருக்காது. உண்மை வெளிவந்தே தீரும். திராவிட தாத்தாக்கள் தங்கள் குடும்ப ஊழலுக்காக ஆரிய மருமகள் காலில் விழுந்து , லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்தனரே 2009 – ஆம் ஆண்டிலே. ஆரியன் திராவிடனின் எதிரியாக இருந்தால், திராவிட தாத்தாக்கள் , ஆரிய காங்கிரசின் காலை நக்கி வாழ்வார்களா ? புரிந்து கொள்.

  43. எல்லாம் சரிதானென்று வைத்துக் கொண்டாலும் இந்த சாதிக்காரர்கள் பதவிக்காக இதனைப் பெரிது படுத்துவதாக எழுதும் வெங்கட் சாமிநாதன் கர்நாடக இட ஒதுக்கீட்டுக்கான காரணத்தினை புரிந்த்வராயிருந்தால் சரி, விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பதவிக்கான காரணமே கன்னட பிராமணர்கள் தமிழ் ஆந்திர பிராமணர்களின் ஆக்கிரமிப்பினை எதிர்த்ததனால்தான் என்பதனையும், அதன்பின் கன்னட பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்து மற்ற சாதியினர் எழுந்தததினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதனை எதிர்த்து இந்தப் பிதாமகர் பதவி விளகியதனையும் எடுத்துச் சொல்லலாமே. இன்னும் மத்திய அரசின் பதவிகளில் தங்கள் ஆளுமையை நிலை நிறுத்த பனி ஒய்வு பெற்ற மத்திய அதிகாரிகளின் மூலம் தகிடுதத்தம் செய்யும் ஆரிய அநியாயங்கள் இந்த சுவாமிநாதனுக்கு தெரியாது.

  44. IN 1970 OR 1971 EXCATLY YEAR I DONT REMEMBER, DK PARTY MEN WENT TO EACH HOUSE IN VENKATESAPERUMAL KOIL STREET AT THANJAVUR; BEAT THE BRAHMINS AND CUT THEIR POONUL AND KUDUMI. I WAS WITNESSING IT.
    NOBODY TO PROTEC THEM. PEOPLE RAN AWAY IN FEAR. POOVANNAN MAY BE HAPPY TO COME TO KNOW ABOUT THIS. TWO OR THREE YEARS BEFORE, WHAT HAPPENED IN WEST MAMBALAM AYODYA MANDAPAM? EXCEPT SV SEKAR NOBODY CONDEMNED IT. LIKE THIS SO MANY THINGS ARE THERE FOR PEOPLE LIKE POOVANAN TO BE PROUD OF TAMIL NADU.
    NOW IN TAMILNADU, HOW MANY VILLAGES brahmins are having their lands? what made them to evict from villages and move to big cities. it is a social problem. people like poovannan are now happy. but it is double edged sword. it may attack them alsi at one stage.

  45. அன்புள்ள பாலமுருகன்,

    கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு இந்த தளத்தில் ஆய்வுக்கு உட்படாத விஷயம். தமிழ்நாடும் திராவிடம் என்ற பெயரில் மோசடி செய்து வரும் இயக்கங்களை பற்றியே இங்கு விவாதம் செய்யப்படுகிறது. எனவே தங்கள் இடுகைகள், தொடர்புடையதாய் இருக்க வேண்டும்.

    நிற்க, யாரோ ஒருசிலர் தவறு செய்வதை , அந்த இனம், மொழி, இவற்றின் மீது ஏற்றிக்கூறுவது அதாவது ஜெனரலைஸ் பண்ணுவது தவறு. ஒரு நீதிபதி குற்றம் இழைத்தார் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை கலைத்துவிடமுடியுமா? சில அரசியல்வாதிகள் குற்றம் இழைத்தார்கள் என்பதற்காக , ஜனநாயகமே வேண்டாம் என்று உதறமுடியுமா ? சில பள்ளிகளில் பாடம் சரிவர நடத்தப்படவில்லை என்பதற்காக , எல்லா அரசுப்பள்ளிகளையும் மூடிவிடலாமா? நீங்கள் சொல்வது சிறிதும் அறிவுக்கும், நடைமுறைக்கும் பொருந்தாதது. ஆரிய அநியாயம் என்று எதுவும் கிடையாது. திராவிட அநியாயம் என்று உண்டு. அதாவது எங்கும் முடிந்தவரை குடும்ப ஊழல். யார் தவறு செய்தாலும், சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனை விடுத்து, பொத்தாம் பொதுவாக பேசுவது , வக்கிர மற்றும் அழுக்கு மனப்பான்மை ஆகும். இதனை தவிர்ப்போம்.

  46. Keerthi on April 24, 2012 at 10:19 am
    ” இவ்வளவு மோசமான ஆட்சியை பார்க்கவே முடியாது என்று வெட்ட வெளிச்சமாக தோன்றினாலும் நாற்பது சதவீதத்துக்கு மேல் திமுகவிற்கு ஓட்டு விழுகிறது தானே… இன்னும் ஆறு ஏழு தலைமுறைகளில் இந்த நிலை மாறக் கூடும். அதுவரை ஒன்றும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.”-

    தவறான தகவல் .திமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிட்டதே இல்லை. தமிழகத்தை ஆண்ட எந்த அரசியல் கட்சியும் கடந்த அறுபத்து ஐந்து வருடத்தில், தனியாக நாற்பது சதவீத வாக்குகளை பெற்றதில்லை. உங்கள் தலைமுறையிலேயே , இந்த நிலை மாறப்போகிறது. நீங்கள் எதுவும் செய்யத்தேவை இல்லை.

    என் பள்ளிக்கால நண்பர் ஒருவர் என்னிடம், கடந்த இரண்டு வருடம் முன்புவரை, அமெரிக்காகாரன் பின் லேடனை பிடித்து விட்டால், நான் என் மீசையை எடுத்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மே-2011 – நிகழ்ச்சிக்கு பிறகு, என்னய்யா மீசை நல்லா இருக்கே என்று கேட்டேன். ஹி ஹி- இதற்கெல்லாம் போய்மீசையை எடுக்க முடியுமா என்றாரே பார்க்கலாம்.

    அமெரிக்கா இந்த வருட முடிவுக்குள் ( 2012 – டிசம்பர் 31 -) இயற்கை சீற்றங்களால் பாதிக்குமேலாக அழிந்துவிடும் என்று பல நிலவியல், வானியல் நிபுணர்கள் முன்கணிப்பு செய்துள்ளனர். என்ன மாறுதல்கள் வந்தாலும், மனித இனம் எல்லாவற்றையும் சமாளித்து நடை போடும். இது உறுதி.

  47. கோபாலசாமி சார்
    இப்போது தான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்
    திராவிட இயக்கத்தின் பலனால் இன்று பிராமண சொந்தங்கள் இல்லாத குடும்பங்களே அருகி வரும் நிலையில் நீங்கள் பிராமணர்கள் விரட்டபடுகிறார்கள் எனபது சரியா

    திராவிட இயக்கத்தால் அதிகம் பலனடைந்தது ஹிந்து மதமும்,பிராமணர்களும் தான்
    இன்று இஸ்லாமை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு,கிண்டல் செய்யும்,பழிக்கும் நிலைக்கு ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பேசும் நிலையை உருவாக்கியது அம்பேத்கரும் பெரியாரும் தான்

    அவர்கள் அடித்த அடியில் தான் தன பழமைவாதங்களை,பிற்போக்குத்தனங்களை,பெண்களை விலங்குகளை,அடிமைகளை விட கேவலமாக நடத்துவதை ஹிந்து மதம் விட்டு விட்டது
    திராவிட இயக்கத்திற்கு முன்னால் லட்சக்கணக்கில் நாடார்கள்,வன்னியர்கள்,கள்ளர்கள்,மீனவர்கள்,உடையார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் கிருத்துவத்திற்கு மாறினர்
    அவர்கள் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கியதால்,எதிர்க்கும் சக்தியை தந்ததால் தான் மத மாற்றங்கள் நின்றன

    இங்கு வந்த மிச்சிஒனரிகள் அளவிற்கு வட மாநிலங்களில் இருந்திருந்தால் அவை முற்றிலுமாக மாறியிருக்கும்.பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நாராயண குரு அவர்களின் பிராமணர்களை ஒதுக்கிய ஹிந்து மத வழிப்பாடுகள் வந்ததால் கூட பாதி தான் மத மாற்றம் இல்லாமல் தப்பித்து
    பெரியாரால் தான் இங்கு மத மாற்றங்கள் தடுக்கப்பட்டன.கடவுள் இல்லை, இல்லவே இல்லை
    கடவுளை நம்புபவன் முட்டாள் எனபது தான் மத மாற்றங்களை தடுத்தது

    இங்கிருக்கும் பிராமணர்களையும் மற்ற மாநிலங்களில் (பக்கத்து மாநிலங்கள் உட்பட)உள்ளவர்களையும் ஒப்பிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பெரியாரால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் புரியும்
    கடல் தாண்டினால் ஒதுக்குதல்,நன்கு படித்தவர்கள் கூட பெண்களை பதினெட்டு வயதில்,அதற்கு முன் திருமணம் செய்தல்,பெண்களை,விதவைகளை மிகவும் இழிவாக நடத்துதல் ,சாதி கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று 1930 லேயே பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
    இந்தியாவிலேயே சிறந்து விளங்குபவர்கள் தமிழக பிராமணர்கள் தான்.பிராமண பெண்களில் நல்ல பதவியில்,கலைகளில்,எந்த துறை எடுத்து கொண்டாலும் சிறந்து விளங்குபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்
    பெரியாரின் சாதி மறுப்பு திருமணங்களை பெருமளவில் ஆதரிப்பவர்கள் அவர்கள் தான்

  48. அன்புள்ள பூவண்ணன்,

    பெரியாரால் மாற்றமா? பெரியாரால் ஏமாற்றம் மட்டுமே தமிழினத்துக்கு விளைந்தது. இந்து மதத்தில் எத்தனையோ சீர்திருத்த வாதிகள் பல ஆயிரம் வருட காலமாக உண்டு. ஆனால் பெரியார் சீர்திருத்தவாதி என்பது தவறு. இந்து மதம் அனைத்தையும் உள்ளடக்குவதாக ( all inclusive) ஆக இருப்பதால் , இங்கே போனவன் வந்தவன் எல்லோருமே கச்சேரி பாடலாம். இந்துக்களுக்கு புனித நூல் இதுதான் என்று எல்லை எதுவும் கிடையாது. பூவண்ணனுக்கு முடிந்தால் , அவரும் ஒரு புதிய புனித நூலை எழுதலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் இந்துவே ஆகும். சார்வாகம் தழைத்தது நமதுமண்ணில் தான். திராவிட இயக்கத்தால் யாருக்கும் பலன் இல்லை. சில தலைவர்களின் குடும்பம் மட்டுமே பலன் பெற்றது. பிராமணர்கள் மட்டுமல்ல எல்லா பிரிவினருமே டாஸ்மாக்கில் அமர்ந்து தமிழ் திராவிட சாராயம் அருந்தி ,உடல் நலம் கெட்டு , விரைவில் , மனித இனமே இல்லாத நிலப்பகுதியாக தமிழகம் மாறும் நிலை தான் உள்ளது.

    பார்ப்பனர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே. அவர்களால் உருவாக்கப்பட்ட சொத்து அல்ல இந்து மதம். என்னவோ இந்து மதத்தை மட்டுமே இழிவு படுத்தி பேசிய திராவிட திருட்டு இயக்கங்கள் , பெரியார் திடலில் பரிசுத்த ஆவியில் பகுத்தறிவு இட்டலி சுட்டு வியாபாரம் செய்வது , நாட்டில் எல்லோருக்கும் தெரியும். எனவே, திராவிட இயக்கங்களால் , இந்துமதம் தழைக்கிறது என்பது ஒரு கொடூரமான ஜோக்கு மட்டுமே.

    பெரியாரின் சாதி மறுப்பு திருமணங்கள் விளைவாக தான் , தமிழகத்தில் சாதி சங்கங்களின் எண்ணிக்கையும், சாதிகளின் எண்ணிக்கையும் கூடின என்பதும், அதனால் மதமாற்ற ஏஜெண்டுகளின் கைக்கூலியாக திராவிட இயக்கங்கள் மாறின என்பதும் தான் உண்மை. ஜாதிகளை வளர்த்து நிலை நிறுத்துவதற்காகவே ஜாதிவாரி இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஜாதிஒழிப்பில் திராவிட இயக்கங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்திருந்தால், கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு மட்டுமே , அரசிலும் , வங்கிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை. மற்றவருக்கு இடமில்லை என்று சொன்னாலே , தொண்ணூறு சதவீத ஜாதிகள் விரைவில் காணாமல் போய்விடும். பெரியாரின் மோசடிகள் பல. அதில் முக்கியமானது கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு கணவனின் சாதியே குழந்தைகளின் சாதி என்று ஆணாதிக்க மேன்மையை நிலை நாட்டிய போலிப்பகுத்தறிவு தான். கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு ஜாதி இல்லை என்று சான்றிதழ்களில் பதிவு செய்து, அவர்களுக்கு மட்டுமே வேலை என்று சொல்லியிருந்தால், இந்த ஐம்பது வருடங்களில் ஜாதி காணாமல் போயிருக்கும். உங்களுக்கு தெரியாத பல உண்மைகளை சொல்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் கூட இப்போது ஏராளமான கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. ஆண் பெண் இருவரும் படித்து ஒன்றாக வேலை பார்த்து, நிறைய சம்பாதிக்கும் பல குடும்பங்களில் , திருமணத்துக்கு ஜாதி தடையாக இருப்பதில்லை.செட்டியாரும், பிராமணரும், யாதவரும், நாயுடுவும் , எவ்வளவோ காதல் திருமணங்கள் நடக்கிறது. போதிய வருமானம் இல்லாத குடும்பங்களில் தான் , காதலை எதிர்க்கிறார்கள். அதிலும் ஆண் பெண் இருவரில் ஒருவர் கைநிறைய சம்பாதிப்பவர் என்றால், அடுத்த தரப்பினர் சம்மதித்து விடுகிறார்கள். இருவருமே வறிய குடும்பம் என்றால் தான் பிரச்சனை வருகிறது. கலப்பு திருமணங்கள் நடப்பதற்கு பெரியார் காரணமல்ல. எந்த ஜாதியிலும், அல்லது எந்த மதத்திலும், திருமண வயதில் உள்ள ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இல்லை. எனவே, ஜாதி ஒழிப்புக்கு இயற்கை தான் சிறிதாவது காரணம். பெரியார் காரணம் என்பது ஒரு மோசடி யான கருத்து.பெரியாருக்கு ஜாதி ஒழிப்பில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், கலப்பு திருமணம் செய்வோருக்கு மட்டுமே அரசு வேலை என்று செயல்படுத்தி, முப்பது வருடம் முன்பே ஜாதி புதைந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

    தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார் வெண்தாடி வேந்தர். அதை கேட்ட தமிழன் தாய்மொழி தமிழை விடுத்து, ஆங்கிலம் கற்று தமிழை இல்லாமல் செய்துவிட்டான். இனிமேல், தமிழகத்தில் எதிர்காலத்தில் நம் பேரப்பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வி கற்கும் என்று யாரும் கனவு கூட காண மாட்டார்கள். பெரியார் திடலில் பரிசுத்த ஆவி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில், பெரியாரால் தான் மதமாற்றம் தடுக்கப்பட்டது என்பது முழு பொய்.

  49. பூவண்ணன்,

    கடைசி பின்னூட்டம் இட்டது நிஜமாகவே நீங்கள்தானா ? 🙂

  50. அன்புள்ள அத்விகா
    பல மாநிலங்களில் வேலை செய்தவன்.அரசு ,பொதுத்துறை இரண்டிலும் வேலை செய்தவன் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் பார்த்தவரை தமிழகத்தை சார்ந்த அரசு வேலையில்,தனியாரில் வேலை செய்பவர்களின் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம்
    வட மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததால் வடகிழக்கில் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து பெண்களை மனைவியாக எடுத்து கொண்டு வரும் வழக்கம் உண்டு.
    பல நூற்றாண்டுகளாக அங்கு பெண்களை சில சாதிகளில் இருந்து எடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டோம் என்ற வழக்கமும் உண்டு
    பிராமணர்களை மணந்த தலித்கள் என்று எடுத்து கொண்டால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு அதிகம்.
    எந்த மத்திய அரசு,பொது துறை நிறுவனங்களில் வேண்டுமானாலும் நுழைந்து பாருங்கள்.அங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிவார்கள்.
    எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சாதிமறுப்பு திருமணம் புரிந்திருக்கிறார்கள் என்று புரியும்
    சாதியை பொறுத்தவரை கிராமங்களின் நிலையில் தமிழகம் மிகவும் பின்தங்கி.பிற்போக்கான நிலையில் தான் உள்ளது என்பதை மறுக்கவில்லை

    பெரியார் எங்கே ஆணின் சாதி தான் குழந்தைகளுக்கு வரும் என்று சொன்னார்.அப்படி சொன்னது உச்ச நீதிமன்றம்.அதை எதிர்த்தது திராவிட இயக்கங்கள்
    இப்போது அதுவும் தன முடிவை மாற்றி கொண்டது

    எல்லா சாதிகளிலும் இருந்து நடைபெற்று வந்த மதமாற்றங்கள் எப்படி நின்றது,அல்லது குறைந்தது என்பதற்கு பதிலே இல்லையே

    தமிழகத்தை சார்ந்த பிராமண பெண்களையும் மற்ற மாநிலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் வளர்ச்சி,சுதந்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் திராவிட இயக்கத்தின் தாக்கம் புரியும்

  51. அன்புள்ள பூவண்ணன்,

    அது சரி .தாய், தந்தை இருவரில் யாராவது ஒருவரின் சாதியை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆப்ஷன் ( option ) மட்டுமே தற்போது பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி ஜாதி ஒழியும்? ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கே ஒரு ஜாதியை சேர்ந்தவன் என்ற முத்திரை குத்துவது ஒரு புது பகுத்தறிவா ? அது தகப்பன் ஜாதியானாலும், தாயின் ஜாதியானாலும் , அதுவும் ஒரு ஜாதி தானே? இதில் என்ன பகுத்தறிவு வாழ்கிறது? பகுத்தறிவு என்று திராவிட இயக்கங்கள் சொன்னது எல்லாமே மோசடியும், தில்லு முல்லும் மட்டுமே.

    இன்று காலை ஒரு வாடகை நூல்நிலையத்துக்கு சென்று பழைய தமிழ் புத்தகங்கள் வாங்க முயற்சித்தேன்.மொத்த புத்தகங்களில் ஐந்து விழுக்காடு தான் தமிழ் புத்தகங்கள் இருந்தன. நான் தேடிய புத்தகங்கள் கிடைக்கவில்லை. கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், ” இப்பொழுது தமிழ் நாட்டில் , இளைய தலைமுறை தமிழ் படிக்க தெரியாமல் வளருகிறது. பள்ளிக்கூடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்து வளரும் இளைஞர்கள் , தமிழ் பேப்பர் மற்றும் தமிழ் புத்தகங்களை படிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மாதம் சுமார் 5000 – புத்தகங்கள் வாடகைக்கு போகிறது.அதில் தமிழ் புத்தகங்கள் சுமார் 45 – தான், அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவு.”

    மீண்டும் சொல்கிறேன் வெண்தாடி ஈரோட்டு வேந்தர் ஆங்கிலத்தை உயர்வாகவும், தமிழை காட்டுமிராண்டிமொழி என்று சொல்லி, மாணவர்களை தற்குறியாக ஆக்கி விட்டார். அதன் விளைவே, கடந்த 45 -வருட மாணவர்கள் தமிழை கைவிட்டு விட்டனர். இதுதான் உண்மை. எனவே, திராவிட இயக்கங்கள் மோசடி இயக்கங்கள்- தமிழினத்தை அழித்த மற்றும் அழித்துக்கொண்டிருக்கும் துரோகிகள். மஞ்சள் துண்டு பகுத்தறிவு பூசாரி, 1-9-1972 – முதல் திராவிடத்தமிழனுக்கு , திராவிட தமிழ்க்கள்ளும், திராவிட தமிழ் சாராயமும் ஊற்றி கொடுத்து, பின்னர் அது வளர்ந்து, திராவிட தமிழ் டாஸ்மாக் சாராயமாகி , ஓங்கி வளர்ந்துள்ளது. அக்கிரகாரத்து பார்ப்பானும், சேரியில் வாழும் அடித்தட்டு மக்களும் எல்லோருமே ஊற்றிக்கொள்கிறார்கள் டாஸ்மாக் திரவத்தை. இதுதான் பெரியாரின் வளர்ச்சிப்பாதை. அய்யகோ புண்ணியவான்களே!

  52. //திராவிட இயக்கம் குறைகள் அற்ற இயக்கம் இல்லைதான். உண்மையைச் சொல்லப் போனால் எக்கச்சக்க குறைகள் உள்ள இயக்கம்தான். ஆனால் சமூக மாற்றங்களில் அதன் பங்களிப்பை முழுமையாக நிராகரிப்பது, திராவிட இயக்கம் = பிராமன் துவேஷம் மட்டுமே என்று ஒற்றை வார்த்தையில் சுருக்குவது வெ.சா.வின் சார்பு நிலையைத்தான் காட்டுகிறது. //
    சரியான கருத்து.

  53. சகோதரர்களே!

    நானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை* அவர்களும் இப் பத்திரிகை நடத்துவதைப்பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான் நடத்தத் துணிந்தோம்.

    இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம்:

    தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப் பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்.

    (குடி அரசு – சொற்பொழிவு – 02.05.1925)

  54. ஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி?

    எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவடைந்து, 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது.

    93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், பிறைகளில் (அமாவாசைகளும் ) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.

    நினைத்தேன்-சொன்னேன்- நடத்திக் காட்டினேன்

    என் வாழ்நாளில் நான் மற்றவர்(அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப் பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாதது மான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி(பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்ததோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.

    இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம்கொண்டு அதற்காக வாழ்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன் வருகிறேன்.

    மக்களுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படவில்லையே

    இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ் நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதே யில்லை. மேற்கண்ட எல்லா காரியங்களிலும், மற்றவர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.

    இதனால் உலகுக்கு மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

    நோயும் சாவும் மட்டும் ஏராளம்

    நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில், நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10 பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100 க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100க்கு 100 ம் சாவார்கள். இருமல்(க்ஷயம்) வந்தால் 100 க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100 க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பலகுழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.

    அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறை யிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் அடிமைத்தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியிருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப்படாமலும் கவலைப் படாமலும் வாழ்ந்து வந்தோம்.

    எல்லாம் கடவுள் செயல்; நம்மால் ஆவதில்லை

    இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல் இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல். எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள் தனமும் இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை- அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.

    கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஒழிக்கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால், மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டு களுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன் தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம்; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.

    எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்திருப்பார்கள்?

    சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்த மான, மத சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம, திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.

    மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100 க்கு 90 க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர் , வித்துவான், மகாமகோ பாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப்பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள்?

    அந்தத் துணிவில் அதிசயம் ஏது?

    அவ்வளவு ஏன், கிரகணங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர் இன்று கூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால்-நெருப்புக்குச்சி ஏது ?ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடந்த நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானா னால், அத்துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்கு முடியும்?

    பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்துகொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பன வாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும், பின்பற்றுவதுமான, முட்டாள்தனமான, காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மை யாகும் என்று சொல்லலாம்.

    மூடனுக்கும் புரியாமல் போகாதே

    நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத்துகளால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக்கப்பால் நம் நாட்டாருக்கு மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த்தால், ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல்போகாதே.

    அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட்டுக்கு மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.

    ஒரே ஒரு பயம்தான்; மற்றபடி மகிழ்ச்சியே

    இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.

    காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.

    ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.

    ———————
    ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார் பிறந்த நாள்
    விடுதலை மலர், 1972

  55. தந்தைபெரியாரும் – இராஜகோபாலாச்சாரியாரும்

    நடந்த விஷயம் என்ன?
    ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு

    தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது.

    என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை.

    ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்.

    எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில்.

    ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.

    நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு முன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள சில கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே இருந்து வந்தேன்.

    எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.

    அப்படிப்பட்ட நிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன.

    அவரைக் காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.

    காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

    இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.

    இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது.

    அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.

    அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை.

    பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். “ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே” என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1 மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.

    முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது.

    அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது.

    ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று.

    எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.

    இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.

    ———————————-ஈ.வெ.ரா.’குடி அரசு’ துணைத் தலையங்கம் 14.06.1936

  56. //பிராம்மணர்கள் ஆங்கிலேயர்கள் இடத்தில் சேவகம் செய்தவர்கள்//
    பிராம்மணர்கள் மட்டும் தான் செய்தார்களா? பிராம்மணர்களில் இந்திய விடுதலை போராட்டத் தியாகிகள், சிலரது கண்களுக்கு தெரியவில்லை போலும். ஆங்கிலேயர்கள் இடத்தில் கணக்கு எழுதியவர்கள், சிப்பாய்கள், வீட்டில் வேலை செய்தவர்களெல்லாம் யார்?

    //வைத்தியநாத ஐயரை எதிர்த்தவர்கள் பிராம்மணர்கள்//

    பிரிம்மணர்கள் மட்டுமா எதிர்த்தனர்? வைத்தியநாத ஐயரைப் போன்றவர் பலர் உள்ளனர் என்பதை ஏன் எடுத்துக் கொள்வது இல்லை? பேஷ் பேஷ்..

    ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோயில் ஆண்டி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *